Thursday, December 31, 2020

திருக்குறள் - விலங்கும் மக்களும்

திருக்குறள் - விலங்கும் மக்களும் 


மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பெரும்பாலானோர் சொல்லுவது, மனிதனுக்கு சிரிக்கத் தெரியும், விலங்குகளுக்கு அது தெரியாது என்பது தான். 


பல வேறு பாடுகள் இருந்தாலும், வள்ளுவர் ஒன்றைச் சொல்கிறார்.


கல்வி அறிவு. அதுதான் வேறுபாடு என்கிறார். விலங்குகள் தானே கற்றுக் கொள்ளவதில்லை. நூல் அறிவு இல்லாதவை. சரி/தவறு, நல்லது/கெட்டது, உயர்ந்தது/தாழ்ந்தது என்று ஒன்றும் தெரியாது. மனதுக்கு பட்டதை செய்யும். 


மனிதராய் பிறந்தும், கல்வி அறிவு இல்லாதவர்களை என்ன என்று சொல்லுவது? விலங்குகளுக்கு கல்வி அறிவு இல்லை. கல்வி அறிவு இல்லாதவை விலங்குகள்.


வள்ளுவர் அப்படி நேரே சொல்லவில்லை. 


விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதோ அந்த அளவு வேறுபாடு நூல் அறிவு பெற்றவர்களுக்கும் , அந்த அறிவு பெறாதவர்களுக்கும் இருக்கிறது என்கிறார். 


நுண்மையான வேறுபாடு. 


பாடல் 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்


பொருள் 


click the following link to continue reading


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_31.html


விலங்கொடு = விலங்கோடு ஒப்பிட்டு பார்த்தால் 

மக்கள் அனையர் = மக்கள் எப்படியோ அப்படி 

இலங்குநூல் = சிறந்த நூல் 

கற்றாரோடு  = கற்றவர்களோடு 

ஏனை யவர் =கல்லாதவர் 


நாங்களும் தான் எவ்வளவோ வாரப் பத்திரிகை, நாவல், whatsapp இல் வரும் அறிவு பூர்வமான   செய்திகள்,  செய்தித்தாள் போன்றவற்றைப் படிக்கிறோம்  என்று கூறலாம். 


"இலங்கு நூல்" என்றார். இலங்குதல் என்றால் தெளிவு தருதல், வெளிச்சம் தருதல், உண்மையை விளங்கச் செய்தல் என்று பொருள். 


இலங்கு + அண்  = இலக்கணம். மொழியை விளங்கச் செய்வது இலக்கணம். 


இலக்கம் - இருக்கும் இடத்தை சரியாக சுட்டுவது, அளந்து சொல்லுவது. குத்து மதிப்பாக இல்லாமல், சரியாக சொல்லுவதால் அது இலக்கம்.  இலக்கம் என்றால் குறிக்கோள் என்றும் பொருள் உண்டு. 


இலங்கு நூல் என்றால் ஏதோ ஒரு நூல் அல்ல.  தெளிவு தரும் நூல் சந்தேகத்தை தீர்க்கும் நூல், வழி நடத்தும் நூல். 


அவற்றைப் படிக்காதவர்களும், விலங்கும் ஒன்று தான் என்று வள்ளுவர் சொல்லாமல் சொல்கிறார். 

கொஞ்சம் கடினமான வார்த்தைப் பிரயோகம்தான். 

சிந்தித்துப் பார்ப்போம். 


கண்ட நூல்களையும் படிப்பதை விட்டு விட்டு நல்ல நூல்களை தேடிச் சென்று படிப்போம். 


குப்பைகளை படிப்பதை விட படிக்காமல் இருப்பதே நல்லது. 






Tuesday, December 29, 2020

திருக்குறள் - நாள் என்ற வாள்

 திருக்குறள் - நாள் என்ற வாள் 


கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் எதுவும் நமக்கு அவை நடப்பதாகவே தெரிவதில்லை. திடீரென்று ஒரு நாள் எல்லாம் மாறிப் போய் இருக்கும்.


நாளும் எடை கூடிக் கொண்டே போகும். ஒரு நாள் 10 கிராம், 15 கிராம் என்று கூடும் போது தெரியாது. ஒரு மாதத்தில் 300 கிராம், மூன்று மாதத்தில் கிட்டத்த்தட்ட ஒரு கிலோ, ஒரு வருடத்தில் 4 கிலோ என்று கூடிய பின் தான் தெரியும், அடடா, உடல் எடை கூடி விட்டதே என்று. 


இனிப்பு, எண்ணெய் பலகாரம் எல்லாம் சாப்பிடும் போது தெரியாது. இன்னிக்கு ஒரு நாள் மட்டும், இந்த ஒரு ஐஸ் க்ரீம் மட்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய் , பின் பெரிதாகி விடும். 


அது போல, 


இந்த காலம் ஒன்று இருக்கிறதே, அது கூறு படாதது. நாம், நம் வசதிக்காக  நாள், கிழமை, வாரம், மாதம், வருடம், மணி, நிமிடம், நொடி என்று பெயர் வைத்து  இருக்கிறோம். காலத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. இந்தப் பிரிவுகள் இல்லாத காலத்தை  நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். 


நீங்கள் பிறந்தது முதல் இறப்பது வரை உள்ள காலத்தை ஒரு அலகு (unit ) என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாம். 


இந்த பூமியில் ஒரு நாள் என்பதும், சனி கிரகத்தில் ஒரு நாள் என்பதும் ஒன்று அல்ல. 


இந்த காலம் என்பது ஒரு நீண்ட துணி போல இருக்கிறது. தொடக்கமும் முடிவும் இல்லை. 


நாம் பிரித்து வைத்துக் கொண்டு  பிறந்த நாள், திருமண நாள், இத்தனை நாள் வாழ்ந்தோம், இந்த உடம்பு வலி சரியாக இத்தனை நாள் ஆகும் என்றெல்லாம் கணக்குப் போடுகிறோம்.


போடலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. 


ஆனால், 


வள்ளுவர் சொல்கிறார்,


இந்த காலம் இருக்கிறதே அது ஒரு கூரிய கத்தி போன்றது. அந்த கத்தியின் கூரான பக்கத்தில்   நம் உயிர் இருக்கிறது. நமக்குத் தெரியாமலேயே அந்த காலம் என்ற  வாள் நம் உயிரை நாளும் வெட்டிக் கொண்டே இருக்கிறது. 


ஒவ்வொரு நாளும், அந்த வாள் கொஞ்சம் வெட்டுகிறது. மிக மிக சிறிய வெட்டு என்பதால்  நமக்குத் தெரிவதில்லை. 


கொஞ்சம் நரைக்கும்,  கண்ணாடி போட வேண்டி வரும்,  அங்கொன்றும், இங்கொன்றும்  பல் ஆடும், தோல் சற்றே சுருங்கும். சட்டென்று சிலவை ஞாபகம் வராது. 


நாம் கண்டு கொள்ளுவதில்லை. 


இந்த வாள் , உயிரை அரிந்து கொண்டே இருக்கிறது. 


ஒரு நாள் மொத்தமாக அரிந்து போட்டு விடும். 


ஒவ்வொரு நாளும் அது அரிவதை உணர்பவர்கள் வெகு சிலரே. மொத்தமாக அரிந்து விடுமே,  அதற்குள் ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைப்பவர்கள் , ஏதாவது செய்வார்கள். 


மற்றவர்கள்,  நாளைக்கு என்ன சமையல் செய்யலாம், என்ன சாப்பிடலாம், என்று  சிந்தித்துக் கொண்டு இருப்பார்களோ?


யாருக்குத் தெரியும்?


பாடல் 


நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_29.html

click the above link to continue reading




நாள்என  = நாள் என்று 

ஒன்றுபோல் காட்டி = ஒன்று உண்மையாக இருப்பது போல காட்டி 

உயிர்ஈரும் = உயிரை அறுக்கும் 

வாளது = வாள் அது 

உணர்வார்ப் பெறின் = உணர்வு உடையவர்கள் அதைப் பெற்றால் 


"காட்டி" என்பதால், அது உண்மையில் இல்லை என்பது புலனாகும். 


"பெறின்" என்பதால், பெற மாட்டார்கள் என்று அர்த்தம். அல்லது, பெறுவது கடினம் என்று அர்த்தம்.  படித்தால் தேர்ச்சி பெறலாம் என்றால், படிப்பது கடினம் என்று  அறிந்து கொள்ளலாம். 


"உணர்வார்" என்பதால், இது உணரப் பட வேண்டிய ஒன்று. படித்து "அறிய" பட வேண்டிய ஒன்று அல்ல.


காலம் உயிரை அறுப்பதை கற்பனை செய்து பாருங்கள். 


ஆழமான குறள் .




Saturday, December 26, 2020

திருக்குறள் - நிலையின என்று உணரும்

திருக்குறள் - நிலையின என்று உணரும் 


ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம்.  விழா சிறப்பாக நடந்து முடிந்தது. பொண்ணு மாப்பிள்ளை எல்லோரும் அவரவர் ஊருக்கு கிளம்பிப் போய் விட்டார்கள். நீங்கள் மட்டும், அங்கேயே இருப்பீர்களா அல்லது நீங்களும் கிளம்பி விடுவீர்களா?  அடா, என்ன அருமையான அலங்காரம், சுவையான சாப்பாடு,  நல்ல இசை, எத்தனையோ சொந்த பந்தம்...இவற்றை எல்லாம் எப்படி விட்டு விட்டுப் போவது என்று அங்கேயே இருப்பீர்களா அல்லது, வந்தமா, எல்லோரையும் பார்த்தோமா, மண மக்களை வாழ்த்தினோமா, மொய் எழுதினோமா, சாப்பிட்டோமோ , கிளம்பினோமா என்று இருப்பீர்களா?


ஏன் அந்த கல்யாண மண்டபத்திலேயே இருக்க வேண்டியது தானே. சுகமாகத்தானே இருந்தது. 

இருக்க மாட்டோம். ஏன் என்றால், அது நிரந்தரமான இடம் அல்ல. வந்த வேலை முடிந்தால் கிளம்பி விட வேண்டும். 

சுற்றுலா போகிறோம். புதிய இடம். அற்புதமான சூழ்நிலை. சுவையான உணவு. பெரிய கட்டிடங்கள், மலைகள், அருவி, கடற்கரை.  அங்கேயே இருந்து விடுவோமா? அல்லது ஆயிரம் ஆனால் நம்ம வீடு மாதிரி ஆகுமா என்று கிளம்பி விடுவோமா?


சுற்றுலா சென்ற இடம் எவ்வளவு இனிமையாக இருந்தாலும், அங்கிருந்து கிளம்பி விடுவோம் அல்லவா? 

ஏன் என்றால் அது நிரந்தரமான இடம் அல்ல. 

இல்லை இந்த கல்யாண மண்டபத்திலேயே தான் இருப்பேன் அல்லது இந்த சுற்றுலா தலத்திலேயே தான் இருப்பேன் என்று யாரவது ஆடம் பிடித்தால், அவர்களை பற்றி  என்ன நினைப்பீர்கள்? 


ஏதோ கொஞ்சம் நட்டு கழண்ட கேஸ் என்று தானே நினைப்பீர்கள். 


இந்த உலகில் உங்கள் இடம் நிரந்தரம் என்று உங்களுக்குத் சொன்னது யார்?

இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டு நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? அல்லது இந்த உலகம் முடியும் வரை இருப்பீர்களா? 


இது உங்களின் நிரந்தர இடம் அல்ல. வந்தீர்கள், பார்த்தீர்கள், அனுபவித்தீர்கள்,  கிளம்ப வேண்டியதுதான். 


இல்லை, இங்கேயே இருப்பேன்.  அது எப்படி, அதுவும் இதுவும் ஒண்ணா, நான் இங்கேயே இருப்பேன், அது மட்டும் அல்ல, இந்த கல்யாண வீட்டுக்கு வந்தவர்கள் யாரும்  போகக் கூடாது, எல்லோரும் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும்  என்று சொல்லுவது யாரும் எங்கும் போகக் கூடாது என்று சொல்லுவீர்களா?


அப்படிச் சொன்னால், அது மதியீனம் அல்லவா?


பாடல் 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_26.html


click the above link to continue reading


நில்லாத வற்றை  = நிலை இல்லாதவற்றை 

நிலையின = நிலையானவை 

என்றுணரும் = என்று உணரும் 

புல்லறி வாண்மை = குறைந்த அறிவு, சிற்றறிவு 

 கடை. = கீழ்மையானது. 


இந்த உலகத்தில் உங்கள் இடம் நிரந்தரமானது அல்ல. கொஞ்ச நாள் சுத்தி பாத்துட்டு  கிளம்பி விட வேண்டும். எல்லோருக்கும் தான். 

இல்லை, நான் என்றென்றும் இங்கேயே இருப்பேன், என் கூட உள்ளவர்களும் இங்கேயே இருக்க வேண்டும்  என்று சொல்லும் அறிவு - "கடை" 


அது மட்டும் அல்ல, எத்தனை நிலை இல்லாதவற்றை பிடித்துக் கொண்டு, அது நிலைக்க வேண்டும்  பாடு படுகிறீர்கள். 


இளமை நிற்குமா? எத்தனை டை அடித்தாலும், பௌடர் போட்டாலும், லிப் ஸ்டிக்,  facial, நகை, நட்டு என்று போட்டாலும், அது நிற்காது. நில்லாது ஓடி விடும். அதுக்கா இந்தப் பாடு?


செல்வம். நிற்குமா? என்ன பாடு பட்டாலும், போகும் போது போய் விடும். வாழ் நாளை எல்லாம்  அதற்காக செலவழிக்க வேண்டுமா?


இந்த உடம்பு?  எப்போது வேண்டுமானாலும் சரியும். எனவே தான் அதற்கு சரீரம் என்று  பெயர். 


நிலை இல்லாதவற்றை , உங்களால் நிலைக்கப் பண்ண ஒரு காலும் முடியாது. 


முதலில் எது எல்லாம் நிலை இல்லாதது என்று அறிய வேண்டும். 


அது, அறிவின் முதல் படி. 



Friday, December 25, 2020

கம்ப இராமாயணம் - நம் பகை பேர்த்தனர்

 கம்ப இராமாயணம் - நம் பகை பேர்த்தனர் 


துன்பம் வரும்போது துவண்டு போவது இயற்கை. ஏன் நமக்கு மட்டும் இப்படி நிகழ்கிறது என்று மனம் சோர்ந்து போவதும் இயல்புதான். யாராவது ஆறுதல் சொன்னால் கூட "உனக்கு வந்தால் தெரியும்..." என்று மனம் சலித்துக் கொள்ளும். 

என்ன தான் செய்வது? வந்த துன்பமோ போவதாகத் தெரியவில்லை. நாம் செய்வதற்கோ ஒன்றும் இல்லை. ஆறுதல் சொல்லியும் ஒன்றும் ஆகப் போவது இல்லை. 

மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகும். அது வேறு பல துன்பங்களில் நம்மை ஆழ்த்தி விடும். 


அந்த மாதிரி சமயங்களில் நல்ல இலக்கியங்கள் மனதை சற்றே இளகச் செய்யும். ஒரு புன்முறுவலை கொண்டு வரும். நமக்கு வந்தது ஒன்றும் பெரிதில்லை. இதை விட பெரிய துன்பம் எல்லாம் வந்து இருக்கிறது மற்றவர்களுக்கு என்று மனம் கொஞ்சம் தெம்பு பெரும். 


கிட்கிந்தா காண்டம்.  கார் காலம். 


மழை பொழிகிறது. காடு.  குளிர். எங்கும் ஈரம். மரம் செடி கொடிகளில் நீர்   சொட்டிக் கொண்டு இருக்கிறது. தரை எல்லாம் சேறும் சகதியுமாக இருக்கிறது. சில நாட்களாக மழை விட்ட பாடில்லை.  

இராமன் தனித்து இருக்கிறான். 

இதில் எங்காவது சந்தோஷத்துக்கு இடம் இருக்கிறதா? சீதையைக் காணவில்லை. இராமன் தனித்து இருக்கிறான். மழைக் காலம். இதில் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? 

கம்பன் ஆரவாரமான மகிழ்ச்சியை காட்டுகிறான் இந்த இடத்தில்.


எப்படி?


"இராமனும்,  வானரங்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இனி நம் பகைவர்கள் எல்லோரும் அழிந்தார்கள் என்று தேவர்கள் பேசி, ஆராவாரம் செய்தது போல மேகம் இடி இடித்தது. இராமனையும் வானரங்களையும் தேவர்கள் வாழ்த்தி மலர் பொழிவது போல மழை பொழிந்தது" 

என்று கம்பன் இந்த இடத்தைக் காட்டுகிறான். 


பாடல் 


தீர்த்தனும் கவிகளும் செறிந்து, நம் பகை

பேர்த்தனர் இனி' எனப் பேசி, வானவர்

ஆர்த்தென, ஆர்த்தன மேகம்; ஆய் மலர்

தூர்த்தன ஒத்தன, துள்ளி வெள்ளமே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_81.html

click the above link to continue reading


தீர்த்தனும் = இராமனும் 

கவிகளும் = வானரங்களும் 

செறிந்து = ஒன்று சேர்ந்ததால் 

நம் பகை = நம் (தேவர்ககளின்) பகை 

பேர்த்தனர் இனி' = அழித்தனர் இனி 

எனப் பேசி, = என்று பேசிக் கொண்டு 

 வானவர் = தேவர்கள் 

ஆர்த்தென, = சந்தோஷத்தில் சப்தம் எழுப்பிய மாதிரி 

ஆர்த்தன மேகம் = மேகங்கள் இடி இடித்தன 

ஆய் மலர் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட மலர்களை 

தூர்த்தன ஒத்தன = பொழிந்ததை போன்று இருந்தது 

துள்ளி வெள்ளமே. =துள்ளி வரும் மழை துளிகள் 


இதனால் இராமனின் சோகம் போய் விட்டது என்று கூறவில்லை. 


இந்த சோக சூழ்நிலையிலும் இப்படி ஒரு அழகான பாடலைத் தரும் கம்பனின்  கவித் திறம்  இரசிக்கும் படி இருக்கிறது அல்லவா.


ஏதோ ஒரு வகையில், இலக்கியங்கள் மனதுக்கு ஒத்தடம் தருகின்றன. 


"வாழ்க்கைனா அப்படித்தான் இருக்கும் " என்று ஒரு பக்குவத்தைத் தருகின்றன. 


உண்டா, இல்லையா?

திருக்குறள் - செல்வத்தின் இயல்பு

 திருக்குறள் - செல்வத்தின் இயல்பு 


ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இயல்பு இருக்கும். நீரின் இயல்பு கீழ் நோக்கி பாய்வது. நெருப்பின் இயல்பு சுடுவது.


செல்வத்தின் இயல்பு? 


செல்வத்தின் இயல்பு, ஒரு இடத்தில் நில்லாமல் சுற்றிக் கொண்டே இருப்பது. செல்வம் என்றாலே "செல்வோம்" என்று தான் அர்த்தம். 


செல்வம் நம் கையில் வந்தவுடன், அது நம்மை விட்டு செல்வதற்குள் ஏதாவது செய்ய வேண்டும். 

செல்வம் சக்தி வாய்ந்தது. அதை வைத்து நாம் பலவற்றை சாதித்துக் கொள்ளலாம். என்ன சாதிப்பது என்பது தான் கேள்வி. 

பெரும்பாலானோர் அதை பல விதமான சொத்துக்களில் முதலீடு செய்வார்கள். வீடு, மனை, நிலம், தங்கம், ஷேர், bonds என்று முதலீடு செய்வார்கள். வட்டி வரும், சிலவற்றின் மதிப்பு உயரும். உங்கள் பணத்தைக் கொண்டு யாரோ   அதை நல்ல விதமாக செலவழித்து அதன் மூலம் நிறைய பணம்   சம்பாதித்து, அந்த இலாபத்தில் உங்களுக்கு கொஞ்சம் தருகிறார்கள். 


அதாவது, நீங்கள் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக வாழ் நாள் எல்லாம் உழைக்கிறீர்கள். 


வள்ளுவர் சொல்கிறார், "நிலையற்ற செல்வத்தை பெற்றால், நிலையான செயல்களை செய்ய வேண்டும்" என்று. 


பாடல் 


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_25.html

Click the aove link to continue reading


அற்கா = நிலையில்லா 

இயல்பிற்றுச் = இயல்பை உடையது 

செல்வம் = செல்வம் 

அதுபெற்றால் = அந்த செல்வத்தைப் பெற்றால் 

அற்குப = நிலைத்தவற்றை 

 ஆங்கே = அப்போது 

செயல் = செய்ய வேண்டும்.


"அது பெற்றால்" ....பெற்றால் என்பது சந்தேகமானது. கடினமானது என்று பொருள்.  "நன்றாக படித்தால், முதல் மாணவனாக வரலாம்" என்று சொன்னால், படிப்பது என்பது எளிதான காரியம் அல்ல என்பது புலப்படும். 


"நிலையான" என்றால் என்ன?


இதுதான் மிகப் பெரிய கேள்வி. வாழ்வில், எது நிலையானது? 


எவை நிலையானவை என்று வள்ளுவர் சொல்லவில்லை. நாம் தான் சிந்தித்து கண்டு பிடிக்க வேண்டும். 


இளமை? ஆரோக்கியம் ? பிள்ளைகள் ? வீடு ? தங்கம், தகரம் போன்ற உலோகங்கள்? சுவர்க்கம்? புண்ணியம் ?  பாவம் ? அறிவு?


எது நிலையானது? எப்போதும் இருப்பது? மாறாதது?


இதற்கு விடை கண்டு பிடித்து விட்டால், நிலையில்லாதவற்றை நாம் செய்து கொண்டு இருக்க மாட்டோம். 


இவ்வளவு சொன்ன வள்ளுவர் அதை ஏன் சொல்ல்லாமல் விட்டார்? அவருக்கே தெரியாதோ?


இல்லை. வள்ளுவர் எதைச் சொன்னாலும், " அது எப்படி நிலையானது ?" என்று நம்  மனம் கேள்வி கேட்கும். வாதம் செய்யும். எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது. 


நாமே கண்டு பிடித்தால்தான் உண்டு. 


கண்டு பிடிப்பது மிக எளிமையானது. வாதம் செய்யாமல் இருந்தால். 


முயன்று பாருங்கள்.  முரண்பாடு கொண்டு, எதிர் வாதம் செய்யாமல், அமைதியாக  தேடினால் கிடைக்கும். 




Monday, December 21, 2020

திருக்குறள் - செல்வம்

 திருக்குறள் - செல்வம் 


நிலை இல்லாதவற்றை நிலை என்று நினைக்கும் புல்லறிவாண்மை கடை என்று முதல் குறளில் கூறினார்.


அப்படி என்றால் எது எல்லாம் நிலை இல்லாதது என்ற கேள்வி பிறக்கும் அல்லவா?


இரண்டு விடயங்கள் நிலை இல்லாதவை - ஒன்று செல்வம் , இன்னொன்று இந்த உடம்பு. 


நாம் இரண்டும் நிலையானவை என்று நினைத்து அவற்றை சேர்க்க, பாதுகாக்க படாத பாடு படுகிறோம்.


மருந்து, மாத்திரை, ஸ்கேன், அது இது என்று இந்த உடம்பை எப்படியாவது நிரந்தரமாக இருக்கப்  பண்ணி விடலாம் என்று நினைக்கிறோம். 


இந்த உடம்பு அழியும்.  என்ன செய்தாலும் அழியும். மாற்றவே முடியாது. 


அதே போல் தான் செல்வம். பணத்தை அதில் முதலீடு செய்யலாம், இதில் போடலாம் என்று போட்டு, அதை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது  நம்மை விட்டு போகத்தான் போகிறது. 

அது எப்படி போகும். அங்க வீடு வாங்கி போட்டு இருக்கிறேன், இங்கே மனை, அந்த  கம்பெனி ஷேர், இந்த வங்கியில் நிரந்தர வைப்பு , கொஞ்சம் தங்கம் என்று  பிரித்து பிரித்து போட்டு இருக்கிறேன். எப்படி இந்த செல்வம் என்னை விட்டுப் போகும்  என்று கேட்கலாம்.

நம்மை விட ஆயிரம் மடங்கு செல்வம் இருந்த அரசர்கள் இருந்தார்கள். அவர்களிடம் கோட்டை, கொத்தளம், ஆள், அம்பு, சேனை என்று எல்லாம் இருந்தது. எங்கே அந்த செல்வம்?


இராஜ இராஜ சோழனின் வாரிசுகள் எங்கே? அசோக சக்ரவர்த்தியின் பிள்ளைகள் எங்கே?  

வரலாறு பேரரசுகளை புரட்டிப் போட்டு இருக்கிறது. பெரும் பணக்காரர்கள் இருந்த இடம் இடம் தெரியாமல் செத்தார்கள். 

நாம் நம் செல்வத்தை காத்து விட முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒருக்  காலும் முடியாது. 


உள்ளங்கை நீர் போல அது ஒழுக்கிக் கொண்டே இருக்கும். 

நன்றாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு செல்வம் எப்படி வந்தது என்று.  வருகின்ற காலத்தில் பல இடங்களில் இருந்து வரும். 

சம்பளம் வரும், வட்டி வரும், வாடகை வரும்,  ஷேர் இருந்தால் டிவிடெண்ட் வரும்,  வாங்கிப் போட்ட சொத்துக்களின் மதிப்பு உயரும். இப்படி பல வழிகளில்  செல்வம் வரும். இங்கிருந்து கொஞ்சம், அங்கிருந்து கொஞ்சம் என்று  பல விதங்களில் வந்து குவிந்து விடும். எனக்கு இவ்வளவு சொத்தா என்று நீங்களே வியப்பீர்கள்.


மனதில் நன்றாக பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு நாள் இவை அனைத்தும் போகும். 


வள்ளுவர் அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார்.


சினிமா தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறது என்று வைத்துக் கொள்வோம். படம் பார்க்க பலர் வருவார்கள். வரும்போது ஒவ்வொருவராக வருவார்கள். ஆறு மணி படம் என்றால் சிலர்  ஐந்து மணிக்கு வருவார்கள், சிலர் 5:10 க்கு வருவார்கள், சிலர் 5:30 வருவார்கள். 


படம் முடிந்தவுடன் எல்லோரும் ஒன்றாகப் போய் விடுவார்கள். முதலில் வந்தவன் முதலில் போகவும், கடைசியாக வந்தவன் கடைசியாகப் போகவும் என்று இருக்காது. 


வரும் போது ஒன்று ஒன்றாக வருவார்கள். போகும் போது ஒன்றாகப் போவார்கள். 


அது போல, செல்வம் வரும் போது தனித்தனியாக வரும். போகும் போது மொத்தமாக போய் விடும். 

பாடல் 


கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_21.html

(click the above link to continue reading)

பொருள் 


கூத்தாட்டு = கூத்தாடும் 

அவைக் = கொட்டகை, இன்று தியேட்டர் 

குழாத்து = கூட்டம் 

அற்றே  = போல 

பெருஞ்செல்வம் = பெரிய செல்வம் 

போக்கும்  = போகும் 

அது = அந்த செல்வம் 

விளிந் தற்று = ஒழிந்து போகும். 


கொட்டகைக்கு எப்படி பல இடங்களில் இருந்து ஆட்கள் வருவார்களோ, அது போல  செல்வம் பல இடங்களில் இருந்து வரும். 


படம் முடிந்தவுடன் எல்லோரும் அவரவர் இடத்துக்குப் போவது போல, செல்வம் வந்த வழியே போய் விடும். 


தனித்தனியே வந்து, ஒன்றாகப் போய் விடும்.


சரி, ஒத்துக் கொள்வோம். அதுக்கு என்ன இப்ப? இருக்கிற செல்வத்தை எல்லாம் தூக்கி தெருவில் போட்டு விடுவோமா?  செல்வம் சேர்க்காமலே இருந்து விடுவோமா? பொருள் என்பதற்கு ஒரு அதிகாரமே வைத்து இருக்கும் வள்ளுவர் என்னதான் சொல்கிறார்   என்று கேட்டால்...


மேலும் சிந்திப்போம்....




Sunday, December 20, 2020

திருவாசகம் - நான் யார் ?

திருவாசகம் - நான் யார் ?

நமக்கு ஊரில் உள்ள அனைவரையும் அறிந்து கொள்ள ஆசை. 

எந்த நடிகர்/நடிகை எந்தப் படத்தில் நடிக்கிறார்கள், அது எப்போது வெளி வருகிறது. 


நடிகர் இல்லாவிட்டால் அரசியல் தலைவர். இல்லை என்றால் ஆன்மீகத் தலைவர். அவர் எங்கே எப்போது உபன்யாசம் செய்யப் போகிறார். 

அதுவும் இல்லாவிட்டால் "என் மனைவியை புரிந்து கொள்ளவே முடியவில்லை", "அவருக்கு என்னதான் வேண்டும்", "வர வர இந்தக் காலத்துப் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை" ....

என்று மற்றவர்களை புரிந்து கொள்ளவே நாம் முயற்சி செய்கிறோம். அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

நம்மை நாம் புரிந்து கொள்ள சிறிதும் முயற்சி செய்வது இல்லை. 


"என்னைப் பற்றி எனக்கு என்ன புரியாது. என்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்" என்று நாம் நினைக்கிறோம். அது சரி அல்ல. நாம் நம்மை புரிந்து கொள்ள முயற்சி செய்வதே இல்லை. 


"நான் யார்" என்ற இரண்டு வார்த்தை தான் இரமண மகரிஷியின் உபதேசமாக இருந்தது. 

எப்போதாவது நாம் "நான் யார்" என்ற கேள்வியை கேட்டது உண்டா? 

நான் என்பது இந்த உடலா, நினைவா, உயிரா, உறவுகளின் கலவையா? கணவனா? மனைவியா? பிள்ளையா? அறிவாளியா? முட்டாளா? பணக்காரனா? ஏழையா?


நான் என்பது யார்? 


நமக்குள் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பல விஷயங்களை திணித்து வைத்து இருக்கிரறார்கள். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம் பார்த்த சினிமாக்கள்,  படித்த புத்தகங்கள் என்று எல்லோரும் சேர்ந்து நம் மண்டைக்குள்   உட்கார்ந்து இருக்கிறார்கள். நான் என்பது தனி ஒருவன் இல்லை. பெரும் கும்பல் உள்ளே இருக்கிறது. 


இதில் உண்மையான நான் யார்?


நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? நீங்கள் நம்பவில்லை, உங்களுக்கு சின்ன வயது முதல்  அப்படி நம்பும்படி சொல்லப் பட்டது. நீங்களும் அதை கடை பிடிக்கிறீர்கள். ஒரு நாத்திக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தால், நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள். நீங்கள் நம்புவது என்பது பெரிய விஷயம் இல்லை.  


சுத்த சைவம், ரொம்ப ஆச்சாரம், எல்லாமே கற்பித்தவை. நமது என்று சொந்தமாக  எதுவம் இல்லை.  சைவ வீட்டில் பிறந்ததால் நான் சைவமாக இருக்கிறேன். இதில் என் பெருமை என்ன? 


இந்த கும்பலை விரட்டி விட்டு யோசித்துப் பாருங்கள். நீங்கள் யார் என்று தெரியும். 


மாணிக்க வாசகர் தன்னைத்தானே கேட்கிறார்.  


"நான் யார்? என் உள்ளம் என்பது என்ன? என் அறிவு/ஞானம் என்பது என்ன? என்னை யார் அறிவார்" என்று. 


மாணிக்கவாசகருக்கு அந்த கேள்வி எழுந்து இருக்கிறது. 


பாடல் 


நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்

வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.


சீர் பிரித்த பின்


நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி 

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் 

தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ 


என் ஞானங்கள் இல்லாமல் போனது.

இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ? 

அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?

ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_20.html


click the above link to continue reading

நான் யார் ? = நான் யார்

என் உள்ளம் யார் ? = என் உள்ளம் யார்

ஞானங்கள் யார் ? = ஞானங்கள் யார் அல்லது எது 

என்னை யார் அறிவார் ? = என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் = வானில் உள்ள பிரான்

என்னை ஆண்டிலனேல் = என்னைஆட் கொள்ளவில்லை என்றால்

மதி மயங்கி = மதி மயங்கி

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் = இறைச்சி இருந்த உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து உண்ணும் அம்பலத்தில் ஆடும் அவன்

தேனார் கமலமே = தேன் உள்ள தாமரை மலருக்கு

சென்று ஊதாய் கோத்தும்பீ = சென்று பாடுவாய் தும்பியே 


இறைவன் என்னை ஆட்கொள்ளமால் விட்டு விட்டால், நான் என்ன ஆகி இருப்பேன் என்று பதறுகிறார். 


தேடுங்கள். நீங்கள் யார் என்று அறிய முயற்சி செய்யுங்கள். 


Know Thyself என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். 


நம்மை அறிவதை விட்டு விட்டு, உலகில் உள்ள எல்லோரையும் அறிய நினைக்கிறோம்.  என்ன ஒரு அறிவீனம்.