Thursday, September 2, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி - அலைக் கையால் அடி வருட

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி - அலைக் கையால் அடி வருட 


பெருமாள் திருமொழி என்பது குலசேகர ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட 105 பாடல்களின் தொகுப்பு. 


பக்தி இரசம் சொட்டும் தேனினும் இனிய பாசுரங்கள். 


பெரிய தத்துவங்கள் கிடையாது. வாழ்க்கை நெறி முறை, அறம், நீதி என்றெல்லாம் உபதேசம் கிடையாது. அவருக்கும் பெருமாளுக்கும் இடையில் உள்ள தாகத்தை சொல்லும் பாசுரங்கள். 


சரி, அது, அவர் மேல் கொண்ட காதல் பாடல். அதை அறிந்து நாம் என்ன செய்ய என்று கேட்டால் என்ன சொல்லுவது? எத்தனையோ திரைப்பட பாடல்களை கேட்கிறோம். ஏதோ ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் பாடல்கள். அதை கேட்டு நமக்கு என்ன ஆகப் போகிறது என்று நம் கேட்காமல் இருப்பது இல்லை அல்லவா?


அந்த உணர்சிகள் நம் மனதில் எங்கோ வருடுகிறது. நம் மனத்திலும் அந்த காதலை விதைக்கிறது. அந்த அன்பு என்ற இன்பத்தை தூண்டுகிறது அல்லவா? அது போல


இது போன்ற பக்திப் பாடல்களை கேட்கும் போதோ, வாசிக்கும் போதோ "அடடா, எவ்வளவு ஆழமான காதல், பக்தி " என்று நாம் இரசிக்கும் போது நம்மை அறியாமலேயே அந்த பக்தி நம் மனதில் ஒட்டிக் கொண்டு விடுகிறது. 


நமக்குள்ளும் அந்த ஆர்வத்தை தூண்டுகிறது. 


இங்கே, முதல் பாசுரத்தில்,  திருவரங்கத்தில் உள்ள பெருமாளை நோக்கிப் பாடுகிறார். 


பாசுரத்தை படிக்கும் போது அது சொல்வதை கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டும். 


வாருங்கள், அவர் காட்டும் அந்த அற்புத காட்சியை காணலாம். 


ஒரு இருண்ட அறை. கரு கும்னு இருக்கும் அறை. அந்த அறையில் ஒரு பெரிய பாம்பு. பல தலைகள் உள்ள பாம்பு. அந்த தலைகள் நெளிகின்றன. கூர்ந்து பார்த்தால் தெரிகிறது அந்தப் பாம்பின் மேல் யாரோ படுத்து இருக்கிறார்கள். படுத்து இருப்பது மட்டும் அல்ல, தூங்கவும் செய்கிறார். 


அந்த பாம்பு தலையை நம் பக்கம் திருப்புகிறது. அதன் ஒவ்வொரு தலையிலும் ஒரு நவரத்தின மணி இருக்கிறது. அருகில் உள்ள விளக்கில் இருந்து ஒளி பட்டு அந்த மணிகள் ஜ்வலிகின்றன. அந்த ஒளியில் இருட்டு எங்கோ போய் விட்டது. 


ஒரே வெளிச்சம். சற்று உற்று பார்க்கிறோம். 


அந்த உருவத்தின் காலடியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆற்றின் அலைகள் அந்த உருவத்தின் காலை வருடிக் கொண்டு போகிறது. 


இப்போது கண்ணை மூடிக் கொள்ளுங்கள். அந்த காட்சியை மனதில் ஓட விடுங்கள். 


குலசேகர ஆழ்வார் இந்தக் காட்சியை பார்த்து அதில் இலயித்து விட்டார்.அந்த இடத்தை விட்டு போக மனம் இல்லை. 


போய் விட்டால், இந்தக் காட்சியை இனி எப்போது காண்பேனோ என்று தவிக்கிறார். 


பாடல் 


இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த


அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி


திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்


கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_45.html


(Please click the above link to continue reading)


இருளிரியச் = இருளை விரட்டி அடிக்கும் 


சுடர்மணிகள் =  சுடர் விடும் நவ இரத்தின மணிகள் 


இமைக்கும் =  அசையும் 


நெற்றி = நெற்றி. நெற்றியில் உள்ள நவ ஒளி விடும் நவரத்தினங்கள் 


இனத்துத்தி = துத்தி என்றால் புள்ளிகள். சிறந்த புள்ளிகளை உடைய 


அணி = அழகான 


பணமா யிரங்க ளார்ந்த = படங்கள் (பாம்பின் படம்) ஆயிரம் விளங்கும் 


அரவரசப் = பாம்புகளின் அரசன் 


பெருஞ்சோதி = பெரிய ஜோதி 


யனந்த னென்னும் = அனந்த ஆழ்வான் 


அணிவிளங்கு = அழகாக விளங்கும் 


உயர் = உயர்ந்த 


வெள்ளை = வெண்மையான 


அணையை = படுக்கையில் 


மேவி = படுத்து 


திருவரங்கப்  = திருவரங்கம் என்ற 


பெருநகருள் = பெரிய நகரில் 


தெண்ணீர்ப் = தெளிந்த நீர் 


பொன்னி = காவிரி ஆறு 


திரைக்கையா லடிவருடப் = அலை என்ற கையால் அடி வருட 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


கருமணியைக் = கரிய மணியை 


கோமளத்தைக்  = கோமளத்தை 


கண்டு கொண்டு = கண்டு 


என் = என்னுடைய 


கண்ணிணைகள் = கண் இணைகள், இரண்டு கண்களும் 


என்று கொலோ = என்றோ? 


களிக்கும் நாளே = இன்புறும் நாளே 



அதான் பார்த்தாச்சே, அப்புறம் என்ன , "என்று கொலோ களிக்கும் நாளே" என்றால், இப்போது பார்த்து அனுபவித்து ஆகிவிட்டது.  மீண்டும் எப்போது இதை கண்டு களிக்கப் போகிறேன் என்று ஏங்குகிறார். 


அன்புடையவர்களை பிரியும் போது, "ஐயோ திருப்பி எப்போ பார்ப்போமோ" என்று மனம் ஏங்கும் அல்லவா....அது போல. 


கருமணியை, கோமளத்தை என்று கொஞ்சுகிறார். 


பக்தி புரிந்தால், பாசுரமும் புரியும். 

கம்ப இராமாயணம் - நாண் இன்றி உழல்வீர்

 கம்ப இராமாயணம் - நாண் இன்றி உழல்வீர் 


சீதை அசோகவனத்தில் சிறை இருக்கிறாள். 


தனக்குத் தானே பேசிக் கொண்டு இருக்கிறாள். 


"நான் போற்றும் என் உணர்சிகளே, என் உயிரே. உங்களுக்கு வெட்கம் என்பதே இல்லையா. நான் தான் என் இராமனை பிரிந்தும் உயிர் விடாமல் பழியோடு நிற்கிறேன். உங்களுக்குமா வெட்கம் இல்லை. அவன் வரும் வரை நீங்களும் என்னோடு இருக்கப் போகிறீர்களா ?" 


என்று தன் உயிரிடம், உணர்விடம் கேட்கிறாள். 


இராமனைப் பிரிந்த பின் தன் உயிர் போகவில்லையே என்று நாணுகிறாள். தன் உயிரைப் பார்த்து கேட்கிறாள், "உனக்கு வெட்கமாக இல்லையா...என்ன விட்டு போயேன்" என்று சொல்கிறாள். 


பாடல் 


'பேணும் உணர்வே ! உயிரே ! பெரு நாள்

நாண் இன்றுஉழல்வீர்;தனி நாயகனைக்

காணும் துணையும்கழிவீர்அலிர்; நான்

பூணும் பழியோடுபொருந்துவதோ ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_2.html


(Please click the above link to continue reading)



'பேணும் உணர்வே !  = நான் போற்றும் என் உணர்வுகளே 


உயிரே ! = என் உயிரே  


பெரு நாள் = நீண்ட நாள் 


நாண் இன்று = நாணம் இல்லாமல், வெட்கம் இல்லாமல் 


உழல்வீர்; = வருந்தித் திரிவீர் 


தனி நாயகனைக் = ஒப்பற்ற தலைவனை (இராமனை) 


காணும் துணையும் = பார்க்கும் வரை 


கழிவீர்அலிர்; = என்னை விட்டு போக மாட்டீர்களா ?


நான் = நான் (சீதை) 


பூணும் பழியோடு =கொண்ட பழியோடு 


பொருந்துவதோ ? = நீங்களும் அந்தப் பழியை ஏற்றுக் கொள்கிறீர்களா? 


மேலே சொன்னது நேரடியான அர்த்தம்.


மறைந்து கிடக்கும் இன்னொரு அர்த்தம், இராமனை பார்க்கும் ஆசை சீதைக்கு இருக்கிறது. அதை வெளியே சொல்லவும் நாணம். உயிரை விட்டு விடலாம். ஆனால், அப்படி உயிரை விட்டு விட்டால், பின் இராமனை பார்க்க முடியாதே. எனவே உயிரை விடாமல் இருக்கிறாள். 


என்னைப் போலவே நீங்களும், இராமனை காண்பதற்காக என்னோடு ஒட்டிக் கொண்டு இருகிறீர்களா என்று கேட்கும் தொனியும் பாடலில் இருக்கிறது. 


உலக நாயகன் மனைவியாக இருந்தால் என்ன...பெண், பெண்தான். 


அந்த வெகுளித்தனம், அந்த அன்பு, கணவனை காண வேண்டும் என்ற ஆவல், அதை வெளியே சொல்ல முடியாத நாணம், பிரிவுத் துயர் எல்லாம் இந்தப் பாடலில் பின்னி பிணைந்து கிடக்கிறது. 


எவ்வளவு இனிமையான அழகான பாடல்!


Wednesday, September 1, 2021

திருக்குறள் - மங்கலம், நன்கலம்

 திருக்குறள் - மங்கலம், நன்கலம் 


திருமணம் ஆகி விட்டது. புது மனைவி (கணவன்), புது வகை இன்பம். ஐந்து புலன்களுக்கும் இன்பம். பார்ப்பது இன்பம், தொடுவது இன்பம். பேசுவதை கேட்பது இன்பம். முத்தம் இன்பம். மணம் இன்பம். 


சரி. இது எத்தனை நாளைக்கு? எவ்வளவுதான் சிறந்த இன்பமாக இருந்தாலும், ஒரு காலத்துக்கு மேல் ஒரு அலுப்பும், சலிப்பும் வருவது இயற்கை. இது இவ்வளவுதானா, இதற்குத் தானா இந்தப் பாடு என்று ஆயாசம் வரும்.


இல்லறத்தில் சலிப்பு வரும். இதில் ஒன்றும் இல்லை. தெரியாமல் வந்து இதில் மாட்டிக் கொண்டோம். வெளியே வரவும் முடியாது. என்ன செய்வது என்று வெறுப்பாக இருக்கலாம். 


இல்லறத்தை எப்படி மேலே கொண்டு செல்வது? அதில் ஒரு பிடிப்பையும், இனிமையையும் எப்படி கொண்டு வருவது?


இல்லறம் என்பதே எதற்காக? அன்பை விரிவு செய்வதற்காக. 


தான் தான் என்று இருந்த ஒரு ஆணும், பெண்ணும், "அவளுக்கு பிடிக்கும், அவருக்கு பிடிக்கும் " என்று தனக்கு விருப்பமானதை மற்றவருக்கு கொடுத்து அதில் இன்பம் காண்பது அன்பு பரிமாற்றம், அன்பின் நெகிழ்ச்சி, அன்பின் விரிவு. 


காசு போட்டு வாங்கிய மல்லிகைப் பூ...அவளுக்கு எதுக்கு கொடுக்கணும், நானே வைத்துக் கொள்கிறேன் என்று எந்த கணவனாவது நினைப்பானா? இந்தப் புடவை அவளுக்கு நல்லா இருக்கும்ல? இந்தப் பாட்டு அவளுக்கு பிடிக்கும்...என்று அவள் சந்தோஷம் அவனுக்கு முக்கியமாக படுகிறது. 


இன்று பாயாசம் நல்லா வந்திருக்கு. கஷ்டப்பட்டு செஞ்சது. அவருக்கு எதுக்கு கொடுக்கணும், நானே எல்லாவற்றையும் குடித்து விடுகிறேன் என்று எந்த மனைவியாவது நினைப்பாளா? 


இந்த மனைவி/கணவன் உறவு என்பது உடல் சார்ந்த இன்பத்தை ஆதாரமாக கொண்டு இருந்தால், நாளடைவில் அது வெறுப்பும், சலிப்பும், ஏமாற்றமும் தரும். 


இந்த இல்லறத் தேரை மேலும் கொண்டு செல்ல இயற்கை கண்டு பிடித்த அதிசயம், "குழந்தைகள்". 


குழந்தைகள் வந்து விட்டால், பெற்றோரின் அன்பு மடை மாறி பிள்ளை பால் பாய ஆரம்பிக்கும். 


குழந்தையின் மழலை மொழி, களங்கமற்ற முகம், அதை கட்டி அணைக்கும் போது வரும் சுகம், அந்த பால் மணம், அதற்கு ஈடு உண்டா? 


கணவனுக்கு மனைவி மேலோ, மனைவிக்கு கணவன் மேலோ உண்டாகும் அன்புக்கு ஒரு காரணம் இருக்கிறது. எனக்கு அவள் (அவன்) இன்பம் தருகிறாள். எனக்கு உதவி செய்கிறாள் (ன்) என்ற ஒரு பரிமாற்றம் சார்ந்த அன்பு இருக்கிறது. 


குழந்தைகள் அப்படி அல்ல. அவை நமக்கு ஒன்றுமே செய்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவற்றால் நமக்கு வெளிப்படையான துன்பம் தான். தூங்க விடாது, மல ஜலம் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும், ஒரு வேலையும் செய்யாமல், சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு, கையை காலை ஆட்டிக் கொண்டு படுத்துக் கிடக்கும். அதன் மேல் அத்தனை அன்பு பிறக்கும். அத்தனை மகிழ்ச்சி.


குழந்தைக்கு உடல் நலம் இல்லை என்றால், மனைவி மேல் கூட ஆசை வராது. 


இல்லற கடமைகள் சொன்னார். 


அடுத்து வாழ்க்கைத் துணை நலம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். 


இதை அடுத்து என்ன வரும்? புதல்வர்களைப் பெறுதல். அடுத்த அதிகாரம். அதற்கு முன்னோடியாக இந்த கடைசிக் குறளை இந்த அதிகாரத்தில் வைக்கிறார்.


பாடல் 



மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post.html


(Please click the above link to continue reading)


மங்கலம் = நன்மை 

என்ப = என்று சொல்லுவார்கள் 

மனைமாட்சி = மனையாளின் நற்குண நற்செய்கைகள் 

மற்று = அசைச் சொல் 

அதன் = அதன்

நன்கலம் = நல்ல அணிகலன் 

நன்மக்கட் பேறு. = நல்ல பிள்ளைகளைப் பெறுதல் 


இல்லறத்தின் அழகு, நல்ல பிள்ளைகளைப் பெறுதல். 


பிள்ளைகளைப் பெறுதல் என்று சொல்லவில்லை. நல்ல பிள்ளைகளைப் பெறுதல் என்று சொல்கிறார். 


"மங்கலம் என்ப"  மங்கலம் என்று சொல்லுவார்கள் என்றால் யார் சொல்லுவார்கள் என்ற கேள்வி வரும் அல்லவா? பரிமேலழகர் உரை சொல்கிறார் "அறிந்தோர் சொல்வர்" என்று. 


அப்படி என்றால் என்ன அர்த்தம்?


முட்டாளிடம் கேட்டால் என்ன மற்றவரைச் சொல்லுவான். 


இல்லறத்தின் நன்மை என்ன என்றால், பொருள் சேர்ப்பது, வீடு வாசல் வாங்குவது, மனைவி மக்களை கூட்டிக் கொண்டு ஊர் சுற்றுவது, நாள் கிழமை என்றால் புது ஆடை உடுப்பது, புது புது பலகாரம் செய்து உண்பது, டிவி பார்ப்பது என்று பலவிதமாக சொல்வார்கள், முட்டாள்கள்.


அறிவுள்ளவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றால் "இல்லறத்தின் நன்மை என்பது நல்ல பிள்ளைகளை பெறுவது" என்று. 


இல்லறக்  கடமை சொல்லி ஆகிவிட்டது. 


வாழ்க்கைத் துணை நலம் சொல்லி ஆகிவிட்டது. 


அடுத்தது புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரம். 


கணவன் மனைவி என்று ஆகிவிட்டால் அடுத்து பிள்ளைகள் தானே ? அந்த ஒழுங்கில் போகிறார். 


இதை இன்றைய கலாசாரத்தோடு பார்ப்போம். 


திருமணம் செய்து கொள்ளாமலேயே பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு கலாசாரம் வந்து இருக்கிறது. 


இல்லறத்தின் நலம் பிள்ளைகளைப் பெறுவது என்றால், ஒரே இனத்தில் திருமணம் செய்து கொண்டால் எவ்வாறு பிள்ளைகளைப் பெறுவது? ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள். அதற்கான சட்ட வடிவங்களும் வந்து கொண்டு இருக்கின்றன. 


சரி, அப்படி திருமணம் செய்து கொண்டு, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு விடை என்ன. 


அன்பு விரிய வேண்டாமா? கணவனும் மனைவியும் என்றால், அன்பு பிள்ளைகள் மேல் விரியும். வள்ளுவர் இன்னும் பல படிகள் சொல்லப் போகிறார். பிள்ளைகள் வந்து விட்டன, அடுத்தது என்ன என்ற கேள்விக்கும் விடை தருகிறார். அவற்றை எல்லாம் பார்க்க இருக்கிறோம். 


நான் எதையும் சரி தவறு என்று சொல்லவில்லை. 


எதற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். பலன் இருக்க வேண்டும். அந்த நோக்கம் உயரிய நோக்கமாக இருக்க வேண்டும்.  


நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது ஒரு நோக்கம் தான். அது உயர்ந்ததா? 


வாய் வரை கொண்டு சென்ற ஒரு இனிப்பை, "அட, அந்தப் பிள்ளை இதை விரும்பி சாப்பிடுவானே" என்று நினைத்து, அவனுக்காக அதை எடுத்து வைப்பவதில் உள்ள சுகம் தான் உண்பதில் வருமா? 


ஒரு முழு வாழ்க்கைப் பாதையை போட்டு தந்து விட்டுப் போய் இருக்கிறார்கள். 


அவற்றை விட்டு விட்டு எங்கெங்கோ போய்க் கொண்டு இருக்கிறோம். 


விதி விலக்காக யாரோ எங்கோ ஒரு மூலையில் செய்வதை பெரிய புரட்சி என்று எண்ணிக் கொண்டு, அது தான் வாழ்க்கை முறை என்று தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறோம். 


நம் வாழ்கை நெறியை முதலில் சரியாக புரிந்து கொள்வோம். அப்புறம், அது சரி இல்லை என்றால் மற்றவற்றை கடை பிடிப்பதைப் பற்றி யோசிப்போம். 


சரி தானே?



Tuesday, August 31, 2021

திருக்குறள் - ஒரு சின்ன இடைச் செருகல்

 திருக்குறள் - ஒரு சின்ன இடைச் செருகல் 


இந்த ப்ளாகை படிக்கும் சிலர், சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். 


அந்தக் கேள்விகள் பெரும்பாலும் எப்படி திருக்குறள் வழி நடந்து நம்மை முன்னேற்றுவது என்பது பற்றி அல்ல. 


திருக்குறளில் குறை கண்டு பிடிப்பது, வள்ளுவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்க நினைப்பது, தங்கள் மேதாவிலாசத்தை காட்டுவது என்று போகிறது. 


விமர்சினங்கள், ஆராய்சிகள், கேள்விகள் எல்லாம் தேவை தான். அப்படித்தான் அறிவு வளரும். அது கூடவே கூடாது என்று சொல்ல முடியாது. 


ஆனால், அந்த கேள்விகள் அறிவை வளர்க்க பயன் பட வேண்டும். அறியாமையை வெளிச்சம் போட்டு காட்ட அல்ல. 


பெரும்பாலான கேள்விகள் வரக் காரணம் திருக்குறளை முழுமையாக ஒரு வரிசையாக படிகாதாதல் வரும் கேள்விகள். 


ஒரு ஐந்து வயது மாணவனை பன்னிரெண்டாம் வகுப்பில் கொண்டு போய் அமர்த்தினால் எப்படி இருக்கும்? அவனுக்கு எல்லாவற்றிலும் சந்தேகம் வரும், கேள்வி வரும், குழப்பம் வரும். 


ஒவ்வொரு வகுப்பாக படித்துக் கொண்டு வந்தால் தெளிவு பிறக்கும். 


அது போல குறளை வரிசையாக படிக்க வேண்டும். முதலில் படித்ததை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 


முதல் வகுப்பில் படித்த அ ஆ மறந்து விட்டது என்று பத்தாம் வகுப்பில் வந்து உட்கார்ந்தால், எப்படி மேலே படிப்பது? 


திருக்குறளை ஒரு கோர்வையாக, ஆதி முதல் அந்தம் வரை படிக்க வேண்டும். அதுவும் வரிசையாக படிக்க வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_31.html


(Please click the above link to continue reading)


திருக்குறள் ஒரு நீதி நூல் அல்ல. அது வாழ்கை நெறிமுறை நூல். 


வாழ்க்கை என்பது ஒரு ஒழுங்கில் இருப்பது. 


பிறப்பு - பின் வளவர்து - பின் கல்வி கற்பது - பின் திருமணம் - பிள்ளைகள் - வயதாவது - மரணம் என்று போகிறது அல்லவா. 


இல்லை, நான் அப்படி வாழ மாட்டேன். முதலில் பிள்ளை பெற்றுக் கொள்வேன், அப்புறம் கல்வி கற்பேன், பின் திருமணம் செய்து கொள்வேன் என்று மனம் போனபடி வாழ முடியுமா? ஐந்து வயதில் திருமணம், எட்டு வயதில் பிள்ளை பெற்றுக் கொள்வேன் என்றெல்லாம் ஆரம்பிக்க முடியாது. 


அதே போல் ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் அதை அப்படியே செய்ய வேண்டும், அல்லது அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் அல்லது அது சரி இல்லை என்றால் விட்டு விட்டு வேறு வேலை செய்யப் போய் விட வேண்டும். 


மாறாக, பிள்ளை வளர்ப்பது இப்படி என்று சொன்னால், அப்படி என்றால் வீட்டுக்கு வரும் விருந்தினரையும் அப்படித்ததான் நடத்த வேண்டுமா என்று கேட்கக் கூடாது. 


ஆணின் வேலை இது, பெண்ணின் வேலை இது என்று சொன்னால், அப்படி என்றால் ஆண்கள் அந்த வேலை செய்யக் கூடாதா, பெண்கள் இந்த வேலை செய்யக் கூடாதா என்று குதர்க்கம் பேசித் திரியக் கூடாது. 


பேசலாம். எப்போது என்றால், அப்படி மாறிச் செய்வது பற்றி முழுமையாக ஆராய்ந்து, ஒரு வாழ்கை முறையை கூறி, அந்த வாழ்க்கை முறை முன்னதை விட சிறப்பானது என்று நிறுவும் திறம் இருந்தால். 


திருக்குறள் எதையும் புதிதாக கண்டு சொல்லும் நூல் அல்ல. எங்கும், எப்போதும் நிறைந்து இருக்கும் அறத்தை தொகுத்துச் சொன்ன நூல். அவ்வளவுதான். 


நெருப்பில் கை வைக்காதே. சுடும் என்று அம்மா சொல்கிறாள். பிள்ளை "அது எப்படி சுடும் " என்று கை வைக்கிறான். சுடுகிறது. அம்மா சொன்னதால் சுடவில்லை. அம்மா சொல்லாவிட்டாலும் சுட்டிருக்கும். 


அது போல வள்ளுவர் செய்திருப்பது "சுடும்" என்ற செய்தியை சொல்வது. வாழ்க்கையை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, அதன் இரகசியங்களை அறிந்து தொகுத்துச் சொன்னது.   


பொருளை போட்டால் அது புவி ஈர்ப்பு காரணமாக கீழே விழும் என்று சொன்னது நியூட்டன். அவர் சொல்லாவிட்டாலும் புவி ஈர்ப்பு இழுக்கத்தான் செய்யும்.  அது ஒரு அறிவியல் உண்மை. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது நடந்தே தீரும். 


எனக்கு நியூட்டனின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லை. நான் பத்தாவது மாடியில் இருந்து குதிக்கப் போகிறேன் என்று சொல்பவர்களை நாம் என்ன செய்ய முடியும். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யலாம். அவ்வளவுதான். 


பெண் ஒழுங்காக இருந்தால் ஆணுக்குச் சிறப்பு என்றால், அப்படி என்றால் ஆண் ஒழுங்காக இருந்தால் பெண்ணுக்கு சிறப்பு இல்லையா என்று கேட்டால், சிறப்புத்தான். பின் ஏன் அதை வள்ளுவர் சொல்லவில்லை. பெண் மட்டும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சொல்கிறாரே என்று கேட்டால், ஆணுக்கு பதினொரு கடமைகள் சொல்லி இருக்கிறார். அவற்றை ஊன்றிப் படித்தால், அவர் ஆண் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார் என்று புரியும். 


உடனே, அந்த வேலையெல்லாம் ஏன் பெண்கள் செய்யக் கூடாது என்று ஆரம்பிக்கக் கூடாது. 


சிரார்த்தம் ஆண்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஏன் பெண்கள் செய்யக் கூடாது? 


துறவிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் உணவு, உடை, மருந்து இவற்றை தந்து உதவ வேண்டும் என்று ஆணுக்குச் சொல்லி இருக்கிறது. அதை ஏன் பெண்கள் செய்யக் கூடாது? செய்யலாம். ஒரு பெண் தினம் நாலு ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து போட்டு அனுப்பலாம். அந்தப் பெண்ணை உலகம் என்ன சொல்லும்? 


சரி, ஒரு ஆண் மட்டும் நாலு பெண்களை அழைத்து வந்து விருந்து போடலாமா என்றால், வள்ளுவர் அதற்கும் சம்மதம் சொல்லவில்லை. அந்த உபசரிப்பை ஆண் தனித்து செய்ய முடியாது. பெண்ணின் துணை வேண்டும் என்று வைத்து இருக்கிறார். 


அதனால், வள்ளுவரின் ஒவ்வொரு குறளும், அந்த குறளின் அர்த்தம் மட்டும் அல்ல, அது வைத்திருக்கும் இடமும் மிக முக்கியமானது. 


ஏன் முதலில் இன்பத்துப் பாலை வைக்கக் கூடாது?  துறவு கடைசியில் வருவது தானே. அதை கடைசியில் வைத்து முதலில் இன்பத்துப் பாலை வைத்து இருக்க வேண்டியது தானே. 


சரி, அது கூட வேண்டாம், முதலில் பொருள் பாலையாவது வைத்து இருக்கலாமே? பொருள் சேர்த்து, இல்லறத்தில் இன்பம் அனுபவித்து பின் தானே துறவு, வீடு பேறு எல்லாம். 


பின் ஏன் நீத்தார் பெருமையை முன்னால் சொல்லி பின் இன்பத்துப் பாலை வைக்கிறார்? வள்ளுவருக்கோ தெரியாதோ? நமக்கு தெரிந்த இந்த சின்ன விஷயம் கூட அவருக்குத் தெரியவில்லை போலும் என்று நினைக்கக் கூடாது. 


திருக்குறள் வைப்பு முறையே மிக மிக நுட்பமான விஷயம்.


திருக்குறள் படித்து நம்மை மேலேற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே அல்லாது நம் நிலைக்கு அந்த நூலை கீழே இரக்கக் கூடாது. 


இனி அடுத்த குறளுக்குள் போவோம்.



Sunday, August 29, 2021

திருவரங்க கலம்பகம் - அற்றவர் சேர் திருவரங்கப் பெருமான்

திருவரங்க கலம்பகம் - அற்றவர் சேர் திருவரங்கப் பெருமான் 


பிள்ளை பெருமாள் ஐயங்கார் என்ற வைணவ இலக்கிய வல்லுநர் அருளிச் செய்த நூல் திருவரங்கக் கலம்பகம். 


அதில் இருந்து ஒரு பாடல்.


ஒரு அரசன், தன்னுடைய மகனுக்கு மறவர் குடியில் பிறந்த ஒரு பெண்ணை மணம் பேசி முடிக்க ஓலை அனுப்புகிறான். அந்தப் பெண்ணுக்கோ திருவரங்கத்து பெருமாள் மேல் தீராக் காதல். அந்தப் பெண்ணின் தகப்பன், ஓலை கொண்டு வந்தவனைப் பார்த்துக் கேட்கிறான் 


"அரசனின் திருமுகத்தை (ஓலையை. ஓலைக்கு இன்னொரு பேர் திருமுகம்) கொண்டு வந்த தூதனே, எங்களை யார் என்று நினைத்தாய்? பற்று அனைத்தையும் விட்டவர்கள் சேரும் திருவரங்கனின் தோழர் (குகன்) பரம்பரையில் வந்தவர்கள். 


சரி திருமுகம் கொண்டு வந்ததுதான் வந்தாய், மூக்கு, செவி, கண் எல்லாம் எங்கே? 


இளவரசனுக்கு (இள + அரசு) பெண் வேண்டும் என்றால் அரசுக்கு ஏற்ற ஏதாவது ஒரு ஆல மரத்தை கட்டி வைக்க வேண்டியது தானே"


என்று ஏளனம் செய்து திருப்பி அனுப்புவதாக அமைந்த கவிதை. 


பாடல்  


கொற்றவன் தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!

குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!

அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்

அவதரித்த திருக்குலம் என்றறியாய் போலும்!

மற்றதுதான் திருமுகமே ஆனால் அந்த

வாய், செவி, கண், மூக்கு எங்கே? மன்னர்மன்னன்

பெற்ற இளவரசு ஆனால் ஆவின் கொம்பைப்

பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_29.html


(Please click the above link to continue reading)


கொற்றவன் தன் = அரசனுடைய 


திருமுகத்தைக் = ஓலையை 


கொணர்ந்த தூதா! = கொண்டு வந்த தூதா 


குறை உடலுக்கோ = குறை உள்ள உடலுக்கோ (முகம் மட்டும் தானே இருக்கிறது) 


மறவர் = மறவர் குடியில் பிறந்த 


கொம்பைக் கேட்டாய்! = பெண்ணைக் கேட்டாய் 


அற்றவர்சேர் = பற்று அற்றவர்கள் சேரும் 


 திருஅரங்கப் பெருமாள் = திரு அரங்கப் பெருமாளின் 


 தோழன் = தோழன் (குகன்) 


அவதரித்த = பிறந்த 


திருக்குலம் = குலம் 


என்றறியாய் போலும்! = என்று நீ அறியவில்லை போலும் 


மற்றதுதான் திருமுகமே ஆனால் = அது திருமுகம் என்றே வைத்துக் கொண்டாலும் 


அந்த = அதன் 


வாய், செவி, கண், மூக்கு எங்கே?  = வாய், செவி, கண், மூக்கு எங்கே 


மன்னர்மன்னன் = மாமன்னர் 


பெற்ற இளவரசு = பெற்ற பிள்ளையாகிய இளவரசன்


ஆனால் = என்றால் 


ஆவின் கொம்பைப் = ஆலமரத்தின் கொம்பை  அல்லவா 


பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே! = பிறந்த குலத்துக்கு ஏற்ப பேசி முடிக்க வேண்டியது தானே 


என்பது கவிதை. 


(உலகிலேயே மிகக் கடினமான காரியம் எது என்றால் கேட்டால் இது போன்ற மிக எளிமையான பாடலுக்கு உரை எழுதுவதுதான் போலும்....:))


எங்கோ ஒரு குகன், இராமன் மேல் அன்பு வைத்ததால், அவன் பின் வந்த எல்லோரும் இராமன் மேல் அன்பு பாராட்டுகிறார்கள். 


நல்லது என்றால் பின்பற்ற வேண்டியது தானே. 


பழைமை எல்லாம் மூடத்தனம் என்று ஒதுக்கும் ஒரு நிலை வந்து விட்டது. 


இது போன்ற இலக்கியங்கள் நாம் எப்படி வாழ்ந்தோம், நம் கலாசாரம் எப்படி இருந்தது என்று நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. 

Saturday, August 28, 2021

நந்திக் கலம்பகம் - பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

நந்திக் கலம்பகம் - பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்


நந்திக் கலம்பகம் ஒரு இனிய இலக்கியம். படிக்க படிக்க சுவை தரும் இலக்கியம். மிக எளிய அதே சமயத்தில் கருத்து ஆழமும், உவமை நயமும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கொண்டது. 


தலைவனைப் பிரிந்த தலைவி தனிமையில் வருந்துகிறாள்.


எப்படியோ, இரவு போய் விட்டது. பகல் வந்து விட்டது. எல்லோரும் விழித்து விடுவார்கள். வேலை தொடங்கி விடும். தலைவனின் பிரிவை கொஞ்சம் மறந்து இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இந்த இரவும் நிலவும் மீண்டும் வேகமாக் வந்து விட்டது. 


இப்ப தான் விடிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள திரும்பியும் நிலவு வந்து அவளை வருத்தத் தொடங்கி விட்டது. 


நிலவு வேகமாக வந்ததற்கு ஒரு உதாரணம் கூறுகிறாள் தலைவி. 


ஒரு ஊரில் பெண்களே இல்லை என்றால் அந்த ஊர் எப்படி இருக்கும்? 


அந்த ஊரில் அன்பு இருக்காது. கருணை இருக்காது. அரவணைப்பு இருக்காது. ஈரம் இருக்காது. அருள் இருக்காது. 


அம்மா இல்லை, அக்காள் தங்கை இல்லை, மகள் இல்லை, காதலி இல்லை, மனைவி இல்லை...அது என்ன ஊர்? 


அங்குள்ள மக்கள் ஈவு இரக்கம் அற்று கொடியவர்களாக இருப்பார்கள் அல்லவா?


அப்படிப் பட்ட கொடியவர்களைப் போல நீ வேகம் வேகமாக வந்து என்னைத் துன்பப் படுத்துகிறாய் என்கிறாள். 



பாடல் 


 மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்

 தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்

பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_28.html


(Please click the above link to continue reading)


மண்ணெலாம் = இந்த மண் உலகம் எல்லாம் 


உய்ய = பிழைக்க 


மழைபோல் = மழையைப் போல 


வழங்குகரத் = வழங்கும் கைகளைக் கொண்ட 


தண்ணுலாமாலைத் = குளிர்ச்சி நிலவும் மாலையை அணிந்த 


தமிழ் நந்தி நன்னாட்டில் = நந்திவர்மன் உள்ள இந்தத் தமிழ் நாட்டில் 


பெண்ணிலா = பெண்களே இல்லாத 


ஊரில் = ஊரில் 


பிறந்தாரைப் போலவரும் = பிறந்தாரைப் போல வரும் 


வெண்ணிலாவே = வெண்ணிலாவே 


இந்த வேகம் உனக்காகாதே. = இத்தனை வேகம் உனக்கு ஆகாதே 


என்ன ஒரு கவிதை!


சமயம் இருப்பின் மூல நூலை தேடித் பிடித்து படியுங்கள். அத்தனையும் தேன்.


Friday, August 27, 2021

திருக்குறள் - ஏறுபோல் பீடு நடை

 திருக்குறள் - ஏறுபோல் பீடு நடை 


ஒருவனிடம் எல்லா செல்வமும் இருக்கிறது. 


பெரிய வீடு, வீட்டில் உள்ளேயே நீச்சல் குளம், நாலைந்து கார், வீட்டைச் சுற்றி தோட்டம், பெரிய பதவி, ஊருக்குள் பெரிய மனிதன் என்ற பேர், படிப்பறிவு எல்லாம் இருக்கிறது. 


ஆனால், அவன் மனைவி மட்டும் கொஞ்சம் சரி இல்லை. 


பொழுது விடிந்தால் போதும் சண்டை ஆரம்பித்து விடும், வேலைகாரர்கள், அக்கம் பக்கம் என்று கத்தி சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். ஆடம்பரச் செலவு. வீட்டுக்கு யாராவது வந்தால் ஏண்டா வந்தோம் என்று வருத்தித்தான் திரும்பிப் போவார்கள். மரியாதை கிடையாது. அன்பு கிடையாது. 


அப்படி ஒரு மனைவி இருந்தால், அவன் ஊருக்குள் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா ?


"அதோ போறாரே, அவர் மனைவி...ஒரு பெரிய இராட்சஷி..." என்று அவர் காது பட பேசினால், அவரால் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?


மாறாக, இன்னொருவன் இருக்கிறான். பெரிய படிப்பு, செல்வம் எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அவன் மனைவி பத்தரை மாத்துத் தங்கம். வீட்டுக்கு யார் வந்தாலும் அப்படி ஒரு உபசரிப்பு, யார்க்கு ஒரு துன்பம் என்றாலும் முதலில் போய் நிற்பாள், கணவன் மேல் அளவற்ற அன்பு,  எல்லா உறவையும் அணைத்துக் கொண்டு செல்லும் பாங்கு, யார் என்ன சொன்னாலும் புன்னகையோடு பேசும் பாங்கு,  சிக்கனமான செலவு...


அவன் ஊருக்குள் போகும் போது என்ன சொல்வார்கள் ?


"அதோ போறாரே...அவர் படிப்பு, பணம் காசு இல்லைனாலும், குடுத்து வச்ச மனுஷன்...இலட்சுமி மாதிரி ஒரு பொண்டாட்டி...வேற என்ன வேணும் " என்று சொன்னால், நெஞ்சு நிமிர்த்தி ஒரு பெருமிதத்துடன் நடக்க முடியும் அல்லவா அவனால்...


ஒரு மனிதன் ஏறு போல் கம்பீரமாக நடப்பதற்கும், தலையை தொங்கப் போட்டுக் கொண்டு போவதற்கும் அவன் கையில் ஒன்றும் இல்லை. அவன் மனைவி கையில் தான் எல்லாம் இருக்கிறது என்கிறது அடுத்த குறள். 


பாடல் 


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_27.html


(Please click the above link to continue reading)


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு = புகழை விரும்பும் மனைவி இல்லாதவர்களுக்கு 


இல்லை = கிடைக்காது 


இகழ்வார்முன் = அவனை இகழ்பவர் முன்னால் 


ஏறுபோல் = ஏறு போல 


பீடு நடை = பெருமிதமான நடை 



ஒரு மனிதனின் பெருமையும், சிறுமையும் அவன் மனைவியின் கையில் இருக்கிறது. 


அப்படி என்றால் என்ன அர்த்தம்? 


மனைவியிடம் எல்லாவற்றையும் விட்டு விட்டு இவர் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. 


அவள் கையில்தான் எல்லாம் இருக்கிறது என்றால், அவளை போற்றி பாதுகாக்க வேண்டும், அவளை அன்போடு நடத்த வேண்டும், அவளுக்குத் துணை செய்ய வேண்டும். அவளை மதிக்க வேண்டும். 


இது இல்லறம். 


இதில் யார் பெரியவர், யார் சிறியவர்  என்ற போட்டி இல்லை. 


யாருக்கு பலம் அதிகம் என்று நிர்ணயம் செய்யும் மல்யுத்த களம் அல்ல. 


இருவரும் சேர்ந்து நடத்தும் அறம் இது.