Monday, September 6, 2021

திருவாசகம் -திருச்சதகம் - வித்தின்றி விளையச் செய்வாய்

திருவாசகம் -திருச்சதகம் -  வித்தின்றி விளையச் செய்வாய் 


இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள் என்று பல கேள்விகள் இருக்கின்றன. 


ஒரு பானை இருக்கிறது என்றால் அந்தப் பானையை செய்த குயவன் இருப்பான் என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? பானை, தன்னைத் தானே செய்து கொள்ளாது அல்லவா?


அது போல, இந்த உலகம் இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று சிந்திக்க முடியும். 


எது ஒன்று தோன்றுவதற்கும், அதை தோற்றுவித்த ஒருவன் வேண்டும். எனவே, இந்த உலகைப் படைத்தது இறைவன் என்று பக்திமான்கள் கூறுகிறார்கள். 


அவர்கள் அதோடு நின்று விடுகிறார்கள். எதை ஒன்றை தோற்றுவிப்பதற்கும் அதை உண்டாக்கிய ஒருவன் வேண்டும் என்றால், இறைவனை தோற்றுவித்தது யார் என்ற பதில் கேள்வி எழும். 


இறைவனை யாரும் தோற்றுவிக்கவில்லை, அவன் தானே தோன்றி விட்டான் என்று கூறினால், இந்த உலகமும் தானே தோன்றியது என்றும் கூறலாம். .


சரி, இறைவன் தோற்றிவித்தான் என்றால் எதில் இருந்து இந்த உலகத்தைப் படைத்தான் என்ற கேள்வி வரும். எதில் இருந்தோ என்றால் அதை யார் படைத்தார்கள் என்ற கேள்வி வரும். 


மணிவாசகர் கூறுகிறார் 


"நீ உலகை இரண்டு விதத்தில் படைப்பாய். ஒன்று விதை இல்லாமல் விளைவு செய்வாய். இன்னொன்று இருக்கின்ற உலகை வைத்துக் கொண்டு மேலும் பலப் பல செய்வாய். அப்பேற்பட்ட நீ, என்னை உன் கோவில் வாசலில் பித்தனாக நிற்க வைத்தாய். உன் அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டாய். தாம் நட்ட மரம் விஷ மரம் என்று தெரிந்தாலும், நட்டவர்கள், அந்த மரத்தை அழிக்க மாட்டார்கள். நானும் அந்த மாதிரி ஒரு விஷ மரம்தான். என்னையும் அழித்து விடாதே "


என்று உருகுகிறார். 


பாடல்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_6.html


(Please click the above link to continue reading)



விச்ச தின்றியே விளைவு செய்குவாய்‌ 

விண்ணு மண்ணக முழுதும்‌ யாவையும்‌ 

வைச்சு வாங்குவாய்‌ வஞ்ச கப்பெரும்‌ 

_ புலைய னேனையுன்‌ கோவில்‌ வாயிலில்‌ 

பிச்ச னாக்கினாய்‌ பெரிய வன்பருக்‌ 

குரிய னாக்கினாய்‌ தாம்வ ளார்த்ததோர்‌ 

ரச்சு மாமர மர்யி னுங்கொலார்‌ 

நானு. மங்ஙனே யுடைய நாதனே. 


பொருள் 




விச்ச தின்றியே = விதை இன்றியே 


விளைவு செய்குவாய்‌  = விளைய வைப்பாய் 


விண்ணு மண்ணக முழுதும்‌ = விண்ணும், மண்ணும்


யாவையும்‌  = முழுவதும் 


வைச்சு வாங்குவாய்‌ = செய்வாய், பின் அவற்றை உன்னுள் அடங்கப் பண்ணுவாய் 


வஞ்ச கப் = வஞ்சக மனம் கொண்ட 


பெரும்‌  = பெரிய 


புலைய னேனை = கீழான என்னை 


யுன்‌ = உன் 


கோவில்‌ வாயிலில்‌  = கோவில் வாசலில் 


பிச்ச னாக்கினாய்‌  = பித்தனாக்கினாய் 


பெரிய = மதிப்புள்ள 


வன்பருக்‌ குரிய = அன்பருக்கு உரியவன் 


னாக்கினாய்‌ = ஆக்கினாய் 


தாம் வ ளார்த்ததோர்‌  = தாம் வளர்த்த 


ரச்சு = நச்சு 


மாமர மர்யி னுங்கொலார்‌  = மா மரமாயினும் வைத்தவர்கள் அதை கொல்ல மாட்டார்கள் 


நானு. மங்ஙனே யுடைய நாதனே.  = நானும் அப்படித்ததான், எல்லாம் உடைய நாதனே 



என்ன ஒரு பாடல். எவ்வளவு பொருள் செறிவு. 


பிள்ளை பிறந்து வளர்ந்து விட்டான். சேராத இடம் சேர்ந்து, கெட்டுப் போய் விட்டான். பெற்ற தாய், அந்தப் பிள்ளையை வெறுப்பாளா? ஊருக்கு அவன் கெட்டவனாக இருக்கலாம். ஆனால் , அவனைப் பெற்ற தாய்க்கு அவன் செல்லப் பிள்ளைத் தான். 


சிலர் மரம் வைத்து வளர்ப்பார்கள். வளர்ந்த பின்தான் தெரியும், அந்த மரம் நச்சு கனிகளை கொடுக்கும் மரம் என்று. அதற்காக அதை வெட்டி விட மாட்டார்கள். அது பாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவார்கள். 


அப்படி இருந்தது நம் பண்பாடு. 


இப்போது என்னடா என்றால், சாலை போடுகிறேன், வீடு கட்டுகிறேன், தொழிற்சாலை கட்டப் போகிறேன் என்று நூற்றுக் கணக்கில் மரங்களை வெட்டித் தள்ளுகிறார்கள்.


நச்சு மரத்தை கூட வெட்டாமல் வளர்த்த கருணை நிறைந்த பரம்பரை நம்முடையது. 


இறைவன், ஒன்றும் இல்லாததில் இருந்து இந்த உலகை தோற்றுவித்தான். விதை இல்லாமல் செடி வளர்ப்பவன் என்கிறார் மணிவாசகர். அது எப்படி முடியும் என்றால், நமக்குத் தெரியாது. மணிவாசகருக்கு தெரிந்து இருக்கிறது. 


இல்லை என்றால் வேலை மெனக்கெட்டு "விதை இல்லாமல் விளையச் செய்வாய்" என்று சொல்லுவாரா. நம் அறிவுக்கு எட்டவில்லை. அவ்வளவுதான். 


அது மட்டும் அல்ல, பின்னால் "விண்ணையும் மண்ணையும் வைத்து வாங்குவாய்" என்கிறார். 


இதை சைவ சித்தாந்தம் முதலுர்பவம், புனருற்பவம் என்கிறது. ஆதியில் தொடங்கிய உற்பத்தி, அப்புறம் பின்னால் தோன்றிய உற்பத்தி. 


மெய்கண்டர் உரை எழுதும் போது கூறுவார் 


"பிரபஞ்சம்‌ அகாதியாகலின்‌ அம்முதற்கோடி ஈம்மனோரான்‌ அறியவாராமை 

யானும்‌"

என்றார். நம்மால் அறிய முடியாது என்கிறார். 


நட்ட மரம் நச்சு மரமாயினும் நட்டவர்கள் எப்படி வெட்ட மாட்டார்களோ, அது போல, என்னை நீ தான் படைத்தாய். நான் சரி இல்லை என்றால், அதற்கு நீ தான் பொறுப்பு. எனவே, என்னை ஏற்றுக் கொள் என்கிறார். 


இதெல்லாம் படிக்கணுமா இல்லையா? 





Sunday, September 5, 2021

திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - புதல்வரைப் பெறுதல் - ஒரு முன்னோட்டம் 


இல்லறம் என்பது வீடு பேற்றை நோக்கிய ஒரு படி. அதுவே முடிவு அல்ல. 


வீடு பேறு வேண்டும் என்றால் துறவு வேண்டும். 


துறவு வேண்டும் என்றால் அருள் வேண்டும். 


அருள் வேண்டும் என்றால் அன்பு வேண்டும். 


அன்பு வேண்டும் என்றால் அன்பு செய்ய ஆள் வேண்டும். 


முதலில் கணவன், மனைவி. அவர்களுக்குள் அன்புப் பரிமாற்றம் நிகழும்தானே. என்னதான் சண்டை சச்சரவு என்றாலும் என் மனைவி, என் கணவன் என்ற உரிமையும், அதனால் பிறக்கும் அன்பும் இருக்கும் தானே?


அந்த மேலும் தொடர குழந்தைகள் அவசியம். 


கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு எவ்வளவு அன்யோன்யமாக இருந்தாலும், அதில் ஒரு பிரதி பலன் இல்லாமல் இல்லை. ஒன்றை நோக்கிய அன்பு அது. 


பிள்ளையின் பால் செலுத்தும் அன்பு என்பது, அதற்கு அடுத்த கட்டம். ஒரு பிரதி பலனும் எதிர்பாராமல் செய்யும் அன்பு. தன் பிள்ளை என்ற ஒன்றைத் தவிர அதில் ஒரு பிரதி பலன் இல்லை. 


எனவே, வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் பின் புதல்வர்களை பெறுதல் என்ற அதிகாரத்தை வைத்ததார். 


அதற்கு பரிமேலழகர் செய்திருக்கும் உரைப் பாயிரம் மிக ஆழமானது. 


உரைப் பாயிரத்தை இன்று காண்போம். 


உரைப் பாயிரம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_5.html


(Please click the above link to continue reading)


"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்.அதிகார முறைமை மேலே பெறப்பட்டது."



பொருள் 



தமிழ்தான். அந்தக் காலத்து தமிழ். 


"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும்":  பொதுவாக இருபிறப்பாளர் என்று அந்தணர்களை குறிப்பது உண்டு. 


நாம் பிறக்கும் போது, நமக்கு ஒரு நோக்கமும் கிடையாது. எதற்காக பிறந்தோம். ஏன் பிறந்தோம் என்று தெரியாது. கொஞ்சம் வளர்ந்து, அறிவு வந்த பின், நான் இன்னது செய்யப் போகிறேன் என்று முடிவு எடுக்கிறோம். ஒரு விரதம் பூணுகிறோம். அப்படி ஒரு விரதம் பூணுவதற்கு அடையாளமாக, அதை எப்போதும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அணியும் நூல் தான் பூணூல். விரதம் பூண்டதை நினைவு படுத்தும் நூல்,பூணூல். 


அந்தக் காலத்தில் அந்தணர், சத்ரியர் மற்றும் வைசியர்கள் பூணூல் அணிந்தார்கள்.  நான்காம் வர்ணத்தவர் அணியவில்லை. 


இப்போது ஆரம்பத்தை வாசிப்போம். 


"அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும்" அதாவது இருபிறப்பாளர் என்று சொல்லப் படும் பிராமண, க்ஷத்ரிய மற்றும் வைசியர் என்ற அந்த மூவாராலும். 


விளங்கி விட்டதா?


மேலே செல்வோம். 


"இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் "  நாம் மூன்று பேருக்கு எப்போதும் கடன் பட்டிருக்கிறோம். அந்தக் கடனை தீர்க்க வேண்டும். அது என்ன மூன்று பேருக்கு உள்ள கடன் என்றால் ....


"முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்."


நமக்கு பல அறிவு நூல்களைத் தந்தவர்கள் முனிவர்கள். அந்த முனிவர்களுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். ரொம்ப வேண்டாம், திருவள்ளுவருக்கு நாம் கடன் பட்டு இருக்கிறோமா இல்லையா? கட்டாயம் கடன் பட்டு இருக்கிறோம். அந்த கடன் எப்படி தீரும் என்றால், அந்த நூல்களை கேட்டு அறிவதால் தீரும். அவர் பாட்டுக்கு எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார். அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து, நாலு மதிப்பெண் வாங்கினால் போதும் என்று இருக்கக் கூடாது. ஐயம் திரிபு அறக் கற்பதுதான் அவருக்கு நாம் செய்யும் கைம்மாறு. 


முனிவர் கடன் படிப்பதால் தீரும். 


"தேவர் கடன் வேள்வியால்": நாம் தேவர்களுக்கு கடன் பட்டு இருக்கிறோம். மழை, வெயில், என்று பல தேவதைகள் இருக்கின்றன. அவை நமக்குச் செய்யும் உதவிக்கு நாம் செய்யும் கைம்மாறு வேள்விகள். 


"தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் " நம் முன்னோர்களுக்கு நாம் பட்ட கடனை திருப்பிச் செலுத்துவது என்பது அவர்களுக்கு திவசம்/சிரார்த்தம் என்பன செய்வதன் மூலம். நாம் இன்று இருக்கிறோம் என்றால் நமக்கு முன்னால் எத்தனையோ முன்னோர்கள் வாழ்ந்து இருக்க வேண்டும். 


என் தந்தை, என் தாத்தா, அவருடைய தந்தை, தாத்தா என்று என் பரம்பரை மேல் நோக்கி போய் கொண்டே இருக்கிறது அல்லவா. அத்தனை பேருடைய கூட்டு முயற்சிதான் நான். 


அவர்களுக்கு பட்ட கடனை திருப்பிச் செய்வது என்பது நீர்க்கடன் கழிப்பது என்று சொல்லுவார்கள். அதைச் செய்ய "நல்ல" புதல்வர்கள் வேண்டும். 


பிள்ளை எதற்கு என்றால் சேர்த்து வைத்த சொத்தை அனுபவிக்க என்கிறார்கள். அதற்கு அல்ல பிள்ளைகள். 


அந்த நீர்க் கடனை கழிக்க நல்ல பிள்ளைகளை பெற வேண்டும்.


பிள்ளை வேண்டும் என்றால் மனைவி வேண்டும். 


எனவே, வாழ்கை துணை நலம் என்ற அதிகாரத்தின் பின் இந்த அதிகாரத்தை வைக்கிறார் 


இனி அதிகாரத்துக்குள் நுழைவோம். 





Saturday, September 4, 2021

கம்ப இராமாயணம் - கொடியான் வரும்

 கம்ப இராமாயணம் - கொடியான் வரும் 


அசோகவனத்தில் உள்ள சீதை தனக்குத் தானே பேசிக் கொண்டு இருக்கிறாள்.



"இந்த இராமன் இருக்கிறானே எவ்வளவு கொடியவன் தெரியுமா. தசரத சக்கரவர்த்தி இறந்த போதும், உலகம் எழும் துயர் கொண்டு இராமனை மீண்டும் நாட்டுக்கு வரும்படி வேண்டியபோதும் வராமல் காட்டுக்குச் சென்ற கல் நெஞ்சக் காரன். அவன் வந்து நம்மை மீட்பான் என்று நீங்கள் (மனமும் உயிரும்) அவனோடு குலாவுகிரீர்களா....அவனை இன்னுமா நம்புகிறீர்கள்" 


என்கிறாள் 


பாடல் 


'முடியா முடி மன்னன் முடிந்திடவும்

படி ஏழும் நெடுந்துயர் பாவிடவும்,

மடியா நெறி வந்துவனம் புகுதும்

கொடியார் வரும் என்று, குலாவுவதோ ?'


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_4.html


(Please click the above link to continue reading)


முடியா = முடிவே இல்லாத 


முடி மன்னன் = முடி தரித்த மன்னன் தசரதன் 


முடிந்திடவும் = இறந்த போதும் 


படி ஏழும் = ஏழு உலகமும் 


நெடும் துயர்   = பெரிய துயர் 


பாவிடவும் = பரவிடவும் 


மடியா  = முடிவற்ற 


நெறி வந்து  = வழியில் வந்து 


வனம் புகுதும் = கானகம் புகுந்ததும் (அறிந்த நீங்கள்) 


கொடியார் வரும்  = கொடியவனான இராமன் வருவான் 


என்று, குலாவுவதோ ?' = என்று அவனோடு கொஞ்சி குலாவுகிரீர்களா? 


சீதை ஏதோ கோபித்து சொல்வது மாதிரி இருக்கும். 


பெண்கள் குணம் அப்படி. 


எதையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிச் சொல்லும் இயல்பு. 


அவன் செய்தது சரி என்று அவளுக்குத் தெரியும். தெரியாமலா அவனோடு கானகம் வந்தாள். 


இப்போது பிரிவு.  அவன் வரவில்லையே என்ற ஏக்கம். தவிப்பு. 


யோசித்துப் பார்க்கிறாள். 


அவங்க அப்பா அவ்வளவு சொல்லியும்,உயிரை விட்டபோது கூட இராமன் அவன் கொண்ட கொள்கையில் பின் வாங்கவில்லை. 


உலகமே அவனை வருந்தி அழைத்த போதும் அவன் திரும்பிப் போக வில்லை. 


அவர்களுக்கெல்லாம் இரங்காத அவன், எனக்கு மட்டும் இரங்குவானா? என் மேல் மட்டும் எப்படி அன்பு இருக்கும் என்று கவலைப் படுகிறாள். 


தேவை இல்லாதவற்றை இழுத்து வைத்துக் கொண்டு, தானும் துன்பப்பட்டு, மற்றவர்களையும் துன்பப்படுத்துவது என்பது பெண்ணின் குணம் போலும். 


சந்தேகம். 


சீதைக்கே இருந்திருக்கிறது. இராமன் தன் மேல் காதல் உள்ளவனா என்று. 


"கொடியான்" என்று சொன்னது ஒரு உரிமையில் இருக்கலாம். சந்தேகம் என்னவோ உண்மைதான். 


அது சீதைக்கு வந்ததா இல்லையா என்று நமக்குத் தெரியாது. 


சீதைக்கு வந்திருக்கலாம் என்று கம்பன் நினைத்து பாடிய பாடல், சரியாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது என்று நம்மை நம்ப வைக்கிறதே. 


அதுதான் கம்பனின் வெற்றி. 


பாத்திரங்களின் உள் நின்று பேசும் கம்பன். 


இதெல்லாம் படிக்க வேண்டாமா?


Friday, September 3, 2021

திருவாசகம் - உயிருண்ணிப் பத்து - வினை கேடா

திருவாசகம் - உயிருண்ணிப் பத்து - வினை கேடா 


இறைவன் உயிரை எடுத்து உண்டு விடுவானாம். உயிர் + உண்ணி (உண்ணுதல், சாப்பிடுதல்). அதாவது, உயிர்களை தனக்குள் அடக்கிக் கொள்வான் என்று பொருள். 


இறைவனை எங்கே தேடுவது? கோவில், குளம், மலை, குகை, என்று எங்காவது இருப்பானா? அல்லது வானத்தில், ஏதோ ஒரு கோளில், நட்சத்திரத்தில், இருப்பானா? எங்கே போய் தேடுவது? 


மணிவாசகர் சொல்கிறார், "எங்கேயும் போய்த் தேட வேண்டாம். அவன் நமக்குள்ளேயே எப்போதும் பிரியாமல் இருக்கிறான்" என்கிறார். நாம் செய்யும் வினகைளை தடுத்து, மறு பிறவி வாராமல் காப்பவன் அவன். 


"நீ எனக்குள்ளே இருக்கிறாய். நான் உன்னை எவ்வாறு காண்பேன், உன்னைப் பார்த்தேன் என்று எப்படி மற்றவர்களிடம் சொல்லி பெருமிதம் கொள்வேன்" என்கிறார். 


பாடல் 


பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாக மதாய்என்

மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடாவிடைப பாகா

செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்

எந்நாட்களித் தெந்நாள்இறு மாக்கேன்இனி யானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_3.html


(Please click the above link to continue reading)


பைந்நாப் = பசிய நாவினை உடைய 


பட = படத்தைக் (பாம்பின் படம்) கொண்ட 


அர = அரவு, பாம்பு, 


ஏர் அல்குல்  = அழகிய அல்குல் உடைய 


உமைபாகம் அதாய்  = உமை அம்மையை பாகமாக உடையவனே 


என் மெய்ந்  = என் உடலில் 


நாள்தொறும் = எப்போதும் 


பிரியா = பிரியாமல் இருப்பவனே 


வினைக் கேடா = வினைகளை அறுப்பவனே 


விடைப பாகா = எருதை வாகனமாகக் கொண்டவனே 


செந்நாவலர் = சிறந்த புலவர் 


பரசும் =போற்றும் 


புகழ்த் = புகழ் கொண்ட 


திருப்பெருந்துறை = திருப்பெருந்துறை என்ற திருத் தலத்தில் 


உறைவாய் = எழுந்து அருளி இருப்பவனே 


எந்நாட்களித்து = உன்னை கண்டு களித்து 


எந்நாள் = எப்போது 


இறு மாக்கேன் = பெருமிதம் கொள்வேன் 


இனி யானே. =இனிமேல் நானே 


நீயோ என்னுள் இருக்கிறாய். உன்னை வெளியில் கண்டதாய் சொல்லி நான் எப்படி பெருமிதம் கொள்வேன். 


"நீர் பெரிய பக்திமான் என்கிறீரே, நீர் கடவுளை கண்டதுண்டா? " என்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன். "ஆமாம், நான் பார்த்து இருக்கிறேன்" என்று இறுமாப்போடு சொல்ல முடியாதே. 


கோவிலுக்குப் போவதும், புனித நீராடுவதும் தவறல்ல. இறைவனை தனக்குள்ளே அறிய அவை படிகள். படிகளை ஏற பயன்படுத்த வேண்டுமே அல்லாமல், படியே முடிவு என்று ஆகி விடக் கூடாது. 


சாகும் வரை, கோவில் குளம் என்று அலைந்து கொண்டு இருந்தால் என்ன செய்வது? 


நான்காம் வகுப்பு நன்றாக இருக்கிறது என்று ஆயுள் பூராவும் நான்காம் வகுப்பே படித்துக் கொண்டு இருக்க முடியுமா? 


படிப்பவை நம்மை உயர் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

Thursday, September 2, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி - அலைக் கையால் அடி வருட

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெருமாள் திருமொழி - அலைக் கையால் அடி வருட 


பெருமாள் திருமொழி என்பது குலசேகர ஆழ்வாரால் அருளிச் செய்யப்பட்ட 105 பாடல்களின் தொகுப்பு. 


பக்தி இரசம் சொட்டும் தேனினும் இனிய பாசுரங்கள். 


பெரிய தத்துவங்கள் கிடையாது. வாழ்க்கை நெறி முறை, அறம், நீதி என்றெல்லாம் உபதேசம் கிடையாது. அவருக்கும் பெருமாளுக்கும் இடையில் உள்ள தாகத்தை சொல்லும் பாசுரங்கள். 


சரி, அது, அவர் மேல் கொண்ட காதல் பாடல். அதை அறிந்து நாம் என்ன செய்ய என்று கேட்டால் என்ன சொல்லுவது? எத்தனையோ திரைப்பட பாடல்களை கேட்கிறோம். ஏதோ ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் பாடல்கள். அதை கேட்டு நமக்கு என்ன ஆகப் போகிறது என்று நம் கேட்காமல் இருப்பது இல்லை அல்லவா?


அந்த உணர்சிகள் நம் மனதில் எங்கோ வருடுகிறது. நம் மனத்திலும் அந்த காதலை விதைக்கிறது. அந்த அன்பு என்ற இன்பத்தை தூண்டுகிறது அல்லவா? அது போல


இது போன்ற பக்திப் பாடல்களை கேட்கும் போதோ, வாசிக்கும் போதோ "அடடா, எவ்வளவு ஆழமான காதல், பக்தி " என்று நாம் இரசிக்கும் போது நம்மை அறியாமலேயே அந்த பக்தி நம் மனதில் ஒட்டிக் கொண்டு விடுகிறது. 


நமக்குள்ளும் அந்த ஆர்வத்தை தூண்டுகிறது. 


இங்கே, முதல் பாசுரத்தில்,  திருவரங்கத்தில் உள்ள பெருமாளை நோக்கிப் பாடுகிறார். 


பாசுரத்தை படிக்கும் போது அது சொல்வதை கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டும். 


வாருங்கள், அவர் காட்டும் அந்த அற்புத காட்சியை காணலாம். 


ஒரு இருண்ட அறை. கரு கும்னு இருக்கும் அறை. அந்த அறையில் ஒரு பெரிய பாம்பு. பல தலைகள் உள்ள பாம்பு. அந்த தலைகள் நெளிகின்றன. கூர்ந்து பார்த்தால் தெரிகிறது அந்தப் பாம்பின் மேல் யாரோ படுத்து இருக்கிறார்கள். படுத்து இருப்பது மட்டும் அல்ல, தூங்கவும் செய்கிறார். 


அந்த பாம்பு தலையை நம் பக்கம் திருப்புகிறது. அதன் ஒவ்வொரு தலையிலும் ஒரு நவரத்தின மணி இருக்கிறது. அருகில் உள்ள விளக்கில் இருந்து ஒளி பட்டு அந்த மணிகள் ஜ்வலிகின்றன. அந்த ஒளியில் இருட்டு எங்கோ போய் விட்டது. 


ஒரே வெளிச்சம். சற்று உற்று பார்க்கிறோம். 


அந்த உருவத்தின் காலடியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆற்றின் அலைகள் அந்த உருவத்தின் காலை வருடிக் கொண்டு போகிறது. 


இப்போது கண்ணை மூடிக் கொள்ளுங்கள். அந்த காட்சியை மனதில் ஓட விடுங்கள். 


குலசேகர ஆழ்வார் இந்தக் காட்சியை பார்த்து அதில் இலயித்து விட்டார்.அந்த இடத்தை விட்டு போக மனம் இல்லை. 


போய் விட்டால், இந்தக் காட்சியை இனி எப்போது காண்பேனோ என்று தவிக்கிறார். 


பாடல் 


இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த


அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி


திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்


கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_45.html


(Please click the above link to continue reading)


இருளிரியச் = இருளை விரட்டி அடிக்கும் 


சுடர்மணிகள் =  சுடர் விடும் நவ இரத்தின மணிகள் 


இமைக்கும் =  அசையும் 


நெற்றி = நெற்றி. நெற்றியில் உள்ள நவ ஒளி விடும் நவரத்தினங்கள் 


இனத்துத்தி = துத்தி என்றால் புள்ளிகள். சிறந்த புள்ளிகளை உடைய 


அணி = அழகான 


பணமா யிரங்க ளார்ந்த = படங்கள் (பாம்பின் படம்) ஆயிரம் விளங்கும் 


அரவரசப் = பாம்புகளின் அரசன் 


பெருஞ்சோதி = பெரிய ஜோதி 


யனந்த னென்னும் = அனந்த ஆழ்வான் 


அணிவிளங்கு = அழகாக விளங்கும் 


உயர் = உயர்ந்த 


வெள்ளை = வெண்மையான 


அணையை = படுக்கையில் 


மேவி = படுத்து 


திருவரங்கப்  = திருவரங்கம் என்ற 


பெருநகருள் = பெரிய நகரில் 


தெண்ணீர்ப் = தெளிந்த நீர் 


பொன்னி = காவிரி ஆறு 


திரைக்கையா லடிவருடப் = அலை என்ற கையால் அடி வருட 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


கருமணியைக் = கரிய மணியை 


கோமளத்தைக்  = கோமளத்தை 


கண்டு கொண்டு = கண்டு 


என் = என்னுடைய 


கண்ணிணைகள் = கண் இணைகள், இரண்டு கண்களும் 


என்று கொலோ = என்றோ? 


களிக்கும் நாளே = இன்புறும் நாளே 



அதான் பார்த்தாச்சே, அப்புறம் என்ன , "என்று கொலோ களிக்கும் நாளே" என்றால், இப்போது பார்த்து அனுபவித்து ஆகிவிட்டது.  மீண்டும் எப்போது இதை கண்டு களிக்கப் போகிறேன் என்று ஏங்குகிறார். 


அன்புடையவர்களை பிரியும் போது, "ஐயோ திருப்பி எப்போ பார்ப்போமோ" என்று மனம் ஏங்கும் அல்லவா....அது போல. 


கருமணியை, கோமளத்தை என்று கொஞ்சுகிறார். 


பக்தி புரிந்தால், பாசுரமும் புரியும். 

கம்ப இராமாயணம் - நாண் இன்றி உழல்வீர்

 கம்ப இராமாயணம் - நாண் இன்றி உழல்வீர் 


சீதை அசோகவனத்தில் சிறை இருக்கிறாள். 


தனக்குத் தானே பேசிக் கொண்டு இருக்கிறாள். 


"நான் போற்றும் என் உணர்சிகளே, என் உயிரே. உங்களுக்கு வெட்கம் என்பதே இல்லையா. நான் தான் என் இராமனை பிரிந்தும் உயிர் விடாமல் பழியோடு நிற்கிறேன். உங்களுக்குமா வெட்கம் இல்லை. அவன் வரும் வரை நீங்களும் என்னோடு இருக்கப் போகிறீர்களா ?" 


என்று தன் உயிரிடம், உணர்விடம் கேட்கிறாள். 


இராமனைப் பிரிந்த பின் தன் உயிர் போகவில்லையே என்று நாணுகிறாள். தன் உயிரைப் பார்த்து கேட்கிறாள், "உனக்கு வெட்கமாக இல்லையா...என்ன விட்டு போயேன்" என்று சொல்கிறாள். 


பாடல் 


'பேணும் உணர்வே ! உயிரே ! பெரு நாள்

நாண் இன்றுஉழல்வீர்;தனி நாயகனைக்

காணும் துணையும்கழிவீர்அலிர்; நான்

பூணும் பழியோடுபொருந்துவதோ ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_2.html


(Please click the above link to continue reading)



'பேணும் உணர்வே !  = நான் போற்றும் என் உணர்வுகளே 


உயிரே ! = என் உயிரே  


பெரு நாள் = நீண்ட நாள் 


நாண் இன்று = நாணம் இல்லாமல், வெட்கம் இல்லாமல் 


உழல்வீர்; = வருந்தித் திரிவீர் 


தனி நாயகனைக் = ஒப்பற்ற தலைவனை (இராமனை) 


காணும் துணையும் = பார்க்கும் வரை 


கழிவீர்அலிர்; = என்னை விட்டு போக மாட்டீர்களா ?


நான் = நான் (சீதை) 


பூணும் பழியோடு =கொண்ட பழியோடு 


பொருந்துவதோ ? = நீங்களும் அந்தப் பழியை ஏற்றுக் கொள்கிறீர்களா? 


மேலே சொன்னது நேரடியான அர்த்தம்.


மறைந்து கிடக்கும் இன்னொரு அர்த்தம், இராமனை பார்க்கும் ஆசை சீதைக்கு இருக்கிறது. அதை வெளியே சொல்லவும் நாணம். உயிரை விட்டு விடலாம். ஆனால், அப்படி உயிரை விட்டு விட்டால், பின் இராமனை பார்க்க முடியாதே. எனவே உயிரை விடாமல் இருக்கிறாள். 


என்னைப் போலவே நீங்களும், இராமனை காண்பதற்காக என்னோடு ஒட்டிக் கொண்டு இருகிறீர்களா என்று கேட்கும் தொனியும் பாடலில் இருக்கிறது. 


உலக நாயகன் மனைவியாக இருந்தால் என்ன...பெண், பெண்தான். 


அந்த வெகுளித்தனம், அந்த அன்பு, கணவனை காண வேண்டும் என்ற ஆவல், அதை வெளியே சொல்ல முடியாத நாணம், பிரிவுத் துயர் எல்லாம் இந்தப் பாடலில் பின்னி பிணைந்து கிடக்கிறது. 


எவ்வளவு இனிமையான அழகான பாடல்!


Wednesday, September 1, 2021

திருக்குறள் - மங்கலம், நன்கலம்

 திருக்குறள் - மங்கலம், நன்கலம் 


திருமணம் ஆகி விட்டது. புது மனைவி (கணவன்), புது வகை இன்பம். ஐந்து புலன்களுக்கும் இன்பம். பார்ப்பது இன்பம், தொடுவது இன்பம். பேசுவதை கேட்பது இன்பம். முத்தம் இன்பம். மணம் இன்பம். 


சரி. இது எத்தனை நாளைக்கு? எவ்வளவுதான் சிறந்த இன்பமாக இருந்தாலும், ஒரு காலத்துக்கு மேல் ஒரு அலுப்பும், சலிப்பும் வருவது இயற்கை. இது இவ்வளவுதானா, இதற்குத் தானா இந்தப் பாடு என்று ஆயாசம் வரும்.


இல்லறத்தில் சலிப்பு வரும். இதில் ஒன்றும் இல்லை. தெரியாமல் வந்து இதில் மாட்டிக் கொண்டோம். வெளியே வரவும் முடியாது. என்ன செய்வது என்று வெறுப்பாக இருக்கலாம். 


இல்லறத்தை எப்படி மேலே கொண்டு செல்வது? அதில் ஒரு பிடிப்பையும், இனிமையையும் எப்படி கொண்டு வருவது?


இல்லறம் என்பதே எதற்காக? அன்பை விரிவு செய்வதற்காக. 


தான் தான் என்று இருந்த ஒரு ஆணும், பெண்ணும், "அவளுக்கு பிடிக்கும், அவருக்கு பிடிக்கும் " என்று தனக்கு விருப்பமானதை மற்றவருக்கு கொடுத்து அதில் இன்பம் காண்பது அன்பு பரிமாற்றம், அன்பின் நெகிழ்ச்சி, அன்பின் விரிவு. 


காசு போட்டு வாங்கிய மல்லிகைப் பூ...அவளுக்கு எதுக்கு கொடுக்கணும், நானே வைத்துக் கொள்கிறேன் என்று எந்த கணவனாவது நினைப்பானா? இந்தப் புடவை அவளுக்கு நல்லா இருக்கும்ல? இந்தப் பாட்டு அவளுக்கு பிடிக்கும்...என்று அவள் சந்தோஷம் அவனுக்கு முக்கியமாக படுகிறது. 


இன்று பாயாசம் நல்லா வந்திருக்கு. கஷ்டப்பட்டு செஞ்சது. அவருக்கு எதுக்கு கொடுக்கணும், நானே எல்லாவற்றையும் குடித்து விடுகிறேன் என்று எந்த மனைவியாவது நினைப்பாளா? 


இந்த மனைவி/கணவன் உறவு என்பது உடல் சார்ந்த இன்பத்தை ஆதாரமாக கொண்டு இருந்தால், நாளடைவில் அது வெறுப்பும், சலிப்பும், ஏமாற்றமும் தரும். 


இந்த இல்லறத் தேரை மேலும் கொண்டு செல்ல இயற்கை கண்டு பிடித்த அதிசயம், "குழந்தைகள்". 


குழந்தைகள் வந்து விட்டால், பெற்றோரின் அன்பு மடை மாறி பிள்ளை பால் பாய ஆரம்பிக்கும். 


குழந்தையின் மழலை மொழி, களங்கமற்ற முகம், அதை கட்டி அணைக்கும் போது வரும் சுகம், அந்த பால் மணம், அதற்கு ஈடு உண்டா? 


கணவனுக்கு மனைவி மேலோ, மனைவிக்கு கணவன் மேலோ உண்டாகும் அன்புக்கு ஒரு காரணம் இருக்கிறது. எனக்கு அவள் (அவன்) இன்பம் தருகிறாள். எனக்கு உதவி செய்கிறாள் (ன்) என்ற ஒரு பரிமாற்றம் சார்ந்த அன்பு இருக்கிறது. 


குழந்தைகள் அப்படி அல்ல. அவை நமக்கு ஒன்றுமே செய்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவற்றால் நமக்கு வெளிப்படையான துன்பம் தான். தூங்க விடாது, மல ஜலம் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும், ஒரு வேலையும் செய்யாமல், சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு, கையை காலை ஆட்டிக் கொண்டு படுத்துக் கிடக்கும். அதன் மேல் அத்தனை அன்பு பிறக்கும். அத்தனை மகிழ்ச்சி.


குழந்தைக்கு உடல் நலம் இல்லை என்றால், மனைவி மேல் கூட ஆசை வராது. 


இல்லற கடமைகள் சொன்னார். 


அடுத்து வாழ்க்கைத் துணை நலம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். 


இதை அடுத்து என்ன வரும்? புதல்வர்களைப் பெறுதல். அடுத்த அதிகாரம். அதற்கு முன்னோடியாக இந்த கடைசிக் குறளை இந்த அதிகாரத்தில் வைக்கிறார்.


பாடல் 



மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post.html


(Please click the above link to continue reading)


மங்கலம் = நன்மை 

என்ப = என்று சொல்லுவார்கள் 

மனைமாட்சி = மனையாளின் நற்குண நற்செய்கைகள் 

மற்று = அசைச் சொல் 

அதன் = அதன்

நன்கலம் = நல்ல அணிகலன் 

நன்மக்கட் பேறு. = நல்ல பிள்ளைகளைப் பெறுதல் 


இல்லறத்தின் அழகு, நல்ல பிள்ளைகளைப் பெறுதல். 


பிள்ளைகளைப் பெறுதல் என்று சொல்லவில்லை. நல்ல பிள்ளைகளைப் பெறுதல் என்று சொல்கிறார். 


"மங்கலம் என்ப"  மங்கலம் என்று சொல்லுவார்கள் என்றால் யார் சொல்லுவார்கள் என்ற கேள்வி வரும் அல்லவா? பரிமேலழகர் உரை சொல்கிறார் "அறிந்தோர் சொல்வர்" என்று. 


அப்படி என்றால் என்ன அர்த்தம்?


முட்டாளிடம் கேட்டால் என்ன மற்றவரைச் சொல்லுவான். 


இல்லறத்தின் நன்மை என்ன என்றால், பொருள் சேர்ப்பது, வீடு வாசல் வாங்குவது, மனைவி மக்களை கூட்டிக் கொண்டு ஊர் சுற்றுவது, நாள் கிழமை என்றால் புது ஆடை உடுப்பது, புது புது பலகாரம் செய்து உண்பது, டிவி பார்ப்பது என்று பலவிதமாக சொல்வார்கள், முட்டாள்கள்.


அறிவுள்ளவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றால் "இல்லறத்தின் நன்மை என்பது நல்ல பிள்ளைகளை பெறுவது" என்று. 


இல்லறக்  கடமை சொல்லி ஆகிவிட்டது. 


வாழ்க்கைத் துணை நலம் சொல்லி ஆகிவிட்டது. 


அடுத்தது புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரம். 


கணவன் மனைவி என்று ஆகிவிட்டால் அடுத்து பிள்ளைகள் தானே ? அந்த ஒழுங்கில் போகிறார். 


இதை இன்றைய கலாசாரத்தோடு பார்ப்போம். 


திருமணம் செய்து கொள்ளாமலேயே பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு கலாசாரம் வந்து இருக்கிறது. 


இல்லறத்தின் நலம் பிள்ளைகளைப் பெறுவது என்றால், ஒரே இனத்தில் திருமணம் செய்து கொண்டால் எவ்வாறு பிள்ளைகளைப் பெறுவது? ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள். அதற்கான சட்ட வடிவங்களும் வந்து கொண்டு இருக்கின்றன. 


சரி, அப்படி திருமணம் செய்து கொண்டு, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு விடை என்ன. 


அன்பு விரிய வேண்டாமா? கணவனும் மனைவியும் என்றால், அன்பு பிள்ளைகள் மேல் விரியும். வள்ளுவர் இன்னும் பல படிகள் சொல்லப் போகிறார். பிள்ளைகள் வந்து விட்டன, அடுத்தது என்ன என்ற கேள்விக்கும் விடை தருகிறார். அவற்றை எல்லாம் பார்க்க இருக்கிறோம். 


நான் எதையும் சரி தவறு என்று சொல்லவில்லை. 


எதற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். பலன் இருக்க வேண்டும். அந்த நோக்கம் உயரிய நோக்கமாக இருக்க வேண்டும்.  


நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது ஒரு நோக்கம் தான். அது உயர்ந்ததா? 


வாய் வரை கொண்டு சென்ற ஒரு இனிப்பை, "அட, அந்தப் பிள்ளை இதை விரும்பி சாப்பிடுவானே" என்று நினைத்து, அவனுக்காக அதை எடுத்து வைப்பவதில் உள்ள சுகம் தான் உண்பதில் வருமா? 


ஒரு முழு வாழ்க்கைப் பாதையை போட்டு தந்து விட்டுப் போய் இருக்கிறார்கள். 


அவற்றை விட்டு விட்டு எங்கெங்கோ போய்க் கொண்டு இருக்கிறோம். 


விதி விலக்காக யாரோ எங்கோ ஒரு மூலையில் செய்வதை பெரிய புரட்சி என்று எண்ணிக் கொண்டு, அது தான் வாழ்க்கை முறை என்று தவறாக எண்ணிக் கொண்டு இருக்கிறோம். 


நம் வாழ்கை நெறியை முதலில் சரியாக புரிந்து கொள்வோம். அப்புறம், அது சரி இல்லை என்றால் மற்றவற்றை கடை பிடிப்பதைப் பற்றி யோசிப்போம். 


சரி தானே?