Thursday, August 11, 2022

திருவாசகம் - திரு அம்மானை - அறைகூவி, வீடு அருளும்

 

 திருவாசகம் - திரு அம்மானை  -   அறைகூவி, வீடு அருளும்


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html



)


மற்ற பாடல்களுக்கு விளக்கம் சொல்லுவது போல திருவாசகத்துக்கு சொல்லிக் கொண்டு போக முடியாது. சொல்லவே முடியாது என்பது தான் உண்மை. அது ஒரு உணர்வு சார்ந்த விடயம். இருந்தும், என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, படித்ததும், கேட்டதும், சிந்தித்ததும் என்று பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. அவ்வளவுதான். 


நம் வீதிகளில் வண்டியில் காய்கறி விற்பவர்கள், பழங்கள் விற்பவர்கள், கீரை விற்பவர்கள் கூவி கூவி விற்பதை கேட்டு இருகிறீர்களா? 


இராகம் போட்டு விற்பார்கள். "கீரேரேரேரேய்ய்ய்ய்" என்று நீட்டி முழக்கி கீரையை விற்பார்கள். அந்த சத்தத்தில் நமக்குத் தெரியும் கீரை வண்டிக்காரர் வந்து இருக்கிறார் என்று. கீரை வேண்டும் என்றால் போய் வாங்கி வரலாம். நாம் கடைக்குப் போக வேண்டியது இல்லை. சாமான்கள் நம் வீடு தேடி வரும். அதை விற்பவரும் ஒரு இடத்தில் அமர்ந்து விற்றால் அவ்வளவாக விற்காது. நாலு தெரு சுற்றி திரிந்து, கூவி விற்றால் நிறைய விற்கும். 


சரி தானே?


மணிவாசகர் சொல்கிறார்.....


ஆண்டவனிடம் வீடு பேறு என்ற சரக்கு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான்?  "எல்லோரும் வாங்க, வந்து வீடு பேறு வாங்கிட்டுப் போங்க" என்று கூவி கூவி அழைத்து கொடுப்பானாம். 


"அப்படியா மணிவாசகர் சொல்லி இருக்கிறார்? இருக்காது. நீங்கள் ஏதோ இட்டு கட்டிச் சொல்கிறீர்கள்" என்று நீங்கள் நினைக்கலாம். 


 "அறைகூவி, வீடு அருளும்"


என்கிறார் பாடலில். சத்தம் போட்டு கூப்பிட்டு கொடுப்பானாம். நீங்கள் எங்கும் போக வேண்டாம். அவனே வந்து, உங்களை கூப்பிட்டு கொடுப்பானாம். 


பரவாயில்லையே. இது கொஞ்சம் புதுமையான விடயம்தான். இருந்தாலும் நல்லா இருக்கு. சரி, அவர் அறை கூவி வீடு பேறு தருவார் சரி. அவர் எப்படி வருவார். நமக்குத் தெரிய வேண்டாமா?


மணிவாசகர் அடையாளம் சொல்கிறார். 


அவருக்கு அழகிய கண்கள் இருக்கும். அந்தணன் வடிவில் வருவார். என்கிறார். 


"அம் கணன், அந்தணன் ஆய்,"


"நல்லது. வீடு பேறு தருவார். வாங்கிக் கொள்ளலாம். பதிலுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? விரதம், பூஜை, தானம், தவம், வழிபாடு இதெல்லாம் ஏதாவது செய்ய வேண்டுமா? நமக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லையே.  நமக்குத் தருவாரா அல்லது அவருடைய சிறந்த பக்தர்களுக்கு மட்டும் தான் தருவாரா? " என்று கேட்டால் 


மணிவாசகர் சொல்கிறார் 


"ஆண்டவனுக்கு நம்மிடம் இருந்து பெற வேண்டியது ஒன்றும் இல்லை. அவனிடம் இல்லாதது நம்மிடம் என்ன இருக்கப் போகிறது. மேலும், நாம் என்ன தான் முயன்றாலும், வீடு பேறு பெறும் அளவுக்கு நம்மில் எத்தனை பேர் முயற்சி செய்ய முடியும். ஒரு கவலையும் படாதீர்கள். அவன் நம் தகுதி எல்லாம் பார்ப்பது இல்லை. வருகிறவர்களுக்கு எல்லாம் வீடு பேறுதான்"


"எம் தரமும் ஆட்கொண்டு"


நம்முடைய தரத்துக்கும், நம்மை ஆட்கொண்டு வீடு பேறு தருவான். 


"அது எப்படி முடியும்? நாம் செய்த வினை இருக்கிறதே? அதற்கு இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ?"


அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். உங்கள் பிறவித் தொடரை அறுத்து, உங்களுக்கு வீடு பேறு தருவான் என்கிறார். 


"எங்கள் பிறப்பு அறுத்திட்டு"


ஒண்ணும் செய்ய வேண்டாம்னு சொல்றீங்க. அவனே வந்து கூப்பிட்டு கொடுப்பான்னு சொல்றீங்க. பிறவித் தொடரை அறுப்பான்னு சொல்றீங்க. அப்ப நாம என்னதான் செய்யணும். ஒண்ணுமே செய்ய வேண்டாமா என்று கேட்டால்


"இவ்வளவையும் நமக்கு இலவசமாகக் கொடுத்த அவன் கருணையை நினைத்து நன்றியோடு பாடுவோம்" அவ்வளவுதான் நாம் செய்யக் கூடியது என்கிறார். 


மனதை அப்படியே உருக்கும் பாடல். 


அம்மானை என்பது இளம் பெண்கள் சிறு சிறு கற்களை மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டு என்று பார்த்தோம். அதை விளையாட்டும் பெண்களை "அம்மானாய்" என்று சொல்லுவார்கள். 


குழந்தையை "என் இராசா" என்று சொல்லலாம். "என் ராசால்ல , என் செல்லம்ல..." என்றும் கொஞ்சலாம். 


"அம்மானாஆஆய் " என்று செல்லமாக, ,அன்போடு கூப்பிடுவதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். 


பாடல் 




செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும், காண்பு அரிய

பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி,

எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு,

தெங்கு திரள் சோலை, தென்னன் பெருந்துறையான்,

அம் கணன், அந்தணன் ஆய், அறைகூவி, வீடு அருளும்

அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_11.html


(pl click the above link to continue reading)



செம் கண் = சிவந்த கண்களை உடைய 


நெடுமாலும் = உயர்ந்த திருமாலும் 


சென்று = போய் 


இடந்தும் = பூமியை தோண்டியும் 


காண்பு அரிய = காண முடியாத 


பொங்கு = பொலிவுடன் விளங்கும் 


மலர்ப் பாதம் = மலர் போன்ற திருவடிகள் 


பூதலத்தே  = இந்த பூமியிலே 


போந்தருளி, = சென்று அருளி 


எங்கள் பிறப்பு அறுத்திட்டு = எங்களது பிறவித் தொடரை அறுத்து 


எம் தரமும் = எங்களுடைய தரத்தைப் பார்க்காமல், எங்களுக்கு கூட 


ஆட்கொண்டு, = ஆட் செய்து 


தெங்கு திரள் சோலை, = தென்னை மரங்கள் சூழ்ந்த சோலைகள் உள்ள 


தென்னன் = தென்னாட்டவன் 


பெருந்துறையான், = திருபெருந்துறையில் உறைபவன் 


அம் கணன் = அழகிய கண்களை உடைய அவன் 


அந்தணன் ஆய் = அந்தண வடிவில் வந்து 


அறைகூவி,  = கூவி கூவி 


வீடு அருளும் = வீடு பேற்றை அருளும் 


அம் கருணை =அந்தக் கருணை நிறைந்த 


வார் கழலே = கழல் அணிந்த வீரத் திருவடிகளை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவதைப் பார் அம்மானாய் 


இந்தப் பாடலுக்கு பல நுணுக்கமான விளக்கங்கள் சொல்வார்கள். 


திருமால் பன்றி உருவம்  கொண்டு திருவடியை காணச் சென்றார். காண முடியவில்லை. அவ்வளவு பாதளத்தில் இருக்கும் திருவடி எவ்வளவு கரடு முரடாக, கருப்பாக,  உறுதியானதாக இருக்கும்?


அதுதான் இல்லை, "விளங்கும் பொங்கு மலர் பாதம்"  என்கிறார். 


பாதாளத்தில் இருந்தாலும், அது ஒளி பொருந்திய, மலர் போன்ற மென்மையான பாதங்கள். 


ஆனானப்பட்ட திருமாலாலே காண முடியவில்லை என்றால் நாம் எல்லாம் எம்மாதிரம் . நாம் எப்படி காண முடியும் என்ற ஆயாசம் வரும் அல்லவா?


நாம் போக வேண்டாம். அந்த பாதங்களே நம்மை நாடி வரும். 


"பூதலத்தே போயருளி" 


அவரே இங்கு வருவார். 


வந்தவர் "என் பிறப்பை அறுத்து எனக்கு வீடு பேறு தந்தார்" என்று சொல்லவில்லை. 


"எங்கள் பிறப்பு அறுத்திட்டு, எம் தரமும் ஆட்கொண்டு"


எங்கள் என்று பன்மையில் குறிக்கிறார்.  நம் எல்லோருக்கும். 


ஐயோ, ,எனக்கு ஒரு தகுதியும் இல்லையே. எனக்கு எங்கே கிடைக்கப் போகிறது என்று நினைத்தால் 


"எம் தரமும் ஆட்கொண்டு"


உங்கள் தரத்தை எல்லாம் அவன் பார்ப்பது இல்லை. அவனுக்கு அந்த பாகுபாடெல்லாம் கிடையாது. 


கண்ணப்பன் என்ற வேடனுக்கு முக்தி கொடுக்கவில்லையா ?


திருநீலகண்டர் என்ற குயவருக்கு முக்தி கொடுக்கவில்லையா?


அவன் தரம் பார்ப்பது இல்லை. 


என்ன, இப்படி ஒரு கடவுளா? அளவு கடந்த கருணை உடையவனாக இருக்கிறானே...அவனுக்கு நாம் என்னதான் செய்வது?



"அம் கருணை வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!"


அவ்வளவுதான். 


மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். 


(பதிவு சற்று நீண்டு விட்டது. பொறுத்தருள்க)

Wednesday, August 10, 2022

கந்தரனுபூதி - எல்லாமற என்னை இழந்த நலம்

  

 கந்தரனுபூதி -  எல்லாமற என்னை இழந்த நலம் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html



)


காய்ச்சல், கொரோனா போன்ற உடல் வருத்தங்களை தவிர்த்துப் பார்த்தால், நமது துன்பங்களுக்கு எல்லாம் காரணம் மனம் தான். 


படியில் இறங்கும் போது கால் தடுக்கி விழுந்து விடுகிறோம். கால் சுளுக்கிக் கொள்கிறது. அல்லது எலும்பு முறிந்து போய் விடுகிறது. அதனால் வரும் துன்பம் ஒரு புறம். 


ஆனால், அது போன்ற உடல் சார்ந்த துன்பங்கள் மிக மிக குறைவானவையே. மேலும், அந்தத் துன்பங்கள் பெரும்பாலும் மருந்து மற்றும் சிகிச்சையில் சரியாய்விடும். இல்லை என்றால் உடல் பழகிக் கொள்ளும். 


ஆனால் இந்த மனக் கவலை இருக்கிறதே..ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டே இருக்கும். ஒன்று முடிவதற்குள் இன்னொன்று வந்து வரிசையில் நிற்கும். 


அதை சரி செய்ய மருந்தோ, சிகிச்சையோ கிடையாது. 


கோபம், காமம், பயம், கவலை, பொறாமை இதற்கெல்லாம் எங்கே மருந்து இருக்கிறது?


இந்தக் கவலைகளுக்கு என்ன அடிப்படை காரணம். 


பற்று. 


உடல் மேல் உள்ள பற்று.


செல்வத்தின் மேல் உள்ள பற்று. 


உறவுகள் மேல் உள்ள பற்று


அடுக்கிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு பற்றும் கொஞ்சம் இன்பத்தையும்,அதைப் போல் பல மடங்கு துன்பத்தையும் கொண்டு வரும். இன்பம் இல்லாமல் இல்லை. 


காப்பி குடித்தால், அந்த நேரத்துக்கு கொஞ்சம் இன்பம் இருக்கத்தானே செய்கிறது. 


புகை பிடிப்பது.  காதலிப்பது. கல்யாணம். பிள்ளைகள். பணம். செல்வாக்கு என்று எதை எடுத்துக் கொண்டாலும், கொஞ்சம் இன்பம், நிறைய துன்பம். இதுதான் இயற்கை. 


ரொம்ப ஏன் போக வேண்டும். 


நம் உடம்பு நமக்குப் பிடிக்கும் தானே? அதற்கு ஒரு துன்பம் வராமல் பார்த்துக் கொள்கிறோம். கொஞ்சம் முடியவில்லை என்றாலும் மருத்துவரிடம் ஓடுகிறோம். சோப்பு, எண்ணெய் , வாசனை பொருட்கள், ஆடை, அணிகலன், என்று எவ்வளவு மெனக்கிடுகிறோம்.


அதே உடம்பு கொஞ்சம் காலத்துக்குப் பின், முடி நரைத்தால் கவலை,கண் பார்வை மங்கினால் கவலை, காது சரியாக கேட்கவில்லை என்றால் கவலை, ஞாபக சக்தி குறைந்தால் கவலை, பல் வலி வந்தால் கவலை என்று எவ்வளவு கவலைகளை கொண்டு வருகிறது?


இந்தக் கவலைகளில் இருந்து விடுபட அருணகிரிநாதர் வழி சொல்கிறார் 


பாடல் 


உல்லாச நிராகுல யோகவிதச் 

சல்லாப வினோதனு நீயலையோ 

எல்லாமற என்னை இழந்த நலம் 

சொல்லாய் முருகா சுரபூபதியே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


(Pl click the above link to continue reading) 



உல்லாச = மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் 


நிராகுல = நிர் + ஆகுலம். ஆகுலம் என்றால் கவலை, துன்பம். நிர் என்றால் எதிர் மறை. துன்பமே இல்லாத 


யோகவிதச்  = யோகத்தின் மூலம் 

+  

சல்லாப = பக்தர்களோடு நெருங்கி பழகி 


வினோதனு  = வினோதன், லீலைகள் புரிபவன் 


நீயலையோ = நீ தானே, உன்னைத் தவிர வேறு யார் 


எல்லாமற = எல்லாம் + அற = அனைத்தும் அற்றுப் போகும் படி 


என்னை இழந்த நலம்  = என்னையும் இழந்த நன்மையை 


சொல்லாய் = நீயே சொல்வாய் 


முருகா  = முருகா 


சுரபூபதியே  = தேவர்களின் பதியே 


என்ன சொல்ல வருகிறார் அருணகிரியார்?


"எல்லாம் அற" இதுதான் இந்தப் பாடலின் இதயம். எல்லாம் அற்றுப் போன பின் என்ன இருக்கும்? 


நம்மிடம் இரண்டு விதமான பற்றுகள் இருக்கின்றன. 


நான் என்ற அகப் பற்று. நான் பெரிய ஆள், நான் நல்லவன், வல்லவன். உலகிலேயே பெரிய பற்று அதுதான். 


அடுத்தது "எனது" என்ற புறப் பற்று. என் மனைவி, என் பிள்ளைகள், என் வீடு, என் படிப்பு, என் வேலை, என் அதிகாரம் என்ற புறப் பொருள்கள் மேல் உள்ளப் பற்று. 


இதனை அகங்காரம், மமகாரம் என்று சொல்லுவார்கள் 



வரும் போது முதலில்அகப் பற்று வரும், பின் புறப் பற்று வரும். 


விடும் போது முதலில் புறப்பற்று விடும், பின் அகப் பற்று. 


அருணகிரியார் சொல்கிறார் - எல்லாம் அற - வெளியில் உள்ள பற்றுகள எல்லாம் விட்டாச்சு.  அதன் பின் 


"என்னை இழந்த" என்று நான் என்ற அகப் பற்றும் விட்டு விட்டது. 


இரண்டு பற்றும் விட்டு விட்டால் பேரின்பம் வந்தது என்கிறார். யாருக்கு? "நான்" என்ற ஒரு பொருளே இல்லையே. பின் "நலம்" எப்படி வரும்? அதை அனுபவிப்பது யார்?


அதை எப்படிச் சொல்லுவது என்று தெரியவில்லை, முருகா! நீயே சொல் என்று முருகனிடம் விட்டு விடுகிறார். 


"சொல்லாய் முருகா"  என்று முருகனைச் சொல்லச் சொல்கிறார். 


அது மனித அறிவுக்குள் அகப்படாது. 


மற்ற மதக் கடவுள்களுக்கும், இந்து மதக் கடவுளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு.


மற்ற மதங்களில் கடவுளர்கள் ரொம்பவும் சீரியஸ் ஆக இருப்பார்கள். 


இந்து மதக் கடவுள்கள் எப்போதும் சிரித்து, பேசி, விளையாடி, மிக இன்பமாக இருப்பவர்கள். 


"உல்லாச" - உல்லாசமாக இருப்பவன்

"சல்லாப" - பேசி, கூடி மகிழ்பவன் 

"வினோத" - லீலைகள் புரிபவன். விளையாட்டு. 


கம்பர் சொல்லுவார் 


"அலகிலா விளையாட்டு உடையார் அவர், தலைவர், அன்னவர்க்கே சரணாங்களே" என்று. 


இந்த அளவு என்று கிடையாது. ஒரே விளையாட்டு. 


"அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்" என்பார் சேக்கிழார்.  ஒரே ஆட்டம் தான். 


வாழ்கையை ரொம்பவும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது. 


வந்தால் இன்பம்.


போனால் இன்பம்.


வராவிட்டால் இன்பம்.


ஐயோ வரவில்லையே, ஐயோ போய் விட்டதே என்று வருந்தக் கூடாது. 


வாழ்க்கை என்பது ஆனந்தமாக கழிக்க வேண்டிய ஒன்று. 


சத் + சித் = ஆனந்தம் = சச்சிதானந்தம்


"ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்" என்பார் பட்டர். 


"பரமானந்த சாகரத்தே " என்பார் அருணகிரி. 


எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டு, அது விட மாட்டேன் என்கிறது, இது விட மாட்டேன் என்கிறது என்று கவலைப் படாதே. 


பற்றுகளை விட்டு ஆனந்தமாய் இரு என்கிறார். 




Tuesday, August 9, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அஃதொப்பது இல்லை - பாகம் 1

  

 திருக்குறள் - அழுக்காறாமை -  அஃதொப்பது இல்லை - பாகம் 1 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html




)


தவறு செய்ய வாய்புகள் கூடிக் கொண்டே போகின்றன. நாம் வாழும் சூழ்நிலை நம்மை தவறு செய்யத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. 


மற்றவற்றை எல்லாம் விட்டு விடுவோம், இந்த பொறாமை என்ற ஒரு தீய குணத்தை எடுத்துக் கொள்வோம். 


எப்படி நாம் வாழும் சூழ்நிலை நம்மை பொறாமை கொள்ளச் செய்கிறது என்று பார்ப்போம். 


முகநூல் (facebook), instagram, whatsapp போன்ற சமூக வலைதளங்களில் நாம் யார் யாருடனோ தொடர்பு வைத்து இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு முக்கிய செய்தியை, நிகழ்வை பதிவு செய்கிறார்கள். 


அதுவரை சரி. 


அடுத்து என்ன நடக்கிறது?


அவன் வீடு வாங்கி விட்டான், அவன் கார் வாங்கி விட்டான், அவன் குடும்பத்தோடு அயல்நாடு சுற்றுலா செல்கிறான், அவன் பிள்ளைக்கு அந்த பெரிய கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது, அவனுக்கு பதவி உயர்வு கிடைத்து விட்டது என்று நமக்குள் ஒரு ஆதங்கம் வருகிறது. எனக்கு மட்டும் தான் ஒன்றும் கிடைக்க மாட்டேன் என்கிறது என்று கோபம் வருகிறது. எப்படியாவது நாமும் ஏதாவது செய்து பதிவு ஏற்ற வேண்டும் என்று ஒரு வேகம் வருகிறது. அது நடக்காத போது, அவனுக்கெல்லாம் நடக்கிறது , என்று அவன் மேல் பொறாமை வருகிறது. 


தங்கள் வாழ்வில் நடக்கும் துன்ப நிகழ்வுகளை யாரும் பறைசாற்றுவதில்லை. 


எனக்கு பங்குச் சந்தையில் இவ்வளவு நட்டம், எனக்கு வேலை போய் விட்டது, நான் உடம்ப சரியில்லாமல் ஒரு மாதம் மருத்துவமனையில் இருந்தேன், எனக்கும் என் மனைவிக்கும் பெரிய வாக்குவாதம், வீட்டில் நிம்மதியே இல்லை என்று யாரும் பதிவு இடுவதில்லை. 


நாம் என்ன நினைக்கிறோம், உலகில் யாருக்கும் ஒரு குறையும் இல்லை. எல்லோரும் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நாம் ஒருவர் மட்டும் தான் இப்படி கிடந்து உழல்கிறோம் என்று ஒரு தன்னிரக்கம் வருகிறது . 


அது உண்மை இல்லை என்றாலும், அதை தவிர்க்க முடிவது இல்லை. 


என்ன செய்யலாம்? இதை எப்படி எதிர் கொள்வது? சமூக வலைதளங்களுக்குப் போகாமல் இருக்கலாம். நான் போவது இல்லை. அதனால் யார் மேலும் எனக்கு பொறாமை இல்லை. தெரிந்தால்தானே பொறாமை கொள்ள. 


எல்லோராலும் அது முடிவது இல்லை. 


வள்ளுவர் அதற்கும் வழி சொல்கிறார். 


முதல் குறளில் "பொறாமை இல்லாத குணத்தை இயல்பாக்கிக் கொள்" என்றார். 


ஆனால் அது நடக்கிற காரியமாகத் தெரியவில்லை. 


வள்ளுவருக்கு அது புரிந்து இருக்கிறது. 


சரி, உன்னால் பொறாமையை விட முடியவில்லையா....=பரவாயில்லை, உனக்கு இன்னொரு வழி சொல்லித் தருகிறேன் என்கிறார். 


அவனிடம் சிறந்த ஏதோ ஒன்று இருப்பதால்தானே அவன் மீது பொறாமை படுகிறாய்? உன்னிடம் இல்லை,அவனுக்கு கிடைத்து இருக்கிறது என்பதால்தானே பொறாமை படுகிறாய்? 


உலகில் எல்லோரும் உன்னைக் கண்டு பொறாமை படும்படி செய்து விட்டால், உன்னிடம் உலகிலேயே மிகச் சிறந்த ஒன்று இருந்து விட்டால்? 


அத்தனை பேரும் உன்னைக் கண்டு பொறாமை படுவார்கள் அல்லவா? 


அந்தப் பொருள் என்ன தெரியுமா?


அது தான் பொறாமை இல்லாத குணம். 


அது மட்டும் இருந்து விட்டால், அதை விட சிறந்த ஒன்று வேறு எதுவும் கிடையாது. உன்னைப் பார்த்து மற்றவன் பொறாமை படுவான். நீ யாரைப் பார்த்தும் பொறாமை படத் தேவையே இருக்காது. அது அவ்வளவு உயர்ந்து விடயம் என்கிறார். 


பாடல் 


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


(Pl click the above link to continue reading)



விழுப்பேற்றின்  = விழுமிய பேறுகளில் 


அஃதொப்பது = அதற்குஇணையானது 


இல்லை = இல்லை 


யார் மாட்டும் = ஒருவரிடத்தும் 


அழுக்காற்றின் = பொறாமையின் 


அன்மை பெறின் = தூரத்தை பெற்றால். அதாவது அது கிட்ட கூட இல்லாமல் இருந்தால். அதாவது, பொறாமை இல்லாமல் இருந்தால். 


உலகிலேயே மிகச் சிறந்த், ஈடு இணை இல்லாத செல்வம் யார் இடத்தும் பொறாமை இல்லாமல் இருப்பது. 


அது எவ்வளவு பெரிய செல்வம் தெரியுமா?  என்று கேட்கிறார் வள்ளுவர். 


இந்தக் குறளுக்கு இன்னும் கொஞ்சம் விரிவாக பொருள் சொல்ல வேண்டும். 


பதிவு கொஞ்சம் நீண்டு விட்டதால், அந்த விரிவான உரையை அடுத்த பதிவில் சிந்திப்போம். 




Monday, August 8, 2022

திருவாசகம் - திரு அம்மானை - ஒரு முன்னுரை

 திருவாசகம் - திரு அம்மானை  - ஒரு  முன்னுரை 


இளங்கன்று பயம் அறியாது என்று சொல்லுவார்கள். அது போல திருவாசகம் போன்ற மிக உயரிய நூல்களுக்கு நானும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். 


படிக்கப் படிக்க அது மேலும் மேலும் உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. எங்கு நிறுத்துவது, இவ்வளவுதான் என்று அறுதியிட்டு கூற முடியாமல் இருக்கிறது. 


எங்காவது தொடங்க வேண்டுமே....


ஒரு சமுதாயம் இறை உணர்வு உள்ள சமுதாயமாக இருக்க வேண்டும் என்றால் அதில் உள்ள பெண்களுக்கு இறை உணர்வு இருக்க வேண்டும். அவர்கள்தான் பிள்ளை வளர்க்கும் போது அந்த இறை உணர்வை பிள்ளைகளுக்கு இளமையில் இருந்தே ஊட்டுவார்கள். 


தாலாட்டில், உணவு ஊட்டும் போது, குளிப்பாட்டும் போது, கதை சொல்லி தூங்க வைக்கும் போது அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை, கதைகளை சொல்லுவார்கள். அந்த பாடல்களும், கதைகளும் இறை உணர்வு சம்மந்தபட்டதாய் இருந்தால், தங்களை அறியாமலேயே அந்த விதையை அவர்கள் பிள்ளைகள் மனதில் தூவி விடுவார்கள். பிள்ளைகள் அறியாமலேயே அவர்களுக்குள் அது வளர்ந்து வரும். .


பின்னாளில் எத்தனை தத்துவங்கள் வந்து மோதினாலும், அந்த இளம் வயது உணர்வு மிக ஆழமாக இருக்கும். அசைக்க முடியாது. 


சரி, இந்த தேவாரம், திருவாசகம்  போன்றவற்றை பள்ளிக் கூடத்தில் பாட திட்டமாக வைத்து சொல்லிக் கொடுக்க முடியுமா என்றால் அது கடினம். அதுவும் அந்தக் காலத்தில், குருகுல வாசம் உள்ள காலத்தில், பெண் பிள்ளைகளை அனுப்பி பாடம் சொல்லித் தருவது எப்படி?


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


(pl click the above link to continue reading)


பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் அந்தத் தத்துவங்களை எளிய , சந்தம் நிறைந்த பாடல்களாக மணிவாசகர் அமைத்துத் தருகிறார். 


ஊஞ்சல் ஆடும் போதும், பூ கொய்யும் போது , அம்மானை ஆடும் போது என்று பெண்கள் செய்யும் செயல்களோடு பாடல்களை அமைத்துத் தருகிறார் அடிகளார். 


அவர்கள் விளையாட்டுப் போக்கில் அதைப் பாடுவார்கள். நாளடைவில் அது மனப்பாடம் ஆகி விடும். அர்த்தம் தெரியாது. ஆனால் பாட்டு மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும். 


அங்கொன்றும், இங்கொன்றுமாக அர்த்தம் புலப் படத் தொடங்கும். கொஞ்சம் ஆர்வம் பிறக்கும். ஒரு தேடல் வரும். அப்படியே அது அவர்களை நன்னெறியில் இட்டுச் செல்லும். 


என்ன ஒரு ஆழமான சிந்தனை!


அம்மானை என்பது இளம் பெண்கள் மூன்று அல்லது ஐந்து கற்களை வைத்து மேலே தூக்கிப் போட்டு பிடிக்கும் ஒரு வித விளையாட்டு. 


மேலே போன கல் கீழே வருவதற்குள் கீழே உள்ள கற்களை ஏதோ ஒரு விதிப்படி கையில் எடுக்க வேண்டும். அதற்குள் மேலே சென்ற கல் கீழே வரும். அதையும் தரையில் விழாமல் பிடிக்க வேண்டும். 


அதில் ஒரு இலயம் வேண்டும். ஒரு கட்டு வேண்டும். 


மணிவாசகர் அந்த இலயத்தோடு பாடல்களை அமைக்கிறார்.  


அதில் காதல், சிருங்காரம், போன்ற உணர்வுகள் உண்டு. அது அந்தப் பெண்களுக்கு ஒரு உற்சாகத்தைத் தரும். 


அதில் இருந்து அப்படியே பக்திக்குள் கொண்டு செல்லும் இரசவாதம் மணிவாசகர் ஒருவரால் மட்டுமே முடியும். 


அப்படி அமைந்த பத்துப் பாடல்களைக்  சிந்திக்க இருக்கிறோம். 


வாருங்கள். 

Friday, August 5, 2022

கந்தரனுபூதி - பணியாய் அருள்வாய்

 

 கந்தரனுபூதி -  பணியாய் அருள்வாய் 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html




)

வருமான வரி கணக்கை எல்லோரும் தாக்கல் செய்ய வேண்டும். எப்போது முடியுமோ அப்போது செய்தால் போதும் என்று சொன்னால், எத்தனை பேர் தாக்கல் செய்வார்கள்?


தாக்கல் செய்யக் கூடாது என்று அல்ல. அல்லது ஏதோ வருமான வரியில் குழப்பம், தவறு இருக்கும் என்பதால் அல்ல. "அப்புறம் செய்வோம்", "நாளைக்கு செய்வோம்" என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். இல்லையா?


மாறாக  வருமான வரி கணக்கை 31 Jul 22 தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டால்,  ஏறக்குறைய எல்லோரும் தாக்கல் செய்து விடுவார்கள். 


அது மனித இயல்பு. 


நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமா, அதை உங்களுக்கு நெருங்கியவர்களிடம் சொல்லி விடுங்கள். 


"நான் இன்றில் இருந்து புகை பிடிப்பது இல்லை"


"மது அருந்துவது இல்லை"


"வாரத்துக்கு நாலு தடவையாவது உடற் பயிற்சி செய்வேன்"


அது எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். வெளியில் சொல்லுங்கள். உங்களை நீங்களே ஒரு பொறுப்புக்குள் கொண்டுவருவது மாதிரி. யாரிடமும் சொல்லாவிட்டால், "நாம் தானே நினைத்தோம், மாற்றிவிட்டால் போகிறது" என்று அதைச் செய்ய மாட்டோம். 


அது சரி, அதுக்கும், இந்த கந்தரனுபூதிக்கும் என்ன சம்பந்தம்? 


இறைவனை வணங்க வேண்டும் என்று எல்லாம் தெரியும். ஆனாலும் செய்வது இல்லை. ஏதாவது நடுவில் வந்து விடுகிறது. 


அருணகிரிநாதர் முருகனிடம் சொல்கிறார் 



"முருகா, நானா நினைத்து இதை எல்லாம் செய்யமாட்டேன். ஒண்ணு செய், நீ எனக்கு ஒரு கட்டளை போடு. இப்படி பாடு, இப்படி வழிபாடு செய் நு. நீ சொல்லிட்டா, முருகன் கட்டளை என்று நான் அதை ஒழுங்காகச் செய்து விடுவேன். உன் கட்டளையை மீற முடியுமா? " என்கிறார்.ர் 



பாடல் 


ஆடும் பரிவேலணி சேவ லெனப் 

பாடும் பணியே பணியா வருள்வாய் 

தேடும் கயமா முகனைச் செருவிற் 

சாடும் தனியானை சகோ தரனே .. 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


(Pl click the above link to continue reading) 


ஆடும்  = ஆடுகின்ற 


பரி = பரி என்றால் குதிரை. இங்கே வாகனம், ஆடுகின்ற வாகனம் அதாவது மயில் 


வேலணி சேவ லெனப்  = வேல் + அணி சேவல் என = வேல், சேவல் என்று 


பாடும் பணியே = பாடுகின்ற வேலையை 


பணியா வருள்வாய்  = எனக்கு விதித்த வேலையாக நீ எனக்கு அருள் செய்வாய் 


தேடும் = தேடிச் செல்லும் 


கயமா முகனைச் = கயமாமுகன் என்ற அரக்கனை 


செருவிற்  = போரில் 


சாடும் = வெல்லும் 


தனியானை சகோ தரனே = தனித்துவம் மிக்க விநாயகப் பெருமானின் சகோதரனே 


இது காப்புச் செய்யுள். 


"பாடும் பணியே பணியாய் அருள்வாய்"


அதை எனக்கு ஒரு வேலையாக நீ சொல்லு. நீ சொன்னா நான் மறுக்கமாட்டேன். எனக்கு நானே சொல்லிக் கொண்டால் நான் சில சமயம் மீறி விடுவேன். எனவே, நீயே சொல்லு என்கிறார். 


உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்றாலும், நீங்கள் எடுத்த முடிவை உங்களுக்கு நெருங்கியவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் மதிப்பில் நீங்கள் தாழ விரும்பாதவர்களாக இருக்க வேண்டும். 


"ஆமா, நீ இப்படித் தான் சொல்லுவ..பின்ன ஒண்ணும் செய்ய மாட்ட" என்று அவர்கள் உங்களை சொல்லுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்க வேண்டும். அவர்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கை உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். 


மயில், வேல், சேவல் என்று பாடுகிரீர்களோ இல்லையோ, மேலே சொன்னதைச் செய்து பாருங்கள். 


இன்று ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டு அதை உங்களுக்கு நெருங்கியவர்களிடம் சொல்லிவிட்டு செய்து பாருங்கள். உங்களால் அது முடியும். 


"இன்று ஒரு நாள் whatsapp பார்பதில்லை" என்று சொல்லி விடுங்கள். கட்டாயம் செய்வீர்கள். 


நான் இதை என் அனுபவ பூர்வமாக் உணர்ந்து இருக்கிறேன். 


கந்தரநுபூதி நம்மை மேம்படுத்த உதவும் ஒரு கருவி. 


இன்று ஏதோ ஒரு வேலையில் ஆரம்பித்து, படிப்படியாக முன்னேறி பெரிய நோக்கங்களை அடைய அது வழி வகுக்கும். 




Thursday, August 4, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - இயல்பு

 

 திருக்குறள் - அழுக்காறாமை -  இயல்பு 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html



)


அறம், ஒழுக்கம், நெறி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ஒழுக்க நெறி இருக்கிறது. 


அது சமயம் சார்ந்ததாக இருக்கலாம், இருக்கும் இடம் சார்ந்ததாக இருக்கலாம், ஆண் பால் , பெண் பால் சார்ந்ததாக இருக்கலாம், சமய உட்பிரிவுகள் சார்ந்ததாக இருக்கலாம், வயது பற்றியதாக இருக்கலாம். 


எப்படி இருப்பினும், பல்வேறு ஒழுக்க நெறிகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் கடைபிடிப்பது என்பது முடியாத காரியம்.  நடை முறையில் சாத்தியம் இல்லை. 


ஆசாரக் கோவை என்று ஒரு நூல் இருக்கிறது. எப்படி ஆசாரமாக இருக்க வேண்டும் என்று  சொல்கிறது. அதில் உள்ளபடி செய்வது என்பது நடைமுறைக்கு கடினமான செயல். 


சரி, நடைமுறைக்கு ஒத்து வராது என்று காரணம் காட்டி எல்லா ஒழுக்கத்தையும் காற்றில் பறக்க விட்டுவிடலாமா? 


இன்று அப்படித்தானே நடக்கிறது. 


எதைக் கேட்டாலும், அதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். மனம் போன போடி வாழ ஒரு எளிய வழி அது.


வள்ளுவர் சொல்கிறார் 


"உனக்கு என்று ஓதிய அனைத்து அறங்களையும் கடை பிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. பொறாமை இல்லாமல் இருப்பது என்ற ஒரு ஒழுக்கத்தைக் கடைபிடி. அது போதும் "


என்கிறார். 


பாடல் 


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


(Pl click the above link to continue reading)


ஒழுக்காறாக் = ஒழுக்க + ஆறாக = ஆறு என்றால் வழி. ஒழுக்க வழியாக அல்லது ஒழுக்க நெறியாக 


கொள்க = கடைபிடிக்க 


ஒருவன்தன் = ஒருவன் தன்னுடைய 


நெஞ்சத்து = மனதில் 


அழுக்காறு = பொறாமை 


இலாத இயல்பு = இல்லாமல் இருக்கும் இயல்பை 


அட, இது ரொம்ப எளிதாக இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றும். 


என்னதான் முயன்றாலும் மற்றவர்கள் ஆக்கம் கண்டு பொறாமை வராமல் இருக்காது.  எங்கோ ஒரு இடத்தில் பொறாமை வரத்தான் செய்யும். 


பணம், பொருள் பற்றிய பொறாமை இல்லாவிட்டாலும், அழகு, அறிவு, குணம், பற்றிய பொறாமை வராமலா போகும்?


என்னா அழாக இருக்கிறாள்/ன், என்ன ஒரு உடல் வாகு, வளர்த்தியும் சதையும் ஒண்ணு போல ...என்று பெருமூச்சு விடாத ஆட்கள் உண்டா?


சரி, பொறாமை வந்து விட்டது. 


என்ன செய்யலாம்? 


அது தவறு, அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது என்று மனதை கடிந்து, நல் வழிப் படுத்தலாம். இனி அப்படி நினைக்க மாட்டேன் என்று சொல்லிக் கொள்ளலாம். 


அது அல்ல வள்ளுவர் சொல்லுவது. 


"அழுக்காறு இலாத இயல்பு"


இயல்பாகவே பொறாமை இருக்கக் கூடாது. பொறாமை வந்த பின் அதை சரி செய்வது அல்ல. மனதில் மற்றவர்கள் ஆக்கம் கண்டு பொறாமை என்ற எண்ணமே வரக் கூடாது. அது இயல்பாக இருக்க வேண்டும். வலிந்து கொண்டு வரக் கூடாது. 


அவனுக்கு உள்ளது அவனுக்கு, எனக்கு உள்ளது எனக்கு என்று இருக்க வேண்டும். 


அவனுக்கு எப்படி கிடைத்தது, நான் அவனை விட எவ்வளவு உழைக்கிறேன், எனக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற எண்ணமே மனதில் எழக் கூடாது என்கிறார். 


நீருக்கு குளிர்ச்சி எப்படி இயல்போ, அப்படி பொறாமை இல்லாத குணம் இயல்பாக அமைய வேண்டும். 


அப்படி என்றால் மனம் எவ்வளவு பக்குவப்பட வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். 


சிலருக்கு படிப்பது என்பது ஒரு கடினமான வேலை. வேறு வழி இல்லை என்றால் படிப்பார்கள். மற்ற வேலை எல்லாம் முடித்து விட்டு, வேற ஒண்ணும் இல்லை செய்வதற்கு என்றால் சரி எதையாவது பொழுது போக படிப்போம் என்று படிப்பார்கள். 


சிலருக்கு, படிப்புதான் வேலையாக இருக்கும். படிக்காவிட்டால் என்னவோ போல இருக்கும் அவர்களுக்கு. 


அது அவரவர் இயல்பு. 


அது போல உடல் பயிற்சி செய்வது. சிலருக்கு அது கடினம். சிலருக்கு அதைச் செய்யாவிட்டால் ஏதோ பறி கொடுத்த மாதிரி இருக்கும். 


பொறாமை இன்மை இயல்பாக அமைய வேண்டும். 


அந்த இயல்பை ஒழுக்கமாகக் கொள்க என்றார் வள்ளுவர். 


"ஒழுக்காறாக் கொள்க" 


பரிமேலழகர் உரையில் "முன்பு ஒரு குறளில் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் " என்று கூறினார் அல்லவா? எனவே, இந்த பொறாமை இல்லாத இயல்பையும், ஒழுக்கம் போல உயிரினும் உயர்வாகக் கொள் என்கிறார். 


நமக்கு ஒன்று இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. ஆனால் அந்தப் பொருள் நமக்கு தெரிந்தவர்களிடம் இருந்து விட்டால், நம்மிடம் இல்லாதது ஒரு பெரிய குறையாகப் போய் விடும். 


அதை அடைய பல முயற்சிகள் செய்ய வேண்டி இருக்கும். 


இப்படி நம்மைச் சுற்றி பத்து பேர் இருப்பான். ஒவ்வொருவனிடமும் ஒன்று இருக்கும். நமக்கு எல்லாம் வேண்டும். 


முடிகிற காரியமா?


என்னைக் கேட்டால் பொறாமையை ஒழிக்க முதலில் facebook (முகநூல்) போன்ற சமூக வலைதளங்களை விட்டு வெளியேற வேண்டும். 


அவனவன் தனக்கு கிடைத்ததை அதில் போட்டு பெருமைப் படுவான். பார்க்கும் நாம், எனக்கு அது இல்லையே, இது இல்லையே என்ன்று எந்நாளும் தீராத ஏக்கத்தில் இருப்போம். 


தேவையா?


நமக்கென்று உள்ளதைக் கொண்டு இன்பமாக வாழ்வோமே. 












Wednesday, August 3, 2022

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 6 - என்னை நிகழ்ந்தது?

 

கம்ப இராமாயணம் - கணவன் மனைவி உறவு - பாகம் 6   - என்னை நிகழ்ந்தது?



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_17.html


பாகம் 2 - யாழைப் பழிக்கும் மொழி: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/2.html


பாகம் 3 - கூந்தல் மலரை தூக்கி எறிந்தாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/3.html


பாகம் 4 - மானைத் தூக்கிய யானை போல 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/4.html



பாகம் 5 - மன்னன் ஆவி அன்னாள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/5.html


)


இராமனுக்கு முடி சூட்டப் போகும் செய்தியைச் சொல்ல தயரதன் கைகேயி அரண்மனைக்கு வருகிறான். அங்கே கைகேயி அலங்கோலமாக தரையில் கிடக்கிறாள். 


தயரதன், கைகேயி எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நம் வாழ்வில் இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால் என்ன நடந்திருக்கும்?


வேலைக்கு சென்ற கணவன் களைத்து வீடு திரும்புகிறான். வந்தால், மனைவி அலங்கோலமாக தரையில் கிடக்கிறாள். 


உடம்புக்கு ஒன்றும் இல்லை. 


பொதுவாக கணவனுக்கு என்ன தோன்றும்?


"இன்னைக்கு என்ன கூத்தோ? பேசாமல் இன்னும் கொஞ்ச நேரம் அலுவலகத்திலேயே இருந்திருக்கலாம். வேலையாவது முடிந்திருக்கும். ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு" 


என்றுதான் பெரும்பாலான கணவர்கள் அலுத்துக் கொள்வார்கள். 


தயரதனும், மந்திர ஆலோசனை முடிந்து வருகிறான். நேரம் நள்ளிரவு. களைப்பு இருக்குமா ? இருக்காதா?  எடுத்த முடிவோ பெரிய முடிவு. அரசை இராமனிடம் கொடுப்பது என்ற முடிவு. எவ்வளவு வேலை இருக்கும். மனைவியிடம் சொல்ல ஓடோடி வந்தால், அவள் இப்படி இருக்கிறாள். 


ஆனால், அலுவலகத்தில் என்ன பெரிய வேலை செய்தாலும் ஒரு பொருட்டு இல்லை. மனைவி துயரத்தில் இருக்கிறாள் என்றால் மற்றதை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவளை கவனிக்க வேண்டும். 


நான் ஒரு ப் பெரிய ஒப்பந்தத்தை முடித்து விட்டேன், அதை சாதித்தேன், இதைச் சாதித்தேன் என்ற பெருமிதத்தில் கவலையாக இருக்கும் மனைவியை கவனிக்கமால் இருக்கக் கூடாது. 


"தயரதன் அவள் இருக்கும் நிலை கண்டு  என்ன ஆயிற்றோ என்று அஞ்சினான். அவளை அள்ளி எடுத்து அவளிடம் கேட்கிறான் 'என்னம்மா ஆச்சு? உன்னை யாரும் ஏதாவது உன் மனம் வருந்தும்படி சொன்னார்களா? என் கிட்ட சொல்லு. யாராக இருந்தாலும், அவங்களை உண்டு இல்லை என்று பண்ணி விட்டு வருகிறேன். என்னை நம்பு...என்னனு சொல்லு"


என்கிறான். 



பாடல் 


அன்னது கண்ட அலங்கல் மன்னன்,  அஞ்சி,

“என்னை நிகழ்ந்தது? இஞ் ஞாலம்  ஏழில் வாழ்வார்

உன்னை இகழ்ந்தவர் மாள்வர்!  உற்றது எல்லாம்

சொன்னபின் என் செயல் காண்டி!  சொல்லிடு!“ என்றான்.



பொருள்   


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/6.html


(please click the above link to continue reading) 


அன்னது கண்ட = அவள் இருக்கும் நிலை கண்ட 


அலங்கல் மன்னன் = மாலை அணிந்த மன்னன் (தயரதன்) 


அஞ்சி, = (என்ன ஆயிற்றோ) என்று அச்சப்பட்டு 


“என்னை நிகழ்ந்தது? = "என்ன நடந்தது"  


இஞ் ஞாலம்   ஏழில் = இந்த ஏழு உலகில் 


வாழ்வார் = வாழ்பவர்கள் 


உன்னை இகழ்ந்தவர்  மாள்வர்! = உனக்கு வருத்தம் வரும்படி பேசியவர்கள் உயிரை விடுவார்கள் 


 உற்றது எல்லாம் =  என்ன நடந்ததுனு சொல்லு 


சொன்னபின் = நீ சொன்ன பின் 


என் செயல் காண்டி! = நான் என்ன செய்யிறேன் பாரு 


சொல்லிடு!“ என்றான். = சொல் என்றான் 


கணவன் மனைவிக்கு நடுவில் சிக்கல் வந்தால், முதலில் செய்ய வேண்டியது - பேச வேண்டும். நிறைய பேச வேண்டும். மனம் விட்டுப் பேச வேண்டும். 


முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருக்கக் கூடாது. 


தயரதன் தான் ஒரு பெரிய சக்கரவர்த்தி என்பதெல்லாம் தூக்கி ஒரு புறம் வைத்து விட்டு, அவன் மனைவியின் துன்பத்தைத் துடைக்க ஒரு கணவனாக அவளோடு பேசுகிறான். 


(தொடரும்)