Saturday, January 18, 2014

இராமாயணம் - கணவன் மனைவி உறவு

இராமாயணம் - கணவன் மனைவி உறவு 


'அல்லல்மாக்கள் இலங்கையது ஆகுமோ ?
எல்லை நீத்தஉலகங்கள் யாவும், என்
சொல்லினால்சுடுவேன்; அது, தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.

சீதை அசோக வனத்தில் சிறை இருக்கிறாள். அனுமன் அவளை சந்திக்கிறான். "வா, என்னோடு, உன்னை இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்" என்கிறான் அனுமன். அதை மறுத்து சீதை சொல்லுவாள்,

"எனக்கு துன்பம் தரும் இந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகம் அத்தனையும் என் சொல்லினால் சுட்டு பொசுக்கி விடுவேன். ஆனால், அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு விளைவிக்கும் என்று செய்யாமல் இருக்கிறேன்" என்று கூறுகிறாள்.

பாட்டின் மேலோட்டமான பொருள் அவ்வளவு தான்.

அதில் பொதிந்து கிடக்கும் அர்த்தம், அதில் பின்னிக் கிடக்கும் உணர்வுகள் மிக அதிகம்.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 இந்த பாட்டிற்கு ஏன் "கணவன் மனைவி உறவு" என்று தலைப்பு ? இதில் கணவன் மனைவி உறவு எங்கே இருந்து வந்தது ?

தாம்பத்யம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது. கணவன் நினைக்க வேண்டும், நான் இல்லாமல் அவள் கஷ்டப் படுவாள், நான் தான் அவளை காக்க வேண்டும், துணை செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டும். அது ஒரு புறம். இன்னொரு புறம், அவள் இல்லாமல் என் வாழ்க்கை கடினம் என்று கணவன் நினைக்க வேண்டும்.

அது போல மனைவியும், தான் கணவனை சார்ந்து இருக்கிறேன், அவன் என்னை பார்த்துக்  கொள்வான்  என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அது ஒரு புறம்.  இன்னொரு புறம், நான் இல்லாமல் அவன் கஷ்டப் படுவான் என்று மனைவி நினைக்க வேண்டும்.

இப்படி யோசித்துப் பாருங்கள் , "நான் இல்லாவிட்டாலும் அவள் எப்படியாவது சமாளித்துக்  கொள்வாள் " என்று கணவன் நினைத்தாலோ, "அவன் இல்லாவிட்டால் என்ன, என்னால் தனித்து வாழ முடியாதா " என்று மனைவி நினைத்தாலோ அந்த தாம்பத்யம் எப்படி இருக்கும் ?

இங்கே, ஒரு வேளை சீதை தானாகவே இலங்கையை எரித்து விட்டு இராமனிடம் வந்து சேர்ந்து விட்டால் எப்படி இருக்கும் ?

பார்பவர்கள் என்ன சொல்லுவார்கள் "அதோ போகிறானே இராமன், பெரிய வீரன், சொந்த மனைவியை மாற்றானிடம் இருந்து மீட்டு வரத் தெரியாத வீரன்" என்று இராமனை உலகம் பழிக்கும்.

அவனின் திறமையை, புகழை மனைவியாகிய சீதை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

தனக்கு துன்பம் வந்தால் கூட பரவாயில்லை , அவன் புகழுக்கு மாசு வந்து விடக் கூடாது  என்று நினைக்கிறாள்.

இரண்டாவது அர்த்தம், யாருக்கு மாசு வந்து விடக் கூடாது ?

இராமனுக்கா ? இல்லை

அவன் வில்லுக்கா - இல்லை

அவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்றாள் .

அவன் ஆற்றலை, திறமையை உலகம் மதிக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

நாலு தடவை மனைவி கணவனின் திறமையை புகழ்ந்து மற்றவர்களிடம் சொன்னால், கணவன் மகிழ்வான். அவனிடம் அந்த அளவு திறமை இல்லாவிட்டாலும், அவளின் நம்பிக்கையை பொய் ஆக்கக் கூடாது என்று நினைத்தாவது  அவன் தன் திறமையை வளர்த்துக் கொள்ள தலைப் படுவான்.

மாறாக, "அவரு ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லை, ஒரு காரியம் சரியாகத் செய்யத் தெரியாது, எது செய்தாலும் அதில் ஒரு குறை இருக்கும் " என்று எந்நேரமும்  குறை சொல்லிக் கொண்டே இருந்தால் நாளடைவில் கணவன் "சரி தான் , இவ என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பாள், எதற்கு செய்ய வேண்டும் என்று செய்யாமலே இருந்து விடுவான்". பெரும்பாலான பெண்கள் செய்யும் தவறு இது.

ஆண்களின் திறமையை, வெளிக் கொண்டு வருவதில் பெண்ணின் பங்கு மிக அதிகம். தெரியாமலா சொன்னார்கள் பெண்ணை சக்தி என்று. அவள் தான் சக்தி. அவனை இயக்கம் சக்தி.

மூன்றாவது, ஒரு குடும்பத்தை ஒருவர் தான் நடத்தி செல்ல வேண்டும். எல்லோரும் ஒரு குடும்பத்தை வழி நடத்துகிறேன் என்று ஆரம்பித்தால் குடும்பம் ஒரு வழி செல்லாது.

இங்கே சீதையிடம் ஆற்றல் இருக்கிறது. இராமனை விட பல மடங்கு ஆற்றல் இருக்கிறது. இராவணின் மேல் படை எடுக்க இராமனுக்கு வானர சேனையின் துணை வேண்டி இருந்தது. அனுமன் போன்ற பலவான்களின் துணை வேண்டி இருந்தது. இலக்குவன், வீடணன், போன்றோரின் பங்களிப்பு வேண்டி இருந்தது.

சீதைக்கு இது எல்லாம் வேண்டாம். "ஒரே ஒரு சொல்" போதும். தனி ஒரு ஆளாக, ஒரே ஒரு  சொல்லின்னால் இலங்கை மட்டும் அல்ல இந்த உலகம் அனைத்தையும்  அழித்து விடுவேன் என்கிறாள். இராமனுக்கு இலங்கையை அழிக்கவே இவ்வளவு துணை வேண்டி இருந்தது. உலகம் முழுவதும் அழிப்பது என்றால் எவ்வளவு துணை வேண்டி இருக்குமோ ?

இருந்தும் அவள் செய்ய வில்லை. கணவனை முன்னிறுத்தி, தன் ஆற்றலை அடக்கி, அவனுக்கு முக்கியத்வம் தருகிறாள். இது பெண்ணடிமைத் தனம் அல்ல....குடும்பத்தை நடத்தி செல்லும் வழி.

யோசித்துப் பாருங்கள், சீதை தானே சிறையில் இருந்து வெளி வந்திருந்தால் சீதையின் ஆற்றல் பேசப் பட்டிருக்குமா அல்லது இராமனின் இயலாமை பேசப் பட்டிருக்குமா ?

மூன்றாவது, இராமன் மனைவியை மாற்றான் அபகரிக்க விட்டு விட்டான். ஒரு விதத்தில்  அது இராமனின் பிழைதான். அது பிழை என்று ஜடாயு சொன்னார்.

இருந்தும் சீதை இராமன் மேல் பிழை காணவில்லை. தன்னைத் தொலைத்ததை மட்டும் அல்ல, இத்தனை நாள் வராததையும் பிழையாகக் கருதவில்லை.


"அது தூயவன் வில்லின்......"

இராமனை தூயவன் என்கிறாள். அவன் மேல் எந்த தவறும் இல்லை என்று சான்றிதழ் தருகிறாள்.

அதற்கு முன்னால் இராமன் செய்த இரண்டு காரியங்கள் மக்களால் விமர்சிக்கப் பட்டது.

தாடகை என்ற பெண்ணை கொன்றது.
வாலியை மறைந்து இருந்து கொன்றது

இந்த இரண்டும் இராமனின் வில்லறத்திற்கு இழுக்கு என்று சொல்பவரும் உண்டு.

தன் கணவனைப் பற்றி உலகம் என்ன சொன்னாலும் சீதைக்கு கவலை இல்லை. அவனை "தூயவன்" என்று சீதை நம்புகிறாள்.

இப்படி, கணவன் மேல் நம்பிக்கை, அவன் ஆற்றல் மேல் நம்பிக்கை, அவன் ஆற்றலை மற்றவர்கள் குறை சொல்லி விடக் கூடாது என்ற கவலை, தன் திறமை கணவன் மூலம் வெளிப்படவேண்டும் என்ற நோக்கம்...

இப்படி ஒரு இனிய தாம்பத்யத்திற்கு வழி சொல்லித் தருகிறாள் சீதை - இந்த ஒரு பாடல் மூலம்.

பாடம் படிப்போமே...



2 comments:

  1. அப்பாட இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு நல்ல விருந்து. நன்றி

    ReplyDelete
  2. இந்தக் காலத்தில், பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதித்துத் தன்னைத் தானே பார்த்துக்கொள்கிறார்கள். கணவனை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆண்-பெண் இருவரும் சமமாக, நட்பாக வாழ்வது மேல் அல்லவா?

    ReplyDelete