Saturday, February 1, 2014

திருவாசகம் - என்னை வளர்ப்பவனே

திருவாசகம் - என்னை வளர்ப்பவனே 


ஆற்றங்கரை.

சிலு சிலு என ஓடும் ஆற்றின் நீர்.

வரும் வழியில் இருந்து வண்டல் மண்ணை அள்ளிக் கொண்டு வரும் ஆறு.

இலை வருடும் காற்று. வேர் வருடும் நீர்.

சின்ன சின்ன மரங்கள் நன்கு செழித்து வளரும்.

நாள் ஆக நாள் ஆக மரம் பெரிதாய் கிளை பரப்பி வளரும். அதன் எடை கூடிக் கொண்டே வரும். விழுந்து விடாமல் இருக்க வேர்க் கரம் நீட்டி தரையை இறுகப் பற்றிக் கொள்ள போராடும்.

ஆரங்கரை மண் அவ்வளவு கெட்டியாக இருக்காது. சதா சர்வ காலமும் நீரில் நனைந்து நெகிழ்து இருக்கும்.

ஒரு நாள் தன் எடையாலேயே அந்த மரம் நீரில் விழுந்து அடித்துச் செல்லப் படும்.

எந்த ஆறு , மரம் வளர உதவியதோ, அதே அந்த மரத்தை அடித்துச் செல்லும்.

அது ஆற்றின் தவறு அல்ல...ஆறு தந்த வசதியால் பெருத்த மரத்தின் தவறு....

பெண்ணாசையும் அப்படித்தான்.

கண்ணசைவில் உயிர் அசையும்....

காதோர சுருள் முடியில் கற்பனைகள் ஊஞ்சல் ஆடும் ....

அவளின் நெருக்கம் இதயத்தை கட்டறுத்து ஓட வைக்கும் .....

அப்படித்தான் ஆரம்பிக்கும்....திருமணம், பிள்ளைகள், குடும்பம் என்று எடை கூடிக் கொண்டே போகும்....

ஆற்றங்கரை மரம்....

பாடல்

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவா
ரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே.

சீர் பிரித்த பின் 

காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய்
வேருறு வேனை விடுதி கண்டாய் விளங்கும் திருவாரூர் 
உறைவாய் மன்னும் உத்தர கோசமங்கைக்கு அரசே 
வார் உறு பூண் முலையாள் பங்க என்னை வளர்ப்பவனே.

பொருள்

காருறு = கார் + உறு. கருமையே உருவான

கண்ணியர் = கண்களைக் கொண்ட பெண்கள்

ஐம்புலன் = அவர்கள் பின்னால் போகும் எனது ஐந்து புலன்களும்

ஆற்றங்கரை மரமாய் = ஆற்றங்கரையில் இருக்கும் மரமாய்

வேர் உறுவேனை = வேர் கொள்வேனை 

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

விளங்கும் = பொலிவுடன் விளங்கும்

திருவாரூர் உறைவாய் = திருவாரூரில் உறைபவனே

மன்னும் = நிலைத்து நிற்கும்

 உத்தர கோசமங்கைக்கு அரசே =  உத்தர கோசமங்கை என்ற ஊருக்கு  அரசே

வார் உறு = கச்சு அணிந்த

பூண் முலையாள் = ஆபரணங்களை அணிந்த மார்பை உடைய  (உமா தேவியின் )

பங்க =  உடலில் பங்கைக் கொண்டவனே

என்னை வளர்ப்பவனே. = என்னை வளர்பவனே.

நம்மை யார் வளர்க்கிறார்கள் ? நாமே நம்மை வளர்த்துக் கொள்கிறோமா ? ஆயிரம் ஆயிரம் கைகள் நம்மை வளர்க்கின்றன....


தாயின், தந்தையின், ஆசிரியரின், கணவன், மனைவி, நண்பர்கள், வீட்டில் நமக்கு உதவி செய்யும் வேலை ஆட்கள், வண்டி ஓட்டுபவர், நமக்கு வேண்டிய உணவை உற்பத்தி செய்பவர், ஆடைகளை நெய்பவர்கள், இப்படி ஒவ்வொரு நாளும் ஆயிரம் ஆயிரம்  கைகள் நமக்கு உதவி செய்கின்றன.

நாம் பல் விளக்கும் brush , paste , soap , எண்ணெய் , துணிமணி, மின்சாரம் என்று எத்தனை ஆயிரம் பொருள்களை நாம் அனுபவிக்கிறோம். அவ்வளவுக்கும் பின்னால் எத்தனை கைகள் ?

நம்மை வளர்க்கும் கைகள் அவை.

பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய் வளை தன் பாதத் திறம்பாடி ஆடேலோர்  எம்பாவாய்

என்பார் மணிவாசகர்.

அத்தனையையும் இறைவனாகப் பார்க்கிறார் மணிவாசகர்.




1 comment:

  1. ஆகா, என்ன அருமையானா பாடலுக்கு இணையான விளக்கம்! நன்றி.

    ReplyDelete