Wednesday, February 4, 2015

திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது - பாகம் 1

திருவாசகம் - எவற்றிலிருந்து பிழைப்பது  - பாகம் 1  



இறைவனை அடைய விடாமல் நம்மை பல விதமான சிக்கல்கள் பின்னி பிணைத்து இருக்கின்றன.

அவற்றை சிக்கல்கள் என்று கூட சொல்லக் கூடாது, அவற்றை ஆபத்துகள் என்று சொல்கிறார் மணிவாசகர். எத்தனை ஆபத்துகளில் இருந்து பிழைத்தேன் என்று பட்டியல் தருகிறார்.

உணவு ஒரு பெரிய தடை. ஆபத்து. எந்நேரமும் பசி, உணவு, உண்டதைக் செரித்தல் பின் மீண்டும் பசி, உணவு என்று வாழ்நாளில் மிகப் பெரிய நேரம் உணவு தேடுவதிலும், உண்பதிலும் சென்று விடுகிறது.

இரை தேடும் மும்முரத்தில் இறை தேட முடியாமல் போகிறது.

உணவு தேட வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதில் அதிக நேரம் போகிறது.

வேலை செய்த களைப்பில் தூக்கத்தில் கொஞ்ச நேரம். வேலைக்காக அங்கும் இங்கும் அலைவதில் கொஞ்ச நேரம்.

இடைப்பட்ட நேரத்தில் காமம், அதில் இருந்து வரும் பிள்ளைகள், அதனால் வரும் சிக்கல்கள் என்று வாழ்வு செக்கு மாடு போல இவற்றிலேயே போய் விடுகிறது.

இவை போதாது என்று கல்வி என்ற பெரும் கடலில் இருந்து பிழைக்க வேண்டும். கல்வி குழப்பும். இறைவனை அடைய கல்வி ஒரு தடை.

செல்வம் ஒரு தடை.

வறுமை ஒரு தடை.

மணிவாசகரின் பட்டியல் இதோ

பாடல்


காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;

பொருள்

காலை மலமொடு = காலையில் கழிக்கும் மலமொடு

கடும் பகல் பசி = பகலில் வரும் பசி

நிசி = இரவு

வேலை  = வேலை

நித்திரை = நித்திரை. மாற்றிப் படிக்க வேண்டும். பகலில் வேலை மற்றும் பசி. இரவில் நித்தரை.

யாத்திரை, பிழைத்தும் = அதற்காக அலையும் அலைச்சல்களில் இருந்து பிழைத்தும்

கரும் குழல் = கரிய முடி

செவ் வாய் = சிவந்த உதடுகள்

வெள் நகை = வெண்மையான (பற்கள் தெரிய சிரிக்கும்) சிருப்பும்

கார் மயில் = கரிய மயிலைப் 

ஒருங்கிய சாயல் = ஒத்த சாயலும்

நெருங்கி = நெருங்கி

 உள் மதர்த்து = உள்ளே கிளர்ந்து எழுந்து

கச்சு அற நிமிர்ந்து = மார்பு கச்சை மீறி நிமிர்ந்து

கதிர்த்து = உயர்ந்து

முன் பணைத்து = முன் எழுந்து

எய்த்து = அடைந்து

இடை வருந்த = இடை வருந்த

எழுந்து = எழுந்து

புடை பரந்து = பரந்து விரிந்து

ஈர்க்கு = ஈர் குச்சி

இடை போகா = இடையில் போக முடியாமல்

இள முலை = இளமையான மார்புகள்

மாதர் தம் = பெண்களின்

கூர்த்த = கூர்மையான

நயனக் = கண்களின்

கொள்ளையில் = கொள்ளையில்

பிழைத்தும் = பிழைத்தும்

பித்த உலகர் = பித்தர்கள் நிறைந்த உலகில்

பெரும் துறைப் பரப்பினுள் = பெரிய கடல் சூழ்ந்த உலகில்

மத்தக் களிறு = யானை

எனும் = போன்ற

அவாவிடைப் பிழைத்தும் = ஆசையில் பிழைத்தும் (யானை போன்ற ஆசை; பேராசை)

கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் = கல்வி என்ற பல கடலைப் பிழைத்தும்

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் = செல்வம் என்ற  துன்பத்தில் இருந்து பிழைத்தும்

நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் = வறுமை என்ற பழைய விஷத்தில் இருந்து  பிழைத்தும்

மிக ஆழமான பாடல். இதன் விரிவுரையை அடுத்து வரும் ப்ளாகுகளில் சிந்திப்போம்


No comments:

Post a Comment