Thursday, July 23, 2015

அறநெறிச்சாரம் - அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்

அறநெறிச்சாரம் - அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் 


படிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

எங்க நேரம் இருக்கு ? காலைல எந்துரிச்சா இராத்திரி படுக்க போற வரை நேரம் சரியா இருக்கு. இதுல நல்ல நூல்களை எங்க படிக்க நேரம் இருக்கு. எல்லாம் retire ஆனப்புறம் பாத்துக்கலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்.

யாருக்குத் தெரியும், கூற்றுவன் எப்போது ஓலை கொண்டு வருவான் என்று.

இப்பவே ஆரம்பித்து விடுங்கள். ஏற்கனவே ரொம்ப லேட்டு. இன்னும் காலம் தாழ்த்தாமல் , இன்றே தொடங்கிவிடுங்கள்.

பாடல்

மின்னு மிளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல் பேதைமை-தன்னைத்
துணித்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலு முண்டு.

சீர் பிரித்த பின்

மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து 
பின்னை அறிவன் என்றால் பேதைமை - தன்னைத் 
துணித்தானும் தூங்காது அறம் செய்க கூற்றம் 
அணித்தாய் வருந்தலும் உண்டு 

பொருள்

மின்னும் = மின்னலைப் போன்ற

இளமை = இளமை

உளதாம் = எப்போதும் உள்ளது

என மகிழ்ந்து = என்று மகிழ்ந்து

பின்னை அறிவன் என்றால் = பின்னால் அறிந்து கொள்ளலாம் என்றால்

பேதைமை = அது முட்டாள்தனம்

தன்னைத் = தன்னையே

துணித்தானும் = வெட்டினாலும். இங்கே, வருத்தினாலும் என்று பொருள் கொள்வது சரியாக  இருக்கும்.

தூங்காது அறம் செய்க = காலம் தாழ்த்தாமல் அறம் என்பது என்ன என்று அறிந்து அதன் வழி நிற்க

கூற்றம் = எமன்

அணித்தாய் = இளமை பருவத்திலும்

 வருந்தலும் உண்டு  = வருவது உண்டு. வயதான பின் தான் மரணம் வர வேண்டும் என்று ஒரு சட்டமும் இல்லை.  எப்போது வேண்டுமானாலும் வரலாம்.


மின்னும் இளமை....மின்னல் மிகப் பிரகாசமாக இருக்கும். கண் கூசும். மிக பலம் வாய்ந்தது. இருந்தாலும், மிக சொற்ப நேரமே இருக்கும். இளமையும் அப்படித்தான். ஆரவாரமாய் இருக்கும். சட்டென்று முடிந்து விடும். 

கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் 
வளரொளி மாயோன் மருவிய கோயில் 
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை 
தளர்விளராகில் சார்வது சதிரே.  என்பார் நம்மாழ்வார். 

கிளர்ந்து எழும் இளமை. எதுனாலும் நான் செய்கிறேன் என்று முன்னால் வந்து நிற்கும் இளமை. அது முடிவதற்குள் , தளர்ந்து போவதன் முன்னம் திருமாலிருஞ்சோலைக்கு வாருங்கள் என்கிறார். இளமை போன பின், முட்டு வலிக்கும், முதுகு வலிக்கும், மலை ஏற முடியாது. உடம்பு நம் சொற்படி கேட்கும்போதே  திருத் தலங்களுக்கு சென்று வந்து விடுங்கள். அப்புறம் ஒரு வேளை முடியாமல்  போனாலும் போகலாம். 

இளமையிலேயே நல்லவற்றை செய்து விடுங்கள். 


திருவருட்பா - கருணைக் கடலே

திருவருட்பா - கருணைக் கடலே 


வள்ளலாரின் பாடல்கள் மிக மிக எளிமையானவை. ஒரு தரம் வாசித்தால் மனதில் ஒட்டிக் கொள்ளும்.

அப்படி ஒரு பாடல்

மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் 
          மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும் 
     எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் 
          இல்லிடை மல்லிடு கின்றேன் 
     விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது 
          மெல்அடிக் கடிமைசெய் வேனோ 
     கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே 
          கடவுளே கருணையங் கடலே. 


பொருள்

மண்ணினுள் மயங்கி = இந்த மண்ணுலகில் மயங்கி

வஞ்சக வினையால் = என் வஞ்சக வினையால்

மனந்தளர்ந் தழுங்கி  = மனம் தளர்ந்து அழுங்கி

நாள் தோறும்  = தினமும்

எண்ணினுள் = எண்ணில்லாத

அடங்காத் துயரொடும் = அளவற்ற துயரத்தோடு

புலையர் = புலையர்

இல்லிடை மல்லிடு கின்றேன் = இல்லத்தின் இடையில் சண்டை பிடிக்கிறேன்.

விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் =  வானில் உள்ள சுடர் போன்ற

உனது = உனது

மெல்அடிக் கடிமைசெய் வேனோ = மெல் அடிகளுக்கு அடிமை செய்வேனோ

கண்ணினுள் மணியே = கண்ணில் உள்ள மணி போன்றவனே

ஒற்றியங் கனியே = திருவொற்றியூரில் உள்ள கனி போன்றவனே

கடவுளே கருணையங் கடலே. = கடவுளே, கருணைக் கடலே

சில சமயம் எளிமையாக இருக்கிறதே என்று நாம் அதில் உள்ள ஆழத்தை அறியாமல்  இருந்து விடுவோம்.

இந்தப் பாடலை பற்றி சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.


மண்ணினுள் மயங்கி = இந்த மண்ணுலகில் மயங்கி 

அது என்ன மயக்கம் ?  

நாம் எதில் தான் மயங்கவில்லை எங்கே. இந்த உடல் நமது என்று நினைக்கிறோம். என்றும் இளமையாக இருப்போம் என்று நினைக்கிறோம். என்றும்  நிலைத்து இருப்போம் என்று நினைக்கிறோம். இந்த மனைவி, மக்கள் எல்லாம்  நம் மேல் எப்போதும் நம் மீது அன்புடன் இருப்பார்கள் என்று நினைத்து  மயங்குகிறோம். இந்த சொத்து எப்போதும் நம்மோடு இருக்கும் என்று  நினைக்கிறோம். பணம் நம்மை அனைத்து துன்பத்தில் இருந்தும் காப்பாற்றி  விடும் என்று நினைக்கிறோம். எத்தனை மயக்கம். 

எது உண்மை, எது பொய், எது நிரந்தரம், யார் நட்பு, யார் பகை, எது சரி , எது தவறு என்று தெரியாமல் தடுமாறுகிறோம். 

தெரிவது போல இருக்கிறது. ஆனால் முழுவதும் தெரியவில்லை. எனவே "மயக்கம்" என்றார். 

வஞ்சக வினையால் = என் வஞ்சக வினையால் 

ஒரு வினை செய்யும் போது அதன் விளைவு தெரியவில்லை. முதலில் நல்லா இருப்பது போல  இருக்கும். பின்னால் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற வினைகள் மட்டும் அல்ல,  அளவற்று  உண்பது, சோம்பேறித்தனம் போன்ற தீயவை போல தெரியாத வினைகள் கூட  பின்னாளில் தீமையாக முடியும். எனவே வஞ்சக வினை என்றார்.  பின்னாளில் தீமை வரும் என்றால் அது முதலிலேயே கடினமாய் இருந்து விட்டால்  நாம் செய்ய மாட்டோம். முதலில் சுகமாக இருக்கும், பின்னாளில் சிக்கலில் கொண்டு  போய் மாட்டி விடும். 



பொல்லா வினை உடையேன் புகழுமாறு ஒன்றறியேன் என்பார் மணிவாசகர். பொல்லாத வினை. 




மனந்தளர்ந் தழுங்கி  = மனம் தளர்ந்து அழுங்கி 

மனம் ஏன் தளர வேண்டும் ? நல்லது என்று ஒன்றை செய்கிறோம், அது வேறு விதமாக போய் முடிகிறது. எளிதாக கிடைக்கும் என்று நினைத்தது கை விட்டு நழுவிப் போகும், நமக்கு கிடைக்கும் என்று நினைத்தது வேறு யாருக்கோ கிடைத்து விடிகிறது.  வயதாக வயதாக உடல் நிலை மோசமாகும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது மனம் தளரும். 

"சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக் கொள்ளே" என்பார் மணிவாசகர். 

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 


மேலும் சிந்திப்போம்.


Saturday, July 18, 2015

பிரபந்தம் - நின்றதும், இருந்ததும், கிடந்ததும்

பிரபந்தம் - நின்றதும், இருந்ததும், கிடந்ததும் 


இறைவனை எங்கெல்லாமோ தேடி திரிகிறோம். அவன் இப்படி இருப்பானா, அப்படி இருப்பானா என்று படம் வரைந்து, சிலை வடித்து அழகு பார்க்கிறோம்.

நாம் இறைவனைப் பற்றி அறிந்தது எல்லாம் மற்றவர்கள் சொல்லக் கேட்டதுதான். சொல்ல, படிக்கக் கேட்டதுதான்.

எல்லாம் இரவல் ஞானம். நம் சொந்த அனுபவம் என்று ஒன்று இல்லை.

அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் அப்படி சொல்லி இருக்கிறது, இதில் இப்படி சொல்லி இருக்கிறது என்று படித்ததை, கேட்டது கிளிப் பிள்ளை மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நாம் பிறப்பதற்கு முன்னால் ஏதேதோ நடந்ததாகச் சொல்கிறார்கள். புராணங்கள், இதிகாசங்கள், எல்லாம் இறைவன் அதைச் செய்தான், இதைச் செய்தான் என்று சொல்கின்றன.

திருமழிசை ஆழ்வார் சொல்கிறார்.

"இறைவன் அங்கே நிற்கிறான், இங்கே இருக்கிறான், இங்கே கிடக்கிறான் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் நடந்தது நான் பிறப்பதற்கு முன்னால் . நான் பிறந்தபின் , அதாவது என் அனுபவத்தில், நான் அறிந்தது என்னவென்றால்  இறைவன் இருப்பது என் மனத்துள்ளே என்பதைத்தான்"

பாடல்

நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து
அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம்
அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன்
நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே.

சீர் பிரித்த பின்னே

நின்றது என் தந்தை ஊரகத்தில் இருந்தது என் தந்தை பாடகத்து
அன்று வெஃக அணை கிடந்தது எண்ணிலாத  முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே 

பொருள்


நின்றது  = நின்ற திருக்கோலத்தில் சேவை சாதித்தது

என் தந்தை = என் தந்தை

ஊரகத்தில் = திருஊரகம் என்ற திருத் தலத்தில்

இருந்தது = அமர்ந்த கோலத்தில் சேவை சாதித்தது

என் தந்தை =என் தந்தை

பாடகத்து = பாடகம் என்ற திருத்தலத்தில்


அன்று = அன்று

வெஃக அணை கிடந்தது = திரு வெக்கா என்ற திருத்தலத்தில் சயன கோலத்தில் இருந்தது

எண்ணிலாத  முன்னெலாம் = எண்ணில் அடங்காத காலத்தின் முன்னம்

அன்று நான் பிறந்திலேன் = அன்று நான் பிறக்கவில்லை

பிறந்தபின் = பிறந்தபின்

மறந்திலேன் = மறந்து அறியேன்

நின்றதும் = நின்றதும்

இருந்ததும் = இருந்ததும்

கிடந்ததும் = கிடந்ததும்

என் நெஞ்சுளே = என் மனதிலே

மனதுக்குள் தேடுங்கள்.  அவன் அங்குதான் இருக்கிறான்.




Thursday, July 16, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 4 - முகம் வருடிய கதிரவன்

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 4 - முகம் வருடிய கதிரவன்


சீதையை சென்று அடைய வழி சொல்லுமாறு வருணனை வேண்டி இராமன் தவம் இருந்தான்.

இராமன் தர்ப்பைப் புல்லின் மேல் படுத்து வெயிலில் கிடக்கிறான். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல ஏழு நாட்கள்.

சூரியன் இராமனை சுட்டு எரிக்கிறான்.

சற்று நேரம் சிந்தித்துப் பார்ப்போம்.

சரவர்த்தி மகன். பஞ்சணையில் , மாளிகையில் படுத்து உறங்க வேண்டியவன் இப்போது காட்டில் தரையில், தர்பை புல்லின் மேல் வெயிலில் கிடக்கிறான். பெற்றவள் பார்த்தாள் சகிப்பாளா ?

கம்பனுக்குத் தாங்க முடியவில்லை.  தவிக்கிறான். ஒவ்வொரு நாளும் ஒரு ஊழிக் காலம் போல செல்கிறது.

எப்படி அந்த காட்சியை எழுதுவது ? இராமனை சூரியன் சுட்டான் சுட்டான் என்று சொல்லக் கூட அவனால முடியவில்லை.

சூரியன், தன் கிரணங்களால் இராமனின் கன்னத்தை வருடினானனாம்.

பாடல்

பூழி சென்று தன் திரு உருப்
    பொருந்தவும், புரைதீர்
வாழி வெங்கதிர் மணிமுகம்
    வருடவும், வளர்ந்தான்;
ஊழி சென்றன ஒப்பு என,
    ஒரு பகல்; அவை ஓர்
ஏழு சென்றன; வந்திலன்,
    எறி கடற்கு இறைவன்.

பொருள் 


பூழி சென்று = புழுதி உள்ள கடற்கரையில்

"ஆழிசூழ் உலகெலாம் பரதனேயாள நீ போய்த் 
தாழிரும் சடைகள் தாங்கிப் 
பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகளாடி 
எழிரண்டாண்டின் வாவென்று இயம்பினன் அரசன் என்றான் '

என்றாள் கைகேயி.

அங்கே பூழி சூழ்ந்த காடு. இங்கே புழுதி சூழ்ந்த கடற்கரை.


தன் திரு உருப் = தன்னுடைய உருவம்

பொருந்தவும் = பொருந்தவும். புழுதி மேல் எல்லாம் படிந்து, புழுதியும் அவனும் ஒன்றாக இருந்தது. 


புரைதீர் = குற்றம் அற்ற

பொய்மையும் வாய்மை இடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்பார். குற்றமற்ற நன்மை தரும் என்றால் பொய்யும் கூட உண்மை தான்.


வாழி வெங்கதிர்  =  வெம்மையான கதிர்

மணிமுகம் = மணி போல் ஒளி விடும் முகத்தை (இராமனின்)

வருடவும் = வருடிக் கொடுக்கவும்

வளர்ந்தான் = கிடந்தான்

ஊழி சென்றன ஒப்பு என = ஒரு ஊழிக் காலம் சென்றது போல சென்றன

ஒரு பகல் = ஒரு பகல்

அவை ஓர் = அப்படி ஒரு

ஏழு சென்றன = ஏழு பகல்கள் சென்றன

வந்திலன் = வரவில்லை

எறி கடற்கு இறைவன் = கடலின் தலைவனான வருணன்

மனைவியின் மேல் எவ்வளவு காதல் இருந்தால், இத்தனை துன்பத்தை அவன் ஏற்றிருப்பான் ?

கடல் மணல் எவ்வளவு சுடும். அதில், ஏழு நாள் தர்ப்பைப் புல்லின் மேல் கிடந்தான்.

மனைவிக்கு ஒரு சின்ன உதவி செய்ய, கொஞ்சம் விட்டுக் கொடுக்க, யோசிக்கும் கணவர்கள் யோசிக்க ஒரு பாடல்.

Monday, July 13, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 3 - கடல் நோக்கிய கடல்

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 3 - கடல் நோக்கிய கடல் 



சீதையை அடைய ஒரு வழி தருமாறு கடலை நோக்கி தவம் செய்கிறான் இராமன்.

"இளமையான பெண்ணான சீதையை மீட்க ஒரு வழி தருக என்று, வேத முறைப்படி அடுக்கிய தருப்பை புல்லின் மேல் கிடந்து விதிப் படி வருண மந்திரத்தை மனதில் எண்ணினான்" இராமன்.

பாடல்


'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக !'
என்னும்

பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில்,
கருணைஅம் கடல் கிடந்தனன், கருங் கடல் நோக்கி;

வருண மந்திரம் எண்ணினன், விதி முறை வணங்கி.

பொருள்

'தருண மங்கையை = இளமையான பெண்ணை. தருணம் என்றால் நேரம். சரியான தருணத்தில் வந்தாய் என்று சொல்வதைப் போல. இந்த இடத்தில் காலம், இளமைக் காலம்.

மீட்பது = மீட்டுக் கொண்டு வர

ஓர் நெறி தருக ! = ஒரு வழி தருக

என்னும் = என்ற

பொருள் நயந்து, = பொருளை வேண்டி

நல் நூல்  நெறி = நல்ல நூல்களில் சொல்லப் பட்ட முறைப்படி

அடுக்கிய புல்லில் = அமைக்கப் பட்ட தருப்பை புல்லின் மேல்

கருணைஅம் கடல் கிடந்தனன் = கருணைக் கடலான இராமன் கிடந்தான்

கருங் கடல் நோக்கி = கருமையான கடலை நோக்கி. கருணைக் கடல் கருங் கடலை நோக்கி தவம் செய்தான்.


வருண மந்திரம் எண்ணினன் = வருண மந்திரத்தை மனதில் எண்ணினான்

விதி முறை வணங்கி = விதிப்படி வணங்கி


அது என்ன பொருள் நயந்து ? என்ன பொருளைக் கேட்டான் இராமன் ? "ஒரு வழி சொல்லு " என்று தானே கேட்டான். அது எப்படி பொருளாகும் ?

நமக்காக ஒருவர் தன்னுடைய நேரத்தை செலவழித்து நமக்கு உதவி செய்கிறார் என்றால்  அதுவும் ஒரு பொருள் போலத்தான்.  நமக்கு ஒரு சிக்கல். நண்பரிடம்  யோசனை கேட்கிறோம். அவரும், யோசித்து வழி சொல்கிறார். அவர் நமக்காக   யோசிக்க செலவழித்த நேரமும் அவருடைய பொருள் போலத்தான். நாம் அவருடைய பொருளை பெற்றுக் கொள்வது  போலத்தான்.

பிறருடைய பொருள் மேல் ஆசைக் கொள்ளக் கூடாது என்று நமக்குத் தெரியும். 

அவர்களுடைய நேரமும் அவர்களுடைய பொருள் போலத்தான். அதை கேட்பதும்  அவர்களிடம் பொருளை, பணத்தை கேட்பதும் ஒன்றுதான். 

நமக்காக ஒருவர் தன்னுடைய நேரத்தை செலவழிக்கிறார் என்றால் அவர் நமக்கு  பொருள் தருகிறார் என்று தான் அர்த்தம். 

என் வீட்டில் கல்யாணம் அதுக்கு வா, என் வீட்டில் க்ரஹப் பிரவேசம் அந்த விஷேத்துக்கு வா என்று நண்பரகளையும் உறவினர்களையும் அழைக்கிறோம். அவர்களும் இருக்கிற வேலையெல்லாம் விட்டு விட்டு நம் வீட்டு  விழாவுக்கு வருகிறார்கள். அதற்காக அவர்கள் செலவழித்த நேரம் அவர்கள் நமக்கு  தந்த பொருள் போல. 

பிறருடைய நேரத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் பொருளை மதிப்பது போல. எப்படி மாற்றான் பொருளை விரும்ப மட்டாமோ அது போல மாற்றான் காலத்தையும் விரும்பக் கூடாது. 

அவர்களின் நேரத்தைக் கேட்பதற்கு அவர்களிடம் கை ஏந்தி பொருள் பெறுவது போல கூச வேண்டும். 

புரிகிறதா ? ஏன் வருணபடலம் என்று ஒன்றை கம்பர் வைத்தார் என்று ?






Sunday, July 12, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 2 - கரந்து நின்ற நின் தன்மை

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 2 - கரந்து நின்ற நின் தன்மை 



கடலைத் தாண்டி எப்படி இலங்கை செல்வது என்று கண்டுபிடி என்று இராமன் வீடணனிடம் கூறினான்.

அதற்கு வீடணனும்,

"மறைந்து நிற்கும் உன் தன்மையை அந்தக் கடல் அறியும். உன்னுடைய குல முதல்வர்களால் படைக்கப் பட்டது இந்தக் கடல். எனவே, தனித்து இருந்து, இந்தக்  கடலிடம் ,  அதைத் தாண்டி செல்லும் வழியை வேண்டி , யாசித்துப் பெறுவாயாக " என்றான்.

பாடல்

கரந்து நின்ற நின் தன்மையை, அது, செலக்
கருதும்;

பரந்தது, உன் திருக் குல முதல் தலைவரால்;
பரிவாய்

வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி

வேறு

இரந்து வேண்டுதி, எறி திரைப் பரவையை' என்றான்.

பொருள்

கரந்து நின்ற நின் தன்மையை = மறைந்து நின்ற உன் தன்மையை

அது = அந்தக் கடல்

செலக் கருதும் = முழுவதும் அறியும்

பரந்தது = விரிந்தது

உன் திருக் குல முதல் தலைவரால் = உன் உயர்ந்த குல முதல்வர்களால்

பரிவாய் = அன்புடன்

வரம் தரும் = வரம் தரும்

இந்த மாக் கடல் = இந்த பெரிய கடல்

படை செல = படைகள் செல்ல

வழி = வழி

வேறு = வேறு இடத்தில் இருந்து (தனிமையில் இருந்து )

இரந்து வேண்டுதி = யாசகம் கேட்டு வேண்டிக் கொள்வாயாக

எறி திரைப் பரவையை' = அலை அடிக்கும் இந்தக் கடலை

என்றான். = என்றான் வீடணன்

குரு குல முதல் தலைவர் சகரர்.

சகரர் தோண்டியது என்பதால் அது சாகரம் என்று பெயர் பெற்றது என்று ஒரு கதை உண்டு.

மறைந்து நின்ற நின் தன்மையை அந்தக் கடல் அறியும் என்கிறான் வீடணன். கடல் அறிந்ததோ  இல்லையோ, வீடணனுக்குத் தெரிந்து இருக்கிறது இராமன் என்பவன்  திருமாலின் அம்சம் என்று.   வீடணனுக்குத் தெரிந்தது இராவணனுக்குத் தெரியவில்லை.

ஏன் ?

வீடணன் கற்ற கல்வி அவனை இறைவனிடம் கொண்டு சேர்த்தது. இறைவனை கண்டு கொள்ள உதவியது.

இராவணன் கற்ற கல்வி பதவி, அதிகாரம், போகம், பேராசை என்று இட்டுச் சென்றது.

கல்வி என்ற நீர் பாய சரியான வாய்கால் செய்து வைக்க வேண்டும். இல்லை என்றால்  அது எங்கு பாயும் என்று தெரியாது.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

என்று கேட்டார் வள்ளுவர் . கல்வியின் பயன் இறைவனை கண்டு அவனைத் தொழுவதுதான்  என்கிறார் வள்ளுவர்.

வீடணன் கண்டு கொண்டான். சரணடைந்தான்.

மேலும்,

இராமன், திருமாலின் அம்சம் என்று வீடனணுக்குத் தெரியும். இருந்தும், "நீ இந்தக்  கடலை இரந்து வேண்டுதி " என்றான்.

மனிதனாக அவதாரம் எடுத்து விட்டால் மனிதனைப் போல நடந்து வழி காட்ட வேண்டும்.  மகா பாரதத்தில் கண்ணன் போர் நடக்கும் போது தினமும் குதிரைகளுக்குத் கொள்ளும் நீரும் தருவானாம்.

தேரோட்டி என்றால் அதற்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்.

மேலும்,

வேறு இடத்தில் சென்று பிரார்த்தனை செய் என்றான். வேறு இடம் என்றால் தனித்த இடம்.

வழிபாடு என்பது தனிமையில் நடக்க வேண்டிய ஒன்று. எல்லோரும் அறிய , பட்டைக் கட்டிக் கொண்டு, நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு, கோவிலுக்குப் போய்  கும்பிடுவது அல்ல பக்தி. பக்தி என்பது தனி மனித அனுபவம்.



மேலும் சிந்திப்போம். 

Saturday, July 11, 2015

இராமாயணம் - இராமன் சரணாகதி - பாகம் 1

இராமாயணம் - இராமன் சரணாகதி - பாகம் 1 


இறைவனிடம் பக்தர்கள் சரணாகதி அடைவது பற்றி நிறைய படித்து இருக்கிறோம்.  இறைவனே சரணாகதி செய்து கேட்டு இருக்கிறோமா ? அப்படி செய்தால் என்ன ஆகும் ?

இராமாயணத்தில் வரும் வரும் ஒரு சுவையான இடம்.

வானர சேனையோடு கடற்கரைக்கு வந்துவிட்டான் இராமன்.

கடலை கடக்க வேண்டும். எப்படி கடப்பது ?

யோசனை கேட்கிறான் - யாரிடம் ? வீடணனிடம்.

நேற்று வந்து சேர்ந்தவன் வீடணன். எதிரியின் தம்பி. அறிவில், ஆற்றலில் சிறந்த அனுமன் இருக்கிறான், அனுபவம் நிறைந்த ஜாம்பாவன் இருக்கிறான்.அவர்களை எல்லாம் விட்டு விட்டு வீடனணிடம் ஆலோசனை கேட்கிறான் இராமன்.

அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொண்டபின் அவனை ஒரு துளியும் சந்தேகிக்கவில்லை இராமன்.


இந்தக்  கடல் நமக்கு கட்டுப்படுமானால் இந்த மூன்று உலகையும் அடக்கவும், அழிக்கவும் நம்மால் முடியும். எண்ணற்ற நூல்களை கற்ற வீடணனே ,இந்த கடலை கடக்கும் வழியை சிந்திப்பாய்  என்றான் இராமன்.

பாடல்

'தொடக்கும் என்னில் இவ் உலகு ஒரு மூன்றையும்
தோளால்

அடக்கும் வண்ணமும், அழித்தலும், ஒரு பொருள்  
அன்றால்;

கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் 
பெருஞ் சேனை

கடக்கும் வண்ணமும் எண்ணுதி-எண்ணு நூல்
கற்றாய்!'

பொருள்

'தொடக்கும் என்னில் = கட்டுப்படும் என்றால் (இந்த கடல்)

இவ் உலகு ஒரு மூன்றையும் = மூன்று உலகங்களையும்

தோளால் = என் தோள் வலிமையால்

அடக்கும் வண்ணமும் = அடக்கும் வழியும்

அழித்தலும் = அழிக்கும் வழியும்

ஒரு பொருள் அன்றால் = ஒரு பெரிய விஷயமே அல்ல

கிடக்கும் = பரந்து விரிந்து கிடக்கும்

வண்ண வெங் கடலினைக் = வண்ணமயமான வெம்மையான கடலினை

கிளர் பெருஞ் சேனை = ஆராவாரிக்கும் பெரிய சேனை

கடக்கும் வண்ணமும் எண்ணுதி = கடக்கும் வழியை சிந்திப்பாய்

எண்ணு நூல் கற்றாய்! = எண்ணற்ற நூல்களை கற்றவனே

இராமாயணத்தில் சில பகுதிகள் இல்லாவிட்டாலும் கதையின் போக்கு ஒன்றும் மாறி விடாது. இருந்தும், ஏன் அந்த பகுதிகளை வைத்து இருக்கிறார்கள் என்றால்  அதில் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது.

உதாரணமாக, குகப் படலம் இல்லை என்றால் இராமாயணம் என்ற காப்பியத்திற்கு என்ன  குறை வந்து விடும் ? ஒன்றும் இல்லை. இருந்தும் குகன் என்ற  பாத்திரத்தின் மூலம்  ஏதோ ஒரு செய்தி நமக்கு சொல்கிறார்கள்  வால்மீகியும், கம்பனும்.

அதே போல சபரி. 

அப்படி வந்த இன்னொரு பகுதி தான் இந்த கடல் காண் படலம். 

இந்த பகுதி இல்லாவிட்டாலும் இராமாயணம் என்ற காப்பியத்தின் சுவை குன்றி இருக்காது. 

இன்னும் சொல்லப் போனால், இது போன்ற பகுதிகள் கதையின் விறு விறுப்பை  கொஞ்சம்  தடை செய்கின்றன. 

இருந்தும், வேலை மெனக்கெட்டு சொல்கிறார்கள் என்றால் அதில் ஏதோ இருக்க வேண்டும். 

என்னதான் அப்படி இருக்கிறது என்று பார்ப்போம். 

இந்தப் பாடலில்,

- அபயம் என்று வந்தவனை ஏற்றுக் கொண்டபின் இராமன் அவனை சந்தேகிக்க வில்லை. சந்தேகம் இருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏற்றுக் கொண்டபின்  சந்தேகப் படக் கூடாது. 

எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பார் வள்ளுவர். 

- இரண்டாவது, எண்ணு நூல் கற்றாய் என்று வீடணனை குறிப்பிடுகிறான் இராமன்.   

இராவணனும் நிரம்பக் கற்றவன் தான்.  தவம், வீரம், கல்வி, செல்வம்  என்று அனைத்தும் அவனிடம் இருந்தது.  பின் ஏன் வீழ்ந்தான்? அவன் கற்ற கல்வி அவனுக்கு அறத்தை சொல்லித் தரவில்லை. அறம் இல்லாத கல்வி அழிவைத்தரும். இராவணனுக்கு தந்தது. 

- மூன்றாவது, மூன்று உலகையும் அழிக்கும் ஆற்றல் உள்ள அரசன் என்றாலும் மந்திரியின் சொல் கேட்டு நடக்க வேண்டும். 

இப்படி ஒவ்வொரு பாடலிலும் பலப் பல உண்மைகளை தருகிறார் கம்பர். 

மேலும் சிந்திப்போம்....






Wednesday, July 8, 2015

அறநெறிச்சாரம் - துறந்து எய்தும் இன்பம்

அறநெறிச்சாரம் - துறந்து எய்தும் இன்பம் 


வாழ் நாள் எல்லாம் எதையாவது சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

செல்வம், உறவு, அனுபவம் என்று எதையாவது சேகரித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒரு வீடு இருந்தால் இன்னொன்று. கொஞ்சம் பணம் இருந்தால் இன்னும் கொஞ்சம். இன்னும் கொஞ்சம் அனுபவம்...

மேலும் மேலும் சேர்ப்பது இன்பமா ?

 சரி,இன்பமாகவே  இருந்து விட்டுப் போகட்டும்.

இன்னொரு விதமான இன்பம் இருக்கிறது தெரியுமா ? அது இருப்பதை குறைப்பது. இது வேண்டாம், அது வேண்டாம் என்று இருப்பதை துறப்பதும் ஒரு இன்பம் என்கிறது அறநெறிச்சாரம்.

நமக்குத் தெரியாது அந்த இன்பம் எப்படி இருக்கும் என்று. முயன்று பார்க்கலாம்.

முதலில் நமக்கு தீமை தருபவைகளை .துறக்கலாம்...புகை பிடித்தல், மது, இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் என்று துறக்கலாம். இவற்றை கொள்வது சுகம்தான்  என்றாலும் துறத்தல் அதைவிட இன்பம்  பயக்கும்.

பாடல்

நீக்கருநோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடென் றைந்து களிறுழக்கப்--போக்கரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும் 
இன்பத் தியல்பறி யாதார்.

சீர்  பிரித்த பின்

நீக்க அருநோய், மூப்பு, தலைப்பிரிவு, நல்குரவு,
சாக்காடு என்று ஐந்து  களிறு உழக்கப்--போக்க அரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர்  துறந்து எய்தும்  
இன்பத்து இயல்பு அறியாதவர்.


பொருள் 

நீக்க அருநோய் = நீக்க முடியாத கடுமையான நோய்

மூப்பு = மூப்பு

தலைப்பிரிவு = நெருங்கிய உறவின் பிரிவு (மனைவி, கணவன், பிள்ளைகள்)

நல்குரவு = வறுமை

சாக்காடு = இறப்பு

என்று ஐந்து = என்ற ஐந்து

களிறு உழக்கப் = யானைகள் மிதித்து நசுக்க 

போக்க அரிய = வெளியேற முடியாத

துன்பத்துள் துன்பம் உழப்பர் = துன்பத்தில் கிடந்து வருந்துவர்

துறந்து எய்தும் = துறவினால் அடையும்
 
இன்பத்து இயல்பு அறியாதவர் =இன்பத்தின் இயல்பை அறியாதவர்கள்.

எதை எதை விட்டு நீங்கி இருக்கிறோமோ, அவற்றினால் நமக்கு துன்பம் இல்லை. 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.

என்பார் வள்ளுவர். (இந்தக் குறளில் இன்னொரு சிறப்பு அம்சம் என்ன என்றால், இந்தக் குறளை படிக்கும் போது உதடு ஒட்டாது. நீங்குதல் என்று வந்தபின் உதடு மட்டும் ஒட்டுவானேன் என்று வள்ளுவர் அப்படி ஒரு குறளை எழுதி இருக்கிறார் )

எல்லாவற்றையும் விட்டு நீங்கி விட்டால், எந்தத் துன்பமும் இல்லை. 

எல்லாவற்றையும் விட முடியுமா என்று தெரியவில்லை. முடிந்த வரை முயற்சிப்போம். எவ்வளவு விடுகிறோமோ அவ்வளவு சுகம். 


Tuesday, July 7, 2015

திருக்குறள் - தீயவையும் நிழலும்

திருக்குறள் - தீயவையும் நிழலும் 


கெடுதல் செய்பவன், அயோக்கியத்தனம் செய்வபன், பொய், புரட்டு, பித்தலாட்டம் செய்பவன் எல்லாம் நல்லா இருக்கான்.

நீதிக்கும், நேர்மைக்கும் பயந்து ஒழுக்கமாக வாழ்பவன் துன்பப்படுகிறான். அவனுக்குத்தான் ஆயிரம் சோதனைகள் வருகின்றன.

பேசாமல், நாமும் கெட்ட வழியில் போகலாமா என்று நல்லவனும் சிந்திக்கத் தலைப் படுகிறான்.

இந்த சிக்கல், இன்று நேற்று அல்ல, வள்ளுவர் காலம் தொட்டே இருந்திருக்கிறது.

வள்ளுவர் சொல்கிறார், தீமை செய்பவன் கெட்டுப் போவான் என்பது எவ்வளவு உறுதியானது என்றால் எப்படி நிழல் ஒருவனை விட்டு விலகாதோ அது போல உறுதியானது.

பாடல்

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று

பொருள் 

தீயவை = தீமையானவைகளை

செய்தார் = செய்தவர்கள்

கெடுதல் = அழிதல்

நிழல் தன்னை = நிழலானது

வீயாது = விடாமல் , அழியாமல்

அடி உறைந்து அற்று = காலைப் பற்றிக் கொண்டு வருவது போன்றது

சரி, அது என்ன நிழல் உவமை ?

நிழலை நாம் உருவாக்குவது இல்லை. அதுவே உண்டாகிறது.

தீயவை செய்தவனின் அழிவு தானே வரும். யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம்.

இராவணனை அழிக்கவா இராமன் கானகம் போனான் ? தன் மகனுக்கு முடி சூட்ட வேண்டும் என்று சின்னம்மா நினைத்து செய்த சதி, அவன் கானகம் போனான். எங்கேயோ இருந்த இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு போக, இராமன்  கையால் அழிந்தான்.  இராவணனை அழித்தது எது ? அவன் செய்த  தீவினை.

தீங்கு இழை இராவணன்
     செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
     ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
     படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் -

     அவனி காவலன்.

தசரதனுக்கு, கன்ன ஓரத்தில் ஒரு நரை முடி வந்தது. அதன் காரணம், இராவணன் செய்த தீவினை என்கிறார் கம்பர்.  அவன் செய்த தீவினை, தசரதனுக்கு  ஒரு நரைமுடியாக வந்தது.

இரணியனைக் கொல்ல நரசிம்மம் தூணுக்குள் ஒளிந்து இருக்கவில்லை. இங்கே இருக்கிறதா, இங்கே இருக்கிறதா என்று தேடித்  தேடி போய் , தூணை பிளந்து அழிவைக் தேடிக் கொண்டான் இரணியன்.

அது மட்டுமல்ல, 

இரவில் நிழல் இருக்காது. தவறு செய்யும் போது, பாவத்தின் வீரியம் தெரியாது. 

விடியும் போது நிழலின் நீளம்  தெரியும். 

முதலில் மிக நீளமாக இருக்கும். சூரியன் மேலே ஏற ஏற, நிழலின் நீளம் குறையும்.  தீமை செய்பவன் நினைப்பான், இத்தனை செய்தோம், யாரும் கண்டு பிடிக்கவில்லை,  இனிமேலா கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்று.  மாலை வரும்போது  நிழல் நீளும். பாவத்தின் வீரியம் கூடும். 

அது மட்டும் அல்ல, 

நிழல் நம்மை விட்டு ஒரு வினாடி கூட பிரிந்து இருக்காது. எப்போதும் நம்மை தொட்டுக் கொண்டே  தொடரும். எங்கு போனாலும் விடாது. காவி உடுத்து துறவறம் செல்லலாம், நாடு நாடு விட்டு நாடு போகலாம், நம் நிழல் நம்மை விடாது. 


சிந்தித்துப் பார்ப்போம்.



Sunday, July 5, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே



திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது இராமனுசர் நூற்றந்தாதி.

குருவின், ஆசாரியன் மூலமாகத்தான் இறைவனை அடைய முடியும் என்பது நம் முன்னவர்களின் முடிந்த முடிபு.

இறைவனைப் பற்றி நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் யாராவது சொன்னால்தானே புரியும்.

தந்தையையே தாய் சொல்லித்தானே தெரிந்து கொள்கிறோம்.

இறைவனை குரு தான் அடையாளம் காட்ட வேண்டும்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்றார் அருணகிரிநாதர்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.



அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் என்பார் மணிவாசகர். மணிவாசகருக்கு இறைவனே குரு வடிவாக வந்து உபதேசம் செய்தான். 

முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

திருவரங்கத்து அமுதனார், இராமானுசரை குருவாகக் கொண்டு, விண்ணப்பம் செய்கிறார்.....

"என் மனம் என்ற வண்டு உன் திருவடித் தாமரைகளை அடைந்தது, தேன் உண்ணும் பொருட்டு. அந்தத் தேனை நீ அந்த வண்டுக்கு அருளிட வேண்டும். அது அல்லாமல் வேறு எதையாவது தந்து என் மனதை மயக்கிடாதே "

என்று  வேண்டுகிறார்.

பாடல்

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.

சீர் பிரித்த பின்

போந்தது என் நெஞ்சு என்னும்  பொன் வண்டு உனது அடிப் போதில் ஒண் சீர்
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி, நின் பால் அதுவே 
ஈந்திட வேண்டும் இராமானுச! இது அன்றி ஒன்றும் 
மாந்த இல்லாது , இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.


பொருள் 

போந்தது = சென்று அடைந்தது

என் நெஞ்சு = என் மனம்

என்னும் = என்ற

பொன் வண்டு = பொன் வண்டு

 உனது அடிப் = உனது திருவடி என்ற

போதில் = மலரில். போது என்றால் மலர். போதொடு நீர் சுமந்து போவார் என்பார் திருநாவுக்கரசர்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.


ஒண் சீர் = சிறந்த

ஆம் தெளி தேன் உண்டு = தெளிந்த தேனை உண்டு

அமர்ந்திட வேண்டி = அமர்ந்திட வேண்டி

நின் பால் அதுவே = உன்னிடம் அதுவே

ஈந்திட வேண்டும் = அளித்திட வேண்டும்.  உயர்ந்தவர்கள் , தாழ்ந்தவர்களுக்குத் தருவதற்கு ஈதல் என்று பெயர்.

இராமனுக்கு பெயர் சூட்டும் போது, "இராமன் என்ற பெயர் ஈந்தான்" என்பார் கம்பர்.  அது எப்படி,  வசிட்டர் இராமனை விட உயர்ந்தவர் ? (இது பற்றி பின்னொரு நாளில் சிந்திப்போம் )

இராமானுச!  = இராமானுச

இது அன்றி ஒன்றும் =  இதைத் தவிர வேறு ஒன்றும்

மாந்த இல்லாது  = அருந்த  முடியாது

இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே = இனி வேறொன்றைக் காட்டி என்னை மயக்கி விடாதே.


இராமானுசா ! உன் திருவடி மட்டுமே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம் என்று  உருகுகிறார். 


திருக்குறள் - புணர்ந்து ஊடி நிற்போம் எனல்

திருக்குறள் - புணர்ந்து ஊடி நிற்போம் எனல் 


காதலனை பிரிந்து இருக்கும் போது, அவன் வந்தவுடன் என்ன பேசணும், எப்படி பேசணும், எப்படி ஊடுவது , எப்படி கூடுவது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பாள்.

ஆனால், அவன் வந்தவுடன் பேசும் வராது, நினைத்தது எல்லாம் மறந்து போகும்.

அந்த காதலும், காமமும் அப்படியே அவளை ஆக்ரமித்துக் கொள்கிறது.

என்ன செய்கிறோம் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள், தன் வசம் தான் இல்லை.

அப்படி காதலில், காமத்தில் கரையும் காதலிக்கு ஒரு உதாரணம் சொல்கிறார் வள்ளுவர்.

யாரும் எதிர்பார்க்க முடியாத உதாரணம்.

ஒரு முறை வள்ளுவர் சுடுகாட்டின் வழியே சென்றார். அங்கே ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. தீ அந்த பிணத்தை எரிக்கிறது. பிணத்தின் சதையெல்லாம் தீயில்  எரிகிறது. பிணமோ அது பற்றி ஒரு  கவலையும் இல்லாமல்  இருக்கிறது. ஒரு சிந்தனையும் இல்லை.

அது  போல,காமம் என்ற தீ பிடித்து சதையை உருக்கும் போது , புணர்வதும், ஊடுவதும் , பின் நிற்பதும் ஒன்றும் அவளுக்குத் தெரியவில்லை. அந்த உணர்ச்சியில் அவள் எரிகிறாள்.

பாடல்

நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ 

புணர்ந்தூடி நிற்போ மெனல்.


சீர் பிரித்த பின்

நிணம் தீயில் இட்டதன்ன நெஞ்சினார்க்கு உண்டோ 
புணர்ந்து ஊடி நிற்போம் எனல் ?


பொருள்

நிணம் = சதை

தீயில் = தீயில்

இட்டதன்ன = போட்டது போல (பிணம் எரிவது போல )

நெஞ்சினார்க்கு உண்டோ  = ,காதல்  காம வயபட்ட்வர்களுக்கு உண்டோ

புணர்ந்து = கூடி

ஊடி = ஊடி

நிற்போம் எனல் ? = பின்  அமைதி பெற்று நிற்போம் என்று நினைக்கும் நினைவு

முதலில் கூடல்
பின் ஊடல்
பின் ஒன்றும் அறியாமல் நிற்கும் , தன்னை மறந்து நிற்கும் நிலை

காமத்தை, காதலை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியுமா என்ன ?






Saturday, July 4, 2015

திருக்கடை காப்பு - தோடுடைய செவியன்

திருக்கடை காப்பு - தோடுடைய செவியன்


 சில பாடல்கள் எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும்   புதுப் புது அர்த்தங்களை தந்து கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட  ஒரு பாடல் தான் தோடுடைய செவியன் என்ற இந்தப் பாடல்.

பாடல் என்னமோ மிக எளிமையான ஒன்றுதான்

பாடியவர் திருஞான சம்பந்தர்.

சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு நாள் அவருடைய தந்தையார் சம்பந்தரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் நுழையும்முன் அங்குள்ள திருக்குளத்தில் நீராடிச்  செல்லலாம்  என்று குளத்திற்கு சென்றார். சம்பந்தரை குளக்கரையில் அமர்த்தி விட்டு  நீராடச்  சென்றார்.

அவர்   குளத்தில் மூழ்கியவுடன், தந்தையைக் காணோமே என்று குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை கேட்டு சிவனும் பார்வதியும் அங்கே  வந்தார்கள்.பார்வதி குழந்தைக்கு  பால் கொடுத்தாள். பின் அவர்கள் மறைந்து விட்டனர்.

நீராடி வந்த சம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைக் கண்டு, யார் பால் தந்தது என்று கேட்டார்.

குழந்தை பாடியது....



பாடல்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

 பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முன்னை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய  பெம்மான் இவன் அன்றே


பொருள்

தோடு உடைய செவியன் = காதில் தோட்டினை அணிந்தவன்

விடை ஏறி = எருதின் மேல் ஏறி

ஓர் = ஒரு

தூ = தூய

வெண் = வெண்மையான

மதி = நிலவை

சூடி = தலையில் சூடி

காடு உடைய = சுடுகாட்டில் உள்ள

சுடலைப் பொடி = சாம்பலை

பூசி = உடலெங்கும் பூசி

என் உள்ளம் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்

ஏடு உடைய மலரான் = ஏடுகளைக் கொண்ட தாமரை மலரில் இருக்கும் பிரமன்

முன்னை நாள்  = முன்பு ஒரு நாள்

பணிந்து =  பணிந்து

ஏத்த = போற்ற

அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடு உடைய = பெருமை உடைய

பிரமா புரம் = பிரமாபுரம் (பிரமன் வழி பட்ட இடம் )

மேவிய = சென்று இருந்த

பெம்மான் = பெருமான்

இவன் அன்றே = இவன் அல்லவா

சரி, இந்த பாடலில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

1. ஏன் தோடுடைய செவியன் என்று சொல்ல வேண்டும் ? கழல் அணிந்த அடியன் என்ற, நிலவு சூடிய தலையன் என்று சொல்லி இருக்கலாம் தானே ? குழந்தை அழுத போது , அந்த அழு குரலை கேட்டுத்தானே இறைவனும் இறைவியும்  வந்தார்கள். எனவே, காதை சிறப்பித்து "தோடுடைய செவியன்" என்று  ஆரம்பித்தார்.

2. ஏன் தோடுடைய செவியன் என்று சொல்ல வேண்டும் ? தோடு என்பது பெண்கள் அணியும் அணிகலன். தோடுடைய செவியள் என்று இருந்திருக்க வேண்டும். அப்படிச் சொல்லி  இருந்தால் , அவள் யார் என்ற கேள்வி எழும்.  தோடுடைய  செவியன் என்றால் உலகிலேயே ஒருவன் தான் உண்டு....   அது மாதொரு பாகனான சிவனையே  குறிக்கும். எனவே, தோடுடைய செவியன் என்று கூறினார்.

3. விடை ஏறி ஓர் - விடை என்றால் எருது. எருதின் மேல் ஏறி என்பது ஒரு பொருள். தோன்றிய பொருள் எல்லாம் அழியும். உயிர்கள், பொருள்கள் எல்லாம் அழியும் ஒரு நாள்.  இந்த பூமி, சூரியன், நிலவு, கோள்கள், இந்த அண்டம் அனைத்தும் ஒரு நாள் அழியும். அதற்கு மகா மகா சங்காரம் என்று  பெயர்.அந்த, ஊழிக் காலத்தில், எல்லாம் அழிந்த பின்னும் , அழியாத ஒன்று இருக்கும். அது தான் அறம் . நீதி. உண்மை.  அந்த உண்மை ஒரு எருதின் வடிவம் கொண்டு வந்தது. அதன் மேல் ஏறினான் சிவன் என்கிறது சைவ சித்தாந்தம். விடை என்பதற்கு answer  என்றும் ஒரு பொருள் உண்டு. அனைத்து கேள்விகளுக்கும்  விடையாய் இருப்பவன் அவன் என்ற பொருள் பட, விடை ஏறி   என்றார்.

4. தூ வெண் மதி சூடி = தூய்மை அகத்தை குறிப்பது. வெண்மை புறத்தை குறிப்பது. வெண்மை கண்ணுக்குத் தெரியும். தூய்மை கண்ணுக்குத்  தெரியாது.உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும், கறை இன்றி இருப்பவர்களை தன்னோடு சேர்த்துக் கொள்வான் என்ற பொருள பட - தூ வெண் மதி சூடி என்றார்.

5. காடுடைய சுடலை பொடி பூசி =   நாம் யாரையாவது பார்த்து அவர்களுக்கு நம் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வர வேண்டும் என்றால், தலை  சீவி, பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு போவோம் அல்லவா. இறைவனும், காட்டில் உள்ள சாம்பலை பூசிக் கொண்டு வருகிறான். எதற்கு எதற்கு ?

6. என் உள்ளம் கவர் கள்வன் = ஞான சம்பந்தரின் உள்ளத்தை கவர. கள்வன் என்றார் ஏன் என்றால், நம் அனுமதி இல்லாமலே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வான்.

இராமாயணத்தில், சீதை சொல்வாள், என்னையும் என் நாணத்தையும் கொண்டு செல்ல என் அனுமதி இல்லாமல் என் கண் வழி நுழைந்த கள்வன் அவன் என்று ராமனைப் பற்றி செல்லமாக கோபிக்கிறாள்.


பெண்வழி நலனொடும்,
    பிறந்த நாணொடும்,
எண் வழி உணர்வும் நான்
    எங்கும் காண்கிலேன்,
மண் வழி நடந்து, அடி
    வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர்
    கள்வனே கொல் ஆம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர். அவனே அருள் செய்தால் தான் உண்டு.

படிக்கப் படிக்க புது புது அர்த்தங்கள் ஊறும் பாடல்.



 








Thursday, July 2, 2015

சீவக சிந்தாமணி - கனை கடல் செல்வன்

சீவக சிந்தாமணி - கனை கடல் செல்வன் 


சிந்தாமணி என்பது ஒரு உயரிய மணி வகையைச் சார்ந்தது. காமதேனு, கற்பக விருட்சம், என்பதனோடு சேர்த்து கொள்ளத் தக்கது இது. சீவகன் இந்த காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன். அவன் பெயரையும் சேர்த்து சீவக சிந்தாமணி என்று குறிப்பிடப்படுகிறது.

எழுதியவர் திருத்தக்க தேவர். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டது.

இன்பச்சுவை (காமச் சுவை) சற்று அதிகமாக உள்ள காப்பியம். பின்னாளில், அநபாய சோழன் இதைப் படித்து, அந்த நூலின் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த போது அவனை மாற்ற தெய்வப் புலவர் சேக்கிழார் பெரிய புராணம் பாடியதாக வரலாறு.

அதில் இருந்து சில சுவையான பாடல்கள்....

கடல் பார்த்திருப்போம்.

நீண்ட கடற்கரை. அங்கங்கே சிறு சிறு மணல் குன்றுகள். அலை அடிக்கும் கரை. இவ்வளவுதானே ?

திருத்தக்க தேவருக்கு வேறு என்னவெல்லாமோ தோன்றுகிறது.

கடல் ஒரு காதலன் போலத் தெரிகிறது.

நுரை கொண்ட அலைகள் அவன் கழுத்தில் உள்ள மாலை போலத் தெரிகிறது.

அந்த மாலையை யார் போட்டது ?

கரை என்ற மங்கை. அங்கங்கே காணும் சிறு சிறு மணற்குன்றுகள் அவள் உடலில் உள்ள மேடு பள்ளங்கள் போலத் தெரிகிறது அவருக்கு.

பாடல்

திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமே
னுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான்
சரை1 யெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக்
குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே.

பொருள்

திரை பொரு = அலை பொருந்தும்

கனை கடற் = ஆராவாரம் மிக்க கடல்

செல்வன்  = என்னும் செல்வன்

சென்னிமேல் = தலையின் மேல்

நுரையெனு மாலையை = நுரை என்ற மாலையை

நுகரச் சூட்டுவான் = அவன் அனுபவிக்கும் படி சூட்டுவாள்

சரை1 யெனும் பெயருடைத் = சரை என்ற பெயருடைய

தடங்கொள் = மணல் மேடாகிய

வெம்முலைக் = அழகான மார்பு

குரை புனற் = ஒலிக்கும் நீராகிய

கன்னி = கன்னிப் பெண்

கொண் டிழிந்த தென்பவே. = கொண்டு வந்து சூட்டினாள்

என்ன ஒரு கற்பனை.

அடுத்த முறை கடற்கரையில் நிற்கும் போது , சீவக சிந்தாமணியை நினைக்க வேண்டும் !


அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?

அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?


யார் உறவினர் ?

பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, உடன்பிறப்புகள் எல்லாம் உறவுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு உண்மையான உறவு யார் தெரியுமா ?

நல்ல அறம் - தந்தை
நிறைந்த அறிவு - தாய்
நன்கு உணரும் கல்வி = தோழன்
துணிவு - தம்பி

இவை இல்லாத மற்றைய உறவுகள் பொய் உறவுகளே என்கிறது அறநெறிச்சாரம்.

பாடல்

நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி-அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

சீர் பிரித்த பின்

நல்ல அறம் என் தந்தை நிறை என் அம்மை நன்கு உணரும்  
கல்வி என் தோழன் துணிவு என் தம்பி -அல்லாத
பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ?  பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.

பொருள்

நல்ல அறம் என் தந்தை = நல்ல அறம் எனக்குத் தந்தை

நிறை என் அம்மை = நிறைவு, திருப்தி, அமைதி - என் தாய் 

நன்கு உணரும்  கல்வி என் தோழன் = கல்வியே எனக்குத் தோழன்

துணிவு என் தம்பி = என்னுடைய துணிவே எனக்குத் தம்பி

 அல்லாத = இவை அல்லாத

பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ?  = பொய்யான சுற்றத்தாரும் ஒரு பொருளா ? (இல்லை).

பொருளாய இச்சுற்றத் தாரில் எனக்கு = உண்மையான பொருளான இந்தத் சுற்றத்தாரில் எனக்கு
.

நமக்கு உறவு நாம் தான். அறம்தான் நம்மை வழி நடத்தும் தந்தை. நிறைவான , அமைதியான, திருப்தியான மனமே நமக்குத் தாய். நம் கல்வியே நமக்குத் தோழன். நம் துணிவே நமக்குத் தம்பி (உடன் பிறப்பு)

இதை விட்டு வெளியே சொந்தங்களைத் தேடுவது துன்பத்தைத் தான் தரும்.

நமக்கு நாமே உறவு.







Wednesday, July 1, 2015

பிரபந்தம் - பற்று அற்றவர்கள் பற்றுபவன்

பிரபந்தம் - பற்று அற்றவர்கள் பற்றுபவன் 


இறைவன் நாமத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை சொல்ல வேண்டும் ? காலையில் கொஞ்ச  நேரம், மாலையில் கொஞ்ச நேரம் சொல்லலாம்.  நாள்  கிழமை என்றால் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் சொல்லலாம்.

அவ்வளவுதானே ?

குலசேகர ஆழ்வார் சொல்கிறார் -  கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி நாக்கே தடித்துப் போக வேண்டுமாம். அத்தனை முறை சொல்ல வேண்டுமாம்.

நாக்கில் தழும்பு ஏற வேண்டுமாம்.


குதிரை வடிவில் வந்த கேசிகன் என்ற அரக்கனின் வாயை பிளந்து மகிழ்ந்தவனை, கடல் போல நிறம் கொண்டவனை, என் கண்ணனை, மலையைக் குடையாகப் பிடித்து அன்று பசுக்களை காத்த இடையர் தலைவனை, தேவர்களின் தலைவனை, தமிழ் மற்றும் வட மொழியின் இனிய பாசுரங்கள் போன்றவனை, பற்று அற்றவர்கள் பயிலும் , திருவரங்கத்தில் பள்ளி கொள்ளும் கோவிந்தனை நாக்கு தடிப்பு ஏறும்வரை சொல்லி, கைகளால் மலர் தூவி சேவிக்கும் நாள் என்றோ

பாடல்

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

சீர் பிரித்த பின்


மாவினை வாய் பிளந்து உகந்த மாலை 
வேலை வண்ணணை 
என் கண்ணணை 
அவன் குன்ற மேந்தி ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர் ஏற்றை  
அமரர்கள் தம்  தலைவனை 
அந்த தமிழ் இன்பப் பாவினை 
அவ் வடமொழியைப் 
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில்  பள்ளி கொள்ளும்
கோவினை
நாவுற அழுந்தி என்றன் கைகள் கொய் மலர் தூய் என்று கொலோ கூப்பும் நாளே

பொருள் 

மாவினை = குதிரையினை

வாய் பிளந்து = வாயைப் பிளந்து

உகந்த = மகிழ்ந்த

மாலை = திருமாலை

வேலை = கடல் போன்ற

வண்ணணை  = வண்ணம் கொண்டவனை

என் கண்ணணை = என் கண்ணனை

அவன் = அவன்

குன்ற மேந்தி = மலையை தூக்கி

ஆவினை = பசுக் கூட்டங்களை

அன்று = அன்றொரு நாள்

 உயக் கொண்ட = காப்பாற்றிய

ஆயர் ஏற்றை = இடையர்களின் தலைவனை
 
அமரர்கள் தம்  தலைவனை = தேவர்களின் தலைவனை

அந்த தமிழ் இன்பப் பாவினை = தமிழின் இனிமையான பாடல்கள் போன்றவனை

அவ் வடமொழியைப் = வடமொழி போன்றவனை

பற்று அற்றார்கள்  = பற்று இல்லாதாவர்கள்

பயில் = நாளும் அறிந்து கொள்ளும்

அரங்கத்து = திருவரங்கத்து

அரவணையில் = பாம்பு படுக்கையில்

பள்ளி கொள்ளும் = கண் வளரும்

கோவினை = தலைவனை

நாவுற அழுந்தி = நாக்கு தழும்பு ஏறும்படி அழுந்தி

என்றன் கைகள் = என்னுடைய கைகள்

கொய் மலர் = மலர்களை கொய்து

 தூய் = தூவுவது

என்று கொலோ கூப்பும் நாளே = என்று நான் வணங்குவேனோ ?

திருப்பி திருப்பி சொல்லி நாக்கில் தழும்பு ஏற வேண்டும்.

தேவை இல்லாதவைகளை நாளும் எவ்வளவு பேசுகிறோம்.

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறி என்பார் மாணிக்க வாசகர். கடவுள் இல்லை என்று சொல்லி சொல்லி  நாக்கில் தழும்பு ஏறிப் போய் இருக்குமாம்.

திரும்பச் திரும்பச் சொல்லுவதன் மூலம், நம்மை அறியாமலேயே நம் நாக்கு இறைவன் நாமத்தை  தானே சொல்லத் தொடங்கி விடும்  என்கிறார் சுந்தரர்.

நற்றவா உன்னை நான் மறக்கினும் என் நாக்கு மறக்காது, அது நமச்சிவாய என்றே சொல்லிக் கொண்டிருக்கும் என்கிறார். 

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் 
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


இறைவன் நாமத்தை சொல்லச் சொல்ல நமது வாய் அழகு அடையும் என்கிறார்  திருநாவுக்கரசு ஸ்வாமிகள்...

திருவாய் பொலியச்  சிவாயநம என்று நீறணிந்தேன் என்பார் ....

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.

இந்த பாடல் பாசுரம் பற்றி மேலும் சிந்திப்போம்....