Sunday, July 12, 2015

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 2 - கரந்து நின்ற நின் தன்மை

இராமாயணம் - இராமர் சரணாகதி - பாகம் 2 - கரந்து நின்ற நின் தன்மை 



கடலைத் தாண்டி எப்படி இலங்கை செல்வது என்று கண்டுபிடி என்று இராமன் வீடணனிடம் கூறினான்.

அதற்கு வீடணனும்,

"மறைந்து நிற்கும் உன் தன்மையை அந்தக் கடல் அறியும். உன்னுடைய குல முதல்வர்களால் படைக்கப் பட்டது இந்தக் கடல். எனவே, தனித்து இருந்து, இந்தக்  கடலிடம் ,  அதைத் தாண்டி செல்லும் வழியை வேண்டி , யாசித்துப் பெறுவாயாக " என்றான்.

பாடல்

கரந்து நின்ற நின் தன்மையை, அது, செலக்
கருதும்;

பரந்தது, உன் திருக் குல முதல் தலைவரால்;
பரிவாய்

வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி

வேறு

இரந்து வேண்டுதி, எறி திரைப் பரவையை' என்றான்.

பொருள்

கரந்து நின்ற நின் தன்மையை = மறைந்து நின்ற உன் தன்மையை

அது = அந்தக் கடல்

செலக் கருதும் = முழுவதும் அறியும்

பரந்தது = விரிந்தது

உன் திருக் குல முதல் தலைவரால் = உன் உயர்ந்த குல முதல்வர்களால்

பரிவாய் = அன்புடன்

வரம் தரும் = வரம் தரும்

இந்த மாக் கடல் = இந்த பெரிய கடல்

படை செல = படைகள் செல்ல

வழி = வழி

வேறு = வேறு இடத்தில் இருந்து (தனிமையில் இருந்து )

இரந்து வேண்டுதி = யாசகம் கேட்டு வேண்டிக் கொள்வாயாக

எறி திரைப் பரவையை' = அலை அடிக்கும் இந்தக் கடலை

என்றான். = என்றான் வீடணன்

குரு குல முதல் தலைவர் சகரர்.

சகரர் தோண்டியது என்பதால் அது சாகரம் என்று பெயர் பெற்றது என்று ஒரு கதை உண்டு.

மறைந்து நின்ற நின் தன்மையை அந்தக் கடல் அறியும் என்கிறான் வீடணன். கடல் அறிந்ததோ  இல்லையோ, வீடணனுக்குத் தெரிந்து இருக்கிறது இராமன் என்பவன்  திருமாலின் அம்சம் என்று.   வீடணனுக்குத் தெரிந்தது இராவணனுக்குத் தெரியவில்லை.

ஏன் ?

வீடணன் கற்ற கல்வி அவனை இறைவனிடம் கொண்டு சேர்த்தது. இறைவனை கண்டு கொள்ள உதவியது.

இராவணன் கற்ற கல்வி பதவி, அதிகாரம், போகம், பேராசை என்று இட்டுச் சென்றது.

கல்வி என்ற நீர் பாய சரியான வாய்கால் செய்து வைக்க வேண்டும். இல்லை என்றால்  அது எங்கு பாயும் என்று தெரியாது.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

என்று கேட்டார் வள்ளுவர் . கல்வியின் பயன் இறைவனை கண்டு அவனைத் தொழுவதுதான்  என்கிறார் வள்ளுவர்.

வீடணன் கண்டு கொண்டான். சரணடைந்தான்.

மேலும்,

இராமன், திருமாலின் அம்சம் என்று வீடனணுக்குத் தெரியும். இருந்தும், "நீ இந்தக்  கடலை இரந்து வேண்டுதி " என்றான்.

மனிதனாக அவதாரம் எடுத்து விட்டால் மனிதனைப் போல நடந்து வழி காட்ட வேண்டும்.  மகா பாரதத்தில் கண்ணன் போர் நடக்கும் போது தினமும் குதிரைகளுக்குத் கொள்ளும் நீரும் தருவானாம்.

தேரோட்டி என்றால் அதற்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்.

மேலும்,

வேறு இடத்தில் சென்று பிரார்த்தனை செய் என்றான். வேறு இடம் என்றால் தனித்த இடம்.

வழிபாடு என்பது தனிமையில் நடக்க வேண்டிய ஒன்று. எல்லோரும் அறிய , பட்டைக் கட்டிக் கொண்டு, நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு, கோவிலுக்குப் போய்  கும்பிடுவது அல்ல பக்தி. பக்தி என்பது தனி மனித அனுபவம்.



மேலும் சிந்திப்போம். 

No comments:

Post a Comment