Monday, January 2, 2017

இராமாயணம் - பரதன் , குகன் - கிட்டியதமர்

இராமாயணம் - பரதன் , குகன் - கிட்டியதமர் 


பொதுவாக இறைவனிடம் வேண்டுபவர்கள் "கடவுளே என்னை காப்பாற்று" என்று வேண்டுவார்கள். என்னை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்று, இந்த வறுமையில் இருந்து காப்பாற்று, இந்த வலியில் இருந்து காப்பாற்று, இந்த பிறவிப் பிணியில் இருந்து காப்பாற்று என்று வேண்டுவார்கள்.

கடவுளுக்கு ஏதாவது துன்பம் வந்து விடக் கூடாது , அவன் நன்றாக இருக்க வேண்டும் என்ற காதலில் பல்லாண்டு பாடினார் பெரியாழ்வார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

திருவாசகத்தை தொடங்கிய மணிவாசகர், "நமச்சிவாய வாழ்க" என்று  தொடங்கினார்.

தசரதனுக்கு ஈமக் கடன்களை முடித்துவிட்டு , இராமனை கண்டு அவனை நாட்டுக்கு அழைத்து வர  பரதன் புறப்படுகிறான். கங்கை ஆற்றின் ஒரு கரையில் தங்கி இருக்கிறான். மறு கரையில் குகன் நிற்கிறான்.

பரதன் ஏதோ இராமன் மேல் சண்டை போடத் தான் வந்து விட்டான் என்று எண்ணி கோபம் கொள்கிறான் குகன்.


பாடல்


கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
‘கிட்டியது அமர் ‘எனக் கிளரும் தோளினான்.

பொருள் 

கட்டிய = இடையில் கட்டிய

சுரிகையன் = உடை வாளை உடையவன்

கடித்த வாயினன் = உதட்டை கடித்துக் கொண்டு நிற்கிறான்

வெட்டிய மொழியினன் = கோபத்தில் பேச்சு கோர்வையாக வரவில்லை. துண்டு துண்டாக வந்து விழுகிறது.

விழிக்கும் தீயினன் = கண்கள் தீயைக் கக்குகிறது

கொட்டிய துடியினன் = துடி என்பது ஒரு தோற் கருவி. போர் முரசை கொட்டுகிறான்

குறிக்கும் கொம்பினன் = கொம்பு என்பது ஒரு காற்று கருவி. போர் சங்கம் ஊதி விட்டான்.

‘கிட்டியது அமர் ‘ = கிட்டியது போர்

எனக் கிளரும் தோளினான் = என்று கிளர்ந்து எழும் தோளை கொண்டவன்

இராமனுக்கு ஏதோ ஒரு தீங்கு என்று முடிவு செய்துவிட்டான். இராமனை காக்க , அவனுக்காக போர் செய்ய புறப்பட்டு விட்டான்.

கிட்டியது அமர் என்ற வார்த்தை கொஞ்சம் உற்று நோக்கத் தக்கது.

தமர் என்றால் உறவு.

அமர் என்றால் போர்

கிட்டியது என்ற வார்த்தையையும் அமர் வார்த்தையையும் சேர்த்து வாசித்தால்

கிட்டியதமர் என்று வரும். உறவு கிடைத்தது என்ற பொருளில்

பிரித்து வாசித்தால்

கிட்டியது அமர் - போர் கிடைத்தது என்ற பொருளில்

சேர்ந்து இருந்தால் உறவு. பிரித்துப் பார்த்தால் பகை. சேர்ந்து இருக்க படிக்க வேண்டும்.

"சேர வாரும் செகத்தீரே" என்றார் தாயுமானவர்.

"ஒன்றாகக் காண்பதுவே காட்சி" என்றார் ஒளவையார்

இராமன் மேல் கொண்ட அளவுகடந்த பாசத்தால் அவனுக்கு ஒரு தீங்கு வந்து விடக் கூடாதே என்று குகன் தவிக்கிறான்.


அங்கே பாரதனோ...

1 comment:

  1. இந்தப் பாடலில் என்ன ஒரு வெடுக்கென்ற சந்தம்!

    ReplyDelete