Wednesday, May 30, 2018

நாலடியார் - நிலையறியா ஆமை போல்

நாலடியார் - நிலையறியா ஆமை போல் 


அவன் ஒரு பேதை என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். பேதை என்றால் என்ன ?

வருகின்ற துன்பத்தை அறியாமல் மகிழ்ந்து இருப்பவன் பேதை.

சிகரெட் பிடிக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அதனால் வரப் போகும் துன்பத்தை அறியாமல் அந்த சந்தோஷத்தின் பின்னால் போகிறவன் பேதை.

மது அருந்துவதும் அப்படித்தான்.

சூதாடுவது.

படிக்கின்ற காலத்தில், படிக்காமல் நண்பர்களோடு ஊர் சுற்றிக் கொண்டிருப்பது....

இதெல்லாம் பேதைமை.

வருகின்ற துன்பம் அறியாமல், ஆடிப் பாடி சந்தோஷமாக பொழுதை கழிப்பது பேதைமை.

கடலில் மீன் பிடிக்க செல்பவர்கள், சில சமயம் ஆமையும் பிடித்து வருவார்கள்.

பெரிய அண்டாவில்,  குளிர்ந்த நீரை விட்டு, அந்த அண்டாவில் ஆமையை நீந்த விட்டு, அண்டாவிற்கு அடியில் நெருப்பை மூட்டி விடுவார்கள். குளிர்ந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடு ஏறும். வெது வெதுப்பான நீரில் , அந்த ஆமை அங்கும் இங்கும் நீந்தி மகிழும்.  நீர் சூடு ஏறி கொதிக்கக் தொடங்கும்.  சூடு பொறுக்க மாட்டாமல் ஆமை  வெந்து மடியும்.

அது பேதைமை.

சரி, இது மட்டும் தானா பேதைமை ?

இறப்பு வரும். காலன் வருவான். அது தெரியாமல், ஆடிப் பாடி மகிழும் நாம் செய்வதற்கு என்ன பெயர் வைக்கலாம் ?

பாடல்

கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.


பொருள்

கொலைஞர்  = கொலையில் வல்லவர்கள்

உலையேற்றித் = உலையில் நீரை ஏற்றி

தீமடுப்ப = தீ மூட்டி வைத்த பின்

ஆமை = அதில் மிதக்கும் ஆமை

நிலையறியா = தன் நிலை அறியாமல்

தந்நீர் = அந்த நீர்

படிந்தாடி யற்றே = படிந்து ஆடியற்றே

கொலைவல் = கொலையில் வல்ல

பெருங்கூற்றம் = பெரிய கூற்றுவன் (எமன்)

 கோள்பார்ப்ப = நாள் பார்த்து வருவான்

ஈண்டை = இங்கு

வலையகத்துச் = வலையில் மாட்டி

செம்மாப்பார் =  சிறப்பாக மகிழ்ந்து இருப்பவர்

மாண்பு = செயல்

வரும் துன்பம் அறியாமல் , என்னா ஆட்டம்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/05/blog-post_30.html

No comments:

Post a Comment