Showing posts with label Villi Bharadham. Show all posts
Showing posts with label Villi Bharadham. Show all posts

Tuesday, November 26, 2013

வில்லிபாரதம் - உணர்வில் ஒன்று படுக

வில்லிபாரதம் -  உணர்வில் ஒன்று படுக 


பாரதத்தில் மிக முக்கியமான, ரொம்பவும்  அறிந்திராத ஒரு இடம்.

துரோணன் போர்க்களத்தில்  இருக்கிறான். அவனை வெல்வது யாராலும் முடியாது. போர் நடந்து கொண்டே  இருக்கிறது.

அப்போது ஒரு நாள் ....

மரிசீ, அகத்தியர் போன்ற ஏழு முனிவர்கள் துரோணரிடம் வந்து "நீ என்ன  கொண்டிருக்கிறாய்? இது நீ செய்யும் வேலை அல்ல. இதை எல்லாம் விடு. விண்ணுலகு சேர வேண்டாமா, உன் மனதில் உள்ள குழப்பத்தை விடுத்து , உணர்வில் ஒன்று படு " என்று உரிமையோடு சொன்னார்கள்.

அவர்கள் சொன்னவுடன் துரோணனுக்கு உண்மை விளங்கிற்று. அவனுக்கு போரில் உள்ள முனைப்பு குறைந்தது. துரோணன் உயிர் துறக்கும் காலம் வந்தது என்று உணர்ந்த கண்ணன் , துரோணனை கொல்ல தர்மனுக்கு ஒரு வழி சொல்லித் தந்தான்.

பாடல்


தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும் 
விடுக; வெஞ் சினமும் வேண்டா; விண்ணுலகு எய்தல் வேண்டும்; 
கடுக, நின் இதயம்தன்னில் கலக்கம் அற்று, உணர்வின் ஒன்று 
படுக!' என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர், பவம் இலாதார். 

பொருள்

தொடு கணை வில்லும் = அம்பை தொடுக்கின்ற வில்லும்

வாளும் = வாளும்

துரகமும் = குதிரையும்

களிறும் = யானையும்

தேரும் = தேரும்

விடுக = விட்டு விடு

வெஞ் சினமும் வேண்டா = கொடிய சினமும் வேண்டாம்

விண்ணுலகு எய்தல் வேண்டும் = விண்ணுலகை அடைய வேண்டும்

கடுக = விரைவாக

 நின் இதயம்தன்னில் = உன் இதயத்தில்

கலக்கம் அற்று = கலக்கத்தை அற்று

உணர்வின் ஒன்று படுக!'= உணர்வில் ஒன்று படுக

என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர் = உரிமையோடு கூறினார்கள்

பவம் இலாதார் = பிறப்பு இல்லாதவர்கள் (அந்த முனிவர்கள்).

இது துரோணனுக்கு மட்டும் சொல்லப் பட்டது அல்ல.

உங்களுக்கும் எனக்கும் சொல்லப்பட்டது.

நாம் செய்யாத யுத்தமா ? நாளும் நாளும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

எதற்கு இந்த போராட்டம் ? எதை அடைய ?

அரசை துரியோதனன் அடைந்தால் என்ன ? தர்மன் அடைந்தால் என்ன ? துரோணனுக்கு அதில் என்ன ஆகப் போகிறது ?

துரோணனின் நோக்கம் என்ன ? விண்ணுலகு அடைவது ? அதற்க்கு இந்த யுத்தம் உதவுமா ?

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் நோக்கம் நிறைவேற உதவுமா என்று பாருங்கள்.

தேவை இல்லாத யுத்தங்களில் ஈடு படாதீர்கள்.

Monday, November 25, 2013

வில்லிபாரதம் - முன் நின்ற நெடுமாலே

வில்லிபாரதம் - முன் நின்ற நெடுமாலே 


துரியோதனனிடம் தூது போவதற்கு முன்னால் பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் கண்ணன் அவர்களின் எண்ணத்தை கேட்டு அறிகிறான்.

கடைசியில் பாஞ்சாலியிடம் வருகிறான்.....

"கண்ணா, இரணியன் தன் மகனான பிரகலாதனை வெகுண்டு தூணை போது அதில் இருந்து வெளிப்பட்டு பிரகலாதனை காத்தாய், வாய் பேச முடியாத யானை "ஆதி மூலமே " என்று அழைத்த போது வந்து காத்தவனே " என் மேல் கருணை இல்லையா என்று கேட்கிறாள் ...

பாடல்

சாலக் கனகன் தனி மைந்தனை முனிந்த 
காலத்து, அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்! 
மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு 
நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே!

பொருள்

சாலக் = சிறந்த

கனகன் = பொன்னிறமான நிறம் கொண்ட இரணியன்

தனி மைந்தனை முனிந்த = தனித்துவமான மகனான பிரகலாதனை கோபித்த போது


காலத்து = அந்த நேரத்தில்

 அவன் அறைந்த கல்-தூணிடை வந்தாய்! = அவன் அறைந்த கல் தூணில் இருந்து வெளி வந்தாய்

மூலப் பேர் இட்டு அழைத்த மும் மத மால் யானைக்கு = ஆதி மூலமே என்று யானை உன்னை அழைத்த போது

நீலக் கிரிபோல் முன் நின்ற நெடுமாலே! = நீல மலை போல் முன் நின்ற நெடுமாலே


அவளுக்கு கண்ணன் என்ன சொன்னான் தெரியுமா ?

Sunday, November 24, 2013

வில்லிபாரதம் - உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன்

வில்லிபாரதம் - உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன் 



பாண்டவர்கள் சார்பாக கண்ணன் தூது வந்து, விதுரன் அரண்மனையில் தங்கி இருக்கிறான்.

மறு நாள் துரியோதனனை அரசவையில்  காணவேண்டும்.

அவன் வருவதற்கு முன்னால் துரியோதனன் ஆலோசனை செய்கிறான்.

அவனுக்கு சகுனி துர்போதனை செய்கிறான்.

"நாளை கண்ணன் வந்தால் அவனுக்கு மரியாதை செய்யாதே...." என்று அவனை தூண்டி விடுகிறான்.

துரியோதனன் மனதில் சினம் ஏறுகிறது.

தன்  சபையில் உள்ள மன்னர்களை எல்லாம் பார்த்து கூறுகிறான்....

"நாளைக்கு அந்த இடை சாதியில் பிறந்த கண்ணன் இந்த சபைக்கு வரும் போது , யாராவது எழுந்து அவனை வணங்கி அவனுக்கு மரியாதை செய்தால் உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன் "

என்று மிரட்டுகிறான்.

பாடல்

காவன்மன்னவர்முகங்கடோறுமிருகண்பரப்பியமர்கருதுவோ
ரேவலின்கண்வருதூதனாமிடையனின்றுநம்மவையிலெய்தினால்
ஓவலின்றியெதிர் சென்று கண்டுதொழுதுறவுகூரிலினியுங்களூர்
தீவலஞ்செயவடர்ப்பனென்று நனிசீறினான் முறைமைமாறினான்.


படிக்கவே கடினமாக இருக்கிறதா ? கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

காவல் மன்னவர் முகங்கள் தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர் 
ஏவலின் கண் வரும் தூதனாம் இடையன் இன்று நம் அவையில் ஏய்தினால் 
ஓவலின்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்களூர் 
தீ வலம் செய்ய அடர்பேன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் 

அப்பாட...ஒரு வழியா சீர் பிரிச்சாச்சு...இனிமேல் அர்த்தம் புரிவது எளிது...

காவல் மன்னவர் = நாட்டையும், மக்களையும் காவல் செய்யும் மன்னவர்கள்

முகங்கள் தோறும் = ஒவ்வொருவர் முகத்தையும் தனித் தனியாக நோக்கி

இரு கண் பரப்பி = தன் இரண்டு கண்களாலும் உற்று நோக்கி

அமர் கருதுவோர்  = சண்டை விரும்பும்  (பாண்டவர்களின்)

ஏவலின் கண் வரும் = ஏவலில் வரும்

தூதனாம் = தூதனாம்

இடையன் = இடை சாதியில் தோன்றிய கண்ணன்

இன்று நம் அவையில் ஏய்தினால் = இன்று நம் அவைக்கு வந்தால்

ஓவலின்றி = ஒழிதல் இன்றி

எதிர் சென்று கண்டு = எதிரில் சென்று

தொழுது = வணங்கி

உறவு கூறில் = உறவு கூறி, நலம் விசாரித்தால்

இனி = இனி

உங்களூர் = உங்கள் ஊரை

தீ வலம் செய்ய அடர்பேன் = தீ வைத்து கொளுத்தி விடுவேன்

என்று  = என்று

நனி = மிகவும்

சீறினான் = கோபப் பட்டான்

முறைமை மாறினான்  = வழி தவறியவன்


Saturday, November 23, 2013

வில்லிபாரதம் - இறைவன் எங்கு வருவான்

வில்லிபாரதம் - இறைவன் எங்கு வருவான் 


பாண்டவர்களுக்காக , கண்ணன் துரியோதனிடம் தூது போகிறான். அஸ்தினாபபுரம் வந்து விட்டான்.

எங்கு தங்குவது ?

துரியோதனன் மாளிகை இருக்கிறது, பீஷ்மர், துரோணர், சகுனி, துச்சாதனன் இவர்கள் மாளிகை எல்லாம் இருக்கிறது.

கண்ணன் எங்கு தங்குவான் ?

செல்வமும், படை பலமும், புகழும், நிறைந்த துரியோதனன் அரண்மனையிலா ?

வயதில் மூத்தவர், பிரமச்சரிய விரதம் பூண்ட பீஷ்மர் அரண்மனையிலா ?

கல்வி கேள்விகளிலும் , வில் வாள் வித்தையிலும் சிறந்த துரோணர் அரண்மனையிலா ?

இல்லை.

இங்கு எங்கும் தங்கவில்லை.

இவை எதுவும் இல்லாத நீதிமான், அற வழியில் நிற்கும் விதுரன் அரண்மனையில் தங்கினான்.

விதுரனே சொல்கிறான்....

"கண்ணா, நீ பாற்கடலில் தங்குவாய், ஆதிசேஷனை பாயாகக் கொண்டு தூங்குவாய், ஆல் இலையில் துயில்வாய், வேதங்களில் நீ இருப்பாய், நீ இங்கு வருவதற்கு என் குடிசை என்ன மாதவம் செய்ததோ "

பாடல்

'முன்னமே துயின்றருளிய முது பயோததியோ! 
பன்னகாதிபப் பாயலோ! பச்சை ஆல் இலையோ! 
சொன்ன நால் வகைச் சுருதியோ! கருதி நீ எய்தற்கு 
என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான்.

பொருள்

'முன்னமே = முன்பே

 துயின்றருளிய = துயின்று அருளிய

முது பயோததியோ! = பழமையான பாற்கடலோ

பன்னகாதிபப் பாயலோ!  = பன்னக அதிபன் பாயாலோ. பாம்புகளுக்கு அரசனான ஆதி சேஷன் என்ற பாயோ ?

பச்சை ஆல் இலையோ! = பச்சை ஆல் இலையோ ?

சொன்ன நால் வகைச் சுருதியோ! = நான்கு வேதங்களோ

கருதி நீ எய்தற்கு  = நீ வந்து இருப்பதற்கு

என்ன மா தவம் செய்தது, இச் சிறு குடில்!' என்றான் = என்ன மாதவம் செய்தது என் இந்த சிறு குடில்


இறைவனை தேடி நீங்கள் போக வேண்டாம். அவன் உங்களை தேடி வருவான். 

எப்போது என்று இந்த பாடல் சொல்கிறது. 


Friday, November 22, 2013

வில்லி பாரதம் - நாடு இரந்தோம்

வில்லி பாரதம் - நாடு இரந்தோம் 


வல் என்றால் சூதாட்டம்.

வல்லினால் இழந்த நாட்டை வில்லினால் பெறுவதை விட ஒரு சொல்லினால் பெறுவது நல்லது என்று எண்ணி, கண்ணன் , பாண்டவர்கள் சார்பாக தூது போக தயாராகிறான்.

போகும் முன் பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் எண்ணத்தை கேட்கிறான்.

கண்ணன்: நகுலா நீ என்ன சொல்கிறாய் ?

நகுலன்: கண்ணா, நாங்கள் எவ்வளவோ அவமானப் பட்டு விட்டோம். பட்டதெல்லாம் போதும். இப்ப நீ போய் நாடு கேட்டு அவன் தராவிட்டால் "நாடு பிச்சை கேட்டவர்கள் " என்ற அவப் பெயரும் வந்து சேரும்.

கண்ணன்: அதனால் ?

நகுலன்: நாடு பிச்சை கேட்பதை விட , சண்டை போட்டு நாட்டை வெல்லலாம்.

பாடல்

கேவலந்தீர் வலியபகை கிடக்கமுதற் கிளர்மழைக்குக்
                               கிரியொன்றேந்து, 
கோவலன் போயுரைத்தாலுங் குருநாடுமரசுமவன்
                             கொடுக்கமாட்டான், 
நாவலம்பூதலத்தரசர் நாடிரந்தோமென நம்மை நகையாவண்ணங், 
காவலன்றன் படைவலியுமெனது தடம்புயவலியுங் காணலாமே.


சீர் பிரித்த பின்


கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்றை ஏந்திய 
கோவலன் போய் உரைத்தாலும் குரு நாடும் அரசும் அவன் கொடுக்க மாட்டான் 
நாவலம் பூதலத்து அரசர் நாடு இரந்தோம் என நம்மை நகையா வண்ணம் 
காவலன் தன் படை வலியும் எனது தடம் புய வலியும் காணலாமே 

பொருள்

கேவலம் தீர் = சிறுமை தீர. பெரிய என்று பொருள்

வலிய பகை கிடக்க = வலிமையான பகை கிடக்க

முதல் கிளர் மழைக்கு = முன்பு ஆயர்பாடியில் கிளர்ந்து எழுந்த மழைக்கு

கிரி ஒன்றை ஏந்திய  = கோவர்த்தன கிரியை குடை போல ஏந்திய

கோவலன் போய் உரைத்தாலும் = கோவலனான கண்ணன் போய் சொன்னாலும்

குரு நாடும் அரசும் அவன் கொடுக்க மாட்டான் = நாட்டையும், அதை ஆளும் அரச உரிமையும் அவன் (துரியோதனன்) கொடுக்க மாட்டான்


நாவலம் பூதலத்து = இந்த பூமியில் உள்ள

அரசர் = அரசர்கள் எல்லோரும்

நாடு இரந்தோம் = நாட்டை பிச்சையாக கேட்டோம்

என நம்மை நகையா வண்ணம்  = என்று நம்மை பார்த்து சிரிக்காமல் இருக்க

காவலன் தன் படை வலியும் = நாட்டுக் காவலன் ஆன துரியோதனின் படை வலியும்

எனது தடம் புய வலியும் காணலாமே  = என் தோள்களின் வலிமையையும் கானாலாமே



Wednesday, November 20, 2013

வில்லிபாரதம் - ஐந்தாவது வேதம்

வில்லிபாரதம் - ஐந்தாவது வேதம் 


இதிகாசங்கள், வேதம் முதலிய மறை நூல்களில் உள்ளவற்றை விரித்து கூற வந்த நூல்கள்.

 சிறிதாக,கண்ணுக்குப் தெரியாதவற்றை பார்க்க உதவும் பூதக் கண்ணாடி (lens ) போல வேதங்களில் உள்ளவற்றை நாம் புரிந்து கொள்ள கதை வடிவில் எடுத்துத் தருவது புராணங்களும் இதிகாசங்களும்.

சத்யமேவ ஜெயதே என்ற ஒரு வரியை விரித்துச் சொன்னது அரிச்சந்திர புராணம். 

எல்லோரும் சகோதரர்களை போல ஒன்றாக அன்போடு வாழ  வேண்டும் என்று கூற வந்தது இராமாயணமும் மகாபாரதமும்.

இராமாயணம் அன்பின் பெருமையை நேரடியாக சொன்னது.

பாரதம் அன்பின்மையால் வரும் தீமைகளை எடுத்துச் சொன்னது. எனவே பாரதத்தை எதிர் மறை காப்பியம் என்று சொல்வாரும் உண்டு.

மகா பாரதத்தை ஐந்தாவது வேதம் என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு வாழ்க்கைக்கு வேண்டிய உணமைகளை, கடமைகளை சொல்லித் தருவது பாரதம்.

பாரதத்தில் உள்ள பாடல்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

பலா பழம் சற்று கடினமானதுதான். அதற்காக அதன் சுவையான சுளைகளை விட்டு விட முடியுமா ?

முள் இருக்கும். கை எல்லாம் பிசு பிசு என்று ஒட்டும். ஆனால் பலா சுளை கிடைத்து விட்டால்  மத்தது எல்லாம் மறந்து விடும்.

சுளைகளை எடுத்து தருகிறேன். சுவைத்துப் பாருங்கள்.....:)

மகா பாரதத்தை பிள்ளையாரே மேரு மலையில் தன்னுடைய தந்தத்தை வைத்து எழுதினார் என்று ஒரு கதை உண்டு.

என்ன அர்த்தம் ?

கல்லின் மேல் எழுத்துக்கு நேர் என்று அவ்வை சொன்னது போல் என்று வரை இமய மலை இருக்குமோ அன்று வரை பாரதக் கதையும் இருக்கும்.

எழுதியது ஞானக் கடவுளான பிள்ளையார் என்று கூறுவது அது ஒரு மிக உயர்ந்த ஞான நூல் என்று அறிவுறுத்துவதர்க்காக.

வில்லி பாரதத்தின் சிறப்பு பாயிரம்....

நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ  ழுத்தாணிதன்
கோடாக வெழுதும்பி ரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.

என்ன முள் குத்துகிறதா ? 

சீர் பிரிக்கலாம்  

நீடாழி உலகத்து  மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே 
வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.


பொருள்


நீடாழி = ஆழி என்றால் கடல். ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள. நீடாழி , நீண்ட கடலால் சூழப் பட்ட 

உலகத்து = உலகில்

மறை = வேதங்கள்

நாலோடு = நான்கோடு

ஐந்து = ஐந்தாவது வேதம்

என்று = என்று

நிலை நிற்கவே  = நிலைத்து நிற்கவே

வாடாத = தளராத

தவ = தவத்தையும்

வாய்மை = வாய்மையும்

முனி ராசன் = வியாசன்

மாபாரதம் = மா பாரதம்

சொன்ன நாள் = சொன்னபோது


ஏடாக = அதை எழுதும் ஏடாக

வட மேரு வெற்பாக = வடக்கில் உள்ள மேரு மலையும்

வங் = வன்மையான

கூர் எழுத்தாணி = கூர்மையான எழுத்தாணி 

தன் = தன்னுடைய

கோடாக = தந்தத்தை

எழுதும் = கொண்டு எழுதும்

பிரானைப் = பிரான் என்றால் பிரியாதவன். பக்தர்களை விட்டு என்றும் பிரியாதவன்

பணிந்து = பணிந்து

அன்பு கூர்வாம் = அன்பு செலுத்துவோம். பயம் இல்லை, பக்தி இல்லை ...இறைவன் மேல் அன்பு செலுத்துவோம்

அரோ = அசைச் சொல் 

Wednesday, November 13, 2013

வில்லி பாரதம் - அவனிடம் ஏன் போக வேண்டும் ?

வில்லி பாரதம் - அவனிடம் ஏன் போக வேண்டும் ?


பாண்டவர்களை அஸ்தினா புரத்தில் தான் கட்டிய மண்டபத்தை காண வரும்படி ஓலை அனுப்புகிறான் துரியோதனன்.

அந்த ஓலையை திருதராஷ்டிரனை கொண்டு கையெழுத்து இட வைக்கிறான்.

அந்த ஓலையை விதுரனிடம் கொடுத்து அனுப்புகிறான்.

ஓலையை பெற்ற தருமன், தம்பிகளிடம் கேட்கிறான் "போகலாமா , வேண்டாமா " என்று.

அர்ஜுனன் போக வேண்டாம் என்று கூறுகிறான் ....


பாடல்

தேற லார்தமைத் தேறலுந்தேறினர்த் தேறலா மையுமென்றும் 
மாற லாருடன் மலைதலு மாறுடன்மருவிவாழ் தலுமுன்னே 
ஆற லாதன வரசருக் கென்றுகொண்டரசநீ தியிற்சொன்னார் 
கூற லாதன சொல்வதென் செல்வதென்கொடியவ னருகென்றான்.

சீர் பிரிக்காமல் புரியாது....:)

தேறலார் தம்மை தேறலும் தேறினார் தேறலாமையும் என்றும் 
மாறலார் உடன் மலத்தலும் மாறுடன் மருவி வாழ்தலும் முன்னே 
ஆறு அலாதன அரசர்க்கு என்று கொண்ட அரச நீதியில் சொன்னார் 
கூறலாதன சொல்வதென் செல்வதென் கொடியவன் அருகு என்றான் 

நம்பாதவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது
நட்பு கொண்டவர்களை நம்பாமல் இருக்கக் கூடாது
நண்பர்களோடு சண்டை போடக் கூடாது
பகைவர்களோடு நட்பு பாராட்டக் கூடாது
இவை அரசர்களுக்கு என்று சொல்லப் பட்ட வழி
இதை விட்டு அவனிடம் போவது என்ன ?


பொருள்

தேறலார் = நம் நம்பிக்கையில் தேராதவர்கள்

தம்மை = அவர்களை

தேறலும் = ஏற்றுக் கொள்ளுதலும்

தேறினார் = ஏற்றுக் கொண்டவர்களை (நண்பராக)

தேறலாமையும் = நம்பாமல் இருப்பதும்

என்றும் = எப்போதும்

மாறலார் உடன் = மாறாமல் ஒன்றாக நம்முடன் இருப்பவர்களிடம்

மலத்தலும் = சண்டை இடுதலும்


மாறுடன் = மாறு பட்டவர்களுடன் (பகைவர்களுடன் )

மருவி வாழ்தலும் = ஒன்றாக வாழ்தலும்

முன்னே  = முன்பே

ஆறு அலாதன = ஆறு என்றால் வழி. வழி அல்லாதன

அரசர்க்கு என்று கொண்ட = அரசர்களுக்கு என்று

அரச நீதியில் சொன்னார்  = அரச நீதியில் சொன்னார்

கூறலாதன சொல்வதென் = அதில் கூறாதவற்றை நீ (தருமனே) ஏன் சொல்கிறாய். அறம் இல்லாததை ஏன் கூறுகிறாய்

செல்வதென் = செல்வது என் ? ஏன் போக வேண்டும் ?

கொடியவன் அருகு என்றான் = கொடியவனான துரியோதனன் அருகில் என்றான்

கொடியவர்கள் கிட்ட கூட போகக் கூடாது.



Tuesday, November 12, 2013

வில்லி பாரதம் - தமிழ் மகள் வாழ்த்து

வில்லி பாரதம் - தமிழ் மகள் வாழ்த்து 




பொருப்பிலேபிறந்துதென்னன்புகழிலேகிடந்துசங்கத்து
இருப்பிலேயிருந்துவைகையேட்டிலேதவழ்ந்தபேதை
நெருப்பிலேநின்றுகற்றோர்நினைவிலேநடந்தோரேன
மருப்பிலேபயின்றபாவைமருங்கிலேவளருகின்றாள்.

தமிழை தாயாகத்தான் எல்லோரும் சொல்லி வந்திருக்கிறார்கள்.

வில்லிபுத்துரார் தமிழை மகளாக, சின்ன பெண்ணாக பார்கிறார்.

தமிழ் தாய் என்கிறோம்.

கன்னித் தமிழ் என்கிறோம்.

வில்லியார் தமிழை மகளாகப் பார்க்கிறார்.

பொருப்பிலே பிறந்து = பொருப்பு என்றால் மலை. பொதிகை மலையில் அகத்தியனிடம் இருந்து பிறந்து

தென்னன் புகழிலே கிடந்து = பாண்டிய மன்னர்களின் புகழிலிலே தங்கி இருந்து

சங்கத்து இருப்பிலே இருந்து = மூன்று சங்கத்திலும் நிலையாக இருந்து 

வைகை யேட்டிலேதவழ்ந்த = புனல் வாதம் செய்த போது, தமிழ் பாடல்களை ஏட்டில் எழுதி வைகை வெள்ளத்தில் விட்டார்கள். அது கரையேறி வந்தது.

பேதை = சின்னப் பெண்

நெருப்பிலே நின்று = அனல் வாதம் செய்யும் போது, ஏட்டினை தீயில் இடுவார்கள். நல்ல தமிழ் பாடல்களை கொண்ட ஏடுகள் தீயில் கருகாமல் இருக்கும். அப்படி வளர்ந்த தமிழ். 

கற்றோர் நினைவிலே நடந்தோரேன = கற்றவர்கள் நல்ல தமிழ் பாடல்களை நினைவில் வைத்து இருப்பார்கள். அவர்கள் நினைவிலே நடந்து வருவாள்.


மருப்பிலேபயின்றபாவைமருங்கிலேவளருகின்றாள் = திருமால் பன்றியாக உருவம் எடுத்து உலகை தன் கொம்பில் தூக்கி காத்த போது (மருப்பு = கொம்பு ), அதனுடன் சேர்ந்து பிறந்து வளர்ந்த தமிழ். (மருங்கு = உடன் )





Saturday, October 19, 2013

வில்லி பாரதம் - புறம் சுவர் கோலம் செய்வான்

வில்லி பாரதம் - புறம் சுவர் கோலம் செய்வான் 


புகழ் அடைவதற்கு தானம் செய்வது சிறந்த வழி. தானம் என்பது பொருளாக இருக்க வேண்டும் என்று அல்ல. நல்ல சொல், கல்வி தானம், என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

திருக்குறளில் புகழ் என்று ஒரு அதிகாரம். அது ஈகை என்ற அதிகாரத்தின் பின் வருகிறது. வள்ளுவர் ஏன் அப்படி வைத்தார் என்பதற்கு பரிமேலழகர் உரை எழுதுகிறார் 

"புகழ் என்பது இறவாது நிற்கும் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின் , அதன்பின் வைக்கப்பட்டது" 

ஈதலினால் புகழ் வரும். 

கர்ணனுக்கு எவ்வளவுதான் வலிமை இருந்தாலும், வித்தை இருந்தாலும் தன் குலம் பற்றி அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. தகப்பன் பெயர் தெரியாதவன் என்று அவன் மேல் உள்ள பழி இருந்து கொண்டே இருந்தது. உள்ளுக்குள் அது அவனை அரித்துக் கொண்டு இருந்தது. 

அந்த பழியை போக்கி, புகழ் அடைய கர்ணன் தானம் செய்யத் தொடங்கினான். நாளடைவில் அது அவனது இயற்கை குணமாகி விட்டது. கடைசியில், உயிர் போகும் நேரத்தில், செய்த தானம் அத்னையும் கண்ணனுக்கு தானம் செய்தான். 

இது உண்மையா ? கர்ணன் தன் பழி போக்கவா தானம் செய்தான் ? அது அவனது பிறவி குணம் இல்லையா ? பழி போக்கவா தானம் செய்தான் ?

வில்லி புத்துராழ்வார் சொல்கிறார்..."புறம் சுவர் கோலம் செய்வான்" என்று. உள்ளுக்குள் ஆயிரம் அழுக்கு , வெளி சுவரை அழகு படுத்தி வைப்பது மாதிரி, என்று அர்த்தம். 

துரியோதனன் சபை. கண்ணன் தூது வரப் போகிறான் என்ற செய்தி வந்திருக்கிறது. என்ன செய்வது என்று ஆலோசனை நடக்கிறது. அப்போது கர்ணன் சொல்கிறான் என்று ஆரம்பிக்கிறார் வில்லியார்...

பாடல் 

இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து, எதிர்ந்த வேந்தர் 
நிறம் செறி குருதி வேலான் நினைவினோடு இருந்தபோதில், 
அறம் செறி தானம், வண்மை, அளவிலாது அளித்து, நாளும் 
புறம் சுவர் கோலம் செய்வான் பூபதிக்கு உரைக்கலுற்றான்:

பொருள் 

இறைஞ்சிய = அடி பணிந்த 

வேந்தர்க்கு = அரசர்களுக்கு 

எல்லாம் = எல்லோருக்கும் 

இருப்பு அளித்து = (துரியோதனன்) அவர்கள் அமர இருக்கை தந்து 

எதிர்ந்த வேந்தர்  = துரியோதனை எதிர்த்த வேந்தர்களின் 

நிறம் செறி குருதி வேலான் = மார்பில் தன் வேலைப் பாய்ச்சி, அதனால் சிவந்த வேலைக் கொண்ட துரியோதான் 

நினைவினோடு இருந்தபோதில் = சிந்தித்துக் கொண்டு இருந்த போது  

அறம் செறி தானம் = அறம் நிறைந்த தானம். அதாவாது கெட்ட காரியத்துக்கு தானம் செய்து உதவ மாட்டான் கர்ணன் 

வண்மை = வீரம் அல்லது தியாகம் 

அளவிலாது அளித்து = அளவு இல்லாமல் அளித்து. இவ்வளவு தானம் செய்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ள மாட்டான் கர்ணன். 

நாளும் = ஒவ்வொரு நாளும் 

புறம்  சுவர் கோலம் செய்வான் = வெளிச் சுவரை அழகு படுத்தும் கர்ணன் 

பூபதிக்கு உரைக்கலுற்றான் = அரசனான துரியோதனுக்கு சொல்லத் தொடங்கினான் 

Tuesday, September 3, 2013

வில்லி பாரதம் - கண்டவை

வில்லி பாரதம் - கண்டவை 


தருமன் சமாதனமாகப் போவோம் என்று சொன்னது  பீமனுக்கு  பிடிக்கவில்லை.

மலை போன்ற என் கதாயுதத்தை கண்டும், அர்ஜுனனின் வில்லை  கண்டும், நகுல சகாதேவர்களின் திறமைகளை கண்டும், நமக்காக நிற்கும் கண்ணனின் நிலை கண்டும், திரௌபதியின் விரித்த குழல் கண்டும், எதிரிகளை கொலை  செய்து அதைக் கண்டு மகிழாமல் அவன் குடைக் கீழ் உயிர் வாழ நினைக்கிறாயே என்று தருமனை பார்த்து இகழ்ந்து  கூறுகிறான்.

பாடல்

'மலை கண்டதென என் கைம் மறத் தண்டின் வலி 
                  கண்டும், மகவான் மைந்தன் 
சிலை கண்டும், இருவர் பொரும் திறல் கண்டும், 
                  எமக்காகத் திருமால் நின்ற 
நிலை கண்டும், இவள் விரித்த குழல் கண்டும், 
                  இமைப்பொழுதில் நேரார்தம்மைக் 
கொலைகண்டு மகிழாமல், அவன் குடைக் கீழ் உயிர் 
                  வாழக் குறிக்கின்றாயே!'

பொருள்

மலை கண்டதென = மலையை போன்ற உறுதியான

என் கைம் = என்  கையில் உள்ள

மறத் தண்டின் = வீரமான கதாயுதத்தின்

வலி கண்டும் = வலிமையைக்  கண்டும்

மகவான் மைந்தன் = இந்திரன் மைந்தன் (மகம்  என்றால் யாகம்.  இந்திர பதவி   என்பது நிறைய யாகங்கள் செய்து கிடைப்பது)  அர்ஜுனனின்

சிலை கண்டும் = வில்லைக் கண்டும்

இருவர் பொரும் திறல் கண்டும் = நகுல சகாதேவர்களின் போர் ஆற்றலைக் கண்டும்

எமக்காகத் = எங்களுக்காக

திருமால் நின்ற நிலை கண்டும் = திருமால் நிற்கும் நிலை கண்டும்

இவள் விரித்த குழல் கண்டும் = திரௌபதியின் விரித்த குழலை கண்டும்

இமைப்பொழுதில் = கண்ணிமைக்கும் நேரத்தில்

நேரார்தம்மைக் = எதிரிகளை 

கொலைகண்டு மகிழாமல் = கொலை செய்து மகிழாமல்

அவன் குடைக் கீழ் உயிர் வாழக் குறிக்கின்றாயே! = அவன் குடைக் கீழ் உயிர் வாழ நினைகின்றாயே

என்று  குமுறுகிறான்.



Saturday, August 31, 2013

வில்லி பாரதம் - முடித்ததும் முடிக்காததும்

வில்லி பாரதம் - முடித்ததும் முடிக்காததும் 


சமாதானமாய் போகலாம் என்று சொன்ன தருமனைப் பார்த்து பீமன் கோபம் கொண்டு சொல்கிறான் .....

"நாம் என்னவெல்லாம் முடித்து விட்டோம்...போரை முடித்து விட்டோம், பாஞ்சாலியின் விரித்த கூந்தலை முடித்து விட்டோம், துரியோதனன் சபையில் நாம் எடுத்த சபதங்களை முடித்து விட்டோம், பிச்சை எடுப்பதில் பேர் வாங்கி பெருமையை, புகழை  முடித்து விட்டோம், நம்முடைய புகழை முடித்து விட்டோம், இவனோடு பிறந்த நான் என்னவெல்லாம் சாதித்து விட்டேன்"

என்று வெறுத்து  கூறுகிறான்.

பாடல்

போர்முடித்தானமர்பொருது புலம்புறுசொற்பாஞ்சாலி பூந்தண்
                                         கூந்தற், 
கார்முடித்தா னிளையோர்முன் கழறியவஞ்சின முடித்தான்
                                    கடவுட்கங்கை, 
நீர்முடித்தா னிரவொழித்த நீயறியவசையின்றி
                               நிலைநின்றோங்கும், 
பேர்முடித்தா னிப்படியே யார் முடித்தாரிவனுடனே
                                    பிறப்பதேநான்.


சீர் பிர்த்தபின்


Friday, August 30, 2013

வில்லி பாரதம் - வான் ஆளத் தருவேன்

வில்லி பாரதம் - வான் ஆளத் தருவேன் 


சமாதானமாக  போகலாம் என்று தருமன் சொன்னதை கேட்டு பீமன் கோபம் கொள்கிறான். துரியோதனன் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றவன் மேலும் சொல்லுவான்.

நம்மை காடு ஆள விட்ட அந்த துரியோதனன் உன்னை வெறுக்காதபடி அவனுக்கு வேறு ஒரு அரசை நான் தருவேன். அது எந்த  அரசு தெரியுமா ? அந்த விண்ணரசை அவனுக்கு தருவேன். அதனால் அவனும் உன் மேல் வெறுப்பு கொள்ள  மாட்டான்.

பாடல்

கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலிதன் 
                  காதல் மைந்தன் 
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடைக் கீழ் நீ 
                  ஆளத் தருவன், இன்றே; 
மேல்நாள், நம் உரிமை அறக் கவர்ந்த பெருந் துணைவன், 
                  உனை வெறாதவண்ணம், 
வான் ஆள, வானவர்கோன்தன் பதம் மற்று அவன்தனக்கே 
                  வழங்குவேனே.

பொருள்


Wednesday, August 28, 2013

வில்லி பாரதம் - உன் அருளுக்கு அஞ்சினேன்

வில்லி பாரதம் - உன் அருளுக்கு அஞ்சினேன் 


தருமன் , கிருஷ்ணனிடம், நாட்டில்  பாதி கேள், அது தராவிட்டால் ஐந்து ஊர் கேள், அதுவும் தராவிட்டால் ஐந்து வீடு கேள், அதுவும் தராவிட்டால் போரைக் கேள் என்று சொன்னான்.

அதை கேட்டு பீமன் கோபம்  கொண்டான்.அன்று அரசவையில் திரௌபதி வெட்கப் பட்டு வேதனையில் நின்றபோது , அண்ணா, நீ எங்களைத்  தடுத்தாய். நாம் காடு  போகவும்,அஞ்ஞாத வாசம் போகவும் நீயே காரணம்  ஆனாய். துரியோதனின் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான்.


துரியோதன் கொடுமை  செய்தான். அந்த கொடுமையை எப்படியாவது சண்டைபோட்டு , அவனை வென்று, அந்த கொடுமைகளை குறைத்துக் கொள்ள  முடியும். ஆனால், அண்ணா, உன் அருள் உள்ளத்தினால்  படும் பாட்டை எங்களால் பொறுத்துக் கொள்ள  முடியவில்லை. அவன் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான்.

பாடல்

விரிகுழற்பைந் தொடிநாணிவேத்தவையின் முறையிடு நாள்
                                வெகுளே லென்று, 
மரபினுக்கு நமக்குமுல குள்ளளவுந் தீராதவசையேகண்டாய், 
எரிதழற் கானகமகன்று மின்னமும் வெம்பகை முடிக்க
                                விளையாநின்றாய், 
அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோயுனதருளுக்
                                    கஞ்சினேனே.

சீர்  பிரித்த பின்

விரி குழல் பைந்தொடி நாணி வேந்தர் அவையில் முறையிடும்  நாள்
                                வெகுளேல் என்று, 

மரபினுக்கும்  நமக்கும் குலம் உள்ள அளவும்  தீராத வசையே கண்டாய், 

எரிதழல்  கானகம் அகன்று பின்னமும் வெம்பகை முடிக்க
                                விளையா நின்றாய், 

அரவு உயர்த்தோன் கொடுமையினும்  முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே 



பொருள்


Tuesday, August 27, 2013

வில்லி பாரதம் - தருமன் வேண்டுகோள்

வில்லி பாரதம் - தருமன் வேண்டுகோள் 


பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் முடிந்தபின் பாண்டவர்களுக்குத் தரவேண்டிய அரசை துரியோதன் தரவில்லை.

அவனிடம் தூது போகச் சொல்லி கண்ணனை பாண்டவர்கள் வேண்டினார்கள்.

முதலில் தருமன் வேண்டுகிறான்.....

"நீ எங்களுக்காகத் தூது சென்று நாங்கள் நினைப்பதை அவனிடம் சொல்லி,  எங்களுக்குச் சேர வேண்டிய பாகத்தை கேள். கொடுத்தால் நல்லது. நாட்டை கொடுக்க  மாட்டேன், போரை (war )க்  கொடுப்பேன் என்றால் அதுவும் நல்லது. நாடு அல்லது போர், இதில் இரண்டில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு வா " என்கிறான்.



பாடல்

நீதூதுநடந்தருளி யெமதுநினைவவர்க்குரைத்தானினைவின்வண்ணந்
தாதூதியளிமுரலுந் தண்பதியுந் தாயமுந்தான் றாரானாகின்
மீதூதுவளைக்குலமும் வலம்புரியுமிகமுழங்கவெய்யகாலன்
மாதூதர்மனங்களிக்கப்பொருதெனினும் பெறுவனிது வசையுமன்றே.


சீர் பிரித்த பின்

நீ தூது நடந்து அருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் 

தாதூ ஊதி அளி  முரலும் தண் பதியும் தாயமும் தாரானாகின் 

மீது ஊது வளைக் குலமும்  வலம்புரிம் மிக முழங்க வெய்ய காலன்

மா தூதர் மனங் களிக்கப் பொருதெனினும் பெறுவன் இனிது, வசையும் அன்றே 

பொருள்

நீ தூது நடந்து அருளி = நீ தூது சென்று அருளி

எமது நினைவு = நாங்கள் நினைப்பதை

அவர்க்கு உரைத்தால் = துரியோதனுக்கு உரைத்தால்

 நினைவின் வண்ணம்  = நினைத்த மாதிரி

தாதூ ஊதி = பூக்களில் உள்ள மகரந்தப் பொடிகளை ஊதி

அளி  முரலும் = வண்டுகள் முரலும்

தண் பதியும் = குளிர்ச்சியான இடமும்

தாயமும் = அதிகாரமும்

தாரானாகின் = தரவில்லை என்றால்

மீது = அதற்கு மேல்

 ஊது வளைக் குலமும் = சப்தமிடும் சாதாரண சங்குகளும்

வலம்புரிம் =  சிறந்த வலம்புரி சங்குகளும்

மிக முழங்க = மிகுந்த சப்த்தம் எழுப்ப

வெய்ய காலன் = கொடிய காலனின்


மா தூதர் = பெரிய தூதர்கள்

மனங் களிக்கப் = மனம் சந்தோஷப் படும்படி (ஏன் சந்தோஷம் ? போர் வந்தால் நிறைய உயிர்கள் கிடக்குமே...அடிக்கடி அலைய வேண்டாமே ...அந்த சந்தோஷம் )

பொருதெனினும் = போர் என்றாலும்

பெறுவன் இனிது = சந்தோஷமாக பெற்றுக் கொள்வேன்

வசையும் அன்றே = அது வசை பேச்சுக்கு உரியது அல்ல . உறவினனை கொன்றான் என்ற பழி வராது. போருக்கு அஞ்சி கானகம் போனான் என்ற பழியும் வராது.







Sunday, August 25, 2013

வில்லி பாரதம் - கர்ணனின் கடைசி உரை

வில்லி பாரதம் - கர்ணனின் கடைசி உரை 




வான்பெற்றநதிகமழ்தாள்வணங்கப்பெற்றேன் மதிபெற்ற
                திருவுளத்தான்மதிக்கப்பெற்றேன்,
றேன்பெற்றதுழாயலங்கற்களபமார்புந்
             திருப்புயமுந்தைவந்துதீண்டப்பெற்றே,
னூன்பெற்றபகழியினாலழிந்துவீழ்ந்துமுணர்வுடனின்றிரு
                       நாமமுரைக்கப்பெற்றேன்,
யான்பெற்றபெருந்தவப்பேறென்னையன்றியிருநிலத்திற்
                    பிறந்தோரில்யார்பெற்றாரே.

நிறைய நல்ல விஷயங்களை நாளை செய்வோம், நாளை செய்வோம்  என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறோம். நாளை வருமா ? வரும்போது நமக்கு நினைவு இருக்குமா ?

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

என்றார்  வள்ளுவர். அன்னைக்கு செய்துக் கொள்ளலாம் என்று . இருக்கக் கூடாது.  எப்போதும் அற வழியில் நிற்க வேண்டும் என்றார். 

கர்ணன் இறக்கும் தருவாயில் சொல்கிறான்...."கண்ணா, இறக்கும் தருணத்தில்   உன் திருவடிகளை வணங்கும் பேறு பெற்றேன், உன்னால் மதிகப் பெற்றேன், உன்  கைகளால் தீண்டப் பெற்றேன், உன் நாமத்தை உரைக்கும்  பேறு பெற்றேன்...இந்தப் பேறு உலகில் யாருக்கு கிடைக்கும் " என்றான். 

நினைத்துப் பாருங்கள்.  மரணம் நம்மிடம் சொல்லிவிட்டா வருகிறது. என்று , எப்படி வரும் என்று  நமக்குத் தெரியாது. 

அப்புறம் செய்யலாம் என்று நினைத்தது எல்லாம் அப் புறம் போய் விடும். கர்ணனுக்கு  இறக்கும் தருவாயில் இறைவனின் தரிசனம் கிடைத்தது, அவன் பெயரை சொல்லும்  புண்ணியம் இருந்தது, அவன் திருவடிகளைத் தொழ அவகாசம் இருந்தது, கிருஷ்ணனே அவனைத் தொட்டு அனுக்ரஹம் பண்ணினான்....

அதற்கு காரணம் அவன் செய்த கொடை , அவன் செய்த தர்மம்...மங்காத புகழையும் , முக்தியையும் கொடுத்தது....

பாடல் 


வான்பெற்றநதிகமழ்தாள்வணங்கப்பெற்றேன் மதிபெற்ற
                திருவுளத்தான்மதிக்கப்பெற்றேன்,
றேன்பெற்றதுழாயலங்கற்களபமார்புந்
             திருப்புயமுந்தைவந்துதீண்டப்பெற்றே,
னூன்பெற்றபகழியினாலழிந்துவீழ்ந்துமுணர்வுடனின்றிரு
                       நாமமுரைக்கப்பெற்றேன்,
யான்பெற்றபெருந்தவப்பேறென்னையன்றியிருநிலத்திற்
                    பிறந்தோரில்யார்பெற்றாரே.


சீர் பிரித்த பின் 


வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப் பெற்றேன் மதி பெற்ற
             திரு உள்ளத்தால் தான் மதிக்கப் பெற்றேன்,
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப  மார்பும் 
             திருப்புயமும் தை வந்து தீண்டப் பெற்றேன் ,
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்து உணர்வுடன் உன் திரு 
             நாமம் உரைக்க பெற்றேன்,
யான் பெற்ற பெருந்தவப் பேற்றை என்னை அன்றி இரு நிலத்தில் 
             பிறந்தோரில் யார் பெற்றாரே 


பொருள்



Saturday, August 24, 2013

வில்லி பாரதம் - குந்தி கர்ணனுக்கு அமுது ஊட்டல்

வில்லி பாரதம் - குந்தி கர்ணனுக்கு அமுது ஊட்டல் 


சாகும் தருவாயில், எத்தனை பிறவி எடுத்தாலும் இல்லை என்று வருவோருக்கு இல்லை என்று கூறாமல் இருக்கும் வரம் என்று கண்ணனிடம் கேட்டான். கண்ணனும் மகிழ்ந்து அந்த வரத்தை  தந்தான். பின் அவனுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டினனான்.

கர்ணன் இறக்கும் செய்தி குந்திக்கு அசரீரி மூலம் தெரிய வந்தது.

கர்ணன், குந்தியிடம் வரம் வாங்கி இருந்தான், தான் சாகும் முன்னம், அவள் தன்னை அவள் மடியில் ஏந்தி பிள்ளை போல் அமுது ஊட்ட வேண்டும் என்று.

மனதை உருக்கும் அந்தப் பாடல்


என்றென்றே யமர்க்களத்தி னின்ற வேந்தர் யாவருங்
                   கேட் டதிசயிப்ப வேங்கி யேங்கி,
யன்றன்போ டெடுத்தணைத்து முலைக்க ணூற
               லமுதூட்டி நேயமுட னணித்தா வீன்ற,
கன்றெஞ்ச வினைந்தினைந்துமறுகா நின்ற கபிலையைப்போ
                      லென்பட்டாள் கலாபம் வீசிக்,
குன்றெங்கு மிளஞ்சாயன் மயில்க ளாடுங் குருநாடன்
                           றிருத்தேவி குந்திதேவி..

சீர் பிரித்த பின்


என்றென்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் 
கேட்டு அதிசயிப்ப ஏங்கி ஏங்கி 
அன்போடு எடுத்து அணைத்து முலைக் கண் ஊற 
அமுது ஊட்டி நேயமுடன் ஆ ஈன்ற 
கன்று ஏஞ்ச இனைத்து இனைந்து மறுகா நின்ற கபிலையைப் போல் 
எனப் பட்டாள் கபலாம் வீசி 
குன்று எங்கும் இளம் மஞ்சு சாயல் மயில்கள் ஆடும் குருநாடன் 
திருத்தேவி குந்திதேவி 

பொருள்


Thursday, August 22, 2013

வில்லிபாரதம் - கர்ணன் கேட்ட வரம்

வில்லிபாரதம் - கர்ணன் கேட்ட வரம் 


பதினேழாவது நாள் போரில் கர்ணன் சண்டையிட்டு சோர்ந்து விழுகிறான். அப்போது கண்ணன் ஒரு வேதியர் உருவில் வந்து கர்ணனின் அனைத்து புண்ணியங்களையும் தானமாகப் பெற்றுக் கொள்கிறான். கர்ணனும் அதை மகிழ்வோடு தானமாக தருகிறான்.

பெற்றுக் கொண்டபின், கண்ணன் "உனக்கு வேண்டிய வரம் கேள் " என்று கூறுகிறான்.

கர்ணன் ஒரு வரம் கேட்கிறான்.

நாமாக இருந்தால் சொர்க்கம் வேண்டும் என்று கேட்ப்போம், இறைவன் திருவடி வேண்டும் என்றும் கேட்போம், பிறவா வரம் வேண்டும் என்று கேட்போம்...

கர்ணன் கேட்ட வரம்...."என்னிடம் இல்லை என்று வருபவர்களுக்கு நானும் இல்லை என்று சொல்லாமல் இருக்கும் இதயம் தா " என்று கேட்கிறான்.

அவன் வரம் கேட்ட இடம் - தாய்க்கு மகன் இல்லை என்று ஆகி, தம்பிகளுக்கு அண்ணன் இல்லை என்று ஆகி, தவறு என்று தெரிந்தும் செஞ்சோற்று கடன் கழிக்க துரியோதனன் பின் போய் , பரசுராமனிடம் கற்ற வித்தையெல்லாம் மறந்து போய் , தாய் கேட்ட வரத்தால் அர்ஜுனனை கொல்லாமல் விட்டு, செய்த புண்ணியத்தை எல்லாம் தானமாகக் கொடுத்து விட்டு, அடி பட்டு, உயிர் போகும் நேரம்....

அவன் மனம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்திருக்க வேண்டும்....சாகும் போதும் மற்றவர்கள் மேல் கருணை.

பாடல்

மல்லலந்தொடையனிருபனைமுனிவன்மகிழ்ந்துநீவேண்டிய
                                       வரங்கள்,
சொல்லுகவுனக்குத்தருதுமென்றுரைப்பச்சூரன்மாமதலையுஞ்
                                     சொல்வான்,
அல்லல்வெவ்வினையாலின்னமுற்பவமுண்டாயினுமேழெழு
                                         பிறப்பு,
மில்லையென்றிரப்போர்க்கில்லையென்றுரையாவிதயநீயளித்

                                   தருளென்றான்.

சீர் பிரிக்காமல் புரிந்து கொள்வது கடினம்

மல்லல் அம்  தொடை அணி நிருபனை முனிவன் மகிழ்ந்து நீ வேண்டிய வரங்கள் 

சொல்லுக உனக்குத் தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் 

அல்லல் வெவ் வினையால் இன்னமும் உற்பவம் உண்டாயினும் ஏழேழு பிறப்பும் 

இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்து அருள் என்றான் 



பொருள்


Monday, February 11, 2013

வில்லி பாரதம் - புனிதர் தாள் போற்றுவோம்


வில்லி பாரதம் - புனிதர் தாள் போற்றுவோம் 


பாரதப் போர் தொடங்குவதற்கு முன் கண்ணன் தூது போகிறான். பாண்டவர்கள் சார்பாக, துரியோதனனிடம். 

வில்லிபுத்துராழ்வார் அந்த சருகத்தை தொடங்குமுன் பாயிரம் போல் முதல் பாடல் பாடுகிறார். 

இறைவனின் புகழைச் சொல்லி, அவன் அடியார்களின் திருவடிகளை தொழுவோம் என்கிறார் 

படிக்க கொஞ்சம் கடினம் தான். பதம் பிரித்தால் எளிதாக இருக்கும்.

தேன்  போல் அர்த்தம் சொட்டும் தமிழ். படிக்க படிக்க தெவிட்டாத தமிழ். 

முதலில் பாடலைப் பார்ப்போம் 


அராவணைதுறந்துபோந்தன்றசோதைகண்களிப்பநீடு
தராதலம்விளங்கவெண்ணெய்த்தாழிசூழ்தரநின்றாடிக்
குராமணங்கமழுங்கூந்தற்கோவியர்குரவைகொண்ட
புராதனன்றனையேயேத்தும்புனிதர்தாள்போற்றிசெய்வாம்.

கொஞ்சம் கரடு முரடாய் தெரிகிறதா ? சீர் பிரிப்போம் 

அரா அணை  துறந்து போந்து அன்று யசோதை கண் களிப்ப நீடு 
தரா தலம் விளங்க வெண்ணெய் தாழி சூழ்தர நின்று ஆடி 
குரா  மணம் கமழும் கூந்தல் கோபியர் குரவை கொண்ட 
புராதனன் தன்னையே ஏத்தும் புனிதர் தாள் போற்றி செய்வாம் 

பொருள் 

Monday, January 21, 2013

வில்லி பாரதம் - கங்கா தேவியின் அழகு


வில்லி பாரதம் - கங்கா தேவியின் அழகு


தன்னை மணந்து கொள்ளும்படி கங்கையிடம் சந்துனு மகாராஜா வேண்டினான். அதற்க்கு கங்கை என்ன சொன்னாள்?

முதலில் அவளுக்கு வெட்கம் வந்தது. வெட்கத்தால் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். தலை கவிழ்ந்தாள் என்றால் என்னமோ லேசாக தலையயை சாய்த்தாள் என்று பொருள் அல்ல. அவள் நாடி வளைந்து உடலை தொடுகிறது.  ஆபரணங்கள்  பூண்ட அவளது மார்பகத்தை அவளே பார்க்கும் அளவுக்கு  தலை கவிழ்ந்தாள். அப்படி அவள் வெட்கப் பட்ட போது, அவளின் அழகு இன்னும் கூடியது.. வெட்கப் படும் போது பெண்கள் மேலும் அழகாகத் தோன்றுவது இயற்கை. அவள் உடல் மின்னியது. அவள் உடல் மேலும் மெருகேறியது.  அந்த நிலவே அவள் மேனியின் ஒளியைப் பெற்று பிரகாசித்ததை போல இருந்தது. 

வில்லி புத்துராரின் பாடல் 

நாணினளாமென நதிமடந்தையும்
பூணுறுமுலைமுகம் பொருந்தநோக்கினள்
சேணுறுதனதுமெய்த் தேசுபோனகை
வாணிலவெழச்சில வாய்மைகூறுவாள்.

பொருள் 

Monday, December 31, 2012

வில்லி பாரதம் பிறந்த கதை


வில்லி பாரதம் பிறந்த கதை 


வில்லிபுத்துராழ்வார் ஒரு தீவிர வைணவ பக்தர். சிறந்த தமிழ் அறிஞர். தமிழில் வரும் படைப்புகளில் தவறு இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர். புலவர், கவிஞர் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களை அவர் வாதுக்கு அழைப்பார். அப்படி வாதிடும் போது ஒரு நிபந்தனை வைப்பார். இரும்பினால் செய்த கொக்கி போன்ற ஒரு கூறிய ஆயுதத்தை அவர்கள் காதில் மாட்டி அதன் ஒரு முனையையை தன் கையில் வைத்துக் கொள்வார். அதே போல் ஒன்றை தன் காதில் மாட்டி அவர்கள் கையில் கொடுத்து விடுவார். வாதில் வென்றவர் கொக்கியை ஒரு இழு இழுத்தார் தோற்றவரின் காது அறுந்து விழுந்து விடும்.  இப்படி பல பேரின் காதுகளை அறுத்தவர் வில்லிபுத்துராழ்வார். 

இதை கேள்விப் பட்ட அருணகிரிநாதர் , காதறுப்பது தகாது என்று எண்ணி, வில்லிபுத்துராழ்வாரோடு வாதுக்குப் போனார். 

வில்லியார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அருணகிரி பெருமான் விடை பகர்ந்தார். 

பின் அருணகிரி நாதர் ஒரு பாடலை கூறி அதற்க்கு பொருள் கேட்டார். அதன் பொருள் தெரியாமல் வில்லிபுத்தாரழ்வார் திகைத்தார். "காதை அறுக்கலாமா " என்று அருணகிரி கேட்க, சரி என்றார் வில்லிபுத்துராழ்வார். 

அறுப்பாரா அருணகிரி ? காதறுப்பது தகாது என்று கூறி...காதறுத்த பாவம் போக தமிழில் பாரதம் பாடுக என்று அவரைப் பணித்தார். 

அருணகிரி பாடி, வில்லிபுத்துராழ்வார் பதில் தெரியாமல் தவித்த அந்தப் பாடல் 

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”

வாரியார் ஸ்வாமிகள் அருளிய உரை 


திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,

திதி – திருநடனத்தால் காக்கின்ற

தாதை – பரமசிவனும்

தாத – பிரமனும்

துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய

தா – இடத்தையும்

தித – நிலைபெற்று

தத்து – ததும்புகின்ற

அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி – தயிரானது

தித்தித்ததே – தித்திக்கின்றதென்று

து – உண்ட கண்ணனும்

துதித்து – துதி செய்து வணங்குகின்ற

இதத்து – பேரின்ப சொரூபியான

ஆதி – முதல்வனே!

தத்தத்து – தந்தத்தையுடைய

அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட

தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத – தொண்டனே!

தீதே – தீமையே

துதை – நெருங்கிய

தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்

அதத்து – மரணத்தோடும்

உதி – ஜனனத்தோடும்

தத்தும் – பல தத்துக்களோடும்

அத்து – இசைவுற்றதுமான

அத்தி – எலும்புகளை மூடிய

தித்தி – பையாகிய இவ்வுடல்

தீ – அக்கினியினால்

தீ – தகிக்கப்படுகின்ற

திதி – அந்நாளிலே

துதி – உன்னைத் துதிக்கும்

தீ – புத்தி

தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்