Showing posts with label naaladiyaar. Show all posts
Showing posts with label naaladiyaar. Show all posts

Wednesday, October 26, 2016

நாலடியார் - நம் குற்றம் எண்ணும் கொல் ?

நாலடியார் - நம் குற்றம் எண்ணும் கொல் ?


பிரிவு உறவை ஆழப் படுத்துகிறது. உறவை உறுதிப் படுத்துகிறது.

தலைவன் ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியூர் போய் இருக்கிறான். திரும்பி வர நாள் ஆகிறது.

தலைவியைப் பற்றி சிந்திக்கிறான்.

அவள் எப்படியெல்லாம் தன்னைப் பிரிந்து வருந்துவாள் என்று சிந்திக்கிறான்.

தூக்கம் வராமல் விழித்து இருப்பாளோ ? படுக்கையில் படுக்காமல் தரையில் , தன்னுடைய கையையே தலையணையாக வைத்துப் படுத்துக் கிடைப்பாளோ ? பிரிவுத் துயரில் அழுவாளோ ? என்னைப் பற்றி என்னென்ன நினைப்பாள் ? பாவம் அவளுக்காக நான் ஒன்றும் செய்தது இல்லை. ரொம்ப கஷ்டப் படுத்தி இருக்கிறேன். நான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்ப்பாளோ ? என்று தலைவன் உருகுகிறான்.

காதலின் பிரிவை சொல்லும் , நாலடியார் பாடல்


செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.


பொருள்

செல்சுடர் = செல்லுகின்ற சுடர். சூரியன். சூரியன் சென்று மறையும் மாலை நேரம்.

நோக்கிச் = அதை நோக்கி

சிதரரிக் கண் = செவ்வரி ஓடிய கண்கள். சிவந்த கண்கள்  

கொண்டநீர் = ததும்பிய கண்ணீர்

மெல்விரல் = மெல்லிய விரலால்

ஊழ்தெறியா = முறையாக தெறிக்கும் படி விரலால் சுண்டி

விம்மித்தன் = பிரிவின் துயர் பொறுக்காமல் விம்மி

மெல்விரலின் = மெல்லிய விரலின்

நாள்வைத்து = நாட்களை எண்ணி

நங்குற்றம் = நம்முடைய குற்றங்களை

எண்ணுங்கொல் = நினைப்பாளோ ?

அந்தோதன் = ஐயோ , தன்னுடைய

தோள்  = தோளை யே

வைத்து = வைத்து

அணை மேல்  = தலையணை போல்

கிடந்து = படுத்து

தரையில் படுத்து இருக்கிறாள். கையை மடித்து தலைக்கு , தலையணை போல் வைத்து  இருக்கிறாள். கண்ணில் நீர் வழிகிறது. அதை விரலால் எடுத்து சுண்டி விடுகிறாள்.

என்று கற்பனை செய்கிறான் தலைவன்.

அவனுக்குத் தன்னிரக்கம் மேலிடுகிறது.  என்னைப் பற்றி பெரிதாக நினைக்க என்ன இருக்கிறது. அவள் மகிழும்படி என்ன செய்து விட்டேன் ? அவளுக்குத் தந்தது எல்லாம் துன்பம் தான். நான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பாள் அவள் என்று வருந்துகிறான்.

பிரிவை, அதன் வலியை , அதன் சோகத்தைக் கூட இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா ?

Monday, October 24, 2016

நாலடியார் - வாழ்வின் தொடக்கம்

நாலடியார் - வாழ்வின் தொடக்கம் 


ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழவைத் தொடங்கப் போகிறார்கள்.

குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும், உறவுகளை எப்படி அனுசரித்துப் போக வேண்டும், சேமிப்பு, சிக்கனம், என்று ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. விட்டு கொடுத்து போவது, சமரசம் செய்து கொள்வது. இதெல்லாம் எந்த பள்ளியிலும், கல்லூரியிலும் சொல்லித் தருவது இல்லை.

தட்டு தடுமாறி , இதை வாழ்க்கையில்  நேரடியாக கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

தோழி கேட்கிறாள் தலைவியிடம், " செல்ல பிள்ளையாக வளர்ந்து விட்டாய். நாளை உன் கணவன் பின்னால் கடினமான காட்டு வழியில் போக வேண்டுமே. நடந்து விடுவாயா ? உன்னால் முடியுமா ? "

அதற்கு தலைவி சொல்கிறாள் "ஒருவன் ஒரு குதிரையை வாங்குகிறான் என்றால், வாங்கிய அன்றே அதை எப்படி செலுத்துவது என்று அறிவானா ? கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பழகுவான். அது போலத்தான் வாழ்க்கையும்."

பாடல்



கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி ; - சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.


பொருள்


கடக்கருங் = கடக்க + அருங் = கடக்க கடினமான

கானத்துக் = காட்டில்

காளைபின் = கணவனின் பின்னால் 

நாளை = நாளை

நடக்கவும் = நடந்து செல்ல

வல்லையோ = வல்லமை உள்ளவளா

என்றி ; = என்று கேட்டாய்

சுடர்த்தொடீஇ = சுடர் விடும் வளையல்களை அணிந்தவளே (தோழியே) !

பெற்றானொருவன் = ஒருவன் பெற்றால்

பெருங்குதிரை = பெரிய குதிரை ஒன்றை

அந்நிலையே = அந்த நேரத்திலேயே

கற்றான் = கற்றான்

அஃதூரும் ஆறு = அதை செலுத்தும் வழியை

குதிரையை வாங்கிய அன்றேவா அதை செலுத்தும் வழியும்  தெரியும். தெரியாது. ஆனால், வாங்கிய அந்த நிமிடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  அதை செலுத்தும் வழியை அறிந்து கொள்ளுவாள் அல்லவா அது போல   நானும் இந்த திருமண வாழ்க்கையை எப்படி நடத்திச் செல்ல வேண்டும்  என்று அறிந்து கொள்வேன் என்கிறாள்.

யதார்த்தத்தை பேசும் பாடல்



Sunday, October 23, 2016

நாலடியார் - பூம்பாவை செய்த குறி

நாலடியார் - பூம்பாவை செய்த குறி


அந்தப் பெண் அவளுடைய காதலனோடு நாளை ஓடிப் போகப் போகிறாள். ஏதோ காரணத்தினால் அவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்தில் நடக்காது என்று தெரிந்து விட்டது.

காதலனும் காதலியும், வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்வது கொள்வது என்று தீர்மானம் செய்து விட்டார்கள்.

அவளுக்கு மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.

அவளுடைய தாயை பார்க்கும் போது உணர்ச்சி கொந்தளிக்கிறது.

என்னை எப்படியெல்லாம் வளர்த்து இருப்பாள். என்னை வளர்க்க எப்படி எல்லாம் கஷ்டப் பட்டு இருப்பாள். என்னைப் பற்றி என்னவெல்லாம் கனவு இருப்பாள் ? என்னை மாலையும் கழுத்துமாக காண எவ்வளவு ஆசை பட்டிருப்பாள் ...நானும் என் கணவனும் ஒன்றாக வெளியில் போகும் போது எங்களை பார்த்து எவ்வளவு மகிழ்திருப்பாள் ...அத்தனையையும் கலைத்து விட்டு இப்போது என் காதலனோடு போகப் போகிறேன். நான் இந்த வீட்டை விட்டு போன பின், அவள் மனம் எவ்வளவு பாடு படும் என்று நினைக்கிறாள்.

தாய் பாசம் ஒரு புறம். காதலனோடு செல்ல வேண்டும் என்ற ஆவல் மறுபுறம். அல்லாடுகிறாள்.

அவள், தன்னுடைய தாயை மீண்டும் மீண்டும் இறுக கட்டி அணைத்துக் கொள்கிறாள். தாய்க்கு புரியவில்லை.

மறு நாள். மகள் வீட்டை விட்டு போன மறுநாள். தாய் புலம்புகிறாள். "அவள் என்னை அப்படி மார்பு அழுந்தும் படி, அவள் கழுத்தில் அணிந்திருந்த மாலையில் உள்ள முத்து என் உடலில் அழுந்தும்படி, உடல் பூராவும் படும்படி ஏன் கட்டிப் பிடித்தாள் என்று நான் அறியவில்லை. புலிகள் உள்ள காட்டில் மான் செல்லுவதைப் போல அவளும் செல்கிறாள் என்பதை குறிக்கவோ அப்படி செய்தாள் " என்று அறியாமல் புலம்புகிறாள்.

சோகம் ததும்பும் அந்தப் பாடல்

பாடல்

முலைக்கண்ணும், முத்தும், முழுமெய்யும், புல்லும் 
இலக்கணம் யாதும் அறியேன்; -- கலைக்கணம் 
வேங்கை வெருஉம் நெறிசெலிய போலும், என்
பூம்பாவை செய்த குறி

பொருள்

முலைக்கண்ணும் = அவளுடைய மார்பும்

முத்தும் = அவள் கழுத்தில் உள்ள மாலையில் உள்ள முத்து, வைரம் போன்றவை

முழுமெய்யும் = முழு உடம்பும்

புல்லும் = அணைத்ததின்

இலக்கணம் = காரணம்

யாதும் = எதுவும்

அறியேன்; = நான் அறிய மாட்டேன்

கலைக்கணம் = கலை என்றால் பெண் மான். பெண் மான்கள்

வேங்கை = புலிகள்

வெருஉம் = கோபித்து அலையும்

நெறிசெலிய = வழியில் செல்வதற்காக

போலும் = போலும்

என் = என்னுடைய

பூம்பாவை = பூ போன்ற பெண்

செய்த குறி = செய்த அடையாளங்கள்

தன்னுடைய பெண்ணை குறிக்கும் போது , பூம் பாவை என்கிறாள். பூ போன்ற பெண் என்கிறாள்.

அவள் போன வழி தாய்க்குத் தெரியாது. இருந்தும், புலிகள் அலையும் காட்டில் மான்கள் செல்வதைப் போல அவளும் போய் இருப்பாளோ என்று பயப்படுகிறான்.

தாயின் மனம்.

என்ன நேர்ந்தது என்று தெரியாது. "இதற்காகத்தானா அப்படி கட்டிப் பிடித்தாள் " என்று  நினைக்கிறாள்.

ஒரு பெண்ணுக்குத்தான் மற்றொரு பெண்ணின் மனம் புரியும். அதுவும், ஒரு தாய்க்கு மகளின் மனம் புரியாதா ?

அவள் அப்படி கட்டி பிடித்ததற்கு காரணம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறாள்.

இந்த பாடல் நிகழ்வதற்கு முன் என்ன நடந்தது, அதற்கு பின் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது.

இந்த பாடலில் உள்ள நான்கு வரிகளைக் கொண்டு நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான்.

காதலை, பிரிவை, பாசப் போராட்டத்தை, எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மையை, உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை இதை விட அழகாக சொல்ல முடியுமா ?




Thursday, April 9, 2015

நாலடியார் - அந்தி மாலை, இந்த மாலை

நாலடியார் - அந்தி மாலை, இந்த மாலை 



அது ஒரு சின்ன கிராமம்.

அங்குள்ள மக்கள் காலையில் வயலுக்கு, காட்டுக்கு என்று வேலைக்குப் போய் விட்டு மாலையில் வீடு திரும்புவார்கள்.

அவளுடைய காதலனும் அவள் இருக்கும் வீட்டின் வழியாகத்தான் தினமும் வருவான்.

இன்று ஏனோ இன்னும் வரவில்லை. மாலை மங்கிக் கொண்டே போகிறது. இன்னும் வரவில்லை.

ஒரு வேளை வேறு வழியில் போய் இருப்பானோ ?

ஒரு வேளை அவனுக்கு எதுவும் ஆபத்து நேர்ந்திருக்குமோ ?

ஏன் இன்னும் வரவில்லை ?

தவிக்கிறாள் அவள்.

அவன் வருவான், அவனுக்குத் தர வேண்டும் என்று ஆசை ஆசையாக பூக்களைச் சேர்த்து மாலையாக செய்து, அவன் வரும் வழி பார்த்து காத்திருக்கிறாள்.

ஒரு வேளை வர மாட்டானோ ?

இந்த மாலையை என்ன செய்வது ?

பாடல்

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

பொருள்

கம்மஞ்செய் மாக்கள் = வேலை செய்த பின் மக்கள்

கருவி ஒடுக்கிய = அவர்களின் அரிவாள், மண்வெட்டி போன்றவற்றை எடுத்துக் கொண்டு

மம்மர்கொள் மாலை = மயக்கம் தரும் மாலை நேரத்தில்

மலராய்ந்து பூத்தொடுப்பாள் = ஒவ்வொரு பூவாக தேர்ந்து எடுத்து மாலை தொடுப்பாள்

கைம்மாலை = கையில் உள்ள மாலை

இட்டுக் = தரையில் நழுவ விட்டு

கலுழ்ந்தாள் = கவலைப் பட்டாள்

துணையில்லார்க்கு = துணை இல்லாதவர்க்கு

இம்மாலை என்செய்வ தென்று = இந்த மாலை என்ன செய்வது என்று

காதல், தவிப்பு, ஏக்கம் என்று அனைத்தையும் நாலு வரியில் அடக்கி பல நூற்றாண்டுகளை தாண்டி உங்களை வந்து அடைகிறது இந்தப் பாடல்.

பெயர் தெரியாத, முகம் தெரியாத அந்த பெண்ணின் சோகம்  நம்மையும் என்னவோ செய்கிறது.

காதல் என்றும் பசுமையானதுதான்.





Tuesday, April 7, 2015

நாலடியார் - இம் என பெய்யும் மழை

நாலடியார் - இம் என பெய்யும் மழை 


காமம் !

காமம் என்றால் ஏதோ பேசக் கூடாத ஒன்று, மறைத்து வைக்கப் படவேண்டியது என்று ஒதுக்கி வைக்கிறோம்.

பெற்றோரும் பிள்ளைகளும், சகோதரனும் சகோதரியும், ஆசிரியரும் மாணவரும் ஒன்றாக படிக்கும் காமம் சம்பந்தப் பட்ட புத்தகம் ஏதேனும் இருக்கிறதா ?

திருக்குறளில் உள்ள காமத்துப் பாலை, ஒரு தகப்பனும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம்.  அதில்  இல்லாத காமம் இல்லை. காதல் , காமம் , ஊடல், பிரிவு, கனவு, நாணம், வெட்கம், கூடல், களவு, ஊர் பேசும் பேச்சு என்று எல்லாம் இருக்கிறது.

இருந்தும், கொஞ்சம் கூட விரசம்  இல்லாதது.

நம் இலக்கியம், காமத்தை விலக்கி வைக்க வில்லை.

அறம் - பொருள் - இன்பம் என்று அறவழியில் நின்று ஈட்டிய பொருளை குடும்ப வாழ்வில் நின்று எப்படி இன்பம் அனுபவிப்பது என்று சொல்கிறது நம் இலக்கியம்.

நாலாடியாரில் வரும் ஒரு பெண்.


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

மழைக் காலம்.

"சோ " மழை பெய்கிறது.

இடி மின்னல்.

காதலனின் நினைவு அவளை வாட்டுகிறது.

இந்த இடி சத்தம் ஏதோ இழவு வீட்டில் அடிக்கும் பறை ஒலி போல இருக்கிறது அவளுக்கு.

பிரிவு அவ்வளவு வாட்டுகிறது அவளை.

பாடல்


தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க் - கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

கொஞ்சம் சீர் பிரிப்போம்

தம் தமர்  காதலர் தார் சூழ் அணி அகலம் 
விம்ம முயங்கும்  துணை இல்லார்க்கு  - "இம்" என 
பெய்ய எழிலி முழங்கும்  திசை எல்லாம் 
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

பொருள்

தம் = தம்முடைய

தமர் = உறவான

காதலர் = காதலர்

தார் = மாலை

சூழ் = அணிந்த

அணி அகலம் = அணிகலன்களை அணிந்த அகன்ற மார்பில்

விம்ம முயங்கும் = விம்மி எழும் மார்பு அழுந்த கட்டி அணைக்கும்

துணை இல்லார்க்கு = துணை இல்லாதவர்களுக்கு (பிரிந்து இருப்பவர்களுக்கு)

"இம்" என = "இம்" என்ற ஒலியோடு

பெய்ய = பெய்யும்

எழிலி = மழை மேகம் (என்ன அழகான பெயர் சொல்)

முழங்கும்= ஒலிக்கும்

திசை எல்லாம் = எல்லா திசைகளிலும்

நெய்தல் = மழை

அறைந்தன்ன நீர்த்து = பறை அறைவது போல இருக்கிறது





Wednesday, December 3, 2014

நாலடியார் - நல்ல வழி இல்லை

நாலடியார் - நல்ல வழி இல்லை 


முதுமை நமக்கில்லை என்று நாம் இருக்கிறோம்.

அப்படியே வரும் என்று நினைத்தாலும், அது வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்.

வேலை எல்லாம் முடித்துவிட்டு, பிள்ளைகளுக்கு ஒரு வழி பண்ணி வைத்து விட்டு, அப்புறம் அதையெல்லாம் செய்யலாம் என்று நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

அந்த நேரத்தில் இப்படியேவா இருக்கப் போகிறோம் ?

படிக்க வேண்டும் என்று நினைத்தால் - கண் சரியாக இருக்காது.

யாரிடமாவது பேசலாம் என்றால் பேச்சு குழறும்.

சரி, படித்தவர்கள் சொல்லிக் கேட்கலாம் என்றால் காது கேட்டால் தானே.

எனவே, இளமையிலேயே இது பற்றியெல்லாம் சிந்தித்து இப்போதே முடிவு எடுங்கள்.

பாடல்

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

பொருள்

சொல்தளர்ந்து = நாக்கு குழறும். வார்த்தைகள் கோர்வையாய் வராது. வார்த்தைகளோடு எச்சிலும் வரும். பல் போன பின், சொல் தளரும். குரல் கம்மும்.

கோல்ஊன்றிச் = ஒரு இடத்திற்கு போக முடியாது. நடை எனபது பெரிய விஷயமாகப் போகும்.  கோல் துணையின்றி நடக்க முடியாது

சோர்ந்த நடையினராய்ப் = கொஞ்ச தூரம் நடந்தாலும் சோர்வு வரும்.

பல்கழன்று = பல் விழுந்து

பண்டம் பழிகாறும் = இந்த உடல் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமாகும். "கிழத்துக்கு காது கேட்க்காது...நம்ம உயிரை வாங்குது..."

இல்செறிந்து = இல்லத்தில் இருந்து

காம நெறிபடருங் = காம, ஆசையின் வழியில் செல்லும்

கண்ணினார்க் கில்லையே = கண்களைக் கொண்டவர்களுக்கு இல்லையே. கண் போன திசை எல்லாம் போனவர்களுக்கு 

ஏம நெறிபடரு மாறு.= மெய் வழியில் செல்லும் வகை

உடலில் வலிமை இருக்கும் போதே நல்லதை நினைத்து, நல்லதைச் செய்வோம்



Monday, December 1, 2014

நாலடியார் - பிறப்பு துன்பம் நிறைந்தது

நாலடியார் - பிறப்பு துன்பம் நிறைந்தது 


 இந்தப் பிறவி இன்பமானதா ? துன்பமானதா ?

ஒட்டகம் முள் மரத்தின் இலைகளை  தின்னும்.அப்படி தின்னும் போது , அந்த முள்  மரத்தில் உள்ள முள் தைத்து , ஒட்டகத்தின் உதட்டில் இருந்து இரத்தம் வழியும். அப்படி வழிந்த இரத்தம் ஒட்டகத்தின் வாயில்  சென்று  சேரும். தன் இரத்தத்தை தான் அறியாத ஒட்டகம், இந்த முள் மரத்தின் இலைகள் மிக சுவையாக இருக்கின்றன என்று எண்ணிக் கொண்டு மேலும் மேலும் உதடு கிழிபட தின்னும்.

துன்பத்தை இன்பமாக நினைத்தது அந்த முட்டாள் ஒட்டகம்.

இந்தப் பிறவிக்குத்தான் எத்தனை துன்பம் ? நோயால் துன்பம், நம் மீது அன்பு கொண்டவர்கள் நம்மை பிரிந்தால் துன்பம், வறுமை வந்தால் துன்பம், பழி வந்தால் துன்பம், நினைத்தது கிடைக்கவில்லை என்றால் துன்பம்..இப்படி துன்பத்திற்கு இருப்பிடமாகும் இந்தப் பிறவி.


இந்தப் பிறவி, துன்பத்தின் இருப்பிடம் என்று அறிந்த பெரியவர்களோடு மிக மிக நெருங்கி  பழக வேண்டும்.

பாடல்


அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க் குறலால் - தொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை

உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.


சீர் பிரித்த பின்

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப்
பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை

உறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.

பொருள்

அடைந்தார்ப் பிரிவும் = நம்மை அடைந்தவர்களின் பிரிவும். பெற்றோரை வெட்டு பிரிவது, காதலன் / காதலி பிரிவது, பிள்ளைகளை பிரிவது, நண்பர்களைப் பிரிவது, என்று பலவிதமான பிரிவு

அரும்பிணியும் = கொடுமையான நோயும்

 கேடும் = மற்ற பலவிதமான துன்பங்களும்

உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் = இந்த உடம்பை கொண்டவர்களுக்கு வருவதால்

தொடங்கிப் = தொடக்கம் முதல்

பிறப்பு இன்னாது என்று உணரும் = இந்த பிறப்பு துன்பம் தருவது என்று உணரும்

பேரறிவினாரை = பெரிய அறிவை கொண்டவர்களை


உறப் புணர்க அம்மா என் நெஞ்சு = மிக நெருங்கிப்  பழகுக, என் நெஞ்சே

கண்டு பிடியுங்கள்...அப்படி யாராவது இருக்கிறார்களா என்று. இருந்தால் அவர்களோடு சேர்ந்து இருங்கள்.

 .


Saturday, March 15, 2014

நாலடியார் - ஊடலும் உப்பும்

நாலடியார் - ஊடலும் உப்பும் 


ஊடல் என்பது உப்பு போல.

அது இல்லாவிட்டால் உணவு சுவைக்காது.

சரி, அதுதானே உணவுக்கு சுவை சேர்க்கிறது என்று நினைத்து, சற்று அதிகமாக உணவில் உப்பை சேர்த்தால், உணவை வாயில் வைக்க முடியாது.

மிக மிக எச்சரிக்கையோடு உப்பை சேர்க்க வேண்டும்.

விலை மலிவு தான் என்று அள்ளிப் போடக் கூடாது.

ஊடல் கொள்வது எளிதுதானே என்று எப்ப பார்த்தாலும் துணைவன் அல்லது துணைவியோடு சண்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.

சமைப்பவர்களுக்குத் தெரியும், உணவில் உப்பு சற்று கூடி விட்டால் அதை சரி செய்வது எவ்வளவு கடினம் என்று. என்ன தான் சரி செய்தாலும் உணவில் நல்ல சுவை வராது. ஏதோ ஒன்று நெருடிக் கொண்டே இருக்கும்.

ஊடலும் அப்படித்தான். சற்று கூடி விட்டால் வாழ்க்கை நெருடத் தொடங்கிவிடும்.

எவ்வளவு உப்பு போட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் சுவையின் அளவைப் பொருத்தது. சிலருக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும். சிலருக்கு கொஞ்சம் குறைய வேண்டும். சுவை அறிந்து உப்பை சேர்க்க வேண்டும்.

எனவே தான், இலையின் ஓரத்தில் உப்பை வைத்து விடுவார்கள். யாருக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளட்டும் என்று.

ஊடலும் அது போலத்தான். சுவை அறிந்து சேர்க்க வேண்டும்.

"அவளை கண்டு , அவளை அணைக்கா விட்டால் அவள் வாடிப் போவாள். கண்ட பின், கொஞ்சம் ஊடல் கொள்வாள். அந்த ஊடல் காதலில் உப்பு போல. ஊடல், காதலில் ஒரு வழி"

பாடல்

முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.

பொருள்

முயங்காக்காற் = அவளை கண்டு அணைக்கா விட்டால் 

பாயும் = உடனே பாய்ந்து வரும் 

பசலை = பிரிவு துயரில், பெண்ணின் உடல் நிறம் மாறும் என்கிறார்கள். நிறம் மாறுமோ இல்லையோ, கொஞ்சம் வாடிப் போகும் என்று கொள்ளலாம்.

மற் றூடி = மற்று ஓடி = மற்ற படி ஊடல் கொண்டு

உயங்காக் கால் = உயங்குதல் என்றால் வாடுதல், மெலிதல், சோர்தல் என்று பொருள். ஊடல் கொண்டு வாடாவிட்டால் 

உப்பின்றாம் காமம் = காமம் உப்பு சப்பு இல்லாமல் போய் விடும்


வயங்கு = வயங்குதல் என்றால் ஒளி வீதல். சிறந்து இருத்தல் 

கோதம் = ஓதம் = ஓதம் என்றால் கடலின் நீர் பெருக்கம். சில சமயம் கடல் நீர் பொங்கி ஆற்றில் உள் நோக்கி வரும். அந்த மாதிரி இடங்களுக்கு  ஓதம் பொங்கும் முகம் என்று பெயர்.  (Backwaters )

நில்லாத் =  நில்லாமல்

திரையலைக்கும் = திரை என்றால் அலை. அலை அடித்துக் கொண்டே இருக்கும்

நீள்கழித் = நீண்ட ஆற்றின் கரை

தண் = குளிர்ச்சி உடைய

சேர்ப்ப! = தலைவா

புல்லாப் = புல்லுதல் என்றால் அணுகுதல், அணைத்தல் 

புலப்பதோர் = புலத்தல் என்றால் ஊடுதல்

ஆறு = வழி

ஊடலும் கூட கூடலுக்கு ஒரு வழிதான் என்கிறது நாலடியார்.





 

Friday, March 7, 2014

நாலடியார் - துணையிலாற்கு இம் மாலை என் செய்யும்

நாலடியார் - துணையிலாற்கு இம் மாலை என் செய்யும் 


மாலை வரும். அவன் வரும் வேளை வரும் என்று கன்னி அவள் காத்திருந்தாள்.

வருவான் காதலன், வந்தபின் தருவான் காதல் இன்பம் நூறு என்று வரும் வழி பார்த்த விழி பூத்திருந்தாள்.

பூவை எடுத்து அந்த பூவை மாலை தொடுத்தாள்.

மாலை வரும் அவனுக்கு என்று மாலை தொடுத்து வைத்தாள்.

மயக்கும் மாலையும் மெல்ல மெல்ல வந்தது.

வந்தார் மற்றோர் எல்லாம்.

அவன் வரவில்லை. வருவான். கொஞ்சம் நேரம் ஆகலாம். அவளுக்கு பொறுக்கவில்லை.

கவலை மாலை மாலையாக நீராக வடிந்தது.

கை மாலை கை நழுவி விழுந்தது.

அவன் வருவானா ? அவள் தனிமை தீர்பானா ?

பாடல்

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

பொருள்

கம்மஞ்செய் மக்கள் = கம்மம் செய்யும் மக்கள்

கருவி ஒடுக்கிய = தங்கள் கருவிகளை எடுத்து வைத்து விட்டார்கள். வேலை முடிந்தது.

மம்மர்கொள் = மயக்கம் தரும்

மாலை = மாலை

மலராய்ந்து = மலர் + ஆய்ந்து. மலர்களை ஆராய்ந்து எடுத்து

பூத்தொடுப்பாள் = பூக்களை மாலையாக தொடுப்பாள்

கைம்மாலை = கையில் உள்ள மாலையை

இட்டுக்  = தரையில் போட்டு

கலுழ்ந்தாள் = கவலைப் பட்டாள்

துணையில்லார்க்கு = துணை இல்லாதவர்களுக்கு

இம்மாலை = இந்த மலர் மாலையை 

என்செய்வ தென்று  = வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று.


அவள் சோகம், அவள் தனிமை உங்கள் இதயம் தொடுகிறதா ? எத்தனையோ ஆண்டுகளைத் தாண்டி   அவளின் தனிமை சோகம் நம் நெஞ்சை ஏதோ செய்கிறது அல்லவா ?

அதுதான் இலக்கியம். 

Wednesday, February 19, 2014

நாலடியார் - பேரும் பிறிதாகி தீர்த்தமாம்

நாலடியார் - பேரும் பிறிதாகி தீர்த்தமாம் 


ஊருக்குள் சாக்கடை இருக்கும். கழிவு நீர் எல்லாம் அதன் வழியாகச் செல்லும். கிட்ட போக  முடியாது.துர் நாற்றம்  வீசும்.

அந்த சாக்கடை சென்று கங்கையில் கலக்கும். பின் அந்த கங்கை கடலில் சேரும்.

அப்படி கங்கையில் சேர்ந்த பின் , கடலில் சேர்ந்த பின் அது தீர்த்தம் என்றே அறியப்படும். கங்கை எது, கடல் எது, சாக்கடை எது என்று தெரியாது.

அது போல , நாம் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் நல்லவர்களோடு சேரும் போது , அவர்களோடு பழகும் போது நம் குறைகள் மறைந்து நாமும் தீர்த்தமாவோம்.

அவர்கள் சொல்வது நம் காதில் விழும். அவர்கள் செய்யும் செயல்கள் நம்மையும் அவர்கள் போல இருக்கத் தூண்டும். அல்லவை விலகி நல்லவை வந்து சேரும்.

எனவே நல்லவர்கள் மத்தியில் இருக்க வேண்டும்.

பாடல்


ஊரங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓரும்
குல மாட்சியில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நல்லாட்சி நல்லாரைச் சார்ந்து.

பொருள் 

ஊரங்கணநீர் = ஊர் + அங்கண + நீர் = அங்கணம் என்றால் கழிவு, சுத்தம் செய்யும் இடம். அப்படி வரும் கழிவு நீர்

உரவு நீர் = வலிமையான நீர். கடல் என்று கொள்ளலாம். அல்லது கங்கை போன்ற பாவம் தீர்க்கும் நீர் என்றும் கொள்ளலாம்.

சேர்ந்தக்கால் = சேர்ந்த பின்

பேரும் பிறிதாகித் = சாக்கடை என்ற பேர் மாறி 

தீர்த்தமாம் = தீர்த்தம் என்று அறியப்படும் 

ஓரும் = மதிக்கத்தக்க 

குல மாட்சியில்லாரும் = குல மாட்சி இல்லாரும். குலப் பெருமை இல்லாதவர்களும்

குன்றுபோல் நிற்பர் = குன்றைப் போல உயர்ந்து நிற்பார்கள். உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக உயர்ந்து நிற்பார்கள். 

நல்லாட்சி நல்லாரைச் சார்ந்து = நல்ல குணம் உள்ள நல்லவர்களை சார்ந்து இருக்கும்போது

சாக்கடை தீர்த்தம் ஆகும் என்றால், நாம் நல்லவர்களாக மாட்டோமா ?

உங்களைச் சுற்றி உள்ளவர்கள், நீங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று ஒரு முறை  நினைத்துப் பாருங்கள்.


Tuesday, February 11, 2014

நாலடியார் - தழீஇம் தழீஇம் தண்ணம் படும்

நாலடியார் - தழீஇம் தழீஇம் தண்ணம் படும்


யாரோடு வேண்டுமானாலும் சண்டை இட்டு வென்று விடலாம்....ஒரே ஒரு ஆளைத்  தவிர.அந்த ஒரு ஆளை இது வரை வென்றவர் யாரும் இல்லை. அவர் தான் எமன். கூற்றுவனை வென்றவர் யாரும் இல்லை. எல்லோரும் ஒரு நாள் அவனிடம் தோற்றுத்தான் போவோம்.

அவன் வந்து நம்மை வேண்டு, நம்மை கட்டி இழுத்துக் கொண்டு போவான். அப்போது தண்ணம் என்ற பறை தழீஇம் தழீஇம் என்று கொட்டும். (டண்டனக்கா மாதிரி ).

நம்முடைய நாள் அளவு கடந்தது அல்ல. அதற்கு ஒரு எல்லை உண்டு. அது முடியும் போது அவர் வந்து  விடுவார்.

அவர் வருவதற்குள் நிறைய பொருள் சேர்த்து வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.  எல்லாவற்றையும் கொண்டா போகப் போகிறீர்கள்.

பாடல்

இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.


பொருள் 

இழைத்தநாள் = வாழ் நாள்

எல்லை இகவா = எல்லை கடந்து அல்ல

பிழைத்தொரீஇக் = பிழைத்தது இல்லை

கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை = கூற்றுவனொடு சண்டை இட்டு தப்பித்தவர் இங்கு இல்லை. எங்கு குதித்து, என்ன பாய்ச்சல் காட்டினாலும் பிடித்துக் கொள்வான் 

ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் = நிறைய பொருள் சேர்த்து வைத்து உள்ளவர்கள்

வழங்குமின் = மற்றவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்

 நாளைத் = நாளை

தழீஇம் தழீஇம் =  தழீஇம் தழீஇம் என்ற ஒலியோடு 

தண்ணம் படும் = தண்ணம் என்ற  இழவு பறை ஒலிக்கும்



Wednesday, February 5, 2014

நாலடியார் - மலையில் ஆடும் மேகம் போல

நாலடியார் - மலையில்  ஆடும் மேகம் போல 


மேகம்.

அழகழாக தோன்றும். ஒன்று மயில் போல் இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கும்போதே யானை போல் மாறும். சிறிது நேரத்தில் மான் போல மாறும்....இப்படி மாறி மாறி கடைசியில் பிரிந்து சிதறி காணாமல் போகும்.

மனித வாழ்க்கையும் அப்படித்தான்....குழந்தை, சிறுவன்/சிறுமி, வாலிபம், நடு வயது, முதுமை, இறப்பு என்று மாறிக் கொண்டே இருக்கும்.

இளமை மாறிப் போகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இளமை நிலையானது அல்ல.

 இந்த உடம்பு நன்றாக உறுதியாக இருக்கும் போதே இந்த உடல் பெற்ற பயனை அடைந்து விட வேண்டும்.

அப்புறம் செய்யலாம், அப்புறம் படிக்கலாம், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது...

யாருக்குத் தெரியும் அப்புறம் எப்புறம் வரும் என்று ?

பாடல்

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.


பொருள் 

யாக்கையை = உடலை

யாப்புடைத்தாப் = நன்றாக, உறுதியாக, ஒரு குறையும் இல்லாமல்

பெற்றவர் = பெற்றவர்கள் . தங்கள் முன் வினைப் பயனாக நல்ல உடலைப் பெற்றவர்கள்

தாம்பெற்ற = தாங்கள் பெற்ற

யாக்கையா லாய  = உடம்பால் பெறக் கூடிய

பயன்கொள்க = பயனை அடைய வேண்டும்

யாக்கை = உடம்பு

மலையாடு மஞ்சுபோல் = மலைமேல் ஆடும் மேகம் போல

தோன்றி = தோன்றி

மற் றாங்கே = மற்றபடி அங்கே

நிலையாது நீத்து விடும் = நிலையாக இல்லாமல் மறைந்து போகும்


Monday, February 3, 2014

நாலடியார் - இளமை நிலையாமை

நாலடியார் - இளமை நிலையாமை 


இளமை என்றும் நம்மோடு இருக்காது. போன பின் , ஐயோ உடம்பில் இளமை இருந்த போது அதைச் செய்து இருக்கலாமே, இதைச் செய்து இருக்கலாமே என்று வருந்துவதால் பயனில்லை.

உடலில் இரத்தம் சூடாக இருக்கும் போது, காம வழிப் பட்டு, அதன் பின்னாலே போனவர்களுக்கு மெய் வழி காணும் வழி இல்லை.

பாடல்

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

பொருள் 

சொல்தளர்ந்து = நாக்கு குழறும். வார்த்தை தடுமாறும்.

கோல்ஊன்றிச்= கோல் ஊன்றி. உடல் தளரும்

சோர்ந்த நடையினராய்ப் = மிடுக்கான நடை போய் தளர்ந்த நடை வரும்

பல் கழன்று = பல் விழுந்து

பண்டம் = உடல்

பழிகாறும் = பழிக்கு ஆளாகும்

இல்செறிந்து = வீட்டில் இருந்து

காம நெறிபடருங் = காம வழியில் செல்லும்

கண்ணினார்க் கில்லையே = கண்களைக் கொண்டவர்களுக்கு இல்லையே

ஏம நெறிபடரு மாறு = உண்மையான மெய் வழியில் செல்லும் பாதை


Saturday, February 1, 2014

நாலடியார் - தனிமை

நாலடியார் - தனிமை 


வயதாகும்.

பிள்ளைகள் எங்கெங்கோ போய் விடுவார்கள்.

நண்பர்களுக்கும் வயதாகி ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியுமோ இல்லையோ.

உறவினர், தெரிந்தவர், உடன் வேலை பார்த்தவர் என்று யாரும் உடன் இல்லாத் தனிமை வந்து சேரும்.

வாழ்க்கையில் அதுவரை செய்தது என்ன, மனைவியும், பிள்ளைகளும் என்ன, உறவு நட்பு இது எல்லாம் என்ன என்று மனம் தனிமையில் இருந்து சிந்திக்கும்.

சிந்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?

வாழ்வின் வெறுமையை, தனிமையை சோகம் ததும்பச் சொல்கிறது நாலடியார்


பாடல்

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன ;- உட்காணாய் ;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி

பொருள் 

நட்பு நார் அற்றன = பூவை நார் கட்டி மாலை ஆக்குவது போல, நட்பு என்ற நார் நம்மை பிணித்து வைக்கும். அந்த நாரும் ஒரு நாள் அற்றுப் போய் விடும். நண்பர்கள் போய் விடுவார்கள்.

 நல்லாரும் அஃகினார் = நம் கூட பழகி , கூட இருந்த நல்லவர்களும் நம் வாழ்வில் இல்லாமல் போய் விடுவார்கள். கெட்டவர்கள் போனால் என்ன கவலை. நல்லவர்கள் போய் விடுவார்கள்.


அற்புத் தளையும் அவிழ்ந்தன = அன்பு என்பது இங்கு அற்பு என திரிந்து வந்தது. அன்புத்  தளையும் அவிழ்த்து என்று படிக்க வேண்டும். நம்மிடம் அன்பு கொண்டவர்களும் இல்லாமல் போவார்கள். அவர்களே இல்லாமல் போகலாம் அல்லது அவர்களின் அன்பு இல்லாமல் போகலாம். 


 உட்காணாய் = உள் காணாய். உள் நோக்கிப் பார். தன்னைத் தான் அறி

வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? = வாழ்க்கையின் பொருள் என்ன ? அர்த்தம் என்ன ?

வந்ததே = வந்ததே

ஆழ்கலத் தன்ன கலி = கடலில் செல்லும் கப்பல் போன்ற துன்பம். கப்பல் முதலில் தெரியாது, பின்னர் சின்ன புள்ளி போலத் தெரியும், கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டே வரும், கடைசியில் மிகப் பெரிதாக கிட்டே வந்து நிற்கும். இவ்வளவு பெரிய கப்பலா என்று பிரமிக்க வைக்கும். வாழ்வில் தனிமை என்ற  துன்பம் இப்போது தெரியாது. கிட்ட வரும்போது தெரியும்.



Friday, December 28, 2012

நாலடியார் - பேச்சா ? குரைப்பா?


நாலடியார் - பேச்சா ? குரைப்பா?


கல்வி அறிவை பெறுவது என்பது நம் கலாசாரமாய் இருந்திருக்கிறது. நம் இலக்கியங்களில் எவ்வளவு தூரம் பின்னோக்கி போனாலும், கல்வி கற்றவர்கள் நம் நாட்டில் மிகவும் போற்றப் பட்டு இருக்கிறார்கள். செல்வம், படை பலம் எல்லாவற்றையும் விட கல்வி மிகவும் போற்றப் பட்டு இருக்கிறது. அது இன்றும் தொடர்வது இதம் அளிக்கும் செய்தி. 

இங்கே நாலடியார் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 

படிக்காத முட்டாள், படித்தவர்கள் மத்தியில் இருப்பதை பார்க்கிறோம். அரசியல் வாதிகள், பணம் படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கினால், பணத்தினால் கற்றோர் நிறைந்த சபையில் இடம் பிடித்து விடுகிறார்கள். அப்படி இடம் பிடித்தாலும் பரவாயில்லை, எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பேசவும் தொடங்கி விடுவார்கள். இது எப்படி இருக்கிறந்து என்றால், பெரிய சபையில் நாய் நுழைந்த மாதிரி. அது நுழைந்ததே தப்பு. சரி, நுழைந்து விட்டது. பேசாமலாவது இருக்கலாம் அல்லவா ? அதால் இருக்க முடியாது. அது பேசவும் ஆரம்பித்தால், அது எப்படி இருக்கும். நாயின் குரைப்பாகத்தான் இருக்கும். அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா ? இனிமை இருக்குமா ? 

பாடல் 

Tuesday, August 7, 2012

நாலடியார் - அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்தவைகள்


நாலடியார் - அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்தவைகள்


அறியாத தெரியாத பருவத்தில் கண்டவர்களோடு சேர்ந்து நாம் சில நல்லது அல்லாத காரியங்களை செய்து இருக்கலாம்.

அந்த கெட்ட பழக்கங்கள் நம்மை விடாமல் தொடர்ந்தும் வரலாம். 

அவற்றில் இருந்து எப்படி விடு படுவது ?

எப்படி கெட்டவர்களோடு சேர்ந்த போது கெட்ட பழக்கம் வந்ததோ, அது போல் நல்லவர்களோடு சேர்ந்தால் நல்ல பழக்கம் தானே வரும்...அப்படி நல்ல பழக்கம் வரும்போது கெட்ட பழக்கங்கள் மறைந்து போகும்.

இரவில், புல்லின் மேல் பனி படர்ந்து இருக்கும். அதுவே காலையில் சூரியன் வந்தவுடன், மறைந்து போய் விடும். அது போல கெட்ட பழக்கங்கள் நல்லவர்கள் தொடர்பால் நீங்கி விடும். 

Monday, July 2, 2012

நாலடியார் - மாலை எனை வாட்டுது


நாலடியார் - மாலை எனை வாட்டுது


இந்த மாலை நேரம் தான் காதலர்களை என்ன பாடு படுத்துகிறது.

இன்று நேற்று அல்ல, நாலடியார் காலத்தில் இருந்தே இந்த பாடு தான்.

அது ஒரு சின்ன கிராமம். சில பல வீடுகள்.

இங்கே ஒரு இளம் பெண், அவளுடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பூக்களை கொண்டு மாலை தொடுத்துக் கொண்டு இருக்கிறாள்.

நேரமோ மாலை.

சாலையில், வேலை முடிந்து மக்கள் எல்லாம் வீடு திரும்பி கொண்டு இருக்கிறார்கள்.

அவளுக்கு, அவளின் காதலன் நினைவு வருகிறது.

அவனுடன் இருந்த இனிய நாட்கள் மனதில் ஓடுகிறது.

பிரிவு சோகம் அவளை சோர்வுறச் செய்கிறது.

கையில் கட்டிகொண்டிருந்த மாலை நழுவி கீழே விழுகிறது.

"ஹ்ம்ம்...இந்த மாலையெல்லாம் கட்டி என்ன பிரயோஜனம்..அவன் இல்லையே என்று ஏங்குகிறாள்.."

பாடலைப் படித்துப் பாருங்கள்...மாலையில் அந்த மாலையில் வந்த காதல் புரியும்....


Saturday, June 30, 2012

நாலடியார் - எதைப் படிப்பது?


நாலடியார் - எதைப் படிப்பது?


எதைப் படிப்பது, எவ்வளவு படிப்பது, எதை படிக்காமல் விடுவது, 

எல்லாவற்றையும் படிக்க முடியுமா ? போன்ற குழப்பங்கள் நமக்கு இருக்கும்.
எத்தனை ஆயிரம் புத்தகங்கள், வலை தளங்கள்...அனைத்தையும் படித்து மாளுமா ?

இந்த குழப்பம் இன்று வந்ததில்லை, நாலடியார் எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது. 

"படிக்க வேண்டியதோ கடல் போல் இருக்கிறது. படிக்க கிடைத்த நாட்களோ கொஞ்சம் தான். அந்த குறைந்த நாட்களிலும் ஆயிரம் தடங்கல்கள்.

எனவே, படிக்க வேண்டியதை ஆராய்ந்து, தெரிந்து எடுத்து படிக்க வேண்டும், நீரில் இருந்து பாலை பிரித்து உண்ணும் அன்னம் போல்"


Friday, June 15, 2012

நாலடியார் - அவளா இவ ? எப்படி மாறி போய்டா?


நாலடியார் - அவளா இவ ? எப்படி மாறி போய்டா?


சில பெண்களை அவர்களின் இளமை காலத்தில் பார்த்திருப்போம். அவ்வளவு அழகாக இருந்திருப்பார்கள்.

இப்ப அவர்களை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாய் இருக்கும்.

எப்படி இருந்த பொண்ணு, இப்படி ஆகிவிட்டாளே என்று.

இந்த பொண்ணுக்கா அந்த காலத்தில் படிப்பு, வேலை, வெட்டி எல்லாம் விட்டு விட்டு உருகினோம் என்று இருக்கும்.

இதை உணர்ந்த நாலடியார் பாடல் ஒன்று...

Thursday, June 14, 2012

நாலடியார் - ஏமாந்த மீன் கொத்தி பறவை


நாலடியார் - ஏமாந்த மீன் கொத்தி பறவை


அவளின் கண்களை மீன் என்று எண்ணி கொத்தி தின்ன முயன்றது மீன் கொத்திப் பறவை. 

ஆனால், கிட்ட போனவுடன் அவளின் வில் போன்ற புருவத்தை பார்த்து பயந்து கொத்தாமல் சென்று விட்டது.