திருக்குறள் - அடக்கம் அமரருள் உய்க்கும் - பாகம் 2
அடக்கம் என்பதை ஒரு ஒழுக்கமாக நம் முன்னவர்கள் கருதி இருக்கிறார்கள்.
அடக்கம் என்பது ஒரு நல்ல குணமா ? அதை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டுமா ?
அடக்கம் என்பது ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்து விடாதா ? அடக்கமாக இருப்பவர்களை உலகம் எப்படி இனம் கண்டு கொள்ளும் ? நம்மை நாம் எடுத்து சொல்லாவிட்டால் எப்படி நாம் முன்னேற முடியும் ?
எனவே அடக்கம் ஒரு தேவையற்ற குணம் என்று வாதிப்பவர்களும் உண்டு.
வள்ளுவர் சொல்கிறார்....அடக்கம் ஒருவனை தேவர்களிடையே சென்று சேர்த்து விடும். அடங்காமை பெரிய இருளில் தள்ளி விடும் என்று.
பாடல்
அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.
சீர் பிரித்த பின்
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும்.
பொருள்
அடக்கம் = அடக்கமான குணமானது
அமரருள் உய்க்கும் = ஒருவனை தேவர்களிடம் சேர்த்து விடும்
அடங்காமை = அடங்காமை என்ற குணம்
ஆர் இருள் = அடர்ந்த இருளில்
உய்த்து விடும்.= சேர்த்து விடும்
மேலோட்டமாக பார்த்தால் பொருள் அவ்வளவுதான்.
சற்று ஆராய்ச்சி செய்வோம்.
எப்படி, அடக்கம் ஒருவனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ?
அந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால், அடக்கம் என்றால் என்ன என்று ஆராய்வோம்.
எதில் அடக்கம் வேண்டும் ?
மன, மொழி, மெய்களில் அடக்கம் வேண்டும்.
மன அடக்கம்.
பேச்சில் அடக்கம்.
புலனடக்கம்.
மனம் அடங்கினால் சிந்தனை ஒன்று படும். சிதறாத சிந்தனை அறிவை வளர்க்க உதவி செய்யும். அலை பாயாத மனம் இருந்தால் ஆசை தறி கெட்டு ஓடாது.
மொழி அல்லது பேச்சில் அடக்கம். தேவையற்ற பேச்சுக்கள் , புரணி, புரட்டு,பொய், என்று சொற்குற்றங்கள் விலகிப் போகும் பேச்சில் அடக்கம் இருந்தால்.
புலன் அடக்கம் - கட்டுப்பாடு அற்று ஓடும் புலன்களை அடக்கினால் வாழ்வில் பல சிக்கல்கள் தவிர்க்கப்படும். அளவுக்கு அதிகமான தீனி, கட்டுபாடற்ற பெண்ணாசை இவை எல்லாம் மனிதனை வீழ்த்தும். புலன் அடக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றிகள் வந்து சேரும். சேர்ந்த வெற்றிகள் நிலைக்கும்.
இந்த மூன்றையும் அடக்கினால் வாழ்வு சிறக்குமா இல்லையா ?
இந்த குறளை பற்றி மேலும் சிந்திப்போம்.
------------------------------------------------- பாகம் 2 ----------------------------------------------------------
சரி, அது என்ன "அமருருள் உய்க்கும்"
உய்க்கும் என்றால் கொண்டு சேர்க்கும் என்று பொருள்.
ஓடுகின்ற ஆற்றில் மரக்கட்டையை போட்டால் அந்த ஆறு கட்டையை கடலில் கொண்டு சேர்த்து விடும். கட்டை ஒண்ணும் செய்ய வேண்டாம். சும்மா அந்த ஆற்றில் கிடந்தால் போதும்.
மிகுந்த கூட்ட நெரிசல் உள்ள ஒரு புகை வண்டி நிலையத்தில், வண்டியை விட்டு இறங்கினால், அந்த கூட்டமே நம்மை வாசல் வரை கொண்டு சேர்த்து விடும்.
ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போக வேண்டும் என்றால், சரியான வண்டியில் ஏறி அமர்ந்து விட்டால் போதும், அந்த வண்டி நம்மை சேர வேண்டிய இடத்தில் சேர்த்து விடும்.
அதற்கு உய்க்கும் என்று பெயர்.
அடக்கம் என்ற ஒரு குணம் அமைந்து விட்டால், அது உங்களை அமரர் இருக்கும் இடமான தேவ லோகத்தில் கொண்டு சேர்த்து விடும்.
சரி, அடக்கம் இல்லை என்றால் என்ன ஆகும் ?
"ஆரிருள் உய்த்து விடும் "
அது என்ன ஆரிருள் ?
மிகுந்த இருள் . அடர்ந்த இருள்.
ஏன் ஆரிருள் என்று சொன்னார் ?
இருட்டில் இருப்பவனுக்கு பக்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது.
அடக்கம் இல்லாதவன், புலன்கள் போன வழியில் போவான். அவனிடம் என்ன இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது.
அழகான மனைவி, அன்பான பிள்ளைகள், சொத்து சுகம் இவற்றை எல்லாம் கவனிக்காமல் , வேறொன்றின் பின் செல்வான். அருகில் உள்ளது தெரியாது.
அவனுக்கு எங்கே போகிறோம் என்று தெரியாது. இருட்டு.
புலன் அடக்கம் இல்லாதவன் கண்டதின் பின் சென்று உடல் நலத்தையும் அழித்து, சொத்தையும் அழித்து, சுற்றத்தையும் இழப்பான்.
அடக்கம் இன்மை இருட்டுக்குள் தள்ளி விடும்.
எங்கே இருக்கிறோம் என்று தெரியாது, என்ன இருக்கிறது என்று தெரியாது, எங்கே போகிறோம் என்று தெரியாது. கண் தெரியாத இருட்டு.
புலன் அடக்கம் இல்லாதவனைப் பார்த்தால் தெரியும் , ஏதோ குருடன் போல தவறான பாதையில் செல்வது தெரியும்.
மருத்துவர் சொல்லி இருப்பார் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என்று, ஆனால், கேட்க்காமல் நேரே அந்த கடைக்குத்தான் செல்வான்.
எனவே,
சிந்தித்துப் பாருங்கள், அடக்கம் எவ்வளவு உயர்ந்தது என்று. அடக்கம் இன்மை எத்தனை துன்பங்களுக்கு காரணம் என்று.
சாதாரண குறள் இல்லை. நீள யோசிக்க வேண்டிய குறள். வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய குறள் .