Tuesday, November 10, 2020

திருக்குறள் - தானம், தவம்

 திருக்குறள் - தானம், தவம் 


தமிழர் வாழ்கை முறையே அறம் சார்ந்ததுதான். எல்லாவற்றையும் அறத்தின் அடிப்படையிலே சிந்தித்தார்கள். அறம் என்றால் ஒரு ஒழுங்கு, இயற்கை, நியதி. 


வாழ்வை இரு பெரும் கூறாக பிரித்தார்கள் - இல்லறம், துறவறம் என்று. 

கூடி வாழ்வது, மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு, பொருள் சேர்த்தல், புகழ் சேர்த்தல் என்று பெருக்கிக் கொண்டே போவதும் அறம்தான். அது இல்லறம். 

ஒன்றும் வேண்டாம் என்று ஒவ்வொன்றாக துறப்பதும் அறம் தான். அது துறவறம். 

சேர்ப்பதும் அறம். விடுவதும் அறம். 


இல்லறம் பற்றி சில விதி முறைகள், துறவறம் பற்றி சில விதி முறைகள் என்று வகுத்து வைத்தார்கள். 


வாழ்கை ஒரு பயணம் என்றால் அது இல்லறத்தில் தொடங்கி, துறவறம் வழியாக வீடு பேற்றை அடைவது என்பதுதான். 


இல்லறத்தை ஒழுங்காகக் கடை பிடித்தால், அது நம்மை தானே துறவறத்தில் கொண்டு போய் நிறுத்தும். 


துறவறத்தை ஒழுங்காக கடை பிடித்தால் அது வீடு பேற்றில் கொண்டு போய் விட்டு விடும். 

சரி, அது எல்லாம் எதுக்கு இந்த வான் சிறப்பு என்ற அதிகாரத்தில்?


பாடல் 


தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_10.html

(pl click the above link to continue reading)

தானம் = தானம், கொடை 

தவம் = தவம் செய்வவது 

இரண்டும் = என்ற இரண்டும் 

தங்கா வியன்உலகம் =தங்காது இந்த விரிந்த உலகில் 

வானம் = வானம் 

வழங்கா தெனின் = வழங்கவில்லை என்றால் 


இதற்கு பரிமேல் அழகர் உரை எழுதி இருக்கிறார். 


தானம் என்றால் அறத்தின் வழி அடைந்த பொருளை தக்கவர்களுக்கு உவைகையுடன் கொடுத்தல் என்று. 


தவம் எனது, பொறி வழி செல்லும் புலன்களை கட்டுப் படுத்துதல் என்று பொருள்.


இதில் தானம் என்பது இல்லறத்துக்கு சொன்ன அறம். 

தவம் என்பது துறவறத்துக்கு சொன்ன அறம். 

மழை இல்லாவிட்டால் தானமும் தவமும் கெடும் என்றால் இல்லறமும், துறவறமும் கெடும் என்று அர்த்தம். அப்படி என்றால் மொத்த வாழ்க்கையே கெடும் என்று அர்த்தம். 


மழை, அறம், வாழ்கை என்று எப்படி பிணைந்து கிடக்கிறது.




Monday, November 9, 2020

திருக்குறள் - சிறப்பும் பூசனையும்

திருக்குறள் - சிறப்பும் பூசனையும் 

தேவர்கள், கடவுளர்கள் நமக்கு எல்லாம் தருகிறார்கள் என்று நாம் நம்புகிறோம். அப்படி இருந்தும், நாம் ஏன் கடவுளுக்கு படைக்கிறோம் ? 


கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல், வடை மாலை, என்று ஏன் கடவுளர்களுக்கு படைக்கிறோம்? நமக்கு இவ்வளவு தருபவர்களுக்கு இந்த சுண்டலும் பொங்கலும் தனக்குத் தானே செய்து கொள்ளத் தெரியாதா?

அது மட்டும் அல்ல, யாகம், ஹோமம் எல்லாம் செய்கிறோம். எதுக்கு? 

கடவுளர்கள், தேவர்கள் நமக்கு எல்லாம் தந்தாலும்,  அவர்களுக்கு வேண்டியதை நாம் தான் தர வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. 


அது எப்படி என்றால், ஒரு நாட்டின் பிரதம மந்திரி, முதல் மந்திரி, ஜனாதிபதி போன்றவர்கள் பெரிய அதிகாரம் படைத்தவர்கள். அவர்கள் நினைத்தால் பெரிய பெரிய விஷயங்கள் செய்ய முடியும். இருந்தும், அவர்களுக்கு உரிய சம்பளப் பணம், நாம் தரும் வரியில் இருந்து தான் போக வேண்டும். 

நாட்டின் தலைவர் தானே என்று அவரே கொஞ்சம் பணத்தை அச்சடித்துக் கொள்ள முடியாது. 

அது போல, அக்னி, வருணன், வாயு போன்ற தேவுக்களுக்கு நாம் தான்  பூஜை செய்து  யாகம் போன்றவற்றில் அவிர் பாகம் தர வேண்டும். 


இது உண்மையா, நாம் கொடுப்பது அவர்களுக்குப் போகிறதா, அதற்கு என்ன சாட்சி இருக்கிறது என்று கேட்டால், ஒன்றும் இல்லை. 


அப்படி நடப்பதாக ஒரு நம்பிக்கை. நாம் அவர்களை சார்ந்து இருக்கிறோம். அவர்கள் நம்மைச் சார்ந்து இருக்கிறார்கள் என்பது ஒரு நம்பிக்கை. 


அப்படி நாம் செய்யும் பூஜைகள் இரண்டு வகைப்படும். 


ஒன்று நாள்தோறும் செய்யும் பூஜை. மற்றது ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் பூஜைகள். 


தினப் பூஜைக்கு நித்திய பூஜை என்று, ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் பூஜைக்கு நைமித்தியம் என்றும் பெயர். 

இதைத் தமிழில் பூசனை, சிறப்பு என்று சொல்லுவார்கள். 


ஆண்டுக்கு ஒரு முறை வெகு விமரிசையாக செய்வது, கொண்டாடுவது சிறப்பு என்று வழங்கப்படும். அன்றாடம் செய்யும் பூஜைக்கு பூசனை என்று பெயர். 


இப்போது குறளை பார்ப்போம். 


பாடல் 


 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_9.html

(pl click the above link to continue reading)


சிறப்பொடு = திருவிழா, பொங்கல், தீபாவளி போன்ற ஆண்டுக்கு ஒரு முறை வரும் வழிபாடுகளும் 

பூசனை = அன்றாடம் செய்யும் வழி பாடுகளும் 

செல்லாது = நடக்காது 

வானம் = வானம், மேகம் 

வறக்குமேல் = வறண்டு போகுமானால் 

வானோர்க்கும் = வானில் உள்ளை தேவர்களுக்கும் 

ஈண்டு = இன்று 


இதில் இன்னொரு குறிப்பு என்ன என்றால், அன்றாட வழிபாட்டில் சில குறைகள் நிகழ்ந்து விடலாம்.  அவற்றை எல்லாம் நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஆண்டுக்கு ஒரு முறை, சிறப்பாக செய்வது என்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். 


தினம் தாம் சாமி கும்பிடுகிறோமே, பின் எதற்கு ஆண்டு பூஜை, திருவிழா, தேரோட்டம் என்றால் நாள் பூஜையில் நிகழ்ந்த குறைகளை சரி செய்ய. 


மழை பெய்யாவிட்டால், மனிதர்களுக்கு மட்டும் அல்ல, தேவர்கள் பாடும் திண்டாட்டம் தான். 



Sunday, November 8, 2020

பெரிய புராணம் - கேளாத ஒலி

பெரிய புராணம் - கேளாத ஒலி 


தன்னை பார்க்க விரும்புபவர்கள், அரண்மனைக்கு வெளியே இருக்கும் ஆராய்ச்சி மணியை அடிக்கலாம் என்று மனு நீதி சோழன் அறிவித்து இருந்தான். 

ஒரு நாளைக்கு எத்தனை முறை அந்த மணி அடித்து இருக்கும்? 

இப்ப நம்ம ஊர்ல அப்படி ஒரு மணி கட்டி இருந்தால், விடாமல் அடித்துக் கொண்டே இருக்கும் அல்லவா?

மனு நீதி சோழன் காலத்தில் , அந்த மணி அடிக்கப் படவே இல்லையாம். அந்த மணியின் சத்தம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அடித்தால் தானே? 

யாருக்கும் எந்த குறையும் இல்லை. இதுவரை. 

இன்று முதன் முதலாக அந்த மணி அடிக்கிறது. 


எல்லோருக்கும் தூக்கி வாரிப் போடுகிறது. 

"இது என்ன நம் மேல் பழி போடும் சத்தமா? நாம் செய்த பாவத்தின் எதிரொலியா? இளவரசனின் உயிரை எடுக்க வரும் எமனின் எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஒலியா? " என்று அனைவரும் திடுகிடு கிரார்கள். 

பாடல் 


 பழிப்பறை முழக்கோ? வார்க்கும் பாவத்தி னொலியோ? வேந்தன்

 வழித்திரு மைந்த னாவி கொளவரு மறலி யூர்திக்

கழுத்தணி மணியி னார்ப்போ? வென்னத்தன் கடைமுன் கேளாத்

தெழித்தெழு மோசை மன்னன் செவிப்புலம் புக்க போது.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_8.html

click the above link to continue reading


பழிப்பறை முழக்கோ?  = நாம் செய்த பழியினை அறிவிக்கும் முழக்கமோ?

வார்க்கும் பாவத்தி னொலியோ?  =  செய்த பாவத்தின் எதிரொலியோ?

வேந்தன் = அரசன் 

வழித் = வழியில் வந்த 

திரு மைந்த னாவி = திரு + மைந்தன் + ஆவி . இளவரசனின் ஆவியை 

கொளவரு = கொண்டு செல்ல வாவரும் 

 மறலி = எமன் 

 யூர்திக் = ஊர்த்தி, வாகனம், எருமை 

கழுத்தணி = கழுத்தில் அணிந்த 

மணியி னார்ப்போ?  = மணியின் ஆர்போ , மணியின் சத்தமோ 

வென்னத் = என்று 

தன் கடைமுன் கேளாத் = தன்னுடைய வாசலின் முன்பு எப்போதும் கேளாத 

தெழித்தெழு மோசை = பெரிதாக எழுந்த  ஓசையை 

மன்னன் செவிப்புலம் புக்க போது. = மன்னனின் காதில் விழுந்த போது 


எத்தனை மனு கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தக் காலம் எங்கே,  குறை சொல்ல ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்ததும் துடித்த  அரசாங்கம் இருந்த காலம் எங்கே. 


அப்படியும் அரசு நடத்த முடியும். 


அரசு மட்டும் அல்ல, எந்த நிறுவனத்தையும் அப்படி நடத்த வேண்டும். 


Friday, November 6, 2020

பெரிய புராணம் - ஆராய்ச்சி மணி

 பெரிய புராணம் - ஆராய்ச்சி மணி 


நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுக்கும் நம் அரசியல் தலைவர்களை நாம் நினைத்த நேரத்தில் சென்று பார்க்க முடியுமா?

பிரதம மந்திரி, முதல் மந்திரி எல்லாம் விட்டு விடுவோம். உள்ளூர் கவுன்சிலரை நாம் நினைத்த நேரத்தில் போய் பார்க முடியுமா?

 முடியாது அல்லவா?


நமக்கு என்ன குறையோ அதை ஒரு மனுவில் எழுதி அங்கு  உள்ள ஒரு கிளார்கிடம்  கொடுக்கலாம்.அல்லது புகார் பெட்டியில் போடலாம். 

ஆனா ல், அந்தக் காலத்தில், அரசர்கள் ஆண்ட காலத்தில், மனு நீதிச் சோழன் என்ற அரசன் இருந்தான். அவன் என்ன செய்தான் தெரியுமா?


வாசலில் ஒரு பெரிய மணியை கட்டி வைத்து இருந்தான். யாருக்காவது ஏதாவது குறை இருந்தால், அந்த மணியை அடித்தால் போதும். அரசன் வெளியே வந்து, மணி அடுத்தவருக்கு என்ன குறை என்று கேட்பான். 


நம்ப முடிகிறதா? 


அரசன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்த காலத்தில் , எப்படி ஆட்சி செய்து இருக்கிரறார்கள் என்று நினைக்க வியப்பாக இருக்கிறது அல்லவா?


 அவனுடைய ஆட்சியில் ஒரு நாள், அந்த மணி அடிக்கப்பட்டது. அடித்தது ஒரு மனிதன் கூட இல்லை, கன்றை இழந்த ஒரு பசு. தன் குறையை மன்னனிடம் கூற அது மணியை அடித்தது. 


பாடல் 


தன்உயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாது ஆகி

முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார

மன் உயிர் காக்கும் செம்கோல் மனுவின் பொன் கோயில் வாயில்

பொன் அணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post.html

click the above link to continue reading

தன்உயிர்க்  கன்று = தன் உயிருக்கு உயிரான கன்று 

வீயத்  = வீழ, இறந்து போக 

தளர்ந்த = அதனால் தளர்ந்த 

ஆத் = ஆ என்றால் பசு 

தரியாது ஆகி = பொறுத்துக் கொள்ள முடியாமல் 

முன் = முன்னால் (மூக்கில்) 

நெருப்பு உயிர்த்து  = நெருப்பு போல மூச்சு விட்டுக் கொண்டு 

விம்மி  = விம்மி 

முகத்தினில் கண்ணீர் வார = கண்களில் கண்ணீர் பொங்க 

மன் உயிர் காக்கும்  = நிலைத்து நிற்கும் உயிர்களை காக்கும் 

 செம்கோல்  = செங்கோல் 

மனுவின் = அரசனின் 

 பொன் கோயில் வாயில் = அரண்மனை வாயிலில் 

பொன் அணி மணியைச் = பொன்னால் செய்யப்பட்ட அந்த மணியை 

 சென்று =சென்று 

கோட்டினால் = கொம்பால் 

புடைத்தது அன்றே. = முட்டியது 

தெரிந்த கதைதான். இருந்தும் அதை சேக்கிழார் சொல்லும் விதம் இருக்கிறதே. அடடா...என்ன ஒரு தமிழ். அப்படி ஒரு சுகம். 

தமிழில் இப்படியும் கூட சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் நடை. 

அது ஒரு புறம் இருக்க, அரசியலில் எந்த உச்சத்தை தொட்டு இருக்கிறோம் என்று பாருங்கள். இன்று நமக்கு மேலை நாட்டினர் அரசியல் சொல்லித் தருகிறார்கள். 

நம் வரலாற்றை நாம் மறந்ததால் வந்த வினை. 

நம்மை நாம் அறிவோம். இலக்கியம், நமக்கு நம்மை அறிமுகப் படுத்தும். 


இதுதான் நீ, இவர்கள் தான் உன் முன்னோர்கள். அவர்கள் வழி வந்தவன் தான் நீ என்று எடுத்துச் சொல்லும். 


கேட்போமே. 



Monday, November 2, 2020

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை - பாகம் 2

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை - பாகம் 2


பாகம் 1

(பாகம் 2 கீழே உள்ளது. முதல் பாகத்தைப் படித்து விட்டால், நேரே இரண்டாவது பாகத்துக்குப் போகலாம்)



மழையின் சிறப்பு பற்றி கூறிக் கொண்டு வருகிறார்  வள்ளுவர். அடுத்த குறளில் 


"கெடுப்பதுவும், அப்படி கெட்டவர்களை மழை பெய்து காப்பதுவும் எல்லாம் மழை " என்கிறார். 

அதாவது, நல்லதும் கெட்டதும் செய்வதும் மழை என்று கூறுகிறார். 


பாடல் 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_28.html

click the above link to continue reading


கெடுப்பதூஉம்  = ஒருவரின் வாழ்வை கெடுப்பதும் 

கெட்டார்க்குச் = அப்படி வாழ்வு கெட்டவர்களுக்கு 

 சார்வாய் = உதவியாக 

மற்று ஆங்கே = அதே போல் 

எடுப்பதூஉம் = எடுத்து கொடுப்பதுவும் 

எல்லாம் மழை = எல்லாம் மழை 


இதை பார்க்க ஏதோ ஒரு சாதாரண குறள் போல் தெரிகிறது. குறளும் அதற்கு பரிமேல் அழகர் தரும் உரையும் பிரமிப்பு ஊட்டுபவை.


"கெடுப்பதூஉம் " - கெடுப்பதுவும் என்றால் என்ன? எப்படி கெடுப்பது? பெய்யாமல் கெடுப்பது என்கிறார் பரிமேல் அழகர். மழை பெய்யாவிட்டால் பயிர் பச்சை இருக்காது. உணவு உற்பத்தி இருக்காது. பசி பஞ்சம் என்று மக்கள் அவதிப் படுவார்கள். எனவே பெய்யாமல் கெடுப்பது என்று பொருள் சொல்கிறார். 

சரி, பெய்யாமல் கெடுக்கிறது. ஒத்துக் கொள்ளலாம். 

பெய்து கெடுப்பது இல்லையா? அளவுக்கு அதிகமாக பெய்து கார், பைக் எல்லாம் அடித்துக் கொண்டு போகிறது, வீடெல்லாம் சரிந்து விழுகிறது. அறுவடைக்கு வைத்த பயிர் எல்லாம்  அகாலத்தில் மழை பெய்தால் நாசமாகிப் போகாதா.  அது என்ன பெய்யாமல் கெடுப்பது? பெய்து கெடுப்பதை , வெள்ளப் பெருக்கால்  அழிவைத் தருவதை கெடுதல் என்று ஏன் சொல்லவில்லை?

மனித நாகரிகம் ஆற்றங்கரையில் தான் ஆரம்பிக்கிறது.  தண்ணீர் வேண்டும். குடிக்க, விவசாயம் செய்ய, குளிக்க, சுத்தம் செய்ய அனைத்துக்கும் நீர் வேண்டும்.  கரையை ஒட்டி உருவான நாகரீகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து  செல்கின்றன. ஆற்றை விட்டு வெகு தூரம் வரை பரவி  விடுகிறது.மக்கள் தொகை  பெருக்கத்தால் எல்லோரும் ஆற்றங்கரையில் இருக்க முடியாது. மனிதர்கள் மட்டும் அல்ல, காடுகள், அதில் உள்ள விலங்குகள், மரம் , செடி கொடிகள் எல்லாவற்றிற்கும் நீர் வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்தால் தான் , அது கரை தாண்டி ஓடினால் தான் எல்லா இடத்துக்கும்  நீர் போய்ச் சேரும். ஆற்றங்கரையில் இருப்பவர்கள் அந்த சில நாட்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விட வேண்டும். வெள்ளம் நமக்குக்குத்தான்.  ஆற்றை விட்டு மிகத் தொலைவில் இருப்பவர்களுக்கு அது வரம். 

பெய்யாமல் தான் கெடுக்கும். பெய்து  கெடுப்பதில்லை. 

கெடுப்பதுவும் அதே போல எடுப்பதுவும் என்கிறார். 


"மற்று ஆங்கே எடுப்பதுவும்" 


கெடுப்பது போலவே எப்படி உதவி செய்ய  முடியும்? 

ஒருவன் கொலை செய்வது போலவே உதவி  செய்தான் என்று எப்படிச் சொல்ல முடியும்? 


திட்டுவது போலவே வாழ்த்தினாள் என்பது சரியா? 

கெடுப்பது போலவே எடுப்பது என்றால் சரியான பிரயோகமா?


நாளை சந்திப்போமா?



பாகம் 2


சரி அல்லதான். ஆனால் சரி படுத்தப் முடியும். அதற்குத்தான் "மற்று ஆங்கு" 

என்ற சொல் பிரயோகம். 


"மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை"


மற்று என்ற சொல் வந்தால், வினையை மாற்ற வேண்டும் என்று பொருள். 

எப்படி என்று பார்ப்போம். 


வீட்டில் உள்ள பையனை கூப்பிட்டு, "நீ நேரா போய், அத்தை வீட்டுல இந்த  செய்தியை சொல்லிட்டு  கத்தரிக்காய் வாங்கிட்டு வா" என்று சொன்னால் குழப்பமாக இருக்கும் அல்லவா?

அத்தை வீட்டில் செய்தி சொல்லலாம், அவர்கள் கத்தரிக்காய் விற்பார்களா?


அதே வாக்கியத்தை 


"நீ நேரா போய், அத்தை வீட்டுல இந்த  செய்தியை சொல்லிட்டு  அப்புறம்  கத்தரிக்காய் வாங்கிட்டு வா"

இங்கே அப்புறம் என்ற சொல் "செய்தி சொல்லும்" வினையை மாற்றி "கத்தரிக்காய்  வாங்கும்" வினைக்கு நம்மை எளிதாக கொண்டு செல்கிறது அல்லவா?

அது போல,  செய்யுளில் 'மற்று' என்பது முன் சொன்ன வினையை அப்படியே மாத்திச்  செய்யச் சொல்லுவது. 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/2.html


click the above link to continue reading 

'கெடுப்பது" என்ற வினையை அப்படியே தலை கீழாக மாற்றி "எடுப்பது" என்ற வினைக்கு பொறுத்தி விடும்.


நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பல வாக்கியங்களை பார்ப்போம். 


"நீ தான அந்த படத்தை கிழிச்ச, எப்படி கிழிச்சியோ அப்படியே ஒட்டு..."


"கீழ போட்டு உடைச்சியில...எப்படி உடைச்சியோ அப்படியே ஒட்ட வை"


உடைத்த மாதிரி எப்படி ஒட்ட வைக்க முடியும்? 

நாம் பயன்படுத்தும் வாக்கியங்கள் தான்.  இங்கே 'எப்படி' என்ற சொல் அந்த வினைகளை மாற்றுவதைப் போல, செய்யுளில் "மற்று " என்ற சொல் மாற்றுகிறது. 


சரி, "ஆங்கே " என்றால் என்ன அர்த்தம். 


இந்தியாவில் மழை பெய்யாமல் கெடுத்து விட்டு, ஆப்பிரிக்காவில் போய் மழை பொழிந்தால்  அது சரியாக ஆகுமா?


எங்கு பெய்யாமல் கெடுத்ததோ "அங்கேயே" பெய்து சரிப் படுத்த வேண்டும். 


யாரைக் கெடுத்ததோ, அவரை சரி செய்ய வேண்டும். 


கெடுப்பது போல எடுக்கும் என்கிறார் வள்ளுவர். 


அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 


எவ்வளவு ஆழம். இலக்கணம். மொழிச் சுத்தம்.  ஒரு குறளில் அறிந்து கொள்ள எவ்வளவு இருக்கிறது. 

எல்லா குறளையும் படிக்க வேண்டாமா? 





Wednesday, October 28, 2020

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை

 திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை 


மழையின் சிறப்பு பற்றி கூறிக் கொண்டு வருகிறார்  வள்ளுவர். அடுத்த குறளில் 


"கெடுப்பதுவும், அப்படி கெட்டவர்களை மழை பெய்து காப்பதுவும் எல்லாம் மழை " என்கிறார். 

அதாவது, நல்லதும் கெட்டதும் செய்வதும் மழை என்று கூறுகிறார். 


பாடல் 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_28.html

click the above link to continue reading


கெடுப்பதூஉம்  = ஒருவரின் வாழ்வை கெடுப்பதும் 

கெட்டார்க்குச் = அப்படி வாழ்வு கெட்டவர்களுக்கு 

 சார்வாய் = உதவியாக 

மற்று ஆங்கே = அதே போல் 

எடுப்பதூஉம் = எடுத்து கொடுப்பதுவும் 

எல்லாம் மழை = எல்லாம் மழை 


இதை பார்க்க ஏதோ ஒரு சாதாரண குறள் போல் தெரிகிறது. குறளும் அதற்கு பரிமேல் அழகர் தரும் உரையும் பிரமிப்பு ஊட்டுபவை.


"கெடுப்பதூஉம் " - கெடுப்பதுவும் என்றால் என்ன? எப்படி கெடுப்பது? பெய்யாமல் கெடுப்பது என்கிறார் பரிமேல் அழகர். மழை பெய்யாவிட்டால் பயிர் பச்சை இருக்காது. உணவு உற்பத்தி இருக்காது. பசி பஞ்சம் என்று மக்கள் அவதிப் படுவார்கள். எனவே பெய்யாமல் கெடுப்பது என்று பொருள் சொல்கிறார். 

சரி, பெய்யாமல் கெடுக்கிறது. ஒத்துக் கொள்ளலாம். 

பெய்து கெடுப்பது இல்லையா? அளவுக்கு அதிகமாக பெய்து கார், பைக் எல்லாம் அடித்துக் கொண்டு போகிறது, வீடெல்லாம் சரிந்து விழுகிறது. அறுவடைக்கு வைத்த பயிர் எல்லாம்  அகாலத்தில் மழை பெய்தால் நாசமாகிப் போகாதா.  அது என்ன பெய்யாமல் கெடுப்பது? பெய்து கெடுப்பதை , வெள்ளப் பெருக்கால்  அழிவைத் தருவதை கெடுதல் என்று ஏன் சொல்லவில்லை?

மனித நாகரிகம் ஆற்றங்கரையில் தான் ஆரம்பிக்கிறது.  தண்ணீர் வேண்டும். குடிக்க, விவசாயம் செய்ய, குளிக்க, சுத்தம் செய்ய அனைத்துக்கும் நீர் வேண்டும்.  கரையை ஒட்டி உருவான நாகரீகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து  செல்கின்றன. ஆற்றை விட்டு வெகு தூரம் வரை பரவி  விடுகிறது.மக்கள் தொகை  பெருக்கத்தால் எல்லோரும் ஆற்றங்கரையில் இருக்க முடியாது. மனிதர்கள் மட்டும் அல்ல, காடுகள், அதில் உள்ள விலங்குகள், மரம் , செடி கொடிகள் எல்லாவற்றிற்கும் நீர் வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்தால் தான் , அது கரை தாண்டி ஓடினால் தான் எல்லா இடத்துக்கும்  நீர் போய்ச் சேரும். ஆற்றங்கரையில் இருப்பவர்கள் அந்த சில நாட்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விட வேண்டும். வெள்ளம் நமக்குக்குத்தான்.  ஆற்றை விட்டு மிகத் தொலைவில் இருப்பவர்களுக்கு அது வரம். 

பெய்யாமல் தான் கெடுக்கும். பெய்து  கெடுப்பதில்லை. 

கெடுப்பதுவும் அதே போல எடுப்பதுவும் என்கிறார். 


"மற்று ஆங்கே எடுப்பதுவும்" 


கெடுப்பது போலவே எப்படி உதவி செய்ய  முடியும்? 

ஒருவன் கொலை செய்வது போலவே உதவி  செய்தான் என்று எப்படிச் சொல்ல முடியும்? 


திட்டுவது போலவே வாழ்த்தினாள் என்பது சரியா? 

கெடுப்பது போலவே எடுப்பது என்றால் சரியான பிரயோகமா?


நாளை சந்திப்போமா?



Tuesday, October 27, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தானையைக் கண்ணின் நோக்கினான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தானையைக் கண்ணின் நோக்கினான்


என்ன சொல்லியும் கேட்க மாட்டான் என்று அறிந்து, இராவவணனை விட்டு வீடணன் விலகினான் என்று நேற்றுப் பார்த்தோம். 

வீடணனோடு, அவனுடைய அமைச்சர்களும் உடன் வந்தார்கள். 

அவர்கள் அடுத்து என்ன செய்தார்கள்? 

அது கேள்வி.


அவர்கள் இராமனும் அவன் படையும் இருக்கும் இடமான கடற் கரைக்கு வந்தார்கள். 


நீங்கள் இரவில் ஒரு உயரமான இடத்தில் இருந்து ஒரு ஊரைப் பார்த்தால் எப்படித் தெரியும்?  தெருவெங்கும் விளக்குகள் எரியும். கை நிறைய வைரக் கற்களை எடுத்து விசிறி எறிந்த மாதிரி ஒளி விடும் அல்லவா? 


வீடணனும், அவன் அமைச்சர்களும் கடற்கரைக்கு வந்து பார்க்கிறார்கள்.


இரவு நேரம். தீ பந்தங்கள் எரிகின்றன. நிலவொளியில் அந்த மணற்பரப்பு பால் போல கிடக்கிறது. எரியும் தீப்பந்தங்கள் அந்த பாற்கடலில் முளைத்த தாமரை மலர்களைப் போல்  சிவந்த நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிகிறது. 


கம்பனின் கற்பனை வளம். 

 

பாடல் 

அளக்கரைக் கடந்து, மேல் அறிந்து, நம்பியும்,

விளக்கு ஒளி பரத்தலின், பாலின் வெண் கடல்

வளத் தடந் தாமரை மலர்ந்ததாம் என,

களப் பெருந் தானையைக் கண்ணின் நோக்கினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_27.html

Pl click the above link to continue reading


அளக்கரைக் = கடற்கரை 

கடந்து = சென்று 

மேல் அறிந்து = மேல் நின்று பார்க்கும் போது 

நம்பியும் = வீடணனும் 

விளக்கு ஒளி பரத்தலின் = தீப்பந்தங்களின் ஒளி அங்கொன்றும் இங்கொன்றுமாக  தெரிவது 


பாலின் வெண் கடல் = பாற்கடலில் 


வளத் = வளமையான , செழிப்பான 

தடந் தாமரை மலர்ந்ததாம் என = குளிர்ந்த தாமரை மலர்கள் மலர்ந்து இருந்ததைப் போல 


களப் = போர் களத்தில் 

பெருந் தானையைக்  = பெரிய படையை 

கண்ணின் நோக்கினான். = கண்ணால் கண்டான் 


பயம், போட்டி, பொறாமை, போன்றவற்றால் நம் மனம் நாளும் குறுகிப் போகிறது. 

குறுகிய மனத்தை விரிவாக்க இலக்கியங்கள் உதவுகின்றன. 


இப்படி ஒரு காட்சியை மனதில் ஓட விட்டுப் பாருங்கள். 


கற்பனை விரியும்.மனமும்தான்.