Friday, November 6, 2020

பெரிய புராணம் - ஆராய்ச்சி மணி

 பெரிய புராணம் - ஆராய்ச்சி மணி 


நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுக்கும் நம் அரசியல் தலைவர்களை நாம் நினைத்த நேரத்தில் சென்று பார்க்க முடியுமா?

பிரதம மந்திரி, முதல் மந்திரி எல்லாம் விட்டு விடுவோம். உள்ளூர் கவுன்சிலரை நாம் நினைத்த நேரத்தில் போய் பார்க முடியுமா?

 முடியாது அல்லவா?


நமக்கு என்ன குறையோ அதை ஒரு மனுவில் எழுதி அங்கு  உள்ள ஒரு கிளார்கிடம்  கொடுக்கலாம்.அல்லது புகார் பெட்டியில் போடலாம். 

ஆனா ல், அந்தக் காலத்தில், அரசர்கள் ஆண்ட காலத்தில், மனு நீதிச் சோழன் என்ற அரசன் இருந்தான். அவன் என்ன செய்தான் தெரியுமா?


வாசலில் ஒரு பெரிய மணியை கட்டி வைத்து இருந்தான். யாருக்காவது ஏதாவது குறை இருந்தால், அந்த மணியை அடித்தால் போதும். அரசன் வெளியே வந்து, மணி அடுத்தவருக்கு என்ன குறை என்று கேட்பான். 


நம்ப முடிகிறதா? 


அரசன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்த காலத்தில் , எப்படி ஆட்சி செய்து இருக்கிரறார்கள் என்று நினைக்க வியப்பாக இருக்கிறது அல்லவா?


 அவனுடைய ஆட்சியில் ஒரு நாள், அந்த மணி அடிக்கப்பட்டது. அடித்தது ஒரு மனிதன் கூட இல்லை, கன்றை இழந்த ஒரு பசு. தன் குறையை மன்னனிடம் கூற அது மணியை அடித்தது. 


பாடல் 


தன்உயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாது ஆகி

முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார

மன் உயிர் காக்கும் செம்கோல் மனுவின் பொன் கோயில் வாயில்

பொன் அணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post.html

click the above link to continue reading

தன்உயிர்க்  கன்று = தன் உயிருக்கு உயிரான கன்று 

வீயத்  = வீழ, இறந்து போக 

தளர்ந்த = அதனால் தளர்ந்த 

ஆத் = ஆ என்றால் பசு 

தரியாது ஆகி = பொறுத்துக் கொள்ள முடியாமல் 

முன் = முன்னால் (மூக்கில்) 

நெருப்பு உயிர்த்து  = நெருப்பு போல மூச்சு விட்டுக் கொண்டு 

விம்மி  = விம்மி 

முகத்தினில் கண்ணீர் வார = கண்களில் கண்ணீர் பொங்க 

மன் உயிர் காக்கும்  = நிலைத்து நிற்கும் உயிர்களை காக்கும் 

 செம்கோல்  = செங்கோல் 

மனுவின் = அரசனின் 

 பொன் கோயில் வாயில் = அரண்மனை வாயிலில் 

பொன் அணி மணியைச் = பொன்னால் செய்யப்பட்ட அந்த மணியை 

 சென்று =சென்று 

கோட்டினால் = கொம்பால் 

புடைத்தது அன்றே. = முட்டியது 

தெரிந்த கதைதான். இருந்தும் அதை சேக்கிழார் சொல்லும் விதம் இருக்கிறதே. அடடா...என்ன ஒரு தமிழ். அப்படி ஒரு சுகம். 

தமிழில் இப்படியும் கூட சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் நடை. 

அது ஒரு புறம் இருக்க, அரசியலில் எந்த உச்சத்தை தொட்டு இருக்கிறோம் என்று பாருங்கள். இன்று நமக்கு மேலை நாட்டினர் அரசியல் சொல்லித் தருகிறார்கள். 

நம் வரலாற்றை நாம் மறந்ததால் வந்த வினை. 

நம்மை நாம் அறிவோம். இலக்கியம், நமக்கு நம்மை அறிமுகப் படுத்தும். 


இதுதான் நீ, இவர்கள் தான் உன் முன்னோர்கள். அவர்கள் வழி வந்தவன் தான் நீ என்று எடுத்துச் சொல்லும். 


கேட்போமே. 



1 comment:

  1. இந்த சேக்கிழார் பாடலிருந்து முன் காலத்தில் சில அரசர்களால் நியாயத்திற்கும் நீதிக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் நன்றாக புலப்படுகிறது.. தற்காலத்தில் நடைமுறை மாறுபட்டுலிருந்தாலும் நீதி பரிபாலனம் நியாயமாக அமைய வேண்டும் என்பதை அருமையாக .விளக்கி உள்ளீர்கள்..

    ReplyDelete