Wednesday, March 17, 2021

கம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே

கம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே 


திரும்பிப் பார்க்கிறோம். நாம் சாதித்தது எத்தனை. எவ்வளவு செல்வம் சேர்த்து இருக்கிறோம். எவ்வளவு படித்து இருக்கிறோம். எத்தனை காரியங்களை சாதித்து இருக்கிறோம். நம் அறிவின் மேல், நம் முயற்சியின் மேல், நமக்கு ஒரு பெருமை உண்டாகிறது. நான் எவ்வளவு திறமைசாலி, அறிவுள்ளவன், ஆற்றல் உள்ளவன் என்று பெருமிதத்தில் நெஞ்சு நிறைகிறது.


அது சரிதானா?


எல்லாம் நம் திறமை தானா? நம் அறிவுதானா? இப்படியே இன்னும் மீதி நாட்களும் போகும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா? 


நம்மை விட பெரிய அறிவாளிகள், திறமை சாலிகள் எல்லாம் மண்ணைக் கவ்வி இருக்கிறார்கள். வாழ்க்கை எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களை எல்லாம் சும்மா சருகு போல் தூக்கி வீசி விட்டுப் போய் இருக்கிறது. 


இராவணன் எவ்வளவு பெரிய ஆள். அறிவு, வீரம், பக்தி, பராகிரமம், ஆளுமை, என்று அனைத்திலும் உயர்ந்து நின்றவன். நீண்ட நெடிய ஆயுள். முன்னே எதிர் நிற்க பகை இல்லை.  அளவற்ற செல்வம். 


என்ன ஆயிற்று?


எது அவனைப் புரட்டிப் போட்டது? 


அவனுக்குத் தெரியாத அறமா? மாற்றான் மனைவியை நினைப்பது குற்றம் என்று அவனுக்குத் தெரியாதா? அவனுக்கு எவ்வளவு பேர் அறிவுரை சொன்னார்கள். கேட்டானா? இல்லையே. ஏன்?


எது அவன் அறிவை மறைத்தது? 


விதி. 


நம் தமிழ் இலக்கியம் விதியை ஆழமாக நம்பியது. நம் மதங்களும் விதியை நம்பின. 


இராவணன் கும்ப கர்ணனை எழுப்பி போருக்குப் போகச் சொல்கிறான். கும்பகர்ணனுக்கு தூக்க கலக்கம். எதுக்கு போர்? யாருடன் போர் என்று கேட்கிறான். 


எல்லாம் சொன்னவுடன், கும்பகர்ணன் வருந்திச் சொல்கிறான். 


"இராவணா, போர் வந்து விட்டதா? அதுவும் பொன் போன்ற சீதையை முன்னிட்டா இந்தப் போர்? கண்ணில் விஷம் கொண்ட பாம்பை போன்ற சீதையை நீ இன்னும் விடவில்லையா ? இது விதியின் செயல் அன்றி வேறு என்ன " என்கிறான். 


பாடல் 



 ‘கிட்டியதோ செரு? கிளர் பொன் சீதையைச்

சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால்

திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை

விட்டிலையோ? இது விதியின் வண்ணமே!



பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_17.html

(click the above link to continue reading)


 ‘கிட்டியதோ செரு? = போர் கிடைத்ததா 

கிளர் = சிறந்த 

பொன் = பொன் போன்ற 

 சீதையைச் = சீதையை 

சுட்டியதோ? =  முன்னிறுத்தியா. அவள் பொருட்டா ?

முனம் சொன்ன சொற்களால் = முன்பு நானும், வீடணனும், மற்றவர்களும் சொன்ன அறிவுரைகளால் 


திட்டியின் = திட்டி = திருஷ்டி = பார்வை 


விடம் அன்ன = விஷம் போன்ற 


கற்பின் செல்வியை = கற்பின் செல்வியை 


விட்டிலையோ? = நீ இன்னமும் விட வில்லையா ?


இது விதியின் வண்ணமே! = இது விதியின் விளையாட்டே 


பாம்பு கடித்தால் தான் விஷம் ஏறும். திட்டி விடம் என்று ஒரு பாம்பு இருக்கிறது.  அது கடிக்க வேண்டாம். கண்ணில் இருந்து விஷத்தைக் கக்கும். ஆள் காலியாகி விடுவான். அது போல, சீதை தொட வேண்டாம். அவள் பார்வை உன்னை தகித்து விடும். 


நம் அறிவு என்று பெரிதாக நினைக்கக் கூடாது. 


தேவர்களையும், முனிவர்களையும், ஒன்பது கோள்களையும் ஆட்டிப் படைத்த இராவணனை விதி தூக்கிப் போட்டது என்றால் நாம் எம்மாத்திரம்?


இலக்கியங்கள் நமக்கு நம் எல்லைகளை அறிந்து கொள்ள உதவும். உலகியல் நிகழ்வுகளால் நாம் ரொம்பவும் அலைகழிக்கப் படாமல் இருக்க அவை உதவும். 


உதவட்டும். 


திருக்குறள் - உரைப்பாயிரம் - பாகம் 3

 திருக்குறள் - உரைப்பாயிரம் - பாகம் 3 


வாழ்வின் நோக்கம் என்ன ? (வீடு பேறு அடைவது)

அதை அடையும் வழி என்ன ? (அறம் பொருள் இன்பம் வீடு என்ற வழி)

அதில் வீடு பற்றி வள்ளுவர் ஏன் சொல்லவில்லை (அது சிந்தையும், சொல்லும் செல்லா இடத்தது என்பதாலும், துறவறம் நோக்கிய காரண வகையால் அறிந்து கொள்ளலாம் என்பதால்)


அதில் அறம் என்றால் என்ன (மனு முதலிய நூல்களில் விதித்தவற்றை செய்தாலும், விலக்கியவற்றை விலக்குதலும் ).


என்பது வரை முந்தைய மூன்று ப்ளாகுகளில் பார்த்தோம். 

இப்போது, அறம் , பொருள் இன்பம் என்ற மூன்றில் அறம் என்றால் என்ன என்று எடுத்துக் கொள்கிறார். 


"அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்."


அறத்துக்கு மூன்று கூறுகள். 


அதாவது, ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்பது. 


சரி, ஒழுக்கம் என்றால் என்ன என்று அடுத்து சொல்ல வருகிறார். 

எப்படி ஒரு ஆற்றோட்டம் போல அவர் எழுதுகிறார் என்று பாருங்கள். 

ஒவ்வொரு படியாக எடுத்து வைக்கிறார். எழுதினால் இப்படி எழுத வேண்டும். 


"அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்."


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/3.html

(click the above link to continue reading)


இரண்டு வார்த்தைகளை கவனியுங்கள் - ஒன்று "வருணத்தார்" , இன்னொன்று "நிலைகள்" 

அது என்ன வர்ணம், நிலை ?

இங்கு வர்ணாசிரம தர்மத்தை ஒரு வரியில் சொல்லி விட்டுப் போகிறார். மிகப் பெரிய விடயம். நிதானமாக விளங்குவோம். 

"அந்தணர் முதலிய வருணத்தார் " என்று கூறும் போது அந்தணர் தவிர வேறு வர்ணங்களும் இருக்கின்றன என்று நமக்குப் புரிகிறது. அவை என்னென்ன என்ற கேள்வி அடுத்தது வரும். 


"பிரமசரிய முதலிய நிலைகளினின்று" பிரமச்சரிய முதலிய நிலை என்றால் இன்னும் பல நிலைகள் இருக்கின்றது என்று அர்த்தம். அவை என்னென்ன? 


இந்த வர்ணம் + நிலை தான் வர்ணாசிரம தர்மம் என்று கூறப் பட்டது.  அது ஒரு ஒழுங்கு முறை. வாழ்கை நெறி. 


இன்று வர்ணாசிரம தர்மம் என்றால் ஏதோ ஒரு தீண்டத்தகாத வார்த்தை என்பது போல் ஆகிவிட்டது. 


"காய்த்தல் உவத்தில் இன்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கடன்". 

நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நம்மால் ஒத்துக் கொள்ள முடிகிறதோ இல்லையோ, அது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ளாமலேயே ஒன்று சரி அல்லது தவறு என்று எப்படி முடிவு செய்வது? 


இந்த வர்ணம் + நிலை பற்றி அடுத்த ப்ளாகில் சிந்திக்க இருக்கிறோம். 








Tuesday, March 16, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 2

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 2 

முதல் பாகத்திலே, கீழ்கண்ட பத்தியின் உரையை பார்த்தோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1.html

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.


இனி மேலே தொடருவோம்....


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/2.html


click the above link to continue reading



சரி, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்பதை சொல்லியோ, சிந்தித்தோ அறிந்து கொள்ள முடியாது என்பதால், அதை காரண வகையால் அன்றி இலக்கண வகையால் அறிய முடியாது என்பதால், முதல் மூன்றை எடுத்துக் கொள்கிறார். 


அதில் 


அறம் என்றால் என்ன என்று சிந்திக்கத் தலைப்படுகிறார் பரிமேலழகர். 


தர்மம், நியதி, அறம், ஒழுங்கு, சட்டம் என்பதற்கு யாராலாவது சரியான விளக்கம் கூற முடியுமா?  


இதுதான் அறம் என்று சுட்டி கூற முடியுமா?


கீழ்க் கோர்டில் சொன்னதை மேல் கோர்ட் மறுக்கிறது. எது அறம் என்பதில் எவ்வளவு குழப்பம் இருக்கிறது. 


மது அருந்தலாமா? அது அறம் இல்லை என்றால், இன்னொரு மதத்ததில், அந்த மதத்தின் இறைவனே மக்களுக்கு மதுவும் மீனும் கொடுத்ததார் என்று வருகிறது. அவர்கள் எல்லோரும் அறம் வழுவியவர்களா?


மாமிசம் உண்ணலாமா கூடாதா? 


பலதார மணம் சரியா தவறா? 


விவாகரத்து சரியா தவறா? 


அறம் என்பதை எப்படி அறுதியிட்டு கூறுவது?


ஒரே வரியில் சொல்லி விட்டுப் போகிறார் பரிமேலழகர். அவருடைய அறிவின் ஆழத்துக்கு இந்த ஒரு வரி போதும். 


"அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். "


அறம் என்றால், மனு முதலிய நூல்களில் சொல்லப் பட்டவற்றை கடை பிடிப்பதும், அவை செய்யக் கூடாது என்று சொல்லியவற்றை செய்யாமல் இருப்பதும் என்கிறார். 


முக்கியமாக கவனிக்க வேண்டியது "முதலிய" என்ற சொல்லை. முதலிய என்றால் அது போன்ற உயர்ந்த நூல்களில் எது செய், அல்லது செய்யாதே என்று சொல்லி இருக்கிறதோ, அதை செய்வதும், செய்யாமல் விடுவதும் அறம் ஆகும். 


எனவே, அற வழியில் நடக்க வேண்டும் என்றால், முதலில் உயர்ந்த நூல்களை படிக்க வேண்டும். அவற்றுள் செய்யச் சொன்னவற்றை செய்ய வேண்டும். செய்யக் கூடாது என்று சொன்னவற்றை செய்யாமல் விட வேண்டும். 


மனு சாஸ்திரம் எல்லாம் காலத்துக்கு ஒவ்வாது. அதை எப்படி இப்போது கடை பிடிப்பது என்ற கேள்வி வரும். 


முதலில் அதை படிக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். பின், அதற்கு பின் வந்த நூல்கள் அந்த அறத்தை எப்படி மாற்றி இருக்கின்றன என்று புரிந்து கொண்டு காலத்துக்கு ஏற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். 


கால மாற்றங்கள் வரும். நம் நூல்கள் அவற்றை அனுமதிக்கும். 


நீண்ட நாள் உள்ள ஒரு  பழக்கத்தை, ஒரு ஒழுக்கத்தை மாற்றலாமா என்றால் மாற்றலாம். ஆனால், யார் மாற்றுவது ?


கற்றறிந்த அறிஞ்ர்கள், ஒழுக்கத்தில் உயர்ந்த ஆன்றோர், முற்றும் துறந்த துறவோர் அவற்றை மாற்றலாம். அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. 


ஆனால், இப்போது என்ன நடக்கிறது, நமக்கு கீழே உள்ளவன் , நம்மை விட குறைவாக படித்தவன், ஒழுக்கக் குறைவு உள்ளவன் செய்வதைப் பார்த்து, அது தான் சரி என்று  நாம் பின்பற்றத் தொடங்கி விடுகிறோம்.  

 

உங்களை விட உயர்வானவர்களை நோக்குங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். 


அறத்துக்கு இரண்டு கூறு சொல்கிறார். 


ஒன்று செய்வது, இன்னொன்று செய்யாமல் விடுவது. 


செய்வது கடினம். செய்யாமல் இருப்பதில் என்ன கஷ்டம்?


கள்ளுண்ணாதே , திருடாதே, பொய் பேசாதே என்கிறார். 


பேசாமல் இருந்தால் போதும், பாதி அறம் வந்து விடும். பேசினால்தானே மெய்,பொய் என்று வரும். பேசாமல் இருந்து விட்டால் ? 

திருட்டு,பிறன் மனை விழைதல், கள் உண்ணுதல் என்ற அறப் பிழையும் வராது. 


மனு முதலிய நூல்களில் உள்ளது என்று சொல்லுவது எளிது. எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? அதை எல்லாம் படித்து அதன் படி நடப்பது என்பது முடிகிற காரியமா?


முடியாது தான். அதனால் தான் வள்ளுவர், அவற்றை எல்லாம் தொகுத்து ஒரே புத்தகத்தில் தருகிறார். இதைப் படித்து அதன் படி நடந்தால் போதும். 


அறம் என்றால் என்ன என்று தேடி அலைய வேண்டாம். திருக்குறளில் எல்லா அறமும் இருக்கிறது. 


இதை மட்டும் பின் பற்றினால் போதும். 


எவ்வளவு பெரிய வேலையை செய்திருக்கிறார் வள்ளுவர்!


வாருங்கள் மேலும் படிப்போம். 




Monday, March 15, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 1

 திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 1 


நமக்கு வாழ்வில் சில குறிக்கோள் இருக்கும்.  அந்த இலக்கை அடைந்தால் நாம் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாம் மனதுக்குள் குறித்துக் கொண்டு அந்த குறிக்கோளை நோக்கி நகர்வோம். 


பல குறிக்கோள்களை அடைந்தும் இருப்போம். நிம்மதியாக, மகிழ்வாக இருக்கிறோமா? 


"பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டால், அப்புறம் ஒரு பிரச்சனையும் இல்லை. நிம்மதியா அக்கடான்னு இருக்கலாம்" நு நினைப்போம். அப்படி நினைத்த எத்தனை பேர் நிம்மதியாக இருக்கிறார்கள் ?



பெண்ணுக்கு திருமணம் ஆன சில நாட்கள், மாதங்கள் சந்தோஷமாக இருக்கும். அப்புறம் ஏதாவது பூதம் கிளம்பும். 


எந்த ஒரு பொருளையோ, அனுபவத்தையோ நாம் அடைந்தால் சந்தோஷம் வரும் என்று நினைத்து அதை அடையும் தருவாயில், நம் நோக்கம் மாறிப் போய் விடுகிறது. 


மனம், அதை விட்டு விட்டு வேறொன்றின் பின் செல்லத் தலைப் படுகிறது. 


சரி, இப்படியே போய்க் கொண்டிருந்தால், அதற்கு என்னதான் முடிவு என்று ஆராய்ந்து, அதற்கு ஒரு விடையும் கண்டு பிடித்து விட்டார்கள். 


அது தான் வீடு பேறு அல்லது இறைவனின் திருவடி. அதை அடைந்த பின், அதற்கு மேல் ஒன்று இல்லை. 


அதற்கு கீழான அனைத்து இன்பங்களும் முடியக் கூடிய இன்பங்கள். தொடங்கியதில் இருந்து முடியாமல் இருந்து கொண்டே இருக்கும் இன்பம் என்று ஒன்று இருக்கிறதா? 


சரி, வீடு பேறு என்று சொல்லப்படும் அதை எப்படி அடைவது? 


ஒன்று இருக்கிறது என்று சொன்னால், அதை எப்படி அடைவது என்றும் சொல்ல வேண்டும் அல்லவா?


அதை அடைய நம் சான்றோர் வகுத்த வழி நான்கு


அதாவது - அறம்  பொருள், இன்பம், வீடு என்பன. 


இதைத்தான் வள்ளுவர் தொகுத்துக் கூறுகிறார். 


ஆனால், வீடு பற்றி சொல்லவில்லையே. அறம், பொருள், இன்பம் மூன்று தானே இருக்கிறது என்று கேட்டால், வீடு என்பது நம் சொல்லும் சிந்தனையும் செல்லாத  இடம் என்பதால், அதை நேரே சொல்ல முடியாது, அதற்கு வழி தான் காட்ட முடியம் என்பதால், வழி சொல்வதோடு வள்ளுவர் நிறுத்திக் கொள்கிறார். நீங்கள் அந்த வழியே போனால், "வீடு பேறு" வரும். 


இதை பரிமேலழகர் உரைப்பாயிரத்தில் எப்படி சொல்கிறார் என்று பாருங்கள். 


உரைப்பாயிரம் 

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1.html

click the above link to continue reading



அந்தக் கால தமிழ நடை. சற்று அடர்த்தியாக இருக்கும். 


ஒவ்வொரு பாகமாக படிப்போம். 


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்" = எவ்வளவு பெரிய செல்வம், பதவி, அதிகாரம் எதுவாக இருந்தாலும். இந்திர பதவியை விட பெரிய பதவி இருக்குமா? பஞ்ச பூதங்களும் இந்திரனின் ஆட்சிக்கு கட்டுப் பட்டவை.


"அந்தமில் இன்பத்து" = முடிவில்லாத இன்பம். எது முடிவில்லாது? ஸ்வர்கம், இந்திரப் பதவி போன்றவை என்றோ ஒரு நாள் முடியும். முடிந்த பின், மீண்டும் மனிதனாகவோ, விலங்காகவோ பிறக்க வேண்டும். முடிவில்லாத இன்பம் அடையவும்....


அழிவில் வீடும்  = அழிவற்ற வீடு பேறு. முதலில் இந்திரன் போன்ற தேவ பதவிகள், பின் அந்தம் இல்லாத இன்பம், பின் வீடு பேறு 


இந்த மூன்றையும் அடைய 


நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு = நெறி என்றால் வழி. எந்த வழியில், முறையில் சென்றால் அதை அடைய முடியுமோ. லாட்டரி சீட்டு அடித்தால் பணம் வரும். ஆனால் எல்லோருக்கும் அது அடிக்குமா? எனவே அது வழி அல்ல. குருட்டு அதிர்ஷ்டம். 


 உறுதியென = நிச்சயமானதென்று 


உயர்ந்தோரான் = பெரியவர்களால் 


எடுக்கப்பட்ட பொருள் நான்கு = சொல்லப் பட்ட பொருள்கள் நான்கு. 


அவை = அவையாவன 


 அறம், பொருள், இன்பம், வீடு என்பன. = அறம், பொருள், இன்பம் வீடு என்ற நான்குமாகும். 


அவற்றுள் = அந்த நான்கில் 


வீடென்பது = வீடு பேறு என்பது 


சிந்தையும் மொழியும் = நம் அறிவும், சொல்லும் 


செல்லா நிலைமைத்து ஆகலின் = செல்லாது என்று இருப்பதால் 


துறவறமாகிய = துறவறம் என்ற 


காரணவகையாற் = காரண வகை.  அது என்ன காரண வகை? நீங்கள் புதிதாக ஒரு இடத்துக்குப் போகிறீர்கள். விலாசம் இருக்கிறது. ஆனால் வழி தெரியவில்லை. அங்குள்ள ஒரு ஆளிடம் அந்த விலாசத்தை காட்டி, வழி கேட்கிறீர்கள். அவர், வழி சொல்கிறார். "இப்படியே நேரே போய், வலது புறம் திரும்பி...." என்று அடையாளங்கள் சொல்கிறார். 


நீங்கள், "அதெல்லாம் நம்ப முடியாது. அந்த விலாசம் உள்ள வீட்டை இங்கே கொண்டு வந்து காட்டு. அப்போதுதான் நம்புவேன்" என்று சொன்னால் எப்படி இருக்கும். 


அவர் சொன்ன வழியில் சென்று பார்க்க வேண்டும். அவர் சொல்வதை நம்ப வேண்டும். வேறு வழி இருக்கிறதா? உங்களுக்கோ தெரியாது. தெரிந்தவர் சொல்கிறார். அவர் சொல்வதை கேட்டு நடந்தால், நீங்கள் தேடிய இடம் வரும். 


அதைத்தான் "காரண வகை" என்று கூறினார். மத்தபடி நேரில் காட்ட முடியாது. 


கூறப்படுவதல்லது = அதைத் தவிர் வேறு வழியில் கூற முடியாது 


இலக்கணவகையாற் கூறப்படாமையின் = விளக்கிக் கூற முடியாது என்பதால் 


நூல்களாற் கூறப்படுவன = அனைத்து நூல்களிலும் கூறப் படுவது 


ஏனை மூன்றுமேயாம். = மற்ற மூன்றும் தான். அதாவது, அறம், பொருள் இன்பம் என்ற மூன்று மட்டுமே. 


வீடு பேறு பற்றிக் எந்த நூலாவது கூறினால், அது சரி அல்ல என்று புரிந்து கொள்ள முடியும். 


எனவே, வீடு பேறு அடைய, அறம், பொருள் , இன்பம் என்ற இந்த மூன்று மட்டும்தான் (வேறு எதுவம் கிடையாது) . எனவே, அந்த  மூன்றை வள்ளுவர் எடுத்துக் கொள்கிறார் என்கிறார் பரிமேலழகர். 


இப்போது மீண்டும் ஒரு முறை உரைப்பாயிரத்தின் முதல் பத்தியை படித்துப் பாருங்கள். 


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், 


அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், 


நெறியறிந்து 


எய்துதற்குரிய மாந்தர்க்கு 


உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. 


அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. 


அவற்றுள்


 வீடென்பது


 சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், 


துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது 


இலக்கணவகையாற் கூறப்படாமையின், 


நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்."


வள்ளுவர் இந்த மூன்றையும் சொன்னதினால், அவர் வீடு பேறு பற்றியும் சொல்லி இருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இப்போது புரிகிறதா 


எதற்கு திருக்குறள் படிக்க வேண்டும் (வீடு பேறு அடைய) 

ஏன் அறம் , பொருள் இன்பம் என்று மட்டும் சொன்னார் 

என்பதெல்லாம் புரிந்து விட்டதா ?


மேலே படிப்போமா? அல்லது இவ்வளவே போதுமா ?


Friday, March 12, 2021

திருக்குறள் - உரைப்பாயிரம் - ஒரு முன்னோடம்.

 திருக்குறள் - உரைப்பாயிரம் - ஒரு முன்னோடம். 


உலகிலே ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கின்றன.  எவராலும் அனைத்து நூல்களையும் படித்து விட முடியாது. எனவே நூல்களை தெரிந்து எடுத்துப் படிக்க வேண்டும். 


இந்த நூல் எது பற்றியது, இதை எழுதியவர் யார், யாருக்காக எழுதப் பட்டது, எதைப் பற்றி எழுதப் பட்டது  என்றெல்லாம் தெரிந்து கொண்டு இது நமக்குச் சரியான நூல் தானா என்று அறிந்து கொண்டு பின் படிக்க வேண்டும். 


இருக்கும் காலம் கொஞ்சம். படிக்க வேண்டியதோ மலை [போல இருக்கிறது. நூல்களை தேர்வு செய்வதில் கவனம் இல்லை என்றால், தேவை இல்லாதவற்றை படிப்பது மட்டும் அல்ல, தேவையானவற்றை படிக்காப் பிழையும் நிகழ்ந்து விடும். 


சரி, நூலை பற்றிய இவ்வளவு செய்திகளை எங்கிருந்து தெரிந்து கொள்வது ? 


இதற்குத்தான் அந்தக் காலத்தில் பாயிரம் என்று ஒன்று வைத்தார்கள். 


பாயிரம் என்றால் முகவுரை என்று வைத்துக் கொள்ளலாம். பாயிரத்தில் மேலே சொன்ன அனைத்து விடயங்களும் இருக்கும். அதைப் படித்தாலே அந்த நூலின் தன்மை தெரிந்து விடும். 


பாயிரம் பொதுச் சிறப்பு என இரு பாற்றே (நன்னூல் 2)


அந்தப் பாயிரம் பொது, சிறப்பு என்று இருவகைப் படும். 


இதில் பொதுப் பாயிரம் என்றால் என்ன என்று நன்னூல் கூறுகிறது. 


நூலே நுவல்வோன் நுவலும் திறனே

கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்

எல்லாநூற்கும் இவை பொதுப் பாயிரம்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_12.html

(click the above link to continue reading)


எப்படி சொற்களை சிக்கனம் பிடித்து எழுதி இருக்கிறார்கள் என்று பாருங்கள். 

முதல் அடியின் கடைசிச் சொல் "திறனே". திறனே என்றால் திறன், இயல்பு, பெருமை என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது பொருள் என்ன என்று சிந்திக்கலாம்.


நூலே  = நூலின் திறம். அந்தத் திறத்தை இங்கு வந்து பொருத்திக் கொள்ள வேண்டும். அதாவது நூலின் தன்மை. 

நுவல்வோன் = நுவல்வோன் திறம் = மீண்டும் அந்தத் திறன் என்ற வார்த்தையை இங்கே பொருத்த வேண்டும். அதாவது, நூல் ஆசிரியனின் தன்மை. 


நுவலும் திறனே = சொல்லும் திறன், இயல்பு, வழி. 


கொள்வோன் = கொள்வான் திறம். மீண்டும் அந்த திறம் என்ற வார்த்தையை இங்கே பொருத்த வேண்டும். கேட்கும் மாணவனின் தன்மை. முதலாம் வகுப்பு மாணவனா அல்லது முனைவர் பட்டம் படிப்பவனா என்று வாசகனின் இயல்பு 

கோடல் கூற்றாம் = மாணவன் நூல் பொருளை கேட்கும் இயல்பு 

ஐந்தும் = இந்த ஐந்தும் 

எல்லாநூற்கும் = எல்லா நூல்களுக்கும் 

இவை பொதுப் பாயிரம் = இது பொதுப் பாயிரமாக இருக்கும். 


அதாவது, நூலின் அடக்கம், அதில் என்ன சொல்லி இருக்கிறது, யார் எழுதினார்கள், யாருக்காக எழுதினார்கள், எப்படி படிக்க வேண்டும், என்ற ஐந்தும் எல்லா நூலுக்கும் பொதுவாக சொல்லப் பட வேண்டும். 

பரிமேலழகர் தன் நூலுக்கு உரைப்பாயிரம் செய்கிறார். 


அது என்ன என்பதை அடுத்த ப்ளாகில் காண இருக்கிறோம்.



Thursday, March 11, 2021

திருக்குறள் - ஒரு முன்னுரை

 திருக்குறள் - ஒரு முன்னுரை 


திருக்குறளை பள்ளியில் படித்து இருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குறள்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும். அதில் சில குறள்கள் மனப்பாடச் செய்யுள் பகுதியில் வரும். அதை மனப்பாடம் பண்ணி அப்படியே எழுத்து பிசகாமல் எழுத வேண்டும். 


மற்றபடி எத்தனை மதிப்பெண் உண்டோ, அதற்கு தகுந்தாற்  போல பதில் எழுதினால் போதும். இரண்டு மதிப்பெண் என்றால் நான்கு வரி எழுத வேண்டும். பத்து மதிப்பெண் என்றால் சற்று விரித்து எழுத வேண்டும். 


இடையிடையே இலக்கண குறிப்பு, சொல் இலக்கணம், அணி இலக்கணம், யாப்பு இலக்கணம் என்று சில கேள்விகள் வரும். 

மதிப்பெண் பெறுவது மட்டுமே நோக்கமாக இருந்தது. 

அதற்குப் பின், சில புத்தகங்களில் மேற்கோளாக சில பல குறள்கள் வந்திருக்கலாம். 


நமது குறள் பரிச்சியம் அவ்வளவுதான். 


"நல்லா சுருக்கமா அழகா எழுதி இருக்கிறார்" என்று சொல்லி விட்டு போய் விடுவோம். 


திருக்குறள் என்ற பிரமாண்டத்தை, அதன் விஸ்வரூபத்தை நாம் அறியவே இல்லை. 

சொன்னால்தானே தெரியும். 


இந்த ப்ளாகில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பல குறள்களை நாம் பார்த்தோம்.    அது குறளுக்கு நான் செய்த தவறு. பிழை. 


திருக்குறளை அப்படி படித்து இருக்கக் கூடாது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_11.html

(click the above link to continue reading)


குறளில், முதலில் இருந்து கடைசி வரை ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு வரைமுறை இருக்கிறது. அதை, அதன் போக்கில் படித்தால்தான் முழுவதும் விளங்கும். 


அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தால், குருடர்கள் யானையை பார்த்த கதையாகி விடும். 


பரிமேல் அழகர் அடி பற்றி திருக்குறளை முதலில் இருந்து எழுத ஆசை. 


பரிமேலழகர் உரையும் மிகவும் இறுக்கமான உரை. ஆனால் மிக அழகானது. ஆழமானது. அவர் அளவுக்கு வேறு யாரும் உரை செய்து இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். 


இந்தத் திருக்குறள் என்ற நூல் என்னதான் சொல்ல வருகிறது? இதை ஏன் நாம் படிக்க வேண்டும்? படித்தால் என்ன பலன் ? இதை எழுதியதன் நோக்கம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு, அதற்கு பதில் தரும் முகமாக உரைப்பாயிரம் செய்கிறார் பரிமேலழகர். 


நாளை முதல் அவர் கை பிடித்து குறளுக்குள் செல்வோம். 



Tuesday, March 9, 2021

இராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான்

 இராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான் 


மனதில் தோன்றும் உணர்ச்சிகளை நம்மால் தயக்கம் இல்லாமல் வெளிப் படுத்த முடிகிறதா? மனதுக்குள்ளேயே வைத்து பூட்டி வைத்துக் கொள்கிறோம். 


அன்பை, காதலை, பாசத்தை வார்த்தைகளால் நாம் அதிகம் வெளிப் படுத்துவது இல்லை என்றே நினைக்கிறேன். 


கோபத்தை, எரிச்சலை, எளிதாக காட்டி விடுகிறோம். 


எத்தனை முறை மனைவியை/கணவனை புகழ்ந்து இருப்போம், உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லி இருப்போம்? "அதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமாக்கும்" என்று சொல்லாமலேயே விட்டு விடுகிறோம்.


பயிற்சி இல்லை. நம் பெற்றோர் அப்படி பேசி நாம் கேட்டது இல்லை. நாமும் அப்படி பேசிப் பழகவில்லை. 


சினிமாவில் பார்க்கும் போது உருகிப் போகிறோம். 


நம் இலக்கியங்கள் நமக்கு அதைச் சொல்லித் தருகின்றன. எப்படி மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்று. 


சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். 


இராவணன் அங்கே வருகிறான். தன் காதலை உருகி உருகி வெளிப் படுத்துகிறான்.


பாடல் 


அவ்விடத்து அருகு எய்தி அரக்கன் தான்

‘எவ்விடத்து எனக்கு இன் அருள் ஈவது

நொவ் விடக் குயிலே! நுவல்க ‘என்றனன்

வெவ் விடத்தை அமுது என வேண்டுவான்.


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post.html

pl click the above link to continue reading


அவ்விடத்து = அசோகவனத்துக்கு 

அருகு எய்தி = அருகில் வந்து 

அரக்கன் தான் = இராவணன் 

‘எவ்விடத்து = எந்த இடத்தில் 

எனக்கு = எனக்கு 

இன் அருள் ஈவது = உன் அருளைத் தருவது 

நொவ் விடக் குயிலே!  = வருந்தும் சிறிய இடையை கொண்ட குயிலே 

 நுவல்க ‘என்றனன் = சொல் என்றான் 

வெவ் விடத்தை  = வெம்மையான விஷத்தை 

அமுது என வேண்டுவான். = அமுதம் என்று நினைத்து அதை விரும்பும் இராவணன் 


மேலும் சில பாடல்கள் இருக்கின்றன. 


இராவணன் ஒரு அரக்கன். அவன் மாற்றான் மனைவியை வஞ்சகமாக கவர்ந்து வந்து விட்டான் என்பதெல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்து விடுங்கள். 


அவன் மனதில் தோன்றிய உணர்சிகளை எவ்வளவு அழகாக வார்த்தைகளில் வடிக்கிறான் என்று மட்டும் பாருங்கள். 


பேசப் படிப்போம்.