Saturday, June 12, 2021

திருக்குறள் - எப்போது அறம் செய்ய வேண்டும்

 திருக்குறள் - எப்போது அறம் செய்ய வேண்டும்


அறம் என்றால் என்ன (மனத்துக்கண் மாசிலன் ஆதல்), அதன் தன்மை, அதை எவ்வாறெல்லாம் (மனம், மொழி செயல்களால்), யார் செய்ய வேண்டும் (இல்லறத்தில் உள்ளவர்கள், துறவறத்தில் உள்ளவர்கள்), எவ்வளவு செய்ய வேண்டும் (இல்லறத்தில் இருப்பவர்கள் பொருள் வசதிக்கு ஏற்பவும், துறவறத்தில் இருப்பவர்கள் உடம்பின் வலிமையை நோக்கியும்)  என்று கூறினார். 


எப்போது அறம் செய்ய வேண்டும் என்ற காலத்தை கூறவில்லை. 


"இப்ப என்ன அவசரம். நிறைய சம்பாதித்து, வேண்டிய அளவு சொத்து சேர்த்து விட்டு, பிள்ளைகளுக்கு கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு, பின் மிஞ்சி உள்ளதை அறம் செய்யலாம். அதுக்கு நேரம் இருக்கு. எங்க ஓடியா போகப் போகுது" என்று சிலர் நினைக்கலாம். 


அது சரி அல்ல என்கிறார். வள்ளுவர். 


"பின்னால் செய்து செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் இப்பவே அறம் செய்யுங்கள். அப்படிச் செய்தால் அது உயிருக்கு நீங்காத துணையாக இருக்கும்" 


இதற்கு பரிமேலழகர் உரை அற்புதம். 


பாடல் 


அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_75.html


(Please click the above link to continue reading)


அன்றறிவாம் = அன்று செய்து கொள்ளலாம் 

என்னாது = என்று எண்ணாமல் 

அறம்செய்க = அறத்தினை செய்திடுக 

மற்றது = அப்படிச் செய்த அறம் 

பொன்றுங்கால்  = அழியும் காலத்தில் 

பொன்றாத் = அழிவில்லாத 

துணை = துணையாக நிற்கும் 


பரிமேலழகர் துணை இல்லாமல் இந்த குறளுக்கு உரை காண்பது கடினம். 


அன்றறிவாம் என்று குறளில் இருக்கிறது. அன்று செய்து கொள்ளலாம் என்பது அர்த்தம். என்று? என்ற கேள்விக்கு விடை இல்லை. 


பரிமேல் அழகர் சொல்கிறார், அடுத்த வரியில் "பொன்றுங் கால்" அதாவது இறக்கும் தருவாயில் என்று வருகிறது அல்லவா, எனவே, அதைக் கொண்டு வந்து முன்னால் போடு. 


சாகிற காலத்தில் அறம் செய்யலாம் என்று நினைக்காதே என்று பொருள் கொண்டு வருகிறார். 


சரி...அது என்ன பொன்றாத் துணை ?


உடம்பே அழியப் போகிறது. அப்புறம் என்ன துணை?  


உயிர் உடலை விட்டுப் போகும். அது வேறு ஒரு உடம்பில் சென்று சேரும். இந்த உடம்போடு இருக்கும் போது செய்த அறம், புண்ணியமாக மாறி உயிரின் அடுத்த பிறவிக்கும் வரும். உயிர் எங்கெல்லாம் போகிறதோ, அங்கெல்லாம் வந்து இந்தப் பலனைத் தரும். 


சில பேர் ரொம்ப பாடு படாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள், சிலர் எவ்வளவு பாடு பட்டாலும் துன்பப் படுகிறார்கள், சிலர் அறம் அற்ற வழியில் சென்றாலும் அவர்களிடம் செல்வம் கொழிக்கிறது. சிலர் நேர்மையாக நடந்தாலும் வறுமை வாட்டுகிறது. 


ஏன்?


முன் செய்த அறம். 


பொன்றா துணையாக கூடவே வரும். 


பின்னால் செய்து கொள்ளலாம் என்று இருந்தால், நாளை என்ன வரும் என்று யாருக்குத் தெரியும்? பின்னாளில் செய்ய முடியாவிட்டால்? 


"செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது."


என்பது பரிமேலழகர் உரை. 


"செய்த உடம்பு அழியவும்"  நாம் இந்த உடம்போடு இருக்கும் போது செய்த அறம்தான். ஆனால், இந்த உடம்பு அழிந்து போகும். 


உயிரோடு ஒன்றி = அந்த அறம் நம் உயிரோடு ஒட்டிக் கொண்டு 

 ஏனை உடம்பினுட் சேறலின் = மற்ற உடம்போடு சேர்வதனால் 

 இதனான் = எனவே 

இவ்வியல்பிற்றாய = இந்த உயிரோடு ஒட்டிக் கொண்டு செல்லும் இயல்பை உடைய 

அறத்தினை = அறத்தினை 

நிலையாத யாக்கை = நிலை இல்லாத உடம்பு 

 நிலையின பொழுதே = நிலத்து இருக்கும் போதே 

 செய்க = செய்க 

என்பது கூறப்பட்டது. = என்று குறளில் கூறப் பட்டது 


என்கிறார் பரிமேலழகர். 


பின்னாடி செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். இப்பவே செஞ்சுருங்க என்கிறார். 


எவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக சொல்லிச் சென்று இருக்கிறார்கள். 


மலைப்பாக இருக்கிறது.


என்ன புண்ணியம் செய்தோமோ, இவை எல்லாம் படிக்கக் கொடுத்து வைத்து இருக்கிறது. 


தமிழ் வாசிக்கத் தெரியும். திருக்குறள் இருக்கிறது. பரிமேலழகர் உரை இருக்கிறது. இதுக்கு மேல் என்ன சொத்து சேர்த்து விட முடியும்? 




பெரிய புராணம் - முன்னுரை

 பெரிய புராணம் - முன்னுரை 


இறைவனை அடைய என்ன செய்ய வேண்டும் ?


நிறைய படிக்கணுமா? நிறைய தான தர்மங்கள் செய்யணுமா? கோவில் கோவிலாக போய் சாமி கும்பிடணுமா?  நாளும் கிழமையும் ஆனா விரதம், பூஜை எல்லாம் செய்யணுமா? மடியா, ஆசாரமா இருக்கனுமா? 


இது ஒன்றும் செய்யாமலேயே இறைவன் அடி சேர்ந்த தொண்டர்களின் வரலாற்றுத் தொகுப்புதான் பெரிய புராணம். 


எழுத்தறிவே இல்லாமல், சிவனுக்கு மாமிசம் படைத்தார் கண்ணப்பர். அதுவும் எப்படி, வாயில் நீரை கொண்டு வந்து சிவன் மேல் கொப்பளிபார். அது தான் அபிஷேகம். செருப்புக் காலை கொண்டு போய் சிவ லிங்கத்த்தின் மேல் வைப்பார். படைத்த மாமிசமும் எப்படி, வாயில் போட்டு கடித்துப் பார்த்து பதமாக இருக்கிறதா என்று அறிந்த பின், அந்த எச்சில் மாமிசம் தான் நைவேத்தியம். 


நம்ம வீட்டில் நைவேதியத்துக்கு என்று வைத்த வடையை சிறு பிள்ளைகள் எடுத்தால் கூட நாம் திட்டுவோம். "பூஜை முடிந்து தர்றேன்...அதுக்குள்ள என்ன அவசரம்" என்று. பிள்ளைக்கு கவனம் முழுவதும் வடை மேலேயே இருக்கும். 


மண் பாண்டம் செய்து விற்கும் குயவர், அவருக்கு கொஞ்சம் பெண் பித்து. மனைவி இருக்க பல பெண்களை நாடினார். அதை அறிந்த மனைவி, "என்னைத் தொடாதே" என்று தள்ளி வைத்து விட்டார். அவருக்கு முக்தி. 


இன்னொருவரோ, சாமி கும்பிடவே இல்லை. சுவர்க்கம் வேண்டும், வீடு பேறு வேண்டும் என்றெல்லாம் கேட்கவே இல்லை.அவரை வீடு தேடி வந்து முக்தி தந்தார் சிவன். 


இன்னொருவர், சிவனை கூப்பிட்டு, "எனக்கு அந்த பெண் மேல் காதல். நீ போய் இந்த லவ் லெட்டரை நான் குடுத்தேன்னு குடுத்துட்டு வா" நு சிவனை courier boy யாக ஆக்கி விட்டார். அவருக்கும் முக்தி. 


இன்னொருவர், சிவன் ஒரு கடவுளே இல்லை. சைவம் ஒரு மதமே இல்லை என்றார். அவருக்கும் முக்தி. 


இப்படி பலதரப்பட்ட தொண்டர்களுக்கு முக்தி வழங்கிய வரலாறுதான் பெரிய புராணம். 


இவர்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை - பக்தி. அசைக்க முடியாத பக்தி. புரிந்து கொள்ள முடியாத பக்தி.  



https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_12.html


(Please click the above link to continue reading)


இப்படிதான் பக்தி செய்ய வேண்டும் என்ற கருத்தை முற்றாக முறித்து எறிந்த இலக்கியம் பெரிய புராணம். எப்படி வேண்டுமானாலும் பக்தி செய்யாலாம் என்று எடுத்துச் சொன்னது பெரிய புராணம். 


என் மதம் உயர்ந்தது,  என் ஜாதி உயர்ந்தது, நான் செய்யும் பக்தியே உயர்ந்தது, கடவுளுக்கு நான் செய்வது தான் பிடிக்கும், ஆடு வெட்டுவது, மாடு வெட்டுவது எல்லாம் காட்டு மிராண்டித் தனம் என்று சொல்பவர்கள் முன்னால், பிள்ளையை வெட்டி கறி சமைத்து போட்ட தொண்டர் கதையை சொல்கிறது பெரிய புராணம். 


அன்பு ஒன்று தான் முக்கியம் என்று எடுத்துக் காட்டிய இலக்கியம் பெரிய புராணம். 


எனவே தான் அதற்கு "பெரிய " புராணம் என்று பெயர் வந்தது. 



சேக்கிழாரின் தமிழ்...அமிழ்தை விட இனிமையாக இருக்கும். படிக்க படிக்க நாவில் இனிப்பு ஒட்டிக் கொள்ளும். அவ்வளவு இனிமையான பாடல். 


பக்தி மணம் ஒரு புறம், கொஞ்சும் தமிழ் மறுபுறம். 


அற்புதமான பக்தி இலக்கியம். படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். 


அதில் இருந்து சில பாடல்களை பார்க்க இருக்கிறோம். 


பார்ப்போமா?


Friday, June 11, 2021

கம்ப இராமாயணம் - செய்து மறந்த

கம்ப இராமாயணம் - செய்து மறந்த 


ஒரு அரசனின் பெருமையை சொல்ல வேண்டும். எப்படிச் சொல்லலாம்? 


இலக்கியங்களை படிக்கும் போது, ஒரு விடயத்தை நாம் சொல்ல வேண்டி இருந்தால் எப்படி சொல்லி இருப்போம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மால் அந்த விடயத்தை எவ்வளவு சிறப்பாக சொல்ல முடியும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். பின், இலக்கியத்தைப் படிக்க வேண்டும். அதில் என்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் இலக்கியத்தின் பெருமை புரியும்.


தசரதனின் பெருமையை சொல்ல வருகிறார் கம்பர்.


ஒரு பேரரசனின் பெருமை என்றால் என்னவாக இருக்கும். பெரிய யாகங்களை செய்வது. அச்வதமேத யாகம் போன்ற யாகங்கள் செய்வது என்றால் மற்ற அரசர்கள் அந்த அரசனை பேரரசன் என்று ஏற்றுக் கொண்டு கப்பம் கட்ட ஒத்துக் கொள்ள வேண்டும் அல்லது அந்த யாகம் செய்யும் அரசன் கப்பம் கட்ட மறுக்கும் அரசர்கள் மேல் போர் தொடுத்து அவர்களை வெல்ல வேண்டும். 


கடினமான செயல். 


நிறைய அரசர்கள் அதற்கு முயற்சி செய்வார்கள். எல்லோராலும் முடியாது. 


எனவே, கம்பன் என்ன சொல்லி இருப்பான்? தசரதன் பல அச்வேமேத யாகங்கள் செய்தான் என்று சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தால் அவன் ரொம்ப சாதாரண ஒரு கவிஞனாகி இருப்பான். 


கம்பன் சொல்கிறான். "பெரிய பெரிய யாகங்கள் எல்லாம் செய்ய வேண்டும் பல அரசர்கள் முயல்வார்கள். அந்த யாகங்கள் எல்லாம் தசரதன் என்றோ செய்து முடித்து, அப்படி ஒன்று நடந்ததையே மறந்தும் விட்டான்" என்று.  அவ்வளவு நாள் ஆகி விட்டதாம். "இதெல்லாம் நான் என்றோ செய்து முடித்து விட்டேன்...எப்ப என்று நினைவில் கூட இல்லை " என்று சொல்லும் அளவுக்கு தசரதன் இருந்தானாம்.  அவ்வளவு நாட்களுக்கு முன்னால் செய்திருந்தால், அதற்கு பின் எவ்வளவு காரியங்கள் செய்திருப்பான் என்பதை நம் கற்பனைக்கு விடுகிறான். 


அது மட்டும் அல்ல, தசரதன் நிறைய தான தர்மங்கள் செய்வான் என்று சொல்ல வந்த கம்பன் சொல்கிறான் "ஒவ்வொரு தரம் தானம் செய்யும் போதும் கையில் நீர் எடுத்து தாரை வார்த்துக் கொடுப்பான். அப்படி தசரதன் கையில் இருந்து வழியும் நீரால் நனையாத கைகளே இல்லை". அப்படி என்றால், அவனிடம் உதவி பெறாத நபர்களே இல்லை என்று அர்த்தம். 


பாடல் 


மொய் ஆர்கலி சூழ் முது பாரில். முகந்து தானக்

கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;

மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்ந்த. யாரும்

செய்யாத. யாகம் இவன் செய்து மறந்த மாதோ.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_11.html


(please click the above link to continue reading)


மொய் = சூழ்ந்த 


ஆர்கலி = கடல் 


சூழ் = சூழ்ந்த 


முது பாரில் =  முதிய உலகில்


முகந்து =  நீரை முகந்து 


தானக் = தானம்  செய்யும் 


கை ஆர் புனலால் = கையில் இருந்து வழியும் நீரால் 


நனையாதன கையும் இல்லை; = நனையாத கை என்று ஒரு கையும் உலகில் இல்லை 


மெய் ஆய  = உண்மையான 


வேதத் துறை = வேத வழியில் நடக்கும் 


வேந்தருக்கு = அரசர்களுக்கு 


ஏய்ந்த. யாரும் = பெருமை/பொருந்திய 


யாரும்  = அனைவரும் 


செய்யாத. யாகம் = செய்யாத யாகங்கள் 


இவன் = தசரதன் 


செய்து மறந்த மாதோ. = செய்து பின் நீண்ட ஆள் ஆனதால் மறந்து போன யாகங்கள். 


என்ன ஒரு கற்பனை. 



Thursday, June 10, 2021

திருக்குறள் - அறத்தின் இயல்பு

திருக்குறள் - அறத்தின் இயல்பு 


நாம் அற வழியில் செல்கிறோமா அல்லது வேறு ஏதாவது தவறான பாதையில் செல்கிறோமா என்று எப்படித் தெரியும்?


எல்லோரும் செய்வதைப் போலத்தான் நாமும் செய்கிறோம். இருக்கிறோம். சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்வது இல்லை. இதெல்லாம் அறம் இல்லையா? வேறு என்ன செய்ய வேண்டும்? 


எப்போது நாம் அறம் அற்ற பாதையில் செல்கிறோம் என்று தெரிந்து கொள்வது? 


ஒவ்வொரு செயலுக்கு முன்னாலும் யாரிடமாவது போய் கேட்க முடியுமா - இது சரியா, இது அறமா என்று?


ஒண்ணே முக்கால் அடியில் இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார். 


இன்னொரு நூறு பிறவி எடுத்தாலும் நமக்கு அது தோன்றாது. 


பாடல்  


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_10.html


(please click the above link to continue reading)


அழுக்காறு = பொறாமை 

அவா = ஆசை 

வெகுளி = கோபம் 

இன்னாச்சொல் = தீய சொற்கள் 

நான்கும் = என்ற இந்த நான்கையும் 

இழுக்கா = விலக்கி 

இயன்றது = செய்வது 

அறம் = அறம் 


நினைத்துப் பார்க்க முடியமா நம்மால்?


அழுக்காறு - பொறாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமை. 


அவா - புலன்கள் மேல் செல்கின்ற ஆசை என்கிறார் பரிமேலழகர் 


கோபம் - பொறாமையாலும், புலன்கள் மேல் செல்லும் ஆசையாலும் கோபம் வரும். கோபம் எப்போது வரும், நமக்கு வேண்டியது கிடைக்காத போது கோபம் வரும். நாம் எதிர் பார்த்தது கிடைக்காத போது கோபம் வரும். வேண்டியது, எதிர் பார்த்தது எல்லாம் ஆசையால் விளைவது. அல்லது, மற்றவனுக்கு கிடைத்து விட்டதே, எனக்கு கிடைக்கவில்லையே என்று கோபம் வரும். 


இன்னா சொல் = இனிய சொல் என்பதன் எதிர்பதம். நீங்கள் மற்றவர்களிடம் இனிமையாக பேசவில்லையா, நீங்கள் அறம் தவறி நடக்கிறீர்கள் என்று அர்த்தம். துன்பம் தரும் சொல். பயனில்லாத சொல். 


இராமனை காட்டுக்குப் போ என்று தசரதன் சொன்னதாக கைகேயி சொல்லி விடுகிறாள். அதை அறிந்த இலக்குவன் கொந்தளிக்கிறான். 


அப்போது இராமன் சொல்கிறான் 


"மறை தந்த நாவால் இப்படித் எல்லாம் கோபம் கொண்டு பேசலாமா" என்று 


ஆய் தந்து, அவன், அவ் உரை  கூறலும் ‘ஐயன், ‘நின் தன்

வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்?

நீ தந்தது அன்றே நெறியோர்  கண் இலாதது? ஈன்ற

தாய் தந்தை என்றால் அவர்மேல் சலிக்கின்றது என்னோ? ‘


கோபமும் கூடாது. இன்னா சொல்லும் கூடாது என்பது விளங்கும். 


இந்த நான்கையும் விலக்கி, இடைவிடாமல் செய்வது அறம். 


மாதத்திற்கு ஒரு நாள் கோபப் படமாட்டேன் என்றால் அது அறம் அல்ல. எப்போதுமே கோபப் படக் கூடாது. 


வெள்ளி செவ்வாய் தண்ணி அடிக்க மாட்டேன் என்பதெல்லாம் அறத்தில் சேர்த்தி இல்லை. 


வியாழக் கிழமை மாமிசம் உண்பதில்லை. ஜீவ காருண்யம். 


இந்த நான்கில் ஒன்று மனதில் இருக்கும் போது எது செய்தாலும் அது அறம் இல்லை. 


"இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க."


என்கிறார் பரிமேலழகர். 


இதை வைத்துக் கொண்டு செய்வது அறம் அல்ல. 


பக்கத்து வீட்டுக் காரன் நாசாமாகப் போக வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே சாமி கும்பிட்டால் அது அறமாகாது. 


எப்போது இந்த நான்கில் ஏதோ ஒன்று மனதில் இருக்கிறதோ, அப்போதே நாம் அறம் அற்ற வழியில் செல்லப் போகிறோம் என்று அறிந்து கொள்ளலாம். 


நமக்குத் தெரியாதா நம் மனம். 


பொறாமை படுவது சட்டப் படி குற்றம் அல்ல. ஆனால், அது அறம் அல்ல. 


யாரையும் கேட்க வேண்டாம். நமக்கே தெரியும் நம் மன நிலை. அதை வைத்து நாம் அறத்தின் பாதையில் செல்கிறோமா இல்லையா என்று அறிந்து கொள்ளலாம். 

Wednesday, June 9, 2021

திருக்குறள் - மனத்துக்கண் மாசிலன் ஆதல்

 திருக்குறள் - மனத்துக்கண் மாசிலன் ஆதல் 


இந்த அறம் அறம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன?  அது எங்கே எழுதி இருக்கிறது? ஏதாவது புத்தகத்தில் இருக்கிறதா? யாராவது சொல்லி வைத்து இருக்கிறார்களா? அப்படியே சொன்னாலும், அது எல்லா காலத்துக்கும் பொருந்துமா?


இராமர் வழியில் நடப்பது என்பது நடக்கிற காரியமா? 


நிறைய அற நூல்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் படித்து முடிக்க பல ஆயுள் தேவைப்படும் போல் இருக்கிறதே. ஒரு திருக்குறள் படிக்கவே இத்தனை நாள் ஆகிறது. என்று மற்ற நூல்களையெல்லாம் படிப்பது?


சரி அப்படியே படித்தாலும், அவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றன. ஒரு நூலுக்கு உள்ளேயே முரண்கள் இருப்பது மாதிரி தெரிகிறது. 


ஐயம் இட்டு உண் என்று முன்னால் சொல்லி விட்டு

ஏற்பது இகழ்ச்சி என்று பின்னால் சொல்கிறாள். 


என்னதான் செய்வது? அற வழிப்படி எப்படி வாழ்வது?


வள்ளுவரைப் போல ஒரு ஆசான் நமக்கு கிடைக்குமா? 


7 வார்த்தைகள் அல்ல, நாலே வார்த்தையில் அறம் என்றால் என்ன என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். 


எந்த காலத்துக்கும், எந்த நாட்டுக்கும், அது பொருந்தும். 


"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்"


அவ்வளவு தான். மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதுதான் எல்லா அறமும். அதற்கு மேல் ஒரு அறம் இல்லை. 


பாடல் 


*மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற*


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_9.html


(Please click the above link to continue reading)

மனத்துக்கண் = மனதின் கண் 


மாசிலன் ஆதல் = குற்றம் இல்லாமல் இருப்பது 


அனைத்துஅறன் = எல்லா அறமும் அதுவே 


ஆகுல = ஆரவாரத்  


நீர = தன்மை உடையன


பிற = மற்றவை 


உலகில் உள்ள அத்தனை அயோக்கியத் தனங்களும் முதலில் மனதில் தோன்றுகின்றன. பின் அவை வாக்காக, செயலாக வடிவம் பெறுகின்றன. 


மனதில் குற்றம் இல்லை என்றால், அறம் அல்லாத செயல்ககள் நிகழவே நிகழாது. 


முந்தைய குறளில் அறம் செய்ய மூன்று வழிகள் சொன்னார் - மனம், வாக்கு, செயல் என்று. 


இங்கே, மனத்தின்கண் மாசிலன் ஆதல் என்று கூறி விட்டு, பின் சொல்கிறார் 

"ஆகுல நீர பிற" என்கிறார். 


அதாவது, வாக்காலும், செயலாலும் செய்யும் அறங்களில் ஆராவரதன்மை இருக்கும். கொஞ்சம் விளம்பரம், புகழ்ச்சி எல்லாம் இருக்கும். 


மனதில் தூய்மையாக இருந்துவிட்டால், ஒரு ஆராவாரமும் இல்லை, புகழ்ச்சி இல்லை, சத்தம் இல்லை. 


மனதில் தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு, வாக்கால், செயலால் அறம் செய்தாலும் சரி அல்ல என்கிறார். 


மனம் தூய்மையாக இருந்து விட்டால் போதும், மற்ற அறங்கள் எல்லாம் தானே வரும். 


இதை விட எளிமையாக, தெளிவாக யாரால் கூற முடியும்?


Tuesday, June 8, 2021

குறுந்தொகை - நல்கலு நல்குவர்

குறுந்தொகை - நல்கலு நல்குவர் 


வேலை நிமித்தமாக வெளியூர் போயிருப்போம். நாட்கள் பல கழிந்திருக்கும். வீட்டு நினைப்பு வராமல் இருக்குமா?


அந்த ஊரில் தெருவில் ஒரு இளம் ஜோடி கை கோர்த்து நடந்து போவதை பார்க்கும் போது, மனைவியின் (அல்லது கணவனின்) நினைப்பு வரும் அல்லவா? 


அந்த ஊரில் ஒரு நல்ல உணவை இரசிக்கிறோம். அடா ...இந்த ஐஸ் கிரீம் அவளுக்கு பிடிக்குமே என்ற எண்ணம் வரும் அல்லவா? 


இந்த மாதிரி சேலை உடுத்தினால் அவள் அழகாக இருப்பாள் என்று தோன்றலாம். 


அது மனித இயற்கை. துணையை பிரிந்து வந்த பின், சுற்றுப் புற சூழ் நிலை நமக்கு நம் துணையை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். 


இது இன்று நேற்று அல்ல. சங்க காலம் தொட்டு நிகழ்ந்து வருகிறது. 


தலைவன் பிரிவால் தலைவி வாடுகிறாள். அவளுக்கு ஆறுதலாக தோழி சொல்கிறாள் "கவல படாதடீ ...சீக்கிரம் வந்துருவார்" நு.


தலைவி: ஆமா நீ தான் சொல்ற. எனக்கு என்னவோ நம்பிக்கையே இல்ல. அவருக்கு வேலை தான் முக்கியம். என் நினைப்பு கூட இருக்குமோ இல்லையோ..


தோழி: அதெல்லாம் இல்லை...அவருக்கு உன் நினைப்பு கண்டிப்பா இருக்கும். 


தலைவி: அதெப்படி சொல்ற? 


தோழி: அவர் போகிற வழியோ பாலை நிலம். வெயில் சுட்டு எரிக்கும். அங்கு ஆண் யானையும், பெண் யானையும் சேர்ந்து செல்லும். தாகம் அதிகம் எடுக்கும். அப்போது, ஆண் யானை அங்குள்ள "யா" மர பட்டைகளை உரிக்கும். அதில் இருந்து நீர் வடியும். வடியும் நீரை தான் உண்ணாமல், பெண் யானை அருந்த, ஆண் யானை அதைப் பார்த்து மனம் மகிழும். 


அதை எல்லாம் பார்க்கும் போது அவருக்கு உன் நினைப்பு கண்டிப்பாய் வரும்.


ஏதோ, இன்று வரும் சினிமா பட காட்சி மாதிரி இருக்கிறது அல்லவா? 


கீழே உள்ள சங்க காலப் பாடலைப் பாருங்கள்.


பாடல் 


நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் 

 பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 

 மென்சினை யாஅம் பொளிக்கும் 

 அன்பின தோழியவர் சென்ற வாறே. 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_89.html

(please click the above link to continue reading)



நசை = அன்பு 


பெரி துடையர் = அதிகம் உடையவர் (உன்பால்) 


நல்கலு நல்குவர்  = அந்த அன்பை உன்னிடம் தருவார் 


 பிடி = பெண் யானை 


பசி களைஇய = பசியைப் போக்க 


பெருங்கை வேழம்  = பெரிய தும்பிக்கையை உடைய ஆண் யானை 


மென்சினை = மெல்லிய கிளையை 


யா = யா மரத்தின் 


அம் பொளிக்கும்  = உடைத்து, பியித்து 


அன்பின = அன்பை வெளிப்படுத்தும் 


தோழியவர் = தோழி, அவர் 


சென்ற வாறே.  = சென்ற வழி 


அவர் செல்கிற வழியில் இதை எல்லாம் பார்ப்பார். அப்போது அவருக்கு உன் நினைவு கண்டிப்பாக வரும். உன்னைக் காண சீக்கிரம் வந்து விடுவார் என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். 


எவ்வளவு மென்மையான உணர்வுகள். அதை எவ்வளவு அழகாக வெளிப் படுத்தி இருக்கிறார்கள். 



திருக்குறள் - எப்படி அறம் செய்வது ?

 திருக்குறள் - எப்படி அறம் செய்வது ?


அறத்தினால் வரும் நன்மைகளையும், அதைக் கடைப் பிடிக்காவிட்டால் வரும் தீமைகளையும் முன் சொன்னார்.


சரி. 


அந்த அறத்தை எப்படிச் செய்வது?  அறம் என்பது இங்கே உதவி, பிறர்க்கு செய்யும் நன்மை, கொடை என்ற அர்த்தத்தில் வருகிறது. அதுவும் அற வினைதான்.


என்னிடம் அவ்வளவு செல்வம் இல்லை. இன்னும் கொஞ்சம் செல்வம் சேர்த்த பின் தான தர்மங்கள் செய்யலாம் என்று இருக்கிறேன் என்று சிலர் நினைக்கலாம். பிள்ளைகளை கட்டிக் கொடுத்து விட்டு, என் எதிர்காலத்துக்கு கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு பின் அறம் பற்றி சிந்திக்கலாம் என்று இருக்கிறேன் என்று சிலர் நினைக்கலாம்.  தனக்கு மிஞ்சித் தானே தானமும் தர்மமும். எனக்கே யாராவது உதவி செய்தால் பரவாயில்லை என்று இருக்கிறேன்...இதில் நான் போய் யாருக்கு உதவி செய்வது? என்று சிலர் நினைக்கலாம். 


எல்லாவற்றிற்கும் வழி சொல்கிறார் வள்ளுவர். 


பாடல் 


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாம் செயல்  (33)


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_8.html


(Please click the above link to continue reading)


ஒல்லும் வகையான் = செய்ய முடிந்த வரையில் 


அறவினை  = அறச் செயல்களை 


ஓவாதே = இடை விடாமல் 


செல்லும்வாய் எல்லாம் = எப்படியெல்லாம்  முடியுமோ 


 செயல்  = செய்க 


அறச் செயல்களை முடிந்த வரையில், எப்படி எல்லாம் முடியுமோ செய்க.


முதலில் நிறைய  பிரச்சனைகளை எழுப்பி, அதுக்கெல்லாம் வள்ளுவர் விடை சொல்கிறார் என்று கூறினீர்களே, இதில் ஒரு விடையும் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். 


பரிமேலழகர் இல்லாவிட்டால் நம்மால் அந்த விடைகளை இந்தக் குறளில் காணவே முடியாது. 


ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள். இந்தக் குறளில் இதற்கு மேல் என்ன அர்த்தம் இருந்து விட முடியும் என்று. 


இப்போது பரிமேலழகர் எப்படி உரை எழுதுகிறார் என்று பாருங்கள். 


"ஒல்லும் வகையான்" - முடிந்த வரை என்பதற்கு பரிமேலழகர் யாருக்கு முடிந்த வரை என்ற கேள்வியை எழுப்புகிறார். இது "அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரம். எனவே உரையும் அதைப் பற்றியே இருக்க வேண்டும். அதற்கு சம்பந்தமில்லாமல் உரை எழுதக் கூடாது. எனவே, யார் என்ற கேள்விக்கு மக்களை இரண்டாக பிரிக்கிறார். மக்கள் இரண்டு விதமான அறங்களை பின் பற்றுகிறார்கள். இல்லறம், துறவறம் என்ற இரண்டு அறங்கள். 


எனவே, இல்லறத்தில் இருப்பவர்கள், துறவறத்தில் இருப்பவர்கள் முடிந்தவரை அறம் செய்ய வேண்டும்  என்று முதல் படி எடுக்கிறார். 


அடுத்தது, சரி, இதில் என்ன வேறுபாடு இருக்கிறது? இல்லறத்தில் இருப்பவனுக்கும், துறவறத்தில் இருப்பவனுக்கும் அறம் செய்வதில் என்ன வேறுபாடு என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதில் தருகிறார். 



"இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல்"



இல்லறத்தில் இருப்பவன், தன்னுடைய பொருள் வசதிக்கு ஏற்பவும், துறவறத்தில் இருப்பவன் தன்னுடைய உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்குமோ அந்த அளவும் என்கிறார். துறவறத்தில் இருப்பவனிடம் அதிகமாக பொருள் இருக்காது.  அவன் அதிகம் சாப்பிட்டு பெரிய உடல் வலிமையுடனும் இருக்க மாட்டான். எலும்பும் தோலுமாக இருப்பான். 



ஆண்கள் படித்தால் அழகு 


பெண்கள் மணந்தால் அழகு 


நான்கு கால் பிராணிகள் கொழுத்தால் அழகு 


துறவிகள் மெலிந்தால் அழகு 


என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு. 


எனவே, துறவி முடிந்தவரை உடல் உழைப்பால் மற்றவர்களுக்கு அறம் செய்ய முடியும். 


சரி, இல்லறத்தில் இருக்கும் எல்லாரிடமும் செல்வம்  இருக்குமா ?


அதற்கும் விடை தருகிறார் 


"செல்லும் வாயெல்லாம் செயல்"...எப்படியெல்லாம் முடியுமோ, அப்படி செய்ய வேண்டும். 


அது என்ன எப்படியெல்லாம் முடியுமோ?


அறத்தை மூன்று வழிகளில் செய்யலாம் 


மனதால், வாக்கால், செயலால் 


பொருள் இருந்தால், பொருள் கொடுப்போம். 


பொருள் இல்லையா, வாக்கால் அறம் செய்வோம்.  ஒரு நெருங்கிய நண்பருக்கோ, உறவினருக்கோ ஒரு சிக்கல் வந்து விட்டது. அவரிடம் பணம் இருக்கிறது. இருந்தும் ஒரு துக்கம். என்ன செய்யலாம்? அவருக்கு இதமாக நாலு வார்த்தை சொல்லலாம். ஆறுதல் சொல்லலாம். அது பணத்தை விட உயர்ந்தது. 



சரி, நல்ல சொல்லும் சொல்ல வரவில்லை என்றால்? மனதால் அவர்கள் நன்மை அடைய வேண்டும் நினைத்தாலும் போதும்.  அதுகூடவா கடினம்?



அறம் செய்ய விரும்பு என்று மூன்று வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட்டாள் கிழவி.  விரும்புதல் மனதால் செய்தல். 


யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

- திருமந்திரம்


என்பார் திருமூலர். 


ஒன்றும் முடியாவிட்டால் ஒரு இன்னுரை சொன்னால் போதும். 


'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் 

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் 

அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர் 

ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்'


என்பார் பாரதியார். 


முடிந்தால் பொன் கொடுங்கள். இல்லை என்றால் காசு கொடுங்கள், அதுவும் இல்லை என்றால் உடல் உழைப்பைத் தாருங்கள், அதுவும் இல்லை என்றால் வாய்ச் சொல் அருளீர் என்கிறார். 


மற்றவை எல்லாம் தாருங்கள் என்று சொன்னவர், வாய்ச் சொல்லை "அருளீர்" என்றார். 


இல்லறத்தான் - பொருளாலும் 


துறவறத்தான் - உடல் உழைப்பாலும் 


மனம், மொழி, வாக்கால் அறம் செய்ய வேண்டும் என்று எப்படி அறம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். 



யோசித்துப் பாருங்கள், பரிமேலழகர் இல்லை என்றால், இந்த அர்த்தம் நமக்கு புரிந்து இருக்குமா?