Friday, July 2, 2021

சிலப்பதிகாரம் - கள்வனோ, என் கணவன் ?

சிலப்பதிகாரம் - கள்வனோ, என் கணவன் ?


பாண்டிய மன்னனின் தவறான முடிவால், கோவலன் கொலையுண்டு போகிறான். 


அந்த துக்கச் செய்தியை ஆயர் குலப் பெண் ஒருத்தி கண்ணகியிடம் தெரிவிக்கிறாள். 


வாழ்க்கை பூராவும் மெளனமாக இருந்த அந்தப் பெண், புயல் என புறப்படுகிறாள். கண்ணகியின் கோபத்தின் உக்கிரத்தை வேறு எந்த காப்பியத்திலும் காண முடியாது. 


எத்தனையோ பலசாலிகள், அசுரர்கள், பெரும் வரம் பெற்ற சூரர்கள் என்று எவ்வளவோ பேரை பார்த்து இருக்கிறோம். யாருடைய கோபமும், அதன் வெளிப்பாடும் கண்ணகியின் கோபத்துக்கு உறை போடக் காணாது. 


கணவன் இறந்தான் என்ற செய்தியை கேட்டதும் எழுகிறாள். 


தன் கணவன் களவு செய்திருக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும். 


அவளுக்குத் தெரிந்தால் போதுமா? அது உண்மையாகி விடுமா?


அவள் கோபத்தின் வெளிப்பாடு, சூரியனை கூப்பிடுகிறாள். 


"ஏய் காய் கதிர் செல்வனே (சூரியனே), நீ சொல். என் கணவன் கள்வனா என்று" என்று சூரியனுக்கு உத்தரவு போடுகிறாள். 


சூரியன் தான் எல்லாவற்றையும் மேல் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறானே. அவனுகுத் தெரியாமல் ஒன்றும் இருக்க முடியாது. எனவே, சூரியனே, நீ சொல். என் கணவன் கள்வனா இல்லையா என்று கேட்கிறாள். 


பாடல் 


 காணிகா,

வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும்

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்;

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க;

பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி,

காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’-


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post.html


(please click the above link to continue reading)


காணிகா = (ஆயர் குலப் பெண்களே) காண்பீர்களாக 


வாய்வதின் = வாய்த்த, தானாக நிகழும் தீய சகுனங்களை நீக்க 


வந்த = வந்த 


குரவையின் வந்து ஈண்டும் = இங்கு குரவைப் பாட்டினை பாடும் 


ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்; = ஆயர் குலப் பெண்களே எல்லோரும் கேளுங்கள் 


ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க; = ஆயர் குலப் பெண்களே எல்லோரும் கேளுங்கள் 


பாய் = பாய்ந்து 


திரை  = அலையால் 


வேலிப் = வேலி அமைந்த 


படு பொருள்  = இந்த உலகை 


நீ அறிதி, =  நீ அறிவாய் 


காய் கதிர்ச் செல்வனே! = சுடும் கதிர்களை உடைய செல்வனே 


கள்வனோ, என் கணவன்?’ = என் கணவன் கள்வனா? 


ஒரு பெண்ணின் சீற்றம் எப்படி இருக்கும் என்று இளங்கோ காட்டுகிறார். ஒரு பெண்ணுக்குள் இவ்வளவு கோபமா? 


அவளால் தாங்க முடியவில்லை. 


எதைப் பற்றியும் அவள் கவலைப் படவில்லை. 


தனி ஒரு பெண்ணாக நின்று ஊரையே எரிக்கிறாள். 


சீதையைப் போல், "என் சொல்லினால் சுடுவேன்" என்று சொல்வதோடு நிற்காமல் சுட்டுக் காட்டுகிறாள். மதுரையை சாம்பல் ஆக்குகிறாள். 


அவள் கோபக் கனலில் என்னென்ன எரிந்து சாம்பலானதோ? 


எவ்வளவோ இலக்கியங்கள் போய் இருக்கலாம், மருத்துவம், சாத்திரம், ஆகமங்கள்,  இசை நூல்கள், கட்டிடக் கலை சார்ந்த நூல்கள் என்று எண்ணற்ற நூல்கள், கலைஞர்கள் அதில் எரிந்து போய் இருக்கலாம். 


அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு முன்னால், இது எல்லாம் ஒரு துரும்பு என்று நம் இலக்கியமும், பண்பாடும், கலாச்சாரமும் ஏற்றுக் கொண்டு உள்ளது. 


அவளை தெய்வமாக இன்று வரை கொண்டாடுகிறோம். 


பெண்ணுக்கும், அவள் உணர்வுகளுக்கும் நாம் தரும் மதிப்பு அது. 


என்ன நடந்தது என்றால்.....



Tuesday, June 29, 2021

திருக்குறள் - இல்லறம் - இல்லறத்தின் நோக்கம்

திருக்குறள் - இல்லறம் - இல்லறத்தின் நோக்கம்


வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேற வேண்டும். 


வீடு பேறு அடைவதுதான் வாழ்வின் நோக்கம் என்று நம்மவர்கள் கொண்டார்கள். 


இல்லை. எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. கடவுளே இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது. பின் எப்படி அவரை அடைவதை நான் என் வாழ்வின் குறிக்கோளாக கொள்ள முடியும் என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. 


வீடு பேறு வேண்டாம். வேறு என்ன குறிக்கோள் இருக்க முடியும்? 


செல்வம் சேர்ப்பது, இன்பமாக இருப்பது, புகழ் அடைவது,  பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் செய்வது, கவிதை எழுதுவது, ஊரு சுற்றுவது என்று எவ்வளவோ குறிக்கோள்கள் இருக்கலாம். 


சரி, அவற்றை அடைந்த பின் என்ன செய்வது? 



அவற்றை அடைந்தவர்கள் என்ன செய்கிறார்கள்? 


எந்த ஒரு குறிக்கோளும் முடிவு அல்ல. ஒன்றை அடைந்தால் மனம் அதைவிட பெரியது ஒன்றை நாடும். 


ஒரு இலட்சம் சேர்ப்பது குறிக்கோளாக இருந்தால், அது அடைந்த பின், பத்து இலட்சம், பின் கோடி, பின் பத்து கோடி,  என்று விரிந்து கொண்டே போகும். 


அப்படி என்றால் அதற்கு மேல் ஒன்று இல்லை என்ற ஒரு நிலை வரை நாம் சென்று கொண்டே இருப்போம் அல்லவா?  அதை விட பெரியது, சிறந்தது என்று ஒன்று இல்லை என்றால், அது தான் கடைசி. அதை அடைந்த பின் வேறு ஒன்று இல்லை. 


அப்படி ஒன்று இருக்கிறதா என்ன ? அது என்ன? 




(click the above link to continue reading)


அதை நீங்கள் கடவுள் என்று வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது தன்னைத் தான் அறிவது என்று வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். 


வள்ளுவர் அதற்கு வீடு பேறு என்று வைத்து இருக்கிறார். அவ்வளவுதான். 


அதை அடைவதுதான் வாழ்வின் நோக்கம். எல்லோருக்கும். அதுவே குறிக்கோள்.


அதை எப்படி அடைவது?

துறவறத்தின் மூலமே அடைய முடியும். 


சரி.


துறவறத்தை எப்படி அடைவது?


இல்லறத்தின் மூலமே அதை அடைய முடியும். (விதி விலக்குகள் இருக்கலாம்) 


எனவே, முதலில் இல்லறம் பற்றி சொல்லத் தொடங்குகிறார். 


இல்லறம் என்பது வீடு பேறு அடைய ஒரு வழியே தவிர அதுவே முடிவு அல்ல. 


பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், கல்யாணம் பண்ணி, பிள்ளை குட்டிகள், பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்வதுதான் வாழ்வின் நோக்கம் என்று. 


அது அல்ல. 


இல்லறம் முதல் படி. 


அடுத்த படி, துறவறம். 


அடுத்த படி, வீடு பேறு. 


முதல் படியிலேயே இருந்து விடக் கூடாது. 


கோவிலுக்குப் போனால் சுண்டல் கிடைக்கும். 


சுண்டலுக்காக கோவிலுக்கு போவதா?


இல்லறத்தில் ஆண் பெண் இன்பம், பிள்ளைகள் இன்பம், பொருள்களினால் வரும் இன்பம், சுற்றம், நட்பு இவற்றால் வரும் இன்பம் என்று இதெல்லாம் இருக்கும். இவை எல்லாம் சுண்டல் போல. 


கோவிலுக்குப் போய், வேறு ஒன்றும் செய்யாமல்,  சுண்டல் மட்டும்  வாங்கி உண்டு விட்டு வந்தால் எப்படி இருக்கும். 


கணவன், மனைவி, பிள்ளைகள், சாப்பாடு, டிவி,  அரட்டை, இதையெல்லாம் கடந்து மேலே போக வேண்டும். 


ஆசார அனுஷ்டானங்களிலேயே வாழ்க்கை முடிந்து விடக் கூடாது. 


இல்லறம் என்பது ஒரு நீண்ட சாலை.  திருமணத்தில் தொடங்கி வீடு பேறு வரை அந்த சாலை செல்லும். நடந்து கொண்டே இருக்க வேண்டும். தொடங்கிய இடத்திலேயே அமர்ந்து விடக் கூடாது. 


போகிற வழியில் கொஞ்சம் பசிக்கும். வழியில் ஒரு டீ கடை இருக்கும். ஒரு தேநீர் அருந்தலாம். 


அடடா என்ன அருமையான தேனீர். நான் இங்கேயே இருந்து விடுகிறேன். மேலே போக வேண்டாம் என்று அந்த டீ கடையிலேயே உட்கார்ந்து இருபதல்ல வாழ்க்கை. 


எவ்வளவு சுவையாக இருந்தாலும், குடித்த தேநீருக்கு காசு கொடுத்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்.


எப்படி போவது என்று வள்ளுவர் சொல்கிறார். 


அவர் கை பிடித்துச் செல்வோமா?


Sunday, June 27, 2021

திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை - பாகம் 2

 

 திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை  - பாகம் 2


( இதன்  முதல் பாகத்தை இங்கே காணலாம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1_25.html

)


பத்து அதிகாரங்களின் தலைப்புகளையும் அவற்றின் முறைமைகளையும் பார்த்தோம். 


இனி மேலே தொடர்வோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/2_27.html

(please click the above link to continue reading)


ஒழுக்கம் உடைமை வரை பார்த்தோம்.


11. பிறனில் விழையாமை - இன்பம்தானே வேண்டும், அது யாரிடம் இருந்து வந்தால் என்ன? தன் மனைவியாக இருந்தால் என்ன, மாற்றான் மனைவியாக இருந்தால் என்ன என்று ஒழுக்கம் தவறிச் செல்லாமல், ஒழுக்கம் உடையவர்கள் பால் தான் பிறன் மனைவியை நோக்காமல் இருக்கும் பாங்கு இருக்கும் என்பதால், ஒழுக்கம் உடைமைக்கு பின் இதைக் கூறினார். 



12. பொறையுடைமை - குடும்பம், சமுதாயம் என்று வந்து விட்டால் சில தவறுகள் நிகழ்வது இயற்கை. எல்லாவற்றிற்கும் சரிக்கு சரி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் குடும்பமும், நாடும் சீரழிந்து விடும். இல்லறத்துக்கு பொறுமை அவசியம். தெரிந்தோ, தெரியாமலோ பிறர் செய்த குற்றங்களை பொறுப்பது, பொறையுடைமை. 


13. அழுக்காறாமை - மற்றவர்கள் பெறுவதை கண்டு பொறாமைப் படுவது. குடும்பம், சமுதாயம் என்றால் ஏற்றத் தாழ்வுகள் கட்டாயம் இருக்கும். ஐயோ அவனுக்கு இவ்வளவு செல்வமா, புகழா , எனக்கு ஒன்றும் இல்லையே என்று மற்றவர்கள் ஆக்கம் கண்டு பொறாமை படாமல் இருத்தல் அழுக்காறாமை. 


14. வெஃகாமை : பிறர் பொருளை கவர நினைத்தல். பொறாமை வந்தால், தான் முன்னேறாவிட்டாலும், மற்றவனை முன்னேற விடக் கூடாது என்று அவன் பொருளை கவர நினைப்பது. எனவே, இது அழுக்காறாமை என்ற அதிகாரத்தின் பின் வைக்கப்பட்டது. 


15. புறங்கூறாமை - இது சொல்லினால் வரும் குற்றம். காணாததை கண்டது போல் கூறுவது. ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி தவறாக இல்லாததையும் பொல்லாததையும் கூறுவது.  இது சொல் குற்றம். 


16. பயனில சொல்லாமை - இதும் ஒரு சொல் குற்றம். வெட்டிப் பேச்சு, யாருக்கும் ஒரு பலனும் தராத பேச்சு. இவை சொல்லில் நிகழும் குற்றங்கள். இவற்றை கடிய வேண்டும். 


17. தீவினையச்சம் - மனம், செயல், வாக்கு இவற்றால் நிகழும் அனைத்து குற்றங்களையும் கண்டு அச்சம் கொள்ளுதல். தவறு செய்ய அஞ்ச வேண்டும். என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்ற தைரியத்தில் தானே குற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, குற்றம் நிகழாமல் இருக்க அவற்றைப் பற்றி அச்சம் கொள்ள வேண்டும். 



18. ஒப்புரவு அறிதல் - உலகோடு ஒட்டி வாழ்தல். திருக்குறளில் இப்படி சொல்லி இருக்கிறது. எனவே நான் இப்படித்தான் வாழ்வேன் என்று உலகத்தோடு முரண் பட்டு வாழ்க் கூடாது. இங்கே உலகம் என்று கூறுவது, நல்லவர்களை, பெரியவர்களை. புத்தகங்கள் பல கூறும். உலகம் மாறிக் கொண்டே இருக்கும். உலகோடு ஒட்டி வாழ வேண்டும். 


19. ஈகை: வறியவர்களுக்கு, ஏழைகளுக்கு, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது. 


20.புகழ்: இவை எல்லாம் செய்வதால் நிகழ்வது புகழ். 


இதோடு இல்லறம் பற்றிய அதிகாரங்கள் நிறைவு பெறுகின்றன. 


இருபது அதிகாரங்கள். இருநூறு குறள்கள். இல்லறத்தின் ஒவ்வொரு பகுதியையும் மிக மிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்து, தொகுத்து கூறியுள்ளார். 


இதற்கு மேல் இல்லறம் பற்றி சிந்திக்கக் கூட முடியாது. 


மற்ற எல்லா புத்தகங்களையும் மூட்டி கட்டி வைத்து விடலாம். இல்லற வாழ்க்கைக்கு இதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை. இதை முழுமையாக புரிந்து கொண்டு, வாழ்வில் கடைப் பிடித்தாலே போதும். 


இனி ஒவ்வொரு அதிகாரமாக சிந்திப்போமா?




Saturday, June 26, 2021

பெரிய புராணம் - தெளிவு இல்லதே

 பெரிய புராணம் - தெளிவு இல்லதே 


வாழ்க்கை பெரிய துரித கதியில் சென்று கொண்டு இருக்கிறது. 


அனைத்திலும் ஒரு வேகம். ஒரு பதற்றம். ஒவ்வொரு வாகனமும் ஒன்றை விட ஒன்று முந்திக் கொண்டு வருகின்றன. எவ்வளவு சீக்கிரத்தில், எவ்வளவு வேகமாக செல்ல முடியும் என்று போட்டி போட்டுக் கொண்டு பறக்கின்றன. 


எதற்கும் நேரம் இல்லை. மழை, வெயில், மின் கம்பியின் மேல் இருக்கும் அந்த சின்னக் குருவி, குழந்தையின் சிரிப்பு, அதிகாலைச்  சூரியன், அந்தி சந்திரன்..இப்படி ஆயிரம் ஆயிரம் இனிமையான விடயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. எதையும் பார்க்க, இரசிக்க, அனுபவிக்க  நேரம் இல்லை. 


பணம், பொருள், சொத்து, அதிகாரம், பதவி, எதிர்கால கனவு/பயம் என்று வாழ்கை ஒரு சாரம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. 


பெரிய புராணம் போன்ற மிகப் பெரிய இலக்கியத்தை எழுத ஆரம்பித்த சேக்கிழார், ஆற்றின் நீரோட்டத்தை, நின்று, இரசித்து, அனுபவித்து எழுதுகிறார்.


ஆற்றின் நீரோட்டம் கலங்கலாக இருக்கிறது. ஏன் கலங்கி இருக்கிறது என்றால், பெண்கள் ஆற்றில் நீராடுவார்கள், அவர்கள் உடலில் உள்ள சந்தனம், குங்குமம் போன்றவை நீரில் கலந்ததால் அந்த நீர் தெளிவு இல்லாமல் இருக்கிறதாம். 


பாடல் 


வாச நீர்குடை மங்கையர் கொங்கையிற்  

பூசு கும்கும மும்புனை சாந்தமும்

விசு தெண்டிரை மீதழித் தோடுநீர்

தேசு டைத்தெனி னுந்தெளி வில்லதே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_26.html


(please click the above link to continue reading)


வாச நீர் = வாசம் உள்ள நீர் 


குடை = குடைந்து குடைந்து நீராடும் 


மங்கையர் = பெண்கள் 


கொங்கையிற்  = மார்பில் 


பூசு  = பூசிய 


கும்கும மும் = குங்குமமும் 


புனை சாந்தமும் = அணிந்த சந்தனமும் 


விசு = வீசி 


தெண்டிரை =  அலையால் 


மீதழித் தோடுநீர் = மிகையாக அழித்துக் கொண்டு ஓடும் நீர் 


தேசு = ஒளி 


உடைத்தெனி னுந்  = பொருந்தியதாயினும் 


தெளி வில்லதே. = தெளிவு இல்லாமல் கலங்கி இருந்தது 


சரி, இதில் என்ன இருக்கிறது ? பெண்கள் குளிக்கிறார்கள். சந்தனமும், குங்குமமும் நீரில் கலந்து இருக்கிறது. நீர் தெளிவாக இல்லை.  இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது? 


இயற்கையை இரசிக்க தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி இரசித்து இருக்கிரார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அட, இதை இப்படியும் இரசிக்க முடியுமா என்று வியக்க வைக்கிறது. 


Wordsworth என்ற ஆங்கில் கவிஞர் ஒரு கிராமத்தில் வயலோரம் நடந்து போகிறார். அங்கே யாரோ ஒரு முகம் தெரியாத பெண்  கதிர் அறுத்துக் கொண்டிருக்கிறாள். ஏதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். அது என்ன பாட்டு என்றும் அவருக்குத் தெரியாது. 

இதில் என்ன இருக்கிறது? 

அதைப் பற்றி ஒரு பாடல் எழுதி இருக்கிறார். காலத்தால் அழியாத பாடல். 



The Solitary Reaper

Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.

No Nightingale did ever chaunt
More welcome notes to weary bands
Of travellers in some shady haunt,
Among Arabian sands:
A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.

Will no one tell me what she sings?—
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago:
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again?

Whate'er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;—
I listened, motionless and still;
And, as I mounted up the hill,
The music in my heart I bore,
Long after it was heard no more.


இரசிக்க பழக வேண்டும்.

இரசிக்க ஆயிரம் இருக்கிறது. இரசிக்க இரசிக்க வாழ்கை இனிமையாக இருக்கும். 



Friday, June 25, 2021

திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை - பாகம் 1

 திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை  - பாகம் 1 


வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது ஒரு முழு வாழ்க்கை நடைமுறை. அது ஒரு குடும்பத்தோடு நிற்கும் ஒன்று அல்ல. 


வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது வீடு பேற்றை அடையும் வழி. இல்லறம் என்பது வீடு குடும்ப வாழ்க்கையோடு முடிவது அல்ல. அது முதல்படி.  பெரும்பாலோனோர், இல்லறம் என்பது குடும்ப வாழ்கை என்று நினைப்பார்கள். அல்ல. 


குடும்பம், சமுதாயம், துறவறம், வீடு பேறு என்று ஒரு நீண்ட பாதையின் முதல் படி இல்லறம். 


ஒவ்வொரு படியும் ஒரு அதிகாரம். ஒவ்வொரு அதிகாரமும் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குப் போகும் படி. திருக்குறளை மனம் போன படி படிக்கக் கூடாது. அதிகாரங்கள் என்பது ஒரு நெறியோடு ஒன்றின் பின் ஒன்றாக சொல்லப்பட்டு இருக்கிறது.  


எனக்கு பிடித்த அதிகாரம் என்று ஏதோ ஒரு அதிகாரத்தை நடுவில் எடுத்துப் படிக்கக் கூடாது. 


சரி, வள்ளுவர் காட்டும் இல்லறம் எப்படி விரிகிறது என்று அதிகார முறைமையால் பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1_25.html

(please click the above link to continue reading)


1. இல்வாழ்க்கை - திருமணம், குடும்பம், குடும்பத் தலைவனின் கடமைகள். இது தொடக்கம். பலருக்கு இதுவே முடிவாக தோன்றும். 


2. வாழ்க்கைத் துணை நலம் - மனைவியின் முக்கியத்துவம், அவள் பொறுப்புகள், இல் வாழ்க்கையில் அவளின் பங்களிப்புகள் பற்றி கூறுகிறார். 


3. புதல்வர்களைப் பெறுதல் - அன்பான இல்வாழ்வின் வெளிப்பாடு பிள்ளைகள். பிள்ளைகளின் கடமைகள், அவர்களால் பெறும் நன்மைகள். 


4. அன்புடைமை - கல்யாணம் பண்ணினோம், பிள்ளைகளப் பெற்றோம், வளர்த்தோம் என்று இல்லாமல், எப்படி இல்லறம் என்பது அன்பின் வெளிப்பாடு என்று கூறும் அதிகாரம். ஒருவர் மேல் அன்பு செலுத்தாத இல்லறம் என்ன இல்லறம்? திருமணம் ஆகாத ஒரு பிரம்மச்சாரிக்கு அன்பு என்றால் என்ன என்று எப்படித் தெரியும்? என் பிள்ளைக்கு இது பிடிக்கும் என்று தனக்குப் பிடித்ததை தான் உண்ணாமல் பிள்ளைக்கு கொடுத்து அது மகிழ்ச்சியாக உண்பது கண்டு மகிழும் மனம் இல்லறத்தில் உள்ளவனுக்குத்தான் வரும். அன்பு வளர வேண்டுமானால், இல்லறம் வேண்டும். 


5. விருந்தோம்பல் - கணவன், மனைவி, பிள்ளைகள், இது மட்டுமா இல்லறம். சுற்றமும், நட்பும் வேண்டாமா? அவர்களை வீட்டுக்கு அழைத்தல், அவர்களை உபசரித்தல், அவர்கள் மேல் அன்பு பாராட்டுதல் என்று பெரிய வளையம் வேண்டாமா. அது பற்றிக் கூறுவது விருந்தோம்பல். விருந்துக்குப் போவது என்றால் யார் வீட்டுக்குப் போக முடியும்? திருமணம் ஆகாத ஒரு பெண் தனித்து இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் வீட்டுக்கு விருந்துக்குப் போக முடியுமா? அது போல் தான் தனியாக இருக்கும் ஒரு ஆண் வீட்டுக்கு யார் விருந்துக்குப் போவார்கள்? அவன் என்ன செய்து வைத்து இருப்பானோ என்ற பயம் இருக்கும் அல்லவா? 


6. இனியவை கூறல் - எப்படி விருந்தினை ஓம்புவது? போற்றுவது. வந்தவர்களுக்கு நிறைய சாப்பாடு போட்டால் போதுமா? அவர்களோடு எப்படி அன்பாகப் பேசுவது என்பது பற்றி கூறும் அதிகாரம். 

7.  செய்நன்றி அறிதல் - விருந்தை போற்றி, இனியவை கூறினால், விருந்தினர்கள் அவர்களால் முடிந்த உதவியை நமக்குச் செய்வார்கள்.  அப்படி நன்றி செய்தால், அதை மறக்காமல் இருப்பது பற்றி கூறும் அதிகாரம். 


8. நடுவு நிலைமை - குடும்பம், கணவன், மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு என்று அமைந்து விட்டது. இதில் நமக்கு வேண்டியவர்களுக்கு இடையிலோ அல்லது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலோ ஏதோ ஒரு பிணக்கு வந்து விடலாம். எனக்கு பிடித்தவர்கள் என்று நடு நிலை மாறி பேசவோ செய்யக் கூடாது.  அப்படி நடு நிலை மாறாமல் இருப்பவர்களை வீடும், நாடும் ஏற்றுக் கொண்டு அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். குடும்பத்தில் மூத்தவர், பெரியவர் , ஊருக்கு பெரிய மனிதர் என்று நல்லவர்கள் நடு நிலை தவராதவர்களை பற்றிக் கூறும் அதிகாரம். 


9. அடக்கம் உடைமை - நடுவு நிலை என்றால் யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்று கூற வேண்டும். அதற்கு புலன் அடக்கம் வேண்டும். பற்று இருக்கக் கூடாது. எனவே அடுத்த அதிகாரம், அடக்கம் உடைமை. 


10. ஒழுக்கம் உடைமை - நாடும், வீடும் நலமாக இருக்க வேண்டும் என்றால் குடிகள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். புலன் அடக்கம் வந்தால் தான் ஒழுக்கம் வரும்.  எனவே, அடக்கம் உடைமைக்கு அடுத்து ஒழுக்கம் பற்றி கூறுகிறார். 


இன்னும், கொஞ்சம் அதிகாரங்கள் இருக்கின்றன. யோசித்துப் பாருங்கள் இதுவே எவ்வளவு விரிவாக ஆழமாக இருக்கிறது என்று.  நினைக்க நினைக்க பிரமிப்பு ஊட்டும் படைப்பு. 


ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு அடியாக கை பிடித்து இனிய இல்லறம் நடத்த வழி சொல்லித் தருகிறார். 


இதற்கு மேல் சிந்திக்கவே முடியாது என்ற அளவுக்கு அனைத்தையும் தொகுத்து, வழிமுறைப் படுத்தி, ஒரு நேர்த்தியோடு, அழகோடு சொல்கிறார். 


குறள் படித்த பின் வேறு ஒரு நூலே தேவை இல்லை. 


மற்ற அதிகாரங்களை பற்றி நாளை பட்டியல் இடுவேன். அதற்கு முன் ஒரு வார்த்தை. 


வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது ஆண் மகனை தலைமை பொறுப்பில் அமர்த்துகிறது. ஆணுக்கு கடமைகளைச் சொல்லி, பெண் அவனுக்கு துணை செய்ய வேண்டும் வழி காட்டுகிறது.  பெண்ணுக்குத் தலைமைப் பொறுப்பை தரவில்லை. அதற்காக அவளின் பெருமையை, பங்களிப்பை குறைக்கவில்லை. ஒரு நிறுவனம் சிறப்பாக நடக்க வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தில் எல்லோரும் சிறப்பாக உழைக்க வேண்டும். அதற்காக எல்லோரும் தலைமை பொறுப்பில் (CEO) இருப்பேன் என்று சொல்லுவது அடாவடித்தனம் இல்லையா. 


இன்றைய பெண்ணிய சிந்தனையாளர்களுக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். தவறில்லை.  பெண்ணை முதன்மை படுத்தி, ஆண் அவளுக்கு துணை செய்ய வேண்டும் என்று ஒரு குடும்ப கோட்பாடு வரையலாம். 


குறள் சிந்தனை தவறு என்று சொல்பவர்கள், அப்படி ஒரு கோட்பாட்டை வரையறுத்து, பாடல் எழுதி அதை பிரபலப் படுத்தலாம். அதை இந்த வருங்கால சமுதாயம் ஏற்றுக் கொண்டால், அப்படி ஒரு வாழ்க்கை முறை அமையலாம். தவறில்லை. 


குறள் தவறு என்று சொல்பவர்கள் முயற்சி செய்ய வேண்டும். 


வள்ளுவருக்கு ஒன்றும் தெரியாது, பரிமேலழகருக்கு ஒன்றும் தெரியாது, எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பவர்கள் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்தி புதிய குறள் எழுத வேண்டும். அதை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும். 


மீதி அதிகாரங்களை நாளை பார்ப்போமா ?




Thursday, June 24, 2021

பெரிய புராணம் - உலகம் உய்ய

 பெரிய புராணம் - உலகம் உய்ய 


சோழ நாட்டின் அரசன் அநபாய சோழன் என்பவன். அவன் ஒரு காலகட்டத்தில் பல சிற்றின்ப நூல்களை படித்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தான். அவனிடம் மந்திரியாக இருந்தவர் சேக்கிழார். 


மன்னன் இப்படி சிற்றின்ப நூல்களைப் படித்துக் கொண்டிருந்தால், அவனுக்கு கீழே உள்ள அதிகாரிகளும் அந்த மாதிரி நூல்களையே படிப்பார்கள். அவர்களைப் பார்த்து குடி மக்களும் அதே மாதிரி நூல்களைப் படிப்பார்கள். நாடே நலிந்து போகும் என்று நினைத்து, சேக்கிழார் பெருமான் அரசனிடம் அந்த மாதிரி நூல்களைப் படிக்க வேண்டாம் என்றார். 


அதற்கு அரசன், "சரி இந்த மாதிரி நூல்களைப் படிக்கவில்லை...வேறு எந்த மாதிரி நூல்களைப் படிக்கட்டும்" என்று கெட்டான். 


சேக்கிழார் :  அடியார்கள் பற்றிய செய்திகளை படியுங்கள் 


அரசன்: அடியார்கள் பற்றிய நூல் இருக்கிறதா ?


சே: நூலாக இல்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள், கதைகள் என்று இருக்கிறது 


அ: அப்படியானால் நீரே அவற்றை தொகுத்து ஒரு நூலாக செய்து தாருங்கள் படிக்கிறேன் 


சே: முதலைமைச்சர் பதவியும் பார்த்துக் கொண்டு, நூல் எழுதுவது என்பது நடவாத காரியம். நேரம் இருக்காது


அ: அப்படியா, பரவாயில்லை, நீங்கள் முதலைமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்த நூலை எழுதுங்கள் என்றான். 


சேக்கிழாரும் அவ்வாறே செய்தார். 


இது ஒரு ஒரு அநபாயனுக்கு, அவர் முதலைமைச்சர் எழுதிய நூல் என்று கொள்ளக் கூடாது. 


எல்லா காலகட்டத்திலும், தலைவர்கள் வழி தவறுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்று குடி மக்களும் அறம் தவறுவார்கள். என்றென்றுக்கும் வழி காட்ட இந்த நூலைச் செய்தேன் என்கிறார். 


உலகம் உய்ய இந்த திருத் தொண்டர்களின் வரலாற்றை பாடுகிறேன் என்கிறார். 


தொண்டர்களின் வரலாற்றைப் படித்தால் உலகம் உய்யுமா என்று கேட்டால் அதற்கு இரண்டு விடை இருக்கிறது. 


ஒன்று, சேக்கிழார் போன்ற ஆழுந்து அகன்ற நுண்ணிய அறிவு உடையவர்கள் சொல்வது தவறாக இருக்காது என்று நம்பலாம். 


இல்லை. அதெல்லாம் நம்ப முடியாது. அது யாராக இருந்தால் என்ன, இதைப் படித்தால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் என்று கேட்டால், கொஞ்சம் படித்துப் பாருங்கள். உங்களுக்குள் ஒரு மாற்றம் வந்தால் மேலே படியுங்கள். இல்லை என்றால் விட்டு விடலாம். 


கொஞ்சம் படியுங்கள். புரியும். 


பாடல் 


உலக முய்யவுஞ் சைவநின் றோங்கவும்  

அலகில் சீர்நம்பி யாரூரர் பாடிய

நிலவு தொண்டர்தங் கூட்டம் நிறைந்துறை

குலவு தண்புன னாட்டணி கூறுவாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_24.html


(please click the above link to continue reading)



உலக முய்யவுஞ் = உலகம் உய்யவும். உய்தல், தவறுகளில் இருந்து தப்பி, நிலைத்து வாழ்தல் 


சைவநின் றோங்கவும் = சைவ நெறி நின்று ஓங்கவும் 


அலகில் சீர் = அளவற்ற சிறப்புகள் நிறைந்த 


நம்பி யாரூரர் பாடிய = நம்பி ஆரூரர் பாடிய 


நிலவு = நிலைத்து இருக்கும் 


தொண்டர்தங் = தொண்டர்களின் 


கூட்டம் நிறைந்துறை = கூட்டம் நிறைந்து, வாழும் 


குலவு = விளங்கும் 


தண்புன னாட்டணி கூறுவாம். = தண் + புனல் + நாட்டு + அணி + கூறுவாம் 


குளிர்ந்த நீரை உடைய நாட்டின் (சோழ நாட்டின்) சிறப்பைக் கூறுவோம். 




Tuesday, June 22, 2021

திருக்குறள் - இல்லறம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - இல்லறம் - ஒரு முன்னோட்டம் 


இல்லறம் என்றால் என்ன? 


திருமணம் செய்து கொள்வது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது, அவர்களை நல்ல விதமாக வளர்ப்பது, வயதான காலத்தில் பெற்றோர்களை பேணுவது  என்பதுதான் இல்லறமா? 


ஒரு குடும்பத்துக்குள் நடப்பதுதான் இல்லறமா? 


நான், என் குடும்பம், என் கணவன்/மனைவி, என் பிள்ளைகள், என் பெற்றோர் என்று இருப்பதுதான் இல்லறமா? 


திருமணம் செய்து கொள்வது எதற்கு? இன்பம் அனுபவிக்கவும், பிள்ளைகளை பெற்றுக் கொள்ளவும் மட்டுமா? 


வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது மிக பிரமாண்டமானது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_22.html

(click the above link to continue reading)


இல்லற வாழ்கையை இதற்கு மேல் விரிவாக, ஆழமாக, நுட்பமாக சொல்லவே முடியாது என்று அடித்துச் சொல்லலாம். 


இல்லறத்தின் ஒவ்வொரு பாகத்தையும், படியையும் ஒரு அதிகாரமாக படைக்கிறார். 


மிகச் சிறபானா இல்லற வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் வள்ளுவர் சொல்லும் வழியை கடைப் பிடித்தால் போதும். 


ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு கட்டமாக நம்மை அழைத்துச் செல்கிறார். 


அது மட்டும் அல்ல, இந்த திருமணம், பிள்ளைகளை பெறுவது, வளர்ப்பது எல்லாம் எதற்காக? ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், மணந்தோம், பிள்ளைகளைப் பெற்றோம், வளர்த்தோம், மறைந்தோம் என்று முடிந்து விடுவதா இல்லறம்? ஒரு அர்த்தம், நோக்கம் இல்லையா? இதை ஏன் செய்ய வேண்டும்? 


இப்போதெல்லாம் ஆணும் பெண்ணும் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக இருந்தால் என்ன என்று கேட்கிறார்கள். அதற்கு சட்ட ரீதியாக அங்கீகாரமும் கிடைக்கிறது.  அது சரியா தவறா என்று நாம் விவாதம் செய்ய வேண்டாம். வள்ளுவர் போன்ற பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிந்து கொள்வோம். 


இதற்கு ஒரு படி மேலே போய், ஆணும் பெண்ணும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? ஆணும் ஆணுமோ அல்லது பெண்ணும் பெண்ணுமோ திருமணம் செய்து கொள்ளக் கூடாதா என்றும் கேட்கிறார்கள். அப்படி திருமணமும் செய்து கொள்கிறார்கள்.  அவை சரியா தவறா என்று தெரியாமல் ஒரு மயக்கம் இருக்கிறது. சரி என்று சொல்பவர்கள் வாதத்திலும் ஞாயம் இருக்கிறது போல் தெரிகிறது. தவறு என்று வாதம் செய்பவர்கள் பக்கமும் ஞாயம் இருப்பது போலத் தெரிகிறது. 


இல்லறத்தின் கடமைகள் என்ன, அதன் நோக்கம் என்ன, ஒரு சிறப்பான இல்லறம் என்றால் எப்படி இருக்க வேண்டும், அப்படி சிறப்பாக வாழ்ந்தால் என்னென்ன நன்மைகள், பலன்கள் கிடைக்கும், இல்லறத்தின் அடுத்த கட்டம் என்ன என்றெல்லாம் மிக மிக விரிவாக விளக்குறார் வள்ளுவர். 


வரும் நாட்களில் இவற்றைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


சிந்திப்போமா?