Wednesday, September 29, 2021

திருக்குறள் - எது இனிது?

 திருக்குறள் - எது இனிது?  


நம் குழந்தைகளின் மழலைச் சொல் கேட்க எவ்வளவு இன்பம்? அது சொல்லும் ம்ம்மா, பப்பா, அத்த்த்த என்று பேசும் போது எவ்வளவு இனிமையாக் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின் சில எழுத்துக்களின் உச்சரிப்பு சரியாக வராது. அது கூட கேட்க்க இன்பமாகத்தான் இருக்கும். 


நம் குழந்தைகளின் மழலை மொழி குழலை விட, யாழை விட இனிமையாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_29.html


(Please click the above link to continue reading)



குழலினிது = புல்லாங்குழல் இனிமையாக இருக்கும் 


யாழினிது = யாழ் இனிமையாக இருக்கும் 


என்ப = என்று கூறுவார்கள், யார்?


தம் மக்கள் = தங்களுடைய குழந்தைகளின் 


மழலைச்சொல் = மழலை சொற்களை 


கேளா தவர் = கேட்காதவர்கள் 


மிக எளிமையான குறள். இருந்தும் அதில் எவ்வளவு நுணுக்கம் சேர்கிறார் வள்ளுவர். 


தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று, இலக்கணம் தெரியாமலேயே அதன் இலக்கணத்தின் பயன்பாட்டை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. 


இங்கே, குழல் இனிது என்றால் என்ன அர்த்தம்? குழல் பார்க்க இனிது என்று அர்த்தமா? "குழல்" என்று சொல்வது இனிமையா?


இல்லை, குழலில் இருந்து வரும் ஒலி இனிமையானது என்று நமக்குப் புரிகிறது. 


எப்படி நாம் அதை புரிந்து கொள்கிறோம்?


யாராவது சொன்னார்களா? இல்லை? இருந்தும் தன்னிச்சையாக அது நமக்கு புரிந்து விடுகிறது. 


இலக்கணத்தில் இதற்கு ஆகு பெயர் என்று பெயர்.


ஒன்றின் சொல் மற்றதற்கு ஆகி வருகிறது. 


குழல் என்ற சொல் குழலில் இருந்து வரும் ஒலிக்கு ஆகி வருகிறது. 


இந்த இலக்கணம் நமக்குத் தெரியாமலேயே அது புரிந்து விடுகிறது. காரணம், தமிழ் இலக்கணம், பயன்பாட்டில் இருந்து பிறந்தது. அது இயற்கையாகவே அப்படித்தான் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ள ரொம்ப சிரமப் பட வேண்டியது இல்லை. 


ஏன் முதலில் குழலைச் சொல்லி,பின் யாழைச் சொன்னார் என்று ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்கு நயம் பாராட்டுவார்கள். 


குழலில் இருந்து பிறக்கும் இசை இயற்கையாகவே வரும். மூங்கிலில் வண்டு துளைக்க, அதில் புகுந்து புறப்படும் காற்று புல்லாங்குழல் ஒலியாக வரும்.  புல்லாங்குழலுக்கு சுருதி கிடையாது. அதற்கு சுருதி பிடிக்க முடியாது. ஒவ்வொரு குழலும் ஒரு சுருதியில் இருக்கும். 


யாழ், நாம் செய்ய வேண்டும். அதற்கு சுருதி பிடிக்க வேண்டும். நரம்புகள் சரியானபடி இருக்க வேண்டும். 


குழந்தை முதலில் தானே பேச முயற்சி செய்யும். ம்மா...ப்பா, என்று முயற்சி செய்யும். 


பின் நாம் அதற்கு துணை செய்வோம். 


முதலில் இயற்கை, பின் மனித முயற்சி. 


எனவே, முதலில் குழல் என்றும் பின் யாழ் என்றும் கூறினார். 


"தம் மக்கள்" என்று கூறினார். அதே மழலையை பக்கத்து வீட்டு பிள்ளை பேசினால் "இனிமையாக" இருக்காது. நம் பிள்ளை பேசுவதுதான் நமக்கு இனிமை. 


கடைசி மூன்று குறள்களில் பிள்ளைகளின் இம்மைப் பயன் கூறப்பட்டது என்கிறார் பரிமேலழகர்:


அதாவது, 


- மக்கள் சிறு கை அளாவிய கூழ் அமிழ்தினும் இனியது 

- அவர்கள் மெய் தீண்டல் உடலுக்கு இன்பம் ; அவர்கள் சொல் கேட்டல் செவிக்கு இன்பம் 

- மூன்றாவதாக இந்தக் குறளில் குழல், யாழை விட மழலை மொழி இனியது என்று கூறுகிறார். 


அது தான் மேலே சொன்ன இரண்டாவது குறளில் கூறியாகிவிட்டதே, 


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


பின் எதற்கு 

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.


மழலை மொழியைப் பற்றி மீண்டும் கூற வேண்டும் என்ற கேள்வியை கேட்டு, அதற்கு பதிலும் தருகிறார் பரிமேலழகர். 


"இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு"


என்கிறார். 

முந்தைய குறளில் "சொற் கேட்டல் செவிக்கு இன்பம்" என்றார். அது மழலை மொழியாக இருக்க வேண்டும் என்று அல்ல. கல்லூரிக்கு செல்லும் பிள்ளை வந்து, கல்லூரியில் நடந்ததை சொல்வதை கேட்பதும் இன்பம் தான். 


பிள்ளைகள் பேசுவதை கேட்பது எப்போதும் இன்பம் தான் என்றாலும், மழலை இன்னும் சிறப்பு வாய்ந்தது என்பதற்காக அதை சிறப்பு வகையாலும் கூறினார் வள்ளுவர் என்று பரிமேலழகர் கூறுகிறார். 


எவ்வளவு ஆழமாக படித்து இருக்கிறார்கள். 


படிக்க படிக்க அத்தனை அழகு, ஆழம், இனிமை....


திருவள்ளுவர் அருளிச் செய்த திருக்குறள் ....அனுபவிப்போம்....





Tuesday, September 28, 2021

கம்ப இராமாயணம்

 கம்ப இராமாயணம் 


இந்த ப்ளாக் எந்த ஒரு பாடலையும் பற்றி அல்ல. ஒரு பொதுவான பார்வை. 


கம்ப இராமாயணத்தில் பெண் பாத்திரங்கள் பற்றி சிந்தித்து கொண்டிருந்தேன். 


கம்ப இராமாயணத்தில் அப்பா - மகள்; அம்மா - மகள் உறவு என்று இல்லை. 


இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கனன்.  ஒரு சகோதரி கிடையாது.  சிந்தித்துப் பார்கிறேன்...ஒரு வேளை அவர்களுக்கு ஒரு சகோதரி இருந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும்?


வாலிக்கு ஒரு மகன். மகள் இல்லை. 


இராவணனுக்கு மகன்கள் உண்டு. மகள் இல்லை. 



https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_9.html


(click the above link to continue reading)



ஜனகனுக்கு மகள் சீதை இருந்தாள். ஆனால், அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட மாதிரி தெரியவில்லை. கானகம் போன மகளைப் பற்றி ஜனகன் கவலைப் பட்ட மாதிரி தெரியவில்லை. 


சூர்பனகை ஒரு சகோதரி இருந்தாள். அவளும் காமம், பழி வாங்குதல் என்று போய் விட்டாள். 


இராமனும் வழி நெடுக ஆண்களை சந்திக்கிறான். எல்லோரையும் சகோதரர்கள் என்று அரவணைத்துக் கொள்கிறான். குகன், சுக்ரீவன், வீடணன் என்று. ஒரு பெண்ணைக் கூட சகோதரி என்று அவன் ஏற்றுக் கொண்டதாக இல்லை. 


அகலிகையை தாயாக நினைத்து தொழுது விட்டுப் போய் விடுகிறான். 


சபரி வந்து உபசாரம் பண்ணி, வழி காட்டிவிட்டு, வானகம் போய் விடுகிறாள். 


மற்ற பெண்களைப் பார்த்தாலும், பெரிய பங்களிப்பு இல்லை. 


புலம்புகிறார்கள். 


தாரை புலம்புகிறாள். 


மண்டோதரி புலம்புகிறாள். 


கைகேயி ஒரு சக்தி வாய்ந்த பாத்திரம். இன்றைய தொலைக்காட்சி சீரியல் வில்லி மாதிரி போட்டுத் தாக்கிவிட்டு காணாமல் போய் விடுகிறாள். 


கோசலையும் ரொம்ப சாதுவாக வந்துவிட்டு போகிறாள். 


சுமித்ரை ஏதோ ஒப்புக்கு, "அண்ணன் வந்தால் வா, இல்லை என்றால் முன்னம் முடி" என்று முலை பால் சோர நின்றதுடன் சரி. 


சீதை, பிராதன பாத்திரம். காட்டுக்குப் போகிறாள், சிறை எடுக்கப் படுகிறாள், புலம்புகிறாள், தற்கொலை வரை போகிறாள், பின் தீ குளிக்கிறாள், கடைசியில் இராமன் அவளை தனியே கானகம் அனுப்பி விடுகிறான். 


கைகேயி - கூனி - சூர்பனகை, கதையை நகர்த்த பயன்பட்டார்கள். 


இராமனுக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் தான். ஒரு பெண் பிள்ளை இல்லை. 


ஒரு மகள், ஒரு சகோதரி என்று இல்லாதது ஒரு குறை போலவே தெரிகிறது. 


சரி, இராமாயணம் தான் அப்படி இருக்கிறது. மற்ற காப்பியங்கள் எப்படி என்று பார்த்தால், அவையும் அப்படித்தான் இருக்கின்றன. 


பாரதத்தில், பாண்டவர் ஐவர். ஒரு பெண் உடன் பிறப்பு இல்லை. 


கௌரவர் நூறு பேர். ஒரு பெண் பிள்ளை இல்லை. 


பாஞ்சாலி, ஒரு சகோதரியாக இருந்தாள். ஆனால், அண்ணன் தங்கை உறவு வெளிப்படவில்லை. 


உப பாண்டவர்கள் பிறந்தார்கள், ஒரு பெண் பிள்ளை இல்லை. 


சிலப்பதிகாரத்தில்,  கோவலனுக்கும், கண்ணகிக்கும் உடன் பிறப்பு இல்லை. படம் பூராவும் அமைதியாக இருந்து விட்டு, கிளைமாக்ஸ் ல் bomb போட்டுவிட்டு கண்ணகி போய் விடுகிறாள். 


மணிமேகலை, துறவியாகப் போய் விட்டாள்.


உங்களுக்கு இது பற்றி ஏதேனும் சொல்ல இருந்தால், சொல்லுங்கள். அறிந்து கொள்ள ஆவல். 

முதுமொழிக் காஞ்சி - கல்வியா ஒழுக்கமா ?

 முதுமொழிக் காஞ்சி - கல்வியா ஒழுக்கமா ?


கல்வியா ? ஒழுக்கமா? இதில் எது உயர்ந்தது என்று கேட்டால், நம் இலக்கியம் அத்தனையும் ஒட்டு மொத்தமாக கூறுவது ஒழுக்கத்தைத்தான். 


எவ்வளவுதான் கல்வி கற்று இருந்தாலும், ஒழுக்கம் இல்லை என்றால் ஒருவனை நம் இனம் மதிப்பது இல்லை. 


இராவணன் கல்லாத கல்வியா ?  அவன் கல்வியை யாரும் மதிக்கவில்லை. காரணம், அவனின் ஒழுக்கக் குறைவு. 


பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள், மிகப் படித்தவர்கள் ஒழுக்கம் குறைந்து நடந்தால் நாம் அவர்களை மதிப்போமா? 


அடடா எவ்வளவு படித்த மனிதர், எவ்வளவு செல்வம், செல்வாக்கு, அதிகாரம் உள்ளவர் என்று நினைப்போமா அல்லது இவ்வளவு இருந்தும் அவனுக்கு புத்தி போகுது பாரு என்று ஏளனம் செய்வோமா? 


படிப்பு, எப்போதும் படித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் சிறு வயதில் வந்தால்தான் உண்டு. அப்புறம் வராது. 


கற்ற கல்வி சில சமயம் மறந்து போய்விடும். தவறில்லை. மீண்டும் படித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் போனால்?  அந்தப் பெண் இது வரை ஒரே ஒரு தரம்தான் கற்பு தவறி நடந்து இருக்கிறாள் என்றால் சரியாகிவிடுமா? 


பாடல் 


ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_28.html


(Please click the above link to continue reading)



ஆர்கலி யுலகத்து  = ஆரவாரமான ஒலியை உடைய கடல் சூழ்ந்த உலகில் 


மக்கட் கெல்லாம் = மக்களுக்கு எல்லாம் 


ஓதலிற் = படிப்பை விட, கல்வி அறிவை விட 


 சிறந்தன் றொழுக்க முடைமை. = சிறந்தது ஒழுக்கம் உடைமை 


கல்வியை விட உயர்ந்தது ஒழுக்கம் உடைமை. 


இதெல்லாம் சின்ன வயதில் சொல்லித் தர வேண்டும். 


twinkle twinkle litter star

baa baa black sheep

eating sugar...no papa 


என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 


வாழ்நாள் பூராவும் ஒருவனுக்கு துணை செய்யும் ஆழமான, அறிவுபூர்வமான, அனுபவ பூர்வமான எளிய பாடல்களை விட்டு விட்டு 


rain rain go away 


என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 


சிந்திக்க வேண்டிய விடயங்கள். 




Monday, September 27, 2021

நல்லாயிர திவ்ய பிரபந்தம் - இருமும்பொழுதேத்தி

நல்லாயிர திவ்ய பிரபந்தம் - இருமும்பொழுதேத்தி 


குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முதல் திருமொழி, பாசுரம் எண் 653 


பக்தி செய்ய வேண்டும். இறைவனைத் தொழ வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். 


முடியணுமே. எவ்வளவு வேலைகள் இருக்கிறது. அதெல்லாம் செய்து விட்டு, இறை வணக்கம் செய்வது என்பது  ஒரு நடவாத காரியமாகவே படுகிறது. 


சரி, எப்படியோ கொஞ்ச நேரம் ஒதுக்கி இறை வணக்கம் செய்யலாம் என்றால், மனம் எங்கே விடுகிறது. 


ஆயிரம் சிந்தனைகள், கவலைகள், கெட்ட எண்ணங்கள்...ஒன்றை அடுத்து ஒன்றாய் வந்து நிற்கின்றன. இதில் பக்தி எங்கே வரும். 


சரி, எப்படியோ மனதை கொஞ்சம் நிலைப் படுத்தினாலும், புலன்கள் விடுதா? பூஜை செய்யும் சமையல் வாசம் மூக்கைத் துளைக்கிறது, அருகில் யார் வீட்டிலோ உள்ள தொலைகாட்சி அலறுகிறது, அடுத்த வீட்டில் நடக்கும் சண்டை காதில் விழுகிறது...புலன்கள் தூண்டப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. 


நேரம் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் மனம் ஒன்றுவதில்லை, மனம் ஒன்றினாலும் புலன்கள் விடுவதில்லை...இதில் எங்கிருந்து பக்தி செய்வது?


இதற்குத்தான் அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள் என்றால்,  இறை வணக்கம் செய்வதற்கு என்று நேரத்தை ஒதுக்கினார்கள். அதுவும் ஒரு வேலை தான். மற்ற வேலைகளை செய்து முடித்து விட்டு ஒழிந்த நேரத்தில் பக்தி செய்வது என்று இல்லாமல், பக்திக்கு என்று நேரம் ஒதுக்கினார்கள். 


"உன்னுடைய அடியவர்களோடு கூடி, உன்னை நான் காண்பது எந்நாளோ" என்று கண்ணீர் மல்குகிறார் குலசேகர ஆழ்வார். 


பாடல் 


மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்

துறந்துஇருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான

அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்

நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_27.html


(Please click the above link to continue reading)



மறந்திகழு மனமொழித்து = மறம் திகழும் மனம் ஒழித்து. அறத்துக்கு எதிர் மறம். கோபம், காமம், போர்க் குணங்கள் கொண்ட மனதை மாற்றி 


வஞ்ச மாற்றி  = மனதில் உள்ள வஞ்சகங்களை அகற்றி 


ஐம்புலன்க ளடக்கி = ஐந்து புலன்களை அடக்கி 


யிடர்ப் பாரத் துன்பம் துறந்து = இடர் பாரத் துன்பம் துறந்து = இடர் என்றால் தடை. பாரம் என்றால் பெரிய சுமை. எது பெரிய சுமை? நம் வினைப் பயன்தான் பெரிய சுமை. நினைத்தாலும் இறக்கி வைக்க முடியாத சுமை. எவ்வளவு துன்பம் என்றாலும் நாமே தூக்கி சுமக்க வேண்டியது தான். அதையும் துறக்க முடியும் என்கிறார் குலசேகர ஆழ்வார். 



இருமுப் பொழுதேத்தி = இரு + முப்பொழுது ஏத்தி. இரண்டு + மூன்று = ஐந்து பொழுதில் இறைவனைத் துதித்து 


யெல்லை யில்லாத் = எல்லை இல்லாத. இங்கே, தொடக்கம் இல்லாத என்று கொள்ள வேண்டும் 


தொன்னெறிக்கண் = பழைய வழியின் கண் 


நிலைநின்ற = நிலையாக நின்ற. எப்போதும் கடை பிடிக்கும் 


தொண்ட ரான = தொண்டர்களான 


அறம் திகழும்  மனத்தவர்தம் = மனதில் எப்போதும் அறம் நிலைத்து நிற்கும் அந்த அடியவர்களின் 


 கதியைப்  = இலக்கை, சென்று அடையும் இடத்தை 


பொன்னி  = காவிரி 


அணியரங்கத் தரவணையில் = அணி செய்யும் பாம்பு அணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


நிறம் திகழும் = கரிய நிறத்தோடு திகழும் 


மாயோனைக் = மாயோனை 


கண்டென்  = கண்டு என் 


கண்கள் நீர்மல்க = கண்களில் கண்ணீர் பெருக 


என்றுகொலோ நிற்கும் நாளே = என்று வணங்கும் நாளோ? 


சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய இருப்பதால், இதன் தொடர்ச்சியை அடுத்த ப்ளாகில் காணலாம். 




Sunday, September 26, 2021

திருக்குறள் - உடலுக்கும் செவிக்கும் இன்பம்

 திருக்குறள் - உடலுக்கும் செவிக்கும் இன்பம் 


பாடல் 


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_26.html


(Please click the above link to continue reading)



மக்கள் = குழந்தைகள் 


மெய் தீண்டல் = உடலைத் தீண்டல் 


உடற்கின்பம் = உடலுக்கு இன்பம் 


மற்று = மற்று 


அவர் = அவர்கள் 


சொற் கேட்டல் = சொல்லுவதைக் கேட்டல் 


இன்பம் செவிக்கு = செவிக்கு இன்பம் 


மிகவும் எளிமையான குறள். 


ஒரு சில நுணுக்கமான விடயங்கள். 


"மக்கள் மெய் தீண்டல்" என்றால், பிள்ளைகள் நம்மை தீண்டுவதா அல்லது நாம் பிள்ளைகளை தீண்டுவதா? பிள்ளைகள் ஓடி வந்து நம்மைக் கட்டிக் கொள்வது ஒரு சுகம். நாம் ஓடிச் சென்று பிள்ளையை வாரி அணைத்துக் கொள்வதும் சுகம்.  எப்படிப் பார்த்தாலும் மெய் தீண்டல் இன்பம் தான். 


"சொற் கேட்டல்"  என்று கூறினார். மழலைச் சொல் என்று சொல்லவில்லை.  குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்னும், அவர்கள் சொல்வதைக் கேட்பது சுகம்தான்.  பிள்ளைகள் ஒவ்வென்றாக படித்து, அறிந்து, அனுபவம் கொண்டு வந்து சொல்வதும் இன்பம் தான். "இன்னிக்கு பள்ளிக் கூடத்தில் என்ன நடந்தது தெரியுமா" என்று விழி விரிய சொல்வதைக் கேட்பதும் இன்பம்.


பேசுவதைக் கேட்க ஆயிரம் தொழில் நுட்பம் வந்து விட்டது. 


மெய் தீண்டல் தான் இன்னும் முடியவில்லை.








Saturday, September 25, 2021

நல்வழி - எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?

 நல்வழி - எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?


படித்துக் கொண்டே இருக்கிறோம். 


இன்று புத்தகம், நாளை இன்னொன்று, நேற்று வேறு ஒன்று என்று படிக்க படிக்க புதிது புதிதாக ஏதேதோ தோன்றுகிறது. 


இதற்கு என்னதான் முடிவு? எவ்வளவு காலம்வரைதான் படிப்பது?


சரி, எவ்வளவு படித்தாலும், அதன் நோக்கம் என்ன? படித்து என்ன செய்யப் போகிறோம். 


"இது நன்றாக இருக்கிறது", "இது பரவாயில்லை" , "அது அப்படி ஒன்றும் சுவையானது இல்லை" "இதெல்லாம் நடை முறைக்கு சரிப்படாது" என்று ஏதோ நமக்குத் தோன்றிய விமரிசனத்தை முன் வைத்து விட்டு நம் வேலையை பார்க்கப் போவதற்கா இவ்வளவு நேரம் செலவழித்து படிப்பது?


ஔவையார் சொல்கிறார்,


"இளமை இருக்கும் போதே ஒரு பெண் தன் கணவனோடு இன்பங்களை அனுபவித்து விட  வேண்டும். அப்புறம் பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், முதுமை வந்து விடும்.  பின், அனுபவிக்க நினைத்ததாலும், முடியாது. கணவனுக்கும் வயது ஆகி விடும், உடலின் மேல் உள்ள ஈடுபாடு குறைந்து போகும்..


அது போல, முப்பது வயதுக்குள் படிக்க வேண்டியவற்றை படித்து, இறைவனை அனுபவத்தால் அறிந்து விட வேண்டும். படித்து கொண்டே இருப்பேன் என்றால் பின் அனுபவம் வாய்க்காது" என்கிறாள். 


பாடல் 



 முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்

 தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்

 கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்

முலையளவே ஆகுமாம் மூப்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_25.html


(Please click the above link to continue reading)


முப்பதாம்  = முப்பது


ஆண்டளவில் = வயதில் 


மூன்றற்று  = காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று குற்றங்களை அறுத்து 


ஒருபொருளைத் = ஒரு என்றால் உயர்ந்த, தனித்த, சிறந்த என்று பொருள். உயர்ந்த, தனித்த சிறந்த பொருள் இறைவன். இறைவனை 


தப்பாமல் = தவறாமல் 


தன்னுள் = தனக்குள்ளே 


பெறானாயின் = அனுபவமாக ஒருவன் பெறவில்லை என்றால் 


செப்புங் = பேசுவதற்கு உதவும் 


கலையளவே ஆகுமாம் = அவன் படித்தவை 


காரிகையார் = பெண்கள் 


தங்கள் = அவர்களுடைய 


முலையளவே = மார்பின் அளவே 


ஆகுமாம் மூப்பு. = வைத்தே மூப்பு அறியப்படும் 


இதை ஒரு ஆண் புலவர் பாடியிருந்தால், பெண் விடுதலை சிந்தனையாளர்கள் கொடி பிடித்திருப்பார்கள் நல்ல வேளையாக பாடியது ஔவையார். 


கற்ற கலை இறை அனுபவத்தைத்  தரவில்லை என்றால், அது சும்மா பேசப் பயன்படுமே அல்லாமல் வேறு ஒன்றுக்கும் பயன் தராது. மேற்கோள் காட்டலாம். அந்த நூலில் அப்படிச் சொல்லி இருக்கிறது, இந்த நூலில் இப்படிச் சொல்லி இருக்கிறது என்று பேசப் பயன்படும்.


எல்லாக் கலையும் இறை அனுபவத்தைத் தர வேண்டும். 


ஔவையார் சொன்னது முப்பது வயது வரம்பு. 


அவருக்குப் பின், நம் வாழ்நாள் அளவு மிக நீண்டு விட்டது. ஒரு நாற்பது அல்லது ஐம்பது வைத்துக் கொள்ளலாம். 


நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? 


சாமாறே விரைகின்றேன்  என்றார் மணிவாசகர். ஒவ்வொரு நாளும் நாம் நமது இறப்பை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறோம். 


எல்லா ஓட்டமும் இடுகாட்டுகுத் தான். 


உயரத்தில் ஒரு சினிமா படம் பிடிக்கும் புகைப் பட கருவியை (கேமரா) வைத்து அதில் வேகமாக படம் பிடித்தால் தெரியும், எல்லோரும் அன்னை வயிற்றில் இருந்து வந்து நேரே வேக வேகமாக ஓடிப் போய் சவக் குழியில் விழுவதைக் காணலாம். 


ஒருவரும் இதற்கு விதிவிலக்கல்ல. 


அதற்குள் அந்த அனுபவம் பெற வேண்டாமா?





Friday, September 24, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கெடும் இடர்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கெடும் இடர் 


இறை உணர்வு என்பது ஒரு எளிமையான உணர்வு. அதை மிக மிக சிக்கலான ஒன்றாக ஆக்கிவிட்டோம். வேதம், புராணம், இதிகாசம், அவதாரம், உபநிடதம், சுருதி, ஸ்மிரிதி, பூஜை, ஆசாரம், நியமம், என்று பல விதங்களில் சிக்கலாக்கி விட்டோம். 



பத்தாக் குறைக்கு குழப்பும் தத்துவங்கள்...அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம், பரமாத்மா, ஜீவாத்மா, இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்று ஏகப்பட்ட சிக்கல்கள். 



இதை எல்லாம் படித்து, தெளிவதற்குள் நம் ஆயுள் முடிந்து விடும். ஒன்றைப் படித்தால் அதில் இருந்து ஆயிரம் சந்தேகம் வரும். என்று தெளிவு வர?



பக்தி செய்பவர்களுக்கு இந்தக் குழப்பம் எல்லாம் இல்லை. 



இறைவனை மிக மிக எளிதாக அவர்கள் நினைக்கிறார்கள். 


அவன் நின்றான், உட்கார்ந்தான், படுத்தான், நடந்தான் என்று சொன்னாலே நம் இடர், துன்பம் எல்லாம் போய் விடும் என்கிறார் பொய்கையாழ்வார். 



பாடல்  


வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத


பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்


நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,


என்றால் கெடுமாம் இடர்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_24.html


(Please click the above link to continue reading)



வேங்கடமும்  = திரு வேங்கடம் (திருப்பதி) 


விண்ணகரும் = விண்ணில் உள்ள நகர், வைகுண்டம் 


வெஃகாவும், = திரு வெஃகாவும்


 அஃகாத = மாறாத 


பூங்கிடங்கில் = பூக்கள் நிறைந்த 


நீள் கோவல் = உயர்ந்த திருக் கோவலூர் 


பொன்னகரும் = என்ற பொன் போன்ற நகரமும் 


நான்கிடத்தும் = நான்கு இடத்திலும் 


நின்றா னிருந்தான் = நின்றான், (உட்கார்ந்து)  இருந்தான் 


 கிடந்தான் = (படுத்து) கிடந்தான் 


நடந்தானே = நடந்தான் 

 

என்றால் கெடுமாம் இடர். = என்று சொன்னால் நம் துன்பங்கள் எல்லாம் போய் விடும் 


துன்பம் போக வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள்? 


அதற்கு என்ன செய்ய வேண்டும்?


பக்கம் பக்கமா பாராயணம் பண்ணி, ஒப்பிக்க வேண்டுமா? விரதம் இருக்க வேண்டுமா? ஆசாரம், அனுஷ்ட்டானம் எல்லாம் பண்ண வேண்டுமா?


ஒன்றும் வேண்டாம்...


நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் 


என்று சொன்னால் போதும். 


கடவுள் என்றால் ஏதோ சூப்பர் man மாதிரி ஏதாவது வித்தை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அல்ல. 


சும்மா நம்மை மாதிரி, நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்றாலும் அவன் கடவுள்தான். 


அவ்வளவு ஒரு எளிமை. 


மனதில் பக்தி வேண்டும். அன்பு வேண்டும். 


மற்றவை எல்லாம் ஆடம்பரம்.