Sunday, October 31, 2021

நான்மணிக்கடிகை - கெட்டறிப கேளிரான் ஆய பயன்

நான்மணிக்கடிகை - கெட்டறிப கேளிரான் ஆய பயன்


யார் உறவு, யார் உறவு அல்லாதார் என்று நமக்கு ஒரு துன்பம் வரும் போதுதான் தெரியும். 


நன்றாக இருக்கும் காலத்தில் எல்லோரும் நட்பாக உறவாக இருப்பார்கள். துன்பம் வந்தால், எங்கே நம்மிடம் ஏதாவது கேட்டு விடுவானோ என்று எண்ணி மெதுவாக நகன்று விடுவார்கள். 


அதிலும் ஒரு நன்மை இருக்கிறது. உண்மையான உறவும் நட்பும் அப்போதுதான் தெரியும். 


உலகில் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. 


நவமணிகளின் தரம் அறிய அவற்றை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒரு குதிரை எப்படி இருக்கிறது என்று அறிய அதன் மேல் சேணம் அமைத்து, ஓட்டிப் பார்த்து அறியலாம். பொன் எவ்வளவு உயர்ந்தது என்று அறிய அதை உருக்கிப் பார்க்க வேண்டும். உறவினர்களின் தரம் நாம் துன்பத்தில் இருக்கும் போது தெரியும். 


பாடல் 


மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து

எறிய பின்னறிப மாநலம் மாசறச்

சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப

கேளிரான் ஆய பயன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_31.html


(Please click the above link to continue reading)



மண்ணி யறிப மணிநலம்  = கழுவி சுத்தம் செய்து அறிக நவமணிகளின் தரத்தை 


பண்ணமைத்து = சேணம் கடிவாளம் இவற்றை அமைத்து 

எறிய = ஏறி அமர்ந்த 


பின்னறிப = பின்னால் அறிக 


மாநலம் = குதிரையின் தரம் 


மாசறச் = குற்றமற்ற 


சுட்டறிப = உருக்கி அறிக 


பொன்னின் நலங்காண்பார் = தங்கத்தின் தன்மை அறிய வேண்டுபவர் 


கெட்டறிப = கெட்ட பின், அதாவது துன்பம் வந்த காலத்து அறிக 


கேளிரான் ஆய பயன் = உறவினர்களால் உண்டாகும் பயன். 



நல்ல நாளில் நமக்கும் உறவின் அருமை தெரியாது. 


உடம்புக்கு முடியவில்லை என்று படுத்துக் கொண்டால் கணவன் அல்லது மனைவியின் அருமை அப்போது தான் தெரியும். மத்த நாளில் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். உடம்புக்கு முடியவில்லை என்றால் தான் ஒருவரின் அருமை மற்றவருக்குத் தெரியும். 


அது  இரண்டு விதத்திலும் தெரியும். 


உருக்கமாக கவனித்துக் கொண்டால் அருமை தெரியும். 


கண்டு கொள்ளாமல் இருந்தால்,அது அவ்வளவுதான் என்று தெரியும். 


எப்படி என்றாலும் உறவின் தரம் துன்பத்தில் தெரியும். 


இதையே வள்ளுவரும்,


"கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்" என்றார். 


கெடுதலிலும் ஒரு நன்மை இருக்கிறது. அது உறவினர்களை அளக்கும் ஒரு அளவு கோல் என்றார். 



Tuesday, October 26, 2021

வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 2

 

 வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 2 


((இதன் முதல் பாகத்தை கீழே காணலாம்))



பாடல் 

தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/2.html


(Pl click the above link to continue reading)


தப்போதாமற்றம்பியர்க்குந் = தப்பு ஓதாமல் தம்பியற்கும் = தவறாகச் சொல்லி யார் மனதையும் நோகச் செய்யாத தர்மன், தன் தம்பிகளுக்கும் 


தருமக்கொடிக்கும் = தர்மத்தின் கொடி போன்றவளான பாஞ்சாலிக்கும் 



இதமாக  = மனதிற்கு இதமாக, நன்மை உண்டாகும் படி 


அப்போதுணரும்படி = அப்போது உணரும் படி 


யுணர்ந்தான =  உணர்ந்தான் 


சோதைமகனை = யசோதையின் மகனான கண்ணனை 


யறத்தின்மகன் = தர்ம தேவதையின் மகனான தர்மன் 


எப்போதியாவரெவ்விடத்தி லெம்மை = எப்போது, யார், எவ்விடத்தில் எம்மை 


நினைப்பாரெனநின்ற = நினைப்பார்கள் என்று நின்ற 


ஒப்போதரியான்  = ஒப்பு + ஓது + அறியான் = தனக்கு ஒப்பு உவமை சொல்லுதற்கு அரியவனான கிருஷ்ணன் 


உதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே. = உதிட்டிரன் உள்ளத்தில் வந்து அப்போது உதித்தான் 


இறைவன் காத்துக் கொண்டு இருக்கிறான். எப்போது, யார், எந்த இடத்தில் தன்னை அழைப்பார்கள் , போய் உதவி செய்யலாம் என்று. 


கேட்டுத் தான் கொடுக்கணுமா ? அவனுக்கே தெரியாதா? கேட்காமலேயே கொடுத்தால் என்ன?


கொடுக்கலாம் தான். எவ்வளவோ கேட்காமலேயே கொடுத்தும் இருக்கிறான். இந்த அறிவு, இந்த உடல், இந்த மனம், இந்த நாடு, இந்த மொழி என்று எவ்வளவோ நல்ல விடயங்கள் நமக்கு கேட்காமலேயே கொடுத்து இருக்கிறான்.  இந்த ஊரில், இந்த பெற்றோருக்கு, இந்த காலத்தில், இந்த வடிவில், இப்படி இருக்க வேண்டும் என்று நாம் கேட்டோமா? 


இந்த காற்று, மழை, மரம், நிழல், உணவு, ஆரோக்கியம், கணவன்/மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம் என்று ஆயிரம் ஆயிரம் நல்ல விடயங்கள் நமக்கு கேட்காமலேயே கொடுத்து இருக்கிறான். 


சில சமயம் கேட்டு கொடுப்பதில் சுகம் இருக்கிறது. 


பிள்ளை ஐஸ் கிரீம் வேண்டும் என்று ஆசையாக கேட்கிறான்/ள். ஓடிப் போய் வாங்கி தருகிறோம். அந்தக் குழந்தை சுவைத்து மகிழ்வதை பார்த்து பெற்றோர் மகிழ்வார்கள் அல்லவா? கேட்காமலேயே தினம் ஒரு ஐஸ் கிரீம் வாங்கித் தந்தால், "வேண்டாம் போ " என்று தூக்கி எறிந்து விடும். 


மனைவிக்கு ஆயிரம் பரிசுகள் வாங்கித் தரலாம். ஆனால், அவள் ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை வாங்கித் தருவதில் உள்ள சுகமே தனி.


இராமனுக்குத் தெரியாதா பொன் மான் என்று ஒன்று இல்லை என்று. வசிட்டரிடமும், விஸ்வாமித்திரரிடமும் பயின்றவனுக்கு இது கூடத் தெரியாதா. 


மனைவி கேட்டு விட்டாள். தன் பொருட்டு எவ்வளவோ துன்பம் அனுபவிக்கிறாள். அவள் ஆசைப் பட்டு கேட்டு விட்டாள். அவளிடம் போய் தர்க்கம் பண்ணிக் கொண்டு இருப்பதில் என்ன சுகம். அவள் கேட்டதை பிடித்துத் தர வேண்டும் என்று கிளம்பி விட்டான். 


அது போல, இறைவனும் காத்துக் கொண்டே இருக்கிறானாம். நினைத்தவுடன் தர்மன் மனதில் வந்து விட்டான்.


கூப்பிடவுடன் யானைக்காக வந்தான், பாஞ்சாலிக்காக வந்தான். 


நமக்கும் வருவான் என்ற நம்பிக்கையை இந்த இலக்கியங்கள் விதைக்கின்றன.


நான் நினைத்தால் வருவானா? எத்தனையோ தரம் நினைத்து இருக்கிறேன். வரவே இல்லை என்றால். 


தர்மன் பிறர் மனம் நோகும்படி தவறாகவே பேச மாட்டானாம். 


இறைவன் மனதில் வர வேண்டும் என்றால் அது தூய்மையாக இருக்க வேண்டாமா. 


நான் மனதை குப்பையாக வைத்து இருப்பேன், இறைவன் வர வேண்டும் என்றால் நடக்குமா?






------------------------------ பாகம் 1 -------------------------------------------------------------------------


வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 1





பாண்டவர்கள் காட்டில் இருக்கிறார்கள். துரியோதனன் சூதில் வென்று பாண்டவர்களை கானகம் அனுப்பி விட்டான். 


நிம்மதியாக இருக்க வேண்டியது தானே? இல்லை. அவனால் முடியாது. எப்போது பொறாமை மனதில் புகுந்து விட்டதோ, நிம்மதி போய் விடும். 


பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று நினைக்கிறான். 


அப்போது அங்கு துர்வாச முனிவர் வருகிறார். அவரை நன்கு உபசரிக்கிறான். அவரும் அதில் மகிழ்ந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்...தருகிறேன்" என்றார். 


என்ன கேட்டு இருக்க வேண்டும்? 


ஞானம் கேட்டிருக்கலாம். செல்வம் கேட்டு இருக்கலாம். புகழ் கேட்டு இருக்கலாம். வீடு பேறு கேட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டான். பாண்டவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்று நினைத்து "முனிவரே என் மாளிகை வந்து என்னை சிறப்பித்தது போல, பாண்டவர்களிடமும் சென்று நீங்கள் அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான். 


அவன் எண்ணம் என்ன என்றால், துர்வாச முனிவர் சீடர்களுடன்  அங்கு போவார். பாண்டவர்களால் முனிவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு வழங்க முடியாது. துர்வாச முனிவருக்கு கோபம் வரும். அவர் பாண்டவர்களை சபிப்பார். பாண்டவர்கள் நாசமாகப் போவார்கள். அது தான் அவன் எண்ணம். 


துர்வாச முனிவரும் அவ்வாறே சென்றார். 


அவரை வரவேற்று உபசரித்து, குளித்து விட்டு வாருங்கள் உணவு அருந்தலாம் என்று தர்மன் அவரை அனுப்பி விட்டான். 


அவர்களிடம் அட்சய பாத்திரம் இருந்தது. ஆனால், அதில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு வரும். கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் பின் மறு நாள் தான் அதில் உணவு வரும். 


துர்வாசர் வந்த அன்று, பாண்டவர்கள் உணவு உண்டு, பாத்திரத்தை கழுவி வைத்து விட்டார்கள். 


இப்போது என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_71.html


(Pl click the above link to continue reading)




முனிவர் வருவார். பசிக்கு உணவு இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும்.  சாபம் தருவார். என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருந்தார்கள். 


இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். 


தர்மன் கண்ணனை நினைக்கிறான். கண்ணன் வருகிறான். 


இங்கே வில்லிப் புத்தூர் ஆழ்வார் ஒரு அருமையான கவிதை வைக்கிறார். 


பாடல் 


தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.



ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், பொருள் விளக்கத்தை அடுத்த பாகத்தில் பார்ப்போமா?



Sunday, October 24, 2021

திருக்குறள் - பிறவியின் நோக்கம்

 திருக்குறள் - பிறவியின் நோக்கம் 


இந்த பிறவி எதற்கு எடுத்ததின் நோக்கம் என்ன? 


தினம் மூன்று வேளை உண்பது, உடுப்பது, படிப்பது, வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது ...இது போன்ற நோக்கங்களா?


உயிர், உடல் என்று இரண்டு இருக்கிறது என்று ஏற்றுக் கொள்வோம். உயிர் என்று ஒன்று இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 


ஒருவர் மேல் அன்பு செய்ய வேண்டும் என்றால், ஒரு உடல் வேண்டும். வெறும் உயிர் அன்பு செய்யுமா? 


எவ்வளவுதான் அன்பு உள்ள அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்றாலும், இறந்து பல வருடம் கழித்து, ஒரு நாள் இரவு தனியாக ஆவியாக வந்தால் நமக்கு அன்பு வருமா, பயம் வருமா?  


உயிர், ஒரு உடலை தேர்ந்து எடுப்பது அல்லது ஒரு பிறவி எடுப்பது எதற்கு என்றால் அன்பு செய்யத் தான். 


பாடல் 



அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_24.html


(pl click the above link to continue reading)



அன்போடு = அன்புடன் 


 இயைந்த  = இணைந்த, சேர்ந்த 


வழக்கென்ப = முறை, காரணம் என்று சொல்லுவார்கள் 


ஆருயிர்க்கு = அருமையான உயிர்க்கு 


என்போடு  = உடலோடு 


இயைந்த = சேர்ந்த 


தொடர்பு. = தொடர்ச்சி 



இந்த உயிர் உடலோடு சேர்ந்து இருக்க காரணம் என்ன என்றால் அன்பு செய்யும் நோக்கம் தான். 


இது மேலோட்டமான கருத்து மட்டும் அல்ல, சற்று தவறான கருத்தும் கூட. 


முதலில் புரிந்து கொள்ள இங்கிருந்து ஆரம்பிப்போம். பின் பரிமேலழகர் எப்படி விளக்கம் தருகிறார் என்று பார்ப்போம். 


"ஆருயிர்க்கு" ... உயிரா அன்பு செய்கிறது? உடல் தான் அன்பு செய்கிறது. உயிர், உடலின் மூலம் அன்பு செய்கிறது. பரிமேலழகர் செய்யும் நுட்பம் மிக மிக வியக்க வைக்கும் ஒன்று. 


ஆருயிர் என்றால் அருமையான உயிர் என்று அவர் பொருள் கொள்ளவில்லை.    " பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு " என்று உரை செய்கிறார். 


உயிர் என்பது ஆகு பெயர் என்று கொள்கிறார். 


அதாவது,  உயிர் எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கும். பாக்டீரியா, ஈ, எறும்பு, கொசு, என்று அனைத்து பிறவியிலும் உயிர் இருக்கும். தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது. அவை எல்லாம் அன்பு செய்து கொண்டு இருக்கின்றனவா? உயிர் தேவை கருதி சில நாள் செய்யலாம். அன்பின் நீட்சி இருக்காது. மகன், பேரன், என்று தலைமுறை தாண்டி நீளாது. 


எனவே இங்கு உயிர் என்பது மக்கள் உயிர் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


அதெல்லாம் முடியாது. உயிர் என்று ஒன்று கிடையாது. இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது? என்ன வடிவில் இருக்கிறது, என்ன நிறம், எடை? காட்டு.அதை பரிசோதிக்காமல் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலர் சொல்லலாம். 


"தொடர்பு" என்றால் என்ன என்று விளக்கம் செய்கிறார்.  " உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை".


அதாவது, உயிர் தொண்டர்ந்து கொண்டே இருக்கும். இந்த உடலை விட்டு இன்னொரு உடலில் போய் சேரும். அந்த தொடர்ச்சியின் காரணம் முற்பிறவிகளில் விடுபட்ட அன்பை தொடர்வதற்காக என்கிறார். 


நிறைய படிப்பு அறிவு இல்லாதவர்கள் கூட, காதலிக்கும் போது "ஏதோ உனக்கும் எனக்கும் முன் ஜன்ம தொடர்பு இருந்திருக்கும் போல இருக்கு..இல்லேனா எப்படி பாத்தவுடன் உன்னை எனக்கு புடிச்சு போச்சு" என்று பேசுகிறார்கள் இல்லையா?


"அடுத்த பிறவியிலும் நீயே என் கணவனாக/மனைவியாக" வர வேண்டும் என்று ஒவ்வொரு தம்பதிகளும் எப்போதாவது நினைத்து இருப்பார்கள். இந்தப் பிறவித் தொடர் என்பது அன்பு பற்றி வருகிறது. நம்மை அறியாமலேயே இது நமக்கு உள்ளுணர்வில் புரிகிறது அல்லவா? 


அடுத்த பிறவியிலும் நீயே எனக்கு எதிரியாக வர வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா?


சரி, குறளுக்கு வருவோம். 


தீபாவளிக்கு துணி எடுக்க கடைக்குப் போகிறோம். அலசி ஆராய்ந்து துணி எடுத்துவிட்டுத் தான் வருகிறோம் அல்லவா?


உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரைப் பார்க்கப் போகிறோம். பார்த்து, மருந்து வாங்கிக் கொண்டுதானே வருகிறோம். 


போன நோக்கம் நிறைவேற வேண்டும் அல்லவா?


இந்தப் பிறவியின் நோக்கம், அன்பு செய்வதுதான். 


அதைச் செய்யாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறோம்.  சண்டை போடுகிறோம், கோபம் கொள்கிறோம், பொறாமை, எரிச்சல், சுயநலம் என்று இருக்கிறோம். அதற்காக அல்ல நாம் வந்தது. 


அன்பு செய்ய வந்திருக்கிறோம். வந்த வேலையை பார்ப்போம். 


எல்லோரும் அன்பு செய்வதுதான் வாழ்வின் நோக்கம் என்று இருந்து விட்டால்,இந்த உலகம் எப்படி இருக்கும். 


பரிமேலழகர் உரை எழுதுகிறார் 


"என்ப" என்றால் "என்று சொல்லுவர் அறிந்தோர்." என்கிறார். 


முட்டாள்கள் எப்படியோ சொல்லிவிட்டுப் போகட்டும். உயிர் என்று ஒன்று இருக்கிறது. அது உடலில் இருக்கிறது. அது உடலில் இருக்கக் காரணம் அன்பு செய்ய என்று அறிந்தோர் சொல்வர் என்கிறார். 


அப்படி இல்லை என்று சொன்னால், நாம் யார் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று தெரிகிறது அல்லவா?




Wednesday, October 20, 2021

வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ?

 வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ?


பாண்டவர்கள் காட்டில் இருக்கிறார்கள். துரியோதனன் சூதில் வென்று பாண்டவர்களை கானகம் அனுப்பி விட்டான். 


நிம்மதியாக இருக்க வேண்டியது தானே? இல்லை. அவனால் முடியாது. எப்போது பொறாமை மனதில் புகுந்து விட்டதோ, நிம்மதி போய் விடும். 


பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று நினைக்கிறான். 


அப்போது அங்கு துர்வாச முனிவர் வருகிறார். அவரை நன்கு உபசரிக்கிறான். அவரும் அதில் மகிழ்ந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்...தருகிறேன்" என்றார். 


என்ன கேட்டு இருக்க வேண்டும்? 


ஞானம் கேட்டிருக்கலாம். செல்வம் கேட்டு இருக்கலாம். புகழ் கேட்டு இருக்கலாம். வீடு பேறு கேட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டான். பாண்டவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்று நினைத்து "முனிவரே என் மாளிகை வந்து என்னை சிறப்பித்தது போல, பாண்டவர்களிடமும் சென்று நீங்கள் அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான். 


அவன் எண்ணம் என்ன என்றால், துர்வாச முனிவர் சீடர்களுடன்  அங்கு போவார். பாண்டவர்களால் முனிவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு வழங்க முடியாது. துர்வாச முனிவருக்கு கோபம் வரும். அவர் பாண்டவர்களை சபிப்பார். பாண்டவர்கள் நாசமாகப் போவார்கள். அது தான் அவன் எண்ணம். 


துர்வாச முனிவரும் அவ்வாறே சென்றார். 


அவரை வரவேற்று உபசரித்து, குளித்து விட்டு வாருங்கள் உணவு அருந்தலாம் என்று தர்மன் அவரை அனுப்பி விட்டான். 


அவர்களிடம் அட்சய பாத்திரம் இருந்தது. ஆனால், அதில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு வரும். கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் பின் மறு நாள் தான் அதில் உணவு வரும். 


துர்வாசர் வந்த அன்று, பாண்டவர்கள் உணவு உண்டு, பாத்திரத்தை கழுவி வைத்து விட்டார்கள். 


இப்போது என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_71.html


(Pl click the above link to continue reading)




முனிவர் வருவார். பசிக்கு உணவு இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும்.  சாபம் தருவார். என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருந்தார்கள். 


இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். 


தர்மன் கண்ணனை நினைக்கிறான். கண்ணன் வருகிறான். 


இங்கே வில்லிப் புத்தூர் ஆழ்வார் ஒரு அருமையான கவிதை வைக்கிறார். 


பாடல் 


தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.



ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், பொருள் விளக்கத்தை அடுத்த பாகத்தில் பார்ப்போமா?



திருக்குறள் - அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

 திருக்குறள் - அன்பிலார் எல்லாம் தமக்குரியர்


அன்பு செலுத்துவது என்றால் என்ன?  


கண்ணே, மணியே என்று கொஞ்சுவதா? வேண்டியது எல்லாம் வாங்கித் தருவதா? நல்லது கெட்டது சொல்லித் தருவதா? 


ஒருவன் அன்புடையவன் என்று எப்படிச் சொல்வது? 


இப்போதெல்லாம் அன்பு என்பது பண்டமாற்று என்று ஆகிவிட்டது. நீ எனக்கு என்ன செய்வாய், நான் உனக்கு இது செய்தால் என்ற கேள்வியில் வந்து நிற்கிறது. எதிர்பார்ப்பில்லாத அன்பு என்று ஒன்றே இல்லை என்று ஆகி விட்டது. அப்படி சொல்பவர்களை பைத்தியகாரர்கள் என்று உலகம் சொல்லத் தொடங்கி விட்டது. 


கணவன் மனைவி அன்பில் கூட, யாருக்கு யார் எவ்வளவு செய்தார்கள் என்று கணக்கு பார்க்கும் காலம். "நான் என்ன வேலைக்காரியா", "நான் என்ன பணம் காய்க்கும் மரமா", என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டோம். 


 பிள்ளை வளர்ப்பதில் கூட, வயதான காலத்தில் பார்த்துக் கொள்வான் என்ற எதிர்பார்ப்பு வந்து விட்டது. 



வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்


பாடல் 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_20.html


(Please click the above link to continue reading)



அன்பிலார் = அன்பு இல்லாதவர்கள் 


 எல்லாம் = அனைத்தும் 


தமக்குரியர் = தங்களுக்கு உரியது என்று நினைப்பார்கள் 


 அன்புடையார் = அன்பு உள்ளவர்கள் 


என்பும் = தங்களுடைய எலும்பு கூட 


உரியர் பிறர்க்கு = பிறர்க்கு உரியது என்று நினைப்பார்கள் 


அன்பு இல்லாதவர்கள்  எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பார்கள். 


அன்பு உள்ளவர்கள் அனைத்தும் பிறர்க்கு உரியது என்று நினைப்பார்கள். 


இப்படித்தான் நாம் மேலோட்டமாக பொருள் கொள்வோம். 


பரிமேலழகர் மிக ஆழமான பொருள் சொல்கிறார். 


"அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்"


அன்பு இல்லாதவர்களால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அவர்களிடம் யாரும் போக மாட்டார்கள். எனவே, எந்த விதத்தில் பார்த்தாலும், அவர்கள் தங்களுக்கு மட்டுமே உரியவர்கள். 


"என் கணவன்", "என் மனைவி", "என் அப்பா, அம்மா" என்று அவர்களை யாரும் கூற முடியாது.  அவர்கள் மேல் யாரும் உரிமை கொண்டாட முடியாது. அவர்கள் யாருக்கும் உரியவர்கள் அல்ல. தமக்கே உரியர். 


காரணம், அவர்கள் ஒரு கணவனாக, மனைவியாக, தந்தையாக, தாயாக ஒன்றும் செய்ய மாட்டார்கள். 


நான் எப்போது ஒரு தந்தையாகிறேன்? என் பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்யும் போது, எனக்கு பசித்தாலும், பிள்ளை சாப்பிடட்டும் என்று அவன்/அவள் சாப்பிடுவதை கண்டு மகிழும் போது நான் தந்தையாகிறேன். அப்போது என் பிள்ளை சொல்லுவான் "...இவர் என் அப்பா" என்று. 


அப்படிச் செய்யாமல், இருந்தால் என்ன ஆகும். பிள்ளைக்கு அப்பா மேல் பாசம் இருக்காது. 


புரிகிறது அல்லவா?


சிலர் இருக்கிறார்கள். பணம் வேண்டுமா, எடுத்துக் கொண்டு போ. என்னை தொந்தரவு செய்யாதே. என் நேரம் எனக்கு முக்கியம். உனக்கு ஊர் சுற்ற வேண்டுமா, போய் கொள், என்னை விட்டு விடு. எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். 


அது அன்பா? 


வேண்டிய பணம் கொடுத்தேனே? படிக்க வைத்தேனே? பாட வைத்தேனே? உடை வாங்கிக் கொடுத்தேன், உணவு, நல்ல பள்ளிக் கூடம், கல்லூரியில் படிக்க வைத்தேன், கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தேன்...அது அன்பு இல்லையா என்றால் இல்லை என்கிறார் வள்ளுவர். 


அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 


அன்பு இருந்தால், யார் மேல் அன்பு இருக்கிறதோ அவர்களுக்காக அவர்கள் என்ன கேட்டாலும் கொடுக்க வேண்டும். எலும்பையே கொடுப்பார்கள் என்கிறார். 


நேரத்தை கொடுக்க மாட்டேன் என்றால் அது அன்பு இல்லை. 


மனைவிக்கு புடவை எடுக்க வேண்டும். கணவன் கூட வந்தால் நல்லா இருக்கும் என்று அவள் நினைக்கிறாள். "நான் வந்து என்ன செய்யப் போகிறேன்...நீயே போயிட்டு வா...காரை எடுத்துக் கொண்டு போ" என்று அனுப்பி விடுகிறான் கணவன். 


அன்பில்லை என்றுதான் அர்த்தம். 


சரியா தவறா என்பது வேறு விவாதம். 


அன்பு இருக்கிறதா இல்லையா என்றால், அன்பு இல்லை என்று அர்த்தம். அவ்வளவுதான். 


அன்பு இருந்தால், "இரு நானும் வருகிறேன்...கொஞ்சம் வேலை இருக்கு, அதை வந்து பார்த்துக் கொள்கிறேன்" என்று புறப்பட வேண்டும். 


அப்படிச் செய்தால், எப்பப் பார்த்தாலும் மனைவி பின்னேயே போய் கொண்டு இருக்க வேண்டியது தான். காய் கறி வாங்க, அழகு நிலையம் போக என்று. மற்ற வேலைகளை யார் பார்ப்பது என்றால், மனைவிக்கு அன்பு இருந்தால், அவள் அப்படி இழுத்துக் கொண்டு அலைய மாட்டாள். 


"என் கூட அவர் வந்தால் நல்லா இருக்கும். ஆனால், அவருக்கு தனிமை தேவைப் படுகிறது. என் சந்தோஷத்தை அவருக்காகத் தருகிறேன்" என்று அவளும் நினைக்க வேண்டும். என்பும் உரியர் பிறர்க்கு என்பது அவளுக்கும் பொருந்தும். 


இப்படி ஒருவற்கு ஒருவர் மாறி மாறி அன்பு செய்து கொண்டிருந்தால், இல்லறம் எவ்வளவு இனிமையாக இருக்கும்?


கணவன் மனைவி மட்டும் அல்ல. 


சகோதர்கள் இடையில் அந்த அன்பு இருக்க வேண்டும். 


நாட்டை பரதனுக்கு கொடு என்றவுடன் இராமன் சொன்னான் "என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ" என்று. 


எலும்பையே கொடுக்கலாம் என்றால், இராஜ்யமா பெரிது? கொடுக்கலாம்தானே?


பாதி நாடு கொடு, இல்லை என்றால், ஐந்து ஊர் கொடு, இல்லை என்றால் ஐந்து வீடாவது கொடு என்று துரியோதனிடம் தர்மன் கேட்டான். "ஊசி முனை நிலமும் தர மாட்டேன்" என்றான் துரியோதனன். 


எல்லாம் தமக்கு உரியர். 


ஆழ்ந்த குறள். 


சிந்திப்போம். முடிந்தவரை கடைபிடிப்போம். 


உரை சற்றே நீண்டு விட்டது. மன்னிக்க. 

Sunday, October 17, 2021

கம்ப இராமாயணம் - கங்குலும் பகல் பட வந்தான்

கம்ப இராமாயணம் - கங்குலும் பகல் பட வந்தான் 


இராவணன் பாத்திரத்தை கம்பன் செதுக்கியது போல இன்னொரு பாத்திரத்தை செதுக்கினானா என்று தெரியவில்லை. 


ஒரு புறம் மாபெரும் வீரம், இந்திராதி தேவர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வீரம், இன்னொரு புறம் அளவுகடந்த சிவ பக்தி, இன்னொரு புறம் இறைவனை இறங்கி வரச் செய்யும் இசை ஞானம், மறு புறம் கல்வி கேள்விகளில் சிறந்த அறிவு....இது எல்லாம் ஒரு புறம். 


இன்னொரு புறம், சீதையின் மேல் அளவு கடந்த காமம், தம்பிகள் மேல் வாஞ்சை, மகன் மேல் உயிர் உருகும் அன்பு....


அறிவு, வீரம், காமம், காதல், பாசம், அன்பு என்று அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறான். 


அவனின் வீரம், கம்பீரம் ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் காமத்தால் அவன் எந்த அளவுக்கு ஒரு பெண்ணின் முன்னால் மண்டியிட்டு இறைஞ்சுகிறான் என்று பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. 


இராவணன், சீதையை பார்த்துப் பேசும் இடங்கள்...நான் என்ன சொல்ல அந்த கவிதைகளை நீங்களே பாருங்கள். 


அசோகவனம் நோக்கி இராவணன் வருகிறான்....


"உலகில் உள்ள பெரிய மலைகள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ந்தால் எப்படி இருக்கும். அது போல இருந்தது பத்துத் தலையோடு இராவணன் வருவது. உடல் எங்கும் ஆபரணங்கள். அதில் இள வெயில் பட்டு ஜொலிக்கிறது. அது கடல் நீரில் சூரிய ஒளி பட்டு மின்னுவது போல இருக்கிறது. அவன் வரும் போது இரவு கூட பகல் போல ஒளி விடும்"


பாடல் 


 சிகர வண்குடுமி நெடு வரை எவையும்

     ஒரு வழித்திரண்டன சிவண,

மகரிகை வயிரகுண்டலம் அலம்பும்

     திண்திறல் தோள் புடை வயங்க,

சகர நீர் வேலைதழுவிய கதிரின்,

     தலைதொறும்தலைதொறும் தயங்கும்

வகைய பல் மகுடம்இள வெயில் எறிப்ப,

     கங்குலும்பகல்பட, வந்தான்.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_17.html


(please click the above link to continue reading)





 சிகர = சிகரங்கள், மலைகள் 


 வண்குடுமி = உயர்ந்த உச்சி, மலை உச்சி 


நெடு வரை = நீண்ட மலைகள் 


எவையும் = அனைத்தும் 


ஒரு வழித்திரண்டன சிவண, = ஓரிடத்தில் சேர்ந்தது போல 


மகரிகை = மீன் வடிவாய் அமைந்த ஆபரணங்கள் 


வயிரகுண்டலம் = வயிரத்தால் அமைந்த காதில் அணியும் குண்டலம் 


அலம்பும் = அசையும் 


திண்திறல் தோள் புடை = புடைத்த, உறுதியான தோள்களில் 


வயங்க = விளங்க 


சகர நீர் வேலை  = சகர புத்திரர்கள் தோண்டியதால் உண்டானது சாகரம். கடல். அந்த கடல் நீரில் 


தழுவிய கதிரின் = பிரதிபலிக்கும் சூரிய ஒளி 


தலைதொறும்தலைதொறும்  = ஒவ்வொரு தலையிலும் 


தயங்கும் = விளங்கும் 


வகைய = விளங்கும் 


பல் மகுடம் = பல மகுடங்கள் (பத்து) 


இள வெயில் எறிப்ப, = இளமையான வெயில் (மாலை நேரமாக இருக்கும்) 


கங்குலும்பகல்பட, வந்தான். = இரவு கூட பகல் போல் வெளிச்சமாக தோன்றும் படி வந்தான். 


என்ன ஒரு buildup.


கடலுக்கு சாகரம் என்று ஒரு பெயர் உண்டு. 


சகர புத்திரர்கள் தோண்டியதால் அதற்கு சாகரம் என்று பெயர்.


அந்தக் கதையை இங்கே காணலாம். 


https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2014/oct/31/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1004451.html





Saturday, October 16, 2021

நாலடியார் - பாற்கூழை மூழை சுவையுணராது

நாலடியார் -  பாற்கூழை மூழை சுவையுணராது 


சிலருக்கு எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்மறையான ஒன்றைச் சொன்னால்தான் ஒரு திருப்தி. சொல்பவர் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய கருத்தாக இருந்தாலும், தங்கள் மேதா விலாசத்தை காட்டாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது.


"வள்ளுவர் தவறாக சொல்லி விட்டார்" 


"கம்பர் பாட்டில் பிழை"


என்று ஏதாவது இடக்கு மடக்காக சொன்னால்தான் தாங்கள் அறிவாளிகள் என்று மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது அவர்கள் எண்ணம். 


பெரியவர்கள், தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை தாங்களே வைத்துக் கொண்டிருக்கலாம். வருங்கால சந்ததிக்கு பயன் படட்டுமே என்று நம் மேல் உள்ள அன்பினால், அருளினால் அவர்கள் கண்ட அறங்களை நமக்குச் சொல்லி விட்டுப் போனார்கள். 


அதை நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்வதுதான் அவர்களுக்கு செய்யும் கைம்மாறு. 


சிலருக்கு அது புரிவதே இல்லை. 


அண்டா நிறைய பால் பாயசம் இருக்கும். பாலும், முந்திரி பருப்பும், நெய்யும்,  சர்க்கரையும் இட்டு சுவையாக செய்த பால் பாயசம். அதை முகந்து பரிமாற அந்த அண்டாவில் ஒரு கரண்டி போட்டு இருப்பார்கள். அந்தக் கரண்டி முழுக்க முழுக்க பால் பாயசதுக்குள்தான் மூழ்கிக் கிடக்கும். 


என்ன பயன். கரண்டிக்கு பாயசத்தின் சுவை தெரியுமா?


அது போல, சிலர் எவ்வளவு படித்தாலும், படித்தவை உணர்வில் ஒட்டாது. அது மட்டும் அல்ல, படித்ததை புரியாமல் இகழவும் செய்வார்கள். தங்கள் நிலைக்கு உயர்ந்த புத்தகங்களை கீழ் இறக்கி விடுவார்கள். 


பாடல் 



அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா

ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை

மூழை சுவையுணரா தாங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_29.html


(Pl click the above link to continue reading)


அருளின் = அருளினால் 


அறமுரைக்கும் = அறத்தினை எடுத்து உரைக்கும் 


 அன்புடையார் = அன்புடைய சான்றோர்களின் 


 வாய்ச்சொல் = வாயில் பிறந்த சொல்லை 


பொருளாகக் கொள்வர் புலவர்; = பெரிய மதிப்பு மிக்க பொருளாகக் கொள்வர் அறிவுடையோர் 


பொருளல்லா = பொருள் புரியாத


ஏழை = பேதை 


அதனை இகழ்ந்துரைக்கும் = அந்த அறங்களை பழித்துக் கூறும் 


பாற்கூழை = பால் பாயசத்தை 


மூழை = கரண்டி 


சுவையுணரா தாங்கு. = சுவை உணராதது போல 


பிறன் மனை நோக்கா பேராண்மை என்கிறார் வள்ளுவர். 


ஏன், மற்றவன் மனைவியைப் பார்த்தால் என்ன? அவளுக்கும் பிடித்து இருந்தால், பார்ப்பதில் என்ன தப்பு? ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் முட்டாள்தனம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். 


அப்படி இல்லை என்றால், "வள்ளுவருக்கு என்ன சொல்லுவாரு...அதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை. அவருக்கு அதெல்லாம் எங்க தெரியப் போகுது" என்று வள்ளுவரின் அறிவை இவர்கள் எடை போடுவார்கள். 


பாற்கூழை சுவை உணரா மூழைகள். 


பாரதியார் சொல்வார், தேன் குடத்தில் இட்ட அகப்பைகள் என்று.