Tuesday, March 1, 2022

திருக்குறள் - செய்நன்றி மறவாமை

 திருக்குறள் - செய்நன்றி மறவாமை 


உலகில் எத்தனையோ கொடிய பாவங்கள் இருக்கின்றன.  நம்மால் மனதால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகள் நடக்கின்றன. சொல்லவும், படிக்கவும், ,கேட்கவுமே மனம் நடுங்கும். இப்படியுமா மிருக குணம் மனிதர்களிடம் இருக்கும் என்று மனம் பதைக்கும்.


அவற்றைப் பற்றி எல்லாம் நாளும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றை சொல்லாமல் விடுவதே நலம்.


அப்படிப்பட்ட கொடுமைகளில் மிகப் பெரிய கொடுமை எது தெரியுமா?  


செய் நன்றி மறப்பது தான் என்கிறது வள்ளுவம். 


ஆச்சரியமாக இருக்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காட்டிக் கொடுத்தல், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல், அடுத்து கெடுதல் என்று ஆயிரம் பாவங்கள் இருக்க, செய் நன்றி மறப்பதை மிகப் பெரிய பாவமாக ஏன் சொல்ல வேண்டும்?


இந்த பாவத்துக்கும் ஒரு பிரயாசித்தம் உண்டு. கழுவாய் உண்டு. பாவ விமோசனம் உண்டு. ஆனால், செய் நன்றி மறந்த பாவத்துக்கு பிரயாசித்தமே கிடையாது என்கிறார் வள்ளுவர். 


எந்த கங்கையில் மூழ்கினாலும், எந்த கோவிலுக்குப் போனாலும், என்ன தான தர்மம் செய்தாலும், செய் நன்றி கொன்ற பாவம் மட்டும் போகவே போகாது என்கிறார்.


அப்படி என்ன பெரிய பாவம் அது?


யோசித்துப் பார்ப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post.html


(Pl click the above link to continue reading)



செய்நன்றி முதலில் பெற்றோரிடம் ஆரம்பிக்கிறது. நல்ல பெற்றோர்.  அப்படிப்பட்ட பெற்றோர் செய்த உதவியை மறப்பது. 


அடுத்தது, ஆசிரியர். அறிவுக் கண்ணை திறந்து வைத்த ஆசான். அவர் செய்த நன்றியை மறப்பது. 


அடுத்தது, உடன் பிறப்பு, நட்பு, உறவு ...அவர்கள் செய்த உதவியை மறப்பது.


அடுத்து, நோய் தீர்த்த மருத்துவன், உணவு செய்து கொடுத்த விவசாயி, உயிரை பணயம் வைத்து நம்மை காக்கும் படை வீரன், அவர்கள் செய்த நன்றியை மறப்பது. 


அடுத்து, வீட்டு வேலைக்காரன், வண்டி ஓட்டுபவன், வீட்டு காவல் காரன்....


சொல்லிக் கொண்டே போகலாம். எவ்வளவு பேர் நமக்கு நன்மை செய்கிறார்கள்?


swtich ஐ தட்டினால் காற்று வருகிறது, தொலைக் காட்சி வருகிறது, குளிர்ந்த காற்று வருகிறது, குளிக்க சூடான நீர் வருகிறது. எப்படி? எவ்வளவு பேரின் உழைப்பு அதன் பின்னால் இருக்கிறது. 


நான் எழுதுவதை நீங்கள் படிக்க எவ்வளவு பேரின் உதவி வேண்டும். 


நன்றியோடு இருப்பது என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் நன்றியோடு தான் இருக்க வேண்டும். ஒரு கணம் கூட நன்றி மறக்க முடியாது. 


இவ்வளவு நன்மையை பெற்ற ஒருவன், அவற்றை மறப்பான் என்றால், அவன் மனம் எவ்வளவு வறண்டு இருக்கும். அவன் வேறு என்ன கொடுமை செய்ய மாட்டான் ? 


ஏனைய குற்றங்கள் ஒருவன் மற்றவருக்கு செய்வது என்ற அளவில் நிற்கும். 


நன்றி மறப்பது என்பது ஒருவன் ஒரு சமுதாயத்துக்கு செய்யும் குற்றம், ஒரு நாட்டுக்கு செய்யும் குற்றம், மனித குலத்துக்கே செய்யும் குற்றம். 


எப்படி எப்படியோ சிதறிக் கிடந்த புராணங்களை, வேத பாடங்களை தொகுத்துத் தந்தார் வியாசர். நன்றி வேண்டாமா?


பிரபந்தத்தை, தேவார திருவாசகத்தை தொகுத்தவர்கள் பால் நன்றி வேண்டாமா?


தடுப்பூசி கண்டு பிடித்தவர்கள், நோய் தீர்க்கும் மருந்தை கண்டு பிடித்தவர்கள் என்று எவ்வளவு பேருக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும். 


ஒவ்வொருவரின் இதயம் முழுவதும் நன்றியால் நிறைந்தால், உலகம் எவ்வளவு இனிமையாக இருக்கும். தவறுகள் நடக்குமா? தவறு செய்யும் எண்ணம் கூட வராது. 


தனி மனிதன் சிறக்க, குடும்பம் சிறக்க, சமுதாயம், நாடு சிறக்க நன்றி மறவாமை வேண்டும். 


பெரிய அறம். 


இந்த அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லும் விடயங்கள் நம் கற்பனைக்கும் எட்டாதவை. 


அவற்றை நாளை முதல் சிந்திக்க இருக்கிறோம். 



Monday, February 28, 2022

கம்ப இராமாயணம் - வீபிஷண சரணாகதி

 கம்ப இராமாயணம் - வீபிஷண சரணாகதி 


சரணாகதி என்பது மிகப் பெரிய விஷயம். கதி என்றால் பாதை, வழி. சரணமே கதி. அது தான் வழி என்று அதில் போவது. 


சரணாகதி என்பது எளிதான காரியம் இல்லை. என்னால் ஆவது ஒன்று இல்லை, எல்லாம் நீ தான் என்று இருப்பது மிக மிக கடினம். 


நான் யார், நான் எவ்வளவு பெரிய ஆள், என் படிப்பு என்ன, சாமர்த்தியம் என்ன, விவேகம் என்ன, வீர தீரம் என்ன...என்னை போல் யாரால் முடியும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். 


நான் ஒரு சாதாரண ஆள் என்று யாருமே நினைப்பது இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தான் உயர்ந்தவன், பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 


கம்ப இராமாயனத்தை தொடங்கும் போதே கம்பர் "தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே" என்று சரணத்தோடு தான் ஆரம்பிக்கிறார்.


செஞ்சோற்று கடன் கழிக்காமல் இராமன் பின் போனது துரோகம் இல்லையா என்று இன்றும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். 


"நான் சரணாகதி அடைகிறேன்" என்ற நினைப்பு வந்து விட்டால் அது சரணாகதி அல்ல. நான் செய்கிறேன் என்ற எண்ணமே அகம்பாவம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_20.html


(pl click the above link to continue reading)


காதலியிடம், மனைவியிடம் சரண் அடைவது என்பது எவ்வளவு இனிமையான விஷயம்.


பாரதி சொல்கிறான் ....



நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!

தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)


"உன் பற்றன்றி ஒரு பற்று இல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே" என்பார் பட்டினத்தார். 


வேதம் நான்கும் சரண் அடைவது அபிராமியின் பாதங்களில் என்று கூறுகிறார் 



ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்

வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்

தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்

கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே



"மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண் அரவிந்த"


தாயின் தோளில் தூங்கும் குழந்தை போல, சரணாகதி அவ்வளவு சுகமானது. 


பக்தியில் இரண்டு விதமான பக்தி பற்றி கூறுவார்கள். .


பூனை பக்தி, குரங்கு பக்தி என்று. 


பூனை தன் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு ஒரு ஒரு இடமாகச் செல்லும். குட்டி ஒன்றும் செய்ய வேண்டாம்.


குரங்கு அப்படி இல்லை. குட்டிதான் இறுக பற்றிக் கொள்ள வேண்டும். தாய் குரங்கு அங்கும் இங்கும் தாவும். விழுவதும் விழாமல் இருப்பதும் குட்டியின் சாமர்த்தியம். 


எது எளிது? பூனை குட்டியின் வாழ்க்கை எளிது. 


"எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே"


என்கிறார் அருணகிரி.


நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். என்னையும் இழந்து விட்டேன். அதனால் அந்த சுகம் எப்படி இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியாது. நான் தான் இல்லையே. நான் எப்படி சொல்ல முடியும். எனவே, அதை நீயே சொல் முருகா என்கிறார் "சொல்லாய் முருகா". 


எல்லாம் இழப்பது ஒரு சுகமா? 


கோவிந்தா என்று கை உயர்த்தினாள் பாஞ்சாலி. அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை. 


ஆதி மூலமே என்று அலறியது யானை. அவன் வருவான், அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை. 


சரணாகதி என்பதை வைணவம் கொண்டாடுகிறது. 


வீபிஷ்ண சரணாகதி பற்றி சிந்திக்க இருக்கிறோம். 





திருக்குறள் - அடுத்து என்ன?

 திருக்குறள் - அடுத்து என்ன? 


திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரமும் ஒரு முறைப்படி, வரிசைப்படி ஒரு ஒழுங்கு முறையில் வைத்து எழுதப் பட்டு இருக்கிறது. திருக்குறளைப் படிக்க வேண்டும் என்றால் அந்த முறையில் படிக்க வேண்டும். 


அதிகாரம் மட்டும் அல்ல இயலும் அப்படித்தான்.


அறம், பொருள், இன்பம் என்ற வரிசையில் எழுதி இருக்கிறார். இதில் என்ன முறை இருக்கிறது? பொருள், அறம், இன்பம் என்று எழுதி இருக்கக் கூடாதா? அல்லது இன்பம், பொருள், அறம் என்று எழுதி இருக்கக் கூடாதா? இன்பம் தானே எல்லோரும் தேடுவது? அதை முதலில் சொல்லி, அந்த இன்பம் அடைய பொருள் வேண்டும், அதை அற வழியில் ஈட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கலாம் தானே?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நமக்கு சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. எல்லா வேலையையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. எதை முதலில் செய்வோம்? எது நமக்கு அதிக பலன் தருமோ அதை முதலில் செய்வோம் அல்லவா? 


இல்லை, எது எளிதாக இருக்கிறதோ அதை முதலில் செய்வோம் என்று சிலர் வாதிக்கலாம். 


சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். 


நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. அதை எதில் செலவழிப்போம்? எது நமக்கு அதிக ஆதாயம் தருமோ, அதில்தானே செலவழிப்போம்?


குறிப்பிட்ட தொகைக்கு இரண்டு படுக்கை அறை கொண்ட வீடும் இருக்கிறது, மூன்று படுக்கை அறை கொண்ட வீடும் இருக்கிறது என்றால் எதை வாங்குவோம்? 


பணம் என்பது உழைப்பின் பலன். எனவே, நம் உழைப்பும் எதில் அதிக ஆதாயம் தருகிறதோ, அதை விரும்புவோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_28.html


(please click the above link to continue reading)


இங்கே, (குறளில் ) இன்பம் என்பது இந்த பிறவிக்கு மட்டும் இன்பம் தருவது. அதுவும் கொஞ்ச காலத்துக்கு மட்டும் தான். 


பொருள் இம்மைக்கும், மறுமைக்கும் இன்பம் தருவது, சரியான வழியில் அதை செலவழித்தால். 


அறம், இம்மை, மறுமை மட்டும் அல்ல வீடு பேற்றுக்கும் வழி செய்யும். 


இப்போது சொல்லுங்கள் எதை முதலில் செய்ய வேண்டும். 


இன்பம், இன்பம் என்று அலைந்து கொண்டிருந்தால் மறுமை, வீடு பேறுக்கு வழி இல்லாமல் போகும் 


எனவே, முதலில் அறத்துப் பால் பற்றி கூறினார். 


சரி, அறத்துப் பால் முக்கியம். அதை எப்படிச் சொல்லுவது? 


முதலில் பிள்ளை பெறுவது, அப்புறம் மனைவி, அப்புறம் இல்லறம் என்று சொல்லலாமா? அல்லது முதலில் துறவறம், பின் இல்லறம் என்று சொல்லலாமா? எப்படிப் படித்தால் என்ன என்று கேட்கக் கூடாது. எதுக்கும் ஒரு முறை இருக்கிறது. 


அறம் சொல்ல வந்த வள்ளுவர், முதலில் இல்லறத்தை எடுத்துக் கொள்கிறார். 


அறத்துப் பால் - இல்லறவியல். 


அதில், முதலில் பாயிரவியல் - இறை வணக்கம், வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்று சொல்ல்கிறார். 


பின், இல்லறதுக்குள் நுழைகிறார். 


இல்வாழ்கை (இல்வாழ்வின் நோக்கம், கடமைகள்), வாழ்க்கைத் துணை நலம் (மனைவி), புதல்வர்களைப் பெறுதல், அன்புடைமை,  விருந்தோம்பல், இனியவை கூறல் என்று சொன்னார். 


அடுத்து என்ன?


என்னவாக இருக்கும்?


இல்வாழ்வில் பெற்றோர், உடன் பிறப்பு, சுற்றம், நட்பு, அண்டை, அயல், விருந்து என்று எல்லாம் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்கிறோம். 


ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது. இல் வாழ்வின் அடி நாதம் இது. 


எனவே, அடுத்த அதிகாரமாக "செய்நன்றி அறிதல்" என்ற அதிகாரத்தை வைக்கிறார். 


ஒரு அதிகாரத்தை அங்கே இங்கே மாத்தி வைக்க முடியாது. அப்படி ஒரு கட்டமைப்பு. 


செய்த உதவியை மறக்கக் கூடாது. அவ்வளவுதானே. புரிஞ்சு போச்சு. இதுக்கு எதுக்கு ஒரு அதிகாரம், பத்து குறள், அதுக்கு உரை, உரைக் குறிப்பு எல்லாம் என்று நாம் நினைப்போம். 


வள்ளுவர் செய்திருக்கும் வேலை பிரமிக்க வைக்கக் கூடியது. 


செய்நன்றி அறிதல் பற்றி இன்னும் கொஞ்சம் சிந்தித்தப் பின், அதிகாரத்துக்குள் நுழைவோம். 



Sunday, February 27, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - காலம் இனி இல்லை

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - காலம் இனி இல்லை 


எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம், ஏதோ பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கப் போவது போல. 


இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், என்று பலப் பல காரியங்கள். முக்கியமானவற்றை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். 


இந்த சில்லறை வேலைகளை எல்லாம் செய்து முடித்து விட்டு பெரிய வேலை பார்க்க நினைக்கும் போது நாள் ஓடி இருக்கும். நாமே இருக்க மாட்டோம். இருந்தாலும், மனத்திலும், உடலிலும் வலு இருக்காது. 


எனவே, மனமும், உடலும் உறுதியாக இருக்கும் போது முக்கியமான காரியங்களை செய்து விட வேண்டும். சில்லறைக் காரியங்களை செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை. 


நாம் முக்கியமான காரியங்களை செய்ய விடாமல் நம்மை தடுப்பது எது?


கோபமும், ,காமமும். 


காமம் புரிகிறது. கோபம் எப்படி காரணம் ஆகும்? கோபம் என்றால் முகம் சிவக்க, உதடு துடிக்க, வார்த்தைகள் அனல் போல கொட்ட, சாமான்களை தூக்கி அடிக்கும் செயல் மட்டும் அல்ல. 


சத்தமே போடாமல், யார்மேலும் எரிந்து விழாமலும் கோபம் கொள்ளலாம். 


நம் மேலேயே நமக்கு கோபம் வரும் சில சமயம். 


நம் இயலாமையை நினைத்து, நம் உறுதி அற்ற தன்மையை நினைத்து, நம்முடைய பலவீனங்களை நினைத்து கோபம் வரலாம். 


கோபத்தால் சிந்தனை தெளிவு மாறும். தவறான முடிவுகள் எடுக்க வேண்டி வரும். பின் அதைச் சரி செய்ய மேலும் கால விரயம் ஆகலாம்.  


கோபம் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். 


இதுகெல்லாம் நேரம் இல்லை. இதை எல்லாம் விட்டு விட்டு வாருங்கள்.  சிவலோகத்தின் கதவு சாத்தப்படும் முன், சீக்கிரமாக போய் சேர்வோம் என்று அந்த பயணத்துக்கு நம்மை அழைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை. 


பாடல் 





விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே, காலம் இனி இல்லை;

உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்;

அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே;

புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_27.html


(click the above link to continue reading)



விடுமின் = விட்டு விடுங்கள் 


வெகுளி = கோபம் 


வேட்கை நோய் = காம நோய், ஆசை என்ற நோய் 


மிகவே = ரொம்ப 


காலம் இனி இல்லை; = காலம் இனி இல்லை. இருந்த காலம் எல்லாம் போய் விட்டது. 


உடையான் = நம்மை உடையவன் (சிவன்) 


அடிக்கீழ் = திருவடியின் கீழே 


பெரும் சாத்தோடு = பெரிய கூட்டத்தோடு 


உடன் போவதற்கே = ஒன்றாக போவதற்கு 


ஒருப்படுமின்; = ஒன்றாக வாருங்கள் 


அடைவோம் = கட்டாயம் அடைவோம் 


 நாம் போய்ச் = நாம் போய் 


சிவபுரத்துள் = சிவபுரத்துள் 


அணி = அணிகலன்கள் கொண்டு வேலைப்பாடு செய்யப்பட்ட 


ஆர் கதவு = பெரிய கதவு 


அது அடையாமே; = அது அடை படுவதற்கு முன் 


புடைபட்டு  = நீக்கமற எங்கும் நிறைந்த 


உருகிப் போற்றுவோம் = உருகி போற்றுவோம் 


புயங்கன் = பாம்பை அணிந்த கரங்களை உடைய அவன் 


 ஆள்வான் = நம்மை ஆழிபவன் 


புகழ்களையே. = புகழைப் (போற்றுவோம்)


போகும் இடத்துக்கு வழி தேடுவதுதானே முக்கியமான வேலை. 


ஏதோ ஒரு காரணமாக வெளியூர் போய் இருக்கிறோம். வேலை முடிந்து எப்படி பழையபடி ஊர் போய் சேர்வது என்று சிந்திக்க வேண்டாமா? வந்த இடத்தில் சுத்திக் கொண்டு இருந்தால் எப்படி ஊர் போய் சேர்வது? 


இந்த உலகில் நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக வந்து இருக்கிறோம். 


எப்படியும் ஒரு நாள் போகத்தான் வேண்டும். நிரந்தரமாக இங்கே இருக்க முடியாது. 


எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்ல வழியை ஆராய வேண்டாமா?


யாத்திரைப் பத்து. 


நம் பயணம் தொடர வேண்டும். எங்கு எப்படி என்று மணிவாசகர் சொல்கிறார். 




Wednesday, February 23, 2022

திருக்குறள் - இனியவை கூறல் - காயும் கனியும்

திருக்குறள் - இனியவை கூறல் - காயும் கனியும் 


இனிய சொற்கள் இருக்கும் போது இன்னாத சொற்களை கூறுவது கனி இருக்கும் போது காயை விரும்பவது போல என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_23.html


(please click the above link to continue reading)



இனிய உளவாக = இனிய சொற்கள் இருக்கும் போது 


இன்னாத கூறல் = இன்னாத சொற்களை கூறுவது 


கனியிருப்பக் = கனி இருக்கும் போது 


காய்கவர்ந் தற்று = காயை உண்பது போல, காயின் மேல் விருப்பம் உண்டானது போல, காயை திருடி உண்பது போல 


காயிருக்க கனி உண்பது எவ்வளவு  சிறந்த செயல் இல்லையோ, அது போல இனிய சொற்கள் இருக்க இன்னாத சொற்களை கூறுவது. இப்படித்தான் இதுவரை அர்த்தம் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


பரிமேலழகர் இல்லை என்றால் இது எல்லாம் புரிவதே கடினம். 


அது என்ன கனி, காய்?


மாங்காய் ஊறுகாய் போட வேண்டும் என்றால், மாங்காய் தானே வேண்டும். மாம்பழத்தை வைத்து ஊறுகாய் போட முடியுமா? 


வாழக்காய் பொறியல் பண்ண வேண்டும் என்றால் காய் தான் வேண்டும். வாழைப் பழத்தை வைத்து பொறியல் பண்ண முடியுமா? 


அப்படி இருக்க கனி உயர்ந்தது, காய் தாழ்ந்தது என்று எப்படிச் சொல்லலாம்? 


மேலும், காய் இல்லாமல் கனி இல்லை. அப்படி என்றால் இன்னாத சொல்லில் இருந்தா இனிய சொல் பிறக்கும்?


சிக்கல். 


பரிமேலழகர் சிக்கலை விளக்குகிறார். 


கனி என்றால் ஔவை உண்ட நெல்லிக் கனி போன்ற உயர்ந்த பலன் தரும் கனிகள். 


காய் என்றால் காஞ்சிரங்காய் போன்ற நஞ்சு உள்ள காய்கள் என்று பொருள் சொல்கிறார். 


அதாவது, உடலுக்கும், உயிருக்கும் நன்மை தரும் கனிகளை விடுத்து, நஞ்சு பொருந்திய காய்களை யாராவது உண்பார்களா என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


மேலும், காஞ்சிரங்காய் போன்ற நச்சுக் காய்களை பறிக்கும் போது அதில் உள்ள முட்கள் குத்தி நமக்கே கேடு விளைவிக்கும். பிறருக்கு தீமை தரும் என்று நினைத்து நாம் சொல்லும் தீய சொற்கள் நமக்கே தீமையாக முடியும் எனவே அந்த மாதிரி சொற்களை பயன்படுத்தக் கூடாது என்கிறார். 


ஒருவர் மேல் கோபம் கொண்டு வார்த்தைகளை அள்ளி வீசுகிறோம், அவதூறு பேசுகிறோம், பொய் சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த சொற்கள் அவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் தீமை விளைவிக்கும் என்கிறார். 


நம்மால் துன்பப்பட்ட ஒருவன் சும்மா இருப்பானா? அவன் முறை வரும் வரை காத்து இருப்பான், நமக்கு துன்பம் செய்ய. 


எனவே, இனியவை அல்லாத சொற்களை சொல்லுவது மற்றவர்களுக்கு மட்டும் அல்ல, சொல்பவர்களுக்கும் தீமை பயத்தலால், அதை சொல்லக் கூடாது என்கிறார். 


இந்தக் குறளில் ஒரு இலக்கணச் சிக்கல் இருக்கிறது. 


முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. 


இனிய உளவாக இன்னாத கூறல் 


என்பது முதல் வரி. 


கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்பது இரண்டாவது வரி. 


ஏதாவது தொடர்பு இருக்கிறதா?  


எப்படி இரண்டையும் இணைப்பது?


பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 


"பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. "


கனி ,காய் என்பது உவமை. 


இனிய சொல், இன்னாத சொல் என்பன பொருள். 


இனிய, இன்னாத என்று சொல்லுக்கு கூறிய பண்புகள் உவமைக்கும் செல்லும் என்கிறார். அதாவது, இனிய சொல் என்பதில் உள்ள இனிமை இனிய கனி என்று செல்லும். அது போல, இன்னாத சொல் என்பதில் உள்ள இன்னாத என்பது இன்னாத காய் என்று செல்லும். 


எனவே, குறளை எப்படி படிக்க வேண்டும்?

இனிய உளவாக இன்னாத கூறல் 

இனிய கனி இருக்க இன்னாத காய் கவர்ந்தற்று 


என்று படிக்க வேண்டும். 


இனிய உளவாக இன்னாத என்றால் இனிமையான தின்பண்டங்கள் இருக்க கசப்பானவற்றை தின்பது போல என்று பொருள் கொள்ளலாம் அல்லவா?


"கூறல் என்றதனால் அது சொற்களை குறிக்கும்" என்கிறார் பரிமேலழகர். 


இன்னும் குறளை விரித்துப் படித்தால் எப்படி இருக்கும்?


இனிய சொற்கள் இருக்க இன்னாத சொற்களை கூறல் 

இனிய கனி இருக்க இன்னாத காய் கவர்ந்தற்று 


என்று விரியும். 


எவ்வளவு சொற் சிக்கனம் பாருங்கள். பயனில சொல் பாராட்டாமை. 


சரி மேலே போவோம். 


கவர்ந்தற்று என்கிறார். 


கவர்தல் என்றால் இரண்டு பொருள். கவர்ச்சி, விருப்பம் என்று கொள்ளலாம். 


இன்னொன்று தெரியாமல் எடுத்துக் கொள்வது. 


"என் உள்ளம் கவர் கள்வன்" என்பார் திரு ஞான சம்பந்தர். 


தீய சொற்கள் நாம் அறியாமல் வந்து விடும். வேண்டும் என்று சொல்லுவதில்லை. கோபத்தில், எரிச்சலில், சில சமயம் நம்மையும் அறியாமல் வந்து விடும். அப்படி வர விடக் கூடாது. காவல் செய்ய வேண்டும். 


சிலருக்கு இன்னாத சொற்களை சொல்லுவதில் ஒரு ஆர்வம் இருக்கும். நான் பல பேரை பார்த்து இருக்கிறேன். சில கெட்ட வார்த்தைகளை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சொல்லுவார்கள். 


சென்னை போன்ற இடங்களில் ஆத்தா என்ற சொல்லைக் கூட தவறாக பயன் படுத்துவதை கண்டு இருக்கிறேன். சிலர் ஆங்கிலத்தில் அந்த f என்று தொடங்கும் அந்த நான்கு எழுத்துச் வார்த்தையை மிக எளிதாக கையாள்வார்கள். அதில் ஒரு விருப்பம். இயல்பு வந்து விடுகிறது. அது இல்லாமல் பேச முடியாது என்று ஆகி விடுகிறது. பல ஆங்கிலப் படங்களில் இவை சர்வ சாதரணமாக புழங்குகிறது. 


நா காக்க வேண்டும். 


தீய சொற்களின் மேல் ஆர்வம் கூடாது. அதில் உள்ள கவர்ச்சியில் மயங்கக் கூடாது. 


அவை நம்மை அறியாமலும் வந்து விடக் கூடாது. 


அப்படிப்பட்ட சொற்கள் மற்றவர்களை பாதிக்கிறதோ இல்லையோ, சொல்பவர்களை பாதிக்கும். எனவே, அவற்றை விலக்க வேண்டும் என்கிறார். 


இந்தக் குறளோடு இனியவை கூறல் என்ற அதிகாரம் முற்றுப் பெறுகிறது. 


எப்போதும் கேட்பது தான்..கொஞ்சம் இடை வெளி வேண்டுமா? அலுப்பாக இருக்கிறதா? கனமாக இருக்கிறதா?  சிறிது இடைவெளி விட்டு பின் தொடர்வோமா அல்லது இடை வெளி இல்லாமல் தொடர்வோமா?


இரண்டாவது, இந்த ப்ளாகில் சில வார்த்தைகளை உதாரணம் காட்ட வேண்டி இருந்தது. கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது. விட்டுவிடலாம என்றும் தோன்றியது. உயர்ந்த விடயங்களை பற்றிப் பேசும் போது, கீழான வார்த்தைகளை கையாள்வது தவறுதான். சபை நாகரிகமும் அல்ல. 


உங்களுக்கு அவை சங்கடம் விளைவித்து இருந்தால், மன்னிக்கவும். 



Tuesday, February 22, 2022

நளவெண்பா - திருமாலை எங்கு காணலாம்?

 நளவெண்பா - திருமாலை எங்கு காணலாம்? 


வைகுந்தத்தில் காணலாம். சரி, வைகுந்ததுக்கு எப்படி போவது? யாருக்குத் தெரியும் அந்த வழி? 


அதைவிட எளிய வழி சொல்கிறார் புகழேந்தி, நளவெண்பாவில். 


"வேதங்களின் முகப்பில், முன்னால் காணலாம். அல்லது, ஆநிரைகளின் (பசுக் கூட்டத்தின்) பின்னால் காணலாம்" என்கிறார். யாரைக் காணலாம் என்றால் "ஆதி மூலமே என்று அழைத்த யானைக்கு முந்தி வந்து அருள் புரிந்த அந்த செந்தாமரை போன்ற திருவடி உடையவனை" என்கிறார். 


அற்புதமான பாடல் 


பாடல் 


மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்

காலிக்குப் பின்னேயும் காணலாம் - மால்யானை

முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப

வந்தருளும் செந்தா மரை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_22.html


(please click the above link to continue reading)



மூலப் = அனைத்துக்கும் மூலமான 


பழ = பழமையான 


மறைக்கு = வேதங்களுக்கு 


முன்னேயும் காணலாம் = முன்பும் காணலாம் 


காலிக்குப் = கால்நடைகளான பசுக் கூட்டத்தின் 


 பின்னேயும் காணலாம் = பின்னாலும் காணலாம் 


மால்யானை = அன்பு கொண்ட யானை (கசேந்திரன்) 


முந்தருளும் = முந்தி வந்து அருள் புரியும் 


வேத முதலே எனஅழைப்ப = வேதத்தின் முதலே (ஆதி மூலமே) என்று அழைக்க 


வந்தருளும்  = வந்து அருள் செய்யும் 


செந்தா மரை. = சிவந்த தாமரை போன்ற திருவடிகளை 


யானைக்கு இறைவன் பெயர் தெரியாது. யாருக்குத் தான் தெரியும்? இறைவனுக்கு யார் பெயர் சூட்டுவது?  அந்த யானை "ஆதி மூலமே" என்று அழைத்தது. 


கூப்பிட வேண்டும் என்று நினைத்தாலே போதுமாம், கூப்பிடுவதற்குள் ஓடி வந்து உதவி செய்வானாம். "முந்தருள்" முந்திக் கொண்டு வந்து அருள் செய்வாராம். 


பால் நினைந்து ஊட்டும் தாய் போல. குழந்தை பசித்து அழ வேண்டாம். அதுக்கு பசிக்குமே, பசி வேளை வந்து விட்டதே என்று நினைத்து பால் தரும் தாயைப் போன்றவன் இறைவன். 


"ஐயோ, அந்த உயிருக்கு ஒரு துன்பம் வந்து விட்டதே...அது என்னை அழைக்கப் போகிறதே...என்று அது அழைக்கும் முன்  ஓடிச் சென்று உதவுவானாம் "


அறிவு கொண்டு காண வேண்டுமா ? வேதத்தைப் படித்து, அது என்ன சொல்ல வருகிறது என்று அறிந்து கொள்ளலாம். ஞான யோகம் 


முடியவில்லையா? 


ஆடு மாடு மேய்பது போன்ற காரியங்களின் பின்னாலும் அவன் இருக்கிறான்.  கர்ம யோகம். 


அதுவும் முடியவில்லையா?  படிக்கவும் முடியாது, வேலை செய்யவும் தெம்பு இல்லையா? 


உயிர்களின் மேல் அன்பு கொண்டு, அவற்றிற்கு உதவும் அந்த கருணை புரியுமா? பக்தி யோகம். 


தேடல் தான் முக்கியம். தாகம்தான் முக்கியம். 


எங்கும் இருக்கும் அந்த அன்பின் வெளிப்பாடு...எப்படியும் கண்டு கொள்ளலாம். 




Monday, February 21, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கட்டமே காதல்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கட்டமே காதல் 


காதல் இன்பமானதா? துன்பம் நிறைந்ததா? 


காதல் செய்தவர்களுக்குதன் தெரியும் அதன் கஷ்டம்.  காதலை சொல்வது கடினம். சொன்னால் ஏற்றுக் கொள்ளப் படுமோ, நிராகரிக்கப் படுமோ என்ற பயம், கவலை. ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், தினம் தினம் பார்க்காவிட்டால் கவலை. தினம் தினம் பேச முடியாவிட்டால் கவலை. யாராவது ஒருவர் வெளியூர் சென்றுவிட்டால் திரும்பி வரும் வரை கவலை. மற்றவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் கவலை. 


இதில் பெரிய கவலை என்ன என்றால், மற்றவர் கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டால், பார்க்க வராமல் இருந்து விட்டால்...அது போல் பெரிய கவலை இல்லை. 


நான் சொல்லவில்லை. ஆழ்வார் சொல்கிறார். 


ஆழ்வார் தன்னை ஒரு பெருமாள் மேல் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் தாயக நினைத்துக் கொண்டு, அந்த பெண் பிள்ளை படும் பாட்டை சொல்கிறார். 


"பெருமாளே, என் மகள் உன் மேல் காதல் கொண்டு விட்டாள். நீயோ அவளை பார்க்க வர மாட்டேன் என்கிறாய். அவளும் கிடந்து புலம்புகிறாள். இந்த காதல் மிகக் கடினமானது என்று சொல்லி மயங்கி விழுகிறாள். உன் பேரை அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறாள். நீ வராவிட்டாலும், ,நீ வந்து விட்டதாகவே நினைத்து  மயங்கும். இவள் மேல் உனக்கு இரக்கம் இல்லையா? இவளை நீ என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறாய்?"


என்று கேட்கிறார். 


பாடல் 


இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;

             எழுந்துலாய் மயங்குங்கை கூப்பும்;

        ‘கட்டமே காதல்’ என்றுமூர்ச் சிக்கும்;

             ‘கடல்வண்ணா! கடியைகாண்’ என்னும்;

        ‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்

             ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;

        சிட்டனே! செழுநீர்த் திருவரங் கத்தாய்!

             இவள்திறத் தென்சிந்தத் தாயே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_21.html


(Please click the above link to continue reading)




இட்டகால் = கால் இட்ட இடத்தில் அசைவில்லாமல் இருக்கும். 


இட்ட கையளாய் = கைகள் இருக்கும் இடத்தில் அசைவு இல்லாமல் இருக்கும் 


இருக்கும்; = இருக்கும் 


எழுந்துலாய்  = எழுந்து உலாவி 


மயங்குங்  = மயங்குவாள் 


கை கூப்பும்; = கைகளை கூப்புவாள் 


‘கட்டமே காதல்’ = இந்தக் காதல் ரொம்ப கஷ்டம் 


என்று மூர்ச் சிக்கும்; = என்று பெருமூச்சு விடுவாள் 


‘கடல்வண்ணா! = கடல் போன்ற வண்ணம் உடையவனே 


கடியைகாண்’ என்னும் = இந்தக் கடுமையை, கொடுமையை பார் என்று பிதற்றுவாள் 


‘வட்டவாய் நேமி  = வட்டமான சக்கரத்தை 


வலங்கையா!’ என்னும் = வலக் கையில் கொண்டவனே என்று சொல்லும் 


‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; = வந்து விட்டாய் என்று மயங்குவாள் 


சிட்டனே! = சிஷ்டனே 


செழுநீர்த் திருவரங் கத்தாய்! = செழுமையான நீரைக் கொண்ட திருவரங்கத்தில்  உறைபவனே 


இவள்திறத் தென்சிந்தத் தாயே? = இவளைப் பற்றி நீ என்ன நினைத்து வைத்து இருக்கிறாய் உன் மனத்தில் 


சிட்டனே என்பதற்கு சீடர்களுக்கு, பக்தர்களுக்கு அருள் புரிபவனே, நீ இப்படி அருள் புரியாமல் இருக்கலாமா என்று பொருள் சொல்கிறார்கள். 


ஒரு பெண்ணின் காதல் அவஸ்த்தையை எவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறார். 


அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பது, போட்டது போட்டபடி இருப்பது, அவன் பேரைச் சொல்லி மகிழ்வது, செல் போனில் டிங் என்று சத்தம் வந்தால் ஒரு வேளை அவன் கிட்ட இருந்து ஏதாவது செய்தி வந்திருக்குமோ என்று ஆவலோடு பார்ப்பது, ஒரு வேளை நம்மை பிடிக்கவில்லையோ, மறந்து விட்டானோ, நம்மை வேண்டாம் என்று நினைத்து விட்டானோ என்று கவலைப் படுவது....எல்லாம் சொல்கிறார். 


பக்தி என்பது காதலின் அடுத்த படி தான் போலும். 


ஆதலினால் காதல் செய்வீர் என்று பாரதி சொன்னது போல், காதல் செய்வீர். 


சிற்றின்பமே புரியவில்லை என்றால் பேரின்பம் எப்படி புரியப் போகிறது?