Sunday, April 10, 2022

திருக்குறள் - சான்றோருக்கு அணி

 திருக்குறள் - சான்றோருக்கு அணி 


நடுவு நிலைமை, நடுவு நிலைமை என்று சொன்னால் அது என்ன? எப்படி நடுவு நிலையாக இருப்பது என்ற கேள்வி வரும். அதற்கு ஏதாவது வழி காட்டுதல் இருக்கிறதா? 


இவ்வளவு சொன்ன வள்ளுவர் அதைச் சொல்லாமல் விடுவாரா. வள்ளுவர் சொல்லியது ஒரு புறம் என்றால் அதற்கு பரிமேலழகர் அதற்கு செய்யும் விளக்க உரை அதற்கும் மேல்.


"சமமாக இருந்து பொருள்களை அளவிடும் தராசுக் கோல் போல் அமைந்து ஒரு பக்கமும் சாயாமல் இருப்பது சான்றோர்க்கு அழகு"


பாடல் 


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_10.html


(pl click the above link to continue reading)


சமன்செய்து = சமமாக செய்து கொண்டு 


சீர்தூக்கும் = அளவிடும் 


கோல்போல்  = தராசுக் கோல் போல் 


அமைந்தொருபால் = பொருந்தி ஒருபுறமும் 


கோடாமை = சாயாமல், தாழாமல், 


சான்றோர்க் கணி = சான்றோருக்கு அழகு 


இது என்ன பெரிய விஷயமா? தராசுக் கோல் போல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லுவது ஒண்ணும் பெரிதாகத் தெரியவில்லை?


நாம் மேலோட்டமாக பல உயர்ந்த புத்தகங்களை வாசித்து விட்டு, ஹா..இது எனக்குத் தெரியாதா என்று மேலே போய் விடுகிறோம். 


திருக்குறள் போன்ற நூல்களை வாசிக்கும் போது நாம் எதையும் சாதரணாமாக தள்ளி விடக் கூடாது. 


ஏன் என்று பார்ப்போம்.


முதலாவது, எடை போடும் துலாக் கோல் முதலில் நேராக இருக்கும். தராசு கோணலாக இருந்தால் அது எப்படி சரியாக எடை போடும்? எனவே, நடுவு நிலையில் நிற்க வேண்டும் என்றால் முதலில் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். நான் எல்லா அயோக்கியத்தனமும் செய்வேன், ஆனால் மற்றவர்கள் விடயத்தில் நடுவு நிலையில் இருப்பேன் என்றால் அது முடியாது. முதலில் நாம் நேராக இருக்க வேண்டும். 


இரண்டாவது, தராசு யாருக்காக நாம் எடை போடுகிறோம், எதை எடை போடுகிறோம் என்றெல்லாம் தெரியாது. இரண்டு பக்கமும் சரியாக இருக்கிறதா என்பது தான் அதன் நோக்கம். அது தங்கமாக இருந்தாலும் சரி, கத்திரிக்காயாக இருந்தாலும் சரி. அது போல நாமும் யாருக்காக நாம் செய்கிறோம், எதைச் செய்கிறோம் என்பதெல்லாம் அல்ல கேள்வி. நேர்மையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். 


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி



மூன்றாவது, "சீர் தூக்கி " என்றால் என்ன?  


பரிமேலழகர் கூறுகிறார் 

"சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும்"


தொடை விடைகள் என்பது கேள்விகள் கேட்டு அதன் மூலம் அறிவது. பிரச்னை என்று வந்து விட்டால் இரண்டு பக்கமும் கேட்க வேண்டும், அவர்கள் சொல்பவை சரியா என்று குறுக்கு கேள்விகள் கேட்டு சரி பார்க்க வேண்டும். இன்றைய பாணியில் சொல்வது என்றால் "cross examination" 


ஊழான் உள்ளவாறு உரைத்தால், தன்னுடைய முற் பிறவியில் பெற்ற அறிவினால் உணர்ந்து எது சரி எது தவறு என்று அறிந்து உறைதல். 



சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி


இதில் சீர்தூக்கி என்றால் என்ன என்று பார்த்தோம். 


நான்காவது, அது என்ன ஒருபால் கோடா மை ?


"ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க"


என்று உரை செய்கிறார் பரிமேலழகர். 


அதாவது, கேள்விகள், குறுக்கு விசாரணை செய்து, தான் பெற்ற அறிவால் உண்மையை உணர்ந்து பகை, நட்பு, நொதுமல் என்ற மூன்று பகுதியினற்கும் பாகுபாடு இல்லாமல் சரியானதைக் கூறுவது. .


ஐந்தாவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் செய்யும் உரை 




ஒரு பக்கம் துலாக் கோல், மறு புறம் சான்றோர். 


சமன் செய்வதும், சீர் தூக்குவதும் துலாக் கோலின் இலக்கணம். 

அமைதலும், ஒரு பால் கோடாமையும் சான்றோருக்கு இலக்கணம். 


இதை இரண்டையும் எப்படி இணைப்பது. ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே?


"உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி,"



கொஞ்சம் அடர்த்தியான தமிழ். நாம் நெகிழ்துவோம். 


இங்கே துலாக் கோல் உவமை.  சான்றோர் பொருள். 


பரிமேலழகர் சொல்கிறார் உவமைக்குச் சொன்ன சமன் செய்தலும், சீர் தூக்கலும் என்ற குணங்களை அப்படியே தூக்கி சான்றோரில் பொருத்து. 


என்ன ஆகும், சான்றோருக்கு நான்கு குணங்கள் வேண்டும் என்று ஆகி விடும். 


சமன் செய்ய வேண்டும், சீர் தூக்க வேண்டும், அமைய வேண்டும், ஒரு பால் கோடாமை வேண்டும். 


அதே போல் அமைதலும், சீர் தூக்குதலும் என்ற சான்றோரின் குணங்களை தூக்கி அப்படியே துலா கோலுக்கு பொருத்து. என்ன ஆகும் ? துலா கோலுக்கு நான்கு குணங்கள் வந்து விடும். 


எவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக எழுதி இருக்கிறார்கள் என்று. 


குறளில் எதையும் சாதரணமாக, இது தான் எனக்குத் தெரியுமே என்று எண்ணி எளிதில் மேலே சென்று விடக் கூடாது. 


பல உரைகளை படித்துத் தெளிய வேண்டும். 


அத்தனையும் பொக்கிஷம். 



Saturday, April 9, 2022

சிவ ஞான போதம் - தொடங்கிய விதம்

 சிவ ஞான போதம் - தொடங்கிய விதம்


உலகில் தோன்றியது எல்லாம் மறையும். தோற்றம் உண்டு என்றால் முடிவு உண்டு என்பது உறுதி. தோன்றி மறையும் எதுவும் நிரந்தரமானவை அல்ல. நேற்று இல்லாமல் இருந்தது, ,இன்று இருக்கிறது,நாளை மறுபடியும் இல்லாமல் போகும். இப்படி நிரந்தரம் இல்லாதவற்றைப் பற்றி அறிந்து என்ன பலன் என்று அதை விட்டுவிட்டு அழிவு இல்லாத, நிரந்தரமானவற்றை தேடத் தொடங்கினார்கள். 


அழிவு இல்லாத பொருள் எது?


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_9.html


(click the above link to continue reading)


தோற்றம் உண்டு என்றால் அழிவு உண்டு. எனவே, தோன்றாத ஒன்று அழிவு அடையாது. எனவே, தோற்றம் என்று ஒன்று இல்லாமல், எப்போதும் இருப்பவை எவை என்று ஆராய முற்பட்டபோது, மூன்று விடயங்கள் தோற்றம் என்று ஒன்று இல்லாமல் எப்போதும் இருப்பவை என்று கண்டு கொண்டார்கள். 


அவைதான் 


பதி, பசு, பாசம். 


இந்த மூன்றும் எப்போதும் இருப்பவை. தோன்றியவை அல்ல. எனவே அழியப் போவதும் இல்லை. 


இதில் பதி என்பது இறைவன். 


பசு என்பது உயிர்களைக் குறிக்கும். 


பாசம் என்றால் என்ன? பாசம் என்றால் கயிறு. பிணைப்பது. இது சற்று விரிவாக பார்க்க வேண்டிய ஒன்று. 


மூன்றும் நிரந்தரமானவை, தோற்றுவிக்கப்பட்டவை அல்ல என்று பார்த்தோம். 


உயிர்களை இறைவன் தோற்றுவிக்கவில்லை. என்று இறைவன் உண்டோ, அன்றே உயிர்களும் உண்டு. 


"என்று நீ, அன்று நான்" என்பார் தாயுமானவர். 


இந்த உயிர்கள் ஆணவம் என்ற மலத்தில், இருளில், அழுக்கில் அழுந்திக் கிடக்கும். என்ன செய்வது என்று அறியாமல், அசைவு இல்லாமல் கிடக்கும். தாயின் வயிற்றில் உள்ள குழந்தை போல என்பார்கள். குழந்தைக்கு உயிர் இருக்கிறது. உண்கிறது. சீரணிக்கிறது. வளர்கிறது. அசைகிறது. ஆனால், என்ன செய்கிறோம் என்று அறியாமல் இருளில் கிடக்கிறது அல்லவா, அது போல உயிர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஆணவ மலத்தில் சிக்கிக் கிடக்கும்.


இதை ஆன்மாவின் கேவல நிலை என்பார்கள்.  


எப்படி தாய் தன் கருவில் உள்ள குழந்தை மேல் கருணை கொண்டு அதற்கு வேண்டியதைச் செய்வாளோ, அது போல ஆணவ மலத்தில் சிக்கிக் கிடக்கும் உயிர்களுக்கு உதவும் பொருட்டு இறைவன் சிலவற்றைப் படைத்து அந்த உயிர்களுக்கு தருகிறான். 


அவற்றை தனு, கரண, புவன, போகம் என்று சொல்லுவார்கள். 

தனு என்றால் உடம்பு. 


கரணம் என்றால் ஐந்து புலன்கள், மனம், சித்தம், அகங்காரம்  என்ற கருவிகள். 


புவனம் என்றால் பூமி, இடம். உடம்பும், கருவிகளும் இருந்தால் போதுமா? அவை செயல் பட ஒரு இடம் வேண்டும் அல்லவா? எங்கிருந்து செயல்படுவது? அப்படி அவை செயல் படும் இடத்துக்கு புவனம் என்று பெயர். 


நீங்கள் இங்கு பிறக்க வேண்டும், இங்கு வாழ வேண்டும் என்று நிர்ணயம் செய்பவன் இறைவன். 


உடம்பு இருக்கிறது. கருவிகள் இருக்கின்றன. அவை செயல் படும் இடமும் ஆயிற்று. அவை எதோடு செயல்படும்? எதை பெறும் , எதை அனுபவிக்கும்? 


அனுபவிக்கப் படும் பொருள்களுக்கு, அந்த அனுபவத்துக்கு போக்கியம் என்று பெயர். 


தனு - கரண - புவன - போக்கியம். 


இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


இந்த தனு, கரண, புவன போக்கியயங்களை இறைவன் மாயையில் இருந்து உருவாக்குகிறான் என்று சொல்கிறார்கள். 


உயிர்கள் வந்து விட்டன. உடம்பு, கருவி, இடம், அனுபவிக்கும் பொருள் எல்லாம் வந்தாகி விட்டது. 


இதை உயிர்களின் சகல நிலை என்று சொல்லுவார்கள். 


இப்போது உயிர்கள் செயல்படத் தொடங்குகிறன. 


அனுபவம் வரத் தொடங்குகிறது. இன்பம், துன்பம் தெரிகிறது. நல்லது, கெட்டது தெரிகிறது. 


இந்த செயல்பாட்டை கர்மம் அல்லது கன்மம் என்று சொல்லுவார்கள். 


உயிர்கள் - ஆணவம் - மாயையில் இருந்து தோன்றிய கன்மம். 


இதுவரை பார்த்து விட்டோம். 


அனுபவங்கள் காரணமாக உயிர்கள் நல்லன, தீயனவற்றை செய்யத் தொடங்குகின்றன. அவற்றின் வினைகளுக்கு ஏற்ப இறைவன் அவைகளுக்கு அடுத்தடுத்து பிறவிகளைத் தருகிறான். 


ஆணவம் - மூல மலம். 


கன்மம் - உயிர்கள் செய்வது.


மாயை - தனு கரண புவன போகங்கள் உண்டாகி உயிர்களை செயல் பட வைப்பது. 


இந்த ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் சேர்த்து பாசம் என்று சொல்லுவார்கள். 


இந்த மூன்றும் உயிர்களைப் பிணிக்கும் கயிறு போன்றவை. 


பதி - இறைவன் 


பசு - உயிர்கள் 


பாசம் - ஆணவம்,கன்மம், மாயை என்ற மூன்றும். 


உயிர்கள் அனுபவத்தால் நல்லது கெட்டதை அறிந்து, இறைவனை நோக்கிப் பயணப்படும். 


கன்மம், மாயை என்ற மலங்களினால் உயிர்கள் ஆணவம் என்ற மலத்தை தாண்டி இறைவனை அடையும். 


விரலில் மோதிரம் மாட்டிக் கொண்டு கழட்ட முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? அந்த மோதிரம் இருக்கும் இடத்துக்கு சற்று முன்னால் ஒரு நூலை இறுக்கிச் சுற்ற வேண்டும். விரலின் பருமன் சற்று சுருங்கும். மோதிரத்தை மெல்ல மெல்ல நகர்த்தி கழட்டி விடலாம். அப்புறம் அந்த நூலையும் தளர்த்தி, தூக்கிக் போட்டு விடலாம். 


கன்மம், மாயை என்ற நூலைச் சுற்றி, ஆணவம் என்ற மோதிரத்தை கழட்டிய பின் நூலை தூக்கி எறிவது போல கன்மத்தையும், மாயையையும் தூர எறிந்து  விடலாம். 


இதைதான் மல பரிபாகம் என்பார்கள். அதை பின்னால் பார்ப்போம். 


பதி - இறைவன் என்றும் உள்ளவன். 


பசு - உயிர்கள் என்றும் உள்ளவை. 


பாசம் - ஆணவம், கன்மம், மாயை - என்றும் உள்ளவை. 


இதுதான் அடிப்படை சிந்தாந்தம். 


இந்த உலகம் எப்படி வந்தது? நாம் எப்படி வந்தோம்? என்ன செய்கிறோம்? எப்படிச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? வாழ்வின் நோக்கம் என்ன என்று ஆழமாக விளக்கும் சித்தாந்தம்.


இது அடிப்படை சிந்தாந்தம். இதுவே இப்படி இருக்கிறது என்றால் மேலே போகப் போக எவ்வளவு இருக்கும். 


நூலோடு சேர்த்து அவற்றையும் அறிந்து கொள்வோம். 


அதை விட என்ன வேலை?





Friday, April 8, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவாக வையாது

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவாக வையாது 


நாம் ஏன் தவறு செய்கிறோம்?


செல்வம் இல்லை என்றா? வருமானம் இல்லை என்றா? 


நமக்கு வருமானம் குறைவாக இருந்தால் பிரச்னை இல்லை. நமக்கு சொத்து குறைவாக இருந்தால் பிரச்னை இல்லை. பிரச்னை எங்கு என்றால், மற்றவனை விட நமக்கு வருமானம், சொத்து குறைவாக இருப்பதுதான். 


நாலு பேருக்கு முன்னால் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டாமா?


அவனைப் பார், எவ்வளவு விலை மதிப்பு மிக்க காரில் போகிறான். நானும் தான் இருக்கிறேனே. அவன் வீட்டைப் பார், அவள் நகையைப் பார் என்று மற்றவர்கள் கண்ணில் நாம் தாழ்ந்து போய் விடக் கூடாது என்று நினைக்கிறோம். 


நாம் இப்படி இருந்தால் மற்றவர்கள் நம்மை என்ன நினைப்பார்கள்? திறமை இல்லாதவன், அறிவு இல்லாதவன், சாமர்த்தியம் இல்லாதவன் என்று நினைப்பார்களே என்று நாம் கவலைப் பட்டு அல்லாத வழிகளில் பணம் சேர்க்க முற்படுகிறோம். 


அவமானங்களை சகிக்கிறோம். நடுவு நிலை பிறண்டு எப்படியாவது நாலு காசு சேர்த்து இந்த உலகத்தின் முன்னால் நாமும் ஒரு பெரிய ஆள் என்று காண்பிக்க நினக்கிறோம். 


அது சரியா ?


"அற வழியில் நின்றதால் நீ வறுமையில் இருக்கிறாயா? கவலைப் படாதே, அது ஒரு குறை என்று சான்றோர் நினைக்க மாட்டார்கள்"


என்கிறார் வள்ளுவர். .


பாடல் 


கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_8.html


(Pl click the above link to continue reading)


கெடுவாக வையாது = கெடுதலாக வைத்து எண்ணாது 


உலகம் = உலகம் 


 நடுவாக = நடு நிலைமையோடு 


நன்றிக்கண் = அறவழியில் 


தங்கியான் தாழ்வு = செல்பவனது தாழ்ந்த வாழ்வை 


இங்கே உலகம் என்பது நல்லோர், ஆன்றோர், சான்றோர் என்று பொருள். உலகம் என்றாலே அது நல்லவர்களைத் தான் குறிக்கும். அயோக்கியர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டுமா?  


கெடு என்பது கெடுதல் என்ற பொருளில் வந்தது. அதாவது செல்வம் இல்லாமல் வாடுதலைக் குறித்து நின்றது. 


இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. 


முதலாவது, நாம் யாருடைய சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது.  நம் வறுமையை பார்த்து ஏளனம் செய்பவர்களின் எண்ணத்துக்குநாம் மதிப்பு அளிக்கவே கூடாது. 


இரண்டாவது, நாம் ஒருவன் ஏழ்மையில் இருக்கிறான், வசதி குறைவாக இருக்கிறான் என்றால் அவனை குறைத்து நினைக்கக் கூடாது. அவன் நேர் வழியில் செல்கிறானா? நியாயமாக நடக்கிறானா? அதை பாராட்ட வேண்டும். அப்படி செய்தால் நேர்மையாக இருப்பவனுக்கு ஒரு உத்வேகம் பிறக்கும். நாம் செய்வது சரிதான் அன்று உறுதி பிறக்கும். மேலும் பலர் அந்தப் பாதையில் செல்லத் தலைப் படுவார்கள். தவாறன வழியில் செல்பவன் கூட, "என்ன பணம் சேர்த்து என்ன பயன், ஒரு பயல் சீண்ட மாட்டேன் என்கிறான் " என்று அலுத்து நல்ல வழியில் செல்ல நினைப்பான். 


ஆனால், இங்கே என்ன நடக்கிறது? நேர்வழியில் சென்று வறுமை உற்றவனை உலகம் கேலி பேசுகிறது. பாவம், ஒண்ணும் தெரியாதவன், பிழைக்கத் தெரியாதவன் என்று அவனை உதாசீனப் படுத்துகிறது. நல்ல வழியில் செல்பவன் கூட, இது சரிப்படாது, நாமும் களத்தில் இறங்கிற வேண்டியது தான் என்று தவறான வழியில் செல்ல முயல்வான்.


காரணம் யார்? நாம் தான். பின் அவன் இலஞ்சம் வாங்குகிறான் என்று குறை சொல்லி என்ன பயன்? 


நாம் முதலில் நல்லவர்களாக இருப்போம். 


மூன்றாவது, கெட்டவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை திருத்துவது நம் வேலை இல்லை. நாம் அவர்கள் சகவாசத்தை விட்டு விட வேண்டும். அவன் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பான். "வம்பு செய் தீங்கினர் தம் கண்ணில் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி". நல்லவர்களோடு இருந்தால், "கவலைப் படாதே. நீ நல்லவன். சரியான பாதையில் போகிறாய். இப்படியே போ" என்று நம்மை உற்சாகப் படுத்துவார்கள். நம்மை நேர் வழியில் செல்ல ஊக்குவிப்பார்கள். 



நான்காவது, வறுமை, வசதிக் குறைவுக்கு பயப்படக் கூடாது. அதுக்கு பயந்தால், ,பின் நெறி அல்லா நெறியில் போக வேண்டி வரும். உள்ளதும் போய், மிகப் பெரிய வறுமை வந்து விடும். நேரான வழியில் செல்வதை நினைத்து பெருமை பட வேண்டும்.  வறுமை குறை அல்ல. அறம் பிறழ்ந்து வாழ்வது பிழை. 


முடிவாக, நேர்மையாக நடந்து, வாழ்வில் மற்றவர்களை விட செல்வதில், வருமானத்தில் தாழுந்து இருந்தாலும், அது ஒரு தாழ்வே இல்லை.


மற்றவர்களின் (கெட்டவர்களின்) மதிப்பைப் பெற தீய வழியில் செல்ல வேண்டுமா?


பூஜை அறையில் வள்ளுவர் படத்தை வைக்க வேண்டும். அந்தப் படத்தை பார்க்கும் போதெல்லாம் நல்ல விடயங்கள் ஞாபகம் வந்து கொண்டே இருக்க வேண்டும்.




Thursday, April 7, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவல் யான்

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவல் யான் 


உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை இருக்கிறதா?


அதெல்லாம் இல்லை. என்ன ஒரு பழம் பஞ்சாங்கம் என்று நீங்கள் சொல்லலாம். 


வானம் இருண்டு இருக்கிறது. மேகம் நன்றாக சூழுந்து இருக்கிறது. மழை வரும் என்று நம்புகிறீர்கள் அல்லவா? மேகம் சூழ்ந்தால் மழை வரும் என்பதற்கு ஒரு சகுனம். .


வங்கக் கடலில் புயல் மையம் கொண்டு இருக்கிறது. கடலோர இடங்களில் மழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. அதுவும் சகுனம் தான். 


ஒருவனுக்கு கெட்ட காலம் வரப் போகிறது என்பதற்கு என்ன சகுனம் தெரியுமா? 


வள்ளுவர் சொல்கிறார் எப்போது நடுவு நிலை மாறி ஒருவன் நடக்க நினைக்கிறானோ  அது அவனுக்கு கெட்ட காலம் வரப் போகிறது என்பதற்கு முன் வந்து சொல்லிய சகுனம் என்கிறார். 


பாடல் 


கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_48.html


(தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைய தளத்தை கிளிக் செய்யவும்)


கெடுவல்யான் = யான் கெடுவேன் அல்லது நான் கெடுவேன் 


என்பது அறிக  = என்று அறிந்து கொள்க 


தன் நெஞ்சம் = எப்போது என்றால், ஒருவனது மனம் 


நடுஒரீஇ = நடுவு நிற்றல் 


அல்ல செயின் = அல்லாதவற்றை செய்ய நினைத்தால் 


இதில் பரிமேலழகர் செய்திருக்கும் நுட்பம் அற்புதமானது. .


குறளில் "செயின்" என்று தான் இருக்கிறது. ஆனால் அவர் உரையில் "செய்ய நினைத்தால்" என்று உரை செய்கிறார். அது எப்படி செய்வதும், செய்ய நினைப்பதும் ஒன்றாகும் என்று கேட்டால் 


"நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்"


நினைப்பதும் ஒரு செயல்தான் என்கிறார். 


தவறு செய்ய நினைத்தாலே போதும், கெட்ட காலம் வரப் போகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இரண்டு தும்மல் வருகிறது, மூக்கில் நீர் வடிகிறது, தொண்டை கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது என்றால் காய்ச்சல் வரப் போகிறது என்று தெரிகிறது அல்லவா? அப்போது என்ன செய்வோம்? இரண்டு மாத்திரையை போட்டுக் கொள்வோம், சூடாக இரசம் வைத்து சாப்பிடுவோம். காய்ச்சல் வருவதற்கு முன்பே அதன் அறிகுறிகளை வைத்து அந்தக் காய்ச்சல் வராமல் தடுத்து விடுகிறோம் அல்லவா? அது போல,


கெட்ட எண்ணம் வந்த வுடனேயே, இது நல்லது அல்ல என்று உணர்ந்து உடனடியாக அதை மனதில் இருந்துதூக்கி எரிந்து விட வேண்டும். 


கெட்ட எண்ணம் வந்த பின், அதை எப்படி சாமர்த்தியமாக செய்யலாம் என்று கணக்குப் போடக் கூடாது.


உடனடியாக அதை மனதில் இருந்து எடுத்து தூர எரிந்து விட வேண்டும். 


இப்படி யார் சொல்லித் தருவார்கள் ?


திருக்குறள் ஒன்று போதும் மிக மிக இன்பமாக வாழ, நேர்மையாக வாழ, பொருள் ஈட்ட, திறமையாக வேலை செய்ய, கணவன் மனைவி அன்போடு இல்லறம் நடத்த, பிள்ளைகள், உறவுகள் என்று ஒன்றாக வாழ.


இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? 


(நிறைய குறள்கள் பாக்கி இருப்பதால் ஏறக் குறைய தினம் ஒன்று எழுதிக் கொண்டு இருக்கிறேன்.  எனக்கே புரிகிறது இது கொஞ்சம் சலிப்பூட்டும் வேலை என்று. ரொம்பவும் அலுப்பாக இருந்தால், கொஞ்சம் விடுப்பு எடுத்துக் கொண்டு பின் படியுங்கள்) 




சிவஞான போதம் - சித்தாந்தம்

 சிவஞான போதம்   - சித்தாந்தம் 


நாம் எவ்வளவோ படிக்கிறோம். ஆத்ம விசாரம், ஒரு தேடல் நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. .


இந்த வாழ்கையின் அர்த்தம் என்ன, இந்த பிறப்பின் நோக்கம் என்ன, இறப்புக்குப் பின் என்ன நிகழும், கடவுள் உண்டா, இல்லையா, மறு பிறப்பு உண்டா, இல்லையா , இந்த உலகம் எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது, யார் தோற்றுவித்தார்கள் என்று பலப் பல கேள்விகள் நம்முள் எழும்.


பாவம், புண்ணியம் என்பதெல்லாம் உண்மையா? 


இதற்கெல்லாம் எங்கே சென்று விடை காண்பது? இதுவரை இந்தக் கேள்விகளுக்கு யாராவது விடை காண முயன்று இருக்கிறார்களா? அல்லது இனிமேல் தான் முயற்சி தொடங்க வேண்டுமா?


ஏதேதோ தத்துவங்கள் சொல்கிறார்கள். அவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போலத் தோன்றுகிறது. எதைப் படிப்பது, எதை நம்புவது, ,எது சரி, எது தவறு என்று நாம் குழம்புகிறோம்.


இந்த அறிவுத் தேடலுக்கு ஒரு முடிவு இருக்கிறதா? அல்லது தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதானா?


நமக்கு முன் இந்த கேள்விகள் மட்டும் அல்ல, ,இவற்றைவிட ஆழமான கேள்விகளை கேட்டு அவற்றிற்கு விடையும் கண்டு இருக்கிறார்கள். இனி அதில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு முழுமையாக அறிந்து சொல்லி இருக்கிறார்கள். 


அதுதான் சிந்தாந்தம் என்பது. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_7.html


(click the above link to continue reading)



சித்தத்தின் அந்தம். அல்லது முடிவு. 


அறிவின் எல்லையை தொட்டு, இது தான் உண்மை என்று அறிந்து சொல்லி இருக்கிறார்கள். 


சைவ சித்தாந்தத்தின் விளக்கம் தான் விளக்கம் தான் சிவ ஞான போதம். போதம் என்றால் அறிவு. 


அது என்ன சைவ சித்தாந்தம்?


இயற்பியல் (physics) படிக்கப் போனால் electron, neutron, proton என்ற அடிப்படை அணுத் துகள்களைக் கொண்டு இந்த உலகை விளக்கம் செய்வார்கள். 


காரணம் என்ன? 


இந்த அணுத் துகள்கள் மாறி மாறி வருவதுதான் உலகம். உலகில் உள்ள மற்ற பொருள்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் அணுத் துகள்கள் மாறாது. 


நிலையில்லா இந்த உலகில் நிரந்தரமானது எது என்று சிந்தித்தார்கள். அதைப் பிடித்து விட்டால் இந்த உலகம் பிடிபட்டு விடும். 


அப்படி தேடி தேடி கடைசியில் மூன்று விடயங்கள் நிரந்தரமானவை என்று கண்டு கொண்டார்கள். அதுதான் அடிப்படைத் தத்துவம். அதைப்  புரிந்து கொண்டால், இந்த உலகைப் புரிந்து கொள்ள முடியும். 


அது என்ன மூன்று?


பதி, பசு, பாசம் 


என்ற மூன்று. இந்த மூன்றுதான் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை. 


இதைப் புரிந்து கொண்டால், மற்றது எளிது. 


இது பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம். 


Wednesday, April 6, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - நிற்பார் நிற்க

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - நிற்பார் நிற்க 


நமக்கு ஒரு ஊருக்குப் போக வேண்டும். 


வண்டி ஒரு குறித்த சமயத்தில் கிளம்பி விடும். காலாகாலத்தில் வீட்டை விட்டு கிளம்பினால் தான் வண்டியை பிடிக்க முடியும். ஊர் போய் சேர முடியும். 


இன்னும் நேரம் இருக்கு, இன்னும் நேரம் இருக்கு என்று காலம் தாழ்த்திக் கொண்டே போனால், வண்டியைக் கோட்டை விட்டு விடுவோம் அல்லவா?


சரி, வண்டியைப் பிடிச்சாச்சு. போற வழியில், ஒரு டீ குடித்துவிட்டுப் போகலாம் என்று வண்டியை நிறுத்துகிறோம். கொஞ்ச நேரம் போகிறது. 


இன்னும் கொஞ்ச தூரம் போன பின், போற வழிக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டு போனால் என்ன. படிசுகிட்டே போகலாமே என்று ஒரு புத்தகக் கடையில் வண்டியை நிறுத்துகிறோம். 


அப்புறம்,  துணி வாங்க.  shoe பாலிஷ் போட என்று அங்கங்கே நிறுத்தி போனால் என்ன ஆகும்? வண்டி போய் விடும் அல்லவா?


போனால் என்ன? அடுத்தவண்டியில் போனா போச்சு என்று நினைக்கலாம். 


ஒரு வேளை வேற வண்டியே இல்லாவிட்டால்? இப்போது உக்ரைன் நாட்டில் சண்டை நடக்கிறது. மக்கள் அந்த நாட்டை விட்டு அருகில் உள்ள பல நாடுகளில் தஞ்சம் புகுகிறார்கள். அப்படி நாட்டை விட்டு போகிறவர்களை கூட்டிக் கொண்டு போக வண்டி இருக்கிறது. ஒரு வண்டியை விட்டால் அடுத்து எப்போது வண்டி வரும் என்று தெரியாது. அதற்குள் வேறு என்னவெல்லாம் நடக்கும் என்றும் தெரியாது. 


நம் பிறவியும் அப்படித்தான். வீடு பேறு என்ற இடத்துக்குப் போக வேண்டும். 


அதற்கு வழி பார்க்காமல், பராக்கு பார்த்துக் கொண்டு இருக்கிறோம். கல்யாணம், பிள்ளை, கணவன்/மனைவி, சொத்து, உறவு, சினிமா, whatsaap என்று பொழுதை போக்கிக் கொண்டு இருக்கிறோம். 


வண்டி போய் விடும். உயிர் ஒரு நாள் போய் விடும். உடம்பில் வலு போய்விடும். அப்புறம் எழுந்தால் உட்கார முடியாது. உட்கார்ந்தால் எழ முடியாது நேத்து படித்தது இன்று மறந்து விடும். 


ஒரு அவசரம் வேண்டாமா?


அவங்கள்ளெல்லாம் போகலையே, அவங்களும் அதே ஊருக்குதான போகணும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் இருக்க வேண்டியது தான். 


பாடல் 


நிற்பார் நிற்கநில் லாஉலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே

பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே

நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்

பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெம்மானே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_63.html


(pl click the above link to continue reading)



நிற்பார் நிற்க = யாத்திரைக்கு புறப்படமால், நிற்பவர்கள் நிற்கட்டும் 


நில் லா உலகில் = நிலை இல்லா இந்த உலகில் 



நில்லோம் = நான் நிற்க மாட்டோம் 


இனி நாம் செல்வோமே = இனிமேலாவது செல்லத் தலைப் படுவோம் 



பொற்பால்= அழகால் 


ஒப்பாந் திருமேனிப் = தனக்குத் தானே ஒப்புமை உடைய மேனியை உடைய 


புயங்கன் = பாம்பை அணிந்த கைகளை உடையவன் 


ஆள்வான் பொன்னடிக்கே = நம்மை ஆள்பவன் திருவடிகளுக்கே 


நிற்பீர் = வரிசையில் நிற்பீர் 


எல்லாந் தாழாதே = காலம் தாழ்த்தாமல் 


நிற்கும் பரிசே = நீங்கள் நினைத்து நின்ற பரிசே 


 ஒருப்படுமின் = ஒன்றாக வாருங்கள் 


பிற்பால் = அப்புறம் 


நின்று = வராமல் நின்று 


பேழ்கணித்தால் =  வருந்தினால் 


பெறுதற் கரியன் பெம்மானே. = பெறுவதற்கு அரியவன் அவன் 



சும்மா, காலத்தை விரயம் பண்ணிக் கொண்டு இருக்காதீர்கள் . உடனே புறப்படுங்கள் என்கிறார் மணிவாசகர். 



திருக்குறள் - கேடும் பெருக்கமும்

திருக்குறள் - கேடும் பெருக்கமும் 


மிக மிக பிரமிப்பூட்டும் குறள்களில் இதுவும் ஒன்று. 


ஒரு மனிதனால் எப்படி இந்த அளவு சிந்திக்க முடியும் என்று வியப்பாக இருக்கிறது. சிந்திப்பது மட்டும் அல்ல, அதை ஒண்ணே முக்கால் அடியில் எப்படி சொல்லவும் முடிகிறது. 


அவர் சொல்வதை நாம் நம்பலாம், அல்லது நம்பாமல் இருக்கலாம். ஆனால், அந்த சிந்தனையின் ஆழம் நம்மை எங்கோ கொண்டு செல்லும். 


மேலும் காலம் தாழ்த்தாமல், குறளுக்கு செல்வோம். .


பாடல் 


கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_6.html


(Pl click the above link to continue reading)


கேடும் = கெடுதலும் 


பெருக்கமும் = நன்மையும், செல்வமும் 


இல்லல்ல = இல்லாதவை அல்ல 


நெஞ்சத்துக் = மனதில் 


கோடாமை = நடுவு நிலைமை தவறாமல் இருத்தல் 


சான்றோர்க்கு அணி = சான்றோருக்கு சிறந்த அணிகலன் 


மேலோட்டமாக பொருள் சொல்வது என்றால் 


"வாழ்க்கைனா நல்லது கெட்டது நாலும் இருக்கத்தான் செய்யும். நடுவு நிலைமை தவறாமல் இருப்பது பெரியவர்களுக்கு அழகு"


இதுல என்ன பெரிய பிரமாண்டம் இருக்கிறது?  நாம கூட இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கலாமே. இதுக்கு எதுக்கு ஒரு வள்ளுவர்?


விரித்து பொருள் காண்போம்.


ஒருவன் ஏன் அறம் தவறி நடக்கிறான்?


ஏதோ வறுமை, அல்லது கொஞ்சம் அதிகம் ஆசைப் பட்டு விட்டான். பிள்ளையை பெரிய படிப்பு படிக்க வைக்க நினைப்பது தவறா? பெண்ணை ஒரு பெரிய நல்ல இடத்தில் கட்டி கொடுக்க நினைப்பது தவறா? உடம்பு சரி இல்லாத பெற்றோரை ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்க நினைப்பது தவறா? ஆசைப் பட்ட பெண்டாடிக்கு நாலு நகை நட்டு வாங்கித் தர நினைத்தது தவறா?


அதற்காக கொஞ்சம் அப்படி இப்படி இருந்து நாலு காசு பார்த்தால் என்ன ஆகி விடப் போகிறது என்று நினைத்து தானே பலர் தவறு செய்கிறார்கள்?


அதாவது நடுவு நிலை தவறி நடந்தால் இப்போது உள்ளை துன்பத்தை நீக்கி விட முடியும் என்று நினைக்கிறார்கள். சந்தோஷமாக வாழ முடியும் என்று நினைக்கிறார்கள். 


பரிமேலழகர் உரை செய்கிறார் 


"தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன"


நமக்கு வரும் கேடும், பெருக்கமும் நாம் முன் செய்த நல் மற்றும் தீவினையால் வந்தவை. அது இப்போது வந்தது என்று நினைக்கக் கூடாது. முன் செய்த வினை இப்போது வந்து நிற்கிறது. 


ஒரு நல்லவன் துன்பப் படுகிறான் என்றால் சான்றோர் என்ன நினைப்பார்கள் என்றால், அவன் மடையன், அவன் அறிவு இல்லாதவன், அவன் பிழைக்கத் தெரியாதவன் என்று நினைக்க மாட்டார்கள். .ஏதோ அவன் முன் செய்த வினை அவனை வாட்டுகிறது என்று நினைப்பார்களாம. 


அதேபோல் கெட்டவன் சந்தோஷமாக இருந்தால் ஏதோ அது அவன் சாமர்த்தியம் என்று நினைக்க மாட்டார்கள். அவன் முன் செய்த நல் வினை என்று நினைப்பார்களாம்.


எனவே, ஒருவன் தன் சாமர்த்தியத்தால், அறிவால், திறமையால், ஊக்கத்தால் தான் பெரிய ஆள் ஆகி விட்டோம் என்று நினைக்கக் கூடாது. அதே போல வறுமை வந்தாலும், ஏதாவது தவறானவற்றைச் செய்து வறுமையை போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. என்ன செய்தாலும் செய்த வினை விடாது. 


பரிமேலழகர் மேலும் சொல்கிறார் 


"அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக்"


அதாவது அந்த இன்பமும், துன்பமும் ஏதோ இப்போதுதான் வருகிறது என்று நினைத்துக் கொண்டு 



" கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். "


நமக்கு வரும் கேடும். பெருக்கமும் நாம் செய்த முன்வினைப் பயனால் வந்தது என்று உறுதியாக நம்ப வேண்டும். (ஒருதலைக் கண் என்றால் உறுதியாக என்று அர்த்தம்) 




"அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்."


நாம் தவறான வழியில் பொருள் சேர்த்தாலும் நாம் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று இருந்தால் அனுபவித்தே தீருவோம்.


என் வறுமையை போக்குகிறேன் என்று தவறு செய்தால், அந்த வினையும் சேர்ந்து கொள்ளும். 


இலாபமோ, நட்ட்டமோ, இன்பமோ, துன்பமோ என்ன ஆனாலும் தவறு செய்வதில்லை என்று உறுதியாக இருக்க வேண்டும். 


நம் சாமர்த்தியத்தால் எதுவும் நடந்து விடாது என்று அறிய வேண்டும். 


எவ்வளவோ பெரிய புத்திசாலிகளை காலம் புறம் தள்ளி இருக்கிறது. ஒன்றும் படிக்காதவனை தலையில் வைத்து கொண்டாடி இருக்கிறது. 


பெரிய பணக்காரன் எல்லாம் இழந்து ஏழ்மையில் இறந்து இருக்கிறார்கள். 


ஒன்றும் இல்லாதவன் தொட்டதெல்லாம் தங்கமாகி பெரும் பணக்கார்களாக ஆகி இருக்கிறார்கள். 


வரும் போது வரும். போகும் போது போகும். 


அதற்காக நாம் தவறான வழியில் செல்லக் கூடாது என்கிறது குறள். 


நாம் நமக்கு வரும் துன்பத்தை சகித்து இருந்து விடுவோம். பிள்ளையை ஒரு சாதரண கல்லூரியில் சேர்த்து விடலாம். பிரச்னை ஒன்றும் இல்லை. 


ஆனால், இந்த உறவுக் காரர்கள் கேலி செய்வார்களே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏளனமாக பார்ப்பார்களே என்று நினைத்து அவர்கள் மத்தியில் நல்ல பேர் எடுக்க எப்படியோ காசு சம்பாதித்து பெரிய கல்லூரிக்கு அனுப்பி, பெரிய இடத்தில் சம்பந்தம் பண்ணி ஏதேதோ செய்கிறோம். 


வள்ளுவர் சொல்கிறார், இந்த அக்கம் பக்கம், உறவு, whatsapp நண்பர்கள் இவங்க என்ன நினைபாங்க என்று கவலைப் படாதே. 


சான்றோர், அதாவது படித்தவர்கள், நல்லவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசி என்கிறார். 


உன் வறுமையை துன்பத்தை கண்டு அவர்கள் உன்னை இகழ மாட்டார்கள். மாறாக, இந்த வறுமையிலும், துன்பத்திலும் தவறான வழியில் செல்லாமல் நேர்மையாக வாழ்கிறானே என்று உன்னைப் போற்றுவார்கள் என்கிறார். 


"சான்றோருக்கு அணி". 


அவங்களுக்கு அது தான் சிறப்பு. 


நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். யாருடைய எண்ணம் நமக்கு முக்கியம் என்று. 


எவ்வளவு ஆழமான குறள்!