Friday, May 20, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 2

 

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை கீழ் காணும் வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html)


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். 


மேலே தொடர்வோம் 


"உலக நாயகனான இராமனின் தூதுவன் நான் என்று சீதையை தொழுது நின்றான் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். 


சீதைக்கு மனதில் ஆயிரம் கேள்வி எழும் அல்லவா? இது உண்மையா, அல்லது அரக்கர்கள் செய்யும் மாயமா என்று குழப்பம் வருவது இயல்பு.  அவள் குழப்பத்தை தீர்த்து நம்பிக்கை வரும் படி பேச வேண்டும். 


இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி யோசியுங்கள். 


நீங்கள் அனுமன் இடத்தில் இருந்தால் என்ன சொல்லுவீர்கள் என்று. 


என் பெயர் அனுமன். இராமன் என்னை அனுப்பினான். இனி நீங்கள் இருக்கும் இடம் தெரிந்து விட்டதால், இதைப் போய் இராமனிடம் சொல்வேன். இராமனிடம் வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா ?" என்று நாம் கேட்போம். 


அனுமன் சொல்கிறான் 


"இராமன் ஆணையால் நான் இங்கு வந்து சேர்ந்தேன். இந்த உலகம் முழுவதையும் தேடி, அலசி ஆராய்ந்து உங்களை கண்டு பிடிக்கும் நோக்கத்தோடு சென்றவர்கள் பலர். நான் ஒருவன் மட்டும் அல்ல.  என் தவப் பயனால், உங்கள் திருவடியை தரிசிக்கும் பேறு பெற்றேன்"


என்றான். 


பாடல் 


அடைந்தனென் அடியனேன்; இராமன் ஆணையால்

குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்

மிடைந்தவர் உலப்பிலர்; தவத்தை மேவலால்

மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


(pl click the above link to continue reading)


அடைந்தனென்  = இங்கு வந்து சேர்ந்தேன் 


அடியனேன் = அடியவனாகிய நான் 


இராமன் ஆணையால் = இராம பிரானின் ஆணையால் 


குடைந்து = தோண்டி துருவி 


உலகு அனைத்தையும் = இந்த உலகம் முழுவதும் 


நாடும் = உங்களை நாடி கண்டு பிடிக்க வேண்டும் என்ற வேட்கையால் 


கொட்பினால் = முடிவினால் 


மிடைந்தவர் = சென்றவர்கள், புறப்பட்டவர்கள் 


உலப்பிலர் = கணக்கில் அடங்காதவர்கள் 


தவத்தை மேவலால் = தவப் பயனால் 


மடந்தை!  = பெருமாட்டியே 


நின் சேவடி வந்து நோக்கினேன். = உங்கள் திருவடிகளை வந்து காணும் பேறு பெற்றேன் 


எவ்வளவு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகள். 


முதலில், தன்னை அடியவன் என்று கூறி பணிவு  காட்டுகிறான். அடக்கம் ஒருவனின் பெருமையை காட்டும். 


இரண்டாவது, இராமன் ஆணையால் என்று கூறிய போது இரண்டு விடயங்களை உணரச் செய்கிறான். முதலாவது, இராமன் தான் அனுப்பினான் என்ற செய்தி. இரண்டாவது, "ஆணையால்" என்றதால் அவன் அதிகாரம், வலிமை உள்ளவனாக இருக்கிறான் என்று தெரிகிறது. அது மட்டும் அல்ல, இராமன் தன் மேல் அன்பு கொண்டு, தேடி கண்டு வர ஆட்களை அனுப்பி இருக்கிறான் என்றும் அவள் உணர்ந்து கொள்கிறாள். 


மூன்றாவது, மிக முக்கியமான செய்தி. ஏதோ ஒரு ஆளை அனுப்பினான், அவன் நேரே இங்கு வந்துவிட்டான் என்றால் நம்ப முடியாது. ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சீதை ஐயம் கொள்ளலாம். எனவே, இந்த உலகம் பூராவும் உங்களை தேடி கண்டு பிடிக்க கணக்கில் அடங்காத ஆட்களை இராமன் அனுப்பி இருக்கிறான் என்று சொல்வதின் மூலம் அந்த சந்தேகத்தை தீர்க்கிறான். 


அது மட்டும் அல்ல, எனக்காக என் கணவன் எவ்வளவு பாடு படுகிறான் என்ற எண்ணம் ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமான ஒன்று. என் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் உலகம் பூராவும் என்னை தேட ஆள் அனுப்பி இருப்பான் என்ற பெருமிதம் ஒரு பெண்ணுக்குத் தான் புரியும். 


நான்காவது, அது என்ன உலகம் பூராவும் ஆட்கள் அனுப்பினார் என்கிறாய். நீ மட்டும் எப்படி இங்கே வந்தாய் என்ற கேள்வி வரும் அல்லவா? அதற்கு விடை அளிக்கிறான். "நான் செய்த தவப் பயன்" என்று. இது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சுகமான் ஒன்று? தன்னை காண்பது தவப் பயன் என்று சொல்கிறானே என்று சீதை ஒரு கணம் பெருமிதமும் அமைதியும் அடைந்திருப்பாள். காரணம், இதுவரை இராவணன் வந்து மிரட்டி விட்டு போனதைத்தான்  அவள் கேட்டு இருக்கிறாள். தன் மேல் இவ்வளவு மரியாதையாக, தன்னிடம் இவ்வளவு பணிவாக ஒருவன் பேசுவதை நீண்ட நாட்களுக்குப் பின் அன்று தான் கேட்டிருப்பாள்.


எந்தப் பெண்ணும், தான் போற்றப் படுவதை, மதிக்கப் படுவதை விரும்பாமல் இருக்க மாட்டாள். "இந்த சேலையில் நீ ரொம்ப அழாக இருக்க" என்று மனைவியிடம் சொல்லிப் பாருங்கள். மகிழ்ச்சியான ஒரு புன்னகை அவள் முகத்தில் மலர்வதைக் காண்பீர்கள். அவளுக்கு எத்தனை வயது என்று கணக்கு இல்லை. எந்த வயதிலும் தான் போற்றப் படுவதும், மதிக்கப் படுவதும் ஒரு பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரக் கூடியது. 


அவளுக்கு தன் மனதில் உள்ள சந்தேகங்கள் போக வேண்டும். 


தன்னபிக்கை பிறக்க வேண்டும். 


ஒரு மகிழ்ச்சியும் மன நிறைவும் வர வேண்டும். 


இவை அத்தனனயும் இந்தப் பாடல் அவளுக்கு தருமா இல்லையா? 






Thursday, May 19, 2022

திருக்குறள் - அதுவே துணை

திருக்குறள் - அதுவே துணை 


ஒழுக்கம் விழுப்பம் தரும் என்றார் முதல் குறளில். 


சரி, நமக்கு பெருமை தருவதுதானே, ஒழுக்கமாக இருந்துவிட்டுப் போவோம் என்றால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று வள்ளுவர் சொல்கிறார். 


மிக மிக கடினமான ஒன்று என்கிறார். ஒழுக்கத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப் பட வேண்டி இருக்கும். அது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல என்று எச்சரிக்கிறார். 


அப்படியா, அப்படினா, அதை விட்டு விட்டு வேறு ஏதாவது வழி இருக்கிறாதா ? பெருமை, சிறப்பு இதெல்லாம் அடைய? இருந்தால் பேசாமல் அதை  கடை பிடிப்போமே என்று என்று நினைக்கலாம். 


வள்ளுவர், எல்லாம் ஆராய்ந்து பாத்தாச்சு, வேற ஒரு வழியும் இல்லை. ஒழுக்கம் ஒன்றே வழி என்கிறார். 


பாடல் 


 பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_19.html


(pl click the above link to continue reading)



பரிந்தோம்பிக் = பரிந்து + ஓம்பி = பரிந்து என்றால் வருந்தி. வருந்தினாலும் அதை கடை பிடிக்க வேண்டும். 


 காக்க = போற்றி பாதுகாக்க வேண்டும் 


ஒழுக்கம் = ஒழுக்கத்தை 


தெரிந்தோம்பித் = அறங்கள் அனைத்தையும் ஒருமனதாக  


தேரினும் = ஆராய்ந்து தெளிந்தாலும் 


அஃதே துணை = அது ஒன்றேதுணை 


குறள் ஒரு பக்கம் இருக்கட்டும். 


நம்மிடம் ஒரு விலை உயர்ந்த பொருள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எடுத்துக் கொண்டு பயணம் செய்கிறோம். வைர ஆபரணம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். 


பயணம் முழுவதும் நம் கவனம் முழுவதும் அதன் மேலேதான் இருக்கும் அல்லவா? அதை தனியே விட்டு விட்டு எங்காவது போவோமா? தூங்கும் போது கூட அந்த ஆபரணம் உள்ள பெட்டியை  தலையணையாக வைத்துக் கொண்டு உறங்குவோம் அல்லவா? 


ஒழுக்கம் என்பது நாம் வாழ்நாள் எல்லாம் சேர்த்த செல்வம். அதற்கு ஒரு குறையும் வராமால் எவ்வளவு கண்ணும் கருதுமாக நாம் காக்க வேண்டும்? ஒரு வைர நகைக்கே இந்தப் பாடு என்றால் ஒழுக்கத்துக்கு எவ்வளவு பாடு பட வேண்டும்? 


நிறைய பேர் ஆசை காட்டுவார்கள். நமக்கே சபலம் வரும். செய்தால் என்ன, ஒரு முறைதானே, யாருக்குத் தெரியப் போகிறது, ஊர் உலகில் நடக்காததா என்றெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொண்டு ஒழுக்கம் தவற நினைக்கலாம். 


அப்படி இல்லை என்றால், ஒழுக்கமாக இருப்பவனை மிரட்டி அவனை ஒழுக்கம் தவறச் செய்ய இந்த உலகம் முயலும். 


பொய் சொல்ல மாட்டேன், உண்மை மட்டும்தான் பேசுவேன் என்ற ஒரு ஒழுக்கத்தை கடை பிடிக்க அரிச்சந்திரன் எவ்வளவு பாடு பட வேண்டி இருந்தது. 


ஒழுக்கத்துக்கு வேறு ஏதாவது மாற்று இருக்கிறதா என்றால் இல்லை. கொஞ்சம் ஒழுக்கம் தவறி நடந்து விட்டு, கோவில் உண்டியலில் பணம் போட்டுவிட்டால் சரியாகி விடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அல்லது ஏதோ ஒரு புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் செய்த ப் பாவம் எல்லாம் போய் விடும் என்று நம்புகிறார்கள். 


ஒழுக்கத்துக்கு ஒரு மாற்றே கிடையாது. 


"அதுவே துணை" என்றார். 


அது துணை என்றால் அது ஒரு துணை, வேறு ஏதும் இருக்கலாம் என்ற ஐயம் வரும். அதுவே துணை என்றால் அது மட்டும் தான் துணை. 


வள்ளுவர் சும்மா சொல்லவில்லை, 'தெரிந்து ஓம்பி தேரினும்' ஒரு மனதாக எல்லா அறங்களையும் ஆராய்ந்தாலும், அதுவே துணை என்கிறார். .


நீங்கள் ஒன்றும் ஆராய வேண்டாம். நான் ஆராய்ந்து விட்டேன். வேறு ஒரு வழியும் இல்லை என்கிறார். 


பொய்யா மொழிப் புலவர். அவர் சொல்வது தவறாக இருக்குமா? 


சரியாகத்தான் இருக்கும். 


நாம் நடைமுறையில் பார்க்கலாம். எவ்வளவோ பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் எங்கோ ஒரு சின்ன சறுக்கலில் அவர்கள் வாழ்நாள் எல்லாம் கட்டிக் காத்த பேர், பெருமை எல்லாம் காற்றில் போய் விடுவதை பார்க்கிறோம். 


ஆசை வரும், ஆணவம் வரும், புலன்கள் சுண்டி இழுக்கும்...ஒரு பொழுதேனும் கவனம் சிதற விடக் கூடாது. 


இன்னும் ஒரு முறை குறளை படித்துப் பாருங்கள். ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்று தெரிய வரும். 





Wednesday, May 18, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 1

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 1 



பேசுவது என்பது ஒரு கலை. 


எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும். அது மட்டும் அல்ல, கேட்பவர்கள் எதை எதிர்பார்கிரார்களோ அதை அறிந்து பேச வேண்டும். 


கேட்ட கேள்வி ஒன்றாக இருக்கும், சொல்லும் பதில் வேறொன்றாக இருக்கும். 


என் அனுபவத்தில் சில கூறுகின்றேன்....


நேர் முகத் தேர்வில் (interview) வேலைக்கு மனு செய்திருக்கும் நபரைப் பார்த்து "உன்னைப் பற்றி கொஞ்சம் சொல்லேன்" என்போம். 


பெரும்பாலன் சமயங்களில் வரும் பதில் "என் பெயர் இது, நான் இன்னது படித்து இருக்கிறேன், எனக்கு திருமணம் ஆகி விட்டது/ஆக வில்லை, என் மனைவி இன்ன வேலை செய்கிறாள், என் சொந்த ஊர் இது"


என்று கூறுவார்கள். 


அவர் சொல்லியது அனைத்தும் உண்மை. அதில் பிழை இல்லை. ஆனால், கேள்வி கேட்டவர் எதற்கு கேட்டார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இருக்கிற வேலைக்கு இவர் தகுதியானவரா என்று அ அறியத்தான் கேள்வி கேட்டகப் பட்டது. அதற்கு தகுந்த மாதிரி பதில் சொல்ல வேண்டும். 


அதே போல், "இன்று எப்ப வீட்டுக்கு வருவீங்க" என்று மனைவி கேட்டால் "இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் இருக்கிறது...முடிக்க நேரம் ஆகும்..." என்று சொல்லக் கூடாது. 


அவள் எதற்கு கேட்கிறாள்? ஏதோ வெளியே போக வேண்டும். அதற்குத் தானே கேட்கிறாள். அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும். 


எப்ப வருவாய் என்று கேட்டால், கேட்பவர் ஒரு நேரத்தை பதிலாக எதிர் பார்க்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


என்று வருவாய் என்று கேட்டால் கேட்பவர் ஒரு தேதியை பதிலாக் எதிர்பார்க்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


"இன்னிக்கு இரசம் எப்படி இருக்கு" என்று மனைவி கேட்டால்,அதில் ஏதோ புதிதாக செய்து இருக்கிறாள் என்று அர்த்தம், அல்லது ஒரு பாராட்டை எதிர்பார்க்கிறாள் என்று அர்த்தம், அல்லது வேறு ஏதோ பேச தயங்குகிறாள் என்று அர்த்தம்.  


"நல்லா இருக்கு" என்று மொட்டையாக பதில் சொல்லக் கூடாது.  கேட்பவர் மனம் அறிந்து பதில் சொல்லப் பழக வேண்டும். 


கம்பன் அப்படி ஒரு காட்சியைக் காட்டுகிறான். 


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராவணன் அடிக்கடி வந்து துன்பம் செய்கிறான். மனம் வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து சேருகிறான். 


அவர்களுக்குள் நடக்கும் பேச்சு, பேசுக் கலையின் உச்சம் தொட்டு காட்டிகிறான் கம்பன். 


அணு அணுவாக இரசிக்க வேண்டிய இடம். 


உங்கள மனதில் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்....

அசோக வனம். சுற்றிலும் அரக்கியர். குண்டா, கருப்பா, பயங்கர ஆயுதங்களுடன், நடுவில் அழகே உருவான சீதை, இடை இடை தடபுடலாக இராவணன் வந்து மிரட்டி விட்டுப் போகும் காட்சி...அழுது, வெறுத்து, தற்கொலை ஒன்றே தீர்வு என்று பிராட்டி முடிவு செய்து, அங்குள்ள ஒரு கொடியை கழுத்தில் சுருக்கிட்டு கொள்ள நினைக்கும் நேரம்...


இதை மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். 


"அனுமன் சீதை தற்கொலைக்கு முயல்வதை பார்க்கிறான். அதிர்ச்சி அடைகிறான். ஓடிப் போய் சீதையின் கையை பிடித்து தடுத்து நிறுத்தலாம் என்றால் அவனுக்கு கூச்சமாக இருக்கிறது. எப்படி ஒரு பெண்ணைத் தொடுவது என்று. "உலக நாயகன் அருளிய தூதன்" நான் என்று அவள் முன் சென்று கை கூப்பி நிற்கிறான். 


பாடல் 


கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

'அண்டர் நாயகன்அருள் தூதன் யான்' எனா,

தொண்டை வாய்மயிலினைத் தொழுது,


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html


(pl click the above link to continue reading)




கண்டனன் = கண்டான் 


அனுமனும் = அனுமன் 


கருத்தும் எண்ணினான் = மனதில் நினைத்தான் 


கொண்டனன் துணுக்கம் = திடுக்கிட்டான் (அவள் தற்கொலை செய்து கொல்லப் போவதைப் பார்த்து) 


மெய் தீண்டக் கூசுவான், = அவள் கையை பற்றி தடுத்து நிறுத்தக் கூச்சப் பட்டான் (முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை எப்படி தொடுவது என்று) 


'அண்டர் நாயகன் =உலகுக்கு எல்லாம் நாயகன் 


அருள் தூதன் யான்' = அருளிய தூதன் நான் 


எனா, = என்று 


தொண்டை வாய்  = கோவைப் பழம் போன்ற வாயை உடைய 


மயிலினைத் தொழுது, = மயில் போன்ற சாயலை உடைய சீதையை தொழுது 



"சீதை, கொஞ்சம் பொறு...நான் சொல்வதைக் கேள்" என்று ஆரம்பித்து இருக்கலாம். 


அனுமன் அப்படிச் செய்யவில்லை. எதைச் சொன்னால் அவள் மனம் சாந்தி அடையும், தான் சொல்வதை கேட்ட்பாள் என்று அறிந்து சொல்கிறான் "உலக நாயகனின் தூதன்" என்று. .


இராமனிடம் இருந்து ஏதாவது செய்தி வருமா என்று தானே அவள் தவம் கிடக்கிறாள். அதை அறிந்து அங்கிருந்து ஆரம்பிக்கிறான் அனுமன். 


தொடர்வோம்....



Tuesday, May 17, 2022

திருக்குறள் - ஒழுக்கமும் விழுப்பமும்

 திருக்குறள் - ஒழுக்கமும் விழுப்பமும் 


நாம் இதுவரை உள்ள அனைத்து குறள்களுக்கும் பரிமேலழகர் கூறிய உரைப் படியே சிந்தித்து வந்தோம். 


இந்தக் குறளில் ஒரு சிறு மாற்றம் செய்ய விருப்பம். 


இந்தக் குறளுக்கு பெரியவர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய உரை கொண்டு சிந்திக்க இருக்கிறோம். 


வெகு நாட்களுக்கு முன் படித்த ஞாபகம். அந்த ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன். 


இந்தக் குறளின் விளக்கம் முழுவதும் அவர் கூறியதின் மாற்று வடிவமே.


பாடல் 


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_79.html


(please click the above link to continue reading)


ஒழுக்கம் = ஒழுக்கம் 


விழுப்பம் = உயர்வு, சிறப்பு, பெருமை 


தரலான் = தரும் என்பதால் 


ஒழுக்கம் = அந்த ஒழுக்கம் 


உயிரினும் = உயிரை விட உயர்ந்ததாகக் கருதி 


ஓம்பப் படும் = போற்றப்படும், காக்கப் படும் 



இதில் என்ன பெரிய விரிவுரை செய் ய இருக்கிறது என்று நினைக்கலாம். 


பொறுத்து இருங்கள். 


'ஒழுக்கம்' என்று தானே சொல்லி இருர்க்கிறார். ஒழுக்கத்தில் நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்று இரண்டு இருக்கிறதே. இதில் எந்த ஒழுக்கத்தை வள்ளுவர் சொல்கிறார்? பின்னால்  'விழுப்பம்' தரும் என்று சொன்னதால், அது நல்லொழுக்கம் என்று கொள்ள வேண்டும். 


மேலும், உயர்ந்தவர்கள் எதைக் கூறினாலும், நல்லதையே நினைத்துக் கூறுவார்கள். 


வழியே ஏகுக வழியே மீளுக என்றாள் ஔவை. வழியில் போய், வழியில் வா என்று அர்த்தம். அதாவது, நல்ல வழியில் போய், நல்ல வழியில் வா என்று அர்த்தம். குறுக்கு வழி அல்ல அவள் சொன்னது. 


'நெறி அல்லா நெறி தன்னை நெறியாகக் கொள்வேனே" என்பார் மணிவாசகர். வழி அல்லாத வழி. 


நல்ல நெறியை, நெறி என்கிறார். 


தீய வழியை, நெறி அல்லாத நெறி என்கிறார். அதாவது நல்லது இல்லாதது கெட்டது. கெட்டது என்றே சொல்லுவது இல்லை. 


ஒருவனுக்கு எது சிறப்பை, பெருமையை, புகழைத் தரும்?


செல்வம்? படிப்பு? எழுதிய நூல்கள்? செய்த தான தர்மங்கள்? பெற்ற பிள்ளைகள்? பதவி?  


இவை எதுவுமே ஒருவனுக்கு பெருமை தராது. ஒழுக்கம் ஒன்றே ஒருவனுக்கு பெருமை தரும். 


இராவணனிடம் என்ன இல்லை? அறிவு, பதவி, வீரம், ஞானம், செல்வம், புகழ், அழகு...எல்லாம் இருந்தது. நாம் அவனை மதிக்கிறோமா? இல்லையே? ஏன்?  ஒழுக்கம் இல்லை அவனிடம். மாற்றான் மனைவியை விரும்பிய ஒழுக்கம் அற்ற செயலைச் செய்தான். 


பல்கலை கழகத்தின் துணை வேந்தரை ஏதோ தவறு செய்தார் என்று கைது பண்ணி அழைத்துக் கொண்டு போகிறார்கள். அவர் மேல் மதிப்பு இருக்குமா?


ஒழுக்கம் ஒன்றே ஒருவனுக்கு பெருமையைத் தரும். 


சரி, எனக்கு பெருமை வேண்டாம், புகழ் வேண்டாம் ...எனவே நான் ஒழுக்கம் இல்லாமல் இருக்கலாமா என்றால்....


ஒழுக்கமாக இருந்தால் பெருமை வரும் 

ஒழுக்கம் அற்றவனாக இருந்தால் சிறுமை வரும். ஊர் பார்த்து சிரிக்கும். மனைவி, மக்கள், சுற்றம் எல்லாம் ஏளனம் செய்யும். ஒருவன் இலஞ்சம் வாங்கி கைது ஆகிறான் என்று வைத்துக் கொள்வோம். பள்ளியில் அவன் பிள்ளைக்கு என்ன மரியாதை இருக்கும். அவன் மனைவி தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? 


"ஓம்பப் படும்" என்று கட்டளையாகக் கூறுகிறார்.  எதுக்கு? ஒழுக்கத்தை கடை பிடிப்பதால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வி வரும் அல்லவா? பலன் இல்லாமல் ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது. 


"விழுப்பம் தரும்" எனவே அதை கடைப்பிடி என்கிறார். 


"உயிரினும்" என்று சொல்லுவதின் அர்த்தம் என்ன?


கி. ஆ. பெ அவர்கள் விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கும். 


உயிர் உயர்ந்தது தான். வரும் காலத்தில் ஏதோ ஒரு விஞ்ஞானி இறவாமல் இருக்க ஒரு மருந்து கண்டு பிடித்து விடலாம். அல்லது இறந்த உயிரை மீண்டும் கொண்டு வந்து விடலாம். ஆனால், ஒழுக்கம் போனால் வரவே வராது என்பதால் உயிரை விட அது உயர்ந்தது என்றார். 


இரண்டாவது, உயிரோடு இருக்கும் ஒருவன் ஒரு மிகப் பெரிய தவறை செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பின் அவன் நடை பிணமாகத் தான் அலைய வேண்டி இருக்கும். உயிர் இருந்தாலும் அவனை ஒரு உயிருள்ள மனிதன் என்று யாரும் மதிக்க மாட்டார்கள். எனவே, அந்த உயிருக்கே சிறப்பு தருவது, ஒழுக்கம் தான். 


மூன்றாவது, ஒருவன் இறந்து போனால், அவன் செய்த குற்றங்களை நாம் பெரிதாக சொல்லுவது இல்லை. ஒரு நாகரீகம் கருதி  சரி சரி என்று விட்டு விடுகிறோம். 


போரில் அடி பட்டு இராவணன் இறந்து கிடக்கிறான். 


"மும்மடங்கு பொலிந்ததம்மா அம் முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா" 


என்பான் கம்பன். 





சில சமயம் செய்த தவறை உணர்ந்து ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் என்றே வைத்துக் கொள்வோம். நாம் அவனை மன்னிக்கத் தயாராக இருப்போம். நல்ல மனுஷன், செஞ்ச தவறுக்காக உயிரையே விட்டு விட்டான்...அவன் மனுஷன் என்று சொல்ல்வதைக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?


தவறான முடிவால் கோவலனை கொன்று விட்டதை அறிந்து உயிரை விட்ட பாண்டிய மன்னனை நாம் வெறுத்து விடவில்லை. 


ஒழுக்கத் தவற்றினை உயிரைக் கொடுத்தாவது சரி செய்து விடலாம். 


உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒருவன் ஒழுக்கக் குறைவாக நடந்தால் அவனை என்ன சொல்லுவோம்? 


ஒருவன் உயிரை இழந்து விட்டால் அவனுக்கு அதில் துன்பம் இல்லை. அவன் தான் இறந்து விட்டானே. அவனை சுற்றி உள்ளவர்கள் அழுவார்கள். 


ஆனால், ஒருவன் ஒழுக்கத்தை இழந்தால் அவனும் அழ வேண்டும், அவன் சுற்றமும் அழும். எனவே, உயிரை விட ஒழுக்கம் உயர்ந்தது. 


உயிர் உள்ள எல்லோரும் ஒரு நிலையில் இருப்பது இல்லை. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன் என்று ஆயிரம் வேற்றுமைகள் இருக்கும்.  ஆனால், ஒழுக்கம் உடைய எல்லோருமே சிறப்பித்துக் கூறப் படுவார்கள். 


சீதையை விட கண்ணகி கற்பு ஒழுக்கத்தில் உயர்ந்தவள் என்று யாரும் கூற மாட்டார்கள். 


எனவே, உயிர் எவ்வளவு நமக்கு முக்கியமோ, சிறப்போ, இன்றி அமையாததோ, அதை விட ஒரு படி மேலாக ஒழுக்கத்தைக் காக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


(குறிப்பு - மேலே உள்ள உரையில் உதாரணங்கள் திரு. கி. ஆ. பெ அவர்கள் சொன்னது அல்ல. பிழை இருப்பின் அது என் குறையே அன்றி அவர் பிழை அல்ல).


மூத்த திருப்பதிகம் - அங்கம் குளிர்ந்து அனலாடும்

மூத்த திருப்பதிகம் - அங்கம் குளிர்ந்து அனலாடும் 


பக்தி இலக்கியங்கள் பெரும்பாலும் இறைவன் புகழ் பாடும், நிலையாமை பற்றிக் கூறும், வீடு பேறு பற்றிப் பேசும், இறைவன் அருள் வேண்டி உருகும், அடியவவ்ர்களின் பெருமை பேசும்.  


என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதுதான் நான் அறிந்தது.  


காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்களைப் படிக்கும் போது ஒரு மின்சாரம் தாக்கிய அதிர்ச்சி. 


இந்தப் பாடல்களுக்கு என்ன அர்த்தம் (சொற்களின் அர்த்தம் அல்ல), இது எப்படி சாத்தியம், இதனால் நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டும் என்று அம்மையார் விரும்புகிறார், அவர் சொல்ல வந்தது என்ன என்று ஆயிரம் கேள்விகள் தொக்கி நிற்கின்றன.


முதலில் அறுப்பது மூவரில் ஒரே ஒரு பெண் காரைக்கால் அம்மையார். 


பெண் என்றால் நம் மனதில் அன்பு, பாசம், தாய்மை, மென்மை, பொறுமை , கருணை, தியாகம் இவை போன்றவைதான் தோன்றும். 


அடுத்தது, வழிபாடு என்றால் வழிபடும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும், பூ, சந்தனம், குங்குமம்,  ஊதுபத்தி போன்ற மங்களகரமான பொருட்கள் இருக்க வேண்டும். 


அமைதியாக இருக்க வேண்டும். இறைவன் மேல் பக்திப் பாடல்கள் ஒலிக்க வேண்டும் 


அங்கே உள்ளவர்கள் மனதில் ஒரு பக்தியோடு அந்த வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். 


இது தானே நாம் அறிந்த ஒன்று. இதில் கொஞ்சம் மாற்றம் இருக்கலாம். கோவில்களில் மேளம், நாதஸ்வரம் போன்ற இன்னிசைக் கருவிகள் ஒலிக்கலாம். 


காரைக்கால் அம்மையார் காட்டும் சூழலைப் பாருங்கள். 


இடம் - சுடுகாடு 

கூட இருப்பவர்கள் - பேய்கள் 

சப்தம் - பேய்களின் அலறல் சப்தம் 

இறைவன் - சிவ பெருமான் தலையை விரித்துப் போட்டு கையில் தீயோடு ஆடுகிறான். 


அதிலும் பேய் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போகவில்லை. 


"மார்பகங்கள் மெலிந்து, நரம்புகள் திரண்டு எழுந்து,  ஆழமான ஓட்டைக்  கண்கள், ஈ என்று சிரிக்கும் போது வெளிறிய, நீண்ட பற்கள், குழி விழுந்த வயிறு, சிக்கு பிடித்த முடி, இடு காட்டில் அலறும் பெண் பேய் ...அப்படிப் பட்ட காட்டில் கையில் அனல் ஏந்தி அங்கங்கள் குளிர ஆடும் சிவன்" 


என்கிறார். 


பக்தி வருகிறதா? பயம் வருகிறது. 


இது ஏதோ ஒரு திகம்பர சாமியார் பாடினார் என்றால் கூட ஒரு மாதிரி நாம் ஜீரணித்துக் கொள்ள முடியும். ஒரு பெண் பாடினார் என்பதை எப்படிப் பார்ப்பது. 


இந்து சமயத்தில் பெண்களை சுடுகாட்டுக்குள்  அனுமதிப்பதே இல்லை. 


ஒரு பெண் சுடுகாட்டில், பேய்களுக்கு மத்தியில் என்பதை நம்மால் சிந்திக்கக் கூட முடியவில்லை. 



பாடல் 




கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்

பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்

தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி

அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_17.html


(Please click the above link to continue reading)


கொங்கை = மார்பகங்கள் 


திரங்கி = வற்றி, மெலிந்து 


நரம்பெ ழுந்து = நரம்புகள் புடைத்து எழுந்து 


குண்டு கண் = குழி விழுந்த கண்கள் (குண்டும் குழியுமாக இருக்கிறது என்றார் போல்)


வெண்பற் =  வெண்மையான பற்கள் 


குழிவ யிற்றுப் = குழி விழுந்த வயிறு 


பங்கி = தலை முடி 


சிவந்து  = எண்ணெய் இல்லாமல் செம்படையாக சிவந்து வறண்ட முடி 


இரு பற்கள் நீண்டு = இரண்டு கோரைப் பற்கள் நீண்டு வெளியே தெரிய 


பரடுயர் = குதிங்கால் உயர்ந்து 


நீள்கணைக் கால்  = நீண்ட கால் 


ஓர் பெண்பேய் = ஒரு பெண் பேய் 


தங்கி யலறி யுலறு காட்டில் = தங்கி அலறி உலரும் காட்டில் 


தாழ்சடை = விரித்த சடை தரை வரை தாழ்ந்து இருக்கிறது 


எட்டுத் திசையும் வீசி = அந்த முடியை எட்டுத் திசையும் வீசி 


அங்கங் குளிர்ந்து  = அங்கங்கள் குளிர்ந்து 


அனலாடும்  = கையில் தீயை ஏந்தி ஆடும் 


எங்கள் = எங்கள் 


அப்ப னிடந்திரு ஆலங் காடே. = அப்பன் இருக்கும் இடம் திருவாலங்காடே 


மற்ற பேய்கள் எல்லாம் எங்கோ ஓடி விட்டனவாம். இந்த ஒரு பெண் பேய் மாத்திரம் தனித்து இருப்பதால்,  மற்ற பேய்கள் எங்கே என்று அலறிக் கொண்டு ஓடுகிறதாம். 


இது ஒரு வித்தியாசமான பக்திப் பாடல். 


நாம் மனதில் கொண்ட பிம்பத்தை கலைத்துப் போடும் பாடல். 


சிந்திக்க சிந்திக்க ஒன்றும் புலப்பட மாட்டேன் என்கிறது. 


பக்தி என்பது இறைவனை எங்கும் காண்பது, கோவிலில் மட்டும் அல்ல என்று சொல்ல வருகிறாரா ? அல்லது 


பயம் நம்மை சுருங்க வைக்கிறது. பயம் இருந்தால் நம்மால் எதையும் முழுவதுமாக அறிய முடியாது. அங்கே பாம்பு இருக்கிறது என்றால் அந்தப் பக்கமே போக மாட்டோம். 


பயங்களில் மிகப் பெரிய பயம் மரண பயம். பல பேர் மரணம் என்ற சொல்லைக் கூட சொல்லப் பயப்படுவார்கள். எதுக்கு அமங்கலமா பேசிக்கிட்டு என்று முகம் சுளிப்பார்கள். 


பயம் இருக்கும் வரை நம் சிந்தனையில் தெள்வு இருக்காது. பயம் என்ற கண்ணாடி மூலமே நாம் உலகைப் பார்ப்போம். 



எதிகாலம் பற்றிய பயம், எனவே செல்வம் சேர்க்க வேண்டும். 


உடல் நிலை பற்றிய பயம்,எனவே அதற்கு வேண்டியதைச் செய்வது. 


உறவுகள் பற்றி பயம். எல்லோரையும் சேர்த்து அணைத்துக் கொண்டு போக வேண்டும். 


அரசாங்கம் பற்றி பயம். ஏதாவது சொன்னால் வம்பு வந்து விடுமோ என்ற பயம்.


பயம் நம்மை சுருங்க வைக்கிறது. 


பயத்தை உதறினால் அல்லது நம்மால் வாழ்வை, உண்மையை தரிசிக்க முடியாது என்பதானால் "இங்கே வா, சுடுக்காட்டுக்கு என் கூட வா, பேயைக் காட்டுகிறேன்...முதலில் பயம் வரும். பின் பயம் தெளியும், இறை தரிசனம் கிட்டும்" என்று காட்ட நம்மை அழைத்துச் செல்கிறாரா?


தெரியவில்லை. 


சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். 


குருவருள் துணை புரிய வேண்டும், இதைப் புரிந்து கொள்ள. 




Sunday, May 15, 2022

திருக்குறள் - ஒழுக்கம் உடைமை - முன்னுரை

 திருக்குறள் - ஒழுக்கம் உடைமை - முன்னுரை 


அடக்கம் உடைமை என்ற அதிகாரத்துக்குப் பின் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர். 


ஏன்? அது என்ன முறை?


எவன் ஒருவன் தன் புலன்களை தன் கட்டுபாட்டுக்குள் வைத்து இருக்கிறானோ அவனால்தான் ஒழுக்கம் பேண முடியும் என்பதால் முதலில் அடக்கம் உடைமை பற்றி கூறி பின் ஒழுக்கம் உடைமை பற்றிக் கூறுகிறார். 


பாலாகட்டும், இயலாகட்டும், அதிகார முறைமையாகட்டும் அனைத்திலும் ஒரு ஒழுங்கு. தர்கரீதியாக, ஒரு ஆற்றோட்டம் போல் எழுதிக் கொண்டு சென்றால் மனதில் எளிதில் நிற்கும். 


ஒழுக்கமா, அடக்கமா எது முதலில் வரும் என்று கேட்டால் இப்போது எளிதாகச் சொல்லி விடலாம். முதலில் புலன் அடக்கம், பின் ஒழுக்கம் என்று. 


முதலில் ஒழுக்கம் என்றால் என்ன என்று சிந்திப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_15.html


(click the above link to continue reading)



ஒழுக்கம் என்றால் அற வழியில் நடத்தல், உயர்ந்த நூல்கள் கூறிய சிறந்த நெறி முறைகளை கடைபிடித்தல் என்று நாம் அறிவோம். 


சிக்கல் என்ன என்றால், இந்த அறம் இருக்கிறதே அது என்ன என்று எங்கும் முழுவதுமாகச் சொல்லப் படவில்லை. அறங்களை எல்லாம் தொகுத்த ஒரு புத்தகம் இல்லை. அங்கங்கே கோடி காட்டப் படுகிறது. அவ்வளவுதான். 


மேலும், இந்த நூல்களில் சொல்லப்பட்டவை மட்டும்தான் அறமா என்றால் இல்லை. நூல்கள் ஓரளவு எடுத்துச் சொல்லும். அறம் மிகப் பெரியது. ஒரு நூலில் ஓரிரு அறங்களை சொல்வதே மிகக் கடினம். எல்லா அறத்தையும் ஒரு நூலில் சொல்வது என்பது முடியாத காரியம். 


மேலும், எத்தனையோ நூல்கள் நம் கைக்கு கிடைக்காமலேயே போய் விட்டது. அதில் உள்ள அறங்கள் என்னென்ன என்று நமக்குத் தெரியாது. 


மேலும், அத்தனை நூல்களையும் படித்து அதில் உள்ள அறங்களை பட்டியல் இட முடியுமா நம்மால்? ஒரு வாழ்நாள் போதாது. 


மேலும், ஒருவேளை எல்லா நூல்களும் கிடைத்து, அவற்றை எல்லாம் நாம் படித்து, அதில் கூறிய அறங்களை எல்லாம் பட்டியல் இட்டுவிட்டோம் என்றே வைத்துக் கொள்வோம், பட்டியல் இருக்கிறது என்பதற்காக அவை எல்லாம் புரிந்து விடுமா?  ஒரு சட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு சர்ச்சைகள் நடக்கின்றன. அத்தனை அற நூல்களில் உள்ள அறமும் தெளிவாக புரிந்து விடுமா?


மேலும், புரிந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம், அவற்றில் சில ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கும். எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றம் என்று ஆகும். என்ன செய்வது?


அப்படி என்றால் ஒழுக்கமாக வாழவே முடியாதா? 


முடியும். இவ்வளவு எல்லாம் சிரமப்பட வேண்டாம். 


ஒழுக்கம் என்ற சொல், ஒழுகுதல் என்பதில் இருந்து வந்தது. 


வீட்டில் கூரை சரி இல்லை என்றால் நீர் ஒழுகி கீழே வரும். எங்கே ஒழுகினாலும் அது கீழேதான் வரும். எங்காவது ஏதாவது திரவம் ஒழுகி கீழ் இருந்து மேலே செல்வதை கண்டு இருகிறீர்களா? இல்லையே?


ஒழுக்கம் என்பது உயர்ந்தவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்வது. மேலிருந்து கீழே வருவது ஒழுகுதல். 


நம்மால் எல்லாவற்றையும் படித்து, தெளிய முடியாது. நம்மை விட உயர்ந்தவர்கள், தெரிந்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் வழி  நடந்து விட்டுப் போவது எளிய வழி. 


இரண்டாவது, ஒழுக்கம் என்பது உயர்ந்தவர்களிடம் இருந்து வர வேண்டும். இப்போதெல்லாம் என்ன ஆகி விட்டது என்றால், கீழே உள்ளவர்களிடம் இருந்து உலகம் படிக்கத் தொடங்கி இருக்கிறது. 


உதாரணம் சொன்னால் கூட ஏன் அதில் என்ன தவறு என்று சண்டைக்கு வருவார்களோ என்று ஐயமாக இருக்கிறது. எதுவும் சரி என்ற ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம். 


மது அருந்துவது, போதை பொருட்களை உட்கொள்வது ஒழுக்கம் அற்ற செயல் என்று வைத்துக் கொள்வோம். எங்கோ ஒருவன், மது அருந்தினால் என்ன? நன்றாகத் தானே இருக்கிறது? மது அருந்துவது என்பது தனி மனித சுதந்திரம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று வாதம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். 


இன்று உலகம் என்ன செய்கிறது என்றால், அவன் சொல்வதை கேட்கத் தலைப்படுகிறது. உடையை கிழித்து அணிந்தால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தன் உடையை தானே கிழித்துக் கொண்டு, அப்படி கிழிந்த உடையை அணிந்து கொண்டு செல்பவனை நம் சமுதாயம் பைத்தியம் என்று கூறியது. இன்று அது ஒரு நாகரீகமாகி விட்டது. 


நான் சரி தவறு என்று வாதம் செய்யவில்லை. நாம் யாரிடம் இருந்து படிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 


மேலும், ஒழுகுதல், சொட்டுதல், தெறித்தல் என்றெல்லாம் இருக்கிறது. ஒழுகுதல் என்றால் இடை விடாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது. 


ஒழுக்கம் என்பதும் அப்படித்தான். இடைவிடாமல் கடைசிவரை கடைபிடிக்க வேண்டும். 


வாரத்தில் ஒரு நாள் புலால் உண்பது இல்லை, ஒரு நாள் மது குடிப்பது இல்லை, புகை பிடிப்பது இல்லை, வெள்ளி செவ்வாய் பொய் சொல்வது இல்லை, என்பதெல்லாம் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் என்றால் இறுதிவரை கைகொள்ள வேண்டும். 


உயர்ந்தவர்களிடம் இருந்து நாம் பெற்றதை இறுதிவரை அந்தப் பாதையில் செல்வதை ஒழுக்கம் என்கிறோம். 


இராமன் என்ன செய்தான், தர்மன் என்ன செய்தான், கண்ணப்பன் என்ன செய்தான், என்று உயர்ந்தவர்களிடம் இருந்து நாம் பெற்று அதன் படி வாழ்வது. 


நம் சமுதாயத்தில் உயர்ந்தவர்களுக்கா பஞ்சம்? நாம் அவர்களை விட்டு விட்டு நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 


அற நூல்களில் சொல்லியவற்றை காலத்துக்கு ஏற்ப மாற்றலாம். மாற்ற வேண்டும். 'நிற்க அதற்கு தக' என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறார். ஆனால், யார் மாற்றுவது என்பதில் தான் சிக்கல். 


உயர்ந்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். படித்தவர்கள், சமுதாய அக்கறை உள்ளவர்கள், எதிர்கால சந்ததி பற்றி சிந்திப்பவர்கள், சுயநலம் இல்லாதவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களை தேடிப் பிடித்து அவர்கள் சொல்வதை கேட்டு, அதன் படி வாழ்வதுதான் ஒழுக்கம். 


முன்னுரை சற்று நீண்டு விட்டதால், அதிகாரத்துக்குள் நாளை செல்வோம். 




Saturday, May 14, 2022

சேத்திரத் திருவெண்பா - தில்லைச் சிற்றம்பலமே சேர்

சேத்திரத் திருவெண்பா - தில்லைச் சிற்றம்பலமே சேர் 


நீண்ட தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு இரயிலில் போகிறோம். போகிற தூரம் எவ்வளவு என்று தெரியாது.  எப்போது போய்ச் சேருவோம் என்று தெரியாது. ஆனால், போகிற வழியில் எவை எவை வரும் என்று தெரியும். வழியில் உள்ள ஊர்கள் பெயர் தெரியும். அங்கு என்ன விசேடம் என்று தெரியும். இந்த ஊர் வந்து விட்டால், அடுத்து என்ன ஊர் வரும் என்று தெரியும். 


"ஓ, இந்த ஊர் வந்துருச்சா, இங்க முறுக்கு நல்லா இருக்கும். அடுத்து அந்த ஊர் வரும், அங்கே அல்வா நல்லா இருக்கும்," என்று நமக்குத் தெரியும். 


இது நாம் அனுபவதில் கண்டது தானே?


சில சமயம் இரவு இரயிலில் போவோம். வண்டியில் ஏறிய சில நிமிடங்களில் தூங்கிப் போய் இருப்போம். அதி காலை. எங்கே இருக்கிறோம் என்று தெரியாது. வண்டி பாட்டுக்கு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. வெளியே நல்ல இருட்டு. இன்னும் முழுவதும் விடியவில்லை. 


இரயில் பெட்டியின் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டே இருக்கிறோம். சட்டென்று ஒரு சின்ன இரயில் நிலையம் வருகிறது. வண்டி நிற்காமல் போனாலும், அது எந்த ஊர் என்று வாசித்து விடுகிறோம். 


"அடடா, இந்த ஊர் வந்தாச்சா, அப்படினா நாம இறங்குற இடம் இன்னும் அரை மணியில் வந்து விடும் " என்று அரக்க பறக்க சாமான்களை அள்ளி எடுத்துக் கொண்டு இரயில் பெட்டியின் வாசலுக்கு அருகில் வந்து நிற்போம் அல்லவா? இறங்கத் தயாராக இருப்போம் அல்லவா.


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வாழ்கை என்ற இரயில் பயணம் சென்று கொண்டே இருக்கிறது. .


நடு நடுவே ஊர்கள் வருகின்றன. 


ஒரு நாள் முடி நரைக்கிறது. அது ஒரு ஊர். 


பல் சொத்தை விழுகிறது. அது ஒரு ஊர். 


தோலில் கொஞ்சம் சுருக்கம் வருகிறது. அடுத்த ஊர். 


சமீபத்தில் கேட்டது, படித்தது நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது. மறந்து போய் விடுகிறது.  அடுத்த ஊர். 


முன்ன மாதிரி வேகமா நடக்க முடியல. ஓட முடியல. மூச்சு வாங்குது. அடுத்த ஊர். 


இப்படி ஒவ்வொரு ஊராக வர வர...நாம் இறங்கும் இடம் நெருங்கி விட்டது என்று அறிய வேண்டாமா?


மூட்டை முடிச்சை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாராக வேண்டாமா? 


நான் செல்லும் ஊர் வரவே வராது என்று யாராவது இருப்பார்களா? 


பாடல் 


ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும்

கோடுகின்றார்; மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற

நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே

தில்லைச்சிற் றம்பலமே சேர்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_14.html


(Please click the above link to continue reading)



ஓடுகின்ற = வேகமாக ஓடுகின்ற 


நீர்மை = தன்மை. பத்து வயது பையன் ஓடுவான். என்பது வயது ஆள் ஓட முடியமா? 


 சேத்திரத் திருவெண்பா இது போன்ற அற்புதமான பாடல்களைக் கொண்டது. மூல நூலை தேடிப் படியுங்கள். நான் சொன்னதற்கு மேலேயும் உங்களுக்கு பல விடயங்கள் புலப்படலாம். 



ஒழிதலுமே = ஒழிந்து போய் விடும். ஓட முடியாத காலம் ஒன்று வரும். 


உற்றாரும் = உறவினர்களும் 


கோடுகின்றார் = கோடுதல் என்றால் வளைதல். நேராக இருந்த அவர்கள் இப்போது வேறு மாதிரி இருக்கிறார்கள். "கிழத்துக்கு வேற வேலை இல்லை" 


மூப்புங் குறுகிற்று = மூப்பு அருகில் வந்து விட்டது. நமக்கு எங்கே மூப்பு வரும் என்று இருந்தோம். இப்போது அருகில் வந்து விட்டது. 


நாடுகின்ற = போகின்ற 


நல்லச்சிற் றம்பலமே = இங்கே கொஞ்சம் சீர் பிரிக்க வேண்டும். நல் + அச்சு + இற்று + அம்பலமே என்று. நல்ல அச்சு என்றால் தேரின் பளுவை தாங்கும் அச்சாணி. இங்கே, இந்த உடம்பைக் குறிக்கும். இற்றுப் போதல் என்றால் உடைந்து போதல். உடம்பு தளர்ந்து போகும். நல் அச்சு இற்றுப் போய் விட்டால் தேரைக் கொண்டு போய் அது இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அது இனி நகராது. அது போல, உடம்பு இற்றுப் போய் விட்டால் இந்த உடம்பை எங்கு போய் வைப்பது? அது தான் அம்பலம். பொதுவான இடம். எது? சுடுகாடு. எல்லோருக்கும் பொதுவான இடம். 


 நண்ணாமுன் = அங்கே போய்ச் சேரும் முன் 


நன்னெஞ்சே = நல்ல நெஞ்சே 


தில்லைச்சிற் றம்பலமே சேர். = தில்லை சிற்றம்பலேமே சேர் 


சொல்லும் பொருளும் அவ்வளவுதான். 


கொஞ்சம் இலக்கணம் படித்தால் பாடலை இன்னும் ஆழமாக அனுபவிக்க முடியும். 


முயற்சி செய்வோம். 


"உற்றாரும்" என்பதில் உள்ள 'ம்' உயர்வு சிறப்பு உம்மை. உற்றார் கோடுகின்றார்  என்று சொல்லி இருக்கலாம். உற்றாரும் கோடுகின்றார் என்று சொல்வதன் மூலம், அவர்களே மாறிப் போனால், மற்றவர்கள் என்ன செய்ய மாட்டார்கள் என்று யோசித்துக் கொள் என்கிறார். மனைவி, கணவன், பெற்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்ற உற்றார்களே குணம் மாறிப் போவார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள், பழக்கம் உள்ளவர்கள் எல்லாம் எப்படி மாறுவார்கள்? 


"மூம்பும் குறிகிற்று" : இங்கும் 'ம்' முற்றும்மை. அதாவது மூப்பு வந்து விட்டது என்றால் எல்லாம் வந்து விட்டது என்று அர்த்தம். இனி வருவதற்கு ஒன்றும் இல்லை. விழாவுக்கு அந்த ஊர் MLA வந்தார், ஆட்சியாளர் (கலெக்டர்) வந்தார், ஜனாதிபதியும் வந்திருந்தார் என்றால் எல்லாரும் வந்தாகிவிட்டது என்று அர்த்தம். மூப்பும் வந்து விட்டது. 


"நல்லச்சிற் றம்பலமே" : நல் அச்சு இற்று அம்பலமே. இங்கே அம்பலமே என்பதில் உள்ள ஏகாரம் ('ஏ') பிரி நிலை ஏகாரம். மற்றவற்றில் இருந்து பிரித்து காட்டுவது. 'இல்லை எனக்கு சுடுகாட்டுக்குப் போக பயமாக இருக்கிறது. அங்கே போகப் பிடிக்கவில்லை ...நான் போக மாட்டேன்" என்றெல்லாம் சொல்ல முடியாது. அம்பலமே கதி. வேற வழியே இல்லை. 


'சிற்றம்பலமே சேர்' என்பதில் உள்ள ஏகாரம் இன்னொரு பிரிநிலை ஏகாரம். வேற எங்கேயாவது போயிராத. தில்லை சிற்றம்பலதுக்கே போ. வேற இடம் ஒன்றும் இல்லை. 


"மூப்பும் குறுகிற்று" என்பதில் உள்ள உம்மை இறந்தது தழுவிய உம்மை. தேர்வு எப்படி எழுதி இருந்தாய் என்ற கேள்விக்கு "முதல் பரிசும் வாங்கி விட்டேன்" என்று சொன்னால், அதற்கு முன் எழுதிய தேர்வு நன்றாக எழுதி இருந்தேன் என்று புரிந்து கொள்கிறோம் அல்லவா. முதலில் நடந்தது தேர்வு எழுதியது. அது இறந்த காலம். முதல் பரிசு வாங்கியது அதற்குப் பின் நிகழ்ந்தது. பின் நடந்த ஒன்றில் 'ம்' சேர்த்துச் சொன்னால் அது முன் நடந்ததையும் சேர்த்து கொண்டு வரும். மூப்பும் குறுகிற்று என்றால் இளமை போய் விட்டது என்று அர்த்தம் தானே விளங்கும். 



இலக்கணம் படிக்க படிக்க பாடல்களின் அழகும் ஆழமும் மேலும் தெரிய வரும். 


இன்றைக்கே போய் ஒரு நல்ல இலக்கண நூலை வாங்கிப் படிக்கத் தொடங்குகள், இதுவரை படிக்காமல் இருந்தால்.  உங்கள் இரசனை மேம்படும்.