Wednesday, July 13, 2022

குரு பூர்ணிமா - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

குரு பூர்ணிமா - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 


இன்று குரு பூர்ணிமா. குருவுக்கு வணக்கும் சொல்லும் நாள். 


குரு என்பவர் ஏதோ பள்ளிக் கூடத்தில், கல்லூரியில் பாடம் சொல்லித் தருபவர் மட்டும் அல்ல. யாரிடம் இருந்து எல்லாம் நாம் பாடம் கற்றுக் கொள்கிறோமோ, அவர்கள் எல்லோரும் நமக்கு குரு தான்.


சில சமயம் நம் எதிரிகள், நமக்கு துன்பம் செய்பவர்கள், தீமை செய்பவர்கள் கூட நமக்கு சிலவற்றை சொல்லித் தருவார்கள். சொல்லித் தர வேண்டும் என்று செய்வது அல்ல. அவர்கள் செயலில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். அவர்களும் குருதான்.


அவர்களுக்கும் பணிவான வணக்கம். 


கற்றுக் கொள்ளும் மனம் அமைந்து விட்டால் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அறிவு இங்குதான் இருக்கும் என்று கட்டாயம் அல்ல.  


பிள்ளையிடமே சிவன் கற்றுக் கொள்ளவில்லையா? யாராய் இருந்தால் என்ன. அறிவு தரும் எல்லோரும் குருதான். 


எல்லோருக்கும் வணக்கம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_13.html


(click the above link to continue reading)


எவ்வளவோ புத்தகங்கள் படிக்கிறோம். பல விடயங்களைக் கற்றுக் கொள்கிறோம். அந்த புத்தகம் எழுதிய ஒவ்வொருவரும் நமக்கு குருதான். சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை பூஜையில் வைத்து கும்பிடுகிறோம். அது அந்த காகிதத்துக்கு செலுத்தும் வணக்கம் அல்ல. அந்த புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களுக்கு செலுத்தும் மரியாதை. 


அனைத்து புத்தக ஆசிரியர்களுக்கும் வணக்கம். 


YouTube, ,WhatsApp, Facebook, , TV என்று பல இணைய தளங்கள் மூலம் பலவற்றை கற்றுக் கொள்கிறோம். அதன் மூலமும் குருவருள் வந்து கொண்டே இருக்கிறது. இணைய தளங்கள் மூலம் அறிவு தந்த அத்தனை குருமார்களுக்கும் வணக்கம். 


குரு என்பவர் மனித வடிவில் தான் இருக்க வேண்டும் என்று அல்ல. நாம் பட்ட துன்பங்கள், வலிகள், வேதனைகள் நமக்கு பலவற்றை சொல்லித் தந்திருக்கும். அவைகளும்  நமக்கு குருதான். 


அத்தனை வலிகளுக்கும், வேதனைகளுக்கும், துரோகங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் குரு வணக்கம். 


பெயர் தெரியாத ரிஷிகள், முனிவர்கள், அருளாளர்கள், நாம் உய்ய வேண்டும் என்று உண்மைகளை எழுதி வைத்து விட்டுப் போய் இருக்கிறார்கள். அத்தனை பெரியவர்களுக்கும் குரு வணக்கம். 


நல்ல நண்பர்கள் இதமாகவும், பதமாகவும்,பல சமயங்களில் இடித்தும் பலவற்றை சொல்லித் தந்திருப்பார்கள். 


சொல்லித் தந்த அத்தனை நண்பர்களுக்கும் குரு வணக்கம். 


கற்றுக் கொள்வது என்பது அறிவை மட்டும் அல்ல. 


அன்பை, கருணையை, பாசத்தை, தியாகத்தை எல்லாம் கூட கற்றுக் கொள்ளலாம். 


தாயிடம், மனைவியிடம், மகளிடம், சகோதரியிடம், தந்தையிடம், கணவனிடம், மகனிடம், சகோதரனிடம் இருந்து நாம் அன்பை, கருணையை, பாசத்தைக் கற்றுக் கொள்கிறோம். 


"அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும், மாமியும் நீ" என்று உறவை எல்லாம் இறைவனாகப் பார்த்தார் நாவுக்கரசர். 


சொல்லித் தந்த அத்தனை உறவுகளுக்கும் குரு வணக்கம். 


எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராத கடன்களில் குருவுக்கு பட்ட கடன். 


கேளாமல் கிடைத்த வரம், குருவருள். 


கைகூப்பி வணங்கி, நன்றி சொல்வோம். 

Sunday, July 10, 2022

திருக்குறள் - பொறையுடைமை - வலிமையுள் வலிமை

   

 திருக்குறள் - பொறையுடைமை - வலிமையுள் வலிமை 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


குறள் 51: அகழ்வாரை)  https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_6.html

குறள் 52: மறப்பதும், மன்னிப்பதும்  https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html




)


இந்த பொறுமையா இரு, பொறுமையா இரு என்றால் என்ன?



நம்மை விட வலிமையான ஒருவன் நமக்குத் தீமை செய்கிறான் என்றால், அதைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. அலுவலகத்தில் பெரிய உயர் அதிகாரி நம் மேல் கோபம் கொண்டு ஏதோ தவறான வார்த்தை சொல்லி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம், பொறுக்காமல் என்ன செய்வது. அவரை எதிர்த்து சண்டை போட முடியுமா? 


நம்மை விட வலிமையான ஒருவன் நமக்குத் தீமை செய்தால் அதைப் பொறுப்பது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. வள்ளுவர் சொல்லுவது அதை அல்ல. 


நம்மை விட வலிமை குன்றியவன் அல்லது வலிமையில் சமமானவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான் என்றால் அதைப் பொறுப்பதைத் தான் பொறுமை என்கிறார். 


உதாரணமாக,



பெற்றோர் மேல் கோபம் கொண்டு பிள்ளைகள் ஏதோ சொல்லி விடுகின்றன. அதற்காக பிள்ளை மேல் கோபம் கொண்டு பதிலுக்கு பெற்றோரும் ஏதாவது செய்யலாமா? 


கணவன் மனைவி உறவில், சகோதர சகோதரி உறவில், நட்பில் ஏதாவது தவறு நிகழலாம். அங்கே பொறுமை காட்ட வேண்டும். 


இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு. தீமை செய்பவர்களுக்கு பொறுமை காட்டிக் கொண்டே இருந்தால் நம்மை ஒரு கையாலாகதவன் என்று நினைத்து விட மாட்டார்களா? தீமை செய்தவனை நாலு தட்டு தட்டினால் தானேஅடுத்த முறை தீமை செய்யமாட்டான்?



நாம் வலிமையானவர்கள் என்று எப்படி காட்டுவது? 



வள்ளுவர் சொல்கிறார்,, 



"உலகிலேயே பெரிய வலிமை எது தெரியுமா? எதிரிகளை சண்டையிட்டு வெல்லுவது அல்ல, தீமை செய்தவர்களை இருந்த இடம் தெரியாமல் அழிப்பது அல்ல. அதெல்லாம் எல்லோரும் செய்யக் கூடியது. அதில் என்ன பெரிய வலிமை இருக்கிறது?  நம்மை விட வலிமை குன்றியவர்கள் நமக்குச் செய்த தீமையை பொறுத்துக் கொள்வது தான் பெரிய வலிமை"  

என்கிறார். 

அந்த வலிமைக்கு ஒரு உதாரணம் சொல்ல நினைக்கிறார். 


அது எவ்வளவு பெரியது தெரியுமா என்று சொல்ல நினைத்த வள்ளுவர், என்ன சொன்னார் தெரியுமா?


"மலையை போல வலிமை" என்றோ 

"சீறும் சிங்கத்தைப் போல வலிமை " என்றோ 

"மதம் கொண்ட யானை போன்ற வலிமை" என்றோ சொல்லவில்லை. 



உலகிலேயே மிகப் பெரிய ஏழ்மை எது தெரியுமா? வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்க முடியாமல் இருப்பது தான். அதை விட கீழான ஏழ்மை இல்லை. அது போல, தன்னை விட வலிமை குன்றியவர் செய்த பிழையை போருப்பதைப் போல ஒரு வலிமை இல்லை என்கிறார். 

பாடல் 


இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை


பொருள் 




(pl click the above link to continue reading)




இன்மையுள் இன்மை  = இல்லாமல் இருத்தலில் பெரிய இல்லாமை (அதாவது ஏழ்மையில் பெரிய ஏழ்மை) 


விருந்தொரால் = விருந்தை உபசரிக்க முடியாமல் இருத்தல் 


வன்மையுள் = வலிமையில் 


வன்மை = பெரிய வலிமை 


மடவார்ப் பொறை = மடமையால் பிறர் செய்த பிழையை பொறுத்துக் கொள்வது 


வள்ளுவர் தெரிந்து எடுத்து சொற்களை பயன் படுத்துகிறார். 




"மடவார் பொறை"  - அறிவு இல்லாதவன் செய்த மிகைச் செயல்களை என்று.



பொறுமை என்பது பலவீனம் அல்ல. அதை விட பெரிய வலிமை இல்லை என்கிறார். 



கைகேயி இராமனுக்கு இழைத்தது அநீதி. இராமன் அவளைப் பொறுத்தான். 


இராவணன் செய்தது மிகப் பெரிய பிழை. நினைத்து இருந்தால் அவன் நிராயுதபாணியாக நின்ற போது கொன்று இருக்கலாம். "இன்று போய் நாளை வா"  என்றான் கோசல நாடுடை வள்ளல். 



அது பொறுமையின் எல்லை. 



இராமரை வணங்கினால் மட்டும் போதாது. அது யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். அதில் என்ன கடினம்? இராமரின் உயர்ந்த பண்புகளை கடை பிடிக்க முயல வேண்டும். 



சரி, பொறுக்கலாம். அது வலிமையாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நமக்கு என்ன நன்மை? 


சிந்திப்போம்





Saturday, July 9, 2022

திருக்குறள் - பொறையுடைமை - மறப்போம், மன்னிப்போம்

  

 திருக்குறள் - பொறையுடைமை - மறப்போம், மன்னிப்போம் 


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


குறள் 51: அகழ்வாரை)  https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_6.html

)


பொறுமையாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் சரிதான். 


ஆனால், பொறுமையாக இருந்து கொண்டு, மற்றவர்கள் நமக்கு செய்த தீமைகளை நினைத்துக் கொண்டே இருந்தால், அது நமக்கு நல்லதா?


அவன் இப்படிச் செய்தான், அவள் இப்படிச் சொன்னாள், எனக்கு வர வேண்டிய நல்ல வாய்ப்பை அவனால் இழந்தேன், இப்படி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்ற சுய பச்சாதாபம், தன்னிரக்கம் மேலோங்காதா? 

அப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா?

பொறுமையாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் நடந்த தீமைகளை நினைத்து வருந்தவும் கூடாது என்றால் அதற்கு என்ன வழி?


வள்ளுவர் சொல்கிறார் "மறந்து விடு" என்கிறார்.



"பொறுமையாக இருப்பது நல்லது. அதை விட அதை மறப்பது மிக நல்லது" என்கிறார். 


பாடல் 


பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனின்று நன்று



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_9.html


(please click the above link to continue reading)


பொறுத்தல் = பொறுமையாக இருப்பது 


இறப்பினை =  மற்றவர்கள் செய்த தீமையை 


என்றும் = எப்போதும் 


அதனை = அந்தத் தீமையை 


மறத்தல் = மறந்து விடுவது 


அதனின்று நன்று = அதை விட நல்லது 


பொறுமையாக இருப்பது நல்லது. அதை விட நல்லது அதை மறப்பது என்கிறார். 


எதுக்காக தேவையில்லாததை நினைவில் வைத்துக் கொண்டு துன்பப் படுவானேன்?




Friday, July 8, 2022

தாயுமானவர் பாடல் - சந்தைக் கூட்டம்

தாயுமானவர் பாடல் - சந்தைக் கூட்டம்  


தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ்

    சந்தையிற் கூட்டம் இதிலோ

  சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை

    சதுரங்க சேனையுடனே

வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம்

    வஞ்சனை பொறாமைலோபம்

  வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ

    வாஞ்சனையி லாதகனவே

எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே

    இரவுபக லில்லாவிடத்

  தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே

    யானென்ப தறவுமூழ்கிச்

சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ

    தேடரிய சத்தாகிஎன்

  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

    தேசோ மயானந்தமே.

Wednesday, July 6, 2022

திருக்குறள் - பொறையுடைமை - அகழ்வாரைத் தாங்கும் நிலம்

 

 திருக்குறள் - பொறையுடைமை - அகழ்வாரைத் தாங்கும் நிலம்  


(இந்த அதிகாரத்தில் உள்ள முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


)


எவ்வளவோ பொறுமையாக இருக்கிறோம். இருந்தும் நமக்கு சிலர் ஏதோ ஒரு விதத்தில் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார்கள். பதிலுக்கு ஏதாவது செய்தால்தான் அவர்கள் தாங்கள் செய்வதை நிறுத்துவார்கள் என்ற எண்ணம் நமக்கு வரலாம். 


பொறுமையாக இருப்பதை ஏதோ ஏமாளித்தனம் என்று நினைத்து விடக் கூடாது என்று நினைக்கலாம். 



பொறுமைக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்று நினைத்த வள்ளுவர் பூமியைக் காட்டுகிறார். 


நமக்கு நீர் வேண்டும் என்று பூமியை கடப்பாரை, இயந்திரம் கொண்டு துளைக்கிறோம். பூமியின் உள்ளே நிலக்கரி, தங்கம் போன்றவை இருக்கும் என்று வெடி வைத்து பூமியைப் பிளக்கிறோம். அப்படி செய்பவர்களை பூமி வாய் பிளந்து விழுங்கி விடுவதில்லை. தனக்கு துன்பம் செய்தவர்களையும் அந்த பூமி தாங்கிப் பிடிக்கிறது. விட்டு விடுவது இல்லை. 


அது போல

நமக்குத் துன்பம் தருபவர்களையும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவே தலையாய அறம் என்கிறார். 



பாடல் 


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_6.html



(please click the above link to continue reading)



அகழ்வாரைத் = அகழ்தல் = குழி தோண்டுதல். தன்னைத் தோண்டுபவர்களை 


தாங்கும் = தாங்கி நிற்கும் 


நிலம்போலத் = நிலம் போல 


தம்மை = தம்மை, ஒருவரை 


இகழ்வார்ப் = இகழ்பவர்களை 


பொறுத்தல் = பொறுத்துக் கொல்லுதல் 


தலை = தலையாய அறம் 


இகழ்தல் என்றால் மிகையான சொல்லுதலும், செய்தலும் என்பார் பரிமேலழகர். 


பொறுமை என்றால் என்ன? நமக்கு தீமை செய்தவர்களுக்கு பதிலுக்கு தீமை செய்யாமல் இருபதுதானே பொறுமை. வேறு என்ன பொறுமை இருக்க முடியும். 


நமக்கு நன்மை செய்பவர்களிடம் நாம் ஏன் பொறுமை காட்ட வேண்டும்?


பொறுமை என்பது நல்ல குணம் என்றால் அதை எப்போது கடை பிடிக்க வேண்டும்?  


பொறுமை இல்லாமல் இருத்தல் என்பது என்ன? அவசரப் பட்டு காரியம் செய்வது. அது தானே பொறுமைக்கு எதிர்ப்பதம்? அவசரப் பட்டு, சிந்திக்காமல், உணர்ச்சி வசப்பட்டு காரியம் செய்வது சரியா? 


நாம் ஏன் பொறுமை இழக்கிறோம்? அதில் ஏதோ ஒரு சுகம், அல்லது நன்மை இருபதால்தானே பொறுமை இழந்து ஏதோ செய்கிறோம் அல்லது சொல்கிறோம்? பொறுமை இழப்பதால் என்ன நன்மை இருக்க முடியும்? ஏன் பொறுமை இழக்கிறோம்? பொறமை இழக்காமல் இருந்தால் என்ன பலன் என்றெல்லாம் ஆழமாக சிந்தித்து விடை தருகிறார் வள்ளுவர். 


ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 


நம் வாழ்வின் நோக்கம் வீடு பேறு. அதற்கு துறவு வேண்டும். துறவுக்கு இல்லறம் வேண்டும். இல்லறத்தின் ஒரு கூறு பொறுமை. 


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள் 


The dogs bark but the caravan proceeds 


என்று. 


ஒட்டகத்தின் மேல் அமர்ந்து நெடும் தூரம் செல்பவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள். அவர்கள் போகிற வழியில் சில நாய்கள் அவர்களைப் பார்த்து குரைக்கும். 


ஆஹா, என்னைப் பார்த்து குரைக்கிறாயா நாயே, என்று ஒட்டகத்தின் மேல் இருந்து இறங்கி நாயைத் துரத்திச் சென்று அதைப் பார்த்து நாலு குரை குரைத்து விட்டு வருவார்களா யாராவது? 


நாய் பாட்டுக்கு குரைத்துக் கொண்டு இருக்கும். நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டே போக வேண்டும். குரைப்பது நம் வேலை அல்ல. நாம் போகும் தூரம் நீண்டது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தால் போய்ச் சேர முடியாது. 


இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 


பொறுமை என்பது நாம் மற்றவர்களுக்கு செய்யும் உபகாரம் அல்ல. நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை. 





Tuesday, July 5, 2022

திருக்குறள் - பொறையுடைமை - முன்னுரை

 திருக்குறள் - பொறையுடைமை - முன்னுரை 


'பிறனில் விழையாமை' என்ற அதிகாரம் பற்றி சிந்தித்தோம். 


அதற்கு அடுத்து பொறையுடைமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர். 


பொறை என்றால் பொறுமை. பொறையுடைமை என்றால் பொறுமையுடன் இருத்தல். 


பொறுமை இல்லாமல் நாம் செய்யும் சில காரியங்கள் எவ்வளவு பெரிய சிக்கல்களில் கொண்டு போய் விடுகின்றன. 


பொறுமை இழந்து ஒரு சொல் சொல்லி விடுவோம். பின் வாழ்நாள் எல்லாம் அதை நினைத்து வருந்துவோம். 


அது போல்தான் சில செயல்களும். அந்த ஒரு நொடியில் பொறுமை இழந்து பொறுக்க முடியாமல் ஒன்றை செய்துவிட்டு ஆயுள் முழுவதும் வருந்துவோம். 


வீட்டில் மட்டும் அல்ல. வெளியிலும், அலுவலகத்திலும், அக்கம் பக்கத்தில், சமூக பெரு வெளியில் பொறுமை தவறும் சமயங்கள் வரலாம். 


பொறுமை இழந்து நீங்கள் சொன்ன அல்லது செய்த காரியம் ஏதாவது ஒன்று நல்லதாக் முடிந்து இருக்கிறதா? 


இந்த அதிகாரத்தை ஏன் பிறனில் விழையாமை என்ற அதிகாரத்துக்குப் பின் வைக்க வேண்டும்?


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_5.html


(pl click the above link to continue reading)



ஒருவனுக்கு உச்ச பச்ச கோபம் எப்போது வரும்? எப்போது பொறுமை அற்றுப் போய் விடும்? தன் மனைவியை மற்றொருவன் கவர்ந்து கொண்டால், தவறனா முறையில் உறவு பாராட்டினால் எந்த ஆடவனாலும் சகிக்க முடியாது. அந்த இடத்திலும் பொறுமை வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு போய் விட்டான். போர் நடந்தது. இராவணன் அனைத்தும் இழந்து நிற்கிறான். ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். நாம் இராமன் இடத்தில் இருந்தால் என்ன செய்து இருப்போம்? இராவணனை இரண்டு துண்டாக அங்கேயே வெட்டிப் போட்டு இருக்க மாட்டோமா? 


அங்கே இராமன் பொறுமை காட்டுகிறான். 'இன்று போய் நாளை வா'  என்று இராவணனை அனுப்பி வைக்கிறான். 


தன் மனைவியை, எல்லோர் இருக்கும் சபையில் துகிலுரியச் சொன்ன துரியோதனன் மீது பொறுமையாக இருந்தான் தர்மன். "கை விரல் கண் மலர் மேல் பட்டால் கையை தண்டிக்க முடியுமா', ஏதோ பிழை செய்து விட்டான். துரியோதனன் நம் உறவினன் என்று அவன் மேல் பொறுமை காட்டினான். 


நமக்கு ஒருவன் தீங்கு செய்கிறான் என்றால் அது இரண்டு வழியில் நிகழலாம் என்கிறார் பரிமேலழகர் உரைப்பாயிரத்தில். 


தெரியாமல் செய்யலாம், தெரிந்து வேண்டும் என்றே செய்யலாம். 


எப்படி இருந்தாலும் பொறுமை காட்ட வேண்டும் என்று சொல்கிறது இந்த அதிகாரம். 


நாளை முதல் அதிகாரத்துக்குள் போவோம். 


அதற்கு முன், இந்த பொறுமை பற்றி என்னவெல்லாம் சொல்லலாம் என்று யோசியுங்கள். நீங்கள் பொறுமை பற்றி ஒரு கட்டுரை எழுதுவதாக இருந்தால் அதில் என்னவெல்லாம் சொல்வீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். பின், வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.



Sunday, July 3, 2022

நன்னூல் - யாருக்குச் சொல்லித் தரக் கூடாது

 நன்னூல் - யாருக்குச் சொல்லித் தரக் கூடாது 


எல்லாவற்றையும் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துவிட முடியாது. படிக்கின்ற பக்குவம் உள்ளவனுக்குத் தான் பாடம் சொல்ல வேண்டும். 


யார் யார்க்கு எல்லாம் பாடம் சொல்லித் தரக் கூடாது, யார் நல்ல மாணவர் ஆக மாட்டார் என்று நன்னூல் ஒரு பட்டியல் தருகிறது. 


பாடல் 


களிமடி மானி காமி கள்வன்

பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்

துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சித்

தடுமா றுளத்தன் தறுகணன் பாவி

படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post.html



(pl click the above link to continue reading)


களி  = கள்ளுண்டு களித்து இருப்பவன். குடிகாரனுக்கு சொல்லித் தரக் கூடாது. 


மடி = சோம்பேறி 


மானி  = தன் மேல் கர்வம் உள்ளவன். 


காமி  = காமுகன் 


கள்வன் = திருடன் 



பிணியன் = நோயாளி 


ஏழை = ஏழை. புத்தகம் வாங்க, ஆசிரியருக்கு , பள்ளிக்கு செலுத்த பணம் இல்லாதவன் 


பிணக்கன் =மாறுபட்ட சிந்தனை உள்ளவன் 


 சினத்தன் = கோபக்காரன் 


துயில்வோன் = தூங்குமூஞ்சி 


மந்தன் = மந்த புத்தி உள்ளவன். என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது 


தொன்னூற்கு அஞ்சித் = பழைய நூல்களை படிப்பதற்கு அஞ்சுபவன் 


தடுமா றுளத்தன் = நிலை இல்லாத உள்ளம் கொண்டவன் 


தறுகணன் = கொடூரமான செயலகளைச் செய்பவன் (எமனுக்கு தறுகணன் என்று ஒரு பெயர் உண்டு) 


பாவி = பாவம் செய்பவன் 


படிறன் = பொய் சொல்பவன் 


இன்னோர்க்குப் பகரார் நூலே = இப்படிப் பட்டவர்களுக்கு நல்ல நூல்களில் உள்ளவற்றை சொல்லித் தர மாட்டார்கள் 


நன்னூல் காலத்தில் தொன்னூல் படிக்க அஞ்சிய ஆட்கள் இருந்து இருக்கிறார்கள் என்றால், அதற்கு முன் எவ்வளவு நூல்கள் இருந்திருக்க வேண்டும். 


நூல் எழுதும் பழக்கம் இருந்திருந்தால், மக்களின் வாழ்வு, மொழி வளம், இலக்கணம் எல்லாம் எவ்வளவு பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்? 


எவ்வளவு சிறப்பு வாய்ந்தது நம் பரம்பரை, மொழி, மற்றும்  கலாசாரம்.