Saturday, January 25, 2014

திரு மந்திரம் - நிலையாமை

திரு மந்திரம் - நிலையாமை 


மரணம் என்பது நிச்சயம் என்று தெரிந்தாலும் , அது என்னோவோ இப்போதைக்கு இல்லை, என்றோ வரப் போகிறது என்று மனிதன் நினைக்கிறான். என்றோ என்றால் நாளையோ, நாளை மறுதினமோ, அடுத்த வாரமோ இல்லை...பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் இருக்கிறது ஒவ்வொருவனும் நினைக்கிறான்.

ஏறக்குறைய நமக்கு இல்லை என்றே நினைக்கிறான்.

இருப்பது பொய் போவது மெய் என்ற நினைப்பிருந்தால் மனிதன் இவ்வளவு ஆட்டம் போடுவானா ?

நல்ல காரியங்களை அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறான்.

அன்றென்று எண்ணாமல் அறம் செய்க என்றார்  வள்ளுவர்.

நாம் சுற்றி முற்றி பார்த்தால் நம் நண்பர்களோ உறவினர்களோ அடிக்கடி இறப்பது போலத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக எப்போதோ நடப்பதால் நமக்கு மரணம் என்பதின் நினைப்பு அடிக்கடி வருவது இல்லை.

திருமூலர் சொல்கிறார்....நீ மற்றவர்களை பார்க்காதே...

நாள் தோறும் சூரியன் காலையில் எழுந்து மாலையில் மறைகிறது...ஒவ்வொரு நாளும்  அது பிறக்கிறது இறக்கிறது.

ஹா...சூரியன் என்பது பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை என்று சொன்னால் ... உங்கள் வீட்டு கன்றுக் குட்டியை பாருங்கள். கன்று பிறக்கிறது, தாய் பசு மறைகிறது....உங்களை சுத்தி பாருங்கள்....இயற்கை உயிர்களை நாளும் உண்டாக்குகிறது, மறைய வைக்கிறது....அவற்றை கண்டாவது  ....

வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்று உணர வேண்டும்.

நெருங்கியவர்கள் மறைந்தால் அது இயற்கையான ஒன்று என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்

நமக்கும் அதுதான் என்று எண்ணி இருக்கும் வரை நல்ல படியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்....

பாடல்

 
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.


சீர் பிரித்த பின்

கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே 
விழக் கண்டும்  தேறார் விழியிலா மாந்தர்
குழக் கன்று  முத்து எருதை சில நாளில்
விழக் கண்டும்  தேறார் வியனுல கோரே.


பொருள்

கிழக்கு  = கிழக்கில்
எழுந்து = உதித்து
ஓடிய = மேல் நோக்கி எழுந்து
ஞாயிறு = சூரியன்
மேற்கே = மேற்கு திசையில் 
விழக் கண்டும் = மறைவது கண்டும்
தேறார் = அறிய மாட்டார்கள்
விழியிலா மாந்தர் = கண்ணிலாத மாந்தர்கள். சூரியன் எவ்வளவு பிரகாசமானவன், நாளும் இது நடக்கிறது. ஆனால் காண்பது இல்லை நாம்.
குழக் கன்று = குழந்தையான கன்று
மூத்து = வயதாகி
எருதை = எருதாக மாறி
சில நாளில் = சிறிது நாட்களில்
விழக் கண்டும் = இறந்து விழக் கண்டும்
தேறார் = அறிய மாட்டார்
வியனுல கோரே = இந்த உலக மாந்தரே



பிறந்தோம். வளர்ந்தோம். உழைத்தோம். நாலு காசு சம்பாதித்தோம். இறந்தோம்.

இது தானா வாழக்கை ?

சிந்தியுங்கள் என்கிறார் திருமூலர்

சமயம் கிடைக்கும் போது சிந்தியுங்கள்.



1 comment:

  1. இறப்பு இல்லை என்று எண்ணாமல், நாமும் இறப்போம் என்று எண்ணி வாழ்ந்தால் எப்படி மாற்றிச் செயல் படுவோம்?

    நல்ல பாடல். நன்றி.

    ReplyDelete