Friday, August 1, 2014

சிவ புராணம் - நமச்சிவாய வாழ்க

சிவ புராணம் - நமச்சிவாய வாழ்க 

இறைவனைப் பற்றிய சிந்தாந்தங்கள் மனிதனை குழப்பியதைப் போல வேறு ஏதாவது குழப்பியிருக்குமா என்பது சந்தேகமே.

அத்தனை கடவுள்கள், அத்தனை மார்கங்கள், சமயங்கள், சமய கோட்பாடுகள்....இதில் என் மதம் உயர்ந்தது, உன் மதம் தாழ்ந்தது என்ற சண்டை சச்சரவுகள்.....

இதற்கு நடுவில், கடவுள் இல்லவே இல்லை என்று வாதிடும் ஒரு கூட்டம். அந்த கூட்டம் ஏதோ அறிவியல் வளர்ச்சியால் இன்று வந்ததது அல்ல.

"நாத்திகம் பேசி நாத் தழும்பு ஏறி " என்று மணிவாசகர்  குறிப்பிடுகிறார்.அவர் காலத்திலேயே நாத்திகம் இருந்திருக்கிறது.

இதற்குப் பின்னால் இறைவன் இருக்கிறானா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது என்று ஒரு கூட்டம்.

ஏன் இவ்வளவு குழப்பம் ?

அது அப்படி ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் ஒரு நாள் உங்கள் உறவினரையோ நண்பரையோ பார்க்க அவர்கள் இருக்கும் ஊருக்குப் போகிறீர்கள். இதற்க்கு முன்னால் போனது கிடையாது. கையில் விலாசம் இருக்கிறது. ஆனால் சரியான இடம்  தெரியாது.

அவர் இருக்கும் இடத்திற்கு சற்று தொலைவு வரை வந்து விட்டீர்கள்.

அங்கு உள்ள ஒருவரிடம் அந்த விலாசத்தைக் காட்டி உங்கள் நண்பரின் வீட்டுக்கு எப்படி போவது என்று கேட்கிறீர்கள்.

"இப்படியே நேர போய் , இடது புறம் திரும்பினால் ஒரு சந்து வரும், அதில் மூணாவது  வீடு" என்கிறார்.

இதுவே நீங்கள் எதிர் திசையில் இருந்திருந்தால், அங்குள்ள ஒருவர், "இப்படியே நேரே போய் வலது புறம் திரும்பினால் ஒரு சந்து வரும். அதில் மூணாவது வீடு" என்று சொல்லி இருப்பார்.

ஒரு வேளை நீங்கள் அந்த சந்திலே நின்று கொண்டு விலாசம் கேட்டு இருந்தால் "இந்தத் தெரு தான், அதோ இருக்கு பாரு பாருங்க அந்த பச்சை கலர் பெயிண்ட் அடித்த வீடு...அது தான்" என்று சொல்லி இருப்பார்.

அந்த வீட்டுக்கு போய் விட்டீர்கள். அது ஒரு அடுக்கு மாடி கட்டிடம். வாசலில் உள்ள காவலாளியிடம் கேட்கிறீர்கள்...அவர் "ஆறாவது மாடி சார், லிப்டுல மேல போனீங்கனா , ஆறாவது மாடியில இடது புறம் இரண்டாவது வீடு " என்று  சொல்வார்.


ஒரே வீடுதான், ஒருவர் இடது புறம் போ என்கிறார், ஒருவர் வலது புறம் போ என்கிறார், ஒருவர் நேரே போ என்கிறார், ஒருவர் மேலே போ என்கிறார்....

எப்படி எல்லாம் சரியாக இருக்க முடியும் ?

இடது புறம் திரும்பு என்று சொன்னவரும், வலது புறம் திரும்பு என்று சொன்னவரும் ஒருவரை ஒருவர் "நான் சொல்வதுதான் சரி " என்று  சண்டை பிடித்துக் கொண்டால் எப்படி இருக்கும்   ?

எல்லாம் சரிதான்...இருந்து ஏன் வேறு வேறு வழியாக இருக்கிறது ?

காரணம், நீங்கள் நின்று கேட்ட இடம் வேறு வேறு.

நீங்கள் எங்கிருந்து புறப்படுகிரீர்களோ, போய் சேர வேண்டிய வழி நீங்கள் புறப்படும் இடத்தை பொறுத்து மாறும்.

இறைவன் பலவாறாக இருக்கக் காரணம், மதங்கள் பலவாறாக இருக்கக் காரணம் மனிதன் பலவாறாக இருக்கிறான்.

அவன் பிறந்த சூழ்நிலை, படித்த படிப்பு, நண்பர்கள், அவன் அனுபவம் என்று மனிதன்  பல பரிணாமங்களில் இருப்பதால் அவன் தேடும் இறையும் அதன் வழிகளும் வேறு வேறாக இருக்கிறது.

ஒவ்வொரு சமயப் பெரியாரும் அவர் நின்ற இடத்தில் இருந்து இறைவனை காண வழி சொன்னார். நீங்களும் அதே இடத்தில் நின்றால், அந்த வழி உங்களுக்கும் சரியாக இருக்கும்.

ஆனால், நீங்கள் அவர் இடத்தில் இல்லை. எனவே அவர் சொன்ன வழி உங்களுக்கு சரியாக இருக்காது.  நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து நீங்கள் தான்  வழி காண வேண்டும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

அது மட்டும் அல்ல, நீங்கள் இருக்கும் இடம் நாளும் மாறிக் கொண்டே இருக்கிறது.


அவர் சொன்ன பாதையில் சென்றேன். ஒண்ணும் தெரியவில்லை என்றால் தெரியாது. அவர் நின்ற இடத்தில் இருந்து அவர் சென்ற பாதை சரி. ஆனால் நீங்கள் நிற்கும் இடம் வேறு. அவர் சொன்ன பாதை உங்களுக்கு எப்படி சரியாக வரும் ? நீங்கள் தான் தேடி கண்டடைய வேண்டும்.

நீங்கள் போய் சேரும் இடம் எப்படி இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் அங்கே எப்படி போவது என்று சொல்ல முடியாது.

சிலருக்கு உருவமாய்த் தெரிகிறது, சிலருக்கு ஜோதியாய் தெரிகிறது, சிலருக்கு மந்திர வடிவாய் தெரிகிறது, சிலருக்கு ஒன்றும் இல்லாத வெளியாகத் தெரிகிறது, சிலருக்கு எங்கும் நிறைந்த ஆத்ம சொரூபமாகத் தெரிகிறது , சிலருக்கு ஒன்றும் தெரிவது இல்லை ....எல்லாம் ஒன்றுதான்....


பாடல்

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க


இந்த ஐந்து வரிகளை நான் பள்ளியில், கல்லூரியில்  படிக்கும் காலத்திலேயே கேட்டதுண்டு. வாசித்தது  உண்டு. ஏதோ மணிவாசகர் இறைவனைப் பற்றி வர்ணிக்கிறார் என்ற அளவில் வாசித்து விட்டு போய் இருக்கிறேன்.

இதற்குள் இவ்வளவு அர்த்தமா என்று இன்று வியக்கிறேன்.

அப்படி என்ன இதில் இருக்கிறது ?

2 comments:

  1. அப்படி என்ன இதில் இருக்கிறது ?

    ReplyDelete
  2. மிக அழகான, பொருத்தமான உவமை. மிக்க நன்றி.

    ReplyDelete