Sunday, January 18, 2015

திருக்குறள் - காக்க பொருளாக அடக்கத்தை

திருக்குறள் - காக்க பொருளாக அடக்கத்தை 


நம்மிடம் யாராவது உங்களுடைய உடமைகள் என்னென்ன என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

நம்மிடம் இருக்கும் வீடு, நிலம், நகை, பங்குகள், கார், வங்கியில் உள்ள பணம், இவற்றைச் சொல்லுவோம்.

இவை நம் உடமைகளா ?

வள்ளுவர் வேறு சிலவற்றை உடமைகள் என்று சொல்கிறார்.

முதலில் அவர் சொல்லுவது அடக்கம் உடமை.

அதைத் தொடர்ந்து மேலும் சில உடமைகளை சொல்கிறார்....ஒவ்வென்றுக்கும் ஒரு அதிகாரம் வேறு வைத்து  இருக்கிறார்.


  1. அருளுடைமை 
  2. அறிவுடைமை 
  3. அன்புடைமை 
  4. ஆள்வினையுடைமை 
  5. ஊக்கமுடைமை 
  6. ஒழுக்கமுடைமை 
  7. நாணமுடைமை 
  8. பண்புடைமை 
  9. பொறையுடைமை 


அடக்கமுடமையுடன் சேர்த்து மொத்தம் பத்து சொத்துகள்.

யோசித்துப் பாருங்கள், இதில் உங்களிடம் எத்தனை சொத்துகள் இருக்கின்றன என்று.

இதில் முதலில் வந்த அடக்கமுடைமை அதிகாரத்தில்  அடக்கம் அமரருள் உய்க்கும் என்று  பார்த்தோம்.

அடக்கம் என்றால் ஏதோ ஒன்று எதிலோ வேறொன்றில் அடங்க வேண்டும்.

நம்மிடம் ஒரு உயர்ந்த பொருள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எப்படி பாதுகாப்போம் ? ஒரு விலை உயர்ந்த வைரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதை எப்படி பாதுகாப்போம் ? அதன் மேல் எவ்வளவு கவனமாக இருப்போம் ? அடிக்கடி அது பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்போம் அல்லவா ?

கவனாமாக இல்லாவிட்டால் தொலைந்து போய் விடும் அல்லவா ?

அது போல அடக்கம் என்ற உடமையை பாதுகாக்க வேண்டும்  என்கிறார்.

பாடல்

காக்க பொருளா வடக்கத்தை யாக்க

மதனினூஉங் கில்லை யுயிர்க்கு

சீர் பிரித்த பின்

காக்க பொருளாக அடக்கத்தை ஆக்கம் 
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு 


பொருள்

காக்க = காபாற்றுக

பொருளாக = உயர்ந்த பொருளாக

அடக்கத்தை = அடக்கத்தை

ஆக்கம் = உயர்வு

அதனின் = அதைவிட

 ஊங்கு இல்லை உயிர்க்கு = உயிர்களுக்கு அதை விட ஒன்றும் இல்லை

இதை விட ஒரு படி மேலே போகிறார் வள்ளுவர்.

நம் குழந்தைகளை நாம் எப்படி பாதுகாப்போம் ?

அவர்களை சிறிது நேரம் காணவில்லை என்றாலும் தவித்துப் போவோம் அல்லவா ? அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் இரவு பகல் கண் விழித்து மருத்துவம் பார்ப்போம் அல்லவா.

குழந்தை காணாமல்  போய் விட்டால், போனால் போகிறது என்று இருப்போமோ ?

வள்ளுவர் பொருள் என்று கூறுவது குழந்தைகளை.

புதல்வரைப் பெறுதல் என்ற அதிகாரத்தில்,

 தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள்
தம்தம் வினையால் வரும்.

தம் பொருள் என்பது தம் மக்கள் என்கிறார். 

பொருள் என்பது பிள்ளைகளையே குறிக்கும். அல்லது, அந்த காலத்தில் குறிக்கப் பட்டிருக்கிறது.

நாம் குழந்தைகளை எப்படி பாதுகாப்போமோ அப்படி அடக்கத்தை பாதுகாக்க வேண்டும் .

ஒரு நிமிடமும் நம் கவனத்தில் இருந்து பிரிந்து போய் விடக் கூடாது. 

பிள்ளைகள் ஆசைப் பட்டு கண்டதையும் கேக்கும். அதற்காக ஒரு பொறுப்புள்ள பெற்றோர் அதை வாங்கித் தருவார்களா ? மாட்டார்கள் அல்லவா. அது போல புலன்கள் கண்டதையும் கேக்கும். பிள்ளைகள் கண்டதையும் சாப்பிட்டு உடலை கெடுத்து கொள்ளாமல் எப்படி அவற்றை பாதுகாப்போமோ அது போல புலன்கள் கண்டதையும் அனுபவித்து கெட்டுப் போகாமால்  காக்க வேண்டும். 

கண்டித்து வளர்க்கவில்லை என்றால் பிள்ளைகள் கெட்டுப் போவார்கள். அது போல  புலன்களை கண்டித்து அடக்கி வைக்க வேண்டும். 

பிள்ளைகள் தீயனவற்றை பார்க்கக் கூடாது என்று நாம் அக்கறை கொள்வோம்...வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று உள்ள படங்களை பிள்ளைகளை  பார்க்க அனுமதிக்க மாட்டோம். அது போல, புலன்களை கண்டதையும் பார்க்க அனுமதிக்கக் கூடாது. 

பிள்ளைகள் தீயவர்களோடு பழகுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். அது போல புலன்கள் தீய வழியில் செல்வதை அடக்க வேண்டும்.

சுருக்கமாக, பிள்ளையைப் பார்ப்பதைப் போல அடக்கத்தை காக்க வேண்டும். அடக்கம் என்பது மனம், வாக்கு செயல் வழி வெளிப்படுவதால் , அவற்றை பிள்ளைகளைப் போல   காக்க வேண்டும். 

எவ்வளவு ஆழமாக யோசித்து இருக்கிறார்கள் ?

 


No comments:

Post a Comment