Tuesday, March 3, 2015

இராமாயணம் - நல்லது செய்யும் முன்

இராமாயணம் - நல்லது செய்யும் முன் 


ஒரு நல்ல காரியம் நடக்கப்  போகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு முன் என்ன செய்ய வேண்டும் ?

ஒரு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது, இன்னும் சிறிது நாளில் திருமணம் நடக்கப் போகிறது என்றால் நாம் என்ன செய்வோம் ?

மண்டபம் பாப்போம், பத்திரிகை அடிப்போம், சமையலுக்கு, பந்தலுக்கு என்று ஆள் தேடுவோம்.

வீடு வாங்க முன் பணம் கொடுத்து விட்டால் என்ன செய்வோம், வங்கியில் கடன் வாங்க விண்ணப்பம் செய்வோம்.

அந்தக் காலத்தில் , நம் முன்னவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ?

யாருக்கு நல்லது நடக்கப் போகிறதோ அவர்களுக்கு பெரியவர்களைக் கொண்டு நாலு நல்ல வார்த்தை சொல்லச் சொல்வார்கள்.

"பையனுக்கு / பெண்ணுக்கு நிச்சயம் பண்ணி இருக்கிறோம்....அவனுக்கு/அவளுக்கு  நல்லது எடுத்துச் சொல்லுங்கள் " என்று வீட்டுக்கு வரும் பெரியவர்களை  வேண்டிக் கொள்வார்கள். அவர்களும் அந்த பெண்ணையோ, பையனையோ அழைத்து திருமணம் என்றால் என்ன, அதில் உள்ள நெளிவு சுழிவுகள் என்ன, எப்படி வாழ வேண்டும், எங்கே தவறு வரும், அதை எப்படி தடுப்பது என்றெல்லாம் தங்களது அறிவில் இருந்து அனுபவத்தில் இருந்து சொல்லித் தருவார்கள்.

பெண்ணும் மாப்பிளையும் திருமணம், முதலிரவு என்று மகிழ்ச்சியில் இருக்கும் போது அதையும் தாண்டி வாழ்வில் உள்ள கடமைகள் , திருமண வாழ்வில் உள்ள   சிக்கல்கள் இவை அவர்களுக்குத் தெரியாது. அது தெரிந்த பெரியவர்களைக் கொண்டு சொல்லச் சொன்னால் "ஓ, இப்படியெல்லாம் இருக்கிறதா " என்று அவர்கள் மனதில் தோன்றும். அவர்களை திருமண வாழ்விற்கு தயார் செய்யும்.

வீடு வாங்கப் போகிறாயா, வீடு எப்படி இருக்க வேண்டும், பத்திரத்தில் எதுவெல்லாம் இருக்க வேண்டும், எப்படி சிக்கனமாக இருந்து கடனை அடைக்க வேண்டும்   என்றெல்லாம் சொல்லித் தருவார்கள்.

ஒரு பத்து பேர் சொல்லும் போது , அதில் பொதுவான சில கருத்துகள் மீண்டும் மீண்டும் வரும். அது அவர்கள் (பெண்ணோ, பிள்ளையோ, வீடு வாங்குபவர்களோ) மனதில் ஆழமாக  பதியும்.


இங்கே,

இராமனுக்கு முடி சூட்டுவதாக முடிவு செய்து விட்டது. தசரதன் என்ன செய்தான் தெரியுமா, வசிட்டனை அழைத்து இராமனுக்கு அறிவுரை சொல்லச் சொன்னான்.

 பாடல்

‘நல் இயல் மங்கல நாளும் நாளை; அவ்
வில் இயல் தோளவற்கு ஈண்டு வேண்டுவ
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது ‘எனத் தொழுது சொல்லினான்.

பொருள் 

தசரதன், வசிட்டனிடம் சொல்லுகிறான்

‘நல் இயல் மங்கல நாளும் நாளை = நாளையே நல்ல நாள்


அவ் = அந்த
வில் இயல் = வில்லை தன் இயல்பாகக் கொண்ட

தோளவற்கு = தோளை உடைய இராமனுக்கு

ஈண்டு = இப்போது

வேண்டுவ = தேவையானவற்றை

ஒல்லையின் இயற்றி = சீக்கிரமாக , விரைந்து சொல்வாயாக

நல் உறுதி = நல்ல, உறுதி வாய்ந்த

வாய்மையும் = உண்மையும்

சொல்லுதி பெரிது ‘ = விரிவாக எடுத்துச் சொல்

எனத் தொழுது சொல்லினான்.= என்று வணங்கி வேண்டினான்

மற்ற அரசர்களுக்கு ஓலை அனுப்ப வேண்டும், மண்டபத்தை தயார் செய்ய வேண்டும், சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், வருபவர்களை தங்க வைக்க  இடம் சரி செய்து தர வேண்டும்....சக்ரவர்த்தி திருமகனின் முடி சூட்டு விழா...எப்படி இருக்க வேண்டும் ?

இதெல்லாம் இருக்க, தசரதன், வசிட்டனிடம் இராமனுக்கு அறவுரை சொல்லச் சொல்கிறான்.

நமகெல்லாம் ஒரு பாடம்.

நாளை நம் வீட்டில் ஒரு நல்லது நடக்க இருக்கிறது என்றால், நாம் என்ன செய்ய வேண்டும்  என்று கம்பன் பாடம் நடத்திவிட்டு போகிறான்.

பெரியவர்கள் அறவுரை சொல்லும் போது  இன்னொன்றும் நிகழும்.

நாளை அந்த பையனுக்கோ , பெண்ணுக்கோ ஒரு சிக்கல் வந்தால், "நாம் சொல்லி, வாழ்த்தி வந்த பையன்/பெண், அவர்களுக்கு ஒரு சிக்கல், நான் எப்படி  பார்த்துக் கொண்டு இருக்க முடியும் " என்று அந்த சிக்கலை சரி செய்ய உதவுவார்கள்.

பெரியாரைத் துணைகோடல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

வயதில் சிறியவர்கள், பெரியவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தின் ஆழத்தை  அறிய மாட்டார்கள். பெற்றோர்கள் தான் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அது ஒரு புறம் இருக்க,

இராமன் பெரிய ஞானி. அவனுக்குத் தெரியாதது இல்லை.

அவனுக்கு வசிட்டன் என்ன சொல்லி இருப்பான் ?

பார்ப்போம் ..



1 comment:

  1. அழகான, ஆழமான கருத்துள்ள பாடல். நன்றி

    ReplyDelete