Sunday, May 31, 2015

அபிராமி அந்தாதி - கல்லாமை கற்ற கயவர்

அபிராமி அந்தாதி - கல்லாமை கற்ற கயவர்


நாம் ஒன்றைச் செய்ய முடிவு செய்யும்போது, அது அல்லாத மற்றவற்றை செய்வதில்லை என்ற முடிவையும் எடுக்கிறோம்.

அடுத்த ஒரு மணி நேரம் டிவி பார்ப்பது என்று முடிவு செய்து விட்டால், அடுத்த ஒரு மணி நேரம் படிப்பது இல்லை, உடற் பயிற்சி செய்வது இல்லை, என்று எத்தனையோ விஷயங்களை செய்வது இல்லை என்பதும் முடிவு செய்யப் படுகிறது அல்லவா.

அதே போல், நாம் ஒன்றை படிக்கிறோம் என்று முடிவு செய்து விட்டால், அந்த ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் படிப்பது இல்லை என்றும் முடிவு செய்கிறோம்.

எஞ்சினீரிங் படிப்பது என்றால் மருத்துவம் படிப்பது அல்ல, சட்டம் படிப்பது இல்லை, வணிகம் படிப்பது இல்லை என்று முடிவு செய்கிறோம்.

உலகில் ஒன்றைப் படிப்பது என்றால், ஒரு கோடி விஷயத்தை படிக்காமல் விடுவோம்.

கற்பது என்பது கல்லாமையும் அடங்கியது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வாழ்வில் மிக மிக கொடுமையானது எது என்றால் வறுமை.

 கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை

என்பார் ஔவையார். வறுமையின் கொடுமை அதை அனுபவித்தர்களுக்குத்தான் தெரியும்.

அந்த வறுமையை போக்க அபிராமியின் பாதங்களைப் பற்றுங்கள் என்று அழைக்கிறார் அபிராமி பட்டர்.

பாடல்

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

பொருள்

இல்லாமை சொல்லி = என்னிடம் இல்லை என்று  சொல்லி

ஒருவர் தம்பால் சென்று = மற்றவர்களிடம் சென்று

இழிவுபட்டு = கேவலப் பட்டு

நில்லாமை = நிற்காமல் இருப்பதை

 நினைகுவிரேல் = நீங்கள் நினைத்தால்

நித்தம் = தினமும்

நீடு தவம் = நீண்ட தவம்

கல்லாமை = கல்லாமல் இருப்பது

கற்ற கயவர் தம்பால் = அதைக் கற்ற கயவர்களிடம்

ஒரு காலத்தும் = எப்போதும்

செல்லாமை வைத்த = செல்லாமல் காக்கும்

திரிபுரை = அபிராமியின்

பாதங்கள் சேர்மின்களே = பாதங்களை அடையுங்கள்.

இல்லாமை என்று கூறும்போது, அது செல்வம் இல்லாமை மட்டும் இல்லை, கல்வி, ஆரோகியம், அதிகாரம், புகழ், மதிப்பு, என்று எந்த ஒரு இல்லாமையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அவள் பாதங்களைப் பற்றுங்கள், இல்லை என்று சொல்லி நீங்கள் இன்னொருவரிடம்  செல்ல வேண்டியது இருக்காது. எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

அது என்ன "கல்லாமை கற்ற கயவர்"

நாம் ஏதோ படித்து விட்டோம் என்று இறுமாப்பு கொள்கிறோம். நாம் படிக்காததையும், படித்தையும் வைத்துப் பார்த்தால் தெரியும் நாம் படித்தது எவ்வளவு, படிக்காமல் விட்டது எவ்வளவு என்று.

நாம், கல்லாமையைக் கற்று இருக்கிறோம்.

அறியாமையை அறிந்து இருக்கிறோம்.

மேலும், நம் கல்வி நம்மை எங்கே இட்டுச் செல்கிறது ?  

"நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால்"

நீண்ட தவத்தை கற்காத  கயவர் தம்பால். எதையெதையோ கற்கிறோம். நீண்ட தவத்தை கற்க வேண்டும் என்கிறார் பட்டர்.

 


2 comments:

  1. "கல்லாமை கற்ற கயவர்" என்றால் "நான் படிக்க மாட்டேன், சிந்திக்க மாட்டேன், புரிந்துகொள்ள மாட்டேன்" என்று அடம் பிடித்து, செல்வம், புகழ் போன்றவைகளில் இருமாந்திருப்பவர் என்று கொள்ளலாமா?

    ReplyDelete
    Replies
    1. ஆம். நீங்கள் சொல்வது சரியே.

      Delete