Thursday, October 29, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - வருத்தம் அனைத்தும் போக

இராமானுஜர் நூற்றந்தாதி - வருத்தம் அனைத்தும் போக



உலகில் எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன. அதை வேண்டியே முயற்சியும் செய்கின்றன. இருந்தும் துன்பம் வருகிறது.

ஏன் ?

துன்பத்திற்கு மூல காரணம் என்ன ?

காமம் - வெகுளி - மயக்கம் எந்த மூன்றும் தான் துன்பத்திற்கு காரணம்.

காமம் புரிகிறது - ஆசை, பற்று. பொருளின் மேல், புகழின் மேல், பெண்ணின் மேல், இப்படி ஆயிரம் பற்றுகள்.

வெகுளி - கோபம். ஆசைப் பட்டது கிடைக்காவிட்டால் கோபம் வருகிறது. கோபத்திற்கு காரணம் ஆசை.

மயக்கம் - எது சரி, எது தவறு / எது உண்மை, எது பொய் / எது நிரந்தரமானது, எது நிரந்திரம் இல்லாதது என்ற குழப்பம் மயக்கம் எனப்படும்.

இந்த மூன்றும் நம் துன்பத்திற்கு காரணம்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்

என்பார் வள்ளுவர்.

இந்த மூன்றும் எப்படி போகும் ?

ஆசாரியனின் பாதங்களைப் பிடித்தால் காமம், வெகுளி , மயக்கம் என்ற இந்த மூன்றும்  போகும். அவை போய் விட்டால் துன்பம் தானாக ஓடிவிடும்.


அமுதனார் சொல்கிறார்.

"எனக்கும் வருத்தம் இருந்தது. ஆனால், அந்த வருத்தம் இப்போது இல்லை.  போய் விட்டது.

எப்படி தெரியுமா ?

வார்த்தைகளுக்கு எட்டாத பெரும் புகழை உடைய நம் கூத்தாழ்வானின் திருவடிகளை அடைந்த பின் , எனக்கு இராமனுஜரின் புகழைப் பாடும் தைரியம் வந்து விட்டது. இனி மேல் இந்த பிறவி என்ற பெரும் வழியைக் கடந்து விடுவேன். எனக்கு இப்போது எந்த வருத்தமும் இல்லை. "


பாடல்

மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.


பொருள் 


மொழியைக் = வார்த்தைகளை 

கடக்கும் = தாண்டி, வார்த்தைகளுக்கு அடங்காத 

பெரும்புகழான் = பெரிய புகழை உடையவன் 

வஞ்ச முக்குறும்பாம் = வஞ்சகமான மூன்று குறும்பான 

குழியைக் கடக்கும் = குழியை கடக்க உதவும் 

நம் = நம்முடைய 

கூரத்தாழ் வான்  = கூரத்தாழ்வானை 

சரண் கூடியபின் = சரணம் அடைந்த பின் 

பழியைக் கடத்தும் = பழியை கடக்கும் 

இராமா னுசன் = இராமானுசன் 

புகழ் பாடியல்லா = புகழைப் பாடி 

வழியைக் கடத்தல் = வழியைக் கடப்பது 

எனக்கினி யாதும் வருத்தமன்றே. = எனக்கு + இனி + யாதும் + வருத்தம் + அன்றே 

அது என்ன முக்குறும்பு ? 

குறும்பு என்றாலே செய்வதோ சொல்வதோ ஒன்றாக இருக்கும், ஆனால் அதற்குப் பின்னால்  வேறு ஒன்று இருக்கும். இந்த காம வெகுளி மயக்கம் என்ற மூன்றும்   முதலில் நல்லது போலத் தோன்றினாலும், பின்னாளில் வருத்தத்தில் கொண்டு போய் விட்டு விடும். 

முந்தைய பாடலில் இராமனுசன் மேல் தனக்கு அன்பில்லை, பக்தி இல்லை என்று கூறினார். பின் கூரத்தாழ்வானின் சரணம் புகுந்த பின், பயம் தெளிந்து விட்டது. இனி இராமானுஜரின் புகழைப் பாடலாம் என்று நினைக்கிறார்.

அது மட்டும் அல்ல, அபப்டி அவர் புகழ் பாடுவதன் மூலம், இந்த பிறவி என்ற நீண்ட பாதையை கடந்து விட முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு வருகிறது. இனி ஒரு கவலை இல்லை என்கிறார். 

ஆசாரியன் மேல் அவ்வளவு பக்தி. அவ்வளவு நம்பிக்கை.


Monday, October 26, 2015

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை 


எல்லோருக்கும் தெரிந்த குறள் தான். தெய்வத்தை தொழாமல், கணவனை தொழுது எழுவாள். அவள் பெய் என்றால் மழை பெய்யும்.

குறள்

தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள்,
‘பெய்’ என, பெய்யும் மழை.

பொருள்

தெய்வம்= தெய்வத்தை

தொழாஅள் = தொழ மாட்டாள்

கொழுநன் = கணவனை

தொழுது எழுவாள் = தொழுது எழுவாள்

‘பெய்’ என, பெய்யும் மழை.= அவள் பெய் என்றால் மழை பெய்யும்

அஹா, இந்த வள்ளுவர் பெரிய ஆணாதிக்க வர்கத்தை சேர்ந்தவராக இருப்பார் போல் இருக்கிறதே.

மனைவி எதற்காக கணவனை தொழ வேண்டும் ? ஏன் கணவன் மனைவியை தொழக் கூடாது ?

பெண் அடிமை தனத்திற்கு வக்காலத்து வாங்குவது போல் இருக்கிறதே இந்தக் குறள் என்று கொடி பிடிப்பதற்கு முன்னால் சற்று ஆழ்ந்து யோசிப்போம்.


இது யாருக்குச் சொல்லப் பட்ட குறள் ?

பெண்ணுக்கா ? கணவனை தொழுது எழு என்று பெண்ணுக்கு சொல்லவா இந்த குறள் முனைகிறது ?

இல்லை, இது கணவனுக்குச் சொல்லப் பட்ட குறள் .

உன் மனைவி உன்னை தெய்வமாக நினைத்து தொழ வேண்டும் என்றால், நீ தெய்வம் போல நடந்து கொள் என்று கணவனுக்குச் சொல்லப் பட்ட குறள் .

தெய்வம் என்ன செய்யும் ?

படைத்து, காத்து, அழிக்கும் முத்தொழிலையும் செய்யும்.

மனைவிக்கு வேண்டியதை கொடுத்து, அவளை காப்பாற்றி, அவளுக்கு எதிரான எல்லாவற்றையும்  அழிக்கும் கணவன் , அந்த பெண்ணுக்கு தெய்வம் தான்.

அப்படி ஒரு கணவன் வாய்த்தால் , எந்த பெண்ணும் அவனை தொழத் தயங்க மாட்டாள்.

நிஜமாவே இந்த குறளுக்கு இதுதான் அர்த்தமா ?

வள்ளுவர் கணவன் என்ற சொல்லைப் போடவில்லை. கொழுநன் என்ற சொல்லை உபயோகப் படுத்துகிறார்.

கொழு கொம்பு, கொடியை தாங்குவதைப் போல கணவன் மனைவியை தாங்க வேண்டும் என்ற கருத்து வரும்படி கொழுநன் என்ற சொல்லை இங்கே போடுகிறார் வள்ளுவர்.

அது தொழுது எழுவாள் ? எழுந்த பின் தானே தொழ முடியும் ? தொழத பின் எழுந்தாள் என்றால் படுத்துக் கொண்டே தொழுவதா ?

அதாவது, கணவனுக்கு அருகில் மனைவி படுத்திருக்கிறாள்.

விழிப்பு வந்து விட்டது. எழுந்திருக்கவில்லை. கணவனை பார்க்கிறாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். நாள் எல்லாம் உழைத்த அசதி.

நமக்காகத்தானே இத்தனை பாடு படுகிறான், பாவம்,  என்று அவள் மனதில் ஒரு  அன்பு பிறக்கிறது அவன் மேல். அவளை அறியாமலேயே அவள் கைகள் அவனை  வணங்குகின்றன. இது நீ பெரியவன், நான் தாழ்தவள் என்பதால் வந்தது அல்ல.

எனக்காக நீ எவ்வளவு கஷ்டப் படுகிறாய் என்ற நன்றி உணர்வில் வந்த தொழுதல்.


அதெல்லாம் போகட்டும், கடவுளை தொழ மாட்டாள் என்று எதுக்குச் சொல்லணும்  ?

கணவன் அருகில் படுத்து இருக்கிறான். கணவனும் எழவில்லை. அவளும் இன்னும் எழுந்து நீராடி தூய்மையாக வில்லை. எனவே தெய்வத்தை தொழ முடியாது. கணவன் அருகில் தானே இருக்கிறான் ...அவனை தொழுகிறாள்.


அவ்வளவு அன்யோன்யம் அவர்களுக்குள்ளே.

சரி, அது போகட்டும், அது என்ன பெய் எனப் பெய்யும் மழை ? ஊருக்குள் போய் எந்தப்  பெண்ணிடமாவது மழை பெய்ய சொல்லி பாருங்கள். எந்த பெண் சொன்னாலும் மழை  பெய்யாது. அப்படி என்றால் வள்ளுவர் அப்படி ஒரு உதாரணத்தை ஏன் போட்டார் ?

மழை பெய்தும் கெடுக்கும், காய்ந்தும் கெடுக்கும். வேண்டிய நேரத்தில் பெய்யாது. வேண்டாத நேரத்தில் பெய்து துன்பத்தை கொடுக்கும்.

நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது மழை பெய்தால் அது எவ்வளவு இனிமையாக இருக்கும் ?

அந்த அளவு இனிமையானவள் பெண் - பெய் என்றால் பெய்யும் மழை எவ்வளவு இனிமையோ  அது போன்றவள் பெண்.

இப்போது சொல்லுங்கள், வள்ளுவர் ஆணாதிக்க சிந்தனை கொண்டவரா ?

ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்து எடுத்து குறளை வடித்து இருக்கிறார்.








Friday, October 23, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பக்தி இல்லாத என் நெஞ்சால்

இராமானுஜர் நூற்றந்தாதி - பக்தி இல்லாத என் நெஞ்சால் 


நம்மைப் பார்த்து "நீங்கள் யார் " என்று கேட்டால் நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். நம்முடைய வீர தீர பிராதாபங்களை எடுத்து  அடுக்குவோம். நம்மிடம் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லாவிட்டாலும்,  நம் பரம்பரையில்  சில பல தலைமுறைகளுக்கு முன்னால் யாராவது எதையாவது சாதித்து இருந்தால் அதைச் சொல்லி நம்மை அதோடு  தொடர்பு படுத்தி பெருமை கொள்வோம்.

அடக்கம் என்பது அணுவளவும்  கிடையாது.

ஆரவமுதனார் சொல்கிறார்

"சொல்லையும் பொருளையும் இசையோடு சேர்த்து, அன்போடு இராமனுஜரை எத்தனையோ பேர் பாடி இருக்கிறார்கள். எனக்கு புத்தி இல்லாமல், கவிதை எழுதி பழகும் நான், இந்தப் பாவி,  இராமானுஜரின் பெருமைகளை பாட முயல்கின்றேன் "

என்ன ஒரு அடக்கம் 


பாடல்

இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே.


பொருள்

இயலும் = சொல்லும் (சப்தமும்)

பொருளும் = சொல்லின் பொருளும்

இசையத் தொடுத்து = இசையோடு சேர்த்து

ஈன் கவிகளன்பால் = ஈன் + கவிகள் + அன்பால் = ஈனுகின்ற என்றால் பெற்று  எடுக்கின்ற   என்று பொருள். பசு கன்று ஈன்றது என்று சொல்லுமாப் போல். கவிதை  மனதில் கருக் கொண்டு, நாளும் வளர்ந்து பின் ஒரு குழந்தை பிரசவத்தில்  வருவது போல கவியின் மனதில் இருந்து கவிதை பிறக்கிறது. அப்படி, வரும் கவிதையும் , அன்பால்  வந்தது.

மயல்கொண்டு = ஆசை கொண்டு

வாழ்த்தும் = வாழ்த்தும்

இராமா னுசனை = இராமானுஜரை

மதியின்மையால் = அறிவு இல்லாமையால்

பயிலும் கவிகளில் = படித்துக் கொண்டிருக்கும் கவிதையில்

பத்தியில் லாதவென் = பக்தி இல்லாத என்

பாவிநெஞ்சால் = பாவி நெஞ்சால்

முயல்கின் றனன் = முயற்சி செய்கிறேன்

அவன் றன் = அவன் தன்

பெருங் கீர்த்தி = பெரிய புகழை

மொழிந்திடவே = சொல்லி விடவே .


என்னிடம் பக்தியும் இல்லை, அன்பும் இல்லை, கவி பாடும் திறமையும் இல்லை என்று எவ்வளவு தன்னடக்கத்துடன் கூறுகிறார்.






Tuesday, October 20, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - பழியும் புகழும்

இராமானுசர் நூற்றந்தாதி - பழியும் புகழும் 


எதைச் செய்தாலும் குற்றம் காண்பதற்கு என்றே சிலர் இருப்பார்கள். நல்லவற்றை விட்டு விட்டு , குறைகளையே தேடி கண்டு கொள்ளும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


பாடல்

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள்

எனக்குற்ற = எனக்கு உற்ற = எனக்கு கிடைத்த

செல்வம் = செல்வம்

இராமா னுசனென்று = இராமானுஜன் என்று

இசையகில்லா = ஏற்றுக் கொள்ளாத

மனக்குற்ற = மனதில் குற்றம் உள்ள

மாந்தர் = மக்கள்

பழிக்கில் = பழி சொன்னால்

புகழ் = அதுவும் புகழே

அவன் = இராமானுஜரின்

மன்னிய = நிலைத்த

சீர் = சிறந்த

தனக்குற்ற = அவனுக்கு உரிய

அன்பர் = அன்பர்கள்

அவந்திரு நாமங்கள் = அவனுடைய திரு நாமங்களை

சாற்றுமென்பா = சாற்றும் + என் + பா = சொல்லும் என் பாடல்கள்

இனக்குற்றம் = இந்த குற்றங்களை

காணகில் லார் = காண மாட்டார்கள்

பத்தி = பக்தி

ஏய்ந்த  இயல்விதென்றே.= ஏற்ற இயல்பு இது என்று சொல்லுவார்கள்

ஏன் பழி போடுகிறார்கள் ? இந்த பாடல்களில் அப்படி என்ன பழி சொல்லும் படி இருக்கிறது ?


அமுதனார், வேதம், சாஸ்திரம், போன்றவற்றில் சொன்னவைகளை எல்லாம் விட்டு விட்டார். இராமானுசர் ஒருவரே எல்லாம் என்று அவரைப் பற்றிக் கொண்டார். ஆசாரியனே எல்லாம் , ஆண்டவன் கூட கிடையாது என்று அவர் கூறியதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொள்ளாததில் வியப்பு இல்லை.

ஆசாரியன், குரு இல்லாமல் இறைவனை, உண்மையை அறிய முடியாது.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று பாடினார் அருணகிரிநாதர்.

தாயாய் வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்லி இருக்கலாம்.

தந்தையாய் வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்லி இருக்கலாம்.

ஏன் குருவாய் வருவாய் என்றார் என்றால் குரு தான் நமக்கு இறைவனை காட்ட முடியும்.

தாய்தான் நமக்கு தந்தையை காட்டுகிறாள். "அப்பா பாரு..." என்று பிள்ளைக்கு அப்பாவை அறிமுகப் படுத்துபவள் தாய். தாய் சொல்லாவிட்டால் , தந்தை யார் என்றே தெரியாமல் போய் விடும்.

தந்தை, கைபிடித்து அழைத்துப் போய் பள்ளியில் சேர்த்து குருவை அறிமுகப் படுத்துகிறார். எனவே தான் "தந்தையோடு கல்வி போம்" என்று சொன்னார்கள்.

குருதான், நமக்கு இறைவைனை அறிமுகப் படுத்த வேண்டும்.

அப்படி இராமானுசரையே எல்லாம் என்று கொண்டாடிய என் பாடல்கள் பிழை என்று சொன்னால்  அதுவே கூட அதற்கு புகழ் தான் என்கிறார்.

அது எப்படி பழியே புகழாகும் ?

என்ன பழி போடுகிறார்கள் - ஆசாரியனே எல்லாம் என்று இந்த அமுதனார் கூறுகிறார், ஆண்டவனே ஆசாரியனுக்கு அடுத்தபடிதான் என்று கூறுகிறார் என்றெலாம்  பழி போடுவார்கள்.

அமுதனாருக்கு சந்தோஷம். அது தானே அவருக்கு வேண்டும். இப்படி எல்லோரிடமும் போய் சொல்லி ஆசாரியனின் புகழை  பரப்ப இந்த பழி கூட உதவும் என்கிறார்.

பக்தி உள்ளவர்களுக்கு அது புரியும் என்கிறார். பக்தி உள்ளவர்கள், இராமானுசரின் மேல் அன்பு கொண்டவர்கள் இந்தப் பாடல்களில் குறைகளை காண மாட்டார்கள் என்கிறார்.

மாலுமி இல்லாத கப்பல், ஓட்டுனர் இல்லாத வண்டி போல ஆகிவிடும் ஆசாரியன் இல்லாத  வாழ்கை.







Monday, October 19, 2015

பெரிய புராணம் - பேசக் கற்றுக் கொள்வோம்

பெரிய புராணம் - பேசக் கற்றுக் கொள்வோம் 


பெரிய புராணம் போன்ற நூல்களை எதற்குப் படிக்க வேண்டும் ? ஏதோ கொஞ்சம் நாயன்மார்கள் இருந்தார்கள், பக்தி செய்தார்கள், சொர்க்கம் சென்றார்கள். இதைப் படிப்பதால் நமக்கு என்ன நன்மை என்று படிக்காமல் விட்டு விடுகிறோம். நாம் படிக்காமல் விட்டது மட்டும் அல்ல, அடுத்த தலைமுறைக்கும் அதன் சிறப்புகளை சொல்லாமல் விட்டு விடுகிறோம். அப்படி , நம் மொழியில் உள்ள பலப் பல அருமையான நூல்களின் சிறப்புகள் ஒரு தலைமுறைக்கே போய் சேராமல் நின்று விடுகிறது.

பரிட்சையில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?

நேர்முகத் தேர்வில் (interview ) தேர்ச்சி பெறுவது எப்படி ?

ஒரு நல்ல presentation தருவது எப்படி ?

இவை எல்லாம் நமக்கு மிக இன்றி அமையாதது, வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது.

இவற்றை நமக்குச் சொல்லித் தருகிறது பெரிய புராணம்.

ஒரு கேள்வி கேட்டால், அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் ? அந்த பதில் முழுமையாக இருக்க வேண்டும் . கேள்வி கேட்டவருக்கு அந்த பதிலால் ஒரு பயன்  இருக்க வேண்டும். அந்த பதிலை கேள்வி கேட்டவர் உபயோகப் படுத்த முடிய வேண்டும்....இதை எல்லாம் ஆராய்ந்து, தெளிவாக பதில் சொன்னால் பரீட்சையில்  நல்ல மதிப்பெண் வரும், நேர்முகத் தேர்வில் சிறப்பாக பதில் சொல்ல முடியும்,  presentation சிறப்பாக அமையும்.

எப்படி என்று பார்ப்போம்.

அப்பூதி அடிகள் என்று ஒரு நல்லவர் இருந்தார். அவருக்கு திருநாவுக்கரசர் மேல் அளவு கடந்த பக்தி. அவர் செய்யும் எல்லா திருதொன்டிற்கும் திருநாவுகரசர் பெயரையே சூட்டுவார்.

திருநாவுகரசர் தண்ணீர் பந்தல்.

திருநாவுக் ரசர் மருத்துவ மனை

திருநாவுக்கரசர் அன்ன தான சத்திரம் என்று எல்லாம் அவர் பெயரில் செய்வார்.

இத்தனைக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை ஒரு முறை கூட நேரில் சந்தித்தது கிடையாது.

ஒரு நாள் , திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் இருக்கும் ஊருக்கு வந்தார். அங்கு வந்து , அடிகள் வைத்திருந்த தண்ணீர் பந்தலை கண்டு, இப்படி தன் பெயரில் தண்ணீர் பந்தல்  வைத்திருக்கும் அவர் யார் என்று அங்கு வேலை செய்பவர்களை கேட்டார்.

இங்கு சற்று நிறுத்துவோம்.

நீங்கள் அங்கு வேலை செய்து, உங்களை யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள்.

"யாராய் இருந்தால் உனக்கு என்ன ...உனக்கு என்ன தண்ணி தான வேண்டும்...குடிச்சிட்டு போவியா "

என்று எடுத்து எரிந்து பேசலாம்.

அல்லது,

"அப்பூதி அடிகள் னு ஒருத்தர்...அவர் தான் இந்த தண்ணீர் பந்தலை வைத்து நடத்துகிறார் " என்று பவ்யமாகச் சொல்லலாம்.

அதற்கு மேலே என்ன இருக்கிறது சொல்ல ?

அங்கு வேலை செய்த ஆள் கூறுகிறார்...


கேட்ட ஒரு கேள்விக்கு 6 பதில் தருகிறார். இந்தத் தண்ணீர் பந்தலை நடத்துபவர்

1. அவர் பொருந்திய நூலை மார்பில் அணிதிருப்பவர் (பூணுல்)
2. இந்த பழைய ஊரில் தான் இருக்கிறார்
3. வீட்டுக்குப் போனார் (நீங்க அங்க போனால் அவரைப் பார்க்கலாம் என்பது உள்ளுறை)
4. இப்பதான் போனார் (அதுனால நீங்க அவர் வீட்டுக்குப் போனால், அங்க தான் இருப்பார்)
5. அவர் வீடு பக்கத்தில் தான் இருக்கு,
6. தூரம் இல்லை

பாடல்


என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று
நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத்
துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண்

சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்.


பொருள்

என்று உரைக்க = இந்த தண்ணீர் பந்தல் முதலிய அறங்களை செய்வது கேட்டு

அரசு  கேட்டு = திருநாவுக்கரசர் கேட்டு

இதற்கு என்னோ கருத்து என்று = இதற்கு காரணம் என்ன ? தன் பெயரில் செய்யாமல் திருநாவுக்கரசர் பெயரில் செய்யக் காரணம் என்ன என்று

நின்ற வரை நோக்கி = அங்கு நின்றவரை பார்த்து

அவர் எவ்விடத்தார் என வினவத் = இதையெல்லாம் செய்யும் அந்த அப்பூதி அடிகள் எந்த ஊர் காரர் என்று கேட்க

துன்றிய நூல் மார்பரும் = பொருந்திய நூலை மார்பில் அணிந்தவரும்

இத் தொல் பதியார் = இந்த ஊரில் ரொம்ப நாள் இருப்பவர்

மனையின் கண் சென்றனர் = அவருடைய வீட்டுக்குப் போனார்

இப்பொழுது = இப்போதுதான் போனார்

அதுவும் சேய்த்து அன்று  = அவர் வீடு ரொம்ப தூரம் இல்லை

நணித்து என்றார்.= பக்கத்தில் தான் இருக்கிறது என்றார்.

இப்போதுதான் போனார் என்றால், அது வரை அங்கு இருந்து அவர் தண்ணீர் பந்தல் வேலை எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டார் என்று அர்த்தம்.

எப்படி ஒரு கேள்வியை புரிந்து கொண்டு , அதற்கு முழுமையான ஒரு பதிலை ஒரு வேலையாள் தருகிறான் பாருங்கள்.

இப்படி பேசிப் பழக வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும். தெளிவாகச் சொல்ல வேண்டும். முழுமையாகச்  சொல்ல வேண்டும்.

அப்படி சொல்ல வேண்டும் என்றால், கேள்வியை புரிந்து கொண்டு, ஆழமாக சிந்தித்து  பின் பதில் சொல்ல வேண்டும்.

அதற்கு நிறைய பயிற்சி வேண்டும்.

பழகுங்கள். வரும்.






Thursday, October 15, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 3

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 3


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....

============================= பாகம் 2 =================================

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். எத்தனையோ பாவ புண்ணியங்கள் அனுபவித்து  முடிக்காமல் இருக்கின்றன. இந்த பாவ புண்ணியம் யாரைப் போய்  சேரும் ? இதை யார் தீர்மானிப்பது. 

இந்தப் பிறவியில் நல்லவர்களாக இருப்பவர்கள் துன்பப் படுவதும், தீயவர்களாக  இருப்பவர்கள்  பணம்,புகழ் , அதிகாரம் என்று இன்பமாக இருப்பதும்  முற் பிறவியில் செய்த புண்ணிய பாவங்கள் மற்றும் புண்ணியங்களால் வருகிறது என்று கொண்டால்  அந்த பாவ புண்ணியங்கள்  எப்படி ஒருவரை   வந்து அடைகின்றன ?

நாலடியார் சொல்லுகிறது,

ஒரு பெரிய மாட்டுத் தொழுவத்தில் ஒரு கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டால் அது தன் தாயை கண்டு கொள்ளும். நமக்குத் தெரியாது எந்த பசு எந்த கன்றின் தாய் என்று. ஆனால் கன்றுக்குத் தெரியும் எது அதன் தாய் என்று.


பாடல் 

பல் ஆவுள் உய்த்துவிடினும், குழக் கன்று
வல்லது ஆம், தாய் நாடிக் கோடலை; தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

பொருள் 

பல் ஆவுள் = பல பசுக்களுக்கு நடுவில் (ஆ = பசு) 

உய்த்துவிடினும், = விட்டாலும் 

குழக் கன்று = குட்டிக் கன்று 

வல்லது ஆம் = வல்லமை உடையது 

தாய் நாடிக் கோடலை = தாய் பசுவை கண்டு கொள்வதை 

தொல்லைப் = பழமையான, தொல்லை தரும் 

பழவினையும் = பழைய வினைகளும் 

அன்ன தகைத்தே = அதைப் போன்றதே 

தற் செய்த = அதைச் செய்த 

கிழவனை = தலைவனை (வினையின் தலைவன், வினையை செய்தவனை) 

நாடிக் கொளற்கு = கண்டு கொள்வதற்கு 

நாம் செய்த வினைகள், நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்திருக்கும். 

இப்படியும் கூட இருக்குமா ? முற் பிறவியில் செய்த பாவ புண்ணியம் இந்தப் பிறவியில் வருமா ?

பட்டினத்தார், ஒன்றும் வேண்டாம் என்று துறவு மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பத்ரகிரி என்ற ஊரில் தங்கி இருந்த போது , ஒரு கள்ளன், அரண்மனையில் களவு செய்து விட்டு, தப்பித்து ஓடும் போது , களவாண்ட நகைகளை பட்டினத்தார் இருந்த இடத்தில் மறைத்து வைத்து விட்டு ஓடி விட்டான். துரத்தி வந்த காவலர்கள் நகையை கண்டு கொண்டார்கள். பட்டினத்தார் தான் களவாடி இருக்க வேண்டும் என்று நினைத்து அரசனிடம் கூறினார்கள். அரசனும், பட்டினத்தாரை கழுவில் ஏற்றும் படி உத்தரவு போட்டான். 

பட்டினத்தார் சிந்தித்தார்...இந்தப் பிறவியில் செய்த பாவம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்க, எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று யோசித்தார். ஒரு வேளை  முன் பிறவியில் செய்த வினைகள் தான் இப்போது இந்தத் துன்பமாக வந்து சேர்ந்ததோ என்று நினைக்கிறார். 

பாடல் 

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே". 

(மிக எளிய பாடல் என்பதால் அருஞ்சொற் பொருள் விளக்கம் தரவில்லை). 

முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே என்று பாடினார். கழு மரம்  தீ பிடித்து எரிந்தது வேறு விஷயம். 

மாணிக்க வாசகர் பாடுவார், பழ வினைகள் தொலைந்து போகும்படி செய்து, என் மன அழுக்குகளை நீக்கி, என்னையே சிவமாகச் செய்த அவன் அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே என்று வியக்கிறார். 


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


சரி, வினைகள் தொடர்கின்றன . இந்த தொடரும் வினைகளை நாம் விதி என்கிறோம். 

இந்த விதியை இராமன் நம்பினான்.

நல்ல நீர் இல்லாதது நதியின் பிழை அன்று, விதியின் பிழை என்றான் இராமன்.  கைகேயி நல்ல வரம் கேட்க்காதது அவள் பிழை அல்ல, விதியின் பிழை. 

நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

வினைகள் தொடரும். தொடரும் வினைகளை அனுபவிக்கும் போது மீண்டும் ஏதோ ஒன்றைச் செய்கிறோம். அந்த செயலில் இருந்து பாவ புண்ணியங்கள் தோன்றுகின்றன.  அவற்றை அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவி. இப்படி பொய் கொண்டே இருந்தால்  இதற்கு எப்படி ஒரு முடிவு கொண்டு வருவது ? 

அதற்கும் வழி இருக்கிறது.....


=============== பாகம் 3 ========================================

நல்லது செய்தால் அதை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 
தீயது செய்தால் அதை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 

எப்படி ஆயினும், அனுபவித்தது போக, மீதி பழ வினையாக மீண்டும் வந்து சேரும். 

பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

செயல்களின் மேல் பற்று இல்லாமல் அந்த செயல்களை செய்தால் அவற்றின் பாவ  புண்ணியங்கள் நம்மைச் சேராது என்கிறான் கண்ணன் கீதையில். 

तस्मादसक्त: सततं कार्यं कर्म समाचर |
असक्तो ह्याचरन्कर्म परमाप्नोति पूरुष: || 19||

tasmād asaktaḥ satataṁ kāryaṁ karma samāchara
asakto hyācharan karma param āpnoti pūruṣhaḥ

tasmād = எனவே 

asaktaḥ = பற்று இல்லாமல் 

satataṁ = சதா சர்வ காலமும் 

kāryaṁ = கடமைகளை 

karma =செயல்பட்டு 

samāchara = வந்தால் 

asakto = பற்றின்மை 

hy = நிச்சயமாக 

ācharan = செய்வது 

karma = வினை 

param āpnoti pūruṣhaḥ = பரம நிலையை அடைகிறான் அவன் 

காரியங்களின் மேல் பற்று இல்லாமல் செய்தால், அந்த காரியங்களின் பாவ புண்ணியங்கள்  உங்களைச் சேராது. 

இன்னும் ஒரு படி மேலே போவோம்...

இன்பம் துன்பம், பாவம் புண்ணியம் இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனம் வந்து விட்டால் , செயல்களின் விளைவுகள் நம்மை பாதிக்காது.

இதைத்தான் சைவ சிந்தாந்தம் "இரு வினை ஒப்பு" என்கிறது. 

மாணிக்க வாசகர் சொல்லுவார் "என் வினை ஒத்த பின், வித்து மேல் விளையாமல், கணக்கில்லா திருக்கோலம் நீ வந்து காட்டினாய், திருக் கழுக்குன்றிலே" என்று. 


பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாதது ஒர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,
கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!

நல்லது, கெட்டது 
பாவம் , புண்ணியம் 
உயர்ந்தது, தாழ்ந்தது 

என்ற இரு வினைகளும் ஒன்றான பின், பிறவி முடிந்தது என்கிறார்.

விதை இனி முளைக்காது , அது உலர்ந்து விட்டது. "உணக்கு இல்லாதது ஓர் வித்து "  

இதையே கீதையும் ஸ்தத ப்ரன்ஞன் என்கிறது. 

மனம் அங்கும் அலையாமல் நிலை பெற்று நிற்பது. 

இந்த பாடலுக்கு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...மற்ற பாடல்களையும் பார்க்க வேண்டி இருப்பதால், இங்கே நிறுத்திக் கொண்டு அடுத்த பாடலுக்கு போவோம்.




Wednesday, October 14, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 2

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து - பாகம் 2


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....

============================= பாகம் 2 =================================

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். எத்தனையோ பாவ புண்ணியங்கள் அனுபவித்து  முடிக்காமல் இருக்கின்றன. இந்த பாவ புண்ணியம் யாரைப் போய்  சேரும் ? இதை யார் தீர்மானிப்பது. 

இந்தப் பிறவியில் நல்லவர்களாக இருப்பவர்கள் துன்பப் படுவதும், தீயவர்களாக  இருப்பவர்கள்  பணம்,புகழ் , அதிகாரம் என்று இன்பமாக இருப்பதும்  முற் பிறவியில் செய்த புண்ணிய பாவங்கள் மற்றும் புண்ணியங்களால் வருகிறது என்று கொண்டால்  அந்த பாவ புண்ணியங்கள்  எப்படி ஒருவரை   வந்து அடைகின்றன ?

நாலடியார் சொல்லுகிறது,

ஒரு பெரிய மாட்டுத் தொழுவத்தில் ஒரு கன்றுக் குட்டியை அவிழ்த்து விட்டால் அது தன் தாயை கண்டு கொள்ளும். நமக்குத் தெரியாது எந்த பசு எந்த கன்றின் தாய் என்று. ஆனால் கன்றுக்குத் தெரியும் எது அதன் தாய் என்று.


பாடல் 

பல் ஆவுள் உய்த்துவிடினும், குழக் கன்று
வல்லது ஆம், தாய் நாடிக் கோடலை; தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே, தற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

பொருள் 

பல் ஆவுள் = பல பசுக்களுக்கு நடுவில் (ஆ = பசு) 

உய்த்துவிடினும், = விட்டாலும் 

குழக் கன்று = குட்டிக் கன்று 

வல்லது ஆம் = வல்லமை உடையது 

தாய் நாடிக் கோடலை = தாய் பசுவை கண்டு கொள்வதை 

தொல்லைப் = பழமையான, தொல்லை தரும் 

பழவினையும் = பழைய வினைகளும் 

அன்ன தகைத்தே = அதைப் போன்றதே 

தற் செய்த = அதைச் செய்த 

கிழவனை = தலைவனை (வினையின் தலைவன், வினையை செய்தவனை) 

நாடிக் கொளற்கு = கண்டு கொள்வதற்கு 

நாம் செய்த வினைகள், நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்திருக்கும். 

இப்படியும் கூட இருக்குமா ? முற் பிறவியில் செய்த பாவ புண்ணியம் இந்தப் பிறவியில் வருமா ?

பட்டினத்தார், ஒன்றும் வேண்டாம் என்று துறவு மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பத்ரகிரி என்ற ஊரில் தங்கி இருந்த போது , ஒரு கள்ளன், அரண்மனையில் களவு செய்து விட்டு, தப்பித்து ஓடும் போது , களவாண்ட நகைகளை பட்டினத்தார் இருந்த இடத்தில் மறைத்து வைத்து விட்டு ஓடி விட்டான். துரத்தி வந்த காவலர்கள் நகையை கண்டு கொண்டார்கள். பட்டினத்தார் தான் களவாடி இருக்க வேண்டும் என்று நினைத்து அரசனிடம் கூறினார்கள். அரசனும், பட்டினத்தாரை கழுவில் ஏற்றும் படி உத்தரவு போட்டான். 

பட்டினத்தார் சிந்தித்தார்...இந்தப் பிறவியில் செய்த பாவம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்க, எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று யோசித்தார். ஒரு வேளை  முன் பிறவியில் செய்த வினைகள் தான் இப்போது இந்தத் துன்பமாக வந்து சேர்ந்ததோ என்று நினைக்கிறார். 

பாடல் 

"என் செயல் ஆவதி யாதொன்றும் மில்லை இனித்தெய்வமே
     உன் செயலே என்று உணரப்பெற்றேன் இந்த ஊன் எடுத்த 
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு 
    முன்செய்த தீவினை யோஇங்ங னேவந்து மூண்டதுவே". 

(மிக எளிய பாடல் என்பதால் அருஞ்சொற் பொருள் விளக்கம் தரவில்லை). 

முன் செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே என்று பாடினார். கழு மரம்  தீ பிடித்து எரிந்தது வேறு விஷயம். 

மாணிக்க வாசகர் பாடுவார், பழ வினைகள் தொலைந்து போகும்படி செய்து, என் மன அழுக்குகளை நீக்கி, என்னையே சிவமாகச் செய்த அவன் அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே என்று வியக்கிறார். 


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.


சரி, வினைகள் தொடர்கின்றன . இந்த தொடரும் வினைகளை நாம் விதி என்கிறோம். 

இந்த விதியை இராமன் நம்பினான்.

நல்ல நீர் இல்லாதது நதியின் பிழை அன்று, விதியின் பிழை என்றான் இராமன்.  கைகேயி நல்ல வரம் கேட்க்காதது அவள் பிழை அல்ல, விதியின் பிழை. 

நதியின் பிழை அன்று
     நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
     பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
     மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
     என்னை வெகுண்டது?’ என்றான்.

வினைகள் தொடரும். தொடரும் வினைகளை அனுபவிக்கும் போது மீண்டும் ஏதோ ஒன்றைச் செய்கிறோம். அந்த செயலில் இருந்து பாவ புண்ணியங்கள் தோன்றுகின்றன.  அவற்றை அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவி. இப்படி பொய் கொண்டே இருந்தால்  இதற்கு எப்படி ஒரு முடிவு கொண்டு வருவது ? 

அதற்கும் வழி இருக்கிறது.....





 

Tuesday, October 13, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து

இராமானுஜர் நூற்றந்தாதி - பழவினைகள் வேரறுத்து 


நாம் ஒரு காரியம்  செய்தால் , அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள், கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள்.

அது , நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.

நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.

ஆனால், ஒரு மிகப் பெரிய ஆனால்....சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.

அது ஏன் ?

ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது.

அது ஏன் ?

விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த பெரியவர்கள் சொல்கிறார்கள்...எல்லா கர்மதிற்கும் உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.

உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால் அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும்.

சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம்.

இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவுதான் என்ன ?

மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

அமுதனார் சொல்கிறார் ...

"எம் பெருமானார் ஆகிய இராமானுஜர் , என்னையும் ஒரு பொருளாக மதித்து, என் மேல் அருள் கொண்டு, என் பழைய வினைகள் நீக்கி, ஊழி முதல்வனை பணியும் படி செய்த அவரின் திருப்பாதங்களை என் தலையில் வைத்தான், எனக்கு ஒரு சிதைவும் இல்லையே. "

பாடல்


என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.



சீர்  பிரித்த பின்

என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அருள் சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமானுசன் பரன் பாதமும் என் 
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு  ஏதும் சிதைவில்லையே.

பொருள் 

என்னைப் புவியில் = என்னை இந்த பூமியில்

ஒரு பொருளாக்கி = ஒரு பொருளாக்கி

அருள் சுரந்த = அருள் பொழிந்து

முன்னைப் பழவி னை = முன்பு செய்த பழைய வினைகளை

வேரறுத்து = வேரோடு அறுத்து

ஊழி முதல்வனையே = ஊழி முதல்வனை

பன்னப் பணித்த = தொண்டு செய்யப் பண்ணிய

இராமானுசன் = இராமானுசன்

பரன் = தொன்மையானவன் , பெரியவன்

பாதமும் = பாதங்களை

என்  = என்னுடைய

சென்னித் = தலையில்

தரிக்க வைத்தான் = சூட்டிக் கொள்ளும்படி வைத்தான்

எனக்கு  ஏதும் சிதைவில்லையே. = எனக்கு எந்த சிதைவும் இல்லையே

சரி, இதில் நிறைய புரியவில்லையே...

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும் ?  இறைவன் எப்படி நம் முந்தைய பாவங்களை போக்குவான் ? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா ?

சிந்திப்போம்....



Wednesday, October 7, 2015

அபிராமி அந்தாதி - சாதித்தவர்கள் என்ன செய்தார்கள் ?

அபிராமி அந்தாதி - சாதித்தவர்கள் என்ன செய்தார்கள் ?


வாழ்வில் பெரிய சாதனைகளை செய்ய என்ன செய்ய வேண்டும் ? வாழ்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?

ஆண்டாண்டு காலமாய் இதைப்  பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது ?

கடின உழைப்பு, அதிர்ஷ்டம், சூழ்நிலை, தொலை நோக்கு பார்வை, மனிதர்களை வழி நடத்தும் தலைமை குணம், என்று எத்தனையோ சொல்கிறார்கள்.

ஆனால், இவை இல்லாதவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படிக்காமல், கல்லூரிக்கு கூட போகாத பெரிய பெரிய பணக்காரர்கள் உண்டு. அவர்களிடம் கை கட்டி வேலை செய்யும் பெரிய படிப்பு படித்தவர்கள் உண்டு.

அப்படி என்றால் சாதனையாளர்களிடம் பொதுவாக காணப் படுவது எது ? எல்லா சாதனையாளர்களும் செய்யும் ஒன்று என்ன ?

அபிராமி பட்டர் சொல்கிறார் - அப்படி சாதித்த பெரியவர்கள் எல்லோரும் அபிராமியை போற்றினார்கள்.

சாதித்தவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் பணம் சேர்த்தவர்கள், சண்டை பிடித்து நாடுகளை பிடித்தவர்கள் அல்ல. அதுக்கும் மேலே, அதுக்கும் மேலே....

பட்டியல் தருகிறார் பட்டர் ...

பாடல்

ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தம் கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொருபடை கந்தன் கணபதி காமன் முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே


பொருள்

ஆதித்தன் = சூரியன்

அம்புலி = சந்திரன்

அங்கி = அக்கினி கடவுள்

குபேரன் = செல்வத்தின் அதிபதியான குபேரன்

அமரர் தம் கோன் = தேவர்களின் தலைவனான இந்திரன்

போதிற் பிரமன் = மலரில் இருக்கும் பிரமன் (போது = மலர்)

புராரி = முப்புரங்களை எரித்த சிவன்

முராரி = திருமால்

பொதியமுனி = அகத்தியர்

காதிப் பொருபடை கந்தன் = பெரிய படைகளை கொண்ட கந்தன்

கணபதி = கணங்களுக்கு அதிபதியான கணபதி

காமன் = அழகில் சிறந்த மன்மதன்

முதல் = அவர்களில் இருந்து


சாதித்த புண்ணியர் = இன்று வரை உள்ள சாதனை செய்த புண்ணியம் செய்தவர்கள்

எண்ணிலர் = கணக்கில் அடங்காதவர்கள்

போற்றுவர் தையலையே = போற்றுவார்கள் அபிராமியையே

செல்வம் வேண்டுமா ? செல்வத்தின் அதிபதியான குபேரன் அபிராமியை போற்றுகிறான்.

பதவி வேண்டுமா ? தேவ லோகத்தின் தலைவனான இந்திரன் அவளைப் போற்றுகிறான்.

வீரம் வேண்டுமா ? சிறந்த சேனாதிபதியான முருகன் அவளைப் போற்றுகிறான்.

அறிவு விடுமா ? அகத்தியர் அவளைப் போற்றுகிறார். 

அழகு வேண்டுமா ? அழகிற் சிறந்த மன்மதன் அவளைப் போற்றுகிறான் 

உலகை வழி காட்டும் ஒளியாக இருக்க வேண்டுமா ? சூரியன் அவளைப் போற்றுகிறான். 

மக்கள் மேல் கருணை செலுத்த வேண்டுமா ? குளிர்ந்த சந்திரன் அவளைப் போற்றுகிறான்.

அவர்கள் எல்லாம் அவளைப் போற்றி அந்த நிலையை அடைந்தனர். 

எல்லா பெண்ணுக்குள்ளும் அபிராமியின் ஒரு பகுதி உண்டு. 

பூத்தவளே , புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே என்பார் பட்டர்.

உலகில் உயிர்களை கொண்டு வந்து அவற்றை காக்கும் எந்த பெண்ணும் அபிராமியின் அம்சம்தான். 

பெண்ணைப் போற்றுங்கள். பெருமை வரும்.

அபிராமி....அபிராமி...அபிராமி....

நான் எப்போதும் சொல்வது போல, அபிராமி அந்தாதி படித்து, அருஞ்சொற் பொருள் புரிந்து அறிந்து கொள்வது அல்ல.

அதையும் தாண்டி, பட்டரின் மனம் உணர்ந்து பாடல்களை உணர வேண்டும். 



Sunday, October 4, 2015

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?

இராமாயணம் - இராமன் அறம் பிறழ்ந்தவனா ?


எதுவரை அறத்தை கடை பிடிக்கலாம் ?

உயிருக்கே ஆபத்து என்றாலும் அறத்தை கடை பிடிக்க வேண்டுமா ? உயிரை விட்டு விட்டு அறத்தை தூக்கிப் பிடித்து என்ன பயன் ? தற்காப்புக்காக அறத்தை மீறலாமா ?

நம் சட்டங்கள் தற்காப்புக்காக கொலை செய்யலாம் என்று அனுமதி அளிக்கிறது.  தன்னைக் கொல்ல வருபவனை கொல்லுவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

நம் உயிருக்கு ஆபத்து என்றால் கூட சில சமயம் பொறுத்துக் கொள்ளலாம். நாம் மிகுந்த அன்பு செலுத்துபவர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் அறமாவது மண்ணாவது என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.

மனைவியின் உயிர், பிள்ளையின் உயிர், கணவனின் உயிருக்கு ஆபத்து என்றால் யார் அறத்தைப் பற்றி சிந்தித்து கொண்டிருப்பார்கள் ?

இராமன் சிந்தித்தான். தன் உயிருக்கு மட்டும் அல்ல, உயிரினும் மேலான தம்பியின் உயிருக்கு ஆபத்து என்ற போதும் அவன் அறத்தை மீறவில்லை.

தாடகை கோபத்தோடு வருகிறாள். கையில் சூலத்தை ஏந்திக் கொண்டு வேகமாக வருகிறாள். சூலத்தை இராம இலக்குவனர்களின் மேல் எறியப் போகிறாள்.

விஸ்வாமித்திரன் சொல்கிறான், "அவளைக் கொல் " என்று.

இராமன் பேசாமல் நிற்கிறான். பெண்ணைக் கொல்வது அறம் அன்று நினைத்து பேசாமல் நிற்கிறான்.

எவ்வளவுதான் கொடியவள் என்றாலும் பெண் என்று நினைத்து பேசாமல் நிற்கிறான்.

பாடல்

வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள். தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும். பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து. நான்மறை அந்தணன் கூறுவான்.

பொருள்

வெறிந்த  = மணம் வீசும். இங்கே நாற்றம் எடுக்கும் என்ற பொருளில் வந்தது.

செம் மயிர் = சிவந்த மயிர். எண்ணெய் போடாமல் செம்பட்டையாக இருந்த முடி.

வெள் எயிற்றாள் = வெண்மையான பற்களைக் காட்டிக் கொண்டு வருகிறாள் தாடகை

தனை = அவளை

எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் = சூலாயுதத்தை எறிந்து இராம இலக்குவனர்களை கொல்லுவேன் என்று ஏந்திக் கொண்டு வந்த போதும்


பார்க்கிலாச் = அதை கண்டு கொள்ளாத

செறிந்த தாரவன் = அடர்ந்த மலர்களை கொண்டு செய்த மாலையை அணிந்த இராமன் (தார் = மாலை)

சிந்தைக் கருத்து எலாம் = சிந்தனையின் ஓட்டம், அவன் கருத்து எல்லாம்

அறிந்து = அறிந்து கொண்ட

நான்மறை அந்தணன் கூறுவான் = நான்கு வேதங்களை ஓதிய அந்தணனாகிய விஸ்வாமித்திரன் கூறுவான்.


விஸ்வாமித்திரன் அந்தணன் அல்ல. அவன் ஒரு அரசன். அது கம்பனுக்கும் தெரியும்.  இருந்தும் தேடி எடுத்து அந்தணன் என்ற சொல்லைப் போடுகிறான்.

அந்தணன் என்போன் அறவோன். அற வழியில் நிற்பவன் அந்தணன். இங்கே விஸ்வாமித்திரன் அற வழியில்  நின்று அறத்தைக் கூறுகிறான் என்ற பொருள் பட  அவனை அந்தணன் என்று அழைக்கிறான் கம்பன்.

அது மட்டும் அல்ல, அற வழியில் நிற்போர் எல்லாம் அந்தணர் தாம்.

பரிமேல் அழகர் கூறுவார் அந்தணர் என்பது காரணப் பெயர் என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

சுகமான காலத்தில், ஆபத்து இல்லாத காலத்தில் எல்லோரும் அறத்தை கடை பிடிப்பார்கள்.

கொல்ல வரும் அரக்கி, சூலத்தொடும் கோபத்தோடும் எதிரில் நிற்கும் போது ?

அது இராமன் காட்டிய வழி....

இதற்காகவும் இராமாயணம் படிக்க வேண்டும்.


Saturday, October 3, 2015

தேவாரம் - பின்னை எண்ணார்

தேவாரம் - பின்னை எண்ணார் 


யாரிடமாவது நாம் உதவி வேண்டிப் போனால், கேட்ட உடனேயே எத்தனை பேர் அந்த உதவியை நமக்குச் செய்து விடுவார்கள் ?

மறவர்களை விடுங்கள், "கொஞ்சம் தண்ணி  வேண்டும்" என்று கேட்டால் எத்தனை பிள்ளைகள் உடனேயே கொண்டு வந்து கொடுக்கும் ?  "நான் busy யா இருக்கேன்...நீயே போய் எடுத்துக்கோ" என்று பதில் வரும். இல்லைனா "இதோ வரேன் " என்று பதில் மட்டும் வரும்...ஆள் வர நாள் ஆகும்.

புடவை வேண்டும், நகை வேண்டும் என்று மனைவி ஆசைப் பட்டு கேட்டால் எத்தனை கணவன்மார் உடனேயே வாங்கித் தந்து விடுவார்கள் ?  "பார்க்கலாம், தீபாவளிக்கு வாங்கலாம், பொங்கலுக்கு வாங்கலாம் " என்று தள்ளிப் போடும் கணவர்கள் தான் பெரும்பாலும் இருப்பார்கள்.

பதவி உயர்வு வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் என்று வீட்டில் வேலை பார்க்கும் பணியாள் கேட்டால் நாம் உடனே கொடுத்து விடுவோமா ? எந்த முதலாளியும் தருவது கிடையாது.

உலகம் அப்படி.

கேட்ட உடன் கொடுக்காவிட்டால்,  சாதாரண மனிதர்களுக்கும்  இறைவனுக்கும் என்ன வித்தியாசம் ?

பக்தா , என்னிடம் கேட்டாயா...பார்க்கலாம், அப்புறம் தருகிறேன்...அடுத்த தீபாவளிக்குத் தருகிறேன் ...என்று இறைவன் தள்ளிப் போடுவது இல்லை. கேட்ட உடனேயே  தந்து விடுவான் என்கிறார் நாவுக்கரசர்.


பாடல்

உன்னி வானவ ரோதிய சிந்தையில்
கன்னல் தேன்கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை யென்னார் பெருமா னடிகளே.

சீர் பிரித்த பின்


உன்னி வானவர் ஓதிய சிந்தையில் 
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் 
தன்னை நோக்கித் தொழுது எழுவார்கு எல்லாம் 
பின்னை எண்ணார் பெருமான் அடிகளே 

பொருள்

உன்னி = மனதில் எண்ணி

வானவர் = தேவர்கள்

ஓதிய = தினம் போற்றிய

சிந்தையில் = மனதில்

கன்னல் தேன் = கரும்புச் சாற்றில் தேன் கலந்தார் போல தித்திப்பவர்

கடவூரின் மயானத்தார் = திருக் கடவூர் மயானம் என்ற ஊரில் உள்ளவர்

தன்னை நோக்கித் = தன்னை நோக்கித்

தொழுது எழுவார்கு எல்லாம் = தொழுது எழுவார்கெல்லாம்

பின்னை எண்ணார்  = பின்னால் தரலாம் என்று நினைக்க மாட்டார்

பெருமான் அடிகளே = பெருமான் அடிகளே

அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போடும் குணம் கிடையாது.

கேட்டவுடன் , இந்தா பிடி , என்று உடனே வழங்குவார்.

நானும் தான் எவ்வளவோ கேட்கிறேன். எங்கே தருகிறார். இதெல்லாம் சும்மா என்று  நினைக்கத் தோன்றும்.

நீங்கள் கேட்பதைத் தரமாட்டார். உங்களுக்கு எனது நல்லதோ அதைத் தருவார். அதையும் உடனே தருவார்.

உங்களுக்குத் தெரியுமா , உங்களுக்கு எது நல்லது என்று ? அல்லது இறைவனை விட உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா ?

இந்தப் பெண் தான் வேண்டும், அவள் இல்லை என்றால் வாழ்கையே இல்லை என்று  வேண்டி விரும்பிக் கல்யாணம் பண்ணிக் கொண்ட பின்..."இதையா கட்டிக் கொண்டேன் " என்று வருந்துகிறான்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ  என்பார் மணிவாசகர்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்டமுழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொணடாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.

நீங்கள் தொழுது எழுங்கள். உங்களுக்கு வேண்டியதை அவன் உடனே செய்வான்.




(எழுது)