Thursday, August 25, 2016

இராமாயணம் - வாலி வதம் - இராமன் தோற்றம்

இராமாயணம் - வாலி வதம்  - இராமன் தோற்றம் 


இராமனின் அம்பினால் அடிபட்டு கிடக்கும் வாலி, தன் மேல் பாய்ந்த அம்பினை பற்றி இழுத்து அதில் இராமன் என்ற நாமம் எழுதி இருக்கக் காண்கிறான்.

முதலில் இராமனைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறான்.

இப்போது அவன் நாமத்தை கண்டான்.

அடுத்து ?

அதுத்தது அந்த இராமனே நேரில் வரக் காண்கிறான்.


பாடல்

‘இறை திறம்பினனால்; என்னே
    இழிந்துேளார் இயற்கை? என்னில்
முறை திறம்பினனால் ‘என்று
    மொழிகின்ற முகத்தான் முன்னர்,
மறை திறம்பாத வாய்மை
    மன்னர்க்கு முன்னம் சொன்ன
துறை திறம்பாமல் காக்கத்
    தோன்றினான், வந்து தோன்ற.

பொருள் 


‘இறை திறம்பினனால்; = அரச நீதி தவறினால் (இராமனே)

என்னே இழிந்துேளார் இயற்கை?  = மற்றவர்களின் நிலை என்ன. இராமனே தவறு செய்தால், மற்றவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்.

என்னில் = என்று

முறை திறம்பினனால் ‘ = வழக்கம் தவறினால் என்ன செய்வது

என்று = என்று

மொழிகின்ற முகத்தான் முன்னர் = சொல்கின்ற வாலியின் முன்
,
மறை திறம்பாத = வேதங்களில் சொல்லப் பட்டதை விட்டு தவறாத

 வாய்மை = உண்மையாக

மன்னர்க்கு  = மாணவர்களுக்கு

முன்னம் சொன்ன = முன்பு சொன்ன

துறை திறம்பாமல் காக்கத் = இடங்கள் தவறாமல் காக்க

தோன்றினான், வந்து தோன்ற.= தோன்றியவன்  தோன்றினான்

வந்தது யார் ?


உணர்ச்சியும் அறிவும் உச்சம் பெட்ற பாடல்.

ஒன்றைப் பார்ப்பவர்கள், மற்றதை மறந்து விட வாய்ப்பு உள்ள பாடல்.

வாலி நினைக்கிறான் -  அரச நீதி தப்பியவன்,  துறந்தவன் வருகிறான் என்று நினைக்கிறான். வில்லறம் , இல்லறம் துறந்தவன் வருகிறான் என்று நினைக்கிறான்.

மறைந்து இருந்து அம்பு தாக்கப்பட்ட அதிர்ச்சியில் உள்ள வாலி , வலியின்  உச்சியில் இருந்து அப்படி பார்க்கிறான்.

அது என்ன இறை திறம்பின்னான் ?

அரசனை இறைவனாகவே நினைத்தார்கள் நமது இலக்கியத்தில்.

ஏன் அப்படி ?

உயிர்களை காப்பது இறைவனின் வேலை. அந்த வேலையை செய்வதால், அரசனையும் இறைவனாகவே நினைத்தார்கள். வள்ளுவர் 'இறை மாட்சி' என்று ஒரு ஒரு அதிகாரமே படைத்தார்.

சரி, அது வாலியின் பார்வை.

கம்பன் எப்படி பார்க்கிறான் ?

வேதம், மனு நீதி இவற்றில் சொல்லப் பட்ட அறங்களை காக்க தோன்றியவன் , அங்கு வந்து தோன்றினான் என்கிறான் கம்பன்.

இராமன் தவறு செய்ததாக கம்பன் நினைத்திருந்ததால் அப்படி ஒரு வரியை  அந்த இடத்தில் போட வேண்டிய அவசியம் இல்லை.

கம்பன் எப்படியோ நினைத்து விட்டுப் போகட்டும்.

அடி பட்டவன் வாலி. வலியும் , வேதனையும் அவனுக்குத்தான்.

இராமனே இப்படி செய்தால் மற்றவர்கள் கதி என்ன என்று நினைத்தவன் முன்  தோன்றினான் என்று கம்பன் கூறுகிறான். வாலி  இன்னும் இராமனைப் பார்க்கவில்லை.

இராமன் இன்னும் சற்று நெருங்கி வருகிறான்.

இராமனைப் பற்றி கேள்வி பட்டான்.

அவன் நாமத்தை கண்டான்.

இப்போது இராமனே நேரில் வருகிறான்.

வந்த இராமனை, வாலி எப்படி கண்டான் ?

http://interestingtamilpoems.blogspot.com/2016/08/blog-post_25.html

No comments:

Post a Comment