Tuesday, February 28, 2017

நாலடியார் - வீடென்று எதைச் சொல்வீர் ?

நாலடியார் - வீடென்று எதைச் சொல்வீர் ?


ஒரு வீடு , வீடாவது எப்போது ?

வீட்டை சுத்தமாக வைத்து, நல்ல விளக்கு போட்டு, சாமான்களை அதது அந்தந்த இடத்தில் வைத்திருந்தால் அது  நல்ல வீடாகுமா ?

வீடென்றால் என்ன ? ஒரு வரவேற்பு அறை , சமையல் அறை , குளியல் அறை , டிவி முதலிய சாதனங்கள் இருந்தால் நல்ல வீடாகுமா ?

பல வீடுகளில் இவை எல்லாம் இருப்பது இல்லை. குடிசை வீடாக இருக்கலாம். ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட வீடாக இருக்கலாம். வாடகை வீடாக இருக்கலாம். மிக மிக வசதி குறைவான வீடாக இருக்கலாம். அவை எல்லாம் வீடாகாதா ?

இதெல்லாம் வீடல்ல.

வசதி இருக்கிறதோ, இல்லையோ அதெல்லாம் கணக்கு இல்லை. எந்த வீட்டில் பெண் கற்போடு இருக்கிறாளோ, அதுவே வீடு. மத்ததெல்லாம் வீடு அல்ல.

பாடல்

நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

பொருள்

நாலாறும் = நான்கு பக்கமும்

ஆறாய் = இடிந்து விழும் நிலையில் இருந்தாலும்

நனிசிறிதாய் = ரொம்ப ரொம்ப சின்னதாய் இருந்தாலும்

எப்புறனும் = எல்லா பக்கங்களிலும்

மேலாறு = மேலே உள்ள

மேலுறை = கூரை

சோரினும் = உடைந்து விழுந்தாலும்

மேலாய = சிறப்பான

வல்லாளாய்= வல்லவளாய்

வாழும் = தான் வாழும்

ஊர் = ஊரில்

தற்புகழு = தன்னை மற்றவர் புகழும்படி

மாண்கற்பின் = உயர்ந்த கற்புடைய

இல்லாள் = இல்லத்தை ஆளும் மனைவி

அமர்ந்ததே இல் =இருக்கும் இடமே வீடு

வீடு எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். நாலு பக்கமும் இடிந்து விழும்  சுவர். ஒழுகும் கூரை. எதுவாக இருந்தாலும் கவலை இல்லை.


வீட்டில் பெண் நன்றாக இருக்கிறாளா , அப்ப அதுதான் வீடு.

அதென்ன கற்புடைய பெண்கள் இருக்கும் வீடு தான் வீடு என்பது. எல்லா வீட்டு பெண்களும்  கற்புடன் தான் இருக்கிறார்கள். இங்கொன்றும், அங்கொன்றும்  ஏதோ வழி பிறழ்ந்து போயிருக்கலாம். அவர்களை தவிர்த்துப் பார்த்தால்  எல்லாம் கற்புள்ள பெண்கள்தான்.

எல்லா வீடும் , வீடுதான் என்று சொல்லி விட்டு போக வேண்டியதுதானே ?

கற்பு என்றால் ஏதோ உடல் சார்ந்த ஒழுக்கம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.

அது அல்ல.

கற்பு என்றால் கல் + பு விகுதி = கற்பு.

கல் போன்ற உறுதியான மனம் என்று பொருள்.

அது என்ன கல் போன்ற உறுதியான மனம் ?

ஒன்றைப் பற்றினால் அதில் நிற்பது. திருமணம் என்று ஒன்று ஆன பின்,கணவனை விட மற்ற ஆடவர்கள் அழகிலும், செல்வத்திலும், பலத்திலும், உயர்ந்தவர்களாக இருந்தாலும், கொண்ட கணவனையே சேர்ந்து நிற்கும் உறுதி.

காமம் என்பது தான் எவ்வளவுதான் பெருக்கெடுத்து வந்தாலும், கணவன் துணை இன்றி  காமத்தை அனுபவிக்காமல் இருக்கும் உறுதி. ஆண்கள் மனம் எளிதில் சலனம் அடையக் கூடியது. மனைவியை விட அழகான ஒரு  பெண்ணை பார்த்தால் சற்று பேதலிக்கும் குணம் கொண்டது. பெண் அப்படியல்ல.

எத்தனை துன்பம் வந்தாலும், நேர் வழியில் இருந்து தானும் விலகாமல் , கணவனையும், பிள்ளைகளையும் நல்ல நெறியில் செலுத்தும் உறுதி.

இராமாயணத்தில் , இராமனுக்கு முடி சூட்ட வேண்டும் உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள் என்று மந்திரிகளிடம் தசரதன் கேட்கிறான்.

எல்லோரும் அதை ஆமோதித்து தங்கள் கருத்துக்களை கூறுகிறார்கள்.

இறுதியில்,வசிட்டன் ஒரு வார்த்தை சொல்லுகிறான்.

சீதை நல்லவள் , எனவே இராமனுக்கு அரசை கொடுக்கலாம் என்று.

மண்ணினும் நல்லள் ; 
     மலர்மகள், கலைமகள், கலை ஊர்
பெண்ணினும் நல்லள் ; 
     பெரும் புகழ்ச் சனகியோ நல்லள்-
கண்ணினும் நல்லன் ; 
     கற்றவர் கற்றிலா தவரும்,
உண்ணும் நீரினும்,
     உயிரினும், அவனையே உவப்பார்.

எதற்காக இராமனுக்கு முடி சூட்டலாம் என்று சொல்லிக் கொண்டு போகும் போது , சீதை நல்லவள், அதுவும் ஒரு காரணம் என்று சொல்கிறான்.

காரணம் என்ன ?

மனைவி ஒழுக்கமானவளாக இருந்தாள் , கணவனும் அப்படியே இருப்பான். அவள், அவனை வழி நடத்துவாள் என்பது அறியப்படுகின்ற ஒன்று.


வீட்டின் மனைவி நல்லவளாக இருந்தால், அது வீடு. இல்லையென்றால் அது வீடு இல்லை.

மனைவியை கொண்டாடுங்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தை வீடாக்குபவள் அவள்.






1 comment:

  1. கவிஞர்கள் ஏன் ஆண் கற்பைப் பற்றி அதிகம் எழுதவில்லை?

    ReplyDelete