Thursday, March 2, 2017

திருவாசகம் - மெய் சுடரே

திருவாசகம் - மெய் சுடரே 


பாடல்

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

சீர் பிரித்த பின்

பொய்யாயின எல்லாம் போய் அகல வந்து அருளி 
மெய் ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

பொருள்

பொய்யாயின = பொய்யானவை

எல்லாம் = அனைத்தும்

போய் அகல =விட்டு விலக

வந்து அருளி = வந்து அருளி

மெய் ஞானமாகி = உண்மையான ஞானமாகி

மிளிர்கின்ற = சுடர் விடும்

மெய்ச்சுடரே = உண்மையான சுடரே


இரண்டே இரண்டு வரிதான். திருவாசகத்தில் இருந்து.

பொருள் என்ன என்று சிந்திப்போம்.


பொய்யாயின = பொய்யானவை 

எது பொய்யானது ?

செல்வம் ? மாடு, மனை, மனைவி, பிள்ளைகள் ? இவை எல்லாம் பொய்யா ?

மது, மாமிசம் போன்றவை பொய்யா ?

எது பொய் ? இவை எல்லாம் நிஜமானவைதானே ? நமக்கு இன்பம் தரக்கூடியவைதானே. 

மனைவி சுகம் இல்லையா ? பிள்ளைகள் சுகம் இல்லையா ? செல்வம் சுகம் இல்லையா ? 

இவை எல்லாம் நமக்கு நன்மைதானே செய்கின்றன. பின் எது பொய் ? 

பொய் என்பது பொருளிலோ , உயிர்களிலோ இல்லை. 

சில பொருள்கள், உறவுகள் நமக்கு இன்பம் தரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவை நமக்கு உண்மையிலேயே இன்பம் தருகின்றனவா ?

உதாரணத்துக்கு - மது இன்பம் தருகிறது என்று தானே குடிக்கிறார்கள். அது உண்மையிலேயே  இன்பம் தருகிறதா ? இன்பம் தருவது போல தோன்றும், ஆனால்  அது உண்மையில் துன்பத்தையே தரும்.  குடல் வெந்து, மதி மயங்கி, செல்வம் அழிந்து, நம்மை தவறான வழியில் இட்டுச் சென்று பெரிய துன்பத்தில் மாட்டி விட்டுவிடும். 

இன்பம் போலத் தெரியும். அது உண்மை அல்ல. இன்பம் போலத் தெரிவது பொய்.

சரி. புகை பிடிப்பது ? அதுவும் அப்படித்தான் ?

சரி ...மனைவி ? இன்பம் தான். அந்த இன்பத்தின் பின்னால் வரும் துன்பம் தெரிகிறதா ? அவளின் தேவைகள், பிள்ளைகள், அவர்களின் தேவைகள்.  மனைவியின் அழகு குறையும். ஆரோக்கியம் குறையும். பிள்ளைகள் வீட்டை விட்டுப் போய் விடுவார்கள். இன்பமா ? 

கணவனுக்கு மனைவி எப்படியோ, மனைவிக்கும் கணவன் அப்படித்தான். 

இவை இன்பமா ? முதலில் கொஞ்ச நாள் இன்பம். அப்புறம் சரி பொறுப்பை ஏற்றுக் கொண்டாகி  விட்டது. விடவா முடியும் ? சகித்துப் போக வேண்டியதுதான்  என்று வாழ்க்கை செல்கிறது. 

"நாப்பிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி,
பூபிளக்க பொய்யுரைத்து புற்றீசல் போல
கலகவென புலபுலவென புதல்வர்களைப் பெறுவீர்.
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் 
"கவன் பிளந்த மரமதனில் கால் நுழைத்துக்கொண்டே
ஆப்பதனை பிடுங்கிவிட்ட குரங்கதனைப்போல 
அகப்பட்டீர் அகப்பட்டீர் அகப்பட்டீரே!!" "

என்று பட்டினத்தார் சொன்னது போல, ஆப்பை அசைத்து விட்டு காலை உள்ளே விட்டு மாட்டிக் கொண்ட குரங்கைப் போல அகப்பட்டுக்கொண்டோம் என்பது தான் உண்மை. 

இன்பம் போலத் தெரியும். ஆனால் துன்பம் என்பதுதான் உண்மை.

இனிப்பு பலகாரங்கள் சுவையானதுதான். சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் துன்பம் வரும். 

இளமை - இனியதுதான். உடலில் வலு இருக்கும் போது ஏதேதோ செய்கிறோம். ஆடல், பாடல், கூத்து என்று நடக்கிறது. வயதாக வயதாக அதே உடல்  என்ன பாடு படுத்துகிறது. கண் தெரிவது இல்லை, காது கேட்பது இல்லை, ஞாபக சக்தி குறைந்து கொண்டே வருகிறது. வீட்டுக்கும் நாட்டுக்கும்  பாரமாகிப் போகிறோம். இன்பத்தை தந்த உடல் துன்பத்தின் இருப்பிடமாகிப் போகிறது. 

சரி, அதற்காக இதை எல்லாம் வேண்டாம் என்று விட முடியுமா ?

முடியாதுதான். 

இவை இன்பம் என்று நினைத்து கையில் எடுக்கிறோம். துன்பமாகப் போய் விடுகிறது. 

இவை துன்பம் என்று கையில் எடுப்போமா ?

நான் திருமணம் செய்து கொண்டு துன்பப் படப் போகிறேன் என்று யாரவது  திருமணம் செய்து கொள்வார்களா ?

அது துன்பம் என்று தெரிந்தால் செய்ய மாட்டார்கள். இன்பம் என்று நினைத்தால் அது பொய். 

அது தெரியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். 

இன்பம் என்று சொன்னால் அது இன்பமாகவே இருக்க வேண்டும். துன்பம் என்று சொன்னால் அது துன்பமாகவே இருக்க வேண்டும். 

இன்பம் பின்னால் துன்பமாக மாறும் என்றால் அது பொய் தானே. 

எனவே , பொய்யான எல்லாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 

"எல்லாம்" - வாழ்வில் ஏதோ ஒன்றிரண்டு பொய்யாகத் தெரிவது இல்லை. நிறைய இருக்கிறது. "எல்லா" பொய்களையும். 

"போய் அகல "....அது என்ன போய் , அகல என்று இரண்டு வார்த்தை. போய் என்றாலும், அகலுதல் என்றாலும் ஒன்று தானே ?

கூறியது கூறல் தவறல்லவா ?

மணிவாசகர் தவறு செய்வாரா ? மாட்டார். 

பொய் என்று தெரிவதை விட்டு உடல் விலகலாம். அறிவு விலகலாம். மனம் விலகாது. 

சர்க்கரை உடம்புக்கு நல்லது இல்லை என்று மருத்துவர் சொல்லி இருப்பார். அறிவு அதை ஏற்றுக் கொள்கிறது. ஆனால், மனம் இனிப்புக்கு ஏங்கும்.

திருமணத்தால் பொறுப்புகளும், தொல்லைகளுமே அதிகம் என்று அறிவு சொல்கிறது. பெண்ணைப் பார்த்தால் மனம் அவள் பின்னே போகிறது. 

உடலும் விலகனும் . உள்ளமும் விலகனும் . 

போய்  - உடலை விட்டுப் போய் 

அகன்று  - மனதை விட்டு அகன்று.

எது பொய்யோ அது பற்றிய எண்ணமே இருக்கக் கூடாது. 

சரி, இந்த பொய்யை விட்டு எப்படி விலகுவது. படித்து அறிந்து அதில் இருந்து விலக முடியுமா ? எது சரி , எது தவறு என்று படித்து அறிந்து கொள்ள முடியுமா ?

முடியாது என்கிறார் மணி வாசகர் 

"அருளி" அருள் இல்லாமல் அது முடியாது. அறிவு ஏற ஏற குழப்பமும் ஏறும். அறிவின் இலட்சணம் அது. அறிய அறிய, அறியாமை விரிந்து கொண்டே போகும். 

அவன் அருள் இருந்தால் பொய்யானவை எல்லாம் போய் அகலும்.

சரி, அருளுக்கு எங்கே போவது. எப்படி அந்த அருள் கிடைக்கும். 

"வந்து அருளி " என்கிறார். 

நீங்கள் போக முடியாது. எங்கே போவீர்கள் ? அவன் இருக்கும் இடம் தெரியுமா ? விலாசம் இருக்கிறதா ? கூகிள் மேப்பில் தேட முடியுமா ? எங்கும் போக முடியாது. 

அவன் உங்களைத் தேடி வருவான். 

வந்து அருள் செய்வான் 

"வந்து அருளி" 

"மெய்ஞானமாகி " ஞானத்தில் மெய்ஞானம், அஞ்ஞானம் என்று இருக்கிறது. பொய்யான ஞானம். உண்மையான ஞானம் பொய்யில் இருந்து விலகி உண்மையை அறிய உதவும். 

"மிளிர்கின்ற மெய் சுடரே " 

இருட்டில் கிடப்பது பாம்பா கயிறா என்று தெரியாமல் மனம் குழம்பும். எத்தனை ஆயிரம் புத்தகங்களை படித்தாலும் அந்த குழப்பம் தீராது. ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொண்டுவந்தால் பாம்பா கயிறா என்று தெளிவாகத் தெரிந்து விடும். 

வாழ்வில் ஆயிரம் குழப்பங்கள் அப்படி இருக்கும். படித்து தெளிய முடியாது. மெய் சுடர் வேண்டும். 

அது என்ன மெய் சுடர் ? 

சுடர் என்று சொன்னால் போதாதா ?

வீட்டில் பச்சை நிறத்தில் ஒரு tube லைட் போட்டால் எல்லாம் பச்சையாகத் தெரியும். மஞ்சள் நிறத்தில் ஒரு லைட் போட்டால் எல்லாம் மஞ்சளாகத் தெரியும். 

பொருளின் உண்மையை அறிய உதவும் மெய் சுடர் வேண்டும். 

உலகில் எத்தனையோமதங்கள் , அரசியல் கோட்பாடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தை சொல்கின்றன. எது சரி, எது தவறு என்று எப்படி  அறிந்து கொள்வது. 

மெய்யான சுடர் வேண்டும். 

மீண்டும் இந்த இரண்டு வரிகளை படித்துப் பாருங்கள். இன்னும் கூட அர்த்தம் தோன்றலாம். 

இரண்டு வரியில் இவ்வளவு அர்த்தம் என்றால் முழு திருவாசகத்தில் எவ்வளவு இருக்கும். 

படியுங்கள்.

1 comment:

  1. By chance I came to your blog, looking for a poem in Kamba Ramayanam. Thoroughly enjoying reading gems. Thank you very much

    ReplyDelete