Sunday, June 23, 2024

கம்ப இராமாயணம் - மண்டோதரி - பாகம் 1

கம்ப இராமாயணம் - மண்டோதரி - பாகம் 1 


கம்ப இராமாயணத்தில் மண்டோதரியின் பாத்திரம் மிகவும் சிந்திக்க வைக்கும் பாத்திரம். 


ஒரு புறம் மிக பலம் வாய்ந்த கணவன். அவனுக்கு சளைக்காத பிள்ளைகள். வீடணன், கும்பகர்ணன் போன்ற மைத்துனர்கள். 


வீரம், பக்தி, அறிவு என்று அனைத்தும் இருந்தாலும், மாற்றான் மனைவி மேல் காமம் கொண்ட கணவன். அவனைத் தட்டிக் கேட்க முடியாது. கணவனின் காமத்துக்கு பிள்ளையை பறி கொடுக்கிறாள் மண்டோதரி. அவள் என்னதான் செய்தாள்? செய்திருக்க வேண்டும் ?


அரக்க குலத்தில் வாழ்க்கைப் பட்டதால், இதெல்லாம் சாதாரணம் என்று எடுத்துக் கொண்டாளா? அல்லது அவளுக்கு இவற்றில் எல்லாம் உடன்பாடு இல்லாமல் இருந்தாளா?  


ஆயிரம் தான் கணவன் நல்லவனாக இருந்தாலும், பெண்களுக்கு தங்கள் பிள்ளைகள் மேல் ஒரு படி பாசம் கூடத்தான் இருக்கும். தாய்மையின் இயல்பு அப்படி. அப்படி இருக்க, இராவணனின் காமத்தால் மகனை இழந்த மண்டோதரி இராவணனிடம் சண்டையிட்டாளா ?


இவற்றை சிந்திக்க இருக்கிறோம். 


சீதையைத் தேடி அனுமன் இலங்கையில் அலைகிறான். இறுதியில் இராவணன் மாளிகை இருக்கும் தெருவுக்கு வந்து விடுகிறான். அங்கே மண்டோதரியை அனுமன் காணப் போகிறான். 


இராவணன் வாழும் அரண்மனை என்று சொல்லவில்லை கம்பன். மண்டோதரி வாழும் இடம் என்று சொல்லுகிறான். 


"தேவ லோகப் பெண்கள் வாழும் அந்தத் தெருவில் அமைந்த தூய்மையான மூன்று உலகையும் ஆளும் இராவணின் வாழும் இடத்தை அடைந்த அனுமன்,  

சந்திரனும் ஒளி மழுங்கும் படி குளிர்ந்த, பிரகாசமான முகத்தை கொண்ட மண்டோதரியைக் கண்டான்"


பாடல் 


ஆயவிஞ்சையர் மடந்தையர் உறைவிடம்

     ஆறு -இரண்டு அமைகோடித்

தூய மாளிகைநெடுந்தெருந் துருவிப் போய்,

     தொலைவில்மூன்று உலகிற்கும்

நாயகன்பெருங்கோயிலை நண்ணுவான்

     கண்டனன்,நளிர் திங்கள்

மாய நந்தியவாள்முகத் தொருதனி

     மயன்மகள்உறைமாடம்.


பொருள் 


ஆய = அப்படிப்பட்ட 


விஞ்சையர் = தேவ லோகப்  


 மடந்தையர் = பெண்கள் 


உறைவிடம் = வாழும் இடம் 


ஆறு -இரண்டு = பன்னிரண்டு  


அமை கோடி  = கோடி (பெண்கள்)  வாழும் 


தூய மாளிகை = பெரிய மாளிகை 


நெடுந்தெருந் = நீண்ட தெரு, வீதி 


துருவிப் போய் = தேடித் தேடி 


தொலைவில் = தொலை தூரத்தில் 


மூன்று உலகிற்கும் = மூன்று உலகத்துக்கும் 


நாயகன்= தலைவன் (இராவணன்) 


பெருங்கோயிலை = பெரிய மாளிகை 


நண்ணுவான் = சென்று அடைவான் (அனுமன்) 


கண்டனன் = கண்டான் 


நளிர் திங்கள் = குளிர்ந்த திங்கள் 


மாய = ஒளி மழுங்க 


நந்திய = விளங்கும் 


வாள்முகத் = ஒளி பொருந்திய முகத்தை 


தொருதனி = மிக சிறப்பு வாய்ந்த 


மயன் =மயன் என்ற தேவ சிற்பியின் 


மகள் = மகளான மண்டோதரி 


உறைமாடம் = வாழும் மாளிகை 


பன்னிரண்டு கோடிப் பெண்கள், அதுவும் தேவ லோகப் பெண்கள் இருந்தும், இராவணனுக்கு சீதை மேல் ஆசை. 


எது கிடைக்காதோ அதன் மேல் ஆசை கொள்வது அரக்க குணம். இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழத் தெரியாத குணம். 


நம்மிடம் இருக்கும் அனைத்தையும் வைத்துக் கொண்டு எவ்வளவு இன்பமாக வாழலாம்?  ஒருத்தர் கூட இன்பமாக வாழ்வதாகத் தெரியவில்லை. அடுத்தவன் மனைவி அழகாகத் தெரிகிறாள். 


அரக்க குணம். 



No comments:

Post a Comment