Showing posts with label தேவாரம். Show all posts
Showing posts with label தேவாரம். Show all posts

Thursday, February 9, 2017

தேவாரம் - என்று வந்தாய் என்னும் எம்பெருமான்

தேவாரம் - என்று வந்தாய் என்னும் எம்பெருமான்


ரொம்ப நாள் கழித்து யாராவது நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் வீட்டுக்குப் போனால் "என்னப்பா ஆளையே காணோம். இப்பத்தான் என் நெனப்பு வந்துச்சா " என்று கேட்பார்கள் அல்லவா....

அது போல

நீண்ட நாள் கழித்து நாவுக்கரசர் சிதம்பரத்தில் உள்ள சிவ பெருமானை தரிசிக்கப் போகிறார்.

அங்கே சிவன் ஆடிய கோலத்தில் கையை அபிநயம் பிடித்தப்பிடி இருக்கிறார்.

அதைப் பார்த்த நாவுக்கரசருக்கு  "எப்ப வந்தாய் " என்று கேட்பது போல இருந்ததாம்....

பாடல்

ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்கா
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.

பொருள்

ஒன்றி இருந்து = மனம் வாக்கு காயம் என இவை எல்லாம் ஒன்றாக இருந்து

நினைமின்கள் = நினையுங்கள்

உம் தமக்கு =உங்களுக்கு

ஊனம் இல்லை = குறை இல்லை

கன்றிய = சினந்த

காலனைக் = எமனை

காலால் கடிந்தான் =காலால் எட்டி விலக்கினான்

அடியவற்கா = அடியவனான மார்கண்டேயனுக்காக

சென்று தொழுமின்கள் = அவனை சென்று தொழுங்கள்

தில்லையுள் = தில்லையுள்

சிற்றம்பலத்து =சிற்றம்பலத்தில்

நட்டம் = நடனம் புரியும்

என்று வந்தாய் என்னும் = என்று வந்தாய் என்று கேட்கும்

எம்பெருமான் = எம்பெருமானாகிய சிவனின்

தன் திருக்குறிப்பே = சைகையே


ஒன்றி இருந்து நினைமின்கள் - மனமும் உடலும் ஒன்றாக இருக்க வேண்டும். எங்கே முடிகிறது. கண்ணை மூடினால் ஆயிரம் சிந்தனைகள். அலையும் மனதை நிறுத்தி ஒருமுகப் படுத்த வேண்டும்.

காலால் கடிந்தான் - கடிதல் என்ற சொல்லுக்கு கண்டித்தல் , விலக்குதல் , ஓட்டுதல் என்று  பொருள்.

காலனை காலால் ஓட்டினான் என்ற தொடருக்கு எமனை எட்டி உதைத்தார் என்று பொருள்  கொள்ளக் கூடாது. எமன் என்ன தவறு செய்தான் ? காலம் முடிந்த ஒருவனின் உயிரை எடுப்பது அவனுக்கு இடப்பட்ட வேலை. கடமை.  அதைத்தானே  அவன் செய்தான். கடமையை செய்ததற்காக அவனை தண்டிக்கலாமா ? அதுவும் பல பேர் அறிய எட்டி உதைக்கலாமா ?

அது அல்ல பொருள்.

சைவ சித்தாந்தம் 36 தத்துவங்களை கூறுகிறது. அதில் காலம் என்பது ஒரு தத்துவம். மார்கண்டேயர் யோக மார்கத்தில் கால தத்துவத்தை கடந்து  சென்று விட்டார்.  "இரவும் பகலும் அற்ற வெளிக்கு " சென்று விட்டார்.  இதை அறியாத எமன் அவர் ஏதோ 16 வயது முடிந்து விட்டது என்று அவருடைய உயிரை எடுக்கச்  சென்றார். கால தத்துவத்துக்கு உட்பட்டவர்கள் உயிரை எடுப்பதுதான் அவனுக்கு இட்ட வேலை.  காலத்தை தாண்டிய மார்கண்டேயர் போன்ற யோகிகளின் உயிரை பறிக்க முயன்றது அவன் தவறு.

சரி. எமன் தவறு செய்த்ததாகவே  இருக்கட்டும். அதற்காக அவனை எட்டி உதைப்பதா ?

ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள  வேண்டும். சமய இலக்கியங்கள் இறைவனின் திருவடி என்று சொல்லுவது ஞானத்தை.

'திருவடிகளைத் தருவாய் " என்றால் ஞானத்தை தருவாய் என்று பொருள்.


நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வைத்து என்பார் அபிராமி பட்டர்.

ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் 
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் 
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட 
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

என்பது அபிராமி அந்தாதி.

இறைவன் திருவடி தீண்டப் பெறுவதற்கு திருவடி தீட்சை என்று பெயர்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இறைவனின் சிலை நாவுக்கரசரைப் பார்த்து "எப்போது வந்தாய்" என்று கேட்பது போல இருந்ததாம்.

என்னிடம் வர ஏன் இவ்வளவு நாள் ? முதலிலேயே வரவேண்டியது தானே என்று கேட்பது போல இருந்ததாம்.

உடலில் வலு இருக்கும் போது , மனதில் உறுதி இருக்கும் போது , இரத்தம் சூடாக இருக்கும் போது மனிதன் இறைவனை நினைப்பது இல்லை.

தோல்விகள் துரத்தும் போது , வாழ்வின் நிகழ்வுகள் தன்னுடைய சக்தியை தாண்டி  நிகழும் போது , மனிதன் இறைவனை நோக்கி ஓடுகிறான்.

இறைவன் காத்து   இருக்கிறான்.

நீங்கள் எப்போது வருவீர்கள் என்று.





Wednesday, January 11, 2017

தேவாரம் - ஊஞ்சல்

தேவாரம் - ஊஞ்சல் 


ஊஞ்சல் !

ஊஞ்சல் ஆடி இருக்கிறீர்களா ? சிறு பிள்ளையாக இருக்கும் போது ஆடி இருப்பீர்கள். சில வீடுகளில் திருமணத்தின் போது ஊஞ்சல் ஆடும் வைபவம் இருக்கும். பெரிய வீடுகளில் இன்றும் கூட ஊஞ்சல் வைத்து கட்டுவார்கள்.

ஊஞ்சல் ஆடும்போது என்ன நிகழ்கிறது ? ஊஞ்சல் மேலே போகும். பின் கீழே வரும். பின் எதிர் திசையில் மேலே போகும். பின் மறுபடியும் கீழே வரும். இப்படி மாறி மாறி மேலே போவதும், கீழே வருவதும் நிகழும். ஆடி ஆடி ஒரு நாள் ஊஞ்சல் கயிறு அறுந்து போகும். ஊஞ்சல் பலகை தரையில் கிடக்கும்.

ஊஞ்சல் ஒரு வாழ்க்கை தத்துவத்தை விளக்குகிறது.

வாழ்க்கையில் நாம் சில சமயம் மேலே போவோம், கீழே வருவோம், மீண்டும் மேலே போவோம், கீழே வருவோம்....மேடு பள்ளங்கள் , உயர்வு தாழ்வுகள் வாழ்வின் மாறாத விதி.

மனிதன் ஒரு ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு ஊஞ்சல் போல அலைகிறான்.

கார் வேண்டும் என்று ஆசைப் படுகிறான். கார் வாங்கிவிட்டால் , அந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைப்பது இல்லை. மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து விடுகிறான். அடுத்த ஆசை தலை தூக்குகிறது. வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கிறான். அதை நோக்கி வாழ்க்கை நகர்கிறது. வீடு வந்தால்  , சிறிது நாளில் அந்த சந்தோஷம் போய் விடுகிறது. அடுத்த ஆசை எழுகிறது.

மேலே போகும் போது மகிழ்ச்சி. கீழே வரும்போது துன்பம். இன்பம், துன்பம், இன்பம், துன்பம்....இதுதான் ஊஞ்சல்.

இப்படி ஒரு ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு மனிதன் ஊஞ்சல் போல ஆடிக் கொண்டிருக்கிறான். மனம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கிறது, அமைதி இல்லாமல்.

பாடல்

உறுகயி றூசல் போல வொன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானே னதிகைவீ ரட்ட னீரே

சீர் பிரித்த பின் 

உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி 
மறு கயிறு ஊசல் போல வந்து வந்து உலவு நெஞ்சம்
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய் பாதத்

அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகை வீரட்டனீரே

பொருள் 

உறு = உறுதியான 

கயிறு ஊசல் போல = கயிற்றால் கட்டிய ஊசல் போல 

ஒன்று விட்டு ஒன்று பற்றி = ஒரு ஆசையை விட்டு , வேறொரு ஆசையை பற்றியதைப் போல 

மறு கயிறு = ஒரு பக்கம் போன ஊஞ்சல் மீண்டும் மறு பக்கம் சென்று வரும். அது மறு கயிறு 

ஊசல் போல = ஊஞ்சல் போல 

வந்து வந்து உலவு நெஞ்சம் = வந்து வந்து உலவும் நெஞ்சம் 

பெறு கயிறு ஊசல் போலப் = போவதும் வருவதையும் பெற்ற கயிறு போல 

 பிறை புல்கு சடையாய் = பிறையை தலையில் அணிந்த சிவனே 

பாதத் = பாதத்தில் 


அறு கயிறு = அறுந்து விழும் 

ஊசல் ஆனேன் = ஊஞ்சல் ஆனேன் 

அதிகை வீரட்டனீரே = திரு அதிகை என்ற தலத்தில் எழுந்து அருளும் வீரட்டனாரே 

ஊஞ்சலின் கயிறு அறுந்தால் , தரையில் விழும். 

மனம் என்ற ஊஞ்சல் அறுந்தால் இறைவன் திருவடியே அது சென்று தங்கும் இடம். 

அது சரி, ஊஞ்சல் மனம் என்றால், கயிறு எது ?

ஆசை, பாசம் என்பன கயிறுகள். கட்டப் பட்ட மரம் தான் வாழ்க்கை. 

ஆசையாலும், பாசத்தாலும் மனிதன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். 

எவ்வளவு அலைந்தாலும், ஊஞ்சல் எங்கும் போவது இல்லை. அங்கேயேதான்  இருக்கும். ஆசையும் பாசமும் மனிதனை முன்னேற விடமால் கட்டிப் போடும். 

ஆடி ஆடி களைத்துப் போய் , கயிறு பிடி விடும் போது தாங்குகின்ற தரையாக இறைவன் திருவடி இருக்கிறது. 

மங்கையர் மையல் என்ற ஊஞ்சலில் இருந்து என்று விடுபடுவேன் என்று ஏங்குகிறார் அருணகிரிநாதர். இந்த பெண் நன்றாக இருக்கிறாள். அட, அவள் இவளை விட அழகாக இருக்கிறாளே. இவர்கள் இரண்டு பேரையும் விட மூன்றாமவள் சிறப்பாக இருக்கிறாளே என்று மனிதன் அலை பாய்கிறான்.  

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, "ஊசல்" படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல, நிர்பயனே


 கூர்ந்து கவனியுங்கள். ஊஞ்சல் கூட பாடம் சொல்லித் தரும். 




Sunday, January 8, 2017

தேவாரம் - அஞ்சி ஆகிலும்

தேவாரம் - அஞ்சி ஆகிலும் 


மனிதன் இறைவனை தொழ ஆரம்பித்தது பயத்தினால்தான். இடி இடித்தால் பயம், மின்னல் வெட்டினால் பயம். வெள்ளம், நில நடுக்கம், கிரகணம் , கொள்ளை நோய் என்று பலவற்றை கண்டு மனிதன் பயந்தான். தனக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. தன்னால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது என்று அறிந்து கொண்டான். அந்த சக்தியின் கோபத்தில் இருந்து தப்பிக்க, அதன் தயவைப் பெற, அதை வழி படத் துவங்கினான்.


மனிதனின் பயம் இடம் மாறியது. இடி மின்னலில் இருந்து , பாவம், புண்ணியம், சொர்கம் , நரகம் என்று நினைக்கத் தொடங்கினான். தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்று நினைத்தான். எண்ணெய் கொப்பரை பயம் பற்றிக் கொண்டது.

நாள் ஆக ஆக , அறிவு வளர்ந்தது. அறிவியல் பலவற்றை கண்டு சொல்லியது.


மழையும், இடியும், மின்னலும், நோயும் , கிரகணமும் எப்படி வருகிறது என்று கண்டு சொல்லியது. மனிதனின் பயம் குறையத் தொடங்கியது. நோய் என்றால்    தெய்வ  குத்தம் என்று கோவிலுக்குப் போவதில்லை, மருத்துவமனைக்குப் போகிறான்.

பயம் கொஞ்சம் குறைந்தது. இருந்தும் ஆண்டவனை தொழுவது குறையவில்லை. எதற்கு தொழ வேண்டும் ? எதெல்லாம் ஆண்டவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருந்தானோ, அது எல்லாம் ஆண்டவன் செயல் அல்ல என்று புரிந்த பின் ஏன் ஆண்டவனைத் தொழ வேண்டும் ?

நாளடைவில் , ஆண்டவன் மேல் அன்பு வரத் தொடங்கியது. பயம் , அன்பாய் மலர்ந்தது.

பெற்றோர் மேல் பிள்ளைகளுக்கு முதலில் பயம் இருக்கும். வளர்ந்து பெரிய ஆளானபின் அந்த பயமே அன்பாக மாறுவது போல.....

"அச்சத்தின் காரணமாகவேனும், அன்பினாலாவது இறைவனை நினை " என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக்

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

சீர் பிரித்தபின்

அஞ்சி ஆகிலும் அன்பு பட்டாகிலும் 
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ
இஞ்சி மாமதில் இமையோர் தொழ 

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே

பொருள்

அஞ்சி ஆகிலும் = அச்சத்தின் காரணமாகவேனும்

அன்பு பட்டாகிலும்  = அன்பினாலாவது

நெஞ்சம் வாழி = நெஞ்சே நீ வாழ்க

நினை  = நினைப்பாயாக

நின்றியூரை நீ = திரு நின்ற ஊர் என்ற தலத்தில் உள்ள

இஞ்சி மாமதில்= காவலை உடைய பெரிய மதில்களைக் கொண்ட

இமையோர் தொழ = கண் இமைக்காத தேவர்களும் தொழ


குஞ்சி = தலை முடியில்

வான்பிறை = வானில் உள்ள பிறையை

சூடிய கூத்தனே = சூடிய கூத்தனே

வாழ்க்கை என்ற மிகப் பெரிய இன்பத்தைக் கொடுத்த இறைவனிடம் அன்பு செலுத்தச் சொல்கிறார்  நாவுக்கரசர். ஆரோக்கியமான உடல், அளவான செல்வம், அன்பான குடும்பம், அமைதியான நாடு...இப்படி எத்தனை எத்தனையோ நன்மைகளைத் தந்த ஆண்டவனை அன்போடு நினைக்கச் சொல்கிறார் அப்பர்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/01/blog-post_12.html




Sunday, November 20, 2016

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.

தேவாரம் - நல்லக விளக்கது நமச்சி வாயவே.


வீடுகளில் , சாயந்தரம் விளக்கு ஏற்றுவார்கள். கார்த்திகை போன்ற மாதங்களில் நிறைய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.

எதற்கு விளக்கு ஏற்ற வேண்டும் ?

திருநாவுக்கரசர் சைவ சமயத்தில் பிறந்து, தடம் மாறி சமண சமயத்தில் சேர்ந்தார். அந்த சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்தார். பின் , மீண்டு சைவ சமயத்தில் வந்து சேர்ந்தார். அவர் அப்படி சமண சமயத்தை விட்டு விட்டு சைவ சமயத்தில் சேர்ந்ததில் சமணர்களுக்கு மிகுந்த கோபம். அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு நிறைய துன்பங்கள் செய்தார்கள்.

கல்லைக் கட்டி கடலில் போட்டார்கள், சுண்ணாம்பு உள்ள அறையில் அடைத்து வைத்தார்கள், அறையில் அடைத்து வைத்து விறகை போட்டு தீ மூட்டினார்கள், யானையை கொண்டு அவருடைய தலையை மிதிக்கச் சொன்னார்கள்....

அந்த சமயத்தில், நாவுக்கரசர் நமச்சிவாய பதிகம் என்ற பத்து பாடல்களை பாடினார்.

அதில் ஒன்று

பாடல்

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பொருள்

இல்லக = இல்லத்தினுள்

விளக்கது = உள்ள விளக்கானது

விருள்கெ டுப்பது = இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது

சொல்லக = சொல்லினுள் உள்ள

விளக்கது = விளக்கானது

சோதி யுள்ளது = ஜோதி வடிவில் உள்ளது

பல்லக = பலருடைய மனதில் உள்ள

விளக்கது = விளக்கு அது

பலருங் காண்பது = எல்லோரும் காண்பது

நல்லக = நல்லவர்களின் மனதில் உள்ள

விளக்கது = விளக்கு அது

நமச்சி வாயவே = "நமச்சிவாய" என்ற மந்திரம்

என்ன இது வீட்டில் உள்ள உள்ள விளக்கு, சொல்லில் உள்ள விளக்கு, பலருடைய மற்றும்  நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு என்று ஒரே விளக்காக இருக்கிறதே...என்ன அர்த்தம் ?

விளக்கு என்பது இருளை போக்குவது. இருளை விலக்க வேண்டும் என்றால் , இருளை குறைக்க முடியாது. ஒரு விளக்கை ஏற்றினால் தானே இருள் விலகி விடும்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த இருளாக இருந்தாலும் ஒரே ஒரு விளக்கை கொண்டு வந்தால் அந்த இருள் அகன்று விடும்.

அஞ்ஞானம் என்ற இருள் நம்மிடம் மண்டிக் கிடக்கிறது. எத்தனையோ பிறவிகளில் சேர்த்த இருள்.  அந்த இருளை எப்படி போக்குவது ? நிறைய புத்தகங்களை கொண்டு வந்து வைத்தால் அது போகுமா ? நிறைய செல்வங்களை கொண்டு வந்து வைத்தால் போகுமா ? போகாது. ஒரே ஒரு விளக்கு போதும் அந்த இருளை விரட்ட.

அந்த விளக்கு "நமச்சிவாய" என்ற மந்திர விளக்கு. நமச்சிவாய என்று சொன்னால் அஞ்ஞான இருள் அகன்று விடும்.

இல்லத்தினுள் இருக்கும் இருளை எப்படி விளக்கின் ஒளி கெடுக்கிறதோ, அது போல் மனதில் உள்ள இருளை கெடுப்பது நமச்சிவாய என்ற மந்திரச் சொல்.

அது எப்படி, நமச்சிவாய என்று சொன்னால் இருள் போகுமா ? அந்த சொல்லில் அப்படி என்ன இருக்கிறது ?

அந்த சொல்லுக்குள் ஜோதி இருக்கிறது.

"சொல்லக விளக்கது ஜோதி உள்ளது"

அந்த சொல்லுக்குள் ஜோதி உள்ளது.

சரி, அது சைவ சமயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே பொருந்தும். நமச்சிவாய என்று மற்ற மதத்தில் , ஏன், இந்து சமயத்தில் உள்ள மற்ற பிரிவினர் கூட சொல்ல மாட்டார்களே..என்ன செய்வது ?

அது எல்லோருடைய மனதிலும் உள்ளது. சைவ சமயத்துக்கு மட்டும் சொந்தம் இல்லை.

"பல்லக விளக்கது பலரும் காண்பது"

பலருடைய மனதிலும் உள்ளது.  பலரும் காணும்படி உள்ளது.

அப்படியானால், எல்லோரும் காணமுடியுமா ? சிலர் இதெல்லாம் இல்லை , தவறு என்று சொல்கிறார்களே ?

நல்லவர்களின் மனதில் உள்ளது.

நல்லக விளக்கது நமச்சிவாயவே . நல்லவர்களின் மனதில் தோன்றி சுடர் விடும் விளக்கு அது.

கொஞ்சம் நம்பும்படி இல்லையே ... நமச்சிவாய என்று சொன்னால் அனைத்து பாவங்களும் அஞ்ஞானமும் போய் விடுமா ?

அதற்கு பாரதியார்  பதில் சொல்கிறார்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை 
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- தழல் 
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'

காடு பெரியது தான், அதற்காக பெரிய நெருப்பு வேண்டாம். ஒரு சிறு நெருப்பு பொறி போதும். காடு வெந்து தணியும். அது போல சேர்த்து வைத்த பாவங்களும், அஞ்ஞானமும் எவ்வளவு இருந்தாலும் ஒரே வார்த்தையில் போகும்.

சரி, இப்படி விளக்கு ஏற்றியவர் அப்பர் மட்டும்தானா ?

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்

என்று ஞான விளக்கு ஏற்றினார் பூதத்தாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே

என்று கதிரோனையே விளக்காக ஏற்றினார் பொய்கை ஆழ்வார்.



விளக்கு ஏற்றுங்கள். அறியாமை நீங்கட்டும். ஞானம் என்ற ஒளி பெருகட்டும்.





Monday, November 7, 2016

தேவாரம் - துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என் ?

தேவாரம் - துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்  ?


 இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள தொடர்பு  பெரும்பாலும் அது நாயக நாயகி பாவமாகவே இருந்திருக்கிறது. 

சுந்தரர் ஒருவர் தான் அதை மாற்றினார். இறைவனை தோழனாக பாவித்தார்.

நட்பு அனைத்து உறவுகளிலும் உயர்ந்தது.

நட்பு என்றால் ஏதோ பெயரளவில் அல்ல.

சிவ பெருமானிடம் love லெட்டர் கொடுத்து அனுப்பியவர் சுந்தரர்...அதுவும் முதல் மனைவி இருக்கும் போதே , இரண்டாவது ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து அனுப்பினார். சிவ பெருமானும் கொண்டு போனார்.

நட்பு என்றால் கிண்டல், கேலி எல்லாம் இருக்கும் அல்லவா.

சுந்தரர் சிவனைப் பார்த்து கேட்கிறார்

"இங்க பாரு, உன் பக்தர்கள் உன் அருள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என்று காத்து கிடக்கிறார்கள். நீயோ காலம் தாழ்த்திக் கொண்டே போகிறாய். நீ அருள் செய்வதற்கு முன் அவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வாய் ? அப்புறம் யாருக்கு அருள் செய்வாய் ? அது மட்டும் அல்ல, உனக்கு இருக்கும் அருளுக்கு , இந்த பக்தர்களுக்கு கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்த போய் விடும்...போ சீக்கிரம் அருள் செய் " கட்டளை இருக்கிறார்.

பாடல்

நஞ்சி, “இடை இன்று நாளை” என்று உம்மை நச்சுவார் 
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்! 
பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்! 
முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!

பொருள்


நஞ்சி, = விரும்பி

“இடை இன்று நாளை” = இன்று வரும் , நாளை வரும்

என்று = என்று

 உம்மை  = உன்னை

நச்சுவார் = உள்ளன்போடு விரும்புவார் 


துஞ்சியிட்டால் = இறந்து விட்டால்

பின்னைச் = அப்புறம்  பின்னால்

செய்வது என்? = என்ன செய்வது ?

அடிகேள், = அடிகளே கேள்

சொலீர் = ஆரவாரம் எழுப்பும் கழல்கள் அணிந்த திருவடிகளை உடையவரே

பஞ்சி = பஞ்சு

இடப் புட்டில் = இட்டு வைத்தால்

கீறுமோ? = உடைந்து விடுமோ

பணியீர், = சொல்வீர்

அருள்! = உம்முடைய அருள்

முஞ்சி இடைச் =  புல்லின் மேல்

சங்கம் = சங்கு

ஆர்க்கும் = சப்தம் எழுப்பும்

சீர் முதுகுன்றரே! = சிறந்த முது குன்று என்ற ஊரில் உள்ளவரே


நச்சி என்றால் விரும்பி , உள்ளன்போடு விரும்பி என்று பொருள். விரும்பப் படாதவன் செல்வம் ஊர் நடுவில் ஒரு நச்சு மரம் பழுத்தது போன்றது என்பார் வள்ளுவர்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

யாரிடமும் அனுப்பு செலுத்தாதவன். அவனிடம் யாரும் போக மாட்டார்கள். அவனுக்கு செல்வம்  வந்தால் அது நச்சு மரம் பழுத்தது போலத்தான் என்கிறார்.

மானிட வாழ்வு கொஞ்சம் காலம்தான். சிவனே, உன் அடியார்கள் இறப்பதற்குள் போய் அருள் செய் என்று இறைவனையே பணிக்கிறார்.

துஞ்சியிட்டால் = இறந்து விட்டால்

துஞ்சுதல் என்றால் தூங்குதல் என்று பொருள். 

தமிழிலே மங்கள வழக்கு என்று ஒன்று உண்டு. 

எப்போதும் நல்ல சொற்களையே சொல்ல வேண்டும் என்பது தமிழ் மரபு. 

அதிலும் குறிப்பாக மங்கல சொற்களையே எப்போதும் பயன்படுத்த வேண்டும் என்று  விதி செய்து வைத்து இருந்தார்கள். 

சொற்களுக்காக பெரிய பெரிய புலவர்கள் எல்லாம் திணறி இருக்கிறார்கள். 

கடைசியில் இறைவனிடமே சென்று , நீயே ஒரு சொல் எடுத்துக் கொடு என்று வேண்டி , வாங்கியும் இருக்கிறார்கள். 

சேக்கிழாருக்கு , அருணகிரி நாதருக்கு, கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு இறைவனே  அடி எடுத்துக் கொடுத்தான் என்பது வரலாறு. 

இலக்கியம் படிக்கும் போது இடையிடையே  இலக்கணமும் சற்று படிப்போமே 

இறைவனிடம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முறையும் இல்லை. 

உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி இருங்கள். 

தமிழில் அன்று வைதாரையும் வாழ வைத்தோன் என்பார் அருணகிரி நாதர். 

மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
வைதாரையும் ஆங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல்
கைதான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே!

என்பது கந்தரலங்காரம் 


சுந்தரர் பாடிய பாடல்களுக்கு திருப்பாட்டு என்று பெயர். தேவாரம் என்பது திருநாவுக்கரசர்  பாடிய பாடல்களை மட்டுமே குறிக்கும். எளிதாக அடையாளம் காண  தேவாரம் என்று தலைப்பில் கொடுத்திருக்கிறேன்.

திருபாட்டை  தேடிப் படியுங்கள் . அத்தனையும் தேன் .


Sunday, October 30, 2016

தேவாரம் - காம்பில்லா மூழை போல்

தேவாரம் - காம்பில்லா மூழை போல் 


ஒரு ஊரில் ஒரு தவளை இருந்தது. அந்தத் தவளைக்கு பல ஆசைகள். தான் இருக்கும் அந்தச் சின்ன குளத்தை விட்டு வேறு ஒரு பெரிய குளத்துக்குப் போக வேண்டும். அங்கு உள்ள தாமரை, அல்லி போன்ற மலர்களின் நறுமணத்தை நுகர வேண்டும். அங்குள்ள மற்ற தவளைகள் எப்படி வாழ்கின்றன என்று அறிந்து கொண்டு, அவற்றில் உள்ள நல்ல முறைகளை தானும் கடை பிடிக்க வேண்டும் என்று பலப் பல எண்ணங்கள்.

இந்த எண்ணங்கள் எப்போது என்றால், அந்தத் தவளையை ஒரு பாம்பு தன் வாயில் பிடித்துக் கொண்ட பின்.

முட்டாள் தவளை.

பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்டால் பிழைக்க முடியுமா ? இருக்கப் போவதோ சில நிமிடங்கள்தான். அதற்குள் , எப்படி பிழைப்பது என்று சிந்திக்காமல் , வேறு எதை எதையோ நினைத்து பொழுதை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.

முட்டாள் தவளை.

தவளை மட்டுமா அப்படி ?

நாம் மட்டும் என்ன வித்தியாசம்.

மரணம் என்ற பாம்பு நம்மை பிடித்துக் கொண்டிருக்கிறது. நாம் என்று பிறந்தோமோ அன்றே மரணம் நம்மை பிடித்துக் கொள்கிறது. எப்போது முடியும் என்று தெரியாது. அந்த இடைப் பட்ட நேரத்தில் என்னவெல்லாம் கனவு காண்கிறோம்....

வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், திருமணம், பிள்ளைகள், அவர்கள் படிப்பு,  புகழ், செல்வாக்கு, மதிப்பு என்று ஆயிரம் சிந்தனைகள்....

பாம்பின் வாய் தேரைக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று சிந்திக்கிறார் நாவுக்கரச ஸ்வாமிகள்.

பாடல்

ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே.

சீர் பிரித்த பின்

ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளது ஓர்  கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின் வாய் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே .

பொருள்

ஓம்பினேன் = பாதுகாத்தேன்

கூட்டை = இந்த உடல் என்ற கூட்டை

வாளா = அலட்சியமாக

உள்ளது = மனதில்

ஓர்  கொடுமை வைத்துக் = பல தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு

காம்பிலா = காம்பு இல்லாத

மூழை போலக் = அகப்பையைப் போல

கருதிற்றே = கருதினாலும், நினைத்தாலும்

முகக்க மாட்டேன் = முடக்க முடியாததைப் போல

பாம்பின் = பாம்பின்

வாய் = வாயில் அகப்பட்ட

தேரை போலப் = தவளையைப் போல

பலபல = பலவிதமான

நினைக்கின் றேனை = எண்ணங்களை நினைகின்றவனை

ஓம்பி = காத்து

நீ = நீ

உய்யக் கொள்ளாய் = காப்பாற்றி கொள்வாய்

ஒற்றியூர் = திரு ஒற்றியூர் என்ற தலத்தை

உடைய கோவே = உடமையாக கொண்ட அரசனே

அகப்பைக்கு பெரிய காம்பு இருக்கும். சூடானவற்றை அகப்பையில் எடுக்கும் போது , நம் கையில் சூடு அடிக்காமல் இருக்க அந்த நீண்ட கைப்பிடி தேவை. கைப் பிடி இல்லை என்றால் அந்த அகப்பை என்னதான் நினைத்தாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

மனிதன் , என்ன தான் முயற்சி செய்தாலும், படித்தாலும், பெரியவர்கள் பேசுவதைக் கேட்டாலும், இறைவன் திருவருள் என்ற ஒன்று இல்லாவிட்டால் (கைப்பிடி) ஒன்றும் நடக்காது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். அவன் அருள் இல்லை என்றால், அவன் தாளை வணங்குவதும் நிகழாது.

தவம் உடையவர்க்கே தவம் செய்ய முடியும் என்பார் வள்ளுவர்.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. 

புத்தகத்தை படித்து விட்டு நானும் தவம் செய்யப் போகிறேன் என்றால் நடக்காது என்கிறார் வள்ளுவர். தவம் என்பது பிறவி தோறும் சேர்த்துக் கொண்டே வருவது என்பது அவர் முடிவு.

திருஞானசம்பந்தர் குழந்தையாக இருந்த போது அழுதார். பார்வதி வந்து பால் தந்தாள் என்கிறது பெரிய புராணம். நம் வீட்டுப் பிள்ளைகளும் தான் தினம் அழுகிறது. ஏன், பார்வதி வந்து பால் தரவில்லை ?

முன்பே உன்னை நான் பணிந்து போற்றினேன். நீ அருள் புரிந்தாய், இப்போது என்கிறார் திரு ஞான சம்பந்தர்.


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமலரான் முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே


"வாளா உள்ளது". அது என்ன வாளா ? வாளா என்றால் அலட்சியம். ஒரு நோக்கம் இன்மை. குறிக்கோள் இல்லாமல் இருத்தல். அவசரம் தெரியாமல் , முக்கியத்துவம் தெரியாமல் அலட்சியமாக இருத்தல்.

"வன் நெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் " என்பார் மணிவாசகர்

அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

என்பது திருவெம்பாவை

ஒற்றியூர் உடைய கோவே என்று உருகி உருகி நாவுக்கரசர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தேடித் பிடித்துப் படியுங்கள்.

சமயம் தாண்டி, இறை பக்தி தாண்டி, நம்பிக்கைகளைத் தாண்டி, தமிழின் சுவைக்காக படிக்கலாம். படியுங்கள்.






Thursday, October 6, 2016

தேவாரம் - திருத்தாண்டகம் - மீண்டும் பிறந்தால் ?

தேவாரம் - திருத்தாண்டகம் - மீண்டும் பிறந்தால் ?


இந்த வாழக்கை தான் எவ்வளவு விசித்திரமானது.

ஒரு துளி நீரிலே உயிர் உண்டாகிறது. கை , கால், மூளை, உடல் என்று பிரிந்து பிரிந்து வளர்கிறது. பின் பிறக்கிறது. தாயால் வளர்க்கப் படுகிறது.

ஆச்சரியத்திலும் ஆச்சரியம் , அந்த முதல் கரு முட்டை ஒரு உருவமாக , சிந்திக்கும் திறனோடு பிறப்பது.

 எத்தனையோ தவறுகள் நிகழ்ந்து இருக்கலாம். ஆனால், அத்தனையும் கடந்து, உயிர் பிறந்து வளர்கிறது.

சரி, இத்தனை சிக்கல்களையும் தாண்டி பிறந்து வளர்க்கிறதே , நீண்ட நாள் இருக்குமா என்றால், அதுவும் இல்லை. கொஞ்ச நாளில் இறந்து போய் விடுகிறது.

எதற்கு இத்தனை முயற்சி ?

வாழ்வின் நோக்கம் தான் என்ன. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று முடிவதற்கா இத்தனை பாடு ?


இறந்த உயிர் மீண்டும் பிறக்கிறது. மீண்டும் இதே சக்கரம் சுழல்கிறது.

எதற்கு இது என்று திகைக்கிறார் நாவுக்கரசர்.

எது எப்படியோ. இறவாமை வேண்டும், அப்படி இறந்தால், பின் பிறவாமை வேண்டும். மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை வேண்டும் என்று வேண்டுகிறார்.

பாடல்

கரு ஆகி, குழம்பி(இ)இருந்து, கலித்து, மூளைக்
    கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி, 
உரு ஆகிப் புறப்பட்டு, இங்கு ஒருத்தி தன்னால்
         வளர்க்கப்பட்டு, உயிராரும் கடை போகாரால்; 
மருவுஆகி, நின் அடியே, மறவேன்; அம்மான்!
   மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல், மறவா வண்ணம்,- 
திரு ஆரூர் மணவாளா! திருத் தெங்கூராய்!
            செம்பொன் ஏகம்பனே!- திகைத்திட்டேனே.


பொருள்


கரு ஆகி = கரு ஆகி

குழம்பி = ஒரு உருவம் இல்லாமல்  குழம்பி

இருந்து = இருந்து

கலித்து = முளைத்து

மூளைக் = மூளை

கரு நரம்பும் = கரிய நரம்பும்

வெள் எலும்பும்  = வெண்ணிறமான எலும்பும்

சேர்ந்து ஒன்று ஆகி = சேர்த்து ஒன்றாகச் செய்து

உரு ஆகிப் = ஒரு உருவத்தை அடைந்து

புறப்பட்டு = பிறந்து

இங்கு = இங்கு

ஒருத்தி தன்னால் = தாயினால்

வளர்க்கப்பட்டு, = வளர்க்கப் பட்டு

உயிராரும் = உயிரானது

கடை போகாரால் = போகாமல் இருந்தால்

மருவுஆகி = பொருந்தி

நின் அடியே, மறவேன் = உன் திருவடிகளை மறக்க மாட்டேன்

அம்மான் = அம்மானே

மறித்து = மீண்டும் 

ஒரு கால் = ஓவர் வேளை

பிறப்பு உண்டேல் = பிறப்பு என்று ஒன்று இருந்தால்

மறவா வண்ணம் = உன்னை மறவா வண்ணம்

திரு ஆரூர் மணவாளா! = திருவாரூர் மணவாளா

திருத் தெங்கூராய்! = திருத்தெங்க்கூர் என்ற ஊரில் உள்ளவனே

செம்பொன் ஏகம்பனே = சிவந்த பொன்னைப் போன்ற மேனி உள்ளவனே

திகைத்திட்டேனே = நான் திகைத்து நிற்கிறேன்

என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழ்க்கை ஓடி விடுகிறது.

என்ன செய்வது ? எதைச் செய்வது என்று திகைத்து நிற்கிறார் நாவுக்கரசர்.

எனக்கு ஒன்றும் தெரியாது. உன் திருவடிகளை பற்றிக் கொள்கிறேன். நீ என்ன செய்ய வேண்டுமோ செய்துக் கொள் என்கிறார்.

அவர் பாடே அப்படி என்றால்....



.

Monday, September 26, 2016

தேவாரம் - திருத்தாண்டகம் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

தேவாரம் - திருத்தாண்டகம் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே 


எந்த பிறவிக்கும் ஒரு அர்த்தம் , நோக்கம் வேண்டும். ஒவ்வொரு நாளும் அந்த நோக்கத்தை நோக்கி நகர வேண்டும்.

நாவுக்கரசருக்கு இறைவன் திருவடி அடைவதுதான் நோக்கம்.  அவனை நினைக்க வேண்டும், அவனைப் பற்றி பேச வேண்டும். அப்படி பேசாத நாள் எல்லாம் , பிறவாத நாள் என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை, காவிரி
                   சூழ் வலஞ்சுழியும் கருதினானை, 
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை,
         ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே; 
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை, வானவர்கள்
                  எப்பொழுதும் வணங்கி ஏத்தப்- 
பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத நாள்
                          எல்லாம் பிறவா நாளே.

பொருள்

கற்றானை = எல்லாம் அறிந்தவனை

கங்கை வார்சடையான் தன்னை = கங்கையை தலையில் கொண்டவனை

காவிரி சூழ் = காவிரி ஆறு சூழும்

வலஞ்சுழியும் = திருவலம் சுழி என்ற திருத்தலத்தில்

கருதினானை = இருப்பவனை

அற்றார்க்கும் = செல்வம் அற்ற ஏழைகளுக்கும்

அலந்தார்க்கும் = கலங்கியவர்களுக்கும்

அருள் செய்வானை = அருள் செய்வானை

ஆரூரும் புகுவானை = திருவாவூரிலும் இருப்பவனை

அறிந்தோம் அன்றே = அன்றே அறிந்து கொண்டோம்

மற்று ஆரும்  = வேறு யாரும்

தன் ஒப்பார் இல்லாதானை = தனக்கு ஒப்பு இல்லாதவனை

வானவர்கள் = தேவர்கள்

எப்பொழுதும் = எப்போதும்

வணங்கி ஏத்தப் = வணங்கு துதிக்க

பெற்றானை = பெற்றவனை

பெரும்பற்றப்புலியூரானை = புலியூரில் இருப்பவனை

பேசாத நாள் எல்லாம் = பேசாத நாள் எல்லாம்

பிறவா நாளே = பிறக்காத நாளே

வறுமை ஒரு துன்பம். 

கொடியது கேட்கின் நெடு வடிவேலோய் 
கொடிது கொடிது வறுமை கொடிது என்பாள் அவ்வை.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பார் வள்ளுவர். 

பொருள் இருந்தாலும், வாழ்வில் சில சமயம் கலக்கம் வரும். 

உறவுகள் பிரிவதால் , பொருள் பிரிவதால், நோய் வருவதால், முதுமை வருவதால், எதிர் காலம் பற்றிய பயத்தால்  ....இப்படி பலப் பல காரணங்களினால் கலக்கம் வரும். 

அப்படி கலங்கியவர்களுக்கும் அருள் தருபவன் அவன். 

அதெல்லாம் சரி, அருள் தருவான் என்பது என்ன நிச்சயம் ? அப்படி யாருக்காவது அருள் செய்திருக்கிறானா என்று கேட்டால் , அப்பரடிகள்  கூறுகிறார் 

ஆமாம், செய்திருக்கிறான் , அதை "அறிந்தோம் அன்றே " என்று கூறுகிறார். நான் அறிந்தேன் என்று சாட்சி சொல்கிறார். 

அறிந்தோம் என்ற பன்மையால், தான் ஒருவர் மட்டும் அல்ல, தன்னைப் போல பலர் அறிந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். 

அவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

உடல் பிறந்து விடும். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. 

அறிவு பெற்று, தான் என்பது அறிந்து, உண்மையை அறியும் நாள் மீண்டும்  ஒரு பிறப்பு நிகழ்கிறது.  அதுவரை , அறிவில்லா இந்த உடல் சும்மா  அலைந்து கொண்டிருக்கும். ஒரு விலங்கினைப் போல. 

என்று இவற்றை அறிகிறோமோ, அன்று தான் உண்மையான பிறந்த நாள். 

அதுவரை பிறவா நாளே 



Sunday, September 25, 2016

தேவாரம் - திருத்தாண்டகம் - மனமே , உனக்கும் எனக்கும் என்ன பகை ?

தேவாரம் - திருத்தாண்டகம் - மனமே , உனக்கும் எனக்கும் என்ன பகை ?



மூப்பு கொஞ்சம் சங்கடமான விஷயம்தான். புலன்கள் தடுமாறும். நினைவு தவறும். கண் ,  போன்ற புலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல்  இழக்கும். பேசுவது கேட்காது. கேட்டாலும் மனதில் நிற்காது. சுற்றி உள்ள இளையவர்கள் , கேலி செய்வார்கள். நாம் வளர்த்த பிள்ளைகள் நம்மை ஏளனம் செய்வது தாங்க முடியாத ஒன்று தான்.

என்ன செய்வது ? காய்ந்த மட்டையைப் பார்த்து இள மட்டை பரிகசிப்பது எப்போதும் நடக்கும் ஒன்று தான்.

அப்படி ஒரு மூப்பு வருமுன்னம், நல்லதைத் தேடு மனமே என்று மனதிடம் சொன்னால் அது எங்கே கேட்கிறது.

புலன் இன்பங்களின் பின்னால் ஓடுகிறது. உணவு, இசை, உறவுகள், நட்புகள், சினிமா,  நாடகம், ஊர் சுற்றல் என்று ஆசைகளின் பின்னால் அங்காடி நாய் போல் அலைகிறது இந்த மனம்.

சொன்னாலும் கேட்க மாட்டேன்  என்கிறது. ஒரு வேளை அந்த மனதுக்கும் நமக்கும் ஏதோ பழைய பகை இருக்குமோ ? அதனால் தான் நாம் நல்லது சொன்னால் கேட்காமல் நம்மை தீய வழிகளில் இட்டுச் செல்கிறதோ என்று சந்தேகப் படுகிறார் நாவுக்கரசர்.

பாடல்

எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்
இளையார்கள் நம்மை யிகழா முன்னம்

பழுது படநினையேல் பாவி நெஞ்சே
பண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ

முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடி
முடியால் உறவணங்கி முற்றம் பற்றி

அழுது திருவடிக்கே பூசை செய்ய
இருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே.


பொருள்


எழுது = கண்ணில் மை எழுதும்

கொடியிடையார்= கொடி போன்ற இடையைக் கொண்ட

ஏழை மென்றோள் = மெலிந்து இருக்கும் மெல்லிய தோள்கள் கொண்ட

இளையார்கள்= இளம் பெண்கள்

நம்மை யிகழா முன்னம் = நம்மை இகழ்வதன் முன்னம்

பழுது படநினையேல் = கெட்ட வழியில் செல்ல நினைக்காதே

 பாவி நெஞ்சே = பாவி நெஞ்சே

பண்டுதான் = முன்பு, பழைய காலத்தில்

என்னோடு =என்னோடு

பகைதா னுண்டோ = உனக்கு பகை ஏதேனும் உண்டோ ?

முழுதுலகில் = முழுமையான உலகில். அனைத்து உலகிலும்

வானவர்கள் = தேவர்கள்

முற்றுங் கூடி =  அனைவரும் கூடி

முடியால் =தலையால்

உறவணங்கி = முற்றும் தரையில் பட வணங்கி

முற்றம் பற்றி = முழுவதும் பற்றி

அழுது = அழுது

திருவடிக்கே பூசை செய்ய = திருவடிகளுக்கே பூசை செய்ய

இருக்கின்றான் = இருக்கின்றான்

ஊர்போலும் ஆரூர் தானே = ஊர்தான் திருவாரூர்

வயதாகும். மதி மயங்கும். அதற்கு முன் எது சரியோ அதை செய்து விட வேண்டும்.

உற்றார் அழுமுன்னே. ஊரார் சுடுமுன்னே , குற்றாலத்தானையே கூறு என்பார் பட்டினத்தார்.

நேற்று வரை எப்படியோ. இன்றில் இருந்து ஆரம்பிப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_25.html


Tuesday, January 19, 2016

தேவாரம் - தோடுடைய செவியன்

தேவாரம் - தோடுடைய செவியன்




தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.


எல்லோருக்கும் தெரிந்த தேவாரம் தான்.

ஞான சம்பந்தருக்கு  உமை பால் தந்தாள். குளத்தில் இருந்து குளித்து வெளியில் வந்த சம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்டு யார் பால் தந்தது என்று கேட்டார். குழந்தை வானத்தைக் காட்டி

"தோட்டினை காதில் உள்ள அவன், எருதின் மேல் ஏறி , தூய்மையான வெண்ணிலவின் கீற்றை தலையில் சூடி, காட்டில் உள்ள உள்ள சாம்பலை உடலில் பூசி, என் உள்ளத்தை கவர்ந்த அவன் தந்தான்.  அவனை மலரால் நான் முன்பு அர்ச்சனை செய்தேன். எனக்கு அருள் புரிந்தான். சிறந்த பிரமாபுரம் என்ற ஊரில் இருக்கும் பெம்மான் இவன் "

.என்று பாடினார்.

பாடலும் பொருளும் எல்லோருக்கும் தெரிந்தது  தான்.

தெரியாத உட்பொருள் என்ன என்று பார்ப்போம்.

பாட்டை கொஞ்சம் உற்று பார்த்தால் ஏதோ சம்பந்த சம்பந்தமில்லாத வாரத்தை கோர்வைகள் போலத் தோன்றும்.

தோடுடைய செவியன்
விடை ஏரியவன்
மதி சூடியவன்
சாம்பலை பூசினவன்
உள்ளத்தை கவர்ந்தவன்
அருள் செய்தவன்
பிரம புரத்தில் இருப்பவன்

என்ன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் ஒரே வார்த்தை அடுக்காக இருக்கிறதே  என்று நினைப்போம்.

இறைவன் ஐந்து தொழில்களை செய்கிறான் என்கிறது சைவ சித்தாந்தம். அவையாவன

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்

 அது அப்படி இருக்கட்டும் ஒரு பக்கம்.

இந்த உலகம் எல்லாம் ஊழிக் காலத்தில் அழிந்து போகும். எது அழிந்தாலும் அறம் அழியாது. தர்மம் என்றும் நிலைத்து நிற்கும். உலகமே அழிந்தாலும் தர்மம் அழியாது.

உலகமே ஊழித் தீயால் அழிந்த போது தர்மத்தை எருதாகச் செய்து தனக்கு வாகனமாக்கிக் கொண்டார் சிவன். எருதின் இன்னொரு பெயர் விடை.

உலகில் உள்ள அத்தனை சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தர்மம் தான் விடை.

அப்படி உலகம் அழிந்த போது தர்மத்தை விடையாக (எருதாக) செய்ததால், அது படைப்புத் தொழில். "விடை ஏறி"

சந்திரன், தன் மாமனாரின் சாபத்தால் நாள் ஒரு கலையாக அழிந்து தேய்ந்து வந்தான். தன்னை காக்கும் படி வேண்டிய சந்திரனை , காப்பாற்றி தன் தலையில் சூடிக் கொண்டார். ஆதலால் அது காத்தல் தொழில். "தூவெண் மதி சூடி"

உலகம் ஊழித் தீயால் அழியும். மிஞ்சுவது சாம்பல் மட்டுமே. அந்த சாம்பலை மேலே பூசிக் கொண்டிருப்பவன் என்பதால் அது அழித்தல் தொழில். "காடுடைய சுடலை பொடி பூசி "

இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறான். இருந்தும் உயிர்களால் அவனை அறிய முடிவதில்லை. மாயை மறைக்கிறது. மனதுக்குள் மறைந்து நிற்பதால் அது மறைத்தல் தொழில். "என் உள்ளம் கவர் கள்வன்". கள்வன் மறைந்து தானே இருப்பான்.

வேண்டும் அடியவர்களுக்கு அவன் அருள் செய்வதால் அது அருள்தல் தொழில்.  "ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த"

இப்படி ஐந்து தொழில்களையும் இறைவன் செய்கின்றான் என்று குறிப்பாக உணர்த்தும் பாடல்.

மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பாட்டின் ஆழம்  விளங்கும்.

தேவாரத்தின் ஒரு பாடலுக்கு இவ்வளவு பொருள்.

எவ்வளவு படிக்க இருக்கிறது.


Friday, December 11, 2015

தேவாரம் - உள்ளம் கவர் கள்வன் - முன்னால் இருந்தும் தெரியவில்லை - பாகம் 1

தேவாரம் - உள்ளம் கவர் கள்வன் - முன்னால் இருந்தும் தெரியவில்லை  - பாகம் 1




தோடுடைய செவியன் விடையேறியோர் தூ வெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பி மா புரம் மேவிய பெம்மானிவ னன்றே.

மிக பிரபலமான தேவாரப் பாட்டு.

எல்லோரும் அறிந்தது.

ஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருக்கும் போது , அவருடைய தந்தையார் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் செல்லுமுன் அங்குள்ள திருக்குளத்தில் நீராடச் சென்றார். ஞான சம்பந்தரை குளக்  கரையில், அமரச் செய்துவிட்டு, அவர் மட்டும் நீராடச் சென்றார்.

தந்தையார் நீரில் மூழ்கியவுடன், தந்தையைக் காணவில்லையே என்று குழந்தையான ஞான சம்பந்தர் அழுதார். அவரின் அழு குரல் கேட்டு பார்வதியும் சிவன் வந்தனர் . பார்வதி தன் ஞானப் பாலை அவருக்குத் தந்தார்.

குளத்தில் இருந்து நீராடி வந்த ஞானசம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் வடிவதைக் கண்டு, யார் உனக்கு பால் தந்தது என்று கேட்டார்.

குழந்தை மேலே கண்ட பாடலைப் பாடியது என்பது புராணம் தரும் செய்தி.

இந்தத் தேவாரம் காட்டும் சில ஆழ்ந்த கருத்துகளை பார்ப்போம்.

உனக்கு யார் பால் தந்தது என்று தந்தையார் கேட்ட போது , குழந்தை கூறியது  "இவன் அன்றே" என்று.

இதோ இருக்கிறானே இவன் தான் என்று.

அவன் அன்றே என்று சொல்லி இருந்தால் வேறு எங்கோ தூரத்தில் இருக்கிறான் என்று  கொள்ளலாம். இவன் அன்றே என்பது அண்மைச் சுட்டு. அருகில்  உள்ள ஒன்றை சுட்டிக் காட்டுவது.

பக்கத்தில் இருக்கிறான்.

ஞான சம்பந்தருக்குத் தெரிகிறது. அவருடைய தந்தையாருக்குத் தெரியவில்லை.

இப்படித்தான், உண்மை மிக மிக அருகில் இருந்தும், நாம் அதை அறியாமலேயே  எங்கே எங்கே என்று ஊரெல்லாம் தேடிக் கொண்டிருப்போம்.

உண்மை, உங்களுக்கு மிக மிக அருகில் இருக்கிறது. பார்க்கும் கண் வேண்டும்.

ஞானசம்பந்தரின் தந்தை மட்டும் அல்ல, அருகில் இருந்த யாரும் இறைவனை  காணவில்லை. கண்டதாக குறிப்பு ஒன்றும் இல்லை.

அவர்கள் எல்லோரும் வேறு எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள். எதைத் தேடுகிறோமோ அதைத்தானே கண்டடைவோம் ?

தேடுங்கள் , கிடைக்கும் என்றார் இயேசு.

ஆம். தேடியது கிடைக்கும்.

எதைத் தேடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் தொடரும்.





Saturday, October 3, 2015

தேவாரம் - பின்னை எண்ணார்

தேவாரம் - பின்னை எண்ணார் 


யாரிடமாவது நாம் உதவி வேண்டிப் போனால், கேட்ட உடனேயே எத்தனை பேர் அந்த உதவியை நமக்குச் செய்து விடுவார்கள் ?

மறவர்களை விடுங்கள், "கொஞ்சம் தண்ணி  வேண்டும்" என்று கேட்டால் எத்தனை பிள்ளைகள் உடனேயே கொண்டு வந்து கொடுக்கும் ?  "நான் busy யா இருக்கேன்...நீயே போய் எடுத்துக்கோ" என்று பதில் வரும். இல்லைனா "இதோ வரேன் " என்று பதில் மட்டும் வரும்...ஆள் வர நாள் ஆகும்.

புடவை வேண்டும், நகை வேண்டும் என்று மனைவி ஆசைப் பட்டு கேட்டால் எத்தனை கணவன்மார் உடனேயே வாங்கித் தந்து விடுவார்கள் ?  "பார்க்கலாம், தீபாவளிக்கு வாங்கலாம், பொங்கலுக்கு வாங்கலாம் " என்று தள்ளிப் போடும் கணவர்கள் தான் பெரும்பாலும் இருப்பார்கள்.

பதவி உயர்வு வேண்டும், சம்பள உயர்வு வேண்டும் என்று வீட்டில் வேலை பார்க்கும் பணியாள் கேட்டால் நாம் உடனே கொடுத்து விடுவோமா ? எந்த முதலாளியும் தருவது கிடையாது.

உலகம் அப்படி.

கேட்ட உடன் கொடுக்காவிட்டால்,  சாதாரண மனிதர்களுக்கும்  இறைவனுக்கும் என்ன வித்தியாசம் ?

பக்தா , என்னிடம் கேட்டாயா...பார்க்கலாம், அப்புறம் தருகிறேன்...அடுத்த தீபாவளிக்குத் தருகிறேன் ...என்று இறைவன் தள்ளிப் போடுவது இல்லை. கேட்ட உடனேயே  தந்து விடுவான் என்கிறார் நாவுக்கரசர்.


பாடல்

உன்னி வானவ ரோதிய சிந்தையில்
கன்னல் தேன்கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை யென்னார் பெருமா னடிகளே.

சீர் பிரித்த பின்


உன்னி வானவர் ஓதிய சிந்தையில் 
கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் 
தன்னை நோக்கித் தொழுது எழுவார்கு எல்லாம் 
பின்னை எண்ணார் பெருமான் அடிகளே 

பொருள்

உன்னி = மனதில் எண்ணி

வானவர் = தேவர்கள்

ஓதிய = தினம் போற்றிய

சிந்தையில் = மனதில்

கன்னல் தேன் = கரும்புச் சாற்றில் தேன் கலந்தார் போல தித்திப்பவர்

கடவூரின் மயானத்தார் = திருக் கடவூர் மயானம் என்ற ஊரில் உள்ளவர்

தன்னை நோக்கித் = தன்னை நோக்கித்

தொழுது எழுவார்கு எல்லாம் = தொழுது எழுவார்கெல்லாம்

பின்னை எண்ணார்  = பின்னால் தரலாம் என்று நினைக்க மாட்டார்

பெருமான் அடிகளே = பெருமான் அடிகளே

அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போடும் குணம் கிடையாது.

கேட்டவுடன் , இந்தா பிடி , என்று உடனே வழங்குவார்.

நானும் தான் எவ்வளவோ கேட்கிறேன். எங்கே தருகிறார். இதெல்லாம் சும்மா என்று  நினைக்கத் தோன்றும்.

நீங்கள் கேட்பதைத் தரமாட்டார். உங்களுக்கு எனது நல்லதோ அதைத் தருவார். அதையும் உடனே தருவார்.

உங்களுக்குத் தெரியுமா , உங்களுக்கு எது நல்லது என்று ? அல்லது இறைவனை விட உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா ?

இந்தப் பெண் தான் வேண்டும், அவள் இல்லை என்றால் வாழ்கையே இல்லை என்று  வேண்டி விரும்பிக் கல்யாணம் பண்ணிக் கொண்ட பின்..."இதையா கட்டிக் கொண்டேன் " என்று வருந்துகிறான்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ  என்பார் மணிவாசகர்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்டமுழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொணடாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே.

நீங்கள் தொழுது எழுங்கள். உங்களுக்கு வேண்டியதை அவன் உடனே செய்வான்.




(எழுது)

Tuesday, September 22, 2015

தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க

தேவாரம் - என்னத்த கிளிச்சீங்க 


"இத்தனை நாள் வாழ்ந்து நீங்க என்ன கிளிச்சீங்க ? கொஞ்சம் கூட வெக்கம் இல்லை உங்களுக்கு. இப்படியே போனால் கொஞ்ச நாளில் இறந்து போவீர்கள். நீகள் இறந்த பின்,  இந்த உடல் இருக்கிறதே, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வெறுத்து ஒதுக்கும் ஒரு பொருளாகப் போய் விடும்"

என்று வெறுத்து கோபித்து சொல்கிறார் திருநாவுகரசர்.

பாடல்

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.


பொருள்

நடலை = துன்பமான

வாழ்வு = இந்த வாழ்வை

கொண்டு = வைத்துக் கொண்டு

என் செய்தீர் = என்ன செய்தீர்கள்

நாணிலீர் = நாணம் இல்லாதவர்களே

சுடலை = சுடு காடு

சேர்வது = போய்ச் சேர்வது

சொற் பிரமாணமே = சத்ய வாக்கே

கடலின் = திருபாற்கடலில்

நஞ்சமு துண்டவர் = நஞ்சை அமுதமாக உண்டவர்

கைவிட்டால் = கை விட்டு விட்டால்

உடலி னார்  = இந்த உடல்

கிடந்து = கிடந்து

ஊர் = ஊர்

முனி = கோபிக்கும்

பண்டமே. = பொருளே

என்னய்யா, இன்னுமா எடுக்கல, சீக்கிரம் எடுங்கள் என்று ஊர் கூடி கோபித்து  அனுப்பும்  இந்த உடலை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருகிறீர்கள் என்று  கேட்கிறார் நாவுக்கரசர் .

பதில் ?



Monday, April 6, 2015

தேவாரம் - அப்புறம் செய்யலாம்

தேவாரம் - அப்புறம் செய்யலாம் 


அப்புறம் செய்யலாம் , அப்புறம் செய்யலாம் என்று எவ்வளவோ நல்ல காரியங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

"நிறைய படிக்கணும்...எங்க நேரம் இருக்கு...எல்லாம் retire ஆனதுக்குப் பிறகு படிக்கலாம் என்று இருக்கிறேன் ..."

"போகணும்...காசி, இராமேஸ்வரம்..இப்படி நாலு தலங்களுக்கு போகணும். எங்க நேரம் இருக்கு....பிள்ளைங்க படிப்பு, அவங்க பள்ளிக் கூடம் ...எல்லாம் முடிந்த பின் போகணும்..."

இப்படி பலவற்றை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்...

பின்னாளில், நாம் நினைக்கும் நாள் வரை நாம் இருக்க வேண்டுமே ? நாம் செல்லும் நாள் என்றென்று நமக்குத் தெரியாதே ? நாம் நினைத்து வைத்த நாளை வராமலே போய் விட்டால் ?

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

என்றார் வள்ளுவர். நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று நினைத்து நல்லது செய்வதை தள்ளிப் போடாதீர்கள்.

நாளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? இந்த உடம்பை சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம். எத்தனை நாள் இந்த உடம்பு நம்மோடு இருக்கும் ? நாயோ, நரியோ, தீயோ, கொண்டு செல்லும் உடல் இது. இதன் மேலா இத்தனை ஆசை ? இத்தனை பற்று. இதற்காகவா நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறீர்கள் ?

வறியவர்களுக்கு, இல்லை என்று வந்தவர்களுக்கு சோறும் நீரும் நல்ல வார்த்தை சிலதும் சொல்லுங்கள். அப்படி செய்யும் நல்லவர்கள் வணங்கும் தலம் கேதாரிநாத்.


பாடல்

பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே

பொருள்

பறியே = உடலையே

சுமந் து = சுமந்து 

உழல்வீர் = துன்பப் படுவீர் 

பறி = இந்த உடலானது

நரி கீறுவ தறியீர் = நரி கீறுவது அறியீர்

குறி = குறித்த நாளில்

கூவிய = சொல்லிய படி

கூற்றங்கொளு நாளால் = எமன் வந்து உங்கள் உயிரை கொண்டு செல்லும் நாளில்

அறம் உளவே = அறம் (செய்ய) முடியுமா ?. முடியாது

அறிவானிலும் அறிவான் = நாம் ஒன்றை அறிகிறோம் என்று சொன்னால் அறிவது எது ? அறிந்து கொள்ளப் படுவது எது ? அறியும் செயல் எது ? அறிவுக்கு அப்பால் நின்று நம் அறிவை செலுத்துபவன்

நல நறுநீரொடு =நல்ல தூய்மையான நீரோடு 

சோறு = சோறும்

கிறிபேசி = நல்ல வார்த்தைகள் பேசி

நின் றிடுவார் = எப்போதும் மற்றவர்களுக்கு வழங்கும் அவர்கள்

தொழு கேதாரமெ னீரே = தொழும் தலம் கேதாரம் என்ற தலமாகும்.


இந்த கோடை விடுமுறைக்கு குளிர்ச்சியாக கேதாரநாத் சென்று வாருங்கள். 

பின்னால் முடியுமோ என்னவோ ?

Sunday, April 5, 2015

தேவாரம் - மண்ணாவது திண்ணம்

தேவாரம் - மண்ணாவது திண்ணம் 



கேதாரம். கேதர்நாத் என்று அழைக்கப்படும் தலம் . புது டெல்லிக்கு அருகில் உள்ள தலம் . பனிபடர்ந்த மலைச் சாரலில் அமைந்த தலம் .

இந்த வாழ்வு ஒரு மாயம். நிலைத்து இருப்பது போலத் தோன்றும். சட்டென்று ஒரு நாள் மாயமாய் மறைந்து விடும்.

"அவரா ? நேத்து வரை நல்லாத்தான இருந்தாரு ...என்ன ஆச்சு " என்று கேட்கும் படி ஆகும்.

படுத்தவர் எழுந்திருக்கவில்லை....ஏன் ? அது தான் magic ...மாயம்.

கடைசியாய் விட்ட மூச்சை உள்ளே இழுக்க முடியவில்லை...ஏன் ? மாயம்.

அன்போடு இருந்த பிள்ளைகளும் மனைவியும் அன்பு மாறுவார்கள்...ஏன் ? மாயாஜாலாம்.

இந்த உடல் மண்ணாவது உறுதியிலும் உறுதி.

இந்த பிறவி நாளும் பாழாகிக் கொண்டு இருக்கிறது. வேலை, உணவு, படிப்பு, சம்பளம், சேமிப்பு என்று செக்கு மாடு போல சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாள் வாழ்ந்தோமே, என்ன நிகழ்ந்தது என்று யோசித்துப் பார்த்தால் எவ்வளவு நாளை வீணாகக் கழித்து விட்டோம் என்றும் தெரியும்.

இந்த உடல் உணவு போட்டு வளர்த்தது. பசி, அதனால் உணவு , அதனால் வளர்ந்த உடல் இது. பசி என்ற நோய் செய்த உடல் இது. நோயில் வளர்ந்த உடல்.

இருக்கும் வரை குறையாமல் அறம் செய்யுங்கள். "தாழாது அறம் செய்யுங்கள்". வருடத்துக்கு ஒரு முறை நன்கொடை கொடுத்தாலும் பரவாயில்லை. அதை குறைத்து விடாதீர்கள். தாழாது செய்யுங்கள்.

திருமாலும், பிரமனும் கீழும் மேலும் அறிய நின்றவன் இருக்கும் இடம் திருக் கேதாரம்.

பாடல்

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே.                                            - (சுந்தரர்)

பொருள்

வாழ்வாவது மாயம் = இந்த வாழக்கை ஒரு மாயம்

மிது மண்ணாவது திண்ணம் = இது மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக்கடல் = பாழாகிறது இந்த பிறவிக் கடல்

பசிநோய்செய்த பறிதான் = இந்த உடல் (பறி ) பசி என்ற நோய் செய்தது

தாழாதறஞ் செய்ம்மின் = குறையாமல் அறம் செய்யுங்கள்

தடங் கண்ணான் = தாமரைக் கண்ணன் (திருமால்)

மல ரோனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

கீழ்மேலுற = கீழும் மேலும் செல்ல

நின்றான் = நின்றவன்

திருக் கேதாரமெ னீரே = திருக் கேதாரம் என்று சொல்லுங்கள்

பசி நோய் செய்த பறிதான் என்பதற்கு தாய் தந்தையரின் காமப் பசியில் விழைந்தது இந்த உடல் என்றும் கொள்ளலாம்.

நேரம் இருப்பின், கேதார்நாத் ஒரு முறை சென்று வாருங்கள்.

சுந்தரரும், ஞான சம்பந்தரும் சென்றிருக்கிறார்கள்.

 

Thursday, December 25, 2014

தேவாரம் - பலர் சிரிக்கும் முன்

தேவாரம் - பலர் சிரிக்கும் முன் 


வாழ்க்கையில் என்னென்னமோ செய்கிறோம். கொஞ்சம் நல்லது, கொஞ்சம் அல்லாதது, கொஞ்சம் பொய், கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் காமம்...இப்படி அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கிறோம்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். அதை அனுபவிக்காமல் விட்டு விட்டுப் போகிறோம்.

 நம்பியவர்கள் கை விட்டு விடுகிறார்கள். நம்பியவர்களை நாம் கை விட்டிருக்கிறோம்.

கூட்டிக் கழித்தால் நம் வாழ்க்கையே ஒரு அர்த்தமற்றதாக, நகைப்புக்கு உரியதாக இருக்கும். இதற்கா இந்த பாடு....இந்த  அலைச்சல் ?

இறந்த பின், இடு காட்டில் பிணத்தை வைத்திருக்கும் போது , சுற்றி நிற்பவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்....

நம்மைப் பார்த்து அவர்கள் சிரிக்கும் முன் திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கும் வழியைப் பாருங்கள் என்கிறார் நாவுக்கரசர்.

வாழ்வில் எதை எதையோ தேடி அலைகிறோம் . கிடைத்தது கொஞ்சம், கிடைக்காதது நிறைய. கலைந்த கனவுகள், கரைந்த கற்பனைகள், ஏமாந்த எண்ணங்கள்...

இவ்வளவுதானா வாழ்க்கை ?

பாடல்

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.


சீர் பிரித்த பின்

அரித்து உற்ற வினையால் அடர்பு உண்டு நீர் 
எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் 
சிரித்து உற்று பல பேசப் படா முன்னம் 
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்மினே 



பொருள்

அரித்து = அரித்து,

உற்ற வினையால் = செய்த வினையால். நாம் செய்யும் இரு வினைகள் நாளும் நம்மை அரித்து எடுக்கின்றன

அடர்பு உண்டு  = பற்றப் பட்ட

நீர் = நீங்கள்

எரி = தீ

சுற்ற கிடந்தார் என்று = சுற்றி இருக்கக் கிடந்தார் (பிணத்தைச் சுற்றி தீ எரியும் போது )

அயலவர் = மற்றவர்கள்

சிரித்து உற்று = நம்மைப் பார்த்து சிரித்து

பல பேசப் படா முன்னம் = பலவிதமாக பேசும் முன்

திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்மினே  = திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கும் வழியைப் பாருங்கள்.



Tuesday, December 16, 2014

தேவாரம் - கெடுவது இம் மானிடர் வாழ்க்கை

தேவாரம் - கெடுவது இம் மானிடர் வாழ்க்கை 


பெரிய பள்ளம். ரொம்பப் பெரிய பெரிய பள்ளம். எவ்வளவு போட்டாலும் நிறையாத பள்ளம்...கடலில் உள்ள நீரைக் எல்லாம் எடுத்து விட்டால் அது எவ்வளவு பெரிய பள்ளமாக இருக்குமோ அது போன்ற பள்ளம்...

அது எந்தப் பள்ளம் தெரியுமா ?

நம் வயிறுதான் .... நிறைந்த மாதிரி ..இருக்கும்.சிறிது நேரத்தில் காலியாகி விடும்...இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும்.

இந்த பள்ளத்தை இட்டு நிரப்புவதே வேலையாக அலைகிறோம் .

உழைப்பதும், உணவு சேகரிப்பதும், அதை இட்டு வயிற்றை நிரப்புவது ஒரு வேலை.

இந்த உடலுக்குள் ஐந்து முரடர்கள் இருந்து கொண்டு இந்த உடலை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ...அதைத் தொடு , இதை சுவைத்துப் பார், இதை கேட்டுப் பார் என்று இந்த உடலை படாத பாடு படுத்துகிறார்கள்.

அவர்கள் சொன்ன படியெல்லாம் கேட்டு அலைவது இன்னொரு வேலை.

இது ஒரு வாழ்க்கையா ? போதும் இது என்று கூறுகிறார் நாவுக்கரசர்....

என்னதான் வாழ்ந்தாலும், இந்த வாழ்க்கை சீக்கிரம் முடிந்து விடும்.

கெடுவது என்றால் கேட்டுப் போவது, முடிந்து போவது...முடியும் வாழ்கை இது....

உண்பதும், புலன் இன்பம் தேடுவதும் ...இது மட்டும் தானா வாழ்க்கை .


பாடல்

படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே லிவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.

சீர் பிரித்த பின்

படு குழிப் பவ்வம் அன்ன  பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவது இம்  மனிதர் வாழ்க்கை காணும் தோறும் கேதுகின்றேன்
முடுகுவர்  இருந்து  அளைவர் மூர்க்கரே இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டே ஆரூர் மூலட்டனீரே.


பொருள்

படு குழிப் = பெரிய குழி

பவ்வம் அன்ன = கடல் போன்ற

பண்டியைப் = வயிற்றில்

பெய்த வாற்றால் = போட்டு நிரப்பிக் கொண்டே இருந்தால்

கெடுவது இம்  மனிதர் வாழ்க்கை = கெடுவது இந்த மனிதர் வாழ்கை 

காணும் தோறும் கேதுகின்றேன் = இதை காணும்போதெல்லாம் , அழைக்கின்றேன்

முடுகுவர் = முடுக்கி விட்டுக் கொண்டு இருப்பார்

இருந்து  அளைவர் = அங்கும் இங்கும் அலைய வைப்பார்


மூர்க்கரே = மூர்கமான

இவர்களோடும் = இவர்களோடும்

அடியனேன் வாழ மாட்டேன் = அடியேன் வாழ மாட்டேன்

ஆரூர் மூலட்டனீரே = ஆரூரில் மூலமாக இருப்பவரே

.


Sunday, December 14, 2014

தேவாரம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

தேவாரம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.


பயம்.

நமக்குத்தான் எவ்வளவு பயங்கள் ?

வேலை போய் விடுமோ என்ற பயம், உடல் நிலை குறித்து பயம், பிள்ளைகள் படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டுமே என்ற பயம், காதல் கீதல் என்று தவறான முடிவை எடுத்து விடுவார்களோ என்று பயம், நெருங்கியவர்களின் உடல் நிலை குறித்துப் பயம், வருமான வரி குறித்துப் பயம்...

பயம் இல்லாத வாழ்க்கை  இருக்க முடியுமா ?

எதைப் பற்றியும் பயம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் ?

அச்சம் இல்லை, அச்சம் இல்லை , அச்சம் என்பது இல்லையே என்று மார் தட்டிய பாரதியும் பயந்து புதுச்சேரி  சென்றார்.

பிணி,  மூப்பு,மரணம் என்ற மூன்று பயமும் மனிதனை விடாது துரத்திக் கொண்டிருக்கிறது.
 
நாவுக்கரசர் சொல்லுகிறார்...

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இப்போது மட்டும் இல்லை, இனிமேல் நம்மை பயப் படுத்துவதற்கு ஒன்றும் வராது என்றும்  சொல்கிறார்.

சொல்லுவது யார் ?

ஏதோ பெரிய பணக்காரர், சக்கரவர்த்தி, படை பலம்  உள்ளவர்,செல்வாக்கு உள்ளவர்  ...அந்த மாதிரி எதுவும் இல்லாதவர்...

இளமையில் தாய் தந்தையை இழந்தவர்.

அக்காவின் வளர்ப்பில்  வளர்ந்தவர்.

அக்காவும், கணவனை இழந்த கைம்பெண்.

சொன்னது எப்போது தெரியுமா ?

அவர் இருந்த நாட்டின் அரசனின் கோபத்திற்கு உள்ளாகி, அந்த அரசன் யானையைக் கொண்டு அவரின் தலையை மிதிக்கச் சொன்ன நேரத்தில்...

மதம் கொண்ட யானை வருகிறது...நாவுக்கரசரின் தலையை இடற...

அப்போது சொல்லுகிறார் "அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை."

எங்கிருந்து இந்த தைரியம் வந்தது ?

"மேலே பூசிய திரு வெண்ணீறும், சுடர் விடும் சந்திரனைப் போன்ற சூடாமணியும், புலித்தோல் உடையும், சிவந்த நிறமும், காளை வாகனமும், பாம்பும், கெடில நதி நீரும், கொண்ட அவர் இருக்கும் போது நாம் அஞ்சுவதும் இல்லை , நமக்கு அஞ்ச வருவதும் இல்லை...."

பாடல்

சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

பொருள்

சுண்ண = பொடியான

வெண் = வெண்மையான

சந்தனச்  சாந்தும் = சந்தன சாந்தும்

சுடர்த் = சுடர் வீசும்

திங்கள் = நிலவை

சூளாமணியும் = தலையில் சூடாமணியாக சூடியவரும்

வண்ண = வண்ண மயமான

இரிவை = புலித்தோல்

உடையும் = உடையும்

வளரும் பவள நிறமும் = நாளும் மெருகு ஏறும் பவளம் போன்ற சிவந்த நிறமும்

அண்ணல் = பெரியவன்

அரண் = மதில் போன்ற

முரண் ஏறும் = எதிரிகளை அழிக்கும் காளை வாகனமும்

அகலம் வளாய அரவும் = அகலமான படத்தைக் கொண்ட பாம்பும்

திண்ணென் கெடிலப் புனலும் = குளிர்ந்த கெடில நதியின் நீரும்

உடையார் ஒருவர் = உடையார் ஒருவர்

தமர் = நம் உறவினர்

நாம்!- = நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; = அஞ்சுவது யாதொன்றும் இல்லை

அஞ்ச வருவதும் இல்லை. = நாம் அஞ்சும்படி வருவதும் ஒன்றும் இல்லை

ஆழ்ந்த திடமான பக்தி. அசைக்க முடியாத நம்பிக்கை.

சொல்லிப் பாருங்கள் - ஒரு தைரியம் வரும்.

"அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை."




Wednesday, December 10, 2014

தேவாரம் - நிலை பெறுமாறு எண்ணுதியேல்

தேவாரம் - நிலை பெறுமாறு எண்ணுதியேல் 


எதுதான் நிலையாக இருக்கிறது நம் வாழ்வில்.

நேற்று இருந்தது போல இன்று எது இருக்கிறது.

மனம், அது நொடிக்கு ஒரு தரம் மாறிக் கொண்டிருக்கிறது.

 சுற்றமும்,உறவும்  அப்படியே.

செல்வம் - வரும்,  போகும்.

ஆரோக்கியம் - இன்றிருக்கும், நாளை போகும்.

வாலிபம், இளமை எல்லாம் அப்படித்தான்.

அப்படியென்றால், எது தான் நிலைத்து நிற்கும் ?

நிலையான ஒன்றை வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் அப்பர்.



நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
        வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, 
புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு,
             பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி, 
தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, “சங்கரா,
                     சய! போற்றி போற்றி!” என்றும், 
“அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ!”

    என்றும், “ஆரூரா!” என்று என்றே, அலறா நில்லே!.

Monday, December 1, 2014

தேவாரம் - ஏழிசையாய் இசைப்பயனாய்

தேவாரம் - ஏழிசையாய் இசைப்பயனாய்


இளையராஜாவின் இனிமையான இசையை கேட்டு மெய் மறக்கிறோம். கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்த்தானி சங்கீதம், என்று பலவிதமான இசைகளை கேட்கிறோம்.

இந்த இசையின்  பயன் என்ன ?

இந்த இசைகளை கேட்பதால் நமக்கு என்ன கிடைக்கிறது ?

சுந்தரர் சொல்கிறார், இசையும் அதன் பயனும் இறைவனே  என்கிறார்.

அது மட்டும் அல்ல, அவன் இனிய அமுதமாய் இருக்கிறான்.

இறைவனை, நண்பனாகக் கண்டவர் சுந்தரர்.

சுந்தரருக்கு ஏதோ ஒன்று அறியக் கிடைத்து இருக்கிறது. அதை நினைத்து நினைத்து உருகுகிறார். அது வாழ் நாள் பூராவும் இன்பம் தரக் கூடியது என்கிறார்.

பாடல்

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய 
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை 
ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந் 
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே. 

பொருள்

ஏழிசையாய் =  ஏழிசையாய்

இசைப்பயனாய் = இசையின் பயனாய்

இன்னமுதாய் = இனிய அமுதமாய்

என்னுடைய தோழனுமாய் = என்னுடைய நண்பனுமாய்

என்று = என்று

முன் நீ சொன்ன = முன்பு நீ சொன்ன 

பெருஞ் சொற்பொருளை = பெரிய சொல்லின் பொருளை

ஆழ நினைத்திடில் = ஆழமாக யோசித்தால்

அடியேன் = என்

அருங்கரணம் = அருமையான பொறிகள் எல்லாம்

கரைந்துகரைந் = கரைந்து கரைந்து

தூழியல் = ஊழிக் காலம் வரை

இன்புறுவது காண் = இன்பம் அடைவது காண்

உயர்கருணைப் பெருந்தகையே = உயர்ந்த கருணை கொண்ட பெரியவனே

அவர் அறிந்த அது என்னவாக இருக்கும் ?