திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.
எல்லோரும் அறிந்த குறள் தான். தெய்வத்தை வணங்க மாட்டாள். கொண்ட கணவனை வணங்கி எழுவாள். அவள், பெய் என்றால் மழை பெய்யும்.
வள்ளுவர் இவ்வளவு சாதரணமாக ஒரு குறளை எழுத மாட்டாரே. இதில் ஆழமான அர்த்தம் எதுவும் இருக்குமா ?
தொழுது எழுவாள் - அது எப்படி முடியும் ? எழுந்து தொழுவாள் என்று தானே இருக்க வேண்டும். தூக்கத்தில் இருந்து எழுந்து, பின் தொழ முடியும். தொழுதுகொண்டே எப்படி எழ முடியும்?
ஒரு செயலை நாம் நம் உடலுக்கு வழக்கப் படுத்தி விட்டால் பின் அது நாம் நினைக்காமலேயே, சொல்லாமலேயே செய்து விடும்.
சுந்தர மூர்த்தி நாயனார் தன் நாவுக்கு நமச்சிவாய என்ற மந்திரத்தை பழக்கப் படுத்தி வைத்தார்.
"சொல்லு நா நமச்சிவாயவே"
நான் மறந்தால் கூட என் நாக்கு மறக்காதுஎன்றார்
மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
நான் மறந்தாலும் என் நா மறக்காது என்கிறார்.
அது போல் அவளுக்கு அவன் மேல் அவ்வளவு மதிப்பு, மரியாதை. அந்த மதிப்பும் மரியாதையும் அவனைக் கண்டபோது மட்டும் அல்ல, காணாத போதும் அது இருக்கும். தூக்கத்தில் கூட அந்த மரியாதை இருக்கும். எனவே, துயில் எழும் போதே வணங்கி எழுவாளாம். தொழுது எழுவாள்.
தெய்வத்தை தொழ மாட்டாள் ஆனால் கணவனை தொழுது எழுவாள் என்றால் அவ்வளவு சரியாக இல்லையே. கடவுளை விட மனிதன் உயர்வா ? வள்ளுவர் அப்படி எழுதுவாரா ?
பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்...
தெய்வந் தொழுதற்கு மனந் தெளிவது துயிலெழுங் காலத்தாகலின் 'தொழுதெழுவா' ளென்றார்.
தெய்வத்தை தொழுவதற்கு மனம் தெளிவாக இருக்க வேண்டும். தூங்கி எழும் காலத்தில் அவ்வளவு தெளிவு இருக்காது. எனவே முதலில் கணவனை தொழுது எழுந்து , பின் நீராடி, பூஜை செய்து கடவுளை பின் தொழுவாள் என்று அர்த்தம்.
பெய் என்று சொன்னவுடன் பெய்யும் மழை எவ்வளவு இனிமையானது ? நமக்கு வேண்டிய நேரத்தில் வேண்டிய அளவு வேண்டிய இடத்தில் பெய்யும் மழை எவ்வளவு சுகமானது ?
கணவனை தொழுது எழும் பெண் அப்படிப் பட்ட மழைப் போன்றவள்.
வெள்ளமாக வந்து ஊரைக் கெடுக்காது.
காலத்தில் வரமால் இருந்து பயிரைக் கருக்காது.
பெய் என்று சொன்னால் பெய்யும் மழை போன்றவள் அந்தப் பெண்.