Wednesday, December 18, 2019

நன்னூல் - நூலின் வகைகள் - பாகம் 6

நன்னூல் - நூலின் வகைகள் - பாகம் 6



ஒரு உணவு விடுதிக்குப் போகிறோம். அது சைவ விடுதியா, அசைவ விடுதியா, வடநாட்டு உணவகமா/தென் நாட்டு உணவகமா/ சைனீஸ் உணவகமா என்று தெரிந்தால், அங்கே என்ன கிடைக்கும் என்று நமக்குத் தெரியும் அல்லவா? ஒன்றும் தெரியாமல் உள்ளே போய்விட்டு, "ஐயோ, இது அந்த மாதிரி உணவகமா? " என்று திரும்பி வருவதை தவிர்க்கலாம்.

அது போல,

பலவிதமான நூல்கள் உள்ளன. பாடப் புத்தகம், நாவல், தின, வார, மாத இதழ்கள், ஆராய்ச்சி நூல்கள், மொழி, அறிவியல், புவியியல், கணிதம், விளையாட்டு, மதம் என்று அனைத்து துறைகளிலும் நூல்கள் இருக்கின்றன.

இந்த நூல்களை எப்படி வகைப் படுத்துவது ? ஒரு நூல் எந்த வகை நூல் என்று அறிந்து கொண்டால், அதன் தன்மை நமக்கு புரிபடும்.

நூலின் வகை தெரிந்தால், அதில் என்ன இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

உலகத்தில் உள்ள அத்தனை நூல்களையும் மூன்று விதமாக பிரிக்கலாம் அல்லது மூன்று பிரிவுக்குள் அடக்கி விடலாம் என்கிறது நன்னூல்.

அவையாவன, "மூல நூல், வழி நூல், சார்பு நூல்" என்பதாகும்


பாடல்

முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் . (சூத்திரம் 5)


பொருள்


முதல் = முதல் நூல்

வழி = வழி நூல்

சார் = சார்பு நூல்

பென  = என்று

நூன்மூன் றாகும்  = நூல்கள் மூன்று வகைப்படும்

சரி. அது என்ன முதல், வழி, சார்பு ?

மேலும் பார்க்க இருக்கிறோம்.


(என் குறிப்பு - தமிழ் இலக்கணம் மிக சுவையானது. ஒரு இலக்கியம் படிப்பது போல  படிக்கலாம். இருந்தும், பலருக்கு இது சலிப்பைத் தரலாம். உங்கள் எண்ணம்  என்ன என்று comment பகுதியில் பகிர்ந்து கொண்டால் மேலும் எழுதுவது பற்றி முடிவு எடுக்க  எளிதாக இருக்கும். நன்றி)

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/6.html





Tuesday, December 17, 2019

திருக்குறள் - உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது ?

திருக்குறள் - உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது ?


இது ஒரு ஆச்சரியமான விடயம் தான். இவ்வளவு சுயநலம், பொறாமை, போட்டி, கோபம், வன்மம், பழி வாங்கும் உணர்ச்சிகள், சாதி, மத, மொழி, நிற வேறுபாடுகள் எல்லாம் நிறைந்த இந்த உலகம் ஏன் இன்னும் அழிந்து போகாமல் இருக்கிறது ?  எது இந்த உலகை கட்டிக் காக்கிறது?

இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கு  பதில் தருகிறார் வள்ளுவப் பேராசான்.

உலகில் தீயவை எவ்வளவு மலிந்தாலும், சில பண்புடையவர்கள் இருப்பதால், அவர்களை நோக்கி இந்த உலகம் இருப்பதால், அது இன்னும் அழியாமல் இருக்கிறது என்கிறார்.

பாடல்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன்


பொருள்


பண்புடையார்ப்  = நல்ல பண்பு உள்ளவர்கள்

பட்டுண்டு = அமைந்து உள்ளது

உலகம் = இந்த உலகம்

அதுஇன்றேல் = அது இல்லாவிட்டால்

மண்புக்கு = மண்ணுக்குள் புகுந்து

மாய்வது = மாய்ந்து போவது

மன் = நிலைத்து நிற்கும் உயிர்கள்

ஒரு சமுதாயத்தில் எவ்வளவு அயோக்கியர்கள் இருந்தாலும், இந்த உலகம்  அந்த அயோக்கியர்களை விடுத்து நல்லவர்களையே   நோக்கி இருப்பதால் அது இன்னும்  அழியாமல் இருக்கிறது.


ஒரு அரசியல்வாதியோ, ஒரு தொழில் அதிபரோ எவ்வளவோ அக்கிரமங்கள் செய்து பணம், புகழ், அதிகாரம் சேர்த்தாலும், மக்கள் அவர்களை தங்கள் முன்னோடிகளாகக் கொள்வது இல்லை.

பணம், செல்வாக்கு, அதிகாரம் இல்லாவிட்டாலும், நல்லவர்களையே போற்றுகிறது. அவர்களையே தங்கள் வழி காட்டுதலாகக் கொள்கிறது.

உதாரணம்,

இராவணன் எவ்வளவோ பெரிய வலிமை உள்ளவன் தான். பக்தன், வீரன், செல்வந்தன், எல்லாம் தான். இராமன் படாத பாடு பட்டான். காடு மேடு எல்லாம்  மனைவியை பறி கொடுத்து அலைந்தான்.

யாராவது, "நான் இராவணனைப் போல வாழ ஆசைப்படுகிறேன்" என்று சொல்வார்களா?  இராமனை உலகம் போற்றுகிறது. அதனால் தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.

இரண்டாவது, வள்ளுவர் பண்புடையார் பற்றித் தான் கூறுகிறார். அறிவுடையார் பட்டுண்டு உலகம் என்று கூறவில்லை. அறிவை எளிதாக பெற்று விடலாம். பண்பு என்பது கடினமான விடயம்.

மனித மனம் தீயவை நோக்கி எளிதில் செல்லக் கூடியது. அதை மாற்றி நல் வழியில் செலுத்துவது என்பது கடினமான காரியம். எனவே தான் பண்புடையாரை உயர்த்திச் சொல்கிறார் வள்ளுவர்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்ன என்றால், நல்லவர்கள், பெரியவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள் மிகக் குறைந்த பேரே இருக்கிறார்கள், இருந்தார்கள்.  அவர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு தவறு நடந்து இருக்கலாம். அதை பெரிது படுத்தி, அவர்களின் மேன்மையை குறைத்து விட்டால், பின் வருங்கால சந்ததிக்கு யாரை உதாரணமாக கை காட்ட முடியும்?

ரமண மகரிஷிக்கு புற்று நோய் வந்தது ....

பாரதியார் சின்ன வயதில் போதை மருந்து உண்டார் ....

இராமன் மறைந்து இருந்து வாலியைக் கொன்றான் ...

என்று பெரியவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை சுட்டிக் காட்டி அவர்களின் மேன்மையை குறைத்தோம் என்றால்,  பின் அடுத்த சந்ததிக்கு யாரை  உதாரணம் காட்டப் போகிறோம்?

அவர்களை போல பண்பு உள்ளவர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது.   அவர்களையும் விட்டு விட்டால், பின் வேறு வழி இல்லை.


வாலியைக் மறைந்து நின்று கொன்றது சரியா தவறா என்று பட்டி மன்றம்.

கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா என்று விவாதம்.

ஒருவரை உயர்த்துகிறேன் என்று மற்றவரை தாழ்த்தி சொல்லுவது. பெரியவர்களின் வாழ்க்கையை  குறைத்து மதிப்பிடுவது....இவை எல்லாம் அறிவுக்கு வேண்டுமானால்  நன்றாக இருக்கும். வாழ்க்கைக்கு நல்லது அல்ல.


எனவே, நல்ல நூல்களை, நல்லவர்களை குறை சொல்வதை விடுத்து அவற்றில் இருந்து  நாம் நல்லவற்றை கண்டு அதை கடை பிடிக்க முயல வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_17.html

நன்னூல் - இரு பாயிரம் - பாகம் 5

நன்னூல் - இரு பாயிரம் - பாகம் 5


பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

பாயிரம் என்றால் என்ன என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அந்த பாயிரம் இரண்டு வகைப்படும்.


"பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே ."

அதாவது, பாயிரம் என்பது பொதுப் பாயிரம் , சிறப்புப் பாயிரம் என்று இரண்டு வகைப்படும்.


ஒரு நூலை எழுதும் ஆசிரியன், இந்த இரண்டையும் எழுத வேண்டும். அந்த நூலை வாசிக்க விரும்புபவர்கள், பாயிரத்தை மட்டும் படித்தால் போதும், அந்த நூல் தங்களுக்கு ஏற்றதா அல்லது இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும்.

பொதுப் பாயிரம் என்றால் என்ன?

பவணந்தியார்  சொல்கிறார்.

பாடல்

நூலே நுவல்வோ னுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும்
எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம் .


பொருள்

நூலே = அந்த புத்தகத்தின் வரலாறு, தன்மை, நோக்கம்

நுவல்வோன் = நூல் எழுதிய ஆசிரியனின் தகுதி, திறமை, அனுபவம் போன்றவை.

நுவலுந் திறனே = ஆசிரியனின் சொல்லும் திறமை.

கொள்வோன் = அந்த நூல் யாருக்கு என்று எழுதப் பட்டது

கோடற் கூற்று = மாணவன் அந்த நூலை எப்படி படிக்க வேண்டும்

ஐந்தும் = இந்த ஐந்தும்

எல்லா நூற்கு மிவை = எல்லா நூலுக்கும் இவை

பொதுப் பாயிரம் . = பொதுவானது

இந்த ஐந்தும் எல்லா நூலுக்கும் இருக்க வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், இவை இருந்தால் இரு நூலை தேர்ந்து எடுப்பது எவ்வளவு சுலபமாக இருக்கும்.

உதாரணமாக

"இந்த நூல் பொருளாதாரம் பற்றிய ஒரு அறிமுக நூல். இதை எழுதிய ஆசிரியர் பொருளாதாரத்தில் முனைவர் (doctorate) பட்டம் பெற்றவர். பல பல்கலை கழகங்களில் விரிவுரையாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணி புரிந்து வருபவர். இதற்கும் பொருளாதாரம் பற்றி 10 நூல்கள் எழுதி உள்ளார். இந்த நூல் 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது....."

இது பாயிரத்தின் ஒரு வகை. இப்படி இருந்தால் ஒரு நூலை தேர்ந்து எடுப்பது எவ்வளவு எளிதாக இருக்கும்?

நமக்குத் தேவை அல்லாத, அல்லது பொருந்தாத புத்தகத்தை வாங்குவதனால், வீணான பண விரயம் மட்டும் அல்ல, அதை படிப்பதின் மூலம்  நம் நேரமும் விரயம் ஆகும். அதை படிக்கும் நேரத்தில் இன்னொரு நல்ல நூலை படித்து இருக்கலாம். அதுவம் போச்சும்.

மற்றொன்று, இன்று ஒரு நூலை பார்த்து அதை நகல் எடுத்த மாதிரி எழுதும் போக்கு இருக்கிறது.  இன்னொருவரின் கற்பனையை, உழைப்பை தன்னது மாதிரி  எடுத்து எழுதி விடுகிறார்கள். நூல் ஆசிரியனின் தன்மை தெரிந்தால் அதை ஓரளவுக்கு நாம்  தடுக்க முடியும். Plagiarism என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்

மற்றது, தவறானவற்றை எழுதுபவர்கள் தாங்கள் யார் என்று காட்டிக் கொள்ள மாட்டார்கள். மஞ்சள் பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் தாங்கள் யார் என்று  வெளிப்படையாக சொல்வது கிடையாது. மலிவான செய்திகளை, மலிவான நோக்கத்தோடு எழுதுபவர்கள் தங்களை ஏன் வெளிக் காட்டிக் கொள்ளப் போகிறார்கள்?

பொதுப் பாயிரம் என்பது ஒரு நூலின் முழுத் தன்மையையும் நமக்கு ஒரு சில பக்கங்களில்  தந்து விடும்.

ஒரு நூலுக்கு இலக்கணம் வகுக்க வேண்டும் என்றால், அதற்கு முன் எவ்வளவு நூல் அந்த மொழியில் வந்திருக்க வேண்டும்?    அதில்  நல்ல நூல் எது, அல்லாதது எது   இனம் கண்டு, ஒரு நல்ல நூலுக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் என்றால்  இந்த மொழியின் தொன்மை, ஆழம்,வீச்சு  பற்றி   நாம் எவ்வளவு பெருமை படலாம்.

நம் பெருமை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/5.html


Sunday, December 15, 2019

விவேக சிந்தாமணி - ஈனருக்கு உரைத்திடில்

விவேக சிந்தாமணி - ஈனருக்கு உரைத்திடில் 


ஒரு ஊரில் ஒரு தூக்கணாம் குருவி இருந்தது. அது ஒரு மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அப்படி இருக்கும் போது ஒரு நாள் பெரு மழை வந்தது. குருவிக்கு ஒரு பயமும் இல்லை. தான் கட்டிய கூட்டில் அது சுகமாக இருந்தது. கூட்டில் இருந்து அது வெளியே எட்டிப் பார்த்த போது, அந்த மரத்தில் ஒரு குரங்கு இருந்தது தெரிய வந்தது. அந்தக் குரங்கு மழையில் நனைந்து  , குளிரில் நடுங்கியபடி இருந்தது.

அதன் மேல் இரக்கப்பட்டு, அந்த தூக்கணாம் குருவி "ஏ குரங்கே..நீ ஏன் இப்படி மழையில் துன்பப் படுகிறாய். என்னை போல் ஒரு கூடு கட்டிக் கொண்டு சுகமாக வாழலாம் தானே...நான் உனக்கு கூடு கட்டச் சொல்லித் தருகிறேன் " என்றது.

அதைக் கேட்ட குரங்குக்கு கடுமையான கோபம் வந்தது.

"போடா ஊசி மூஞ்சி மூடா...நீயா எனக்கு புத்தி சொல்வது " என்று வெகுண்டு, அந்த தூக்கணாங் குருவி கூட்டை பிய்த்து எரிந்து விட்டது.

கீழானவர்களுக்கு உயர்ந்த கருத்தைச் சொன்னால், இதுதான் நிகழும் என்கிறது விவேக சிந்தாமணி.

பாடல்

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே! 


பொருள்

வானரம் = குரங்கு

மழைதனில் நனையத் = மழையில் நனைய

தூக்கணம் = தூக்கணாம் குருவி

தானொரு  = தான் ஒரு

நெறிசொலத் = வழி சொல்ல

தாண்டி பிய்த்திடும் = குதித்து வந்து பிய்த்து போடும்

ஞானமும் = ஞானமும்

கல்வியும் = கல்வியும்

நவின்ற நூல்களும் = நல்ல நூல்களும்

ஈனருக்கு உரைத்திடில் = கீழானவர்களுக்கு சொன்னால்

இடர்அது ஆகுமே!  = அது துன்பத்தில் போய் முடியும்


உயர்ந்த நூல்களின் அர்த்தம் புரியாமல், அதன் நோக்கம் புரியாமல், அதைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்கள்,  அதை கிண்டல் செய்பவர்கள், அதைப் பற்றி குதர்க்கமாக   கேள்வி கேட்டு கேலி செய்பவர்கள் எல்லாமே அந்த ஈனர் கூட்டத்தில்  சேர்வார்கள்.

புரியவில்லை என்றால் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கிண்டல் செய்வதும், குதர்க்கம் பேசுவதும் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் வழியின்றி வேறில்லை.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_15.html

Friday, December 13, 2019

நன்னூல் - பாயிரம் - பாகம் 3

நன்னூல் - பாயிரம் - பாகம் 3


ஒரு நல்ல நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நன்னூல் சொல்கிறது. ஒரு நல்ல நூலின் கூறுகள், அல்லது பகுதிகள் என்ன என்ன என்று பட்டியல் தருகிறது. அவற்றின் மூலம், அந்த புத்தகம் நமக்குத் தேவையா இல்லையா, யார் இதைப் படிக்கலாம் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியும்.

அந்த கூறுகள் அடங்கிய பாடலை முதலில் பார்த்தோம். அது கீழே உள்ளது.


பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

அதில் உள்ள முதல் வரி 

"நூலின் இயல்பே நுவலின் இரு பாயிரம் தோற்றி"

அது என்ன இரு பாயிரம் ?

பாயிரம் என்பது ஒரு நூலுக்கு முன்னுரை போல. அப்படிச் சொன்னால் போதுமா ? சரியான விளக்கம் வேண்டும் அல்லவா.

பாயிரம் என்றால் என்ன என்று சொல்லுகிறார் பவணந்தியார் 

முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்பது பாயிரம். 

இது என்னடா, வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால், அதை விட கடினமான வார்த்தைகளில் அர்த்தம் சொன்னால் என்ன செய்வது என்று திகைக்க வேண்டாம். 

எளிமைப் படுத்துவோம்.

பாடல் 

முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் .

பொருள் 


முகவுரை = நூலின் முன் பகுதி. முதலில் நூலை நமக்கு அறிமுகப் படுத்தும் பகுதி. அதை நூல்முகம் என்றும் கூறுவார்கள். 

பதிக = ஒரு நூலில் பொதுவான மற்றும் சிறப்பான பகுதிகள்  என்னென்ன என்று எடுத்துக் கூறுவது 

மணிந்துரை = அணிந்துரை = நூலின் சிறப்பை பற்றிக் கூறுவது 

நூன்முகம் =அல்லது முகவுரை. இதை புனைந்துரை என்றும் கூறுவர்.


புறவுரை = நூல் எதைப் பற்றி சொல்லாது என்று சொல்வது. அதாவது, இந்த நூல் எந்த எல்லை வரை போகும் என்று கூறுவது. 

தந்துரை = நூலில் இல்லாத சிலவற்றை பொருள் விளங்க வேண்டி, அவற்றை விளக்கிக் கூறுவது. உதாரணமாக, ஒரு இயற்பியல் (physics ) புத்தகத்தில் சில வேதியல் (chemistry ) பற்றி கூறுவது. அது இயற்பியலுக்கு சம்பந்தம் இருப்பதால். 

புனைந்துரை = நூல் முகம் 

பாயிரம்  = இவையே பாயிரம் எனப்படும். 


அதாவது நூலின் நோக்கம், அதன் சிறப்பு, அதன் எல்லை, அது எதை பற்றி எழுதப் பட்டது, என்று முதலில் கூறுவது பாயிரம்.

பாயிரத்தைப் படித்தாலே, அந்த நூலைப் பற்றி நமக்கு ஒரு எண்ணம் தோன்றும்.

இது நமக்கு ஏற்ற நூல் தானா, இதை நாம் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம்.

முழு நூலையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதாக தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

எவ்வ்ளவு நேரம் மிச்சமாகும் என்று நினைத்துப் பாருங்கள்?

ஒரு நூலின், அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து தந்து இருக்கிறார்கள்.

அடுத்த முறை ஏதாவது ஒரு புத்தகம் வாங்க வேண்டும் நினைத்தால், அதன் முன்பகுதியைப் படியுங்கள்.  இதில் சொன்ன எல்லாம் அதில் இல்லாமல் போகலாம். ஆனால், நமக்கு ஒரு பிடி கிடைக்கும்.

ஆங்கிலத்தில் Foreward கூறுவார்களே அது.

சரி, பாயிரம் என்றால் என்ன என்று புரிகிறது. அது என்ன "இரு பாயிரம்" ?

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_13.html

Thursday, December 12, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளம்மனம் விள்ளும்வகை - 108

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளம்மனம் விள்ளும்வகை - 108 



கோவிலுக்குப் போவது, இறைவனை தொழுவது, அப்படி தொழுதால் நமக்கு வேண்டியது கிடைக்கும் என்பதெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாத ஒன்று.

யாரோ ஒருவர் எங்கோ இருந்து கொண்டு, நான் எழுதிய பரீட்சையில் எனக்கு நிறைய மதிப்பெண் பெற்றுத் தருவார், எனக்கு வேலை வாய்ப்பை கொண்டு தருவார், என் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைய ஏற்பாடு செய்வார் என்று நினைப்பதெல்லாம் ஒரு நம்பிக்கை, ஒரு மன அமைதிக்காக இருக்கலாமே அன்றி அது முழுக்க முழுக்க உண்மை என்று அதை நம்புபவர்களே கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படியே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஏற்றுக் கொண்டாலும், அவனுக்குத்தான் எல்லாம் தெரியுமே. நமக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா? எதுக்கு அனாவசியமா போய் வேண்ட வேண்டும். பிள்ளைக்கு என்ன வேண்டும் என்று தாய்க்குத் தெரியாதா? அம்மா என் பசிக்கு உணவு தா என்று எந்த பிள்ளையும் தாயிடம் சென்று வேண்டுவது இல்லையே.

பின் எதற்காக கோவில், இறை வணக்கம் எல்லாம்?

நம்  மனதில் சில பல அழுக்குகள் இருக்கின்றனதானே ? அழுக்கே இல்லாத மனம் யாருக்கு இருக்கிறது? கொஞ்சம் கோபம், கொஞ்சம் பொருந்தா காமம்,  அந்தப் பக்கம் பொறாமை, இந்தப் பக்கம் வஞ்சம், என்று ஆயிரம் மன அழுக்குகள் இருக்கின்றதானே?

அவற்றைப் போக்கும் படி இறைவனை வேண்ட வேண்டும் என்கிறார் திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழியில்.

இறைவனே இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத போது , நம் மன அழுக்கை நீக்க அவனை ஏன் நாட வேண்டும்?

வேண்டாம்தான். அவன் செய்கிறானோ இல்லையோ, என்னிடம் இந்த இனித்த அழுக்குகள்  இருக்கின்றன, அதை மாற்றித்தா என்று வேண்டும் போது, நமக்குள் ஒரு விழிப்புணர்வு (awareness ) ஏற்படுகிறது.

நம்மிடம் உள்ள குற்றத்தை , அழுக்கை நாம் அறிந்து கொள்ளும் போது, அதை வெளிப்படையாக  ஏற்றுக் கொள்ளும் போது,  அடுத்த கட்டம் அது தானே மாறி விடும்.

ஆங்கிலத்தில் "Awareness brings its own change" என்று சொல்லுவார்கள்.

எப்போது நமக்கு நம் குறைகள் தெரியத் தொடங்குகிறதோ, அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம்  வருகிறதோ, அப்போதே நாம் அந்த குறைகளில் இருந்து மெல்ல மெல்ல  வெளியே வரத் தொடங்குவோம்.

அதற்காகவேணும் , இறைவனைத்  தொழலாம்.அது ஒரு குறியீடு. அவ்வளவுதான்.


பாடல்

கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே.



பொருள்

கள்ளம் மனம் = கள்ளம் நிறைந்த மனம். குற்றம், அழுக்குகள்  நிறைந்த மனம்.

விள்ளும் வகை  = அதில் இருந்து விடுபடும் வகை

கருதிக் = நினைத்து

கழல் தொழுவீர் = அவன் திருவடிகளைத் தொழுவீர்

வெள்ளம் = நீர், அதிகமான நீர் நிறைந்த

முது பரவைத் = பழைய கடல்

 திரை விரிய = அலை அடிக்க

கரை யெங்கும் = கரை எல்லாம்

தெள்ளும் மணி திகழும் = கொழித்துக் கிடக்கும் மணிகள் நிறைந்த

சிறு புலியூர்ச் = சிறு புலியூர்

சல சயனத் துள்ளும் = சல (நீர்) சயனத்திலும் (தூக்கத்தில்)

என துள்ளத்துளும்  = எனது உள்ளத்தின் உள்ளும்

முறைவாரை = உறைவாரை , இருப்பவரை

யுள் ளீரே. = நீங்கள் நினையுங்கள்

சிறுபுலியூர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்று. 11 - ஆவது தேசம்.

நாக பட்டினத்துக்கும், மாயவரத்துக்கும் நடுவில் உள்ளது. மாயவரம் (மயிலாடுதுறை)  போனால், அங்கிருந்து ஒரு வாடகை காரில் போய் விட்டு வந்து விடலாம். சின்ன கிராமம். அழகான கோவில்.

பெருமாள் பால சயனத்தில் இருக்கும் கோலம்.

தெற்கு நோக்கிய சயனம் (இது ஒன்று, ஸ்ரீ ரங்கம் மற்றது).

திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்த திவ்ய தேசம். பத்து பாடல்கள் பாடி இருக்கிறார். தேன் சொட்டும் பிரபந்தங்கள். மற்றவற்றைப் படித்துப் பாருங்கள்.

கள்ள மனம் மாறும்.

ஒரு முறை கருடனுக்கும், ஆதி சேஷனுக்கும் சண்டை வந்ததாம். பெருமாளுக்கு  சேவை செய்வதில் யார் சிறந்தவர் என்று. அந்த சண்டையை பெருமாள் இந்த த் திருத்தலத்தில் வைத்து சமரசம் செய்து வைத்தாராம்.

இங்கே ஆதி சேஷனுக்கு நில மட்டத்துக்கு அடியில் சன்னிதானம் இருக்கிறது.

ஒரு சனி ஞாயிற்றுக் கிழமை , ஒரு எட்டு போயிட்டு வரலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/108.html

Tuesday, December 10, 2019

நன்னூல் - நல்ல நூலின் இயல்பு - பாகம் 2

நன்னூல் - நல்ல நூலின் இயல்பு  - பாகம் 2


ஒரு நல்ல நூலுக்கு இலக்கணம் என்ன? ஒரு நூல் எப்படி அமைய வேண்டும் என்று ஆராய்ந்து அதற்கு ஒரு வழி வகுத்து இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

இரண்டு கண், ஒரு மூக்கு, இரண்டு காது, ஒரு வாய், அதில் 32 பற்கள் என்று ஒரு வரை முறை இருக்கிறது அல்லவா?

அது போல ஒரு நூலின் வரை முறை என்ன என்று சொல்கிறார் பவணந்தியார்.

பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

பொருள்

நூலி னியல்பே = நூலின் இயல்பு, அதாவது தன்மை

நுவலின்= கூறுவது என்றால்

ஓரிரு = ஒன்று அல்லது இரண்டு

பாயிரந் தோற்றி = பாயிரம் கூறி

மும்மையி னொன்றாய் = மூன்று வகை நூல்களில் ஒன்றாக

நாற்பொருட் பயத்தோடு = நான்கு  பயன்களைத் தந்து

எழுமதந் தழுவி = ஏழு மதங்களை தழுவி

ஐயிரு குற்றமு மகற்றி = பத்து விதமான குற்றங்களை நீக்கி

அம் மாட்சியோடு  = அந்த பாங்கோடு

என் நான்கு உத்தியின் =  32 (8 x 4) உத்திகளோடு

ஓத்துப் படலம் = ஓத்துப் படலம்

என்னு முறுப்பினிற் = என்ற இரு உறுப்புகளைக் ஒண்டு

சூத்திரங் = சூத்திரம்

காண்டிகை = காண்டிகை

விருத்தி யாகும் = விருத்தியாகும்

விகற்ப = விகற்பம்

நடை பெறுமே . = பெற்று நடை தொடரும்

ஒரு நூல் என்றால் இத்தனையும் இருக்க வேண்டும்.

பாதிக்கு மேல் நமக்கு ஒன்றும் புரியவில்லை.

இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லையே.

நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர், ஒவ்வொரு வரியையும் பின்னால் விளக்குகிறார்.

அனைத்தையும் படிக்க இருக்கிறோம்.

ஒவ்வொரு வரிக்கும் ஒரு சூத்திரம் எழுதி இருக்கிறார்.

எவ்வளவு நுட்பமாக சிந்தித்து இருக்கிறார்கள்.

தமிழ் படிப்பதை விடுங்கள், அதில் ஒரு நூலை படித்து முடிக்கவே ஒரு ஆயுள் காலம் போதாது.  இதில் மற்றவற்றை படிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/2.html