Tuesday, December 17, 2019

திருக்குறள் - உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது ?

திருக்குறள் - உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது ?


இது ஒரு ஆச்சரியமான விடயம் தான். இவ்வளவு சுயநலம், பொறாமை, போட்டி, கோபம், வன்மம், பழி வாங்கும் உணர்ச்சிகள், சாதி, மத, மொழி, நிற வேறுபாடுகள் எல்லாம் நிறைந்த இந்த உலகம் ஏன் இன்னும் அழிந்து போகாமல் இருக்கிறது ?  எது இந்த உலகை கட்டிக் காக்கிறது?

இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கு  பதில் தருகிறார் வள்ளுவப் பேராசான்.

உலகில் தீயவை எவ்வளவு மலிந்தாலும், சில பண்புடையவர்கள் இருப்பதால், அவர்களை நோக்கி இந்த உலகம் இருப்பதால், அது இன்னும் அழியாமல் இருக்கிறது என்கிறார்.

பாடல்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன்


பொருள்


பண்புடையார்ப்  = நல்ல பண்பு உள்ளவர்கள்

பட்டுண்டு = அமைந்து உள்ளது

உலகம் = இந்த உலகம்

அதுஇன்றேல் = அது இல்லாவிட்டால்

மண்புக்கு = மண்ணுக்குள் புகுந்து

மாய்வது = மாய்ந்து போவது

மன் = நிலைத்து நிற்கும் உயிர்கள்

ஒரு சமுதாயத்தில் எவ்வளவு அயோக்கியர்கள் இருந்தாலும், இந்த உலகம்  அந்த அயோக்கியர்களை விடுத்து நல்லவர்களையே   நோக்கி இருப்பதால் அது இன்னும்  அழியாமல் இருக்கிறது.


ஒரு அரசியல்வாதியோ, ஒரு தொழில் அதிபரோ எவ்வளவோ அக்கிரமங்கள் செய்து பணம், புகழ், அதிகாரம் சேர்த்தாலும், மக்கள் அவர்களை தங்கள் முன்னோடிகளாகக் கொள்வது இல்லை.

பணம், செல்வாக்கு, அதிகாரம் இல்லாவிட்டாலும், நல்லவர்களையே போற்றுகிறது. அவர்களையே தங்கள் வழி காட்டுதலாகக் கொள்கிறது.

உதாரணம்,

இராவணன் எவ்வளவோ பெரிய வலிமை உள்ளவன் தான். பக்தன், வீரன், செல்வந்தன், எல்லாம் தான். இராமன் படாத பாடு பட்டான். காடு மேடு எல்லாம்  மனைவியை பறி கொடுத்து அலைந்தான்.

யாராவது, "நான் இராவணனைப் போல வாழ ஆசைப்படுகிறேன்" என்று சொல்வார்களா?  இராமனை உலகம் போற்றுகிறது. அதனால் தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.

இரண்டாவது, வள்ளுவர் பண்புடையார் பற்றித் தான் கூறுகிறார். அறிவுடையார் பட்டுண்டு உலகம் என்று கூறவில்லை. அறிவை எளிதாக பெற்று விடலாம். பண்பு என்பது கடினமான விடயம்.

மனித மனம் தீயவை நோக்கி எளிதில் செல்லக் கூடியது. அதை மாற்றி நல் வழியில் செலுத்துவது என்பது கடினமான காரியம். எனவே தான் பண்புடையாரை உயர்த்திச் சொல்கிறார் வள்ளுவர்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்ன என்றால், நல்லவர்கள், பெரியவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள் மிகக் குறைந்த பேரே இருக்கிறார்கள், இருந்தார்கள்.  அவர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு தவறு நடந்து இருக்கலாம். அதை பெரிது படுத்தி, அவர்களின் மேன்மையை குறைத்து விட்டால், பின் வருங்கால சந்ததிக்கு யாரை உதாரணமாக கை காட்ட முடியும்?

ரமண மகரிஷிக்கு புற்று நோய் வந்தது ....

பாரதியார் சின்ன வயதில் போதை மருந்து உண்டார் ....

இராமன் மறைந்து இருந்து வாலியைக் கொன்றான் ...

என்று பெரியவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை சுட்டிக் காட்டி அவர்களின் மேன்மையை குறைத்தோம் என்றால்,  பின் அடுத்த சந்ததிக்கு யாரை  உதாரணம் காட்டப் போகிறோம்?

அவர்களை போல பண்பு உள்ளவர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது.   அவர்களையும் விட்டு விட்டால், பின் வேறு வழி இல்லை.


வாலியைக் மறைந்து நின்று கொன்றது சரியா தவறா என்று பட்டி மன்றம்.

கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா என்று விவாதம்.

ஒருவரை உயர்த்துகிறேன் என்று மற்றவரை தாழ்த்தி சொல்லுவது. பெரியவர்களின் வாழ்க்கையை  குறைத்து மதிப்பிடுவது....இவை எல்லாம் அறிவுக்கு வேண்டுமானால்  நன்றாக இருக்கும். வாழ்க்கைக்கு நல்லது அல்ல.


எனவே, நல்ல நூல்களை, நல்லவர்களை குறை சொல்வதை விடுத்து அவற்றில் இருந்து  நாம் நல்லவற்றை கண்டு அதை கடை பிடிக்க முயல வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_17.html

2 comments:

  1. சரியாக சொன்னீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. அழகான பதிவு. நல்லதை நினை நல்லதே நடக்கும்

    ReplyDelete