Saturday, December 28, 2019

திருக்குறள் - வேளா வேளைக்கு சாப்பிடக் கூடாது

திருக்குறள் - வேளா வேளைக்கு சாப்பிடக் கூடாது 


நமக்கு சிறுவயது முதலே சொல்லப் பட்டது என்ன என்றால், "சரியா வேளா வேளைக்கு சாப்பிடணும். இல்லனா வயித்துல அல்சர் வரும்"

அது சரியான ஒன்றா என்று சிந்திப்போம்.

காலம் காலமாக நம் முன்னோர்கள் காடுகளில் வாழ்ந்து வந்த போது, மூன்று வேளை உணவு என்பது எப்போதோ கிடைக்கக் கூடிய ஒன்றாக இருந்திருக்கும். காட்டில் சென்று வேட்டையாடி, அதைக் கொண்டு வந்து, சமைத்து சாப்பிட்டு இருப்பார்கள். தினமும் மூன்று வேளை உணவு என்பது முடியவே முடியாத ஒன்று. அவர்களுக்கு எல்லாம் அல்சர் வந்ததா?

இன்றும் கூட, எவ்வளவோ ஏழைகள், பிச்சைக்காரர்கள் மூன்று வேளை உணவு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அல்சர் முதலான நோய் வந்து விட்டதா? இல்லையே.

மற்றவர்களை விடுங்கள். நாமே, ஏதோ வேலை மும்மரத்தில் இருந்தால், நேரம் போனதே தெரியாது. சில நாட்கள் சரியான நேரத்துக்கு உணவு உண்ணாமல் இருந்திருப்போம். என்ன ஆயிற்று? ஒன்றும் ஆகாது.

காட்டில் உள்ள விலங்குகளைப் பாருங்கள். அவை தினம் மூன்று வேளை உணவு உண்கின்றனவா? அவற்றிற்கு எல்லாம் அல்சர் வருகிறதா? இல்லையே.

நம் உடம்பு, உணவு கிடைக்கும் போது அதை பக்குவமான வழியில் சேமித்து வைத்துக் கொள்ளும். பின் தேவைப் படும் போது சேமிப்பில் இருந்து எடுத்துக் கொள்ளும்.

மூன்று வேளை உணவு என்பது மனித வரலாற்றில் இந்த கடைசி 500 ஆண்டுகளில்  வந்த ஒன்று. அதற்கு முன் எல்லாம் நாள் கணக்கில் உணவு இல்லாமல் நம் முன்னோர்கள் அலைந்து இருக்கிறார்கள். எதிரிகள் சுத்தி வளைத்துக் கொண்டால், வெள்ளம் வந்து சூழ்ந்து கொண்டால், நெருப்பு, கொடிய விலங்குகள் என்று இவற்றில் இருந்து பாதுக்கத்துக் கொள்ள மறைந்து இருக்க வேண்டி இருந்திருக்கும். அப்போது எல்லாம் மூன்று வேளை உணவு ஏது?

கொழுப்பு என்று சொல்கிறோமே, அது நமது உடம்பு சேமித்து வைத்த சக்தி.

நாம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. நம் உடம்பு, அந்த சேமித்து வைத்த கொழுப்பில் இருந்து  தனக்கு வேண்டிய சக்தியை எடுத்துக் கொள்ளும். எடை குறையும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் ஒரு முறை உணவு உண்கிறோம். அது உள்ளே சென்று, செரிமானம் ஆகி,  உணவில் உள்ள சக்தியை உடம்பு எடுத்துக் கொண்டு, தேவைக்கு அதிகமானதை  சேமித்து வைக்கும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில்  நாம் மேலும் உணவு உட்கொள்கிறோம்.

முன்பு உண்ட உணவு சீரணம் ஆகி முடியவில்லை. அதற்குள் மேலும் உணவை ப் போடுகிறோம். உடம்பு என்ன செய்யும்? முன்பு உண்ட உணவு அறை குறையாக  சீரணம் செய்யாமல் இருப்பதை அப்படியே விட்டு விட்டு, புதிதாக  வரும் உணவை கவனிக்கப் போய் விடும். சரி, இரண்டாவது உணவை  சீரணம் செய்து கொண்டு இருக்கும் போது, மூன்றாவது உணவு.

இப்படி தள்ளிக் கொண்டே இருந்தால்,  நம் உடலில் நடக்கும் செயல் பாடுகள் பழுதாகும் தானே?


அறுவடை முடிந்த பின்னால், அடுத்த விதை விதைத்தால் என்ன ஆகும்?

இன்று மேற்கிந்திய நாடுகளில் intermittent fasting என்று புதிதாகச் சொல்கிறார்கள். நம் அய்யன் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டு சொல்லி விட்டுப் போய் இருக்கிறான்.

பாடல்


அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.



பொருள்

அற்றால் = முதலில் உண்ட உணவு முற்றுமாக சீரணம் ஆன பின். அற்றல் என்றால் விட்டுப் போதல். முதலில் உள்ள உணவு முற்றிலும் உடலை விட்டுப் போய் விட வேண்டும்.

அறவறிந்து உண்க  = அடுத்த  உணவை  அளவு அறிந்து உண்க

அஃதுடம்பு =  அப்படிச் செய்தால், அது உடம்பை

பெற்றான் = பெற்றவன்

நெடிதுய்க்கும் = நெடிது உய்க்கும்

ஆறு. = வழி

முதலில் உண்ட உணவு நன்கு சீரணம் ஆகி, உடம்பில் முழுவதுமாக  சேர்ந்த பின்,  அடுத்த உணவை உண்ண வேண்டும். அதுவும் அளவு அறிந்து உண்ண வேண்டும். அப்படிச் செய்தால், அது நீண்ட நாள் வாழ வழி செய்யும்.

வேளா வேளைக்கு சாப்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும். பசித்தால் மட்டுமே  சாப்பிட வேண்டும். கடிகாரத்தைப் பார்த்து விட்டு, அடடா, மணி ஒண்ணு ஆச்சே,  என்று சாப்பிடக் கூடாது.

ஆனால் என்ன? பசிக்க வில்லை என்றால் எதற்கு சாப்பிட வேண்டும்.

அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரிகளில் இப்படி உணவு இடைவேளை என்று விடுகிறார்கள். அந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி நம் உடம்பை பழக்கி விட்டோம். அது இயற்கைக்கு மாறானது.

பசித்துத் தான் சாப்பிட வேண்டும்.

வள்ளுவர் வேலை மெனக்கெட்டு 7 வார்த்தைகள் கொண்டு குறள் செய்கிறார்.

கிழவி இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் .

பசித்துப் புசி 


என்று.

வருகிற புத்தாண்டில் இருந்து பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு ஆரோக்கியமாக இருப்பீர்கள் தெரியுமா?

அது மட்டும் அல்ல, இந்த குறளுக்கு ஒரு பத்து பதினைந்து பாகத்தில் உரை எழுதலாம்.  இந்த ஏழு வார்த்தையில் அவ்வளவு அர்த்தச் செரிமானம் இருக்கிறது.  அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதைப் பற்றி சிந்தியுங்கள். பசித்தால் ஒழிய சாப்பிடுவதில்லை என்று முடிவு எடுங்கள். முதலில் ஒரு சில நாள் கொஞ்சம் கடினமாக இருக்கும். போகப் போக உங்கள் உடல் பழகி விடும். ஒரு வாரம் பத்து நாள் ஆகலாம்.

அதற்குப் பின் உங்கள் உடம்பு உங்களுக்கு நன்றி சொல்லும்.

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_28.html

1 comment:

  1. கிழவி இரெண்டே வார்த்தையில் சொல்லிவிட்டாள் என்பதை படிக்கும் போது மெலிய சிரிப்பு வந்தது.ஆனால் அதில் எவ்வளவு ஆழமான கருத்து

    ReplyDelete