Wednesday, December 4, 2019

கவிதையின் இலக்கணம் - நன்னூல்

கவிதையின் இலக்கணம் - நன்னூல் 


கவிதை  என்றால் எப்படி இருக்க வேண்டும்? எது  கவிதை?

இன்று புதுக்கவிதை, மரபுக் கவிதை என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். வார்த்தைகளை மடக்கிப் போட்டு, இது தான் கவிதை என்கிறார்கள்.

யாப்பு இலக்கணத்தில் அமைந்து விட்டால் மட்டும் கவிதை என்று சொல்ல முடியுமா?

நன்னூல் சொல்கிறது கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று.

"சில சொற்களில், பலவிதமான பொருள்களை, சிறப்பான ஒரு கண்ணாடியில், துல்லியமாக காட்டுவது போல திடமாக, நுட்பமாக சிறப்பாக சொல்வது கவிதை"

பாடல்

சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்

பொருள்

சில்வகை எழுத்தில் = சில எழுத்துகளில் (சொல் கூட இல்லை, எழுத்தில்)

பல்வகைப் பொருளைச் = பல விதமான பொருளை

செவ்வன் = சிறப்பான

ஆடியிற் = கண்ணாடியில்

செறித்தினிது = நுணுக்கமாக அழகாக

விளக்கித் = விளக்கித்

திட்ப = திடமாக

நுட்பஞ் = நுட்பமாக

சிறந்தன = சிறந்த வழியில் சொல்வது

சூத்திரம் = சூத்திரம் அல்லது கவிதை


அது என்ன கண்ணாடி?

ஒரு பெரிய மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை சற்று தூரத்தில் நின்று ஒரு சின்ன கண்ணாடியில் முழுவதும் பார்க்க முடியும். அந்தக் கண்ணாடி தெளிவாக இருந்தால், மரத்தின் அத்தனை நுணுக்கங்களையும் அதில் காண முடியும். கண்ணாடி என்னவோ சின்னதுதான். ஆனால், பெரிய மரத்தை அது தன்னுள் அடக்கிக் காட்டுகிறது.

சுருக்கி மட்டும் அல்ல, நுணுக்கங்களையும் தெளிவாக காட்டும்.

அது போல, கவிதை பெரிய விஷயங்களை சில சொற்களில் தெளிவாக சொல்ல வேண்டும்.

அது மட்டும் அல்ல, கவிதை எதைச் சொல்ல வருகிறதோ, அதை உறுதியாக சொல்ல வேண்டும் . குழப்பக் கூடாது.

நுட்பமாகச் சொல்ல வேண்டும். உணர்வுகளை, அறத்தை நுட்பமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வளவும் இருந்தால் மட்டும் போதாது, கேட்கவும் இனிமையாக இருக்க வேண்டும்.

பொதுவாக, அது சிறப்பாக இருக்க வேண்டும்.

கவிதை என்றால் அப்படி இருக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_4.html

2 comments:

  1. கவிதை எப்படி இருக்கவேண்டும் என்பதை தானே இந்த கவிதையால்
    சுருக்கமாக,நுணுக்கமாக காட்டிவிட்டார்.

    ReplyDelete
  2. அது சூத்திரத்திற்குரிய இலக்கணம், கவிதைக்கு அல்ல. ஏன் மடை மாற்றுகிறீர்கள்?

    ReplyDelete