Friday, December 20, 2019

நன்னூல் - முதல் நூல் - பாகம் 7

நன்னூல் - முதல் நூல் - பாகம் 7


நூற்கள் மூன்று வகைப்படும் என்று பார்த்தோம். அதில் முதலாவது "முதல் நூல்".

முதல் நூல் என்றால் என்ன?

அதற்கு விடை காண்பதற்கு முன்னால், எதற்காக பொதுவாக நூல் எழுதுகிறார்கள் என்று யோசிப்போம்.

தன் அறிவை காட்டிக் கொள்ள, பணம் சம்பாதிக்க, புகழ் அடைய என்று பல காரணங்கள் இருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு ஆசிரியன் நூலை எழுதுகிறான் என்றால் அவன் வாழ்ந்து வளர்ந்த சூழ்நிலை, அவன் படித்த புத்தகங்கள், அவனைப் பாதித்த நிகழ்வுகள் இவற்றால் உந்தப்பட்டு ஒரு நூலை எழுதுகிறான்.

இவை எதனாலும் பாதிக்கப் படாமல், தான் செய்த வினைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, அதன் பின் தோன்றிய தெள்ளிய அறிவில் இருந்து எழுதுவது முதல் நூல் எனப்படும்.


பாடல்

அவற்றுள் ,வினையி னீங்கி விளங்கிய வறிவின்முனைவன் கண்டது முதனூ லாகும்


பொருள்


அவற்றுள் , = அந்த மூன்று வகையான நூல்களுள்

வினையி னீங்கி = தான் செய்த வினைகளில் இருந்து நீங்கி, விடுபட்டு

விளங்கிய வறிவின் = விளங்கிய அறிவின்

முனைவன் = முயற்சி உடையவன்

கண்டது முதனூ லாகும் = கண்டது முதல் நூலாகும்

நாம்    விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நாம் செய்த வினைகள் நம்மை பற்றி தொடரும்.

அந்த வினைப் பயன்களில் இருந்து விடுபடுவது என்பது எளிய காரியம் அல்ல.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் " என்பார் மணிவாசகப் பெருந்தகை.

வினை ஓய்ந்த பின் பிறக்கும் நூல், முதல் நூல்.

இதற்கு இலக்கணம் செய்த பெரியவர்கள்  சொல்லுகிறார்கள், முதல் நூல் என்பது  இறைவன் , உயிர்களுக்கு அளித்த நூல் என்று.

இறைவனுக்கு ஒப்பானவர்கள் எழுதிய நூல் என்று கொள்ளலாம்.

எனவே தான்,  திருக்குறள் செய்த வள்ளுவரை "தெய்வப் புலவர்" என்கிறார்.

பெரிய புராணம் செய்த சேக்கிழார் பெருமானை "தெய்வச் சேக்கிழார்" என்கிறோம்.

அந்தக் கால நூல்களை பார்த்தால் , அதில் "தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச் செய்த " என்று போட்டிருக்கும்.

அவர்களின் அருள் அந்த நூல் மூலம் வெளிப்பட்டது.

நீங்களும் நானும் எழுதினால் என்ன போடலாம் ?

"...பொருளிச் செய்த " என்று வேண்டுமானால் போடலாம்.

மற்றவர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று யார் நூல் எழுதுகிறார்கள்?

திருக்குறள், கீதை, பெரிய புராணம், தேவாரம், பிரபந்தம் போன்றவை முதல் நூல்கள்.

அவை வெளிப்பட்ட நூல்கள்.  எந்த ஒரு காரணம் பற்றியும் வந்தவை அல்ல.

நாம் செய்த புண்ணியம், நம் தாய் மொழியில் பல முதல் நூல்கள் உள்ளன.

இது வரை படிக்க நேரம் இல்லாவிட்டாலும், இனியாவது நேரம் ஒதுக்கிப் படிக்க முயல்வோம்.

interestingtamilpoems.blogspot.com/2019/12/6_20.html


No comments:

Post a Comment