Tuesday, December 3, 2019

திருக்குறள் - வாய்ச் சொல்

திருக்குறள் - வாய்ச் சொல்


எது சரி,  எது தவறு என்று நாம் குழம்பும் நேரம் வரும்.

"அவளுக்கு என்னதான் வேணும்னே தெரியல. என்ன செஞ்சாலும் ஏதாவது குத்தம் சொல்லிகிட்டே இருக்கா .."

"அவருக்கு என் மேல் அன்பே இல்ல...என்னமோ வாழ்க்கை ஓடுது...என்ன செய்றதுன்னே தெரியல ... "

"இந்த பிள்ளைகள் இப்படி நன்றி இல்லாமல், தவிக்க விட்டு விட்டு போய் விட்டார்களே "

இப்ப என்ன செய்வது என்ற குழப்பம் வரும் நேரங்கள் உண்டு. சிக்கலான சமயத்தில்  எப்படி முடிவு எடுப்பது? யாரைக் கேட்பது ? நமக்கு நாமே சிந்தித்துக் கொண்டிருந்தால் குழப்பம் மேலும் அதிகம் ஆகுமே அன்றி குறையாது.

சரி, யாரிடமாவது என்று யோசனை கேட்கலாம் என்றால், யாரைக் கேட்பது? யார் நமக்கு சரியான வழிக்காட்டுதலை தருவார்கள் என்று நினைப்போம்.

வாழ்வில் சிக்கல் வரும்போது யாரிடம் அறிவுரை கேட்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

நடந்து செல்லும் நிலம் வழுக்கினால், கையில் உள்ள ஊன்று கோல் எப்படி நமக்கு உதவி செய்யுமோ, அது போல ஒழுக்கமுடையார் வாய் சொல் இருக்கும் என்கிறார்.


பாடல்

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றேஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்



பொருள்


இழுக்கல் = வழுக்கும் தன்மையுடைய நிலத்தில்

உடையுழி = செல்லும் போது

ஊற்றுகோல் = ஊன்று கோல் போல்

அற்றே = உள்ளது போன்றது

ஒழுக்கம் உடையார் = ஒழுக்கம் உடையவர்

வாய்ச் சொல் = வாயில் இருந்து பிறக்கும் சொற்கள்

"அறிவுடையவர் வாய் சொல்", "படித்தவர் வாய்ச் சொல் " என்று சொல்லவில்லை. ஒழுக்கம் உடையார் என்று சொல்லை தேர்ந்து எடுத்துப் போடுகிறார்  வள்ளுவர்.  படிப்பறிவு சில சமயம் குறுக்கு வழியில் கூட போகும். அதனால்தான் ஒழுக்கம் உடையவர் வாய்ச் சொல்லை கேட்க்கச் சொன்னார்.

யாரும் வேண்டும் என்றே வழுக்கும் இடத்துக்குப் போக மாட்டார்கள். போகிற இடத்தில்  தரை வழுக்கினால் என்ன செய்வது? எப்படி விறைப்பாக நின்றாலும் வழுக்கும், கீழே விழ நேரிடும். என்ன செய்வது? ஊன்று கோல் இருந்தால் கீழே விழுந்து அடி படாமல் தப்பித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல் அப்படிப்பட்டது. நாம் தவறி விழுவதில் இருந்து நம்மை காக்க உதவும்.

"வாய்ச் சொல்" என்று ஏன் கூறுகிறார்? அவர்களிடம் இருந்து நேரே கேட்க வேண்டும். அவர் சொல்லி, மற்றவர் கேட்டு, அவர் இன்னொருவரிடம் சொல்லி  , இப்படி பல பேரை தாண்டி வந்தால் ஒழுக்கம் உடையவர் சொன்னது  கடைசியில் மாறிப் போய் இருக்கும்.

இன்று உள்ள பல சமயங்களைப் பார்த்தால் தெரியும். யாரோ,எப்போதோ சொன்னதை, அவர்களுடைய சீடர்கள் கேட்டு, அந்த சீடர்கள் அடுத்த தலைமுறை சீடர்களுக்குச் சொல்லி, பின் அவர்கள் மற்றவர்களிடம் சொல்லி , பலப் பல தலை முறைகள் கடந்து அவர்கள் சொன்னது இன்றைய தலைமுறையை வந்து அடைகிறது. முதலில் சொன்னது அப்படியே வந்து சேர்ந்து இருக்குமா?

"ஒழுக்கம் உடையார்". சொல்பவன் எப்படி இருந்தால் என்ன? என்ன சொல்கிறான் என்பது தானே முக்கியம் என்று கேட்கலாம். இல்லை, சொல்பவன் ஒழுக்கமாக  இருந்தால் தான் அவன் சொல்வதை கேட்க வேண்டும் என்கிறார்.  ஒழுக்கம் இல்லாதவன் சொல்வதை கேட்பது பலன் தராது  என்பது பொருள்.

நீங்கள் யார் பேச்சை கேட்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள்  யார் பேச்சை கேட்கிறீர்களோ , அவர்கள் ஒழுக்கம் உள்ளவர்கள்தானா என்று உங்களுக்குத் தெரியுமா ?

சிந்தியுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post.html

4 comments:

  1. அருமையான விளக்கம்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நல்ல குறள் , இனிய விளக்கம். நன்றி.

    ReplyDelete