Friday, November 29, 2019

திருக்குறள் - பல சொல்லக் காமுறுவர்

திருக்குறள் - பல சொல்லக் காமுறுவர் 


சிலருக்கு வள வள  என்று எதையாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும். "எதுக்கு போன் பண்ணினே?" என்று கேட்டால் "ஒண்ணும் இல்லை, சும்மாதான் போன் பண்ணினேன்" என்பார்கள்.

சின்ன விஷயத்தைக் கூட பெரிதாக நீட்டி முழக்கி சொல்லுவார்கள். "என்ன ஆச்சு தெரியுமா நேத்து" என்று ஏதோ மூன்றாம் உலகம் யுத்தம் வந்தது போல கதை சொல்லுவார்கள். ஒன்றும் இருக்காது.

ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

சிந்திக்காமல் பேசுவது. என்ன பேசப் போகிறோம், எப்படி பேசுவது. எப்படி சுருக்கமாக பேசுவது என்று சிந்தித்துப் பின் பேச வேண்டும்.

அப்படி சிந்தித்தாலே, பேச வேண்டிய அவசியமே இருக்காது. "இதில் என்ன இருக்கிறது போய் சொல்ல " என்று பேசாமல் இருந்து விடுவார்கள்.

வள்ளுவர் சொல்கிறார்,

"பெரிதாக நீட்டி பேச ஆசைப் படுவார்கள் யார் என்றால் எதையும் சுருக்கமாக சொல்லத் தெரியாதவர்கள்" என்று

பாடல்

பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்


பொருள்

பலசொல்லக் = பல சொற்களை சொல்ல

காமுறுவர் = ஆசைப் படுவார்கள்

மன்ற = உறுதியாக

மாசு அற்ற = குற்றம் அற்ற

சிலசொல்லல் =சில சொற்களை சொல்லத்

தேற்றா தவர் = தெரியாதவர்கள்



தேறாதவர் என்றால் தெரியாதவர் என்று அர்த்தம். அது என்ன "தேற்றாதவர்"?


மற்றவர்களுக்கு சொல்லி அவர்களை தெளிய வைக்க, அறிய வைக்க முடியாதவர்  என்று பொருள் கொள்ளலாம்.

சில சொற்கள் கூறுகிறேன் பேர்வழி என்று புரியாமல், தவறாக பேசவும் கூடாது.

அதனால் தான் "மாசு அற்ற" என்று கூறுகிறார்.

குற்றமற்ற சில சொற்களில் சொல்லி புரிய வைக்க முடியாதவர்கள் தான் பல சொல் பேச ஆசைப் படுவார்கள்.

அடுத்த முறை பேச ஆரம்பிக்கும் முன், யோசியுங்கள். எப்படி சொல்ல வந்ததை சுருக்கமாக அழகாக சொல்லலாம் என்று.

சொல் வன்மை என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது.

அதில் உள்ள மற்ற குறள்களையும் படித்துப் பாருங்கள். எப்படி பேச வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_29.html

1 comment:

  1. ஏழே பதங்களில் கருத்துக்களை நச்சென்று சொல்லும் ஒவ்வொரு குறளுமே இதற்கு உதாரணம் எனலாம்!

    ReplyDelete