Saturday, November 2, 2019

ஆத்திச் சூடி - மிகைப்பட பேசேல்

ஆத்திச் சூடி - மிகைப்பட பேசேல் 



வாழ்க்கை என்றால் ஏதாவது அசம்பாவிதம், சிக்கல், எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும்.

அப்படி ஏதாவது நிகழ்ந்து விட்டால், ஐயோ, அப்பா என்று அதை பெரிது படுத்தக் கூடாது.

தடங்கல்களும், சறுக்கல்களும் அவ்வப்போது வரும் , போகும்.

சரி சரி என்று எடுத்துக் கொண்டு போக வேண்டும்.

சிலர், சின்ன தலை வலி வந்தால் கூட  ஏதோ உயிர் போவது போல அலட்டிக் கொள்வார்கள்.

சிலர், அடி பட்டு, எலும்பு முறிந்திருந்தால் கூட, பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

சிலர், எதையும் மிகைப் படுத்திக் கூறுவதன் மூலம் தாங்களும் துன்பப் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் ஒரு உணர்ச்சி மிகுதியில் அழுத்தி விடுவார்கள்.

காதலித்தவர் கை விட்டு விட்டால், பரிட்சையில் தோல்வி அடைந்தால், உறவுகளில் சிக்கல் வந்தால், வியாபாரத்தில் நட்டம் வந்தால், போட்ட முதல் சரியானபடி வருமானம் தரவில்லை என்றால்...அதை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம், எப்படி நாம் மற்றவர்களிடம் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது  அதன் பாதிப்பு.

பிரச்சனைகளை ஊதி ஊதி பூதாகரமாக மாற்றி விடக் கூடாது.

"இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா...வாழ்க்கை என்றால் அப்படி இப்படித் தான் இருக்கும் " என்று சொல்லிப் பழக வேண்டும்.

அப்படி சொல்லிப் பழகுவதன் மூலம், பெரிய பிரச்சனை கூட சாதாரணமாய் தெரியும்.

மாறாக, "ஐயோ, எனக்கு இப்படி நிகழ்ந்து விட்டதே " என்று ஒப்பாரி வைத்தால்,  பூதக்  கண்ணாடி மூலம் பார்த்தால் எப்படி சிறிய பொருள் கூட பெரிதாய் தெரியுமோ, அப்படி சின்ன சிக்கல் கூட பெரிதாய் மாறி விடும்.


இராஜ்யமே போனால் கூட, "அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்தது" போல இராமன் சிரித்துக் கொண்டே சென்றான். வானுக்கும் பூமிக்கும் குதிக்கவில்லை.

எனவே தான் ஒளவை சொன்னாள்

"மிகைப்பட  பேசேல்"

என்று.

ரொம்ப அலட்டிக் கொள்ளக் கூடாது.

சாதாரணமாக பேசிப் பழக வேண்டும்.

அப்படிச் செய்தால், மனம் பதட்டம் அடையாது, நிதானம் வரும், பிரச்சனைகளை  சரி செய்யும் பக்குவம் வரும்.

பழகுங்கள்.

உங்களை சுற்றி உள்ளவர்களிடமும் சொல்லுங்கள். அவர்கள் மிகைப்பட  பேசி, உங்கள் இரத்த அழுத்தத்தை ஏற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டு வார்த்தையில் வாழ்க்கை நெறியை சொல்லி விட்டுப் போகிறாள் அவள்.

ஒன்றாம் வகுப்பில் படித்த ஆத்திச் சூடி !

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_2.html

1 comment:

  1. அருமையான பதிவு. அவ்வையின் 'மிகைப்பட பேசேல்' என்பது ரொம்ப தெரிந்ததுதான்.இருப்பினும் உங்கள் விளக்கத்தின் பிறகு அதன் அவசியத்தை மேலும் நன்றாக உணர முடிகிறது.நன்றி.

    ReplyDelete