Friday, November 15, 2019

அபிராமி அந்தாதி - அதிசயமான வடிவுடையாள்

அபிராமி அந்தாதி - அதிசயமான வடிவுடையாள் 


இங்கே யாரும் தனித்து ஆணும் இல்லை, தனித்து பெண்ணும் இல்லை.

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான்.

ஒரு ஆணும் (தந்தை) பெண்ணும் (தாய்) கலந்த கலப்பில் தான் நாம் எல்லாம் பிறக்கிறோம். தாயின் குணம் கொஞ்சம், தந்தையின் குணம் கொஞ்சம் இரண்டும் கலந்த கலவை நாம். நமக்குள்ளே ஆணும் உண்டு , பெண்ணும் உண்டு.

என்ன, புற உலகம், ஆணிடம் உள்ள பெண் குணத்தையும்  , பெண்ணிடம் உள்ள ஆண் குணத்தையும் மழுங்க அடித்து விடுகிறது. ஒரு சிறு பையன் அழுதால் , "சீ, என்னடா, பொம்பள புள்ளை மாதிரி அழுது கொண்டு" என்று அழுவது பெண்ணின் குணம், ஆண் அழக் கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்கிறது இந்த சமுதாயம். "என்ன ஆம்பிள்ளை பிள்ளை மாதிரி திங்கு திங்கு னு நடக்குற...மெல்ல நட " என்று பெண்ணுக்குச் சொல்லப் படுகிறது.

அபிராமியை ஒரு பெண்ணாகவே பார்த்த பட்டர், அவளுக்குள்ளும் இருக்கும் ஆணை காண்கிறார்.

ஆணும் பெண்ணும் கலந்த அர்த்த நாரியாக கண்டு அதிசயப் படுகிறார்.

பெண்ணை கட்டிக் கொடுத்து விட்டு, கொஞ்ச நாள் கழித்து அவள் வீட்டுக்குப் போகும் பெற்றோர் அதிசயப் படுவார்கள் "நம்ம வீட்டுல அப்படி இருந்த பெண்ணா, இங்க இப்படி பொறுப்பா இருக்கிறாள், வீட்டை நிர்வாகம் பண்ணுகிறாள், கணவனை , பிள்ளைகளை, வீட்டை, வெளி உலகை, அலுவலகத்தை எப்படி நிர்வாகம் பண்ணுகிறாள் " என்று வியப்பார்கள்.

பெண் அதியசமானவள் தான்.

உலகத்தையெல்லாம் தன் காம வலையில் வீழ்த்துபவன் மன்மதன். அவனை கண்ணால் எரித்தவர் சிவ பெருமான். அப்படி காமத்தை வென்ற சிவனை மயக்கி அவன் உடலில் ஒரு பாகமான அபிராமியே, நீ அதிசயமானவள் என்கிறார்.

பாடல்

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே



பொருள்

அதிசயம் ஆன வடிவுடையாள்  = அதிசயமான வடிவம் உடையவள்

அரவிந்தம் எல்லாம் = மலர்கள் எல்லாம்

துதிசய ஆனன = துதிசெய்யும்

சுந்தரவல்லி = அழகிய வல்லிக் கொடி போன்றவள்

துணை இரதி = இரதி தேவியின்

பதி = கணவன் (மன்மதன் )

சயமானது = அவன் இது வரை  பெற்ற வெற்றிகள் எல்லாம்

அபசயமாக = தோல்வி அடையும்படி

முன் = முன்பு

பார்த்தவர்தம் = நெற்றிக்கண்ணால் பார்த்தவர், எரித்தவர்

மதி = அவருடைய புத்தியை , மனதை

சயமாக அன்றோ = வெற்றி பெற்று அல்லவா

வாம பாகத்தை = இடப் பாகத்தை

வவ்வியதே = அடைந்ததே


அது ஒரு புறம் இருக்கட்டும்.

அவனுக்கு அவள் மேல் அப்படி ஒரு காதல். அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் ஆயிரம் மின்னல் ஒன்றாக இறங்கியது போன்ற ஒரு சிலிர்ப்பு. அவளை தூரத்தில் பார்த்தாலே அவனுக்குள் ஆனந்த கங்கை கரை புரண்டு ஓடும்.

அவனுடைய  கனவும், நினைவும் அவளாகவே இருந்தாள்.

காலம் செய்த கோலம், அவர்கள் பிரிந்து போனார்கள். கால நீரோட்டம் அவர்களை  வேறு வேறு திசையில் கொண்டு சென்றது.

என்றேனும் அவளை காணலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தான்.

ஒரு நாள், கணவனுடன் அவள் வந்தாள்.

அவள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு சந்தோஷம்.

எப்படி அவள் இன்னொருவருக்கு மனைவியானாள் ?

அவர்களை ஒன்றாகப் பார்ப்பது அவனுக்கு பெரிய அதிசயமாக இருக்கிறது.

நான் பார்த்த பெண்ணா இவள்? அந்த சின்னப் பெண்ணா இவள் என்று அதிசயமாக பார்க்கிறான்.

அதிசயமான வடிவு உடையாள்....

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_78.html

1 comment:

  1. ஆச்சரியமான கற்பனை கொண்ட முத்தாய்ப்பு இந்த உரையில்!

    ReplyDelete