Friday, November 15, 2019

திருக்குறள் - பிச்சை எடுப்பதும் ஒரு பெருமைதான்

திருக்குறள் - பிச்சை எடுப்பதும்  ஒரு பெருமைதான் 


என்னது? பிச்சை எடுப்பது ஒரு பெருமையா? ஒருத்தரிடம் போய், எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பதில் என்ன பெருமை இருக்க முடியும்?  அது ஒருவனின் இயலாமையை அல்லவா காட்டுகிறது?

உண்மைதான்.

ஆனால், யாரிடம் சென்று யோசிக்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

"மறைத்து வைக்காமல், நம் தேவை அறிந்து, நமக்கு உதவி செய்வது அவரின் கடமை என்று நினைத்து, நாம் கேட்காமலேயே உதவி செய்பவரிடம் சென்று உதவி கேட்டு நிற்பதும் ஒரு பெருமையான விஷயம்தான்" என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏர் உடைத்து.


பொருள்

கரப்பிலா = கரத்தல் என்றால் மறைத்தல் என்று பொருள். கரப்பிலா என்றால் மறைத்து வைக்காமல்.

நெஞ்சின்  = மனம் உடையவர்கள்

கடன்அறிவார் = தங்களுடைய கடமையை அறிந்தவர்கள்

முன்நின்று = அவர்கள் முன் சென்று நின்று

இரப்பும் = யாசிப்பதும்

ஓர் = ஒரு

ஏர் உடைத்து. = அழகு, பெருமை உடையது


கடன் அறிவார் என்றால் நமக்கு உதவுவது அவர்கள் கடன் என்று அறிந்தவர்கள்.  யார் அப்படி இருப்பார்கள்? மிக நெருங்கிய நண்பர், நமக்கு மிக மிக வேண்டியவர்கள் இருக்கலாம். அல்லது நாம் யாருக்கோ முன்பு பெரிய உதவி செய்து இருக்க வேண்டும்.  நமக்கு இப்போது உதவி செய்வதை தங்கள் கடன் என்று  அவர்கள் நினைக்கலாம்.  அப்படி உதவி செய்து வையுங்கள்.

"உங்கப்பா அந்தக் காலத்தில எங்களுக்கு எவ்வளவோ செய்திருக்காருப்பா...உனக்கு செய்யாமல்  வேற யாருக்கு செய்யப் போகிறேன் "  என்று மற்றவர்கள் நம் பிள்ளைகளை பார்த்து சொல்லும் அளவுக்கு   உதவி செய்து வைத்திருக்க வேண்டும்.

"முன் நின்று" என்று சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதாவது, நாம் உதவி என்று கேட்க  வேண்டாம். முன் சென்று நின்றாலே போதும். அவர்கள் அறிந்து கொள்வார்கள்.  உதவி செய்வார்கள்.

அப்படிப் பட்டவர்கள் முன் சென்று உதவி கேட்டு நிற்பதே ஒரு பெருமை என்கிறார்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்படி நீங்கள் யாருக்காவது கடன் பட்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு உதவி செய்வது  உங்கள் கடன் என்று நீங்கள் யாரையாவது மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

நினைத்துப் பாருங்கள்.

உதவி பெற்றிருந்தால், அவர்கள் கேட்காமலேயே, அவர்களுக்கு வேண்டிய போது திரும்பிச் செய்ய வேண்டும்.

ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறள். ஒப்புரவு என்றால் சமுதாயத்தோடு  ஒன்றி வாழ்தல்.

இன்னும் 9 குறள் இருக்கிறது அந்த அதிகாரத்தில். படித்துப் பாருங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_15.html


1 comment:

  1. தானாகவோ அல்லது பிரதி உபகாரமாகவோ நாம் கேட்காதிருக்கும் போதே குறிப்பறிந்து உதவுது சரி தான்.நாமும் அவ்வாறு செய்ய வேண்டும்.ஆனால் ஒரு சந்தேகம்..யாசிப்பவனுக்கு என்ன பெருமை?

    ReplyDelete