Wednesday, November 6, 2019

கம்ப இராமாயணம் - யார் என விளம்புகேன் ?

கம்ப இராமாயணம் - யார் என விளம்புகேன் ?


இன்று வணிக மேலாண்மை (business management ) யில் செய்தித் தொடர்பு (communication) என்பது பெரிய விஷயமாக பேசப் படுகிறது. எப்படி பேச வேண்டும், எப்படி பேசினால் காரியம் நடக்கும், பொருளை விற்க, வாங்க, என்று எங்கு பார்த்தாலும் செய்தித் தொடர்புதான் பெரிதாகப் பேசப் படுகிறது. மேலும், டிவி, கணனி என்று வந்த பின், செய்திகளின் பெருக்கம் அதிகமாகி விட்டது.

வெளி உலகை விடுவோம். வீட்டுக்கு வருவோம். கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், உடன் பிறந்தவர்கள் என்று எல்லோரிடமும் எப்படி பேசுவது என்று ஒரு முறை இருக்கிறது அல்லவா? அது தெரியாமல் எதையோ, எப்படியோ பேசி உறவுகளில் சிக்கல்களை உண்டாக்கி விடுகிறோம்.

தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது, நம்மை அறியாமலேயே நாம் பேசுவது, எழுதுவது என்பது பண் படும். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல, கம்பன், இளங்கோ, வள்ளுவர் போன்றவர்களை படிக்கும் போது அவர்களின் சொல்லாற்றல் நம்மையும் பற்றிக் கொள்ளும்.

வீட்டுக்கு ஒரு பெரியவர் வருகிறார். வீட்டில் உள்ள சிறுவனுக்கு அவர் யார் என்று தெரியாது. "நீங்க யார்" என்று கேட்டால் மரியாதைக் குறைவு. கேட்காமலும் இருக்க முடியாது. என்ன செய்வது ? எப்படி பேசுவது?

இராம இலக்குவனர்களை சந்தித்தபின் , அனுமன் அந்த நிலையில் இருக்கிறான்.

அவர்கள் இருவரும் பெரிய ஆள் போலத் தெரிகின்றது. ஆனால், நீங்கள் யார் என்று கேட்டால் மரியாதைக் குறைவாகப் போய் விடலாம். எனவே, அனுமன் கேட்கிறான்

"எங்கள் அரசர் கேட்டால் உங்களை யார் என்று சொல்லட்டும் . நீங்கள் எப்படி சொல்கிறீர்களோ , அப்படியே அவரிடம் போய் சொல்கிறேன் " என்று.

பாடல்


'யார் என விளம்புகேன் நான்,
     எம் குலத் தலைவற்கு, உம்மை?
வீர! நீர் பணித்திர்! ' என்றான்,
     மெய்ம்மையின் வேலி போல்வான்;
வார்கழல் இளைய வீரன்,
     மரபுளி, வாய்மை யாதும்
சோர்வு இலன், நிலைமை
     எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்:


பொருள்


'யார் என  = நீங்கள் யார் என்று

விளம்புகேன் நான் = சொல்லுவேன் நான்

எம் குலத் தலைவற்கு, = எங்கள் குலத் தலைவருக்கு

உம்மை? = உங்களை

வீர! = வீரர்களே

நீர் பணித்திர்! ' என்றான், = நீங்களே சொல்லுங்கள் என்றான்

மெய்ம்மையின் வேலி போல்வான் = உண்மைக்கு வேலி போன்றவன்

வார்கழல் இளைய வீரன் = வீர கழல்களை அணிந்த இளைய வீரன் (இலக்குவன்)

மரபுளி = மரபின் படி

வாய்மை யாதும் = உண்மை அனைத்தையும்

சோர்வு இலன் = சோர்வு இல்லாமல்

நிலைமை எல்லாம் = நிலைமை அனைத்தையும்

தெரிவுறச் சொல்லலுற்றான்: = தெரிந்து கொள்ள சொல்ல ஆரம்பித்தான்

என்ன ஒரு அழகு ! என்ன ஒரு நளினம் !

சொல்லின் செல்வன் என்று இராமனால் பாராட்டப் பட்டவன் அல்லவா?

நாமும் இது போல பேசிப் பழக வேண்டாமா?


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_6.html

1 comment:

  1. அபாரம். அனுமனின் வாக் சாதுர்யம் யாவரும் அறிந்ததே. இதமாக பேச தெரிந்து கொள்வது அவசியம்.

    ReplyDelete