Friday, January 10, 2020

திருப்புகழ் - அறநாலைப் புகல்வோனே

திருப்புகழ் - அறநாலைப் புகல்வோனே 


மரணத்தை கண்டு அஞ்சாதவர் யார். வாழ்க்கை எவ்வளவுதான் துன்பம் நிறைந்ததாக இருந்தாலும், சாவதற்கு யாருக்கும் மனம் வருவதில்லை. சாகாமல் இருக்க வழி இருக்கிறதா என்றால் இருக்கிறது.

சாகாமல் இருக்க முடியுமா ? முடியும்.

பிறக்காமல் இருந்தால்.

பிறந்தால்தான் சாக முடியும். இறவா வழி வேண்டும் என்றால், பிறவாமல் இருக்க வேண்டும்.

பிறந்தாகி விட்டது. பிறந்த நாள் தொட்டு இறுதி நாள் வரை, அழியக் கூடிய பொருள்களையே தேடி அலைகிறோம். பொம்மை, பென்சில், சாக்லேட், பூ, சைக்கிள், ரிப்பன், கண் மை, சட்டை, பாவாடை,  எதிர் பாலினர்மேல் ஈர்ப்பு, செல்வம், பிள்ளைகள் என்று அனைத்தும் அழியக் கூடியவை. அவை பின்னால் அலைகிறோம். பின் இறுதி நாளில், என்னத்த செய்தோம் இத்தனை நாள் ...வாழ் நாள் எல்லாம் அலைந்து கண்டது என்ன என்று பச்சாதாபம் வருகிறது. அழியாத பொருள் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அருணகிரிநாதர் உருகுகிறார்....

"இறவாமல், பிறவாமல் என்னை ஆட்கொள் குருநாதா. என்றும் நிலைத்து நிற்கும் பெருவாழ்வை எனக்கு அருள்வாய். நான்கு விதமான அறத்தை சொல்லுபவனே, அவிநாசியில் காட்சி தரும் பெருமாளே "

என்று.


பாடல்

இறவாமற் பிறவாமல் எனையாள்சற்  குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத்  தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற்  குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே.



பொருள்

இறவாமற் = இறவாமல்

பிறவாமல் = பிறவாமல்

எனையாள் = என்னை ஆட்கொண்ட

சற்குருவாகிப் = சத்குருவாகி

பிறவாகித்  = மற்றவை யாவும் ஆகி

திரமான  = ஸ்திரமான, நிலையான

பெருவாழ்வைத் = பெரு வாழ்வைத்

தருவாயே = தருவாயே

குறமாதைப் புணர்வோனே = குறவள்ளியோடு சேர்பவனே

குகனே = குகனே

சொற் = பெருமை வாய்ந்த

குமரேசா = குமரேசா

அறநாலைப்  = நான்கு அறங்களை

புகல்வோனே  = போதிப்பவனே

அவிநாசிப் = அவிநாசியில் வீற்றிருக்கும்

பெருமாளே. = பெருமாளே

அது என்ன நான்கு அறம் ?

அறம் , பொருள், இன்பம் , வீடு என்ற நான்கையும் அறமாக கொள்கிறார் அருணகிரி நாதர்.


நாலுதரம் வாசித்தால் மனதுக்குள் ஒட்டிக் கொள்ளும் பாடல்.

திரமான பெருவாழ்வு என்ன என்று சிந்திக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_10.html

Thursday, January 9, 2020

கம்ப இராமாயணம் - கிண்டல், நக்கல், நையாண்டி

கம்ப இராமாயணம் - கிண்டல், நக்கல், நையாண்டி 


கம்ப இராமாயணம் போன்ற இலக்கியங்களை, ஏதோ அதில் உள்ள கதைக்காக படிக்காமல்,அதில் உள்ள வாழ்வியல் பாடங்களுக்காக படித்ததால் நமது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

என்னைக் கேட்டால், கம்ப இராமாயணத்தின் மிகப் பெரிய பாடம், எளியவர்களை ஏளனம் செய்யாதே என்ற பாடம் தான்.


மற்றவர்களை கிண்டல்  பண்ணுவது,நக்கல், நையாண்டி போன்றவை செய்பவர்களுக்கு வேண்டுமானால்  அது ஒரு விளையாட்டாக, பொழுது போக்காக இருக்கலாம். யாரை நக்கல் பண்ணுகிறார்களோ, பெரும்பாலான சமயங்களில், கிண்டல் பண்ணப்பட்டவரின் மனம் புண் படும் என்பதே உண்மை.

ஒருவரின் உடல்வாகைப் பற்றி, அவர்கள் பேச்சு பற்றி, அவர்கள் செய்த ஏதோ ஒரு தவறு பற்றி கிண்டல் பண்ணுவது எளிது. அதுவும் பலர் முன்னால், அப்படிச் செய்தால், நிச்சயம் அவர்கள் மனம் புண் படும்.

மனைவியை மற்றவர்கள் முன் விமர்சினம் செய்வது, வேலையாட்களை எள்ளி நகையாடுவது, கீழே வேலை பார்ப்பவர்களை கிண்டல் பண்ணுவது போன்றவை மற்றவர்களுக்கு வருத்தம் தரும் செயல் என்று நாம் உணர வேண்டும்.  என் மனைவியை கிண்டல் பண்ண எனக்கு உரிமை இல்லையா என்று மார்தட்டக் கூடாது. இல்லை. அவளின் மனதை புண் படுத்த அதிகாரம் இல்லைதான்.

இராமன், இராசா வீட்டு கன்னுக்குட்டி. அரண்மனையில் ஆடிப் பாடி சுதந்திரமாக திரிந்திருப்பான். அங்கே, கூனி அங்கும் இங்கும் செல்வதைப் பார்த்து இருப்பான். அம்பில் மண் உருண்டையை வைத்து, அவள் கூன் மேல் அடித்து விளையாடி இருக்கிறான். அவனுக்கு அது ஒரு விளையாட்டு. [பொழுது போக்கு. அவள் முதுகில் அடித்து விட்டு,கை கொட்டிச் சிரித்து இருப்பான்.

விளையாட்டுப் பிள்ளைதானே. அதுவும் மூத்த இளவரசன். யாரும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள்.

ஆனால், அந்த வலி கூனிக்கு இருந்து கொண்டே இருந்தது.

அவள் சமயம் பார்த்து திருப்பி அடித்தாள். அந்த வலியை இராமானாலும் தாங்க முடியவில்லை.  பின்னால், சுக்ரீவனிடம் சொல்லி அங்கலாய்க்கிறான்.

கூனி அடித்த அடி எப்படி இருந்தது ?

தயரதன் இறந்தான், இராமன் கானகம் போனான், இலக்குவன் மனவியைப் பிரிந்து கானகம் போனான்.  பரதன் மனவியைப் பிரிந்து 14 வருடம் அரசை விட்டு விட்டு , நந்திக் கிரமாத்தில் தவம் கிடந்தான். சீதை, இராவணனிடம் சிறை பட்டு  துன்பம் அனுபவித்தாள்.

இராஜ குலத்தையே திருப்பி போட்டது, கூனியின் கோபம்.

இராமன், கூனியை அம்பால் அடித்த போது, யாராவது அவனுக்குச் சொல்லி இருக்க வேண்டும்.  "வயதானவர்களை, உடல் ஊனம் உற்றவர்களை இப்படிச் செய்யக் கூடாது. போ, போய் மன்னிப்பு கேள்" என்று சொல்லி இருக்க வேண்டும்.

அங்கே திருத்தாமல் விட்ட சின்ன தப்பு, எப்படி வளர்ந்து என்ன பாடு படுத்தியது? இராமன் நினைத்து இருப்பானா, இந்த கூனி எனக்கு வரும் அரசையே தடுத்து நிறுத்தி விடுவாள் என்று. இவளால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக இருந்திருப்பான்.

இப்பவும், வீட்டில் பிள்ளைகள் தவறு செய்வார்கள். மரியாதைக் குறைவாக பேசுவார்கள், மட்டு மரியாதை இல்லாமல் பேசுவார்கள், எளியவர்களை ஏளனம் செய்வார்கள். "ஆஹா, என் பிள்ளை எப்படி பேசுகிறான் பார்...அவங்க அப்பாவை  அவன் குரங்குனு தான் சொல்லுவான், அவருக்கு அறிவே இல்லேனு  அவர் முன்னாலேயே சொல்லுவான்" என்று பிள்ளையின் சாமர்த்தியத்தை  பெருமிதப் படும் தாய்மார்கள், இராமனை நினைக்க வேண்டும்.

அப்பேற்பட்ட இராமனே  அந்த பாடுபட்டான் என்றால், நம் பிள்ளை என்ன பாடு படுவானோ என்று பதற வேண்டும். பிள்ளைகள் தவறு செய்தால் உடனே அதை  திருத்த வேண்டும். மாறாக, "அடடா, வேலைக்காரியின் பிள்ளையை  விட்டான் பாரு ஒரு அடி" என்று சொல்லி மகிழக் கூடாது.

அரண்மைனையில் ஒரு வயதான கிழவிக்கு செய்த சின்ன தீங்கே இவ்வளவு பெரிதாக  முடியும் என்றால், வீட்டில் கணவனை/மனைவியை/ பிள்ளைகளை/பெற்றோரை/ மாமனார்/மாமியாரை/ நண்பர்களை என்று யாரையுமே உதாசீனம் செய்யக் கூடாது.

யாருடைய அறியாமையையோ, இயலாமையையோ கண்டு ஏளனம் செய்யக் கூடாது.

பாடல்

தொண்டை வாய்க் கேகயன்
    தோகை கோயில் மேல்
மண்டினாள், வெகுளியின்
    மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன்
    பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன்
    உள்ளத்து உள்ளுவாள்.


பொருள்


தொண்டை = கோவை பழத்தைப் போல சிவந்த

வாய்க் = இதழ்களை உடைய

கேகயன்  தோகை  = கேகய மன்னன் மகள் (கைகேயி)

கோயில் மேல் = இருக்கும் அரண்மனைக்கு

மண்டினாள் = வந்து சேர்ந்தாள் (யார்? கூனி)

வெகுளியின் = கோபத்தால்

மடித்த வாயினாள் = உதட்தை கடித்துக் கொண்டு

பண்டை நாள் = முன்பு ஒரு நாள்

இராகவன் = இராமன்

பாணி = கை. பாணி என்றால் கை. பாணி கிரஹணம் என்றால் கையைப் பிடித்தல். சப்பாணி என்றால், சப் சப் என்று கையால் தாளம் போடுதல்

வில் உமிழ் = வில் உமிழ்ந்த

உண்டை = மண் உருண்டை

உண்டதனைத்  = தன் மேல் பட்டு வலி உண்டாக்கியதை

தன் = தன்னுடைய

உள்ளத்து = மனதில்

உள்ளுவாள். = நினைப்பாள்

இராமன், பாடம் படித்தான் இல்லை. பின்னாளில், சூர்பனகையிடமும் கொஞ்சம்  நக்கலும் நையாண்டியுமாக பேசி இருக்கிறான். அது அவனைப் புரட்டிப் போட்டது.

யாரையும் மனம் புண் படும்படி பேசவோ, செய்யவோ கூடாது.

வார்த்தைகளை பண் படுத்த படிக்க வேண்டும்.

மரியாதை, இனிமை, அடக்கம் இவற்றை எப்போதும் கை கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.

நல்ல பாடம் தானே?


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_9.html

Tuesday, January 7, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம் 



இன்பம் வருதோ இல்லையோ, துன்பம் வராமல் இருந்தால் போதும் என்று தானே எல்லோரும் நினைப்பார்கள். பல கோடி சொத்து வராட்டாலும் பரவாயில்லை, கையில இருக்குற காசும் பறி போய்விடக் கூடாது என்பதில்தான் எல்லோரும் கவனமாய் இருப்பார்கள்.

பணம் இல்லாமையால் வரும் துன்பம், நோய், உறவுகளில் சிக்கல், எதிர்காலம் பற்றிய பயத்தால் வரும் துன்பம், பிள்ளைகளுக்கு ஒன்றுரம் ஆகி விடக் கூடாதே என்ற பயம்...எல்லாம் விட்டு,கடைசியில் நரகத்துக்குப் போவோமோ என்ற பயம். நரகமும் ஒரு கெடுதல் தானே.

துன்பம் பல வழிகளில் வரும். கணவன்/மனைவியினால், பிள்ளைகளால், பெற்றோர்களால், அரசாங்கத்தால், உயர் அதிகாரிகளால், நாட்டின் பொருளாதார நிலமையால், சுற்றுப் புற சூழ்நிலைகளால்...இப்படி பல இடங்களில் இருந்து துன்பம் வருகிறது.

இம்மையிலும், மறுமையிலும் வரும் துன்பங்களில் இருந்து விடுபட ஒரே ஒரு எளிய வழியைச் சொல்கிறார் நம்மாழவார்.

"கேசவா" என்று சொன்னால் போதும். எல்லா இடர்களும் விலகும். கேசவா என்று சொல்லிக் கொண்டே திருவனந்தபுரம் ஒரு நடை போய் வாருங்கள் என்கிறார்.


பாடல்


கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே.


பொருள்


கெடுமிட ராயவெல்லாம்  = கெடும் + இடர் + ஆன + எல்லாம். இதை கொஞ்சம் மாற்றி போடுவோம். இடர் ஆன எல்லாம் கெடும். அனைத்து துன்பங்களும் கெட்டுப் போகும். விலகிப் போய் விடும்.


கேசவா வெள்ள  = கேசவா என்று சொல்ல

நாளும் = ஒவ்வொரு நாளும்

கொடுவினை = கொடிய வினை செய்யும்

செய்யும் = செய்யும்

கூற்றின் = எம தர்மனின்

தமர்களும் = கூட்டாளிகளும்

குறுககில்லார் = குறுக்கே வர மாட்டார்கள்

விடமுடை = விஷம் உள்ள

யரவில் = அரவில் , பாம்பில்

பள்ளி விரும்பினான் = பள்ளி கொள்ள விரும்பிய

சுரும்பலற்றும் = சுரும்பு + அலற்றும். சுரும்பு என்றால் வண்டு. வண்டுகள் ஆர்ப்பாராம் செய்யும் ரீங்காரமிடும்

தடமுடை வயல் = தடத்தை உடைய வயல்கள் நிறைந்த

அனந்தபுரநகரிப் = திரு அனந்தபுரம்  என்ற நகரம்

புகுதுமின்றே. = புகுத்தும் + இன்றே .இன்னிக்கே போய் வாருங்கள்


108 திவ்ய தேசங்களில் ஒன்று.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_7.html



Monday, January 6, 2020

பட்டினத்தார் - தீங்குகள்

பட்டினத்தார் - தீங்குகள் 


நாம யாருக்கு என்ன தீங்கு செய்கிறோம்?  யார் சொத்தையும் களவாடுகிறோமா? அல்லது பொய் சொல்லி பணம் சம்பாதிக்கிறோமா? கொலை, களவு, நம்பிக்கை துரோகம் என்று செய்கிறோமா? நாம உண்டு நம்ம வேலை உண்டு என்று இருக்கிறோம். இதில் தீவினை எங்கிருந்து வருகிறது. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத போது நமக்கு ஏன் துன்பம் வருகிறது?

தவறு, தீமை என்று தெரியாமலேயே பல தீமைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். தவறு என்று தெரிந்தால் திருத்திக் கொள்ளலாம். தெரியாவிட்டால்? அதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்போம் அல்லவா?

அது என்ன தெரியாத தவறு?

பட்டினத்தார், பட்டியல் தருகிறார்.

சொல்லால் வரும் குற்றம்.  யாரையும் மனம் நோக்கும் படி பேசுவது, மற்றவர்களை ஏளனமாக பேசுவது, கோபித்து பேசுவது, உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவது என்று இப்படி சொல்லால் பல குற்றங்களை செய்து கொண்டு இருக்கிறோம்.

சிந்தையால் வரும் குற்றம்.  பொறாமை. பொருந்தா காம சிந்தனை. மற்றவனுக்கு தீமை வர வேண்டும் என்று நினைப்பது. இப்படி சிந்தியால் பல குற்றங்கள் செய்கிறோம்.

பார்வையால் வரும் குற்றங்கள். ஒருவரை பார்வையால் நோகடிக்க முடியும்.  பசி என்று வரும் பிச்சைக்காரனை நாம் பார்க்கும் பார்வை இருக்கிறதே. மாற்றான் மனைவி மேல் பார்க்கும் பார்வை. "யார் கண்ணோ பட்டிருக்கும். சுத்தி போட வேண்டும்" என்று சொல்லுவார்கள். அது  பார்வையால் வரும் குற்றம்.

இதெல்லாம் கூட நமக்குத் தெரியும்.  கேடு என்று தெரியும். இருந்தாலும், பெரிய குற்றம் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்ததாக ஒரு பெரிய குற்றத்தை சொல்கிறார் பட்டினத்தார். இதுவரை கேட்டிராத குற்றம்.

"நல்ல நூல்களை படிக்காமல்,மற்றவற்றை படித்த குற்றம்" என்று புதிதாக ஒரு குற்றத்தைச் சொல்கிறார்.

யோசித்துப் பார்ப்போம். நல்லன அல்லாத நூல்கள் எத்தனை நாம் படிக்கிறோம். இங்கே நூல்கள் என்று சொல்லும் போது சினிமா, டிவி சீரியல், youtube videos , bloggukal , என்று அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நூல் , எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

எத்தனை ஆயிரம் மணிகளை நாம் செலவழித்து இருப்போம் இந்த நல்லன அல்லாதவற்றை  அறிந்து கொள்ள.

நல்லன அல்லாதவற்றை படிப்பது எப்படி குற்றம் ஆகும்? ஏதோ பொழுது போகாமல்  வாசிக்கிறதுதான், பாக்குறதுதான். அது ஒரு குற்றமா? என்றால் குற்றம் தான்.

நம் அறிவுக்குள், மனதுக்குள் எது போகிறதோ அது நம்மை மாற்றுகிறது.

நம் எண்ணங்களை, செயல்களை , நம் வார்த்தைகளை அவை மாற்றுகின்றன.

இராமாயணத்தில், இராமனுக்கு அரசு இல்லை என்று சொன்னவுடன் இலக்குவன் கொதித்து எழுந்து  எல்லோரையும்   அழித்து விடுகிறேன் என்று புறப்படுகிறான்.  "விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி " என்றான்.

அப்போது இராமன் சொல்லுவான் "மறை சொன்ன வாயால், இப்படி கண்டதையும்   பேசலாமா" என்று. வேதம் படித்தால் நல்ல சொல் தான் வரும் என்பது இராமனின்  முடிவு.

ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், 'ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ

நல்லன அல்லாததை படிப்பது பெரிய குற்றம். அது மனதை நல்லன அல்லாதவற்றை சிந்திக்க வைக்கும். சிந்தனை செயலாகும்.

பாடல்


சொல்லால் வருங்குற்றஞ் சிந்தையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுஞ் தீங்குக ளாயவுமற்று
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.


பொருள்


சொல்லால் வருங்குற்றம் = சொல்லால் வரும் குற்றம்

சிந்தையால்  = மனதால்

வருந்தோடஞ் செய்த = வருந்தி ஓடச் செய்த

பொல்லாத தீவினை  = பொல்லாத தீவினை

பார்வையிற் = பார்வையில்

பாவங்கள் = (செய்த ) பாவங்கள்

புண்ணியநூல் = புண்ணியம் தரும் நல்ல நூல்களை

அல்லாத = அவை அல்லாத

கேள்வியைக் = அறிவை

கேட்டிடுஞ் தீங்குகள் = கேட்டிடும் அல்லது படித்திடும் தீங்குகள்

யாவுமற்று = யாவும் விட்டு

எல்லாப் பிழையும் = எல்லா பிழையும்

பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே. = பொறுத்து அருள்வாய் கச்சி (காஞ்சீபுரம்) ஏகம்பனே


"எந்தெந்த குப்பைகளை எல்லாம் படித்தேனோ, எந்தெந்த குப்பைகளை எல்லாம் கேட்டேனோ, அந்த பிழை எல்லாம் பொறுத்து எனக்கு அருள் செய்வாய்"  என்று வேண்டுகிறார்.

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற ஒரே ஒரு வாசகத்தைப்  படித்து விட்டு, அனைத்தும் துறந்து  தெருவில் இறங்கினார் பட்டினத்தார். அதற்கப்புறம் ஒன்றும் படிக்கவில்லை.

நாமோ?

இன்னமும் விடாமல் படித்துக் கொண்டிருக்கிறோம், டிவி, whatsaap , youtube , facebook  என்று ஒன்று விடாமல் அனைத்தையும் மூளைக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

"எல்லா பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!"


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_6.html


Sunday, January 5, 2020

கம்ப இராமாயணம் - இரணியன்

கம்ப இராமாயணம் - இரணியன் 


வலிமை வர வர மனிதனுக்குள் ஆணவம் ஏறுகிறது. ஆணவத்தின் உச்சம், நான் தான் எல்லாம் என்று சொல்ல வைக்கிறது.

என்னால் தான் இந்த நிறுவனம் நடக்கிறது, என்னால்தான் இந்த குடும்பம் நடக்கிறது, இந்த நாடு என்னால் நடத்தப் படுகிறது என்று மனிதன் நினைக்கத் தலைப்படுகிறான்.


ஒரு குடும்பத் தலைவி நினைக்கலாம், "நான் மட்டும் இல்லை என்றால் இந்த வீடு என்ன கதி ஆகும்...நான் இருக்கேனா ஒழுங்கா எல்லாம் நடக்குதோ" என்று.

அளவு மாறுபடலாம், நிகழ்வு ஒன்றுதான்.

என்னால் நிகழ்கிறது என்பது ஒரு அரக்க குணம்.

இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். மிகப் பெரிய பலசாலி.  மிகப் பெரிய என்றால் எவ்வளவு பெரிய தெரியுமா? கம்பன் காட்டுகிறான்.

எட்டு திக்குகளையும் காவல் காக்கும் யானைகள் இருக்கின்றன அல்லவா? அதில் இரண்டு யானைகளை இரண்டு கையால் எடுத்து, ஒன்றோடு ஒன்று அப்பளம் மாதிரி நொறுக்குவானாம்.  பெரிய கடல் இருக்கிறது அல்லவா? அது அவனுக்கு கணுக்கால் மட்டும் வருமா. அப்படி என்றால் முழுக்  காலும் எவ்வளவு பெரிதாக இருக்கும், அவ்வளவு பெரிய கால் என்றால் ஆள் எப்படி இருப்பான் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.


பாடல்

‘பாழி வன் தடம் திசை சுமந்து
    ஓங்கிய பணைக்கைப்
பூழி வன்கரி இரண்டு இருகை
    கொடு பொருத்தும்;
ஆழம் காணுதற்கு அரியவாய்,
    அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இருதாள் அளவு
    எனக் கடந்து ஏறும்.


பொருள்

‘பாழி = அகன்ற

வன்  = வன்மையான

தடம் = வழி

திசை சுமந்து = திசைகளை சுமந்து நிற்கும்

ஓங்கிய = பெரிய

பணைக்கைப் = பனை மரம் போன்ற பெரிய தும்பிக் கைகளை

பூழி  = துவாரம் உள்ள

வன்கரி = பலமான யானை

இரண்டு = இரண்டினை

இருகை  கொடு  = இரண்டு கைகளை கொண்டு

பொருத்தும் = முட்ட வைப்பான்

ஆழம் காணுதற்கு அரியவாய், = ஆழம் காண முடியாத

அகன்ற = அகன்ற

பேர் ஆழி = பெரிய கடல்

ஏழும் = ஏழையும்

தன் இருதாள் அளவு = தன்னுடைய இரண்டு கால் பாதங்களின் அளவு

எனக் கடந்து ஏறும். = என்று அதில் நடந்தே கடந்து விடுவானாம்.


கடல் கணுக்கால் அளவு என்றால் ஆள் எப்படி இருப்பான்?

ஐந்து அல்லது ஆறு அடி இருக்கும் நமக்கு இவ்வளவு ஆணவம், இறுமாப்பு இருக்கும் என்றால், இரணியனுக்கு எவ்வளவு இருந்திருக்கும் ?

நரசிம்ம  அவதாரம் பற்றி முன்பு எழுதி இருந்தேன். இது, அதன் முன் பகுதி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_5.html


Friday, January 3, 2020

பட்டினத்தார் பாடல் - பக்தி

பட்டினத்தார் பாடல் - பக்தி 



பெரும்பாலானோர் செய்யும் பக்தி எப்படி இருக்கும்? தினமும் காலையும், மாலையும் விளக்கு ஏற்றுவது, பூ போடுவது, கற்பூர ஆராதனை காட்டுவது, ஊதுபத்தி கொளுத்தி வைப்பது, முடிந்தால் வாழைப் பழத்தின் முனையை சற்று உரித்து வைப்பது....மற்றபடி நாள் கிழமை என்றால் பொங்கல், சுண்டல், வடை, பொரி என்று நைவேத்தியம் பண்ணுவது. முடிந்தால் சில பல இடங்களுக்குச் சென்று, கட்டணம் செலுத்தி சிறப்பு வழியில் சென்று கடவுளை தரிசிப்பது.  இதுதான் பெரும்பாலானோர் செய்யும் பக்தி.

இதில் அவர்களுக்கு பெரிய பெருமை வேறு. ஒரு நாள் கிழமை விடுவது கிடையாது, தினம் இரண்டு வேளை பூஜை செய்கிறேன், மடி, ஆச்சாரம் என்று ஒரே பெருமை.

இதெல்லாம் செய்து விட்டால், சொர்க்கத்தில்/வைகுண்டத்தில்/ கைலாயத்தில் ஒரு இடம் நமக்கு கட்டாயம் உண்டு என்று முன்பதிவு செய்த மாதிரி தைரியமாகத் திரிகிறார்கள்.


இதுவா பக்தி?

அத்தனை சொத்தையும் ஒரே நாளில் உதறித் தள்ளி விட்டு கோவணத்துடன் புறப்பட்ட பட்டினத்தார் சொல்கிறார்...."நான் செய்வது என்ன பக்தி...அந்த மூன்று பேர் செய்த பக்திக்கு முன்னால் நான் செய்வது ஒன்றும் இல்லை...அப்படி எல்லாம் செய்ய முடியாத நான், எங்கே இறைவனை அடைய போகிறேன் " என்று அழுகிறார்.


பாடல்

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்; நானினிச் சென்று
ஆளாவது எப்படியோதிருக்காளத்தி அப்பனுக்கே


பொருள்

"வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்"

சிறுத்தொண்டர் என்று ஒரு நாயனார் இருந்தார். அவர் வீட்டுக்கு சிவனடியார் உருவத்தில் வந்த  சிவன், "பிள்ளைக் கறி" போட்டால் சாப்பிடுகிறேன் இல்லையென்றால்  சாப்பிடமாட்டேன் என்றார். சிறுத்தொண்டரும் ஒத்துக் கொண்டார்.

சிவனடியார் சில நிபந்தனைகள் வைத்தார்...

- பிள்ளை ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும்
- பிள்ளைக்கு ஒரு உடல் குறையும் இருக்கக் கூடாது
- தாய் பிடித்துக் கொள்ள, தகப்பன் பிள்ளையை அரிந்து சமைக்க வேண்டும்
- முக்கியமாக, இருவரும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடக் கூடாது.

சிறுத்தொண்டரும், அவர் மனைவியும் ஒத்துக் கொண்டு பிள்ளைக் கறி செய்து போட்டார்கள்.

என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாதே என்கிறார் பட்டினத்தார்.

அடுத்தவர் திருநீலகண்டர் என்று ஒரு நாயன்மாரில் ஒருவர்.

"மாது சொன்ன சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்"

(சூள் = ஆணை, சத்தியம்)


மண் பாண்டம் செய்து விற்கும் குயவனார். சிவனடியார். ஆனால், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் பலவீனம் உள்ளவர்.  பல பெண்களிடம் உறவு கொள்பவர். காமத்தை கட்டுப் படுத்தத் தெரியாதவர்.

ஒரு நாள் அவரின் இந்த பலவீனம், அவருடைய மனைவிக்குத் தெரிந்தது. அன்று இரவு  மனைவியின் அருகில் சென்றார். "எம்மைத்  தொடாதீர். தொட்டால் , அந்த திருநீலகண்டத்தின் மீது ஆணை"  என்று சொல்லிவிட்டார்.
என்னை என்று சொல்லவில்லை. எம்மை என்று சொன்னார். எம்மை என்பது பன்மை. எனவே எந்தப் பெண்ணையும் தொடுவதில்லை என்று இருந்துவிட்டார் திருநீலகண்டர்.  முடியுமா?  காமத்தை அடக்க முடியுமா ?

குடிசை வீடு. அருகில் மனைவி. புரண்டு படுத்தால் கை படும், கால் படும். சிவன் மேல் ஆணை, எம்மை தொடாதீர் என்றதனால் அந்தக் கணம் முதல் எந்தப் பெண்ணையும் தொடுவதில்லை  என்று இருந்தார்.

"என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாதே" என்கிறார் பட்டினத்தடிகள்.

மூன்றாவது ஒரு ஆளைச் சொல்கிறார்.

"நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்"

நாள் + ஆறில்

ஆறே நாள். பக்தி உச்சம் தொட்டது. இறைவன் காட்சி கொடுத்தான்.

கண்ணப்ப நாயனார். சிவ இலிங்கத்தை கண்ட ஆறாவது நாள். இலிங்கத்தின் கண்ணில் இருந்து இரத்தம்  வந்ததைக் கண்டு பொறுக்க மாட்டாமல், தன்னுடைய கண்ணை தோண்டி தந்து விட்டார். ஒன்றல்ல, இரண்டு கண்களையும்.

"என்னால் அப்படியும் செய்யும் முடியாதே " என்கிறார் பட்டினத்தார்.

இப்படி எல்லாம் பக்தி செய்து அவர்கள் இறைவனை அடைந்தார்கள். என்னால் அதெல்லாம்  செய்ய முடியாது. நான் எப்படி இறைவனை அடைவேன்  என்று அயர்ந்து போகிறார் பட்டினத்தார்.

அவர் கதி அப்படி என்றால், நாம் எல்லாம் எந்த மூலை ?

வீட்டுக்குள், சௌகரியமாக இருந்து கொண்டு, உடல் நோகாமல் பக்தி செய்து விட்டு, "அடடா என்னைப் போல் பக்திமான் உண்டா" என்று இறுமாத்துப் போகிறோம்.

அப்படியெல்லாம் செய்தவர்கள், இறைவனை அடைந்தார்கள்.

அனைத்தையும் விட்டு விட்ட பட்டினத்தார் போவோமா மாட்டோமா என்று சந்தேகம் கொள்கிறார்.

நாம்?

அடுத்த முறை கோவிலுக்குப் போனதற்கு,  உண்டியலில் பணம் போட்டதற்கு,  விளக்கு ஏற்றி பாட்டு படிப்பதற்கு ..இதெல்லாம் பெரிய பக்தி என்று   நினைக்கும் போது ,இந்தப் பாடலையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post_3.html


Thursday, January 2, 2020

ஓடி விளையாடு பாப்பா - பாரதியார் பாடல்

ஓடி விளையாடு பாப்பா - பாரதியார் பாடல் 


இலக்கியங்கள் படிக்க மிகக் கடினமாக இருந்தால், அது ரொம்பக் கடினம் என்று விட்டு விடுகிறோம்.

மிக எளிமையாக இருந்தால், அதில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாக விட்டு விடுகிறோம்.

ஓடி விளையாடு பாப்பா என்று பாப்பாவுக்கு பாடல் சொன்னான் பாரதி. பள்ளிக் கூடத்தில் படித்தது. அதில் என்ன இருக்கிறது என்று மேலே போய் விடுகிறோம்.

அந்தப் பாடலில் எத்தனை அடிகள் இருக்கிறது, எத்தனை பகுதி இருக்கிறது என்று கூட பலருக்குத் தெரியாது. அதில் கடைசிப் பகுதியில் பாரதி வாழ்க்கை முறை பற்றிச் சொல்கிறான் சொல்கிறான்....


பாடல்

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் -தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா!


உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் ...அப்பா, அம்மா, கணவன் மனைவி, பிள்ளைகள் என்று இல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு வேண்டும் என்றான். உயிர் என்றால் இங்கே மனிதர்கள் மட்டும் அல்ல....விலங்குகளும், தாவரங்களும் அடங்கும். தெரு நாய், மின்சார கம்பி மேல் அமர்ந்து இருக்கும்புறா, சிட்டுக் குருவி, சாலை அமைக்கிறோம் என்று வெட்ட நினைக்கிறார்களே அந்த மரம்  இவற்றின் மேல் எல்லாம் அன்பு வேண்டும்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்

என்றாரே வள்ளலார், அந்த அன்பு வேண்டும்.

கணவன் மனைவி இடம் அன்பு இல்லை, பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு இல்லை,  உடன் பிறப்புகள் நீதி மன்ற படிக்கட்டுகளில், தவித்த வாய்க்கு தண்ணீர்  தர மறுக்கும் அயல் மாநிலம், என்று எங்கும் அன்புப் பஞ்சமாய் இருக்கிறது.

அன்பை கொடுக்கவும் ஆள் இல்லை. கொடுத்தால் பெற்றுக் கொள்ளவும் ஆள் இல்லை.

குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை கொடுத்த அன்பு ...

கொம்பு இல்லாமல் ஆடிய கொடிக்கு தேர் கொடுத்த அன்பு ...

புறாவைக் காக்க தன் சதையை அரிந்து கொடுத்த அன்பு ...

இவை எல்லாம் இருந்தது இந்த நாட்டில், ஒரு காலத்தில்.

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். யாரையும் கடிந்து பேசாதீர்கள். பிறர் மனம் வருந்தும் காரியங்களை செய்யாதீர்கள். பிற உயிர்கள் மேல் இரக்கம் கொள்ளுங்கள்.

அன்பே சிவம் என்பார் திருமூலர்.

என்பிலதனை வெயில் போலக் காயுமே 
அன்பிலதனை அறம் 

என்பார் வள்ளுவப் பேராசான்.

அடுத்தது,

"தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்"

தெய்வம் உண்மை என்று நீங்களே அறிய வேண்டும். யாரோ சொன்னார்கள் என்று சொல்லக் கூடாது. மாணிக்க வாசகர் சொன்னார், சேக்கிழார் சொன்னார், அதில் அப்படி போட்டு இருக்கிறது, இதில் இப்படி போட்டு இருக்கிறது என்று சொல்லக் கூடாது. "தான் அறிதல்" வேண்டும்.   நீங்களே அறிய வேண்டும். அவர்கள் அறிந்தார்கள். அது அவர்களுக்கு. நீங்கள் அறிந்தீர்களா?  அவர் என்ன பொய்யா சொல்லப் போகிறார் என்று  மற்றவர்கள் சொல்வதற்கு தலை ஆட்டிக் கொண்டு இருக்காதீர்க்கள்.

மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம் என்றால்

"தெய்வம் உண்மை என்று அறிதல் வேணும்" 

என்று சொல்லி இருப்பான் பாரதி.

"தானறிதல் வேணும்" என்று சொல்கிறான். வேலை மெனக்கெட்டு "தான்" என்ற ஒரு வார்த்தையைப் போடுகிறான். 

வேதம் சொல்கிறது, கீதை சொல்கிறது, என்று சொல்லாதீர்கள். நீங்கள் அறிந்தது என்ன?


"வயிர முடைய நெஞ்சு வேணும்" -

சிலருக்கு எதிலும் எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் ஒரு உறுதி கிடையாது. மனதில் வைரம் போல உறுதி வேண்டும். எது சரி, எது தவறு என்பதில்  உறுதி வேண்டும். எப்போதும் குழம்பிக் கொண்டே இருக்கக் கூடாது.


 இது வாழும் முறைமையடி பாப்பா!

இது தான் வாழும் முறை என்கிறான் பாரதி.

இந்த மூன்று மட்டும் அல்ல. இந்தப் பாட்டில் பல விஷயங்கள் சொல்லி இருக்கிறான் பாரதி.   பாடலைத்  தேடி கண்டு பிடித்து மீண்டும் ஒரு முறை படியுங்கள். எளிய பாடல் என்று உதாசீனம் செய்து விடாதீர்கள்.

அது பாப்பாவுக்கு மட்டும் சொன்னது  அல்ல. நமக்கும் சேர்த்துத்தான்.

வீட்டில் குழந்தைகள் இருந்தால், சொல்லிக் கொடுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/01/blog-post.html