Saturday, September 26, 2020

திருக்குறள் - இன்சொல்

திருக்குறள் - இன்சொல் 


எப்படி எல்லாம் பேசக் கூடாது என்று கேட்டால் பெரிய பட்டியல் போடலாம். 

பொய் சொல்லக் கூடாது, புறம் சொல்லக் கூடாது, பயனில சொல்லக் கூடாது, என்று நீண்ட பட்டியல் தரலாம்.

எப்படி பேசுவது என்று கேட்டால் என்ன சொல்லுவது?

இனிமையாக பேச வேண்டும். 

சரி, இனிமையாக பேசுவது என்றால் என்ன? 

யாரைப் பார்த்தாலும், "அடடா, உங்களைப் போல உண்டா" என்று அவர்களை புகழ்ந்து பேச வேண்டுமா? 

இல்லை. 

இன்சொல் என்பதற்கு வள்ளுவர் இலக்கணம் வகுத்துத் தருகிறார். 

பாடல் 


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

பொருள் 

(pl click the following link to continue reading)


இன்சொலால் = இன் சொல் ஆல்  = ஆல் என்பது அசைச் சொல். அதை விட்டு விடுவோம். மீதி உள்ளது இன் சொல். 

ஈரம் அளைஇப்  = அன்பு கலந்து 

படிறிலவாம் = உண்மையான சொற்கள் 

செம்பொருள் = அறத்தினை 

கண்டார் = எ அறிந்தவர் 

வாய்ச் சொல் = வாயில் இருந்து வரும் சொற்கள். 

மேலே ஆராய்வோம்.

முதலில், பேசுகின்ற பேச்சில் அன்பு இருக்க வேண்டும். அன்பு கலந்து பேச வேண்டும். அன்போடு பேச வேண்டும். யோசித்துப் பார்ப்போம் , நமது பேச்சில்  எவ்வளவு அன்பு இருக்கிறது என்று. கோபம் இருக்கும், வெறுப்பு இருக்கும், சந்தேகம் இருக்கும், அதிகாரம் இருக்கும், கிண்டல், நக்கல், நையாண்டி  எல்லாம் இருக்கும்.  அன்பு இருக்குமா ?  அன்பு இல்லாத பேச்சு இன் சொல் அல்ல. 

இரண்டாவது, உண்மை. பொய் கலவாமல் பேச வேண்டும்.  பேசுகிறோமா?  உண்மை பேச முடியாவிட்டால், பேசாமல் இருந்து விட வேண்டும்.  எவ்வளவுதான் அன்பாக பேசினாலும், அதில் பொய் இருந்தால், அது இனிய சொல் அல்ல.  சிலர்  மற்றவர்களை வானளாவ புகழ்வார்கள். மனதுக்குள் வைது கொண்டே. அவர்களின் புகழ்ச்சியில் உண்மை இல்லை. 

மூன்றாவது, அறத்தினை உணர்ந்து பேச வேண்டும். அறம் என்றால் என்ன என்றே தெரியாவிட்டால்  எப்படி பேசுவது? பேசாமல் இருப்பது நலம். அறம் அல்லாதவற்றை  பேசுவது இனிய சொல் அல்ல. நல்லவற்றை, பயனுள்ளவற்றை மட்டும்தான் பேச வேண்டும். 

வாய்ச் சொல் என்றார். சொல் என்றாலே வாயில் இருந்து வருவது தானே. அது என்ன  வாய்ச் சொல்? மூக்குச் சொல், காது சொல் என்று ஏதாவது இருக்கிறதா? இல்லையே. பின் ஏன், வாய்ச் சொல்?

வாயின் மூலமாக ஒன்றை மட்டுமே பேச முடியும் என்றால் ,அது பற்றிச் சொல்ல வேண்டாம். ஆனால், நம் வாய் இனியவற்றையும் பேசும், இன்னாததையும் பேசும்.  எனவே, இனியவற்றை மட்டும் பேசும் சொல் என்பதால், வாய்ச் சொல் என்றார். 

அறத்தின் தன்மை அறிந்து, அன்போடு உண்மை பேச வேண்டும். 

அது தான் இனிய சொல். 

நமது சொற்களில் எத்தனை இனிய சொல்லாக இருக்கும்? 

பழக வேண்டும். 

Friday, September 25, 2020

திருக்குறள் - செய்க பொருளை

திருக்குறள் - செய்க பொருளை 


பகை யாருக்குத்தான் இல்லை?

இராமனுக்கு பகை இலங்கையில் இருந்தது. இராமன் பகையைத் தேடிப் போகவில்லை. அதுவாக வந்து சேர்ந்தது. 

காந்திக்குப் பகை உள்ளூரிலேயே இருந்து வந்தது. 

வள்ளலாருக்கு எதிரிகள் இருந்தார்கள். 

அவர்களுக்கே அப்படி என்றால், நம் பாடு எம்மாத்திரம். 

பகைவர்கள் என்றால் ஏதோ நம் மீது சண்டை போட வருபவர்கள் அல்ல. 

நம் மீது பொறாமை கொண்டவர்கள், நமது முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பவர்கள். தெரிந்தே நமக்கு தவறான வழி காட்டுபவர்கள், நம் தோல்வி கண்டு நம்மை ஏளனம் செய்பவர்கள், இவர்கள் எல்லாம் நமக்கு பகைதான். 

நம்மை விட ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தர்வகள் என்ற கர்வம் கொண்டு நம்மை தாழ்வாக நினைப்பவர்கள். 

இது ஒரு நீண்ட பட்டியல். 

பகைவர்களை எப்படி வெல்வது? அவர்களோடு சண்டை போடுவதா? பதிலுக்கு பொறாமை படுவதா? 

இல்லை. 

வள்ளுவர் சொல்கிறார். 

"நிறைய பொருள் சேர்.  பகைவர்களின் செருக்கை அறுக்க அது போன்ற கூரிய ஆயுதம் வெறும் எதுவும் இல்லை என்று"

பாடல் 

*செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்*

பொருள் 

click the following link to continue reading 





செய்க பொருளைச் = பொருளைச் செய்க 

செறுநர் = பகைவர்களின் 

செருக்கு அறுக்கும் = இறுமாப்பை, மமதையை, அறுக்கும் 

எஃகு = இரும்பு, ஆயுதம் 

அதனின் கூரியது இல் = அதைவிட கூர்மையானது எதுவும் இல்லை 

எப்போதாவது தான், வள்ளுவர் கட்டளையாகச் சொல்வார். 

அப்படி சொன்ன குறள்களில் இதுவும் ஒன்று. 

"செய்க பொருளை" என்று கட்டளையாகக் கூறுகிறார். 

பெரிய செல்வம் உடையவனாக இருந்தால், பகைவர்களின் செருக்கு தானே அடங்கும். 

ஏன்?

பெரிய செல்வம் இருந்தால், பெரிய இடங்களில் இருப்பவர் நட்பு கிடைக்கும். அப்படிப்பட்ட நம்மை , நம் பகைவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். 

கத்தி இருக்கிறதே, அது பொருள்களை வெட்டும். குணத்தை வெட்டுமா ?  எதிரியின் பகை உணர்ச்சியை வெட்ட  எந்தக் கத்தியைக் கொண்டு போவது?

நம்மிடம் நிறைய பொருள் இருந்தால், அது எதிராளியின் செருக்கை , ஆணவத்தை அறுக்கும் என்பதால், செல்வத்தை கூரிய கத்தி என்றார் வள்ளுவர். 

செருக்கு என்ற குணத்தை அறுப்பதால் அது கூரிய கத்தி. 

எதிராளியின் செருக்கை அடக்க வேண்டும் என்றால் நிறைய படி, பலப் பல பட்டங்கள் வாங்கு, படை திரட்டு, என்றெல்லாம் சொல்லவில்லை. 

செல்வத்தைச் சேர் .  பகை ஒடுங்கும் என்கிறார். 

ஏதோ நம் அற நூல்கள் எல்லாம் நம்மைச் சாமியாராக போகச் சொல்கின்றன என்ற ஒரு  குற்றச் சாட்டு உண்டு. 

அது தவறு. 

இந்தக் குறளைப் பாருங்கள்.

வள்ளுவர் என்ன சொல்கிறார் " பொருளைச் சேருங்கள்" என்கிறார். 

செல்வத்தைச் சேருங்கள். பகை தானே ஒடுங்கும். 

இதுக்கு மேல் இவ்வளவு பெரிய கருத்தை எளிமையாக, சுருக்கமாக யாரால் சொல்ல முடியும்?

யார் யாருக்கோ நன்றி சொல்கிறோம். 

ஒரு நாளேனும் வள்ளுவருக்கு நன்றி சொன்னதுண்டா?  



Thursday, September 24, 2020

திருக்குறள் - மையாத்தி நெஞ்சே

 திருக்குறள் - மையாத்தி நெஞ்சே 


அவளைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைய இருக்கிறது. ஆனால், உடனே பார்க்க முடியாது. 

என்ன செய்வது?

அவள் கண்களை மட்டுமாவது பார்க்க முடியுமா என்று அவன் தவிக்கிறான். 

சரி, அவள் கண்களை பார்க்க முடியாவிட்டால் என்ன, இந்த மலர்களை பார்த்தால் அவள் கண் போலத்தான் அழகாக இருக்கும். அதைப் பார்த்தால் போதாதா என்று ஒரு சோலையில் சென்று அங்குள்ள மலர்களை பார்க்கிறான். 
அப்புறம்தான் தெரிகிறது, அந்த மலர்களும் அவன் கண்ணும் ஒன்றல்ல என்று. 

அழகு என்று பார்த்தால் ஒன்று தான். 

ஆனால், அவள் கண் சொல்லும் செய்தி அவனுக்கு மட்டும் தான் தெரியும். 

இந்த பூவை எல்லோரும் பார்ப்பார்கள். 

என் காதலியின் கண்களை எல்லோரும் பார்த்தாலும், அதில் உள்ள காதலை, அன்பை நான் மட்டும் தான் அறிவேன். 

என்னைக் காணும் போது அவள் கண்கள் மாறும். அது சொல்லும் செய்தி மாறும். மற்றவர்கள் பார்க்கும் போது அது சாதாரணமாக இருக்கும். 

எனவே, என் நெஞ்சே, இந்த மலர்கள் என் காதலியின் கண்களைப் போல இருக்கின்றன என்று   நினைத்து மயங்காதே. அது வேறு, இது வேறு என்று காதலியின்  கண்களை, அதில் மலரும் காதலை சிறப்பித்துக் கூறுகிறான் காதலன். 

பாடல் 

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

பொருள் 

(pl click to continue reading)


மலர்காணின் = மலர்களைப் பார்த்து 

மையாத்தி = மயங்காதே 

நெஞ்சே = நெஞ்சே 

இவள்கண் = இவளுடைய கண் 

பலர்காணும்  = பல பேர் காணும் 

பூவொக்கும் என்று = பூவைப் போல இருக்கிறது என்று 

நலம் புனைந்து உரைத்தல் என்ற அதிகாரத்தில் இரண்டாவது குறள் 


Wednesday, September 23, 2020

கம்ப இராமாயணம் - கோட்படாப் பதமே, ஐய குரங்கு உருக் கொண்டது

 கம்ப இராமாயணம் - கோட்படாப் பதமே, ஐய குரங்கு உருக் கொண்டது 


எது உண்மை ? எது பரம்பொருள்? எது முக்தி? எது வீடு பேறு ? என்ற கேள்விகளுக்கு எல்லாம், படித்து விடை கண்டு விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.   வேதங்களும் அறிய முடியாத விஷயங்கள் இருக்கிறது. 
உண்மைத் தத்துவங்கள் அறிவுக்குள் அடங்குமா? 

எல்லா பொருள்களும் இராஜஸ, தாமச, சாத்வீக குண சுழற்சிக்கு உட்பட்டவைதான். இவற்றை விட்டு மேலே போக முடியுமா? இந்த குணங்களின் ஆக்ரமிப்பு இல்லாமல் அவற்றை தாண்டிப் போக முடியுமா?

இராமனும், இலக்குவனும் காட்டில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நோக்கி அனுமன் வருகிறான். 

ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அப்போது, அனுமன் தன்னுடைய விஸ்வரூபத்தை அவர்களுக்கு காண்பிக்கிறான். 

அதைக் கண்ட இராமன்  தம்பி இலக்குவனிடம் சொல்லுவான், 

"இலக்குவா, மூன்று குணங்களைத் தாண்டி, ஞான ஒளி பெற்று சுடர் விடும் அந்த ஒன்று, அநாதியான வேதங்களும் அறிய முடியாதது, எந்த தத்துவ ஞானத்தாலும் அறிய முடியாது...அப்பேற்பட்ட ஒன்று இங்கு குரங்கு வடிவில் வந்து நிற்கிறது போலும் " என்றான். 

அனுமனை,  தத்துவமும், ஞானம், வேதமும் அறிய முடியாத ஒன்று இராமன் சொல்கிறான். 

பாடல் 


தாள்படாக்கமலம் அன்ன தடங்
     கணான், தம்பிக்கு, 'அம்மா!
கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர்
     படாது ஆகி, என்றும்
நாட்படா மறைகளாலும், நவை
     படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே, ஐய!
     குரக்கு உருக்கொண்டது' என்றான்.

பொருள் 

தாள் படாக்கமலம்  =  தண்டு இல்லாத கமலம் 

அன்ன = போல 

தடங் கணான் = பெரிய கண்களை உடைய இராமன் 

தம்பிக்கு = தம்பி இலக்குவனிடம் 

 'அம்மா! = விளிச் சொல் 

கீழ்ப் படாநின்ற நீக்கி = சாத்வீகம், இராஜசம் , தாமசம் என்று முக்குணங்களை நீக்கி 

கிளர் படாது ஆகி = கலப்படம் அற்று 

என்றும் = எப்போதும் 

நாட்படா மறைகளாலும், = தோன்றிய நாள் இது என்று அறியாத வேதங்களாலும் 

நவை படா ஞானத்தாலும், = குற்றம் அற்ற ஞானத்தாலும் 

கோட்படாப் பதமே = அறிய முடியாத நிலை 

, ஐய! = இலக்குவா 

 குரக்கு உருக்கொண்டது' என்றான். = அந்த ஒன்று குரங்கு உருவம் கொண்டு வந்து இருக்கிறது என்றான் 



Tuesday, September 22, 2020

நாலடியார் - எதைக் கண்டாலும் பயம் எனக்கு

நாலடியார் - எதைக் கண்டாலும் பயம் எனக்கு 


நல்ல குடும்பத்தில் பிறந்திருப்பது அச்சம் தரும் ஒன்றாகும். 



ஏன்?

நல்ல குடும்பத்தில் பிறந்தால், படிக்காமல் இருக்க அச்சம்.  நல்ல குடும்பத்தில் எல்லோரும் படித்து இருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் பிறந்த பின், படிக்காமல் இருப்பது அச்சம் தரும் செயல்.  எல்லோரும் படிக்காத மண்டூகங்களாக இருந்து விட்டால் பரவாயில்லை. அந்தக் குடும்பத்தில் ஒருவன் படிக்கவில்லை என்றால் ஒன்றும் தெரியாது. 

மோசமான வேலைகள் செய்ய அச்சம். குடும்பத்தோட பேர் கெட்டுப் போய் விடுமோ என்ற அச்சம். 

வாய் தவறிக் கூட தவறாகப் பேசி விடக் கூடாதே என்ற அச்சம். இராமாயணத்தில், இராமனுக்கு அரசு இல்லை என்று சொல்லக் கேட்ட இலக்குவன் கோபத்தில் கண்டபடி பேசுவான். அப்போது இராமன் சொல்லுவான் "மறை தந்த நாவால் வாய் தந்தன கூறுதியோ"  என்பான்.வேதம் படித்த வாயால், இப்படி கோபச் சொல் வரலாமா என்று கேட்பான். நல்ல குடியில் பிறந்தால், மறந்தும் வழுக்கிய சொல் வரக் கூடாது. வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டும். 


ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், 'ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?'  
  

அதை விட பெரிய பயம் - தன்னிடம் இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு தானும் இல்லை என்று சொல்ல வேண்டி வந்து விடுமோ என்ற பயம் பெரிய பயம். 

நல்ல குடியில் பிறந்து இருப்பது என்பது, கடலில் செல்லும் கலம் போன்றது. அங்கும் இங்கும் எப்போது அலைக்கழிக்கும். எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

பாடல் 

கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம்;
சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம்; எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம்; மரத்தார்; இம்
மாணாக் குடிப் பிறந்தார்.

பொருள் 

(pl click the link below to continue reading)


கல்லாமை அச்சம் = கல்வி அறிவு இல்லாமல் இருப்பது ஒரு பயம் 

கயவர் தொழில் அச்சம் = கயவர்கள் செய்யும் கொலை, கொள்ளை போன்ற தீச் செயல்கள் செய்ய அச்சம் 

சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம் = சொல்லுகின்ற வார்த்தைகளில் தவறான, பயன் இல்லாத வார்த்தை வந்து விடுமோ என்ற அச்சம் 

எல்லாம் = அது எல்லாம் விட 

இரப்பார்க்கு = தன்னிடம் வந்து வேண்டி நிற்பவர்களுக்கு 

ஒன்று ஈயாமை அச்சம் = ஒன்று கொடுக்க முடியாமல் இருப்பது அச்சம் 

மரத்தார் = மரத்தில் செய்த படகு போல 

இம் மாணாக் குடிப் பிறந்தார். = இந்த மாதிரி நல்ல குடியில் பிறந்தவர்கள்  வாழ்க்கை.

கொடுக்க முடியாமல் போவது பற்றி பயந்து இருக்கிறார்கள். 

பயனில்லாதவற்றை பேசி விடுவோமோ என்று பயந்து இருக்கிறார்கள். 


Monday, September 21, 2020

திருக்குறள் - நடுவு நிலைமை

 திருக்குறள் - நடுவு நிலைமை 


திருக்குறளில் நடுவு நிலைமை என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அப்படி ஒன்று இருப்பதே கூட சிலருக்குத் தெரியாது. தெரிந்தால் கூட, நடுவு நிலைமை தானே, அதில் என்ன இருக்கப் போகிறது என்று அதை தாண்டிய மேலே சென்று விடுவார்கள். 

மிக மிக முக்கியமான அதிகாரம். அதிலும், இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் வேண்டிய ஒரு அதிகாரம். 

நடுவு நிலைமை என்றால் பாரபட்சம் பார்க்காமல் , நடு நிலைமையோடு இருத்தல். 

இதில் என்ன பெரிய செய்தி இருக்கிறது?

யோசித்துப் பார்ப்போம்.

நம் பிள்ளை ஒரு தவறு செய்து விடுகிறான். நாம் நடுவு நிலைமையாக அவன் செய்தது தவறு என்று சொல்வோமா அல்லது எப்படியாவது அவன் செய்ததை சரி என்று மல்லுக் கட்டுவோமா?

கணவன் ஒரு தவறு செய்து விடுகிறான். மனைவி விட்டுக் கொடுப்பாளா? (மனைவி = வாழ்க்கை துணை நலம் பேணுபவள்).

இரண்டு மாநிலத்துக்கு இடையே நீர் பகிர்வு பிரச்சனை. நாம் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று வைத்துக் கொள்வோம்.  நாம் நடுவு நிலையாக பேசுவோமா? 

இரண்டு நாடுகளுக்கு இடையே சண்டை. சச்சரவு.  யார் நடு நிலையாக இருக்கிறார்கள்? 

எங்குமே நடு நிலை என்பதே கிடையாது. 

ஒரு குடும்பத்தில் ஏதாவது சிக்கல் வந்தால், வீட்டில் யாரவது ஒரு பெரியவர் சொன்னதை எல்லோரும்  கேட்க வேண்டும். அந்தப் பெரியவர் நடுவு நிலை பேணுபவராக இருக்க வேண்டும். 

ஒரு கிராமத்தில் ஒரு சிக்கல் என்றால், ஊர் பெரியவரிடம் கேட்டு அவர் சொல்கிறபடி செய்ய வேண்டும். அவர் நடுநிலையாளனாக இருக்க வேண்டும். 

இட ஒதுக்கீடு பிரச்சனை. எது நடு நிலைமை? என்னை பாதிப்பதை நான் எதிர்ப்பேன்  என்பது நடு நிலைமை அல்ல. 

மாமியார் மருமகள் சண்டை. கணவன் நடு நிலையாக இருக்க முடியுமா? 

நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் மக்கள் நடு நிலை தவறுவதால் தான். 

எனவே தான், வள்ளுவர் ஒரு அதற்கென்று ஒரு அதிகாரம் வைத்து இருக்கிறார். 

அதில் முதல் குறள் :

பாடல் 

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்

பொருள் 

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_21.html


தகுதி = நடுவு நிலைமை என்ற தகுதி 

எனஒன்று = என்று ஒன்று 

நன்றே = நல்லது 

பகுதியால் = பிரிவால் 

பாற்பட்டு = அதற்கேற்றவாறு  

ஒழுகப் பெறின் = நடந்து கொண்டால் 


சரி, இதில் நடுவு நிலைமை என்ற சொல்லே இல்லையே. தகுதி என்று இருக்கிறது. அது எந்தத் தகுதியாக வேண்டுமானாலும் இருக்கலாமே?

அதிகாரம் நடுவு நிலைமை. எனவே அதில் உள்ள குறள்கள் அது பற்றித்தான் பேசும்.

பகுதியால் என்றால் பிரிவால் என்று பொருள் கொள்ளலாம். அது என்ன பிரிவு?
நமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், இரண்டும் இல்லாத பொதுவானவர்கள். இந்த மூன்று பிரிவாக உள்ளவர்களிடமும் நடு நிலையாக இருக்க வேண்டும். 


நமக்கு வேண்டியவர் என்றால் அவருக்கு ஒரு ஞாயம், வேண்டாதவர் என்றால் இன்னொரு  ஞாயம் என்று இருக்கக் கூடாது. 

ஒழுகப் பெறின் என்று கூறுவதில் இருந்து அது எவ்வளவு கடினமானது என்று தெரியும். 

பெறின் என்றால் செய்தால் என்று அர்த்தம். செய்ய முடியாது, அது கடினம் என்ற பொருள் அதில் தொக்கி நிற்கிறது. 

"ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் படித்தால், நல்ல மதிப்பெண் வாங்கலாம்". 
"படித்தால்" என்பதில் இருந்து அது அவ்வளவு எளிது அல்ல என்று தெரிந்து கொள்ளலாம். 



Sunday, September 20, 2020

கம்ப இராமாயணம் - இடைபோல் இடையே குழைவாய்

 கம்ப இராமாயணம் - இடைபோல் இடையே குழைவாய்


அது ஒரு மரங்கள் அடர்ந்த மலை. நடுவில் ஒரு ஓலைக் குடிசை. மழைக் காலம் என்பதால் எந்நேரமும் மழை. வெயிலை பார்த்து நாட்கள் ஆகி விட்டன. 

இன்று கொஞ்சம் மேகம் விலகி லேசாக வெளிச்சம் படர்கிறது. பெய்த மழையில் மரங்கள், செடி கொடிகள் எல்லாம் தள தள என்று சிலிர்த்து சிரித்து நிற்கின்றன. 

மெல்லிய காற்று வீசுகிறது. குளிரில் உடல் சிலிர்த்துப் போகிறது. மரங்களில் இருந்து மழை நீர் தெறிக்கிறது. கொடிகள் காற்றில் வளைந்து நெளிந்து ஆடுகின்றன. 

ஜன்னல் வரை இரு ஒரு கொடி வந்து எட்டிப் பார்க்கிறது. 

"ஏய் கொடியே...என்ன பார்க்கிறாய்? அவ இருக்காளா னு பாக்கறியா? இல்ல. அவ இல்ல. புரியுது...இவ்வளவு பூ இருக்கு உன்னிடம். அவ இல்லையே சூடிக் கொள்ள. பூ இல்லாத சில சமயம், நெற்றிச் சுட்டி சூடி வருவாள். அப்படி ஒரு அழகு. ஆனா இப்ப அவ இல்ல. 

அவ இல்லாம நான் கிடந்து தவிக்கிறேன். நீ என்னடா என்றால் பூ பூத்து, வளைந்து நெளிந்து கை நீட்டி என்னைக் கூப்பிடுகிறாய். அவள் கை நீட்டி கூப்பிடுவது போல இருக்கு உன்னைப் பார்க்கும் போது. 

உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசுக்குள் அவள் நினைவு வந்து மனம் என்னமோ செய்கிறது"


பாடல் 

'மழை வாடையொடு ஆடி, வலிந்து, உயிர்மேல்,

நுழைவாய்; மலர்வாய் நெடியாய் - கொடியே! -

இழை வாள் நுதலாள் இடைபோல் இடையே

குழைவாய்; எனது       ஆவி குழைக்குதியோ?


பொருள் 

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_20.html


'மழை  = மழைக் காலத்தில் 

வாடையொடு = வாடைக் காற்றில் 

ஆடி = ஆடி 

வலிந்து = கட்டாயமாக 

உயிர்மேல் = என் உயிரினுள் 

நுழைவாய் = நுழைகிறாய் 

மலர்வாய் = மலர்களை கொண்டு இருக்கிறாய் 

நெடியாய் =  உயர்ந்து வளர்ந்த 

கொடியே! - = கொடியே 

இழை வாள் நுதலாள் = இழைத்து செய்யப்பட்ட வாளை போன்ற பள பளப்பான நெற்றியை உடைய அவள் 

 இடைபோல்  =  இடையைப் போல 

இடையே = இடை இடையே 

குழைவாய்;  = குழைந்து நெளிகிறாய் 

எனது ஆவி = என்னுடைய ஆவியை 

குழைக்குதியோ? = குழைய விடுகிறாய் 


மழைக் காலத்தில், சீதையைப் பிரிந்த இராமன் கிட்கிந்தையில் தவித்த போது பாடியது.